Monday, January 16, 2012

புத்தகக் காட்சி

 
மார்கழிக் கடைசியில் இலக்கிய தாகம் கன்னாபின்னாவென்று எடுத்தது. புத்தக விக்கலே வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். “ஐயா! எதாவது செய்யுங்க ஐயா” என்று தமிழ் என்னைச் சுண்டி இழுத்தது. அடுத்தவர் வியர்வை ஆளைத் தூக்கும் நாற்றமடிக்கும் மாமாங்க கூட்டம் இருக்கும் என்று டாமிடம் பயப்படும் ஜெர்ரி போல பயந்துகொண்டே ஆங்கிலோ இந்தியன் பள்ளி புஸ்தகக் காட்சிக்குள் தலையை நீட்டினால் சண்டே இரவு ரங்கநாதன் தெரு போல ஃப்ரீயாகத்தான் இருந்தது. நுழைவாயில் அரங்கில் மாலன் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அவரது குரல் எப்போதும் என்னை வசீகரிக்கும். கீழேயிருக்கும் கூட்டத்தின் பேர் பாதி மேலே மேடையிலும் சிகப்புச் சேரில் வீற்றிருந்தது. பந்தலில் கடைசி வரிசை ப்ளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து வேறோர் உலகத்திலிருந்த ரெண்டு பேர் சுண்டலையும் கடலையையும் கொரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆபீஸ் நண்பர் சத்யநாராயணா ஒரு வி.ஐ.பி டிக்கெட் கொடுத்திருந்தார். முகப்புத்தக ஆத்ம நண்பர் சந்திரமௌலீஸ்வரனும் நானும் இது இரண்டாவது ரவுண்ட். முதல் ரவுண்டில் எங்களை இணையவிடாமல் வேறு ஜோலிகள் பிடிங்கித் தின்றதால் இம்முறை இணைந்தோம். ஓப்பனிங் டே அன்றைக்கே இலக்கிய ஆர்வமிக்க, கேட்ஸ் ஆபீஸில் பணிபுரியும் என்னுடைய நண்பன் மைக்ரோஸாஃப்ட் விஜயுடனும் சுயதொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இன்னொரு பள்ளித் தோழன் சிவகுமாருடனும் புத்தக உலா சென்றிருந்தேன்.

நிர்வாணமான ஷெல்ஃபுகளில் புத்தகங்கள் அடுக்கிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். எல்லாக் கடை அலமாரிகளும் ரொம்பி வழிந்தது. விஜய்க்கு சில புதினங்கள் வேண்டும் என்றான். அவனுக்கு பி.ஏ.கிருஷ்ணனை அறிமுகம் செய்துவைத்தேன். அக்கிரகாரத்தில் பெரியாரும், புலிநகக் கொன்றையும் வாங்கிக்கொடுத்தேன். வாசகர் வட்டாரத்தில் வாத்தியார் சுஜாதா ஆசையில்லாதவர் எவர். விஜய்யும் ஆசைப்பட்டான். ”ஆ”, “கொலையுதிர் காலம்” என்ற சில்வர் ஜூப்ளி கண்ட எனக்குத்தெரிந்த சுஜாதா புத்தகங்களையும் இன்ன பிறவும் எடுத்துக்கொடுத்தேன். பையனுக்கு பரம திருப்தி.

அந்த முதல் சுற்றில் நானெடுத்த முத்துக்கள் சில. வழக்கம் போல நிறைய சுஜாதா.
1. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் - சுஜாதா - கிழக்கு
2. நடந்தாய்; வாழி, காவேரி! - சிட்டி,தி.ஜா - காலச்சுவடு
3. மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா - விசா
4. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - விசா
5. க - ராபர்ட்டோ கலாஸ்ஸோ தமிழில் ஆனந்த்,ரவி - காலச்சுவடு
6. நிலா நிழல் - சுஜாதா - உயிர்மை
7. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை
8. புறநானூறு ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - உயிர்மை
9. திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு
10. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன் - காலச்சுவடு
11. மௌனி படைப்புகள் - மௌனி - காலச்சுவடு

இந்த முறை மௌனி எனக்குப் புதுசு. நிறைய பேர் சிலாகித்திருப்பதால் வாங்கியிருக்கிறேன். இன்னமும் புரட்டிப் பார்க்கவில்லை. பி.ஏ.கிருஷ்ணனின் அக்கிரகாரத்தில் பெரியாரால் ஈர்க்கப்பட்டு திரும்பவும் திரும்பிச்சென்ற தருணம் வாங்கியிருக்கிறேன். நிலாநிழல் தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்தது அனைவரையும் கொள்ளை கொண்டது.

இரண்டாவது சுற்றில் வாங்கிய முதல் புத்தகம் “அறியப்படாத அண்ணா ஹசாரே”. அதன் ஆத்தரும் என்னுடன் வந்திருந்தார். அவர்தான் நண்பர் சந்திரமௌலீஸ்வரன். கிழக்கில் ஜெ.மோவின் அண்ணா புத்தகத்தை ஆயிரம் காப்பி போட்டு சல்லிசாக விற்றுக்கொண்டிருந்தார்கள். ஸ்டாலுக்குள் யாராவது “அ” என்று ஆரம்பித்தாலே கேஷ் கவுண்ட்டர் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஜெ.மோவின் அண்ணாவைக் கையில் தள்ளிவிட்டார்கள். அவர்களைக் கொஞ்சம் சுரண்டிக் கேட்டதில் உள்ளேயிருந்து பதுக்கிவைத்திருந்த யாரும் அறியப்படாத அண்ணாவைத் தந்தார்கள்.

“பர்த்ருஹரியின் நீதி சதகம் எங்கே கிடைக்கும்” என்ற கேள்விக்கு நண்பர் மௌலியிடமிருந்து டான்னு “கடலங்குடி பதிப்பகம்” என்று பதில் வந்தது. மேப் அச்சிட்ட மடக்கிய நோட்டீசில் ஒரு ஓரத்தில் கடுகாக இருந்தது. ஏழு ரோ தாண்டி அங்கே நுழைந்ததில் காற்றைப் புசித்துக்கொண்டு உயிர் வாழும் அம்மா ஒருவர் கல்லாவில் நின்றிருந்தார். உள்ளே இருக்கும் டேக் மாட்டிய பையன் “அப்படி ஒன்னும் இல்லீங்க” என்றான். கண்ணில் கடலெண்ணையை ஊற்றிப் பார்த்ததில் கடலங்குடி நடேச சாஸ்திரிகளின் நீதி சதகம் கிடைத்தது. அப்புறம் சிருங்கார சதகம் மற்றும் வைராக்கிய சதகம் இரண்டும் வாங்கிக்கொண்டேன்.

டிஸ்கவரி புக் பேலஸில் ப்ளாக் நண்பர் மெட்ராஸ் பவன் சிவாவையும், பிலாசபி பிரபாகரனையும் சந்தித்தேன். கொஞ்ச நேரம் அவர்களை ரம்பம் போட்டேன். சற்று நேரத்திற்கு பின்னர் “கவிதை வீதி” சௌந்தர் மற்றும் ரஹீம் கஸாலியும் சேர்ந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தோம். டிஸ்கவரியில் லலிதா ராம் எழுதிய துருவநட்சத்திரம் வாங்கிக்கொண்டேன். அப்புறம் திரும்பவும் காலச்சுவடுக்கு கால் போனது. இம்முறையும் பி.ஏ.கிருஷ்ணன் கண்ணில் மாட்டினார். தி மட்டி ரிவர் என்று ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் கலங்கிய நதி என்று எழுதியிருந்தார். வாங்கிக்கொண்டேன். கிழக்கில் “உருப்படு” என்று எழுதியிருந்த கே.ஜி.ஜவர்லாலை கடைசியில் குறிப்பிடுவதால் உருப்படுவேனா? என்று தெரியவில்லை.

இதுவல்லாமல் இந்த வருடம் இண்டெர்னெட்டில் ஃப்ளிப்கார்டில் வாங்கும் பழக்கம் நண்பர் மௌலியிடமிருந்து தொற்றிக்கொண்டது. அதன் மூலமாக வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள்.
1. The Difficulty of being good - Gurcharan Das
2. The Best of Quest - Laeeq Futchally, Achal Prabhala, Arshia Sattar
3. The Contact - Carl Sagon
4. The Last Mughal - William Dalrmple
5. The Mathematical Traveler - Clawson
6. The Unauthorised Autobiography - Julian Assange
7. The Selfish Gene - Richard Dawkins

ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு அரை அவராது படிக்கிறேன். அடுத்த புத்தகத் திருவிழாவிற்குள் முடித்துவிடவேண்டும்.

நாளை இப்படம் கடைசி!

படம் பபாசி இணையத்திலிருந்து....

-

19 comments:

  1. //காற்றைப் புசித்துக்கொண்டு உயிர் வாழும் அம்மா ஒருவர் கல்லா// எனக்கும் அவரைப் பார்த்ததும், என்னுடைய மாதுர்மாதாமஹி எல்லாம் நினைவுக்கு வந்தனர்.நானும் ஒரு ரெண்டு(புஸ்தகங்கள்) அங்கே பொறுக்கினேன்! இன்று(திங்கள்) மாலை சரியான கூட்டம். சாரு நேருக்கு நேர் என்று போட்டு நேரம் 6pm to 6 pm என்று தப்பாகவோ வேறேதேனும் உள்குத்தோடோ போட்டிருந்தது..சாருநிவேதிதா ரொம்ப சுமாராக கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் & சாருநிவேதிதா, கேட்ட கேள்விக்கெல்லாம் ரொம்ப சுமாராக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

    ReplyDelete
  2. அப்பாதுரைTuesday, January 17, 2012

    முதல் நான்கு வரிகள் அட்டகாசம்.
    இ-புக் இறக்கிக் கொள்ள அமெசான் மாதிரி கடைகள் எதுவும் கண்காட்சியில் இல்லாதது ஆச்சரியம். ஒரு வேளை யாரும் அதைப் பற்றி எழுதவில்லையா?
    அடுத்த வருசம் ஒரு இ-புக் இஸ்டால் போட்டுறுவோம்.. என்ன சொல்றீக?

    ReplyDelete
  3. நல்ல பகிற்வு,என்போல நரி வர முடியாதவர்களுக்கு தங்களது பதிவு ஓரளவு திருப்தி தந்தது.

    ReplyDelete
  4. அடே.. இது படிக்கிற புள்ள போல..
    இம்மாம் புத்தகம் வாங்கிருக்கு.. ..!!

    //அவராது//

    எவர் ?

    ReplyDelete
  5. மிக அழகாக ஆரம்பித்துள்ளீர்கள் பதிவை.புத்தக கண்காட்சிக்கு என்னால் வரமுடியாததால், கண்காட்சி பற்றிய பதிவுகளை தேடிப்பிடித்து படித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 'உருப்படு' புத்தகம் நான் வாங்கி இருக்கலாம். :))

    ReplyDelete
  9. @Roaming Raman
    ஒலக எளக்கியம் மட்டும்தான் சாருவுக்கு தெரியும். சாக்கிரதை! :-)

    ReplyDelete
  10. @சங்கர் நாராயண் @ Cable Sankar
    தல. உங்களை நான் நெஞ்சில வச்சிருக்கேன். :-)

    ReplyDelete
  11. @அப்பாதுரை
    இ-புக் ஸ்டால் போட்ருவோம். நாலு வரி பாராட்டுக்கு நன்றி! :-))

    ReplyDelete
  12. @விமலன்
    நன்றிங்க விமலன். :-)

    ReplyDelete
  13. @Madhavan Srinivasagopalan
    அரை ஹவராவது.... அதை ஸ்டைலா அவராது... :-))

    ReplyDelete
  14. @RAMVI
    பாராட்டுக்கு நன்றி மேடம்! :-)

    ReplyDelete
  15. @ரஹீம் கஸாலி
    எனக்கும் மிக்க மகிழ்ச்சி! :-)

    ReplyDelete
  16. @Rathnavel
    பாராட்டுக்கு நன்றி சார்! :-)

    ReplyDelete
  17. @! சிவகுமார் !
    எனக்கும் மிக்க மகிழ்ச்சி சிவா! :-)

    ReplyDelete
  18. Kindly introduce - Books Review., books Introducie

    ReplyDelete