Monday, July 18, 2011

சனியின் ஆதிக்கத்தில் சர்வர்கள்!

துஷ்ட கிரஹங்கள் மற்றும் துர்தேவதைகள் எல்லாம் அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில் மிகவும் உக்கிரமாக தாண்டவமாடுமாம். அதனால் தான் அலைகடல் கூட அந்த நாட்களில் பேரிரைச்சலுடனும் கொந்தளிப்புடனும் காணப்படும். நாம் அன்றாடம் மாரடிக்கும் இந்த இயந்திரப் பிசாசுகளுக்கு எப்படித்தான் வீக் எண்டுனு தெரியுமோ? கொஞ்சம் கொஞ்சமாக சுதி இறங்கி சனிக்கிழமை காலையில் ஒரேடியாக மண்டையைப் போட்டு படுத்துப் போர்வையை இழுத்து தலையோடுகால் போர்த்திக்கொள்ளும். நம்முடைய வாரக்கடைசியை கழுத்தை நெறித்துக் கொன்றால் தான் இவைகளுக்கு பரம திருப்தி. நம் உயிரை எடுக்கும்; வாட்டி வதைக்கும் உயிரற்ற வஸ்த்துக்கள்.

ஒரு கல்யாணம், காதுகுத்து என்று விசேஷங்களுக்கு பாஸிடம் லீவு கேட்கும் முன் இந்த சர்வர் எஜமான் முன் நின்று "ஐயா! சாமி! நான் என் புள்ளக்குட்டிகூட வெளியூர் போறேன். நல்லபடியா போய்ட்டுவான்னு ஆசீர்வாதம் பண்ணுங்க" என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு பிரயாணம் மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஊர் எல்லைத் தாண்டும் முன் நோக்கியா ட்யூனில் மொபைல் கதறி காது சூடேறும் வரையிலும் பாட்டரி ட்ரைன் ஆகும் வரையிலும் தீர்வு வரும் வரையிலும் போகவேண்டிய ஊர் வரை காதும் மொபைலும் ஒட்டி வைத்த போஸில் லோல்பட வேண்டியிருக்கும். ஃபேமிலியுடன் Physically present. Mentally absent என்றாகி விடும். அப்புறம் வீட்டிலுள்ளோர் "மெண்டல் ப்ரெசென்ட்"என்று கூறி எள்ளி நகையாடுவார்கள்.

வெள்ளி இரவோ, சனி காலையிலோ "சார்! கிடைக்கலை" அப்படின்னு அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தியாகவோ, மொபைல் மூலம் செவிவழிச் செய்தியாகவோ கிடைத்தால் எல்லையோர இராணுவ வீரனைவிட சுதாரிப்பாக பல முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் பயனாளர்களுக்கு ஒரு ஃபோன் போட்டு "உயர்திரு ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ சிறு தொழில்நுட்பப் பழுது ஆகிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுப்பிவிடுகிறோம்" என்று தண்டன் சமர்பித்து விஞ்ஞாபனம் செய்து விட வேண்டும். ஃபோனில் அவர்களை பிடிக்கமுடியவில்லை என்றால் respect -ஆக ஒரு மெயில் அனுப்பவேண்டும். வித் ரிகார்ட்ஸ் கட்டாயம் மெயிலின் காலடியில் போடவேண்டும்.

மாப்பிள்ளை முறுக்கோடு "அது எப்படி ஆகும். எவ்ளோ செலவு செய்தாலும் ஒன்றும் உருப்படி இல்லை."  ஆச்சா போச்சா என்று வானத்திற்கும் பூமிக்குமாய் குதிப்பவர்களுக்கு புன்னகையை முகத்தில் அணிந்து பொறுமையே வடிவான சாந்த சொரூபியாக நின்றால் பிழைத்தீர்கள். ஒரு வார்த்தை "இல்ல சார்.... அது வந்து...." என்று சாக்கு சொல்ல ஆரம்பித்தால் உங்கள் கதை கந்தல். வாயாலேயே புரட்டி புரட்டி எடுத்துவிடுவார்கள். விழுந்து விழுந்து தாஸான தாஸனாக சேவை புரிந்தாலும் கடைசியில் பயனாளர்கள் "இந்த ஐ.டி டிபார்ட்மென்ட்டே சுத்த வேஸ்ட். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை" ன்னு நாலு வார்த்தை நாக்கு மேல பல்லைப் போட்டு ஏசாமல் இருக்க மாட்டார்கள்.

உட்கார்ந்த சர்வரை எழுப்புவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. முதலில் சர்வரை நாம் புதுப் பெட்டியோடு வாங்கிக் கொண்டு வந்த முதலாளியை  நடுக்கடலில் மூழ்கியோர் எஸ்.ஓ.எஸ் குரலெழுப்பும் பாணியில் கதறி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி கூப்பிடவேண்டும். அவருக்கு மாமன் மச்சினர்களுக்கு தட்டுநிறைய பூ, பழம், வெற்றிலைப் பாக்கோடு பத்திரிகை வைப்பது போல, சர்வரின் முழு ஜாதகத்தையும் மெயிலில் "கனவான்களே! நீங்கள் கொடுத்த சர்வர் கட்டையை நீட்டிப் படுத்துவிட்டது. உடனடியாக கவனிக்க உங்கள் ஆட்களை அனுப்பவும்"  என்று எழுதி "அவசரம்! அவசரம்!" என்று Subject:-இல் இட்டு டாப் ப்ரியாரிட்டி மார்க் செய்து அனுப்பவேண்டும். மெயில் போய் சேரும் முன் ஒரு முறை ஃபோனில் கூப்பிட்டு பேசிவிடுவது உத்தமம்.

நம்முடைய சப்போர்ட் அக்ரீமென்ட்டை பொறுத்து "கையில ஆளே இல்லையே" "பசங்க எல்லாம் கஸ்டமர் ப்ளேசுக்கு போயிருக்காங்க" "வந்தவுடனே ஃபர்ஸ்ட் கால் உங்களுதுதான்" என்று பல டயலாக்குகளை அள்ளி வீசுவார்கள். உடனே மறுமுனையில் "சரி ஆமாம் ஓ.கே" போன்ற தலையாட்டி ஒத்துக்கொள்ளும் பூம்பூம் மாடு வார்த்தைகளை உதிர்த்துவிட்டீர்கள் என்றால் போயே போச்சு. குடி கெட்டது. நாலு நாள் கழித்து வந்து இருக்கோமா செத்தோமா என்று எட்டிப் பார்ப்பார்கள். "இன்றைக்கே வந்து பார்த்தால்தான் எங்களின் நூறு கோடி ரூபாய் பிசினஸ் செழிக்கும். இல்லையேல் என்னுடைய சீட்டைக் கிழித்து விடுவார்கள்" என்று கூவ வேண்டும். முடிந்தால் ரெண்டு சொட்டு கண்ணீர் கூட விட்டுக் காட்டி ஃபோனிலேயே மூக்கைச் சிந்தலாம். பலனிருக்கும்.

ஒரு குரல் அழுத பிறகு, சப்போர்ட்டுக்கு ஒரு ஆள் அனுப்புவார்கள். முதலில் நமக்கு சர்வர் கொடுத்த நாட்களில் அட்டென்ட் செய்த பிள்ளையாண்டானை வேறு எங்காவது கண்காணாத சைட்டுக்கு அனுப்பிவிட்டு, "ஏதாவதுன்னா அவரை ரிமோட்ல எடுத்துக்கலாம் சார்!" என்று நமக்கு தெம்புவூட்டுவார்கள். "சரிண்ணே!" என்று ஆமாம் சாமியாக இப்போது தலையாட்டித்தான் தீரவேண்டும். அவர்களிடம் இருந்து வந்த இளைய வல்லுநர் மரக்கட்டையாய் படுத்த சர்வரை சுற்றி ஒரு முறை வந்து ஆய்வு செய்வார். "எப்டி ஆச்சு?" என்று ஃபார்மலாக ஒருமுறை துக்கம் கேட்பார். இடையிடையே "தொச்..தொச்.." என்று உச்சுக்கொட்டி ஆபிஸ் தெருமுனையில் இருந்து பைரவர் வரும்வரை ராகமாக அழைப்பார்.

முழு புராணமும் பாடிய பின்னர் ஐந்தாறு முறை Login Logout செய்து விளையாடுவார். இதை நாம் பொறுமையாக வேடிக்கை பார்க்கவேண்டும். யார்யாருக்கோ கால் செய்வார். பலபேரின் உதவிக்கரத்தை வேண்டுவார். கடைசியில் இரவு பத்து மணிக்கு, "நாளைக்கு முடிச்சிடலாம் சார்" என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டு பொட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

மறுநாள் சர்வர் பார்க்க வருபவர் அன்றைக்குத்தான் கம்பெனியில் சேர்ந்து முதல் கையெழுத்து போட்டிருப்பார்.  வேலை கற்றுக்கொள்ள அப்ப்ரண்டீசாக நம்மிடம் அனுப்பிவைப்பார்கள். "என்ன ஆச்சு?" என்று தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்து சோகத்தோடு கேட்பார். மீண்டும் இவருக்கும் அந்த சர்வர் புட்டுகிட்ட கதையை உருக்கமாக சொல்லவேண்டும். மீண்டும் Login Logout ஆட்டம் ஆரம்பித்துவிடும். நாம் "நீ ஆணியே புடுங்க வேண்டாம்" என்று வெறுத்துவிடுவோம். உங்களுடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால், குல தெய்வ வழிபாடுகளை செம்மையாக வருஷம் தவறாமல் செய்து இஷ்ட தெய்வங்களை குளிர்வித்திருந்தால் எனக்கு சர்வர் அப் ஆனது போல உங்களுக்கும் ஓரிரு நாட்களில் நல்லது நடக்கலாம். இல்லையேல் திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. ஈஸ்வரோ ரக்ஷிது.

இவ்வளவு வருஷங்களாக அப்டேட்  அப்டேட் என்று ஒன்று விடாமல் போஷாக்காக வளர்த்ததை எல்லாம் ஓரிரவில் அந்த சர்வருக்கு ஊட்டவேண்டும். ஐந்து வயசில் காலரா தடுப்பூசி, ஆறுவயதில் மலேரியா தடுப்பூசி, எட்டுவயதில் பன்றிக் காய்ச்சல் என்று சிறுவயதிலிருந்து இதுகாறும் நாம் கொடுத்து வந்த தடுப்பூசிகள் அனைத்தையும் ஒரே ஷாட்டில் பாடச் பாட்ச்களாக (patches) ஏற்றி முடிக்க வேண்டும். ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஸ்பாம் என்று சர்வரின் பரிவார துவாரபாலகர்கள் இருவரையும் ஒருசேர நிற்கவைத்து அவரை ஓட விடுவது வானத்தை வில்லாக வளைப்பதற்கு சமானம்.

ஹோட்டல் சர்வரிடம் “ஏம்ப்பா! இன்னும் தோசை வரலையா” என்ற தொனியில் “என்னப்பா ஆச்சா?” என்று நச்சரிக்கும் கைபேசி எனும் கொலைபேசி அழைப்புகளை “ஒரு அரை அவர் ஆகும் சார்!" "இன்னும் ஜஸ்ட் பிஃப்டீன் மினிட்ஸ்” "டூ மினிட்ஸ்" என்று ராக்கெட் கவுன்ட்டவுன் கொடுத்து 'ஹிஹி'த்து பேசி அவர்கள் முகம் கோணாமல் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் "இந்தா! பிடி சாபம். ஏழேழு ஜென்மத்துக்கும் நீ ஐ.டி துறையில் குப்பை கொட்டக் கடவது" என்று துர்வாஸர் போல சபித்து விடுவார்கள்.

இப்படி அப்டேட்டோ அல்லது கட்டையை நீட்டிய அந்த சர்வர் சார்ந்தவைகளையும் வரிசைக்கிரமாக அள்ளிப் போடவேண்டும். மாற்றிக் கொடுத்தால் "ச்சீ போ!" என்று விரட்டியும் "இது எனக்கு வேண்டாம் போ" என்றும் துப்பி நம்மை விரட்டிவிடும். பொறுமையாக ஒன்றன் பின் ஒன்றாக தட்டிக் கொடுத்து உள் நுழைத்து அவரை எழுப்பவேண்டும்.எழுந்து நின்று ஓட ஆரம்பித்த சர்வர் சௌக்கியமாக இருப்பார் என்று உடனே உத்திரவாதம் தரமுடியாது. ஐ.சி.யு பேஷண்டுகளை எப்படி ஆப்செர்வேஷனில் வைத்திருப்பார்களோ அது போல "ரெண்டு நாள் பார்த்துட்டு சொல்றோம்" என்று சொல்லி நமது துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்களிடம் விண்ணப்பிக்கவேண்டும். "முடிந்தது?" என்று சொல்லிவிட்டால் காலை க்ளோஸ் செய்துவிட்டு பறந்துவிடுவார்கள். மீண்டும் வலைவீசி பிடிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை!!

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ஆசுவாசமாக டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது "என்ன சார்! சர்வர்லாம் சரியாயிடுச்சு போலருக்கு" என்று அலுவலகத்தில் 'ராசி'யான வாக்குச் 'சுத்தமான' ஆள் யாராவது சிரித்துக்கொண்டே விசாரித்தால் அடிவயிற்றில் கதிகலங்கும். டீ உள்ளுக்குள் இறங்காது.

பின் குறிப்பு: இதை ஒரு சர்வர் படுத்திய பாடாகவும் படித்து மகிழலாம். என் துறையில் பணிபுரிவோர் நிச்சயம் இதுபோல அனுபவத்திருக்கலாம். அனுபவம் இல்லாதோர் இதை ஒரு டம்மீஸ் கைடாக பயன்படுத்தலாம். ஆரம்பித்த க்ரைம் ஸ்டோரியை பலரின் ஊகத்திற்கு இடம் கொடுக்காமல் முடிக்க வேண்டும். பராசக்தி! சக்தி கொடு!!

பட உதவி: http://www.techday.co.nz
-

45 comments:

  1. எனக்கு ஹோட்டல் சர்வர்களைத்தான் தெரியும். இனியும் வேறு சர்வர்களே வேண்டாமென சனிபகவானை வேண்டிக்கொள்கிறேன்.
    கடகடவென்று சிரிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் எழுத்துநடை.அசத்தல்.

    ReplyDelete
  2. ஏழரையும் கண்டமும் ஒண்ணாச்சேந்து வெளையாடுன எஃபெக்ட்.. இந்த சர்வர் டவுனாகுறப்பதான் நமக்கு புரியும் :-))

    ReplyDelete
  3. "என்ன சார்! சர்வர்லாம் சரியாயிடுச்சு போலருக்கு" என்று அலுவலகத்தில் 'ராசி'யான வாக்குச் 'சுத்தமான' ஆள் யாராவது சிரித்துக்கொண்டே விசாரித்தால் அடிவயிற்றில் கதிகலங்கும். டீ உள்ளுக்குள்
    இறங்காது.///

    ஹஹஹா அங்கயும் அப்படி நல்ல உள்ளங்கள் இருக்கங்களா..?

    ReplyDelete
  4. ரெண்டு மூன நாலா எங்க போஸ்ட் ஒன்னையும் காணுமே என்று பார்த்தேன்
    வாழ்க வளமுடன்
    எல்லாம் சரி ஆகிவிடும்
    அனுபவமும் அழகான பதிவாய்..:)

    ReplyDelete
  5. சர்வர் சுந்தரம் போலவே இதிலும் நகைச்சுவை சோகம் எல்லாம் கலந்திருக்கீங்க. நாகேஷ் படம் பார்த்த திருப்தி.

    ReplyDelete
  6. சர்வர் படுத்தும் பாடு -- இதை அப்படியே உங்கள் டிபார்ட்மென்டில் ஒட்டி வைத்து விட்டால் சிரித்து சிரித்தே போய் விடுவார்கள் கேள்வி யே கேட்க மாட்டார்கள் .... அட்டகாசம் ..சர்வேஸ்வரனே துணை .

    ReplyDelete
  7. அடப்பாவமே!! இவ்வளவு கஷ்டமா உங்க வேலை??? அனுதாபங்கள்!!

    ReplyDelete
  8. ஐ.சி.யு பேஷண்டுகளை எப்படி ஆப்செர்வேஷனில் வைத்திருப்பார்களோ அது போல "ரெண்டு நாள் பார்த்துட்டு சொல்றோம்" என்று சொல்லி நமது துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்களிடம் விண்ணப்பிக்கவேண்டும். "//

    சர்வர்னா தொல்லை இலவச இணைப்பு...

    ReplyDelete
  9. காமெடி நெடி நல்லா வருது

    ReplyDelete
  10. Hello Sir, Just last week than intha anubavangalai nan anubavithen idahi padithavudan nan patta kastathai ippadi neril partha madri solkirare enru viyapaga irukiradhu.advum antha officeil oruthar vandhu enna server problem ellam sove achaa nuchunu ippo nan adahithan kettukondu irukiren
    ipaadiku sharjavil ityil kuppai kottum Guru

    ReplyDelete
  11. சர்வர் டவுண் ஆனாலும் மைனர்வாள் பேட்டரி எப்போதும் ஃபுல் சார்ஜ்லதான் இருக்கு!!..:))

    ReplyDelete
  12. கஷ்டங்களைக் கஷ்டப்பட்டு அதே வரிசையில் எழுத்தில் வடித்து விட்டீர்கள். வீட்டுக் கணினி உட்கார்ந்தபோது சிறிய அளவில் இது மாதிரி சோகங்களைச் சந்தித்திருக்கிறேன்!

    ReplyDelete
  13. கண் முன்னே அவஸ்தை முழு நீல படமாக விரிந்தது. சென்ற வார அவஸ்தையா?
    அருமையான நடை மற்றும் பதிவு.

    ReplyDelete
  14. என்ன செய்யறதுங்க.. சில சமயத்துல சர்வர் பகவானே துணைன்னு இருக்க வேண்டியது தான்.. :)
    எத்தனையோ பிரச்சினைகளுக்கு ஜோசியம் சொல்லுறாங்க.. இந்த சர்வர் பிரச்சினைக்கும் ஜோசியம் பார்க்கலாமா அண்ணா? .
    சர்வர் வைத்திருக்கும் திசை, அறை நீளம் எல்லாம் வாஸ்து படி தான் இருக்கா.. ? :) :) :)

    ReplyDelete
  15. தமிழ்மணம் வழங்கி (serverக்கு எத்தனை அழகான தமிழ்) புட்டுகிச்சு (இதுவும் அழகான தமிழ் தான்) என்று போட்டிருக்கிறார்களே.. கனெக்சன் ஏதாவது உண்டா?

    நன்கொடை கேட்டிருக்கிறார்கள் - இது அசல் தமிழ்மணம் தானா அல்லது இன்னொரு internet scamஆ எப்படித் தெரிந்து கொள்வது?

    ReplyDelete
  16. neengalum en case thaanaa.. ensaai

    ReplyDelete
  17. அலுவலகத்தில் 'ராசி'யான வாக்குச் 'சுத்தமான' ஆள் யாராவது சிரித்துக்கொண்டே விசாரித்தால் அடிவயிற்றில் கதிகலங்கும். டீ உள்ளுக்குள் இறங்காது.

    உங்க ஆபிஸ்லயுமா.. தேவுடா.. எங்க ஆபிஸ்லயும் இருக்கார்.. அவர் வாய்ல விழக் கூடாதுன்னு எத்தனை கேர்ஃபுலா இருந்தாலும் சமயத்துல மாட்டிகிட்டு படற அவஸ்தை.. ஸ்ஸ் ஹப்பா..

    ReplyDelete
  18. 'சர்வர்' --

    முதலில் நினைவிற்கு வருவது மறைந்த நடிகர் நாகேஷ்.
    அடுத்து -- உடுப்பி கிருஷ்ணபவன் ஹோட்டல்....

    ஏதோ புது பாஷலாம் பேசுது..
    தொரை இங்கிலீஷுல நெறையா படிச்சிருக்கும் போல.. !

    //ஆரம்பித்த க்ரைம் ஸ்டோரியை பலரின் ஊகத்திற்கு இடம் கொடுக்காமல் முடிக்க வேண்டும். //

    அதான... எங்கள மாதிரி ஆளுங்களுக்குப் புரியுற.. கதையைப் போடுவீங்களா ?

    ReplyDelete
  19. பாருங்கள் சர்வர் படுத்தாவிட்டால் இப்படி ஒரு பதிவு போட்டிருக்க முடியுமா?

    ReplyDelete
  20. RVS

    Excellent


    Have a nice week end

    Sesha

    ReplyDelete
  21. \\"இந்த ஐ.டி டிபார்ட்மென்ட்டே சுத்த வேஸ்ட். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை" ன்னு நாலு வார்த்தை நாக்கு மேல பல்லைப் போட்டு ஏசாமல் இருக்க மாட்டார்கள்.//

    ஹா ஹா ஹா ... நாங்க அப்படித்தான் சொல்லுவோம்.

    ReplyDelete
  22. எல்லா கஷ்டங்களையும் சொல்லி முடித்து
    அந்த" ராசியான ஆள் "விசாரிப்பு பற்றிச்
    சொன்னவுடன் சிரிப்பு குபீரென வந்தது
    நல்ல நடை உண்ர்வுகளை அப்படியே
    எங்களுக்குள் இடம் மாற்றிவிடுகிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. @s.prabhakaran -s.dharmalingam
    நன்றி கவிஞர் வெங்கடேசன்! :-)

    ReplyDelete
  24. @அமைதிச்சாரல்
    ஏழரையும் கண்டமும்... அற்புதமான டைட்டில் வார்த்தைகள். நன்றிங்க. :-)

    ReplyDelete
  25. @siva
    எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் சிவா! :-)

    ReplyDelete
  26. @siva
    நன்றி சிவா! :-)

    ReplyDelete
  27. @அப்பாதுரை
    நன்றி அப்பாஜி! சர்வர் சுந்தரம் ஒப்பில்லாத படம். :-)

    ReplyDelete
  28. @பத்மநாபன்
    பத்துஜி! நன்றி! இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று சொல்வது போல உங்களுடைய “சர்வர் படுத்தும் பாடு” வை படித்துப் பார்த்தேன். குபீர் சிரிப்பு வந்தது. :-)

    ReplyDelete
  29. @RAMVI
    இன்னும் நிறைய இருக்கு மேடம். ஒவ்வொன்னா சொல்றேன். இல்ல.. இல்ல.. புலம்பறேன்!! :-))

    ReplyDelete
  30. @இராஜராஜேஸ்வரி
    எங்களுக்கு தொல்லை மற்றவர்களுக்கு.... :-)

    ReplyDelete
  31. @raji
    ரத்தினச் சுருக்கமான கருத்துக்கு நன்றி! :-)

    ReplyDelete
  32. @Guru
    ஹா..ஹா.. ஐ.டி என்றால் Indefinite Torture.. சரியா? :-)

    ReplyDelete
  33. @தக்குடு
    ஆமாம்.. க.கா. நாயகனே! :-)

    ReplyDelete
  34. @ஸ்ரீராம்.
    அது AMC யில் உள்ளதா? படாய்ப் படுத்துவார்கள். :-)

    ReplyDelete
  35. @Eswari
    கொடுமங்க! :-)

    ReplyDelete
  36. @இளங்கோ
    ஆறுதலுக்கு நன்றி தம்பி :-)

    ReplyDelete
  37. @அப்பாதுரை
    தெரியலை! அட்மினுக்கு மெயில் அனுப்பி பார்க்கலாமா?

    ReplyDelete
  38. @எல் கே
    same blood... :-)

    ReplyDelete
  39. @ரிஷபன்
    சர்வ இடங்களிலும் வியாபித்து இருக்கிறார்கள்! கருத்துக்கு நன்றி சார்! :-)

    ReplyDelete
  40. @Madhavan Srinivasagopalan
    சரி சார்! :-)

    ReplyDelete
  41. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

    நன்றி மேடம்! படாய்ப் படுத்திருச்சு... :-)

    ReplyDelete
  42. @Seshadri

    sesha.. thank you for your wishes. Let us hope for the best.. :-)

    ReplyDelete
  43. @சிவகுமாரன்
    வேண்டாம் சிவா! பாவம் நாங்க! :-)

    ReplyDelete
  44. @Ramani
    கருத்துக்கு நன்றி சார்! :-)

    ReplyDelete
  45. தீர்வு வரும் வரையிலும் போகவேண்டிய ஊர் வரை காதும் மொபைலும் ஒட்டி வைத்த போஸில் லோல்பட வேண்டியிருக்கும். ஃபேமிலியுடன் Physically present. Mentally absent என்றாகி விடும்.//

    இது எந்தத் துறையில் வேலைபார்க்கும் ரங்கமணிக்கும் பொருந்தும். ம்ம்ம்ம்

    ReplyDelete