Saturday, February 22, 2014

குட்டி சொர்க்கம்

ஆஃபீஸிலிருந்து வந்ததும் வராததுமாகக் காரை நிறுத்திவிட்டு கழுத்திலிருந்து டேக்கையும் காலிலிருந்து ஷூவையும் கூட கழட்டாமல் சின்னவளுடன் ஸ்கூட்டியில் ஆளரவமற்றச் சாலையில் ஒரு ரவுண்ட் போவது காதில் உரசும் குளிர்காற்றைவிட மனசை ஜிலுஜிலுக்கச் செய்கிறது.

”இன்னும் கொஞ்ச தூரம் போ...இன்னும் கொஞ்சம் தூரம் போ...” என்று கையை முன்னால் காட்டிக்கொண்டே சென்னையை விட்டு இந்நாட்டைவிட்டு இவ்வுலகத்தை விட்டு வெளியே வேற்று கிரகத்துக்கு இந்த ஸ்தூல சரீரத்துடன் கடத்திப் போகிறாள். மரங்களுக்கிடையே வழிந்த மசமச இருட்டில் மகிழ்ச்சியாக ஆஃபீஸ் அலுப்பு தீர ஆக்ஸிலேட்டரை குறைக்காமல் அப்படியே போய்க்கொண்டிருக்க ஆசை. பனி தெரியாமல் முன்னால் குஷியாக நிற்பவளின் காதுகளில் ”ம்மா... பசிக்கிறது...” என்றேன் ரகசியமாக. ”போதும்பா..” என்று கன்னத்தைத் தொட்டுச் சட்டென்று வண்டியைத் திருப்பச் சொன்னாள்.

பசியிருக்கும் வரை சொர்க்கத்துக்குப் போவது லேசுப்பட்ட காரியமல்ல என்று இன்று புரிந்தது.

No comments:

Post a Comment