ஆஃபீஸிலிருந்து நுழைந்தவுடன் ஊஞ்சலில் இம்மாத ’தமிழ்வேதம்’ ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு சின்ன கையகல வெள்ளைக் கவர். ஸ்டாம்ப் ஒட்டி என் பேர் எழுதி. திருவிசலூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்திலிருந்து வந்திருந்தது. விபூதி குங்கும பிரசாதம். கைகால் அலம்பிக்கொண்டு இட்டுக்கொண்டேன். ஊரார் பழித்த போதும் மனம் தளராத ஐயாவாள் ஒரு ஸ்திதப்ரக்ஞன். இன்பதுன்பங்களை லட்சியம் செய்யாவதர். மஹாபாரத உபன்யாசத்தில் ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி அண்ணா சொன்ன ஒரு கதை ஞாபகம் வந்தது.
ஸமர்த்த ராமதாஸர் வீரசிவாஜிக்கு ஆன்மிகத்திலும் அரசியலிலும் வழிகாட்டியாக இருந்தவர். சிவாஜிக்கு அவர் மேல் ஏராளமான மரியாதை. பக்தி. ராமதாஸரின் சிஷ்யர் ரெங்கநாத கோஸ்வாமி. அவர் மேலும் சிவாஜிக்கு பணிவும் அடக்கமும் இருந்தது. கோஸ்வாமியைக் கொண்டாடினார் சிவாஜி.
கோஸ்வாமிக்கென்று ப்ரத்யேக சிவிகை வைத்தார். பாதுகாப்புக்கு நான்கு வீரர்களை பாரா பார்க்கச்சொன்னார். வாய்க்கு பாதாம் ஹல்வா கிண்டித் தரச்சொன்னார். இரண்டு பெண்களை சாமரம் வீசச் சொன்னார். தூங்கும் போது கால் பிடிச்சு விட இரண்டு பேர். ராஜ மரியாதை. ஆனால் அவர் சந்நியாசி.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரெண்டு பேர் சமர்த்த ராமதாஸரிடம் “கோஸ்வாமி.. ராஜ வாழ்க்கை வாழறான்.. நீங்க சந்நியாசின்னு சொல்றேளே.....”ன்னு கேட்டார்கள். ராமதாஸர் எதுவுமே சொல்லலை.
ரெண்டு யானை, குதிரையில நாலு பேர்னு பல்லக்குல கோஸ்வாமி காட்டு வழியா போயிண்டிருந்தார். சமர்த்த ராமதாஸர் எதிர்த்தாப்ல வரார். சடார்னு பல்லக்குலேர்ந்து குதிச்சார் கோஸ்வாமி. நமஸ்காரம் பண்ணினார். “ஏம்ப்பா? என்னதிது? ராஜாவுக்கு சமான வாழ்க்கையாப் போச்சே”ன்னு கேட்டார்.
“தேவரீர் க்ருபை”ன்னு கை கூப்பினார் கோஸ்வாமி. ராமதாஸர் “நீ அனுபவிச்சுட்டு.. தேவரீர் க்ருபையா?”ன்னு கேட்டார். “இதெல்லாம் என்னத்துக்கு?”ன்னு கேட்டார். உடனே கோஸ்வாமி “ஏம்ப்பா.. எல்லோரும் போங்கோ... பல்லக்கை தூக்கிண்டு இங்கேயிருந்து கிளம்புங்கோ... எனக்கு எதுவும் வேணாம்”னு துரத்தினார். ராமதாஸர் பின்னாடியே அவரோட ஆசிரமத்துக்குப் போனார்.
நிறைய உபதேசங்கள், புராணங்கள், ஸ்லோகங்கள்னு ரெண்டு பேரும் விஸ்ராந்தியா பேசிக்கொண்டிருந்தார்கள். “சரிப்பா... நேரமாச்சு.. நான் போய் பிக்ஷை வாங்கிண்டு வரேன்.. நீ இங்கேயே உட்கார்ந்திரு.,,”ன்னு சொல்லிட்டு கிளம்பினார். இடத்தை விட்டு அசையாம கோஸ்வாமி உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நிழல் போய் வெய்யில் வந்தது. சுளீர்னு அடிக்கிறது. அசையவேயில்லை. யோகீஸ்வரனா உட்கார்ந்திருக்கார். இவர் சொகுசா இருக்கார்னு சொன்ன ரெண்டு ப்ரகிருதிகளும் “வெய்யில் அடிக்கறதே... ஓரமா உட்கார்ந்துக்கலாமே..”ன்னு கேட்டாளாம். “ஊஹும்... ஆசார்யன் சொல்லியிருக்கார். நகர மாட்டேன்..”ன்னுட்டார்.
அப்போ வீர சிவாஜி அந்தப் பக்கமா வரான். கோஸ்வாமி வெய்யில்ல கருகிண்டிருக்கிறதப் பார்த்தான். அச்சச்சோன்னு பதறிப் போய்.. “டேய்... இங்க வாங்கோடா... மேலே பந்தல் போடு... ரெண்டு பேர் சாமரம் எடுத்துண்டு வந்து வீசுங்கோ... நாலு பேர் காவல் நில்லுடா... அந்த யானையைக் கொண்டு வந்து வாசல்ல நிறுத்து... ஒருத்தனை குதிரையில சுத்தி வரச்சொல்லு...”ன்னு ஏக தடபுடலா அமர்க்களப்படறது.
பிக்ஷை வாங்கிண்டு சமர்த்த ராமதாஸர் வரார். குடிலைச் சுத்தி ராஜ பரிவாராங்கள். கோஸ்வாமி உட்கார்ந்த இடத்தில் சிலை போல இருக்கார்.
“என்னப்பா இது.. இதெல்லாம் வேண்டாமேன்னு சொன்னேனே...”ன்னு கேட்டார்.
“தேவரீர் க்ருபை”ன்னு சிரிச்சுண்டே சொன்னார் கோஸ்வாமி.
“இது ரொம்ப அநியாயம். நீ அனுபவிக்கறத்துக்கெல்லாம் என் க்ருபைன்னு சொல்றே”ன்னு சமர்த்த ராமதாஸர் கேட்டார்.
“இது குரு கடாக்ஷம். வேண்டாம்னு விரட்டினாலும் பின்னாடி வந்துடறது”ன்னு சிரிச்சாராம் கோஸ்வாமி.
ஸ்திதப்ரக்ஞன் இப்படிதான் இருப்பான். சந்தோஷமோ துக்கமோ கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் அப்படியே எடுத்துப்பன். என்னிக்குமே கஷ்டநஷ்டமெல்லாம் ஸ்தூலத்துக்குதான். ஆன்மாவுக்கு அழிவில்லை. மனசுக்குள்ள ஆன்மபலத்தை ஏத்திக்கணும்.
ஒரு பொடியனைக் கூப்பிட்டு “டேய்... நீ யாருடா..”ன்னா ”நான் கோகுல்”னு சொல்லுவான். சட்டை போட்டுண்டிருந்தா.. மார்மேல அதைத் தட்டித் தட்டி “கோகுல்...கோகுல் மாமா..”ன்னு சொல்லுவான். சட்டையைக் கழட்டி மூலேல வீசிட்டு வெத்து மார்போட சுத்திண்டிருக்கிறச்சே.. அந்த சட்டையைக் காட்டி அது கோகுலாடான்னு கேட்டா.. “ச்சே..ச்சே... அது சட்டை”ம்பான். கொழந்தைக்குக் கூட தெரியும்.
தூஷித்தலும் போஷித்தலும் சட்டைக்குதான்னு நாம சட்டை செய்யாமலிருக்கணும்.
ஆன்மா போற்றுதும்.
Thanks Sir for reminding the very good story.
ReplyDeleteNicely narrated and the difference between Stoolam and Shooshmam cannot be better explained than the last line.
Thanks
Sridhar