Friday, December 10, 2010

நாக்குக்கு மோட்சம்

"வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு.. அப்படியே நம்ம சொத்தை எழுதி வச்சிருலாம்... இந்த ரசம் வச்ச கைக்கு தங்கத்ல காப்பு பண்ணி போடலாம்.." என்றெல்லாம் நாக்கை சப்புக்கொட்டி வாயில் எச்சிலொழுக பாராட்டுவார்கள் போஜனப் பிரியர்கள். ஆளுயர தலைவாழை இலை போட்டு மேற்கிலிருந்து கிழக்கு திசை வரை பரிமாறிய ஐட்டங்களில் மூலையில் இருக்கும் பதார்த்தத்தை இலை மேல் படுத்து உருண்டு எடுத்து சாப்பிடும் படி சிரார்த்தத்திற்கு இராமாயண சாஸ்த்திரிகள் வீட்டில் விஷ்ணு இலை போடுவார்கள். பருப்பு, ரசம், மோர் என்று நித்யபடி மூன்று வேளைக்கும் மூக்கைபிடிக்க இதையே வழக்கமாக சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டதால் இப்போது வேட்டையை இடது புறத்தில் இருந்து ஆரம்பிப்பதா அல்லது வலது ஓரத்தில் இருந்து ஆரம்பிப்பதா என்று தெரியாமல் திருவிழாவில் காணாமல் போனது மாதிரி விழித்திருக்கிறேன். எடுத்தவுடன் அதிரசத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு "உங்காத்து பையனுக்கு சாப்பிடக் கூட தெரியலையே! இப்டி அசடா இருக்கானே!"ன்னு சொல்லி கைகொட்டி சிரித்திருக்கிறார்கள். சாப்டக் கூட லாயக்கில்லை. கரெக்ட். பதிவு சாப்பாட்டை பற்றித்தான்.

பால்யத்தில் மிளகு சீரகம் போட்டு வீட்டில் ரசம் வைத்தால் நான் போட்டிருந்த ட்ராயரோடு சட்டை கூட இல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன். ஆனால் அந்த ரசம் ஒரு ஜீவாம்ருதம். அந்த சர்வ ரோக நிவாரிணியை பருகினால் ஜலதோஷம் போன்ற உடல் தோஷங்கள் பனியென விலகி பறந்து ஓடிவிடும். வேகவைக்காத பருப்பை லேசாக வறுத்து கொட் ரசம் என்று புளி தூக்கலாக போட்டு ஒரு ரசம். இது அவசர ரசம். காலையில் பருப்பு வேகவைக்க மறந்து விட்டால் வரும் அதிரடி ரசம். அடுத்து எலும்பிச்சம்பழ ரசம். பெயரே தன்மையை தாங்கி நிற்கிறது. விளக்குவதற்கு ஒன்றும் இல்லை. எலும்பிச்சம் பழச் சாறு கரைத்த ரசம். பூண்டு ரசம் கொஞ்சம் காரமாக கண்களில் ஜலம் வர பண்ணி சாப்பிட்டால் ரொம்ப நல்லது. பூண்டின் மருத்துவ குணங்கள் அலாதியானது. சில பேருக்கு கேஸ் பிரியும். அபானன். பருப்பு ரசம், நாலைந்து பழுத்த நாட்டு/பெங்களூர் தக்காளியை பிச்சுப்போட்டு வைப்பது. நல்ல ரத்த சிவப்பு கலரில் இருந்தால் ரொம்ப விசேஷம். நவரசம் என்றால்
  1. பருப்பு ரசம்
  2. ஜீரா ரசம்
  3. மிளகு ரசம்
  4. தக்காளி ரசம்
  5. கொட் ரசம்
  6. பைனாபிள் ரசம் 
  7. நல்ல ரசம்
  8. கெட்ட ரசம்
  9. ஊசிப்போன ரசம்
என்று நாக்குவன்மை படைத்த சிலர் பட்டியலிட்டு சொல்வதும் வழக்கில் உண்டு.

ஒரு சாப்பாட்டறிவு விஷயம். தென்னகத்தில் இலையில் பரிமாறினால் எந்தெந்த பதார்த்தங்களை எங்கெங்கு பரிமாற வேண்டும் என்பதைப் பற்றிய படமும் விளக்கமும் கீழே. எல்லார் வழக்கத்திலும் இப்படித்தான் இருக்கும் என்று இல்லை. ஒரு ஐடியாவிற்கு பார்த்துக் கொள்ளலாம்.


1. உப்பு
2. ஊறுகாய்

3. சட்டினி
4. கோசுமரி (Green Gram Salad)
5. கோசுமரி (Bengal Gram Salad)
6. தேங்காய் சட்டினி
7. Beans Pallya (Fogath)

8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ரான்னங்கள் (எலும்பிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம்)
10. அப்பளாம்
11. சிப்ஸ்
12. இட்லி
13. சாதம்

14. பருப்பு
15. ரைத்தா
16. ரசம் 
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்திரிக்கா பக்கோடா
19. Menaskai (Sweet And Sour Gravy)

20.
Goli Baje (Maida Fry)
21. அவியல்

22.
வெண்டைக்கா பக்கொடோ
23. கத்திரிக்கா சாம்பார்

24. ஸ்வீட்

25. Gojjambade (Masalwada Curry)

26. Kayi Holige (Sweet Coconut Chapati)

27. Vangi Bath (Vegetable Upma)

28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம்

30. தயிர்

31. மோர் 
பருப்பு உசிலி, வெண்டைக்காய் மோர்குழம்பு, அவியல், பாகற்காய் பிட்ளை, வாழைக்காய் பொடி மாஸ், கருணாக் கிழங்கு மசியல் போன்றவை எங்கள் பக்க சிறப்பு உணவு வகையாறாக்கள். எரிசேரி, புளி இஞ்சி, கப்பை புழுக்கு போன்ற சில திருநெல்வேலி பக்க ஐட்டங்கள். ஐங்கிரிமண்டி என்று எங்கள் ஊரில் மராத்தியும் பேசும் ராவ் குடும்பங்களில் செய்வார்கள். ஐந்து விதமான சுவையும் நிறைந்து இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு கௌளி வீதம் வெற்றிலையும் மணக்க மணக்க பன்னீர் புகையிலை கூட வைத்து வாயில் கொதப்பிக்கொண்டே இருப்போரும் பான் பாராக் போடும் பரம குட்கா அடிமைகளுக்கும் உப்பு உரைப்பு இரண்டுமே ஒரு மடங்கு தூக்கலாக வேண்டும். "சே..ரொம்ப சப்புன்னு இருக்கு...." என்று எல்லாரும் விரும்பும் சமையலை குறை  சொன்னால் நிச்சயம் அது மேற்கண்ட புகையிலை பார்ட்டியாக இருக்கும் அல்லது ஆந்த்ரா பார்ட்டியா இருக்கும். ஆந்திராகாரர்கள் ஆகாரம் காரமாக சாப்பிடுவார்கள். இது போன்றவர்கள் நாக்குக்கு தேய்மானம் அதிகம். கேட்டரிங் சமையல்காரர்கள் பலர் வெற்றிலை, குட்கா மற்றும் ஓட்கா போன்றவற்றில் நாட்டம் உடையவர்கள். ஆனாலும் வாயில் ஊற்றிப் பார்க்காமலேயே மோந்து பார்த்து வலது கையால் ஓம் முத்திரை காட்டி "நல்லாருக்கு..." என்று சொல்லும் திறன் படைத்தவர்கள். நாக்கின் பலவீனத்திற்கு மூக்கு ஒத்துழைக்கிறது. சில பேர் அடுப்பில் கொதிக்கும் போதே "உப்பு பத்தலையே.." என்று சொல்வார்களாம். இவர்கள் போலீசில் வேலைக்கு சேரலாம். பனியன் போட்டுக்கொண்டு கழுத்தில் செயின் கட்டி இவர் பின்னால் ஓடிவரவேண்டிய அவசியம் இல்லை. அட்ராட்ரா நாக்க மூக்க. நாக்க மூக்க.

கையை ஸ்பின் பௌலர் போல ஒரு சுழற்று சுழற்றி இலை கிழியும் அளவிற்கு வழித்து வழித்து "சர்..புர்.." என்று உறிஞ்சி புறங்கையை நக்கி சாப்பிடும் சிலரைக் கண்டால் நாலடி தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையேல் நம்மேல் ரசச் சாரலடிக்கும். இன்னும் சிலர் கொஞ்சம் காரமாக இருந்தால் மூக்கில் ஒழுகும் சளியை கூட சர்வ சுதந்திரமாக இடது கையால் சிந்தி வேஷ்டியில் துடைத்துக் கொள்வர். தற்போது கல்யாண பந்திகளில் இலைக்கு இரண்டு புறமும் ரசம், பாயசம், குலோப்ஜாமொன், தண்ணீர், ஐஸ்க்ரீம் என்று ஏகப்பட்ட சைட் ஐட்டங்கள் அடுக்குகிறார்கள். நான் பார்த்த ஒரு கல்யாணத்தில் "சாப்பாட்டு ஆர்வலர்" ஒருவர் போகிறபோக்கில் இரண்டு பக்கமும் இருந்த கிண்ணங்களில் இருந்த ரசம், பாதாம் கீர் என்று எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டார். கோபாக்கினியில் கொதித்துப் போன பக்கத்து இலை ஆள் முறைத்து பார்த்ததும் "ஹி..ஹி.. ஸாரி.. கவனிக்கலை.. யாருப்பா அங்க... அண்ணா கீர் கேக்கறார் பாரு" என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியை செவ்வனே தொடர்ந்தார். சொன்ன ஆளுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.

ஊரில் புதுத் தெரு ஜனதா ஓட்டலில் ரவா தோசை வாரத்தில் இரண்டு நாள் தான் போடுவார்கள். துண்டு போட்டு சீட் பிடித்து கும்பல் அம்மும். அதுவும் மாலையில் மட்டும் தான். அப்பாவோடு எப்போதாவது அந்தக் கடைக்கு போனால் "சரியா படிக்கலைனா இங்கதான்... டேபிள் துடைக்க வேண்டியதுதான்..." என்று சொல்லி வாங்கிக் கொடுத்த பூரியை நிம்மதியாக வாயில் வைக்க விடமாட்டார். இப்போது அந்தக் கடை க்ளோஸ். ஆபிசுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு அந்தக் கடையில் ஆசையாக தோசை வாங்கி சாப்பிட்ட தோசையப்பர்களை நானறிவேன். இங்கு சென்னை வந்த பின்னர் நான் பார்த்த எல்லோரும் "சூடா இருக்கா?" என்று எல்லா இடத்திலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். முதலில் புரியாமல் இருந்த எனக்கு என் அத்திம்பேர் தான் அந்த சூட்சுமத்தைச் சொன்னார் "சூட்ல டேஸ்டா இருக்கா இல்லையான்னு தெரியாது... நாக்குக்கு சூடு போட்டு ஐட்டத்தை அப்டியே உள்ள தள்ளிடலாம்..". எவ்ளோ பெரிய உண்மை என்று ஒருமுறை ஆறி அவலாக போன ரவா தோசையும் சாம்பாரும் சாப்பிட்டபோது உரைத்தது.

காலகாலத்திற்கும் சாப்பாடு பாடலாக ஒலிக்கும் மாயாபஜார் படத்தில் வரும் "கல்யாண சமையல் சாதம்..". ஹா..ஹ்.ஹ.ஹ் ஹா..ஹா..




சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது என்று சொல்வது ஏன் என்று யாருக்காவது தெரியுமா? முடிந்தால் பின்னூட்டத்தில் கருத்துரைக்கவும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதியவருக்கு அவர் வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறது என்ற திசை கூட தெரியாது. வெந்நீர் இருக்கா என்று யாராவது கேட்டால் கூட பாத்ரூம் ஹீட்டர் போட்டு கொண்டு வந்து தருவார். கேஸ் அடுப்பை மூட்டக் கூட தெரியாது. ஆகையால் ஏதேனும் தவறு இருப்பின் பதிவுலக கிச்சன் கில்லாடிகள் இந்த பூச்சியுடன் சண்டைக்கு வராதீர்கள். மேலும் இப்பதிவில் இனிப்பு வகைகளையும் இன்னபிற கரக் மொருக்கு நொறுக்குகளையும் பதியவில்லை. இந்தப் பதிவு ஜீரணம் ஆனதும் பொறுமையாக பிரிதொருநாளில் பதிகிறேன்.

இலையில் பதார்த்தங்களின் இடம்பெறவேண்டிய இடங்களை படம் வரைந்து பாய்ன்ட் போட்டு விளக்கி காண்பித்த தளம் http://ashwiniskitchen.blogspot.com/

பின் பின் குறிப்பு: கர்னாடக சங்கீத கல்யாணப் பாடல்களில் "போஜனம் செய்ய வாருங்கோ" என்று ஒரு பாடல் உண்டு. யூடுயூபை நோண்டி நொங்கு எடுத்துவிட்டேன். கிடைக்கவில்லை. கேட்காத காதுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.

-


71 comments:

  1. ஏவ்..... ஏப்பம் பலமா வருது.....

    வாவ், அற்புதமான விருந்து. “கல்யாண சமையல் சாதம்” பரிமாறி விட்டீர்கள்.

    கல்யாண பாடல்களில் “சம்பந்தி சாப்பிடவே மாட்டார்” கேட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்தது....

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. @ஆர்வீஎஸ்

    அண்ணே போன ஞாயிறு நான் போட்ட பதிவு பாக்கலியா ? அதில் கடைசி பாடலின் பின் பாதியில் நீங்கள் கேட்டப் பாடல் இருக்கும்

    @வெங்கட்
    அது என்னிடம் இருந்தது, செம நகைச்சுவை பாட்டு. உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பவும். நான் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன்

    ReplyDelete
  3. http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post.html
    inge irukku paarunga last video 2nd paart. Youtubela kalyanapaadalgal kidaippathu illai

    ReplyDelete
  4. LK: உங்க மின்னஞ்சலில் அந்த பாடலை அனுப்பி இருக்கிறேன்....

    ReplyDelete
  5. முதல்ல மகிழ்ச்சி : சலிக்க சிரிக்க வச்சுட்டிங்க...சமையல் வித்தகர்களோட மோப்ப சக்திய பத்தி சொன்ன இடத்துல விழுந்து விழுந்து...

    அடுத்தது எரிச்சல் : இரண்டு சப்பாத்தியும் அரை வெள்ளரிக்காய் மட்டும் சாப்பிட்டு ஓட்டிட்டு இருக்கிற எங்கள மாதிரி ஆட்களுக்கு அந்த இலையும் 31 ஐட்டங்களயும் பார்த்தா எரிச்சல் வராமல் இருக்குமா ...

    ReplyDelete
  6. சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது.ஐட்டம் பெயர்களை படித்தவுடன்.

    ReplyDelete
  7. அடடா வடை போச்சே. நான் இந்த இலை/கல்யாண மேட்ட்ரைப் பத்தி ஒரு பதிவு எழுதி வச்சிருந்தேன். ஹூம்ம்ம்.

    பதிவு செம்ம. அப்படியே நெய்யில் செய்த அசோகா அல்வா போல வழுக்கிக்கொண்டு போகிறது.

    எனக்கு காலத்துக்கும் ரசம் மட்டும் கொடுத்தாலும் சாப்பிடுவேன். ரசப் பிரியை:)

    ஆனால் வாழையிலையில் ரசம் சாப்பிடும் கலை இன்னும் கை கூடி வரவில்லை. ஒன்று இலையைத் தாண்டி ஓடுகிறது அல்லது இலையைக் கிழித்துவிடுகிறேன்:(

    என்ன இருந்தாலும் சுடச்சுட வாழையிலையில் சாப்பிடும்போது சாதா சாப்பாடும் தேவாமிர்தமாக இருக்கும்.

    ReplyDelete
  8. dear rvs
    ungal padhivugalileye migavum sirndhathu idhuthan(naan konjam sapppattu ramanakkum)

    indha thirupoonthuruthi upasaram patri ezhudungalen

    balu vellore

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்
    அப்டியே நேரா போய் ஒரு பீடா போட்டுக்கோங்க.. ஓ.கே ;-) எனக்கும் சம்பந்தி சாப்பிடவே மாட்டார் வேணும்.. ;-)

    ReplyDelete
  10. @LK
    அந்தப் பதிவை படித்தேன்.. மாலைமாற்றினார் நான் கேட்ட பாடல். அதனால் விட்டுவிட்டேன். இரண்டாவது பாடல் என்று நீங்கள் சொன்னது சரியாக விளங்கவில்லை எல்.கே. நன்றி ;-)

    ReplyDelete
  11. @பத்மநாபன்
    எப்படியும் ஃபுல் கட்டு கட்டக்கூடாதாம். சரியா? ஊருக்கு வாங்க உங்க சைசுக்கு இலை போட்டு விருந்து வச்சுடறேன்.. அதிதி தேவோ பவ.. ;-)

    ReplyDelete
  12. @அமுதா கிருஷ்ணா
    என்னங்க அவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க.
    எங்க பாட்டி மூக்ல ஒரு பருக்கை வர வரைக்கும் எங்காத்து தம்பி மோருஞ்சாம் சாப்பிடுவான் என்று சொல்வார்கள். ;-)

    ReplyDelete
  13. @வித்யா
    எங்கூரு அல்வா பேரை சொல்றீங்க. அதான் அதுக்கு தனி பதிவுன்னு சொன்னேன்.

    நானும் ஒரு ரச ரசிகன். பாட்டி வைத்த ரசத்தில் அன்பு ரசம் பொங்கும். ஹும்.. போய் சேர்ந்துட்டா...;-(

    சாதம் நனையர அளவிற்கு ரசம் விட்டு சாப்பிடணும். மீதியை கிண்ணத்துல வாங்கி குடிக்கலாம். இதுதான் டெக்னிக். உள்ளங்கை பெருசா இருக்கறவங்க ரசம் இலையை விட்டு ஓடுவதை தடுத்து நிறுத்தி வெற்றி காண்பார்கள். நான் நேரேயே பார்த்திருக்கிறேன். பார்த்து தெரிஞ்சிகிட்ட விஷயம்.

    ReplyDelete
  14. @ஆர்வீஎஸ்

    மாலை மாற்றினார் பாடல் முடியும் வரை காத்திருங்கள் அது முடிந்தவுடன் போஜனம் செய்ய வாருங்கோ வரும். இப்ப ஒரு கல்யாணத்திற்கு போகிறேன். முடிந்தால் அலைபேசியில் ரிகார்ட் செய்து வருகிறேன்

    ReplyDelete
  15. @வெங்கட்
    கிடைத்தது

    ReplyDelete
  16. உங்க வீட்டுக்குத்தான் கெளம்பிட்டு இருக்கேன் :)

    //சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது என்று சொல்வது ஏன் என்று யாருக்காவது தெரியுமா? முடிந்தால் பின்னூட்டத்தில் கருத்துரைக்கவும்.//

    முடி வந்தத பார்த்துட்டு வந்தவர் 'இதோட உறவே வேண்டாம், உன்னோட வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன்னு' சொல்லிட்டுப் போயிட்டா என்ன பண்ணுறது. அவர சமாதானம் செய்ய இது ஒரு வழின்னு நான் நெனக்கிறேன். :)

    ReplyDelete
  17. RVS உங்க மெயில் ஐடி குடுங்க, ”சம்பந்தி சாப்பிடவே மாட்டார்” பாட்டு அனுப்பி வைக்கிறேன்…

    ReplyDelete
  18. படிச்சதுக்கே பசி அடங்கிடிச்சு, இவ்ளோவும் எப்படி சாப்பிடுவாங்க?

    //எங்க பாட்டி மூக்ல ஒரு பருக்கை வர வரைக்கும் எங்காத்து தம்பி மோருஞ்சாம் சாப்பிடுவான் என்று சொல்வார்கள்//

    நாங்க வாயைத் திறந்தா காக்கா கொத்தற அளவுக்குச் சாப்பிட்டேன் என்று சொல்வோம்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  19. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....உங்கள் கேள்வி ஞானத்துலேயே, இத்தனை குறிப்புகள்! இன்னும் சமைக்கத் தெரிஞ்சிட்டா?

    ReplyDelete
  20. அன்புள்ள R V S , இதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆரம்ப முதலே -கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கதைதான். நீங்கள் ஒரு பயங்கர கலாரசிகர் என்பதை. சத்தியமாக "சொம்பு அடிக்கவில்லை" அதற்கு அவசியமும் இல்லை. கலாரசிகர்களால் மட்டுமே இப்படி சாப்பாட்டு விஷயத்திலும் வஞ்சனை இல்லாமல் இருக்க முடியும். கலா ரசிகர்களே உண்ணும் உணவினை ரசித்து அனுபவிக்கும் திறம் படைத்தவர்கள். இங்கே இன்னமும் இரண்டு பேரை சொல்லவேண்டும். ஒருவரரின் பெயரை சொன்னால் அது சுயசொறிதல் என்று ஆகிவிடும். மற்ற ஒருவரை கண்டுபிடியுங்கள். அவரை உங்களுக்கு நன்கு தெரியும் ! :)))))))

    ReplyDelete
  21. நிஜம்மாவே சுவையான பதிவு. இலையில் போட்டதை வேஸ்ட் செய்யாமல் சாப்பிடும் பழக்கம் எனக்கு. தேவைக்கு மட்டும் பரிமாற அனுமதிப்பதும் சாமர்த்தியம். பிடிக்காததை கடைசியில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் காலி செய்ய காலி செய்ய திரும்பத் திரும்ப அதை மட்டும் பரிமாறி விடுவார்கள்!

    ReplyDelete
  22. @இளங்கோ
    வீட்டுக்கு தானே.. வாங்க வாங்க.. பத்துஜிக்கு சொன்னதுதான் உங்களுக்கும். ;-)
    முடி விளக்கம் அருமை.

    ReplyDelete
  23. @balutanjore
    பாலு சார்!
    திருப்பூந்துருத்தி உபசாரம் பற்றி எழுதுகிறேன். அப்படியே பக்கத்து இலை பாயசம் இது போன்ற சமாச்சாரங்களும் எழுதுவோம். வருகைக்கும் இந்தப் பதிவுச் சாப்பாட்டை ரசித்தமைக்கும் நன்றி ;-)

    ReplyDelete
  24. @வெங்கட் நாகராஜ்
    உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன். நன்றி ;-)

    ReplyDelete
  25. @பாஸ்டன் ஸ்ரீராம்
    இந்த மாதிரி சாதத்தை போட்டு குளம் கட்டி சாம்பார் ஊற்றி அடிப்பது நமக்கு கை வந்த கலை ஆயிற்றே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் ;-)

    ReplyDelete
  26. @Chitra
    எங்கே அதையும் தெரிஞ்சிகிட்டு அனத்தப் போறேன்னு சமையல் உள்ளயே உட மாட்டேங்கறாங்க.. நிச்சயம் கத்துக்கணும். ஆசையா இருக்கு ;-)

    ReplyDelete
  27. ஆஹா கொட் ரசம்..ஞாபகப் படுத்தி விட்டீங்களே!

    ReplyDelete
  28. @கக்கு - மாணிக்கம்
    அன்பு மாணிக்கம் நானும் "தெரிந்துகொண்டேன் தெரிந்துகொண்டேன்" யார் அந்த கலா ரசிகர் என்று. அவர் ஒரு டயமன்ட். சரியா! ரசமோ, மோரோ எது சாப்பிடும் போதும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவேன். என் வீட்டில் கொஞ்சம் தலையை நிமிர்த்தினால் தானே இதர பதார்த்தங்கள் பரிமாற்ற முடியும் என்பார்கள். உப்பு, உரைப்பு என்று குற்றம் குறை சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு பிறகு வேறு சமயத்தில் சிரித்துக்கொண்டே என்னுடைய நாக்கின் அனுபவத்தை சமைத்தவர்களிடம் விவரிப்பேன். இதனால் எனக்கு சாதம் போட என் உறவினர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
    கருத்துக்கு நன்றி ;-)

    ReplyDelete
  29. @ஸ்ரீராம்.
    சரிதான் பிடிகாததை முதலில் சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சரித்து விடுவார்கள். என்ன ஒரு பந்தி நுணுக்கம். ;-)

    ReplyDelete
  30. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    மூவார் முத்து சார்! கொட் ரசம் மட்டுமல்ல.. வீட்டில் தட்டில் கொட்டும் அனைத்து ரசமும் எனக்கு பிடிக்கும். ;-)

    ReplyDelete
  31. நல்ல விருந்து :)))

    ReplyDelete
  32. வயிறுமுட்ட சாப்பிட்டு வந்தாலும், இலையோட அளவையும் சாப்பாட்டு ஐட்டங்களையும் பார்த்தா திரும்ப ஒரு வெட்டு வெட்டலாம்போல. அருமையான விருந்து.

    ReplyDelete
  33. எழுத்துப் பிழை: //பிரிதொருநாளில் பதிகிறேன்.// பிறிதொருநாளில் பதிகிறேன். பிறிது + ஒரு + நாளில்!

    //கலாரசிகர்களால் மட்டுமே இப்படி சாப்பாட்டு விஷயத்திலும் வஞ்சனை இல்லாமல் இருக்க முடியும். கலா ரசிகர்களே உண்ணும் உணவினை ரசித்து அனுபவிக்கும் திறம் படைத்தவர்கள். //
    சொல்லுங்க, சொல்லுங்க, நானும் அந்த கலா ரசிகக் கூட்டம்! சாப்பாட்டுப் பிரியர்கள் அதிரடி வம்பு தும்புகளுக்குப் போவதில்லையாக்கும்!

    இந்த மாயாபஜார் பாட்டு 2 வருஷம் முன்னால பதிவுல போட்டேன், என் குழந்தைகளுக்கு நான் சொல்லிக் கொடுத்த வெகுசில பாடல்களில் இதுவும் ஒண்ணு:)

    ஆமா, இந்த இலைக்குப் பரிமாறினவர்கள் கன்னடர்கள் போலிருக்கே? உப்பு முதலில் போடறது, கோசுமரி (சர்க்கரை சேர்த்து), பல்யா என்றெல்லாம் பார்த்தால் கர்நாடக வழக்கம் மாதிரியிருக்கு... எங்க சைடுல இனிப்பு முதலில் பரிமாறப்படும்!

    ReplyDelete
  34. பேஷ் பேஷ் விருந்து ரொம்ப நன்னா இருந்தது! எல்லாம் சாப்பிட்ட பிறகு பாயசம் சாப்பிடும் ருசி! ஆஹா…. இப்பவே போய் பாயசம் வைச்சு சாப்பிடணும்போல இருக்கு.

    என்னுடைய அடுத்த பதிவு – கரு காத்த நாயகி படிச்சாச்சா?

    ReplyDelete
  35. பேஷ் பேஷ் விருந்து ரொம்ப நன்னா இருந்தது! எல்லாம் சாப்பிட்ட பிறகு பாயசம் சாப்பிடும் ருசி! ஆஹா…. இப்பவே போய் பாயசம் வைச்சு சாப்பிடணும்போல இருக்கு.

    என்னுடைய அடுத்த பதிவு – கரு காத்த நாயகி படிச்சாச்சா?

    ReplyDelete
  36. // "வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு..//
    RVS அது என்னா கடப்பா...? தோசை வார்க்கும் கல்லா ? ?

    ReplyDelete
  37. @sakthi
    விருந்து சாப்பிட்டதற்கு நன்றி ;-)
    (மறக்காம வாசல்ல பை வாங்கிகிட்டு போங்க.. ;-) )

    ReplyDelete
  38. kakku manikkam sir

    kadappa endral chatniyakkum

    rvs sir ii ketkalam

    balu tanjore

    ReplyDelete
  39. @புவனேஸ்வரி ராமநாதன்
    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். சிறிய இலையில் தான் உட்காருவார். ஆனால் ரெண்டு முழு சிப்பல் சாதம் உள்ளே போகும். ஊசித் தொண்டை பானை வயிறு. ஹி ஹி... ;-)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ;-)

    ReplyDelete
  40. @கெக்கே பிக்குணி

    பிரி - பிரிந்து போதல்.
    பிறகு - அப்புறம்
    பாடத்துக்கு நன்றி...

    // சாப்பாட்டுப் பிரியர்கள் அதிரடி வம்பு தும்புகளுக்குப் போவதில்லையாக்கும்!//
    சரி நம்பிட்டோம்!!!

    //ஆமா, இந்த இலைக்குப் பரிமாறினவர்கள் கன்னடர்கள் போலிருக்கே? உப்பு முதலில் போடறது, கோசுமரி (சர்க்கரை சேர்த்து), பல்யா என்றெல்லாம் பார்த்தால் கர்நாடக வழக்கம் மாதிரியிருக்கு... எங்க சைடுல இனிப்பு முதலில் பரிமாறப்படும்! //
    மிகவும் சரி!! எங்கள் தஞ்சாவூர் பக்கத்திலும் பாயசத்தில் தான் ஆரம்பிப்போம். ஆனால் ஐட்டங்களின் பொசிஷன் ஓரளவிற்கு சரியாக இருந்ததால் அந்தப் படத்தை போட்டேன். நீங்க ரொம்ப ஷார்ப்!!!

    ReplyDelete
  41. @கோவை2தில்லி

    சாப்பிட்டு ஜமாயுங்க.. வயிறே உன்னோடு வாழ்தல் அரிதுன்னு அவ்வையார் சொன்னதாக படித்த ஞாபகம். அப்புறம் எல்லோரும் சொல்ற இன்னொன்னு என் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம். கருத்துக்கு நன்றி ;-)

    ReplyDelete
  42. @கக்கு - மாணிக்கம்
    மாணிக்கம்!! கடப்பா என்பது ஒரு வகை குருமா வகையறா! எங்கள் பக்கம் சொல்லும் டெக்னிகல் டெர்ம் அது. மஞ்சளா குருமா மற்றும் சப்ஜி போன்றும் இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு சைட் டிஷ். தக்காளி,உருளை மற்றும் வெங்காயம் போன்றவை இதில் பங்குபெறும் பிரதான பொருட்கள். ;-)

    ReplyDelete
  43. அழைப்புக்கு மிக்க நன்றி ... இப்படின்னு தெரிஞ்சிருந்தா சப்பு கொட்டிட்டு மழையோட மழையா வந்திருப்பேனே..

    சரி மார்ச்சுல பார்க்கலாம்... ஐட்டம் முப்பத்தொன்னில் ஒன்னு குறைஞ்சாலும் சம்பந்தி சண்டை தான்... ( தமாசு நண்பரே ,அழைச்சதே நாற்பது ஐட்டம் சாப்பிட்ட திருப்தி )

    என்னோட பதிவு பின்னூட்ட சைடு வாங்க... உங்கள சின்ன கிள்ளு கிள்ளிருக்கேன்

    ReplyDelete
  44. virundhu superb.
    enakku thayir,moar pickle .
    idhu mattum podhum.

    ReplyDelete
  45. மிகுந்த பசியோடு வந்தேன்.. நல்ல விருந்து. அத் எப்படி RVS (சாப்பாட்டு ராமனனு யாரோ சொல்ற மாதிரி இருந்தது) இப்படி வெளுத்துக் கட்டுகிறீகள் சாப்பாட்டு விஷயத்திலும்.. உண்மையா ஏற்கனவே பசி.. சிரிதததில் இன்னும் கூடி இப்போது அகோரப் பசி. விட்டா படத்தில் இருக்கும் இலையையே மேய்ந்து விடுவோம் போல இருக்கிறது. அருமையான பதிவு..

    குனிந்த தலையும் கொஞ்சம் கூட திங்க சலைக்காத செவ்வாயும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால்..மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தில்... RVSன் பதிவைப் படித்துக் கொண்டிருக்கவும்...

    ReplyDelete
  46. @பத்மநாபன்
    இனி மார்ச்சுலதானா.. சரி ஓ.கே. வீட்டம்மா கூட பசங்களையும் அழைச்சுகிட்டு வந்துடுங்க... விருந்தே வச்சுடறேன்..
    உங்க பக்கம் வந்தேன்.. திரும்ப நறுக்குன்னு கிள்ளியிருக்கேன்.... பார்த்து... ;-);-)

    ReplyDelete
  47. @angelin
    தயிர் சாதமும் மோர் மொளகாயும் கூட நல்ல காம்பினேஷன் தான்!! ;-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ;-)

    ReplyDelete
  48. @ஆதிரா
    கருத்துக்கு நன்றி ஆதிரா...
    நமக்கு எப்பவுமே ஜம்போ மீல்ஸ் தான். ராத்திரி கூட சாதம் இல்லைன்னா தூக்கம் வராது. ;-( அட்லீஸ்ட் மோர் சாதமாவது வேணும். ;-)

    இதற்க்கு சோத்துப் பட்டறை என்பார்கள்.. இன்னும் சிலர் சோத்தால் அடிச்ச சுவரு என்பார்கள்.. என்ன சொன்ன என்ன... நாம உள்ள தள்ள வேண்டியதுதானே!

    ReplyDelete
  49. அற்புதம் ஆர் வி எஸ்!உங்கள் டாப் லிஸ்ட்டில் இதை வைப்பேன்..ரசிகர் மட்டுமல்ல சாப்பாட்டு ராமரும் நீரே ஆவதாக...அப்புறம் எரிசேரி எல்லாம் நாகர்கோயில் சமாச்சாரம் நெல்லை அல்ல...ரைத்தா என்றால் என்ன?

    ReplyDelete
  50. @bogan
    நன்றி!
    ரைத்தா என்றால் ஆனியன் அல்லது வெள்ளரிக்காய் போட்ட தயிர் பச்சடி.
    இப்படி சாப்பாட்டை இனிஷியலாக போட்டு ராமன் என்று நீங்கள் கொடுத்த பட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இப்படியானும் ஒரு ராமர் பட்டம் நான் வாங்கியிருப்பது என் மனைவிக்கு தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவாள். ;-) ;-)

    திருநெல்வேலி ஜில்லாவில் சில உறவுகள் இருப்பதால் அவர்கள் செய்யும் ஒரு பதார்த்தம் எரிசேரி. அதனால் சொன்னேன். ;-)

    ReplyDelete
  51. ஆஹா.. சோத்துப் பட்டறையா.. அது என் பேர்.. என்னையும் எங்க வீட்ல அப்படித்தான் கூறுவார்கள். எனக்கும் இந்த டிஃபன் எல்லாம் இருந்தாலும் சோறுதான்...
    காலையில சொல்ல மறந்துட்டேன்.. போஜனம் செய்ய வாருங்கள்.. நீங்க சொன்னவுடன் பழைய நினைவுகள்... கிடைக்கலையா... கேட்க கேட்க ருசிக்கும் போஜனம் அது...

    ReplyDelete
  52. நாங்கள் கொஞ்சம் வேற விதம். 'வயிற்றுக்கு' உணவில்லாவிடில் சிறிது செவிக்கு ஈய்ந்து கொள்ளுவோம். அதனாலதான் பாரதி பாட்டுக்களுக்கு மறுமொழி கொடுத்தேன். இதுவும் நல்லாயிருக்கு.

    மின்னணு துவிபாஷகருக்கு நன்றி.

    ரகு.

    ReplyDelete
  53. oh! my god..
    I chose the original post for my 'valaicharam'... u have used it now..

    ok.. ok.. let me think If I can include you also in that reference.

    ReplyDelete
  54. @ரகு.
    எப்படி நல்ல இருக்கா ரகு சார்! வந்து பின்னூட்ட ஜோதியில் ஐக்கியம் ஆயிடுங்க... நன்றி ;-)

    ReplyDelete
  55. @ஆதிரா
    அன்னமிடும் கைககளிலே ஆடி வரும் பிள்ளை இது....
    (ஓ. இது கண்ணன் ஒரு கை குழந்தையில் வருமா...சரி .. சரி.. விட்டுடுவோம்.. )

    ReplyDelete
  56. @Madhavan Srinivasagopalan

    I Can't understand!!?!!!

    ReplyDelete
  57. இன்னொரு விஷயம். சமீபத்தில், வாஷிங்டனில் திருமணம் படித்தேன்.
    அதிலும் கல்யாண பந்திப்பற்றி வரும். அதில், ஜாங்கிரி சாப்பிடும் முறை பற்றி அமெரிக்கர்கள் வியப்பார்கள்.

    ரகு.

    பின் குறிப்பு: உமது பந்தி நல்லாவே இருந்தது. ஜெலுசில் தேவை இருக்குமோ என்னவோ தெரியவில்லை? :)

    ReplyDelete
  58. கக்கு - மாணிக்கம் said...
    // "வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு..//
    RVS அது என்னா கடப்பா...? தோசை வார்க்கும் கல்லா ? ? //


    கடப்பா செய்வது எப்படி? -ன்னு பதிவர் ரேகா ராகவன் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் சுட்டி இதோ.

    http://rekharaghavan.blogspot.com/2009/09/blog-post_06.html

    படிச்சு பாருங்க…

    ReplyDelete
  59. @ரகு.
    //பின் குறிப்பு: உமது பந்தி நல்லாவே இருந்தது. ஜெலுசில் தேவை இருக்குமோ என்னவோ தெரியவில்லை? :) //

    சார் நிச்சயமா அஜீரணம் ஆகாதுன்னு நம்பிக்கை. ;-)

    ReplyDelete
  60. @வெங்கட் நாகராஜ்
    நானும் படிச்சு பார்த்தேன். நல்ல இருக்கு. என்னுடைய நளபாகத்தை கடப்பாவிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். ;-)

    ReplyDelete
  61. அந்த விபரீத பரீட்சை எல்லாம் நமக்கு எதுக்கு. நமக்கெல்லாம் மார்க்கண்டேய விலாஸ் கடப்பா சாப்பிட்டு, பதிவு எழுதிட்டு ”சும்மா கிடப்பா” தான் சரியா வரும்!!

    ReplyDelete
  62. @வெங்கட் நாகராஜ்
    நோ................நோ...............நோ............
    நான் விட்ட கலை அது மட்டும் தான்... தொடாமல் ... சிகரம் தொடாமல் விடமாட்டேன்............ ;-)

    ReplyDelete
  63. அட...பாட்டோட இப்பிடி ஒரு விருந்து நடந்திருக்கு.எனக்குக் கிடைக்காமல் போச்சே ஆர்.வி.எஸ் !

    ReplyDelete
  64. இந்த ஐயங்கார்கள் & கர்னாடகாகாராதான் உப்புலேந்து ஆரம்பிப்பா மன்னார்குடியும் அப்பிடித்தான் போலருக்கு, நெல்லை பக்கத்துல எல்லாம் அவாளோட மனசு மாதிரியே பாயாசத்துலேந்துதான் ஸ்டார்ட் ம்யூசிக் பண்ணுவா. அப்புறம் இந்த தஞ்சாவூர்காரா கோஸ்மல்லியை ப்ரமாதப்படுத்துவா, அதுல கோஸும் இருக்காது மல்லியும் இருக்காது கேரட் துருவல் + ஊறின பாசிப்பருப்பு etc தான் இருக்கும் ஆனா பேரு மட்டும் கோஸ்மல்லி..:PP பதிவை ரசிச்சுப் படிச்சேன்!

    எங்க பக்கமெல்லாம் இலைல ஒரு ஐய்ட்டம் இடம் மாறி போட்டாலும் அறுவாள் மரியாதைதான் கிட்டும்..:)

    ReplyDelete
  65. @ஹேமா
    பரவாயில்லை.. கடைசி பந்திக்கு வந்துட்டீங்க.. நோ ப்ரோபளம். ;-)

    ReplyDelete
  66. @தக்குடுபாண்டி
    ராஜா.. கண்ணு.. தக்குடு... ஒன்னு ரெண்டு நம்பர் போட்டது எதுஎது எந்த இடத்தில பரிமாறனும்ன்னு காமிக்கரதுக்குதான். அந்த வரிசையில் தான் பரிமாறனும்ன்னு இல்லை. ஓ.கே .. தனியா கோஸும் மல்லியும் இலையில போட்டா என்ன மாதிரி இருக்கும்.
    உங்க ஊர்லதான் பக்கத்து இலை பாயசமும் ஜாஸ்த்தின்னு தெரியுமே... ;-) ;-) ;-)

    அருவாளுக்கும் உங்களவாளுக்கும் உள்ள ரிலேஷன் எனக்கு நன்னா தெரியும். ;-)

    ReplyDelete
  67. பந்திக்கு பிந்தி விட்டேனே! இங்க ஒரு சஹஸ்ரபோஜனம் இல்ல பண்ணி வச்சிருக்கீங்க ஆர்.வீ.எஸ்! ரொம்பவே ரசிச்சேன்.

    ஈயச் சொம்பில் வைத்த ரசம்.குமிட்டியில் குழைந்த அக்காரவடிசல்,வேப்பம்பூ ரசம், வடுவாங்காய்,இஞ்சித்தொகையல்,அடடா!(நாக்கை அறுக்க!)

    //சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது//
    என் அக்கா வீட்டில் சாப்பிடும்போது, குழம்பில் முடி இருந்தது.

    "அக்கா! கேசவர்த்தினி எண்ணெயிலயா தாளிச்சு கொட்டினே? குழம்புல முடி இருக்கே!" என் ஜோக்அடித்து, நன்கு வாங்கிகட்டிக் கொண்டேன்!

    ReplyDelete
  68. @மோகன்ஜி
    //"அக்கா! கேசவர்த்தினி எண்ணெயிலயா தாளிச்சு கொட்டினே? குழம்புல முடி இருக்கே!" என் ஜோக்அடித்து, நன்கு வாங்கிகட்டிக் கொண்டேன்!//

    இதுக்குத்தான் ஏங்கினேன். உங்க இடத்துல வந்து சண்டை போட்டேன்... இதை மிஸ் பண்ணியிருப்பேன் இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி.. ;-)

    ReplyDelete
  69. சுவையாக இருந்தது என் முகப் புத்தக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  70. @Dr.எம்.கே.முருகானந்தன்
    மிக்க நன்றி.. முதல் வருகையோ.. மீண்டும் வருக.. ;-)

    ReplyDelete
  71. போஜனம் செய்ய வாருங்கோ கேட்டீங்களா ? இல்லாட்டி மெயில் அனுப்புங்க தருகிறேன்

    ReplyDelete