Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Saturday, September 22, 2012

ஆனந்த விகடனில் அடியேன்!



இந்த வார “என் விகடனி”ல் எனது www.rvsm.in வலைப்பூ வலையோசை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆ.வி ஆசிரியர் குழுவிற்கு நன்றி. திரு. ரா. கண்ணன் மற்றும் திரு. கலீல் ராஜா இருவருக்கும் பிரத்தியேகமான நன்றிகள். இவர்களைத் தவிர இது வெளியாவதற்கு முயற்சியெடுத்த, பெயரில் மன்மதனின் மனைவி பெயரைப் பாதியாகக் கொண்ட, நண்பனொருவனுக்கும் (”என் பெயரைக் குறிப்பிடாதீர்கள். ப்ளீஸ்!” என்று கேட்டுக்கொண்டதினால் இப்படி கிசு கிசு போல எழுதவேண்டியதாயிற்று) மனமார்ந்த நன்றி.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை கீழே பதிகிறேன். படித்து இன்புறவும்.

நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க்  சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.


இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.

உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.

பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.  ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.


இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்...  இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.

பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.


Sunday, May 13, 2012

சத்தியமாகப் பேசினேன்!

 நின்ற பொருள் அசையவும்; அசையும் பொருள் நிற்கவும் ஒரு கலந்துரையாடல் சத்தியம் டி.வியில் இனிதே நடந்து முடிந்தது. இளையராஜாவுக்கு முதல் கம்போஸிங் போது சுபசகுனமாகக் கரண்ட் போனது போல டி.வி ஸ்டேஷன் ஸ்டூடியோவிற்கு மூன்று கிலோ மீட்டர் முன்னதாக அவர்கள் அனுப்பிய கார் பஞ்சர்.

எப்பாடுபட்டேனும் இவ்வுலக மக்களுக்கு சகல சம்பத்துக்களையும் தரும் இந்த அரிய நிகழ்ச்சியை வழங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் கட்டுக்கடங்காமல் பொத்துக்கொண்டு ஊற்ற ஒரு ஆட்டோ பிடித்து டி.வி ஸ்டேஷனை முற்றுகையிட்டோம்.

Extempore ஆகத்தான் பேசினோம். ரூம் போட்ட யோசனைகள் மற்றும் புத்தகப் பக்கங்களை கிழியும் வரை திருப்புதல் என்கிற பெரிய தயாரிப்பு எதுவும் இல்லை. நிறையக் கால் வந்ததாகச் சொன்னார்கள். முகப்புஸ்தக வட்டாரத்திலிருந்து நண்பர் Roaming Raman கால் செய்து கேள்விகேட்டு அசத்தினார். கேமரா முன்பு உட்கார்ந்திருக்கும்போது தெரிந்த அன்பர்கள் கிரஹாம்பெல் டெக்னாலஜி வழியாக நம் செவியில் நுழைவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய ஆர்வலர்கள் தொடர்பு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள். (காதைக் கொடுங்கள் ஒரு ரகசியம் சொல்கிறேன். இரண்டு பேர் அப்படிச் சொன்னார்கள். இன்னும் இரண்டு பேருக்கு நான் ஃபோன் செய்து ”ஒரு கால் பண்ணக்கூடாது?” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டேன்.)

ஃபோனில் கேட்பது போலவே நிறைய புத்தகக் குறிப்புகளை அள்ளி வீசினார் Chandramowleeswaran Viswanthan. நான் பக்கத்திலிருந்து அடக்கமாக கேட்டுக்கொண்டேன். இரண்டு மூன்று பேர் ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான புத்தக பரிந்துரையை எதிர்பார்த்தார்கள்.

மெத்தப் படித்தவர்களுக்கு இந்தப் ப்ரோகிராம் இனித்திருக்குமா என்று தெரியவில்லை. மண் பயனுற பேசினோமா என்றும் தெரியாது. எதாவது படிக்கலாம் என்று தோன்றும் அநாமதேய அன்பர் எவரேனும் இதனால் பயனடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே!

#நண்பர் ஒருவர் “U LOOK SMART RVS" என்று SMS அனுப்பியிருந்தார். கோடம்பாக்கம் இயக்குனர்களின் கவனத்திற்காக இதை இங்கே சேர்த்தேன்!

##மூன்று நாட்கள் கழித்து காணொளி தருவார்கள். யூட்யூபில் ஏற்றிவிட்டு சுட்டி தருகிறேன். 

###நேரலையாகப் பார்த்த அல்லது நான் யூட்யூபில் ஏற்றிய பிறகு பார்க்க ஆவலாக காத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும் கலந்த வணக்கம்!!

Friday, May 11, 2012

டி.வியில் ஆர்.வி.எஸ்!

நிகழும் நந்தன வருடம் சித்திரை மாதம் 30ம் தேதி மே மாதம் 12ம் தேதி சனிக்கிழமை திருவோண நட்சத்திரம் சப்தமி திதி தேய்பிறை மரணயோகத்தில் காலை 9லிருந்து 10 மணிவரை சத்தியம் (http://www.sathiyam.tv) டிவியில்  ஒரு கலந்துரையாடலில் பேசுகிறேன். என்னுடன் என் நண்பர் திரு. சந்திரமௌலீஸ்வரனும் உரையாடுகிறார்.

தலைப்பு: இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் பழக்கத்தின் நிலை என்ன?

இது ஒரு நேரலை!

ஃபோன் செய்து கும்ம விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகக் கும்மலாம்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails