Saturday, March 5, 2011

அவர் ஜெயிலுக்கு போயிருக்கார்....

ranganna
ஸ்ரீரங்கம் ரெங்கன் அண்ணா
1928-ம் வருடம், டிசம்பர் 7-ம் தேதி, திருநெல்வேலியில் உள்ள 'கல்லூர்' கிராமத்தில் அந்தக் குழந்தை சுகப் ப்ரசவம் ஆனபோது அந்தப் பிள்ளையை பெற்ற தாயார் பர்வதவர்த்தினிக்கு கொள்ளை மகிழ்ச்சி. ஆனால் அன்றந்த தாய்க்கு, விரைவில் இந்த அருமை மகனை விட்டு தான் பிரியப் போகிறோம் என்பது தெரிய வாய்ப்பில்லை. தந்தை புடார்ஜுன பாகவதருக்கும் (நாம ஸங்கீர்த்தனம், ஹரி கதா காலேக்ஷேபம் என்று வாழ்க்கையை சிரம தசையில் நடத்திக் கொண்டிருந்த அவருக்கு 'பாகவதர்' என்ற பட்டத்தை இயற்பெயரோடு இணைத்தது ஊர் மக்கள்) பிள்ளையைக் கண்டத்தில் பெருமகிழ்ச்சி.

இந்தப் பரம்பரையினர், மொகலாயர் படையெடுப்புக்கு முன் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கோயில் நிர்வாகத்தில் சிறு பங்கு ஆற்றி வந்தவர்கள். படையெடுப்புக்கு பின் மீண்டும் சொந்த மாவட்டமான நெல்லைக்கே திரும்பிவிட்டனர். பழைய பெருமாள் தொடர்பினால், 'ரங்க  ஸுப்ரமண்யம்' என்ற விநோதக் கலவைப் பெயரை, ஒவ்வொரு மூன்று தலைமுறையிலும், இந்தக் குடும்பத்தில் காணலாம்.

நாம் மேலே வர்ணித்த அந்தக் குழந்தைக்கு 'ரங்க  ஸுப்ரமண்யம்' என்ற பெயரே, குல வழக்கத்தையொட்டி இடப்பட்டது. இதில் வியப்பான விஷயம், எந்தத் திருவரங்கரத்தில் பெரிய பெருமாளுக்கு தொண்டாற்றினார்களோ அதே திருவரங்கத்தில், போன மாதம் 10- ம் தேதி ( 10-02-2011), தனது 83- வது வயதில் ஸ்ரீரங்க ஸுப்ரமண்யம் இறைவனடி சேர்ந்தார்.

ரங்க ஸுப்ரமண்யம் பிறப்பதற்கு பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் புடார்ஜுன பாகவதர், பெரும் லட்சாதிபதியாக இருந்தார் என்பது, விதியின் வினோத விளையாட்டுகளில் புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ அம்சங்களில் ஒன்று. ரங்கூனில் நவரத்தின வியாபாரம் செய்து கொண்டிருந்தவர், முதலாம் உலக யுத்தத்தின் போது அங்கு நடத்தப்பட்ட குண்டு வீச்சில் சொத்தெல்லாம் இழந்து, கப்பலிலும் கால்நடையாகவும் நெல்லை திரும்பியிருந்தார். மூன்று குழந்தைகள் பிறந்த பின் மனைவியும் இள வயதில் இறக்கவே, 'தேவதாஸ்' ஆகாமல் உண்மையான தெய்வ தாஸனாகிப் போனார். 'இந்த உலகத்தில் அனைத்தும் நிலையற்றவை' என்று தோன்றிவிட்டது; இறைவனே கதி என்றானார். உஞ்சவ்ருத்தி, நாம ஜபம், மாலையில் கதா காலேக்ஷேபம் நிகழ்த்துவது என்றவர் வாழ்க்கை மாறிப்போனது.

தன் மூத்த பெண் உள்பட மூன்று குழந்தைகளையும் மதுரையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்லூருக்கு திரும்பினார். பின் திருப்புடைமருதூர், கூநியூர், சேரன்மாதேவி என்று நினைத்த இடங்களுக்குகெல்லாம் ஜாகை மாறினார். பாகவத தர்மத்தில் நிலை பெற்று, அதில் கிடைத்த சொல்ப வருமானத்தில் வாழக்கை நடத்தி, பரம விரக்தராகவே இருந்தார். அவர் தனது பிள்ளைகளோடு வந்து சேர்ந்தது தனது எழுபதாவது வயதுக்கு மேல்தான். அதுவும் பிள்ளைகள் படு நிர்பத்தப்படுத்தியதால்!

நாம் நம் கதாநாயகனாகிய ரங்க ஸுப்ரமண்யத்திடம் வருவோம். தன் தாயின் முகம் தெரியாது, ஃபோட்டோ கூட எடுத்ததில்லை. மதுரையில், ஒன்றுவிட்ட சகோதரியால் சொகுசாகத்தான் வளர்க்கப்பட்டார். மீனாக்ஷியும், சொக்கனாதருமே தாய் தந்தையாய் ஆனார்கள். இளமையிலேயே சந்தித்த துக்கங்கள், ரங்க ஸுப்ரமண்யத்தையும் ஆன்மீக மார்க்கத்தில் திருப்பிவிட்டது. தனது 12-வது வயதில், 'ஸ்ரீராம் பஜன் மண்டல்' என்றொரு அமைப்பைத் தொடங்கி, நாம் ஸங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். மிக வசீகரமான குரல் வளத்தை அவருக்குக் கொடுத்திருந்தான் இறைவன். கர்னாடக சங்கீதமும் பயின்றார். 12 வயதுப் பையன் நடத்திய பஜனை கோஷ்டியில், வயதில் பெரியவர்களும் வந்து ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

ஆங்காங்கே நாம ஸங்கீர்த்தனம் நடத்தினார். பாண்டியன் வங்கியில் உத்தியோகம் கிடைத்தது. அவரது நாம ஸங்கீர்த்தன நிகழ்ச்சிகளை ஊக்குவித்து அவ்வப்போது லீவும் கொடுத்த அதிகாரி வங்கியில் வாய்த்ததும் இறையருளே.

ரங்க ஸுப்ரமண்யத்துக்கு நாம ஸங்கீர்த்தனத்தையே சமுதாய சேவையாகவும் பயன்படுத்தும் எண்ணமிருந்தது. அதனால் தனது கோஷ்டியோடு, முறையான அனுமதி பெற்று, அவ்வப்போது சிறைச்சாலைகளுக்குச் சென்று, அங்குள்ள கைதிகளுக்காக மனமுருகப் பாடுவார். இந்த நிலையில் அலமேலு என்ற பெண்ணோடு திருமணமும் நடந்தது.

பின்னாட்களில் அலமேலு அம்மாள், தன் பிள்ளைகளிடம் இப்படி விளையாட்டாக சொல்வது வழக்கம். "கல்யாணம் ஆன புதிதில் உங்கப்பா அடிக்கடி ஜெயிலுக்கு நாம சங்கீர்த்தனம் பண்ணப் போய்விடுவார். அந்த நேரத்தில் உங்கப்பாவ தேடிக் கொண்டு யாராவது வந்து, "ரங்கன் இல்லையா?" என்பார்கள். அவர்களிடம் 'எங்காத்துக்காரர் ஜெயிலுக்கு போயிருக்கார்" என்று சொல்லி அதிர வைப்பேன்; பிறகு விளக்குவேன்".

விரைவிலேயே புதுக்கோட்டை ஸ்ரீகோபால க்ருஷ்ண பாகவதரின் கருணைக்கு பாத்திரமானார் ரங்க ஸுப்ரமண்யம். வருடந்தோறும் பாகவதர் பத்து நாட்களுக்கு நடத்திக்கொண்டிருந்த 'நரசிம்ம ஜெயந்தி' உற்சவத்தில் அலுக்காமல், சலிக்காமல் பாடுவார். ஐம்பதுகளின் இறுதியில்  மதுரையில் பார்த்து வந்த வங்கி வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு சென்னை எண்ணூரில் குடியேறி 'எண்ணூர் ஃபவுண்டரீஸ்' கம்பெனியில் சேர்ந்தார். ஒரு சில வருடங்களிலேயே எண்ணூரை விட்டு வெளியேறி மயிலாப்பூரில் ஜாகை பிடித்தார். இங்கே நாம ஸங்கீர்த்தனத்துக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. திருக்கோவலூர் ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் திருவருளுக்கு பாத்திரமானார். பட்டி தொட்டியெல்லாம் பஜனை செய்தார். விரைவிலேயே ரங்க ஸுப்ரமண்ய பாகவதர், 'ரங்கண்ணா' என்று நாம சங்கீர்த்தன உலகில் பிரபலமானார். அவரது குரல் வளமும், நாமாவளி பாடுவதில் புகுத்திய புதிய, புதிய யுக்திகளும் பிருந்தாவனத்து ஸ்ரீ புருஷோத்தம கோஸ்வாமி, சுவாமி அபேதானந்தா உள்பட பலரையும் கவர - பல மஹான்களின் திருவருளில் திளைத்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் மஹாராஷ்டிரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கன், ரங்கண்ணாவின் உள்ளத்தில் அடையப் புகுந்தான். அந்நாட்களில் 'பாகவத பாத பாம்ஸு' ஸ்ரீ.டி.வி. நாராயண சாஸ்திரிகள், தமிழகமெங்கும் அபங்க (மராட்டிய மொழியில் அமைந்துள்ள பாண்டுரங்கனைப் பற்றிய கிருதிகள்) பஜனையைப் பரப்பி, பலரை பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களாக்கிக் கொண்டிருந்தார். அவரது நாம ஸங்கீர்த்தனங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ரங்கண்ணாவுக்கு கிடைத்தது. 1969/70-ல் ஸ்ரீ நாராயண சாஸ்திரிகளின் பெரும் கோஷ்டியோடு பண்டரிபுரம் சென்றார் ரங்கண்ணா. அன்று முதல் பாண்டுரங்கனே அவரது இதய தெய்வமாக ஆனார்.



இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர், இறைவனோடு இரண்டறக் கலந்தார். உடனே தனது நாம ஸங்கீர்த்தன நண்பர்களோடு சேர்ந்து, 'ஸ்ரீ கோபால கிருஷ்ண பஜனை மண்டலி' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் ரங்கண்ணா. ஸ்ரீ கோபால க்ருஷ்ண பாகவதர் அவர்களின் புத்திரர் ஸ்ரீ சஞ்சீவி பாகவதரும் பெரும் மஹான். இவர், தனது தந்தை நடத்திய நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தை விடாது நடத்தினார்; தனது தந்தை நின்ற பாகவத தர்ம நெறியில் தானும் நெறி பிசகாது நின்றார். பத்து நாட்கள் உற்சவம்! பல்லாயிரம் பேருக்கு அன்ன தானம்! பாத்தார் ரங்கண்ணா! தனக்கு பஜனையில் கிடைத்த சம்பாவனையில் போக்குவரத்து, சாப்பாடு செலவு போக மீதிப் பணத்தையெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு துவக்கி போட்டு வைத்தார். நரசிம்ம ஜெயந்திக்கு முன்னால் அந்தத் தொகையை எடுத்து, நரசிம்ம ஜெயந்தி அன்னதானத்துக்கு சமர்ப்பித்துவிடுவார்.

பஜனை உலகில் ரங்கண்ணாவுக்கு இருந்த 'டிமாண்டுக்கு' அவர் நினைத்திருந்தால் பெரும் பணக்காரர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தனது வருமானத்தையெல்லாம் குரு கைங்கர்யத்துக்காகவே செலவழித்தார். அவருக்காக அவர் வாங்கியது ஒரேயொரு 'ஹெர்குலிஸ்' சைக்கிள் மட்டுமே!

மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்து, மூச்சுக்கு மூச்சு, 'விட்டலா! விட்டலா!' என்றே வாழ்ந்த அந்தப் பெரியவரின் அந்திம காலமும், அவரது வாழ்ந்த வாழ்வுக்கு ஏற்றதுபோலவே இருந்தது. பேத்திகள் சுற்றி நின்று அபங்கங்கள் பாட, ஒரு மஹாத்மா காதில் மொபைல் வழியே, 'ராம  க்ருஷ்ண ஹரி! வாஸுதேவ ஹரி! பாண்டுரங்க ஹரி! என்று 'கர்ண மந்திரம்' சொல்ல - பின்னர் சுற்றத்தார் அனைவரும் உரத்த குரலில் 'ராம க்ருஷ்ண ஹரி' என்று உச்சரிக்க, திருநாமங்களை கேட்டபடி, உறங்கச் செல்லும் குழந்தைபோல கண் மூடினார் ரங்கண்ணா. குரு வாரம்! உத்தராயணம்! ரத சப்தமி! 10/02/11 அன்று மாலை 7.50 மணி! மறுநாள் பீஷ்மாஷ்டமி! கொள்ளிடக் கரையில் திருமங்கை மன்னன் படித்துறையில் தஹனம்! காவிரி கரையில் 13 நாள் காரியம்! கொடுத்து வைத்தவர்.

நாம சங்கீர்த்தன உலகத்துக்கு ரங்கண்ணா அறிமுகப்படுத்திய அபங்கங்கள் எத்தனையெத்தனை! தானே இயற்றி மெட்டமைத்து புழக்கத்தில் விட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட நாமாவளிகள்!  அவரது தாக்கத்தில்தான் இன்று பல பாகவதர்கள் பாடிக்கொண்டிருகின்றனர் என்பதே உண்மை. ஆஸ்திரேலிய, அமேரிக்கா அரபு நாடுகள் என்று பல்வேறு வெளிநாடுகளில் ரங்கண்ணா மெட்டமைத்த அபங்கங்களையும், அவர் இயற்றி இசையமைத்த நாமாவளிகளையும் இங்கிருந்து போகும் பல பாகவதர்கள் பாடிப் பரவசப்படுத்துகின்றனர். ஆனால் மிகப் பலருக்கு இவையெல்லாம் 'ரங்கண்ணாவின் contribution to the Nama Sankirtana world' என்பது தெரிந்திருக்குமா என்பது கூட சந்தேகமே! மஹான்கள் புகழை விரும்பாத புனிதர்கள் அல்லவா?

பின்குறிப்பு: இது எனது நண்பர் திரு.சிவகுமார் அவர்களின் தந்தையார் ரங்க ஸுப்ரமண்ய பாகவதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. ரெங்கண்ணாவோடு நெருங்கி பழகிய ஒருவர் எழுதியதின் சுருக்கம் இது. என் வார்த்தை சேஷ்டைகள் இதில் துளிக்கூட இல்லை. இறைவனடி சேர்ந்த ஒரு பெரியமனிதருக்கு இதுவே கூட நான் செலுத்தும் நேர்மையான அஞ்சலியாக இருக்கலாம் அல்லவா?


-

50 comments:

  1. அருமை, எனக்கு இது புதிய தகவல்கள். நன்றிகள்

    பள்ளிப் பருவத்தில் பாடிய
    ஜெய ஜானகி ரமண
    ஜெய விபீஷன கருணா

    வரிகளை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்

    ReplyDelete
  2. ஒரு புதியவரைப் பற்றி அறிமுப்படுத்தியதற்கு நன்றி..

    ReplyDelete
  3. நல்லோர் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு பெய்யும் மழை..

    ReplyDelete
  4. அன்புள்ள ஆர்.வீ.எஸ்! ஒரு பாகவதோத்தமரைப் பற்றிய அடக்கமான பதிவில் ஒரு நல்ல சங்கீர்த்தனம் இசைத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. "ரங்கண்ணா" பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்
    ஆனால் இத்தனை விவரங்கள் தெரியாது.

    அவர் மறைந்த மறுநாள் என் அண்ணாவோடு நான்
    பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர், 'ரங்கண்ணா'
    ஆசாரியன் திருவடி அடைந்ததை என்னிடம் கூறினார்

    ReplyDelete
  6. சிலர் சாதிக்கப் பிறந்தவர்கள். சாதனையை எப்படி அளப்பது என்ற சச்சரவில் சாதனையை மறந்து விடுகிறோம்.
    உங்கள் நண்பரின் குடும்பத்துக்கு என் அன்பு.

    ReplyDelete
  7. @ஆர்வீஎஸ்
    அவரைப் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன். அவரை பற்றிய விளக்கமான ஒரு பதிவு போட்டு நீங்களும் புண்ணியம் தேடிக் கொண்டுள்ளீர்கள்.


    வாழ்க

    ReplyDelete
  8. இதை எழுதியது யாரென்று தெரிந்து கொள்ள ஆவல் ஆர்விஎஸ்.

    என்னுடைய பள்ளிக்கால நாட்களில் திருநெல்வேலிக்கருகில் ஸ்ரீவைகுண்டம் என்கிற நவதிருப்பதிகளில் ஒன்றான வைணவ ஸ்தலத்தில் புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதரோடு பழகவும் பாடி ஆடவும் வாய்ப்புக் கிடைத்ததும், ராதா கல்யாணம்-தீபப் பரதக்ஷிணம்- டோலோத்ஸவம் போன்ற வைபவங்களிலும் கலந்து கொள்ளும் பேற்றையும் பெற்றேன்.

    கோபாலக்ருஷ்ண பாகவதர்தான் முதன் முதலில் பஜனாம்ருத நாமாவளி என்கிற நூல் மூலமாக தோடய மங்களத்தில் துவங்கி ஜெயதேவ அஷ்டபதி-புரந்தர தாஸ்-கோபால க்ருஷ்ணபாரதியார்-தியாகராஜர்-பத்ராசல ராமதாஸர்-ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்-போன்றோரின் மிக முக்கியமான எல்லா சாஹித்யங்களையும் தொகுத்தார். இது மிக முக்கியமான யாரும் இதற்கு முன் செய்திராத ஒரு தொண்டு.அதன் முதல் பதிப்பை என் அப்பா வாங்கியிருந்தார்.அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

    85களுக்குப் பிறகு என் திசை தஞ்சாவூரை நோக்கியும் இலக்கியத்தின் பக்கமாகவும் திரும்ப கொஞ்சக் கொஞ்சமாக அந்த உலகத்திலிருந்து கரைந்து போனேன்.

    ராமண்ணாவைப் பற்றிய என் நினைவு மிகவும் மோசமாகவும் இவ்வளவு விரிவாய் நான் கேள்விப் படாததாகவும் இருக்கிறது.

    ராமண்ணாவின் வாழ்க்கை சிலிர்க்க வைக்கிறது.அவரைப் பற்றிய எழுத்துக்களை இத்தனை சரளமாக எழுதியுள்ள அந்தக் கைகளை வணங்குகிறேன்.

    நீங்கள் பகிர்ந்தவற்றில் மிக முக்கியமான பதிவு இது.

    உங்களுக்கான ஸ்பெஷல் நன்றிகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. நாம சங்கீர்த்தனத்தின் மஹிமையையே ஸ்ரீ ரங்கண்ணாவின் வாழ்வும் மறைவும் வலியுறுத்துகிறது. நல்ல பதிவை பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  10. அற்புதம் ஆர் வி எஸ் உங்களுக்கு சேஷ்டை இல்லாமலும் எழுத வருதே..இது மாதிரியும் எழுதுங்கள் அவ்வப்போது [குன்னக்குடி வைத்யநாதன் கச்சேரிகளுக்கு அவர் பண்ணும் முக செஷ்டைகளுக்காகப் போனவன்தான் நான் என்றாலும்]

    ReplyDelete
  11. தெரியாத தகவல்கள். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. காணொளியும் பதிவும் புதிய உலகிற்கே அழைத்துப் போய் விட்டன..
    பக்தியின் அடையாளமே புகழை மறுத்தல்தான்.. ரங்கண்ணாவை மறக்க முடியாமல் செய்து விட்டார்.. ஸ்ரீரங்கவாசியான எனக்கு.

    ReplyDelete
  13. 'எங்காத்துக்காரர் ஜெயிலுக்கு போயிருக்கார்" என்று சொல்லி அதிர வைப்பேன்; பிறகு விளக்குவேன்".//
    very sad.

    ReplyDelete
  14. த்ங்கள் பதிவுடன் இணந்து கொள்வதில்
    மகிழ்வு கொள்கிறேன்
    நான் பூர்வீகம் மதுரை அவனியாபுரம்
    கோபால கிருஷ்ண பாகவதர் தான் எங்களுரில்
    சீதாகல்யான வைபோகத்தை துவங்கி வைத்தார்
    சஞ்சீவி பாகவதர் எங்கள் ஊரில்
    50 தடவைக்கு மேல் சீதாகல்யாணம்
    நடத்தி கொடுத்திருக்கிறார்
    அவர்களைப் பற்றிய முழுவிவரம்
    தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
    தொடர்பை ஏற்ப்படுத்திக் கொடுத்த
    பதிவர் ராஜிக்குத்தான் நான் நன்றி
    சொல்லவேண்டும்
    தொடர்ந்து சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  15. மிகச் சிறப்பான மனிதர் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள செய்த உங்களுக்கு என் நன்றி அண்ணா!

    ReplyDelete
  16. en amma, chinna vayasula- katha sollarathukku bathilaa books padipichchu kaattuvaa. antha bookla (mostly tamil.. since enakku appo tamil padikka theriyaathathu naala) 'mahaa bhaktha vijayam' nu onnu... pala bhakthimaangala paththina.. oru vaazhkkai varalaaraa irukkum. meera.. purandaradaasar... etc.

    atha pola oru book padichchaapla irunthathu! unga usual paani konjam kooda illai! aathmaarthamaa irunthathu...

    brilliant.... brilliant....

    ReplyDelete
  17. @ராம்ஜி_யாஹூ
    நன்றி ராம்ஜி!
    ராமநவமிக்கு எங்கள் ஊரில் மிக விமர்சையாக பஜன் நடக்கும்.. ஒரு மன்னார்குடி டேஸ் பதிவு தாங்கும்..... பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.. ;-)))

    ReplyDelete
  18. @வேடந்தாங்கல் - கருன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன். ;-)))

    ReplyDelete
  19. @Madhavan Srinivasagopalan
    ஆமாம் மாதவா.. முற்றிலும் உண்மை... ;-))))

    ReplyDelete
  20. @மோகன்ஜி
    நன்றி அண்ணா! ;-)))

    ReplyDelete
  21. @raji
    அப்படியா!! சென்னையிலிருந்து என்னால் அன்று திருவரங்கம் செல்ல இயலவில்லை.. ;-(

    ReplyDelete
  22. @அப்பாதுரை
    நன்றி அப்பாஜி! ;-)

    ReplyDelete
  23. @எல் கே
    நன்றி எல்.கே ல்;-)

    ReplyDelete
  24. @சுந்தர்ஜி
    ஜி.. ஸ்பெஷல் நன்றிக்கோர் நன்றி.. ;-)))
    பஜனையிலும் தங்கள் ஈடுபாடு என்னை வியக்கவைக்கிறது... எல்லா வடிவத்திலும் இருக்கிறீர்!! ;-))))

    ReplyDelete
  25. @geetha santhanam
    நன்றி மேடம்! இது தமிழ்நாட்டில் நடந்த மஹா பக்த விஜயம்.. ;-))

    ReplyDelete
  26. @bogan
    சார்! இதை நான் எழுதவில்லை... கடைசி நாலு வரி மட்டும் தான் என்னுது.. ;-)))

    ReplyDelete
  27. @ஸ்ரீராம்.
    நன்றி சார்! ;-)

    ReplyDelete
  28. @ரிஷபன்
    நன்றி சார்! புகழை விரும்பாத உத்தமர் அவர்! ;-))

    ReplyDelete
  29. @இராஜராஜேஸ்வரி
    அவர்கள் விளையாட்டுக்கு சொல்லியிருக்கிறார்கள்.... வருத்தமாக இல்லை.. ;-)

    ReplyDelete
  30. @Ramani
    மிக்க மகிழ்ச்சி சார்! கவிதையா கட்டுரையான்னு ஒன்னு எழுதியிருக்கீங்களே அது சூப்பர். ;-)))

    ReplyDelete
  31. @Balaji saravana
    நன்றி தம்பி! இப்படியும் சிலர் நம்முடம் வாழ்ந்தார்கள் என்பதில் பெருமை கொள்வோம். ;-)))

    ReplyDelete
  32. @Matangi Mawley
    இதை நான் எழுதலை.. அவருக்கு அணுக்கமாக இருந்த ஒருவர் எழுதியது.. பாராட்டுக்கு நன்றி மாதங்கி.. ;-)))

    ReplyDelete
  33. ரங்கண்ணா வாழ்க்கை சிலிர்க்க வைக்கிறது.அவரைப் பற்றிய எழுத்துக்களை இத்தனை சரளமாக எழுதியுள்ள அந்தக் கைகளை வணங்குகிறேன். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது

    ReplyDelete
  34. அவரைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  35. திரு ரங்கண்ணா பற்றி உங்களுடைய பகிர்வுக்கு மிக்க நன்றி! காணொளியும் அருமை. வருடா வருடம் இங்கே நடக்கும் பத்மாவதி கல்யாண மஹோத்சவத்தில் பாடப்படும் பாடல்கள் காதுக்குள் ரீங்காரம் செய்தது! சற்று தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  36. அற்புதமான வாழ்க்கை பிரயாணம் அழகான வார்த்தைகளில் கோர்வையாய் வந்துள்ளது. மஹான்கல் சம்பந்தமான இந்த பதிவில் ஒரு இடத்தில் கூட குணஷ்ட்டைகள் இல்லாமல் எழுதிய அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. RVS அண்ணா, இந்த வீடியோ எங்க எடுத்தது? கீழ உக்காசுண்டு பாடும் அந்த இரண்டு மாமாவும் கல்லிடை தஷிணாமூர்த்தி பாகவதரும் நம்பி ஐயங்கார் மாமாவும் மாதிரி இருக்கு. ஹார்மோனியம் மாமா 'ஆம்பூர்' சங்கரன் மாதிரி இருக்கு. கொஞ்சம் விபரம் ப்ளீஸ்!!!

    ReplyDelete
  38. Dear Ramji,

    I read the article about Sri Ranganna. It was simply superb to read about him. Let me proudly introduce myself that I am Gopalakrishnan alias Gopi working in Abu Dhabi for KONE Elevators. Naan Sri Ranganna petru edutha 3 pillaigalil kadaisi pillai. Ungal nanbar Sivakumarin Thambi. I dont know how to express my gratitude to you for this fantastic article. Thanks a lot.

    ReplyDelete
  39. Dear Sir,

    The article about Sri Ranganna was simply superb. I am proud to introduce myself that I am Gopi (Gopalakrishnan) 3rd son of Sri Ranganna. I am working for KONE Elevators in Abu Dhabi.

    I do not have words to express my sincere gratitude for the article released by you.

    Thanks a lot once again.

    ReplyDelete
  40. அருமையான பதிவு.
    இதில் திரு.சஞ்சீவி பாகவதரின் அன்பிற்கு பாத்திரமாகியிருக்கிறேன். அம்பாசமுத்திரத்தில் பத்து நாட்கள் நடக்கும் ராதா கல்யாணத்திற்கு வரும் திரு.சஞ்சீவி பாகவதிரும் முக்கியமான கோஷ்டிகளும் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள். அப்போது நரசிம்ம பூஜை பத்து நாட்களும் எங்கள் வீட்டில் நடக்கும். பதிவின் நாயகர் ரங்க பாகவதரும் வந்திருக்க வாய்பிருந்திருக்கிறது. அருமையான நினைவுகள்.

    தக்குடு - அந்த வீடியோவில் எஙகள் அடுத்த வீடு ராமன் அண்ணா மற்றும் குமார் சார் எல்லோரும் இருக்கிறார்கள். இது அனேகமாய் நம்மூர் பக்கம் எடுத்த விடியோவாய் தான் இருக்கும்.

    ReplyDelete
  41. ஹார்மோனியம் சங்கரன் அண்ணா தான் :)) இது அனேகமாய் பிரம்மதேசத்தில் நடந்த நிகழ்ச்சியாய் இருக்கும்

    ReplyDelete
  42. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    நன்றி சார்! ;-)

    ReplyDelete
  43. @தி. ரா. ச.(T.R.C.)
    அற்புதமான வரிகள்... ரங்கண்ணாவோடு மிக பொருத்தமாய் சேர்கிறது.. கருத்துக்கு நன்றி சார்! ;-))

    ReplyDelete
  44. @இளங்கோ
    நன்றி இளங்கோ. ;-) ;-)))

    ReplyDelete
  45. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரத் தல. மன்னார்குடி ராம நவமியைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன். பஜனைக்கும் சந்தோஷத்திற்கும் குறைவு இருக்காது.. ;-))))

    ReplyDelete
  46. @தக்குடு
    அவர் நல்ல விஷயாதி. அற்புதமான தமிழறிவு கொண்டவர்.. கருத்துக்கு நன்றி தக்ஸ். ;-))

    ReplyDelete
  47. @தக்குடு
    வீடியோ கிடைத்த இடம்.
    http://satgurugopalakrishna.org/video.html

    ReplyDelete
  48. @GOPALAKRISHNAN
    ரங்கண்ணா பற்றி எனது வலைப்பூவில் வெளியிட்டு எனக்கு புண்ணியம் தேடிக்கொண்டேன். உங்கள் அண்ணாவின் பரம ரசிகன் நான். நன்றி.. ;-))

    ReplyDelete
  49. @Dubukku
    முதல் வருகைக்கு நன்றி. ஏதோ என்னால் முடிந்த கைங்கர்யமாக இதை வெளியிட்டேன். பாகாவதாள் எல்லோருக்கும் தங்குவதற்கு இடம் அளித்து மாஹா புண்ய காரியங்கள் செய்திருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம். நன்றி. ;-))

    ReplyDelete