Wednesday, September 26, 2012

லாங்குவேஜ் லகுடபாண்டிகள்

கல்லூரியில் பயிலும் பொழுது ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் இரண்டடி திருக்குறளை சற்று நீட்டி மடக்கி அவர்கள் வசதிக்கேற்ப மூன்றடியாக எழுதியிருந்தனர். வலது பக்கம் தாராளமாக இடம் இருந்தது. இடப்பற்றாக்குறையால் வரியை மடக்கவில்லை என்று தீர்மானமாகச் சொல்லலாம். மெய்ப்பொருள் என்று அறுபத்துமூவரில் ஒருவரின் பெயரைத் தாங்கியவர் எங்களது கல்லூரியோடு எங்களையும் சேர்த்துத் தாங்கிய அப்போதைய முதல்வர். தமிழ்த்துறை பேராசிரியர். பளபளக்கும் ஷூ டக்கின் செய்த பேண்ட ஷர்ட் என்று மிடுக்காக பீடுநடைப் போட்டுக் கல்லூரியில் வகுப்பு உலா வருவார். மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து நாலைந்து பேராய் சத்தமாக “எப்பொருள்” என்று ஒருவன் ஆரம்பிக்க திரிகொளுத்திய சரவெடியாய் “யார்யார் வாய்” என்று இரண்டாமவனும் “கேட்பினும்” என்று மூன்றாமவனும் அப்படியே தொடர் சங்கிலியாக ”அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று வெடிச்சிரிப்போடு ”மெய்ப்பொருளை” அழுத்திக் குறள் கூறி மகிழ்வோம்.

”என்பொருட்டு நீங்கள் திருக்குறள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்று கேலிபேசியவர்களைக் கூட தோழமையுடன் நட்பு பாராட்டி அகமகிழ்வார் அந்த அண்ணல். அவரிடம் ”என்ன சார்! திருக்குறளை இப்படி சின்னாபின்னமா எழுதியிருக்காங்க?” என்று பஸ்கேட்டதற்கு சிரித்துக்கொண்டே அவர் சொன்ன பதில் “எழுதறவனுக்கு திருக்குறள் தெரியணுமா என்ன?” என்றார். சரிதான். ”ஆனால் அதை மாட்டியவனுக்குத் தெரியவேண்டுமல்லவா?” என்று அதிகப்பிரசங்கி நண்பனொருவன் கேட்டு வசமாக மாட்டிக்கொண்டான்.

காஃபியை கொட்டை வடிநீர் என்றும் பேக்கரியை அடுமனை என்றும் தமிழில் கொக்கரிக்கும் பாஷாபிமானிகள் நிறைந்த இந்த பச்சைத் தமிழ் தேசத்தில் ஒரு புலவரை அறுத்துப் பக்கோடா போட்டுவிட்டார்கள். அடியில் காண்பது ஒரு ஹாட் சிப்ஸ் கடையில் மாட்டியிருந்த போர்டு. காலியான புலவரைத்தான் பக்கோடாவாக்கியிருக்கிறார்கள்.


”தமிழ் பேசு; தங்கக் காசு” என்று ஒரு தமிழ்ப் போட்டி நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஜேம்ஸ் வசந்தன்  நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கவிக்கோ ஞானச்செல்வன் நடுவராகவும் அமர்ந்திருப்பார். ஸ்கூலுக்கு தமிழ் பதம் கேட்டால் பல்லைக் காண்பித்துக்கொண்டே “ஸ்கூல்தானே” என்றவர்களும் “வாட்ச்” என்பதற்கு தடவித்தடவி நேரம் முடியும் தருவாயில் பலகாலம் ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது போல ”கடிகாரம்?” என்று பலத்த சந்தேகத்துடன் பதில் சொன்னவர்களும் அநேகம் பேர். திண்டுக்கல் ஐ.லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னது. ”உங்களூரில் பேருந்து நிலையம் எங்குள்ளது?” என்று கேட்ட ஒரு தமிழ்க்குடிமகனிடம் “அப்படியெல்லாம் எதுவும் எங்கவூர்ல இல்லை” என்றானாம் இன்னொருவன். அப்புறம் வழி கேட்டவன் நிதானமாக “பஸ்ஸ்டாண்ட் எங்கயிருக்கு?” என்று திரும்பக் கேட்டவுடன் “ம்.. அப்படி தமிழ்ல கேளு” என்றானாம்.

ஆங்கிலத்திலும் இளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்று பறைசாற்றும் ஒரு அறிவிப்புப் பலகை. ஷேக்ஸ்பியரையே ஷேக் பண்ணிப் பார்க்கும் ஆங்கிலப் பிரயோகங்கள்! “தங்கள் நல்வரவுக்கு நன்றி” என்பதை தமிழர்களுக்குப் புரியும்படியாக “THANKS FOR WELCOME" என்று எழுதிய அந்தப் புண்ணியாத்மாவைத் தேடிக் கண்டுபிடித்து சேவிக்கவேண்டும். 



அது போகட்டும். சில நாட்கள் முன்னே ஒரு ஹோமியோபதி டாக்டர் க்ளினிக் வாசலில் தொங்கிய போர்டில் “HOMO CLINIC" என்று எழுதியிருந்தது. தினமும் பார்வை நேரத்தின் போது போர்டைப் பார்த்துக்கொண்டே க்ளினிக் உள்ளே வந்து உட்காரும் டாக்டருக்குக் கூட அதைக்கண்டு கூச்சமில்லையா?

”யெஸ்டெர்டே ஹி கம்மு... ஐ கோவு.. அட் தேரடி ஒன் பிக் ஃபைட்டு.. ஹி ஹிட்டு ஆப்போஸிட் பர்ஸன் ஹெட்டு.. தட் பர்ஸன் பேக்ல நோ சீ ரன்னு...” என்று தமிழுக்கு ஆங்கில முலாம் பூசி பேசும் ஒரு நண்பன் ஊரில் இருக்கிறான். இப்படி பேசுவதற்கு வரம் வாங்கியிருக்கவேண்டும். தங்குதடையில்லாமல் கூச்சமில்லாமல் பிரவாகமாகப் பேசுவான். எல்லாத் தமிழர்களும் தடுக்கி விழுந்தால் வெள்ளைக்காரனாகுமிடம் மதுபானக்கடை. இவனும் கடைக்குள் நுழைந்தால் காட்டாற்று வெள்ளமென இதுபோல ஆங்கிலம் பேசுவான். ஷெல்லி இவனிடம் பிச்சையெடுக்கவேண்டும். பெக்கடித்த இவனிடம் பைரன் பெக் பண்ணவேண்டும். நிச்சயம் இப்போது ஏதாவதொரு பள்ளியில் ஆங்கில ஆசானாக இருப்பானென்று நினைக்கிறேன்.

இப்படி மொழிச் சிந்தனைகள் பல எழுந்தபோது சில மாதங்களுக்கு முன் படித்த ’கன்னித்தமி’ழில் கி.வா.ஜ தமிழென்று ”பெயர் வைத்தது யார்?” என்ற தலைப்பில் எழுதியது ஞாபகம் வந்தது.

திராவிடமென்னும் சொல்தான் தமிழ் என்றாகியிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். வடமொழியில் சில இடங்களில் ள என்ற பதம் ட என்ற பதமாக ஒன்றுக்கு பதில் ஒன்று வரும். த்ராவிடம் என்பது த்ராவிளம் என்று மாறிற்றாம். வ என்பது ம வாக மாறுவதும் உண்டு. த்ராவிளம் த்ரவிளம் ஆகிப் பிறகு த்ரமிளம் ஆகி, அதன் பிறகு தமிளம் ஆகிவிட்டபிறகு தமிள் என்றும், அப்பால் தமிழ் என்றும் மாறி வந்து விட்டதாம்!

“ஒற்றைக் கல் மன்று” என்பதை “ஊட்டக்கமந்த்” என்றாகி “உதகமண்டலம்” ஆனது போல. என்று சொல்லிவிட்டு திராவிடம் என்கிற சொல் தொல்காப்பியத்திலோ அதன் பின்னர் வந்த சங்க இலக்கிய நூல்களிலோ இல்லை என்கிறார். ஆகையால் வடசொல்லிலிருந்து தமிழ் என்ற சொல் பிறந்தது என்பது தவறு என்றும் பண்டைய இலக்கிய நூல்களில் தமிழ் என்ற சொல்தான் இருக்கிறதாம். முதலில் தமிழர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு தமிழ் என்று இருந்ததாகவும் பின்னர் அதுவே அவர்கள் பேசும் மொழிக்கும் பெயராகியிருக்கவேண்டும் என்று ஆராய்கிறார் கிவாஜ. தமிழ் என்றாலே தமிழ்நாட்டைக் குறிக்குமாம். வசிக்கும் பிரதேசத்தின் பெயர் அவர்கள் பிரயோகப்படுத்தும் மொழிக்கும் வந்திருக்கவேண்டும் என்பதற்கு அவர் உதவிக்கு இழுப்பது ஆந்திரத்தை. காலேஷ்வரம், ஸ்ரீசைலம், திரக்ஷராமம் என்ற மூன்று லிங்கங்களை தன்பால் எல்லைகளாகக் கொண்டதினால் ஆந்திரப்பிரதேசத்தை திரிலிங்கமென்றார்களாம். அதுவே திரிந்து தெலுங்கம் ஆனதாம். சொல்ப காலத்தில் அவர்கள் பேசும் மொழி தெலுங்கானதாம்.

இப்படத்திலிருப்பவைகளைத் தவிர சென்னையில் ஒரு நாளைக்கு நொடிக்கொருதரம் வைக்கப்படும் ஓராயிரம் வாழ்த்துப் பதாகைகளில் கழகத்தார்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை. “ஓய்வரியா சூரியனே” என்றும் “போரளி” என்றும் போஸ்டர் அடித்து துவம்சம் செய்கிறார்கள். ஏற்கனவே ழகரமற்று டமில் பேசும் இளைய சமுதாயம் இந்தப் போஸ்டர் தமிழை பொற்றமிழாக போற்ற ஆரம்பித்துவிடும் அபாயத்திலிருக்கிறது.


பின் குறிப்பு: மேற்கண்ட இரண்டு அறிவிப்புப் பலகைகளும் என் கண்ணுக்குச் சிக்கி பின்னர் என் மொபைல் கேமராவில் சிறைப்பட்டது.

36 comments:

  1. அங்கங்கே தமிழ் கொல்லப்பட்டு தான் வருகிறது. அறிவிப்பு பலகைகளிலும், தொலைக்காட்சியிலும் என.....

    ஆங்கிலத்திலும் I COFFEE, HE TEA.....

    இவைகள் என்று மாறுமோ....அல்லது நாமும் இப்படி கொலை செய்த மொழியை பின்பற்றுவோமோ....?



    ReplyDelete
  2. தமிழை இனி அ.சி.பி யில் அனுமதிச்சு சிகிச்சை அளிக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லைன்னு தோணுது.

    ReplyDelete
  3. பல ஹோட்டல் வாசல்களில் ‘ஆணியன் தோசை’ என்ற பெயரைப் பார்த்து திருதிருத்திருக்கிறேன் நான். அதே போல குடியிருப்பு என்பதன் ஆங்கிலப் பதத்தை ‘காலணி’ என்று எழுதியுள்ளதைக் கண்டும் பலசமயம் சிரிக்க நேர்ந்திருக்கிறது. லாங்குவேஜ் லகுடபாண்டிகள் உங்கட்ட மாட்டிட்டு பட்ட பாடு அருமை...

    ReplyDelete
  4. ha ha ha

    my friend's english teacher's conversion

    YOU SPEAKING, I SPEAKING, WHY THIS FELLOW MIDDLE MIDDLE SPEAKING?

    ithu eppadi irukku?

    ReplyDelete
  5. அட பாவிகளா. என் நண்பனின் தந்தை தான் நீங்கள் சொன்ன பிரின்சிபால். நல்ல மனுஷன். அவரை இந்த மாதிரி கலாய்த்துள்ளீர்களே !

    ReplyDelete
  6. @கோவை2தில்லி

    ஐ காஃபி.. ஹி டீ... ஜோக்கா இருக்கு..

    கருத்துக்கு நன்றிங்க.. :-)

    ReplyDelete
  7. பகோடா... செம கலக்கல்.
    புலவர் என்ன பாவம் செய்தாரோ :))))

    ReplyDelete
  8. @அமைதிச்சாரல்
    யாரும் ரொம்ப சிரத்தையெடுத்துக்கிறதில்லைன்னு எனக்குத் தோணுது. இதுக்கு அ.சி.பி எங்கே இருக்குங்க?

    கருத்துக்கு நன்றிங்க.. :-)

    ReplyDelete
  9. @பால கணேஷ்
    ஆணியன்... காலணி.. இரண்டு உதாரணங்களுமே அருமைங்க..

    நன்றி! :-)

    ReplyDelete
  10. @வரதராஜலு.பூ
    ரஜினி ஒரு படத்தில சொன்னா மாதிரி.. ஐ கேன் டாக் இங்கிலீஷ், வாக் இங்கிலீஷ், ரன் இங்கிலீஷ்.....

    சூப்பர்.. :-)

    ReplyDelete
  11. @மோகன் குமார்
    எனக்கு எப்பவும் அவர் மீது மரியாதை உண்டு மோகன். ஒரு தமாஷாகச் சொல்வார்கள். அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாரப்பா! :-)

    ReplyDelete
  12. @மாதேவி

    ரொம்பப் பாவம். எந்தப் புலவர் மீதுள்ள கோபமோ? :-))

    ReplyDelete
  13. இது போல் எங்கும் உண்டு... முடிந்தளவு திருத்தியதுண்டு... (சில வேளைகளில்-திருந்தியதுண்டு-திருத்த முடியாமல்)

    நன்றி...

    ReplyDelete
  14. @திண்டுக்கல் தனபாலன்

    கருத்துக்கு நன்றி! :-)

    ReplyDelete
  15. தமிழ்க் கடையில் இனி காபி குடிக்கச் சங்கடப்படுவேன்.

    ReplyDelete
  16. ஒருவேளை இவங்க தான் யூட்யூப் சினிமா விடியோக்களில் தமிழ்ப் பாட்டுக்கு இங்கிலிஸ் மொழிபெயர்ப்போ?

    ReplyDelete
  17. லகுடபாண்டி என்றால்?

    ReplyDelete
  18. HOMO CLINIC - ரசித்துச் சிரித்தேன். கூச்சம் இல்லாவிட்டால் பயம் - இரண்டில் ஒன்று இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. நடமாடும் தொலைபேசி நிழல்படக்கருவிக்கு படங்கள் மிகக் கூர்மை.

    ReplyDelete
  20. பேஸ்புக்கில் எழுதியதுதானே

    ReplyDelete
  21. தமிழ் பெயர்க் காரணம் குறித்த கி வா ஜ பார்வை வித்தியாசம்....
    செந்தமிழில் இருந்து சென்னைத் தமிழ் என்ற ஆரய்ச்சி கூட சுவையாய் இருக்கும் என்று தோன்றுகிறது :-)

    ReplyDelete
  22. ”லாங்க்வேஜ் லகுட பாண்டிகள்” என்ர பேயரை வாடசெண்ணை முப்பத்ரென்டாவது விட்ட கலகச் செயலாலராகீய நாண் வண்மையாகாக் காண்டிக்கிரென்.

    தமிலுக்கு அசறாமள் லாடம் அடிக்கிம் லாடபாண்டியான எங்களை லாடபாண்டிகள் என்ரு அலைக்கும் தீர்மனத்தை தலய்வர் முன் மொலிய வெண்டும் என வலிமொலிகிரென்.

    ReplyDelete
  23. இதற்கு அயல் ப்ரதேசங்களில் எழுதும் தப்பும் தவறுமான தமிழ் போற்றுதலுக்குரியதும், ஒரு குழந்தையின் மழலை போன்றதும்.

    நானும், மோகன்ஜியும் சோட்டாணிக்கரா போயிருந்த போது கண்ணில்பட்ட சில அறிவிப்புப் பலகைகள்:

    இவ்விடம் சிருநீர் தெளிக்காதை.

    சாப்பாட் முடிஞ்ச் போச்.

    வுண்டியல் போட்.

    தப்புத்தப்பாக பஸ்களிலும், உண்டியல்களிலும், சாராயக் கடைகளிலும் எழுதப்பட்டிருந்த தமிழ் மென்மேலும் அப்படிப்பட்ட தப்புக்களை விரும்பித் தேடியது.

    ReplyDelete
  24. தமிழ்'படுத்தி'யவற்றை ரசிக்க முடிந்தது. கணேஷ் சொல்லியிருப்பதும் சேர்ந்து! ஐ கேன் வாக் இங்க்லீஷ், ஐ கேன் டாக் இங்க்லீஷ், அன்ட் ஐ கேன் கில் இங்க்லீஷ்!
    :)))

    அடிமை செய்த ஆங்கிலேயனை அடித்து விரட்ட இதை விட சிறந்த ஆயுதம் உண்டோ!

    ReplyDelete
  25. @வெங்கட் நாகராஜ்
    டமில் ’வெல்’க! :-))

    ReplyDelete
  26. @அப்பாதுரை

    லகுடபாண்டி என்பது அரைகுறைகளை வெத்துவேக்காடுகளை கேலியாக அழைக்கும் பதம். 23ம் புலிகேசி என்ற படத்தில் இம்சை அரசன் வடிவேலுவால் பிரபலப்படுத்தப்பட்டது.

    ஹோமோ க்ளினிக்கைப் பார்த்து நொந்துபோனேன். :-)

    ReplyDelete
  27. @அப்பாதுரை
    என்னுடைய அலைபேசி புகைப்படக் கருவி 8 பெ.பு (மெகா பிக்ஸல் எனபதின் மொழியாக்கம்)திறன் கொண்டது ஐயா! :-)

    ReplyDelete
  28. @எல்.கே

    இல்லை. ஃபேஸ்புக்கில் நாலு வரிதான் எழுதினேன். இங்கே விஸ்தாரமாக இழுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  29. @சீனு

    பிராந்தியத் தமிழாராய்ச்சி ஒரு பெரிய சப்ஜெக்ட். அலசி ஆராய்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். :-)

    ReplyDelete
  30. @சுந்தர்ஜி!

    லாடபாண்டிகள்... அற்புதம். வடசென்னை விட்ட கலகச் செயலாலரே!!!

    :-))))

    மலையாள தேசத்தில் எழுதினால் பரவாயில்லை.. இங்கினயே இப்டி எளுதறாங்கோ ஜீ!!! :-))

    ReplyDelete
  31. @ஸ்ரீராம்.
    //அடிமை செய்த ஆங்கிலேயனை அடித்து விரட்ட இதை விட சிறந்த ஆயுதம் உண்டோ!//
    ]
    அப்ப காந்திக்கு போராடத் தெரியலைங்கிறீங்க... :-)))

    ReplyDelete
  32. என்னுடைய பக்கத்தில் ஒரு தோழியை பற்றி.....

    http://kovai2delhi.blogspot.in/2012/09/blog-post_27.html

    முடிந்த போது பார்க்கலாமே.

    ReplyDelete
  33. @கோவை2தில்லி
    படித்துவிட்டேன். நன்றாக இருந்தது. :-)

    ReplyDelete
  34. In Andhra, some one put a banner saying ' Welcome to horible chief minister' . They meant 'honourable'. Few years back a popular automobile company during quality awareness week, the put a banner saying ' Lean inaction' instead of ' in action'.- Rob Anderson

    ReplyDelete
  35. புலவரை அறுத்து பக்கோடாவா ? நான் புலவன் இல்லை நான் புலவன் இல்லை.... ஐயோ யாரோ துரத்தி துரத்தி அறுக்க வர்ற மாதிரியே தெரியுதே .... யப்பா சொக்கா -- இந்த RVS கிட்ட இருந்து காப்பாத்துப்பா

    ReplyDelete