Sunday, August 7, 2011

என் பெயர் க்ருஷ்ணா


சத்யத்தில் நேற்றிரவு இரண்டாம் ஆட்டம் தெய்வத்திருமகள் திரைப்படம் பார்த்தோம். சென்னை நகரின் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் புகழ் பெற்ற சாலைகளை மனதில் நிறுத்தி ஒன்பது மணிக்கே வீட்டை விட்டு சீறிக்கொண்டு புறப்பட்டாலும் நடுரோட்டில் கொட்டமடிக்கும் நாயகர்களால் அவதிஅவதியென்றுதான் கடைசியில் கொட்டகையை அடைந்தோம். பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) சரி விகிதத்தில் பராமரிக்கும் ஜென்மங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க முடியாத இடைவெளியில் வாகனங்களை நெருக்கமாக நிறுத்தச் சொன்னார்கள். என்னுடைய சேப்பாயியை உரசும் ஆசையில் வந்த ஒரு ஃபோர்ட் ஐகானைப் பதறிப் போய் கையைக் காட்டி நிறுத்தி, அந்தக் குடும்பஸ்தரை புள்ள குட்டியோடு கீழே இறக்கி அவரது ‘நாலுகாலை’யும் அடைப்புக்குறிக் கோட்டுக்குள் சொருகிப் பொதுச் சேவை புரிந்தேன். சேப்பாயி பிழைத்தாள்.

சென்னைக்கு முப்பது கி.மீ என்ற மைல் கல் அருகே ரோடில் விழுந்து கிடக்கும் விக்ரம் பற்றிய கடந்தகால நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஃப்ளாஷ் பேக் போன்று முதல் பாதி எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் வாதாடி கிருஷ்ணாவின் அபகரிக்கப்பட்ட குழந்தையை அவரிடம் திரும்ப ஒப்படைக்கிறார் அழகான அனுஷ்கா. கமலின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸுக்கு டாக்டர்கள் கொடிபிடித்தது போல வக்கீல்கள் கேசுக்காக அலைவதை மிகக் கேவலமாக காட்டியிருக்கிறார் என்று கருப்புக்கோட்காரர்கள் சங்கத்திலிருந்து கண்டனம் தெரிவிக்காதது ஆச்சர்யமாக உள்ளது.

ஊட்டி அவலாஞ்சி கிராமத்தில் இருக்கும் சாக்லேட் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் விக்ரம். சுடச்சுட தயாராகும் சாக்லேட்டை பத்தை போட்டு டப்பாவில் அடைக்கும் வேலை. மூளை வளர்ச்சி குன்றியவரின் மேனரிஸங்கள் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதபடி நடிக்கிறார். சில இடங்களில் விக்ரமின் நடிப்பு அலுப்புத் தட்டுகிறது. குறிப்பாக கை தட்டுவதும் பார்வையை உருட்டுவதும். பாலா படங்களில் வரும் அசாதாரண உறுமும் விக்ரமுக்கு கெக்கேபிக்கே க்ருஷ்ணா விக்ரம் எவ்வளவோ தேவலாம். அவ்வப்போது வாய் பிளந்து நடிக்கும் சில காட்சிகளில் நம்மையும் வாய் பிளக்க வைப்பது நிஜம் தான்.

சாராவைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்துவிடுகிறார் விக்ரமின் மனைவி. பள்ளி ஆண்டு விழாவின் போது விக்ரம் சாராவைக் கொஞ்சும் போது பார்க்கும் அப்பள்ளியின் இளமைப் பொங்கி வழியும் தாளாளர் அமலா பால்; வீட்டை விட்டு ஓடிப் போய் விக்ரமை காதல் மணம் புரிந்து கொண்ட தன் அக்காவின் பெண் தான் சாரா என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறார். அமலா பால் பின்னால் சுற்றும் கார்த்திக் காட்சிகள் சுத்த வீண். ரீலுக்கு ஏற்பட்ட நஷ்டம்.

தமிழின் எல்லா சினிமாவிற்கும் ஒரு வில்லன் தேவை என்பதை பூர்த்தி செய்யும் விதமாக அமலா பாலின் அப்பா விக்ரமிடமிருந்து சாராவைக் கவர்ந்து செல்கிறார். அனுஷ்கா நாசரிடம் போராடி மீட்கிறார் என்று போகிறது படம். சந்தானம் மற்றும் இன்னொறு காலேஜ் பெண் போன்ற லவ்வபுல் லாயர் என்ற கூட்டணியுடன் ஜமாய்க்கிறார் அனுஷ்கா. சாரா ஜோராக நடிக்கிறார். ஷாலினி, ஷாம்லி போன்ற குழந்தை நட்சத்திரங்களை வாயாட விட்டது போல இல்லாமல் அடக்கிவாசிக்க வைத்திருக்கிறார்கள். ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

சில இடங்களில் படம் “U" போல வளையும் போது அகா துகா சந்தானம் "A" போல நிமிர்த்துகிறார். அடிக்க வரும் க்ளையண்ட்டிடம் ”சார் நான் லாயர் இல்ல நாயர்” என்று கோர்ட்டில் டீ, காபி என்று விற்கும் போதும், விக்ரமும், அனுஷ்காவும் சேர்ந்து கொண்டு சந்தானத்தை “இவரு ஒரு மாதிரி” என்று நெற்றிப் பொட்டுக்கு நேரே விரலால் சுழித்துக் காண்பிக்கும்போதும் அசத்துகிறார். சிகப்பு ரோஜாக்கள் காலத்து கட்டக் கண்ணாடி போட்டுக்கொண்டு பாஷ்யம் நாசரின் ஜுனியராக வரும் இளைஞர் உதடு விரித்த சிரிப்பிலும் “டியர்” என்று அனுஷ்காவின் ஜுனியர் லவ்வபுல் லாயரை அன்போடு அழைக்கும் தருணங்களின் போதும் ரசிக்க வைக்கிறார்.

அனுஷ்கா அர்த்த ராத்திரியில் சந்தானத்தை ஸ்கூட்டி பில்லியனில் ஏற்றி விக்ரமைத் தேடி வீதியுலா வரும் காட்சிகளில் கூட பக்திமயமாக ஸ்டிக்கர் பொட்டுக்கு கீழே ஒரு சின்ன விபூதிக் கிற்றலில் வருகிறார். உதவி டைரக்டர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். வொய் வொய்.ஜி. மஹேந்திரா இன் திஸ் ஃபிலிம்? மொத்தமாக ஐந்து வார்த்தை வசனம் கொடுத்திருக்கிறார்கள். அனுஷ்காவின் அப்பா வயதில் இருப்பதால் அவருக்கு தகப்பன் ஸ்தானம் கொடுத்து சினிமாவை நாமே கருத்தாகப் பார்த்துக் கொள்ள விட்டுவிட்டார் இயக்குனர். அனுஷ்காவின் அழகையும் இப்படி வீணடித்துவிட்டார்களே என்று தியேட்டரில் இருந்து படம் முடிந்து வெளியே வரும் போது இரண்டு விசிலடிச்சான் குஞ்சுகள்  அங்கலாய்த்துக்கொண்டார்கள்.

 ஸ்ரீசூர்ணம் போட்டுக்கொண்டு பாஷ்யம் என்கிற ஐயங்கார் லாயராக வரும் நாஸர் உதடிரண்டும் சேர்த்து ”உப்” வைத்துக் கொள்ளும் போஸில் ‘அட’ போட வைக்கிறார். சுற்றிலும் ஐந்தாறு பேருடன் கோர்ட்டில் வளைய வரும் நாஸர் கடைசியில் அன்பில் அடிபட்டுப் போய் தன் கட்சிக்காரருக்குப் பதிலாக எதிராளிக்கு சாதகமாகப் பேசி அனுஷ்காவிடம் இந்த கேசில் தோற்பதில் பெருமை கொள்கிறார்.  நாசரின் ட்வெண்டி இயர் ஸ்டாண்டிங் லாயர் பாடி லாங்குவேஜ் அதி அற்புதமாக இருந்தது.  கோர்ட்டில் “அட அட..” என்று சொல்லும் ஒருவரும் பட்டை நாமம் சார்த்திக் கொண்டு “பாஷ்யம்” புகழ் பாடும் ஒருவரும் கோர்ட் ப்ரோஸீடிங் காட்சிகளை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். அவர்கள் செய்யும் கொணஷ்டைகள் முதல் தடவை புன்னகை பூக்கச் செய்தாலும் ரிப்பீட் காட்சிகளில் “மொச்” கொட்ட வைக்கிறது. நாஸர் முழுத் திறமை காண்பிப்பதற்கு நிறைய காட்சிகள் இல்லை என்பது துரதிர்ஷ்டமே!

எம்.எஸ். பாஸ்கரின் மனைவி விக்ரமுடன் பழகும் காட்சிகளை, முருகன் என்ற கேரக்டர் மூலமாக கொச்சைப் படுத்தியிருப்பது படத்தின் ஓட்டத்தை சிதைக்கிறது.  விரசமாக முருகன் கதாபாத்திரம் பேசும் போது ஒரு சராசரி தமிழ்ப் பட நெடி வீசுவதை தவிர்க்கமுடியவில்லை. அந்தக் காட்சிகளுக்குப் பதிலாக பாசிடிவ்வாக அந்த இருவரின் உறவையும் காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தால் காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கும். விக்ரமால் எதுவும் செய்ய முடியாது என்று படம் பார்ப்பவர்களுக்கு தெள்ளெனத் தெரிந்த பிறகு சோக்குக்காக இதுபோல காட்சி அமைப்பது உலகத்தரப் படத்திற்கு அமெச்சூர்த்தனமாக இருந்தது.

உறவுகளின் பாச உணர்ச்சிப் போராட்டப் படங்களுக்கு இசை மிகப்பெரிய பக்க பலமாக இருக்க வேண்டும். பின்னணியிலும் சரி, பாடல்களிலும் சரி ஜி.வி.ப்ரகாஷ்குமார் இப்படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார். கதையின் கருத்தை உணராமல் காசுக்கு மாரடித்தால் இப்படித்தான் இருக்கும். விசிலடித்து விக்ரம் பாடும் பாப்பா பாட்டு ராபின் ஹுட் கார்ட்டூனில் இருந்து உருவியது. இங்கே பார்த்தும் கேட்டும் மகிழலாம்.  அவர் பிறப்பதற்கு முன்னால் 1979-ல் வந்த படமாம்.

இசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் அவ்வளவாக சோபிக்கவில்லை. அமிதாப்பும் அவரது புத்திரனும் நடித்த ஹிந்தி பாவில் இளையராஜாவை இசையமைக்க அழைத்ததை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். சில முக்கியமான இடங்களில் பின்னணி இசையில் ஜாஸ் ஒலித்தது செத்த வீட்டில் கெட்டி மேளம் கொட்டியது போல இருந்தது.

ஊட்டியின் கண்ணுக்கு இனிமையான பச்சையையும் குளிர்ச்சியையும் படம் பிடிக்கக் கேமிரா தவறியதோ என்று தோன்றியது. நிறைய இடங்களில் பள்ளத்தாக்குகளை மட்டுமே படம் பிடித்திருக்கிறார்கள். மரவீட்டுக் காட்சிகளும், சாக்லேட் கம்பெனி உள்ளே காண்பிக்கும் காட்சிகளும் தான் முதல் பாதியை முக்கால்வாசி ஆக்கிரமித்திருக்கின்றன. சாராவை ஸ்கூல் பஸ் ஏற்றும் இடம் கூட மலைராணியின் இயற்கை அழகை காண்பிக்காதது இயக்குனர் அதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உறுதிப் படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் காமிராவை சுழலவிட்டிருக்கலாம்.

மன வளர்ச்சி குன்றியவர், தனது மகளுக்காக உருகி உருகி ஏங்கியவர் கடைசியில் தனது மகளை மீண்டும் கொண்டு போய் அவளை அவரிடமிருந்து கடத்தியவர்களிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய லாஜிக்கல் மிஸ்டேக். அவளுடைய நற்கதிக்காக இவ்வாறு செய்கிறார் என்று காண்பித்திருப்பது இம்மியளவும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

ஒரிஜினல் பார்த்தவர்களுக்கு இந்த நகல் சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஒருக்கால் தெ.திருமகளைப் பார்த்துவிட்டு ஐ அம் சாமைப் பார்த்திருந்தால் இந்த ஐ அம் க்ருஷ்ணாவைப் பிடித்திருக்குமோ? என்ன இருந்தாலும் சாம் டாசனை வெல்ல இந்த க்ருஷ்ணாவினால் முடியவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஆங்கிலத்திலிருந்து உருவியது என்றாலும் தமிழ் ஒரிஜினாலிட்டியை காப்பாற்றுவதற்கு இயக்குனர் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளை தமிழ்ப் படுத்துவதில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் படத்தின் வேகத்தையும் பரிபூர்ணத்துவத்தையும் கெடுத்துவிட்டது என்பது என்னுடைய அபிப்ராயம். ”விக்ரம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பெரிய இவனாட்டம் சொல்ல வந்துட்டியா?” என்று விக்ரமிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு என்னிடம் சீறுபவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். “தயவு செய்து ஐ அம் சாம் பாருங்கள். புரியும்”



பின்குறிப்பு: 1985-ல் இருந்து நான்கு வருடங்கள் இப்போதையக் கவர்ச்சிக் கிழவி மடோனாவுடன் குடும்பம் நடத்தியவர் தான் "ஐ அம் சாம்" படத்தின் ஹீரோ ஷான் பென் என்பது ஒரு கூடுதல் செய்தி.

#அடடா... என்னவொறு பொதுஅறிவுக் குறிப்பு!!

-

55 comments:

  1. hai i am sam

    //தமிழின் எல்லா சினிமாவிற்கும் ஒரு வில்லன் தேவை என்பதை பூர்த்தி செய்யும் விதமாக அமலா பாலின் அப்பா விக்ரமிடமிருந்து சாராவைக் கவர்ந்து செல்கிறார். அனுஷ்கா நாசரிடம் போராடி மீட்கிறார் என்று போகிறது படம்//

    தமிழ் சினிமாவின் தரம் இன்னும் வளர வேண்டும்.இதுவே எனது ஆசையும் கூட.

    நட்புடன்
    sam

    ReplyDelete
  2. இதுக்கு பேருதான் பிரிச்சு மேயறதோ?

    //இசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். //

    நூத்துல ஒரு வார்த்தை.அந்த வித்தை இன்னும் அந்த அளவுக்கு யாருக்கும் வரலையோனு எனக்கு தோணும்

    ReplyDelete
  3. வெங்கடேசன்.செ.Monday, August 08, 2011

    படம் மெதுவாக இழுத்துகொண்டு போயிருக்கும் என்பது உங்களின் கடகடவென்ற் எழுத்து நடையில் புரிகிறது. இன்னும் படம் பார்க்கவில்லையாதலால் இசையைப்பற்றி உங்களுடன் சண்டையிட முடியல. ஆனாலும் இப்படி இந்தபடத்தில் இளையராஜாவைப் சிலாகியத்திற்கு நன்றி. வக்கீலுக்கே பாய்ண்ட் எடுத்துகொடுத்துட்டீங்க. அப்படியாவது இந்த படத்திற்கு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கலாம். பாவம்... மறந்துவிட்டார்கள்.
    வழக்கமான துறுதுறு எழுத்தாற்றலுக்கு இன்னும் நிறைய பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. விமர்சனம் திரைப்படம் தொடங்கியது முதல் என்று இல்லாமல் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் என தொடங்கி ஒரு பொது அறிவு ஹி ஹி தகவலுடன் முடித்தது அருமை சகோ ....
    இப்போ அந்த கிழவிக்கு யார் புருஷன் ஹி ஹி

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம் சகோ ..நன்றி

    ReplyDelete
  6. ம் உங்கள் கருத்தை
    வழிமொழிகிறேன்
    இதுபோல இரண்டு மூன்று படங்கள் விக்ரம் பணிவிட்டார்
    அந்த குழந்தை நடிப்பு மட்டும் பிரகாசம்
    உங்கள் பொது அறிவு அடேய் அப்பா
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. இப்போ அந்த கிழவிக்கு யார் புருஷன் //

    அவரா நீங்க ?அவ்வவ் ஹஹஹா

    ReplyDelete
  8. mm. FBLa potta status msgthan pathil

    ReplyDelete
  9. சகோ ராஜி சொன்னமாதிரி பிரிச்சு மெஞ்சு இருக்கீங்க...

    ReplyDelete
  10. அலசி எடுத்திட்டிங்க ...இந்த அலசலுக்காகவே படத்தை பார்க்கத்தோணுது ....என்னை மாதிரி தமிழ் பட கற்பினருக்கு இந்த காப்பி கீப்பி எல்லாம் தோணாது ..இந்த படம் எப்படிங்கறது தான் முக்கியம் ...உங்கவிமர்சனம் பார்க்கும் போது எட்டி பார்க்கலாம்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  11. இசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் அவ்வளவாக சோபிக்கவில்லை. அமிதாப்பும் அவரது புத்திரனும் நடித்த ஹிந்தி பாவில் இளையராஜாவை இசையமைக்க அழைத்ததை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். சில முக்கியமான இடங்களில் பின்னணி இசையில் ஜாஸ் ஒலித்தது செத்த வீட்டில் கெட்டி மேளம் கொட்டியது போல இருந்தது.


    ...Super! Super comment!!!

    ReplyDelete
  12. ஒரிஜினல் பார்த்தவர்களுக்கு, விக்ரம் நடிப்பை கண்டு எரிச்சல் தான் வரும்.

    ReplyDelete
  13. Please read http://musicshaji.blogspot.com about this film.

    ReplyDelete
  14. வெளிநாட்டு படங்களை அனுமதி இன்றி சுட்டு தமிழில் எடுக்கும் படங்களை திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் மட்டும் இவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. உங்கள் சேப்பாயியை உரசிய ஐகானை ஈவ் டீசிங்கில் மாட்டிவிடாமல் இருந்தது உங்கள் பெருந்தன்மை. கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிய சத்யம் தியேட்டரை கொட்டகை என்று சொல்லி ஆப் செய்து விட்டீர்களே...

    ReplyDelete
  15. சந்தானம் A போட்டாரோ இல்லையோ நீங்க நன்னா லெப்ட், ரைட், யூ டேர்ன் போட்டு எழுதி இருக்கேள் படத்தை பத்தி. ஷொட்டும் குட்டும் கலந்து கட்டி அழகா எழுதப்பட்ட திரைவிமர்சனம். விகடனுக்கு நான் முதலாளியா இருந்தா உங்களையே ஆஸ்தான விமர்சகரா எழுத சொல்லி இருப்பேன்.

    ஆக, சேப்பாயியை நீங்க வெச்சு இருக்கர மாதிரி 1985-ல மடோனாவை நம்ப சாம் ......:)

    ReplyDelete
  16. நல்ல விமர்சனம் ........

    ReplyDelete
  17. அருமையான அல்சல். கையில் ஒரு தொழில் இருக்கிறது. அது சரி படத்துக்கு பேமிலியோட போகலையா? சந்தேகம் இந்த வரிகளினால் வருகிறது."
    அப்பள்ளியின் இளமைப் பொங்கி வழியும் தாளாளர் அமலா பால்

    ReplyDelete
  18. விமர்சனத்தைப்போலவே படமும் நல்லா இருக்குமா :-)))))

    ReplyDelete
  19. ஒரிஜினல் படத்தைப் பார்த்தே ஆகணும்

    ReplyDelete
  20. நல்லதோர் விமர்சனம் மைனரே. ஆங்கில மூலத்தினை முதலில் பார்த்து விட்டு அப்புறம் தமிழ் படத்தினைப் பார்க்கலாமா சொல்லுங்கள்.... :)

    படிக்க வேண்டியதும் பார்க்க வேண்டியதும் கூடிக்கொண்டே போகிறது :(

    ReplyDelete
  21. What a vambu! how did you (dis)like 180 days rules kidayathu movie?

    ReplyDelete
  22. மீண்டும் கொண்டு போய் அவளை அவரிடமிருந்து கடத்தியவர்களிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய லாஜிக்கல் மிஸ்டேக். அவளுடைய நற்கதிக்காக இவ்வாறு செய்கிறார் என்று காண்பித்திருப்பது இம்மியளவும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

    திடீரென்று மனவ்ளர்ச்சி வந்ததுவிட்டதோ படத்திற்காக்!!!!!???

    ReplyDelete
  23. நல்ல விமர்சனம்
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  24. நல்ல விமர்சனம் ஆர்.வி.எஸ்.சார்.

    ReplyDelete
  25. நல்ல விமர்சனம். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  26. உங்கள் கருத்துக்களை வழி மொழிகிறேன். கோர்ட்டில் வக்கீல் கேள்வி கேட்ட பிறகு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு மகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கும் கிருஷ்ணாவிடம், அந்த வில்லன் தாத்தா ஊட்டிக்கு வந்த போதே எடுத்து சொல்லி இருந்தால் குழந்தையைக் கொடுத்திருக்க மாட்டாரா என்ன என்று தோன்றியது. இருந்தாலும் தமிழ் சினிமாவின் குத்துப் பாடல்கள் இல்லாத ஒரு திரைப்படம் என்பதில் மகிழ்ச்சி. மழைப்பாடல் அனாவசியம்.

    ReplyDelete
  27. ஐ யம் ஸாம் - பார்த்த பிறகு கிருஷ்ணாவை ரஸிக்க முடியவில்லை. ஐ யம் ஸாம் யாதார்த்தமானதாக எனக்கு தோன்றியது. கிருஷ்ணா சொல்லிக் கொடுத்து நடித்த மாதிரி தோன்றுகிறது

    ReplyDelete
  28. நான் "I am Sam" பாத்திருக்கேன்... இத பாக்கலாம்-னு இருந்தேன். But ஆளாளுக்கு ஆஹா ஒஹோ ன்னு புகழவும்-- அலுப்பா போச்சு... எல்லாரும் ஓவர்-ஆ ஒரு படத்த பத்தி பேசினா- என்னவோ தெரியல-- அந்த படம் பாக்கவே பிடிக்கறதில்ல. "மதராசபட்டினம்"மும் இப்படி தான் ஆச்சு. "அலைபாயுதே"வும் இப்படிதான் ஆச்சு. ரெண்டுத்தையும் இன்னி வரைக்கும் பாக்கவே இல்ல! போனா போறது-- விக்ரம் காக- என்னிக்காவது இந்த படத்த "தீபாவளி" spl ஆ tv ல போடறப்போ பாத்துக்கலாம்!

    Review Superb!! எட்டு போடா சொன்னா 7 1/2 ஏ போட்டு
    காட்டிட்டேள்!

    ReplyDelete
  29. நல்ல விமர்சனம் (அந்த கூடுதல் செய்தி proved RVS டச்...;))

    ReplyDelete
  30. @sambathkumar.b
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க ப்ரதர்.. :-))

    ReplyDelete
  31. @raji
    அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க... அனுபவித்ததை பகிர்ந்து கொண்டேன். பாராட்டுக்கு நன்றி.. :-)

    ReplyDelete
  32. @வெங்கடேசன்.செ.
    உங்களைப் போன்ற கலாரசிகர் படத்தை பார்த்தால் புரியும்... ஜவ்வு.... எனக்கு பிடிக்கலை.. விக்ரம் நடிப்பு உட்பட... :-))

    ReplyDelete
  33. @ரியாஸ் அஹமது
    சகோ!! அது பொல்லாக் கிழவி.. ஜாக்கிரதை...

    கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ப்ரதர்.. :-))

    ReplyDelete
  34. @siva
    அதெல்லாம் ஒன்னுமில்லை சிவா.. எல்லாம் உதவாத அறிவுதான்.. பாராட்டுக்கு நன்றி ஊர்க்காரரே! :-))

    ReplyDelete
  35. @எல் கே
    சரி எல்.கே! புரிஞ்சுகிட்டேன்!! :-)

    ReplyDelete
  36. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    சகோ ராஜிக்கு சொன்ன அதே பதிலை உங்களுக்கும் சொல்றேன்.. நீங்க படம் பார்த்தீங்களா? ஒரே போர்... :-)

    ReplyDelete
  37. @பத்மநாபன்
    பத்துஜி! அவசியம் ஆங்கில வர்ஷன் பாருங்க... அதுக்கப்புறம் சுட்ட தமிழ் வர்ஷன் பாருங்க.. நிச்சயம் வித்யாசம் புரியும்.. கருத்துக்கு நன்றி.. :-))

    ReplyDelete
  38. @Chitra
    விமர்சனத்தை பாராட்டியதற்கு முதற்கண் நன்றி..

    அசலைப் பார்த்ததும் நகல் மேல் எரிச்சல் வருவது சகஜமே!! :-))

    ReplyDelete
  39. @! சிவகுமார் !
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    வேண்டுமென்றால் கொட்டாய் என்று சொல்லட்டுமா? :-))

    ReplyDelete
  40. @தக்குடு
    அன்பிற்கு நன்றி தக்குடு. ஏதோ எழுத்துக்கூட்டி எழுதறேன்.. உங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் மீண்டும் மீண்டும் கிறுக்குகிறேன்!! :-))

    ReplyDelete
  41. @மாலதி
    நன்றிங்க முதல் வருகைக்கும்.. கருத்துக்கும்.. அடிக்கடி வாங்க சகோ! :-))

    ReplyDelete
  42. @தி. ரா. ச.(T.R.C.)
    நன்றி சார்! அடிக்க அடி எடுத்துக் கொடுக்கிறீங்களே!! :-))

    ReplyDelete
  43. @அமைதிச்சாரல்

    ஹா..ஹா... சில பேருக்கு பிடிக்கலாம்.. ஆனால் ஆங்கிலத்தை பார்த்துவிட்டால் தமிழில் நன்றாக இருக்காது..அது சர்வ நிச்சயம்.. :-))

    ReplyDelete
  44. @ரிஷபன்
    சார்! அவசியம் பாருங்கள். பென் ஆஸ்கார் வாங்கியவராம்... சரக்கு நிறைய இருக்கு...

    அவருக்கு யார் ஹாலிவுட்ல கட்டவுட் வச்சு பாலபிஷேகம் பண்ணுவாங்க.. ஒரு டவுட்டு... :-))

    ReplyDelete
  45. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலை நகரமே! உங்களை முகப் புத்தகத்தில் பார்க்கவே முடியலையே! என்னாச்சு.. அந்தக் க்ளாஸ் எல்லாத்தையும் கெடுக்குதா? :-))

    ReplyDelete
  46. @Krish Jayaraman
    சேகர்.. அந்த தியேட்டர் பக்கமா நடந்து போனவங்க கூட மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம். அதனால அந்தப் பக்கம் நா தலை வச்சுக் கூட படுக்கலை.. :-))

    ReplyDelete
  47. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க மேடம்.. :-))

    ReplyDelete
  48. @Priya
    நன்றிங்க... :-))

    ReplyDelete
  49. @RAMVI
    தொடர் ஊக்கத்திற்கு நன்றி மேடம்.. :-))

    ReplyDelete
  50. @கோவை2தில்லி
    நன்றி சகோ! ஐ அம் சாம் பாருங்கள்.. சூப்பரா இருக்கும். :-))

    ReplyDelete
  51. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    நா ஒரு பதிவா மாஞ்சு மாஞ்சு எழுதினதை ஒரே பின்னூட்டப் பாராவில எழுதிட்டீங்க மேடம்.. நன்றி.. :-))

    ReplyDelete
  52. @Ponchandar
    Exactly சந்தர்... நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.. :-))

    ReplyDelete
  53. @Matangi Mawley

    பாராட்டுக்கு நன்றி.. இப்படி எழுதினா உங்களுக்கெல்லாம் ஏழரைன்னு சொல்றீங்களா?

    ஹா..ஹா.ஹா.. :-))

    ReplyDelete
  54. @அப்பாவி தங்கமணி
    கூடுதல் செய்தியைக் கூர்ந்து கவனித்த அ.தங்கமணிக்கு நன்றி.. :-))

    ReplyDelete