Monday, January 17, 2011

ரிஷப்ஷன்

ஊரெங்கும் ஆண்பிள்ளைகளுக்கு கால் கட்டு இறுக்கிப் போடும் விழாவிற்கோ அல்லது ஸ்திரீகளுக்கு மூக்கணாங் கயிறு கட்டும் முஹூர்த்ததிர்க்கு முதல் நாள் சாயந்திரமோ அல்லது அடுத்த நாள் அந்தி வேளையிலோ க்யூ கட்டி நின்று கிஃப்ட் கொடுத்து கூட்டம் கூட்டமாக சிரித்துக்கொண்டு, ஒரு காயில் ஒயர் கழுத்தை சுற்றி மாலையாக போட்டுக்கொண்டு பாலான்ஸ் தவறாமல் சேர் மேல் ஒரு கழைக் கூத்தாடியின் லாவகத்துடன் ஏறி வீடியோ மற்றும் புகைப்படம் பிடிப்பவருக்கு அனைவரும் போஸ் கொடுக்கும் ஒரு நன்நாள் ரிசெப்ஷன். கல்யாணப் பையன் கோட் ஷூட் (அன்றைக்கு மட்டும்) அணிந்து, வுட்லாண்ட்ஸ் ஷு மாட்டி, நவநாகரீக யுவனாய் கல்யாண பரபரப்பில் இளமை குறுகுறுப்பில் மணமகள் அருகில் நெஞ்சம் தடதடக்க நிற்பான்.

ஆறு மணி ரிஷப்ஷனுக்கு நான்கு மணிக்கே மகளிர் ஒரு கூட்டமாக சென்று லாக்மே மற்றும் கிரீன் ட்ரெண்ட்ஸ் போன்ற அழகு நிலையங்களை முற்றுகையிட்டு முழு (நிலவான) முகத்தை பலவிதமான கிரீம்கள் மற்றும் பசைகள் பூசி அழகுக்கு மெழுகு சேர்த்துக் கொண்டு, முழங்கை வரை இருகைகளிலும் கம்ப்யூட்டர் டிசையனில் மெஹந்தி வரைந்து, தலைக்கு விதவிதமான கொண்டையிட்டு வெண்மணிகள் குத்தி, ரத்தம் குடித்த வாயாக உதட்டை மாற்றி, சிருங்கார சிங்காரிகளாய் ஃபான்ஸி ஸாரி உடுத்தி பரவசமாய் பம்பரமாய் சுற்றுவார்கள். புது மாப்பிள்ளைக்கு "இவளைப் பார்த்த அன்றைக்கு இது போல் கோலாகலமாக இருந்திருந்தால் சுயம்வரம் போல செலெக்ட் பண்ணுவதற்கு நமக்கு நிறைய ஆப்ஷன் கிடைத்திருக்குமே" என்று பக்கத்தில் நிற்பவளை பார்த்து ஏக்க ஆதங்கம் மனதில் பொங்கும். மணப்பெண் யார் மணமான பெண்கள் யார் என்று  வித்தியாசம் பாராட்ட முடியாத வகையில் போட்டி போட்டுக்கொண்டு முகத்தில் க்ரீம் வழிய அழகுப் பெண்டிராக அணிவகுப்பர். எல்லோரும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவலோக அப்சரஸ்களின் பூலோக அவதாரங்களாக இல்லை.. இல்லை... பிரதிகளாக அவதானித்துக் கொள்வார்கள். இந்த மேக்கப்பில் தொட்டு தாலி கட்டி புருஷன் கூட சில சமயம் "நம்ம ஆளா அது" என்று அடையாளம் கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள். பிள்ளைகளை ஓடியாடி மேய்த்துக்கொண்டு அவர்களுக்கு ஜூஸ் சிப்ஸ் போன்ற பதார்த்தம் வாங்கிகொடுத்து அழுதால் சமாதானம் பண்ணி ஒரு கம்ப்ளீட் பேபி சிட்டிங் ப்ரோஃபைல் மெயின்டன் செய்வார்கள்.
rajini wedding reception
ரிஷப்ஷனில் ரஜினிக்கும் அதே நிலைதான்!!!


எல்லோருக்கும் தோள் வலிக்க கைகொடுத்து, வாய் அசர வணக்கம் சொல்லி, நட்புகளின் தோளோடு தோள் கோர்த்து, தூரத்து சொந்தங்களின் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூனு விட்ட பாட்டியை முதற்கொண்டு குசலம் விசாரித்து புன்னகை மாறாமல் பற்பசை விளம்பரம் போல வீடியோவிற்கு போஸ் கொடுத்து ரிஷப்ஷன் கடமையில் சம்சாரி ஆகப்போகிற மாப்பிள்ளைப் பையன் கஷ்டப்படும் அதே வேளையில் கையில் பிடிலோ, நாதஸ்வரமோ வைத்துக்கொண்டு ரிஷப்ஷன் கச்சேரி வாசிக்கும் கலைஞர்கள் படும் பாடு படு திண்டாட்டமானது. நாதஸ்வரம் வாசிக்கும் வேளையில் அந்த குட்டி மேடைக்கு முன்னே சில விஷம வாண்டுகள் நின்று வாசிக்கும்போது அவர் விடும் ஜொள் ஆறாக வழியும் நாதஸ்வரத்தை எந்த வேளையிலும் வெடுக்கென்று பிடித்து இழுக்கும் அபாயம் உண்டு. கண்ரெண்டும் அந்த விஷமர்களையே நிலைகொண்டு பார்க்க வாத்தியத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு எச்சரிக்கையாக வாசிப்பார். இந்த மாதிரி ஒரு அமர்க்களமான ரிஷப்ஷன் நடந்து கொண்டிருக்கும் போது பழுத்த அனுபவசாலி நாதஸ்வரகார் அண்ணமாச்சாரியாவின் "நானாடி பதுகு நாடகமு..." என்று வாசித்து "தினசரி வாழ்வு ஒரு நாடகம்டா.... நாடகம்டா....." என்ற அர்த்தத்தை கல்யாண மதிமயக்கத்தில் இருக்கும் மாப்பிளைக்கு புரியவைக்க பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தார். (இங்கு மாப்பிள்ளைக்கு என்று எழுதியிருப்பதால் பெண் சிங்கங்கள் கிளர்ந்து எழுந்து பின்னூட்டத்தில் பதிலடி கும்மி அடிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

சிகப்பு கலரில் பெரிய ராஜா,ராணி சேர் போட்டு மணமக்கள் மேடையில் அமர்ந்து வீடியோ விளக்கின் ஃபிளாஷ் பார்த்தவுடன் அடுத்த கணம் முண்டியடித்துக்கொண்டு முதல் ஆளாய் வாழ்த்துக் கவர் கொடுத்து வீடியோவிற்கு முப்பத்திரெண்டையும் காட்டிவிட்டு குடும்ப ஸகிதம் பந்திக்கு பறந்து கொண்டு சாப்பாட்டு பக்கம் தாவினால் அவருக்கு மூன்று அதிமுக்கிய காரணங்கள் இருக்கும்.
ஒன்று: அவர் மறுநாள் காலை ஒன்பது மணி ஒரு நிமிஷத்திற்குள் டாண்ணு அலுவலகத்தில் ஆஜாராக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.
இரண்டு: அவர் வீட்டிலிருந்து இந்தக் கல்யாணமண்டபம் முப்பத்தி ஏழு சிக்னல்கள் கடந்து, நார்ப்பத்தைந்து டாஸ்மாக் கடைகள் தாண்டி, ஓராயிரம் பேருந்துகளில் ஓரிரு பேருந்துகள் மட்டும் தடம் பதிக்கும் ஒரு அத்துவான காட்டில் குடித்தனம் நடத்துகிறார் என்று அர்த்தம்.
மூன்று: "அங்கெல்லாம் ஆட்டோ வராது..." என்று வெடுக்கென்று முகத்தை வெட்டி இழுத்துக்கொண்டு சர்ரென்று எதிர்திசையில் பறக்கும் ஆட்டோகாரர்கள் வர மறுக்கும் ரிடர்ன் சவாரி இல்லா வெறி நாய்கள் உலவும் விளக்கில்லா அமாவாசை தெருவில் அவர் குடியிருக்கிறார்.

மேற்கண்ட காரணங்களுக்காக சாப்பாட்டுக்கு பறந்து வந்தால் நமக்கு முன் நாலு பேர் கர்சீப் போட்டு இடம் பிடித்து காத்திருக்கிறார்கள். நாலு இலை தாண்டி தயிர் சாதம் பிசையக் கூப்பிட்ட தன் குழந்தையிடம் போன ஒருவரின் சீட்டில் இன்னொருவர் உட்கார்ந்து விட்டார். திரும்ப வந்து தயிர் சொட்டும் தனது எச்சக் கையை காண்பித்து அவரை எழுப்பி விட்டு விட்டு தான் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்து வெற்றிகரமாக சாப்பிட்டு எழுந்திருந்தார். இம்முறையும் நான்கு நாட்கள் சாப்பிடாத பறக்காவெட்டி போல பாய்ந்து அந்த இடத்தை பிடித்து தனக்கு தக்கவைத்துக் கொண்டார். கொலைவெறியுடன் இந்த சீட்டுக்கு ஆளாய்ப் பறக்கும் அடிதடியை பார்த்த இரண்டு வெளிநாட்டு கனவான்கள் "வோ நோ.... நோ.. வே.. " என்று மோர்க்குழம்பு வாயோடு போஜன அறைக்குள் நுழையவே பயந்தார்கள்.

ஒருவழியாக இறங்கினவரை உள்ளே தள்ளிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டால் வாசலில் தாம்பூலப் பை கொடுப்பவர் முகத்தில் ரசம் வழிய வேறெங்கோ பராக்கு பார்த்துக் கொண்டு நிற்பார். ரெண்டு மூன்று தடவை முன் பக்கம் பின் பக்கம் போய் அவரோடு கபடி விளையாடி ஒரு தேங்காய், முற்றிலும் காய்ந்த சாறில்லா வெற்றிலை ரெண்டு, அதிர்ஷ்டம் இருந்தால் பிய்யாமல் இருக்கும் பாக்கு பொட்டலம் ஒன்று என்று குக்கிங் காண்ட்ராக்டர் ஒரு வாரம் முன்பு போட்டு கொடுத்த பையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையை கட்டலாம்.

பின் குறிப்பு: தை பிறந்து பல பேருக்கு கல்யாண யோகம் கைகூடி வந்திருக்கும். நாமும் பத்திரிக்கை கொடுத்த மரியாதைக்கு காசு பணம் போட்டுவிட்டு கை நனைத்து விட்டு வருவோம். நேற்று அட்டென்ட் செய்த ரிஷப்ஷனில் தோன்றிய பதிவு இது. பாதி நேற்று நடந்தது மீதி முன்னேப்பவோ நடந்தது.

பட உதவி: andhrulamusic.com
-



58 comments:

  1. (இங்கு மாப்பிள்ளைக்கு என்று எழுதியிருப்பதால் பெண் சிங்கங்கள் கிளர்ந்து எழுந்து பின்னூட்டத்தில் பதிலடி கும்மி அடிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)
    எப்பிடியும் இதுக்காக முதல் கும்மி வீட்ல வாங்கிருக்க மாட்டிங்களா என்ன!

    ReplyDelete
  2. உங்களுக்கும் இந்த வியாதி வந்திடிச்சா!!! ரிஷப்ஷனுக்கு போன இடத்துல உதிச்ச மேட்டர்னு சொன்னீங்களே அதைச்சொன்னேன். எத்தைக்கண்டாலும் இது பதிவுக்கு ஏத்ததான்னு மேட்டர் தேத்துவதுதான் நல்ல பதிவருக்கு இலக்கணம்

    ReplyDelete
  3. கலாட்டா ரிசப்ஷன் பதிவு.... இரவு வாரேன்....

    ReplyDelete
  4. எங்க வரவேற்பு விழாவுல, பக்கத்துல ரெண்டு AC மெசின் இருந்துச்சு. ஆனா, எங்க மேல அதுக்கு என்ன கோபமோ தெரில, கடைசி வரைக்கும் காத்து வரவே இல்ல, மேடைல அதுவும் அவ்ளோ வெப்ப வெளிச்சத்தில் நிக்குறப்போ, பட்டாம் பூச்சி பறந்துச்சு :).

    ReplyDelete
  5. அண்ணாத்தே முந்தி கொண்டீர் நீங்க, நான் வார இறுதியில் போடலாம்னு இருந்தேன்

    ReplyDelete
  6. வைபவங்களுக்கு போனால் சாபிட்டுதான் வரணம் கிறது என்ன சம்ரதாயமோ!
    அழகா, போற வழியில ஏதாவது ஒரு ஹோட்டல உட்காந்து ஆற அமர சாப்பிட்டு பின்னர் போகலாமே வீட்டுக்கு.
    சாபிட்டே ஆக வேண்டும் என்றால் இந்த கண்றாவிகளை அனுபவித்தே தீரவேண்டும்.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. ரிசப்ஷனில் எல்லாரை விட அதிகமாய் பாடுபடுவது மாப்பிள்ளையும் பெண்ணும்தான். வர எல்லோரையும் பார்த்து, சிரித்தும் சிரிக்காத மாதிரி ஒரு லுக் விடவேண்டும்! இங்கே தில்லியில் நாதஸ்வரத்திற்கு பதில் டி.ஜே வைத்து அந்தந்த நாட்களில் எந்த ஹிந்தி/தமிழ் குத்துப் பாட்டு பிரபலமோ அதை ஹை வால்யூமில் வைத்து எல்லோரு நடனம் என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டு இருப்பார்கள்! அதை வேறு நாம் பார்க்க வேண்டும்! சரி மிக நீண்டுகொண்டு போகிறது – தனியாகவே எழுதலாம் – அது பெட்டர் :)

    ReplyDelete
  8. ச்சே.... எதெல்லாம் மிஸ் பண்ணிட்டு இங்கே உட்கார்ந்து இருக்கோம் என்று நினைச்சேன்!
    இங்கே நடக்கிற reception ல ஒவ்வொரு டேபிள்லேயும் விருந்தினர்கள் பெயர் எழுதி, யார் யார் எங்கே உட்காரனும் என்று எல்லாமே organized ஆக இருக்குது... கூட்டம் குறைவாக இருப்பதால், இப்படி செய்ய முடியுது.

    ReplyDelete
  9. @raji
    அப்பா... ப்ராம்ப்டா வந்து கும்மியை ஆரமிச்சு வச்சுட்டீங்க. நன்றி .. வீட்டுல கும்மிடறாங்க போங்க.. ;-) ;-)

    ReplyDelete
  10. @புதுகைத் தென்றல்
    ஒரு சின்ன திருத்தம். இது வியாதி இல்லை..அடிமை.. ப்ளாக் அடிமை நான்.. ஹா..ஹா..ஹா.. ;-)

    ReplyDelete
  11. @பத்மநாபன்
    இன்னும் காணோமே.. தேடிகிட்டே இருக்கேன்.. ;-)

    ReplyDelete
  12. @இளங்கோ
    தம்பி கரெக்டா சொல்லுங்க.. வெப்ப வெளிச்சச்சத்துலையா... இல்லை வெப்ப அருகாமையிலா.. எதுல பட்டாம்பூச்சி பறந்துச்சு.. சும்மா வெக்கப்படாதீங்க.. ;-)

    ReplyDelete
  13. @எல் கே
    நீர் வலைச்சரத்தில் பிசி.. நான் முந்திக்கொண்டேன்.. ;-)

    ReplyDelete
  14. @கக்கு - மாணிக்கம்
    இப்படி அடித்துப் பிடித்து உட்கார்ந்து சாப்பிடவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்கள் மாணிக்கம்.. ஒன்றும் செய்வதற்கில்லை.. ;-)

    ReplyDelete
  15. @வெங்கட் நாகராஜ்
    அது பெஸ்ட்டு.. ஒரு பதிவாக "வடக்கத்தி வரவேற்பு" என்று தலைப்பிட்டு அசத்துங்கள்.. வலை ராஜா.. ;-)

    ReplyDelete
  16. @Chitra
    ம்.. சரிதான்.. இதிலும் ஒரு சுகம் உள்ளதுதான்.. இதுபோன்ற காட்சிகளை காண்பதே ஒரு இன்பம் தான்.. நம்மை போல இன்னொருத்தன் மேடையில நின்னு இந்த சிரி சிரிக்கரானேன்னு.. ஹி.. ஹி.. ;-) ;-)

    ReplyDelete
  17. ரிசப்ஷன்ல நடக்கற கச்சேரி சமாசாரத்தை பத்தி என்னோட"கல்யாணமே கச்சேரியே" படிச்சு பாருங்க முடிஞ்சா

    ReplyDelete
  18. \\\ரத்தம் குடித்த வாயாக உதட்டை மாற்றி,///

    ....ஹா ஹா ஹா

    இனி யார் லிப்ஸ்டிக் போட்டுப் பார்த்தாலும் டிராகுலா ஞாபகம் தான் வரும்.

    ReplyDelete
  19. //பாதி நேற்று நடந்தது மீதி முன்னேப்பவோ நடந்தது//

    //இந்த மேக்கப்பில் தொட்டு தாலி கட்டி புருஷன் கூட சில சமயம் "நம்ம ஆளா அது" என்று அடையாளம் கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள்//

    ஒரு படைப்பாளியோட கை படும் சாதாரண கட்டையும் சிற்பமா மாறுவது மாதிரி ஒரு சாதாரண ரிசப்ஷென் கூட சிலர் சொல்லும் போது ரொம்ப நகைசுவையாகவும் சுவாரசியமாகவும் இருக்கு. சூப்பர் அண்ணா!...:) (சிலர் = நீங்க தான், நேரடியா நீங்க சொல்லும் போதுனு சொன்னா திருஷ்டி வந்துடும் அதான்..:)

    ReplyDelete
  20. எல்லார் மாதிரியும் நானும் என் ரிசப்ஷன்லே கஷ்டம் தான் பட்டேன்.. ஆனா ஆர்கெஸ்ட்ரா பாடும் போது நானும் வாயசைத்துக் கொண்டு புண்பட்ட மனதை ஆற்றினேன்! அதை என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் வேற நோட் பண்ணிட்டு இன்னிக்கு வரை ஓட்டுறான்..

    "அத்தனை கலாட்டாவிலயும் தன்னோட ரிசப்ஷன்லயே கூட பாடிக்கிட்டு இருந்தவ நீயா தான் இருப்ப"

    ReplyDelete
  21. //@எல் கே
    நீர் வலைச்சரத்தில் பிசி.. நான் முந்திக்கொண்டேன்.. ;-) ///

    வேற ஒருக் காரணம் இருக்கு

    ReplyDelete
  22. ரிசப்ஷன் ஆரம்பிப்பதற்கு முன்னர் மணமக்களின் ஃபோட்டோ செஷனை மறந்துட்டீங்களே. இப்படி திரும்பு, கன்னத்துல கை வை, சைடுக்கா பாருன்னு அக்கப்போர் பண்ணிடுவாங்களே.

    ReplyDelete
  23. Good Reception pola irukkey... Kalakareenga....Keep them coming...

    ReplyDelete
  24. ரிசப்ஷன் ஒரு சுவாரஸ்யமான சம்பவம். அதே சுவாரஸ்யம் உங்கள் எழுத்திலும் தெரிகிறது

    ReplyDelete
  25. தை பிறந்து மொதோ முகூர்த்தமே கச்சேரி ஆரம்பிடிச்சா..
    ஜமாய் ராஜா .. ஜமாய்..

    ReplyDelete
  26. இந்த மாதிரி விவரிப்பு சிலருக்குத்தான் வரும் ( சிலர்- தக்குடு சொன்னாமாதிரி)... ரிஷப்ஷனில் நல்லாவே நோட்டம் விட்டிருக்கிங்க மணம், மணமா....

    //"நானாடி பதுகு நாடகமு..."// மோகன்ஜி ஒரு தடவை சொன்ன பாட்டாச்சே கேட்டு பார்க்கவேண்டும்..

    மோர் கொழம்பு வாய் .....இவ்வளவு கரெக்டா எங்க பிடிச்சிங்க இந்த உதாரணத்தை....

    ReplyDelete
  27. ஆபிஸ்ல ஆணி அதிகம் அண்ணே! அதான் லேட்.. பார்க்குமிடமெல்லாம் கண்ணனின் உருவம் பார்த்தார் பாரதி, நீங்க பதிவா பார்க்குறீங்க ;)

    ReplyDelete
  28. ரிசப்ஷன் பதிவு கலாட்டா.

    ReplyDelete
  29. ரிஸப்ஷன் பதிவு நல்லா இருக்கு. நானும் ராஜியின் முதல் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன். என்ன மெனு இருந்ததுன்னு சொல்லலியே?

    ReplyDelete
  30. very nice.
    i really miss such events in uk.

    nandraaga rasitheen.

    ReplyDelete
  31. ஒரு ரிசெப்ஷனுக்கே போயிட்டு வந்தாப்போல இருக்கு. அப்பறம் பெண் சிங்கங்கள் எப்போ கும்மி அடிக்க வரலாம்?

    ReplyDelete
  32. வித்யா மேடம் நான் ரெடி நீங்க ரெடியா?

    ReplyDelete
  33. ha ha.. i am keep on laughing ... thanks sir..

    ReplyDelete
  34. @raji
    அதென்ன முடிஞ்சா ... நிச்சயம் படிச்சு தெரிஞ்சிக்கிறேன்.. ;-)

    ReplyDelete
  35. @சிவகுமாரன்
    சிவா... ஏற்கனவே புகைஞ்சிகிட்டு இருக்கு.. இதுல நீங்க வேறயா... என்னை அடிச்சு துவம்சம் பண்ணப் போறாங்கோ.. ;-)

    ReplyDelete
  36. @தக்குடு
    இது பாராட்டு தானே.. அம்மாவ திருஷ்டி சுத்தி போடச் சொல்றேன்.. இதுக்கு நிறைய எழுதணும்ன்னு தோன்றது.. ஆனா... இப்பத்தான் வந்தேன்.. எல்லோருக்கும் பதில் மரியாதை செய்யறேன்.. இதுக்குமேல ஏதாவது ஐடியா வந்தா பதிவு வேற எழுதணும்.... ;-) ;-)

    ReplyDelete
  37. @Porkodi (பொற்கொடி)
    நீங்க முனுமுனுக்கறதை யாராவது பார்த்திருந்தா கையில மைக்க கொண்டு வந்து கொடுத்துருக்கனுமே...... நான் பக்கத்தில் இருந்தால்... "மாட்டிக்கிட்டாரு.. மச்சான் மாட்டிகிட்டாரு...." ன்னு எதாவது பாட்டு படச் சொல்லியிருப்பேன். ;-)

    ReplyDelete
  38. @எல் கே
    அதென்ன காரணம்... வீட்ல பர்மிஷன் வாங்கிகிட்டு போடலாம்ன்னு இருந்தீங்களா? ;-) ;-)
    (தக்குடு... இவாளைப் பத்தி எல்லாம் கமென்ட் போட மாட்டியா.. நா ஏதாவது அப்டிஇப்டி எழுதிட்டா வரிஞ்சு கட்டிண்டு ஓட்ட வந்துடுங்கோ.. ;-) )

    ReplyDelete
  39. @வித்யா
    அப்டி நிக்க வச்சு என்னை எடுத்த ஒரு போட்டோ எங்கள் கல்யாண ஆல்பத்தில் இருக்கு. என்னோட பெரியவ இப்ப அதைப் பார்த்துட்டு "ஏம்ப்பா... இப்டி அசிங்கமா நிக்க வச்சு எடுத்துருக்கான்..." அப்டின்னு கேவலமா கிண்டல் அடிக்கறா..;-)

    ReplyDelete
  40. @Varadh

    Thank you Boss! I have seen your Blog. Contents are very Good!! ;-) ;-)

    ReplyDelete
  41. @கவிதை காதலன்
    கவிதைக் காதலன்.. ரிஷப்ஷன் காதலனா ஆயிட்டீங்க.. நன்றி.. வருகைக்கும் பாராட்டுக்கும்.. ;-)

    ReplyDelete
  42. @அமுதா கிருஷ்ணா
    எவ்வளவு சிக்கனமான பின்னூட்டம் போடறீங்க.. ;-)
    ஒரு ஓஹோவையும் சேர்த்து போட்ருக்கலாம்ல.. நன்றிங்க.. ;-)

    ReplyDelete
  43. @Madhavan Srinivasagopalan
    ஆமாம் மாதவா..
    தை பிறந்தால் வழி பிறக்கும்... ஆனா எங்கிட்டேயிருந்து உங்களுக்கு தப்பிக்க வழி பிறக்காது.. ஹா..ஹா..ஹா... ;-)

    ReplyDelete
  44. @MANO நாஞ்சில் மனோ
    தேங்க்யூ மாமு... ;-) ;-)

    ReplyDelete
  45. @பத்மநாபன்
    இந்த மோர்கொழம்பு வாய்.. உறவுகள் கிட்ட அரட்டை அடிக்கும் போது நான் உபயோகப் படுத்தும் ஒரு சொல். யாராவது வழ வழா கொழ கொழான்னு இழுத்துப பேசினால் இது தான் என்னோட கமென்ட்.. ஆனா இந்தப் பதிவுல அந்த இங்கிலீசுக் காரன் ஒரு கொழ கொழன்னுதான் பேசினான்.. அதான் இங்க உபயோகிச்சேன்..
    நன்றி பத்துஜி! ;-) ;-)

    ReplyDelete
  46. @Balaji saravana
    இப்படி ஆணி அதிகம் இருப்பவர்கள் சுவற்றில் வெறும் ஆணி மட்டும் அடித்து ஒரு முழம் மல்லிப்பூ போட்டு ஒரு மண்டலம் பூஜை செய்ய ஆணியிலிருந்து விடுதலை கிடைக்கலாம் என்று பலனடைந்தவர்கள் சொல்கிறார்கள். முடிந்தால் முயலவும்.. ;-) ;-);-)

    ReplyDelete
  47. @சே.குமார்
    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.. ;-)

    ReplyDelete
  48. @கோவை2தில்லி
    முதல்ல பாராட்டை பிடிச்சிக்கிரேன்..

    ராஜி மேடத்தோட கூட்டணிக்கு போறீங்களே.. எனக்கு பயம்மா இருக்குங்க.. விட்டுடுங்க.. நன்றி ;-)

    ReplyDelete
  49. @angelin
    Thank You!!! இந்தியாவில் இருக்கும்போது இம்சைகளாக தோன்றியவை.. லண்டனில் இருக்கும் போது இன்பங்களாக தோன்றும்.. சரியா.. கருத்துக்கு நன்றி ;-)

    ReplyDelete
  50. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    மேடம் வேண்டாம்.. விட்ருங்க.. வலிக்கும்..அழுதுருவேன்..
    பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-) ;-)

    ReplyDelete
  51. @raji
    செட்டு சேர்க்கறீங்களா!! வேண்டாங்க.. அவங்க சும்மா விளையாட்டுக்கு கூப்டாங்க.. கூல்...கூல்.... நன்றி ;-)))))))))

    ReplyDelete
  52. @இராமசாமி
    Thank you Sir!!! Please visit again.ன்னு எங்க வூரு ஜவுளிக் கடை வாசல்ல எழுதியிருக்கும்.. நானும் இங்க அதே போர்டை தொங்கவிடுறேன்.. ;-)

    ReplyDelete
  53. கலாட்டா ரிசப்ஷன்

    I will write a sequel with this on our family weddings !!

    ReplyDelete
  54. கலாட்டா பதிவு...
    செயற்கை அலங்காரங்களில்
    இல்லாத சம்பிரதாயத்தை
    கடைப் பிடிக்கும்
    வசூல் அரங்கம்...!!

    ReplyDelete
  55. @சாய்
    படிக்க ரெடியா காத்திருக்கோம்.. சீக்கிரம் எழுதுங்க.. ;-)

    ReplyDelete
  56. @ஸ்ரீராம்.
    எப்படிங்க.. கவிதையாவே பின்னோட்டம் போடறீங்க.. அட்டகாசம் போங்க.. ;-)

    ReplyDelete