Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Sunday, July 10, 2011

அந்த மூன்று விஷயங்கள்

three monkeys 1



கையில் இருக்கும் பட்டனைக் கொடுத்து நான்கைந்து பேராய் அணியாக ஒரு இலக்கை நோக்கி ஜெயிப்பதற்காக ஓடும் ரிலே ரேஸ் போல இந்தத் தொடர் பதிவுகள். இலக்கு தலைப்புகள். பதிவுலகத்தில் ஆரோக்கியமான தலைப்புகளில் தொடரப்படும் சங்கிலிப் பதிவுகள் வெற்றிலை பாக்கோடு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். முன்னுரைகளைப் பற்றி எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் போன மாதம் அழைப்பு விடுத்து நான்கு பேர் அவருக்கு பின்னால் பின்னுரையாக எழுதினோம்.

முன்னுரைகள் ஒரு சிறப்பான டாபிக். ஒரு புஸ்தகத்தை வாங்குவதற்கு முன் புரட்டிப் பார்க்கும் இரண்டு நிமிடங்களில் வாசகனைக் கவரும் வகையில் முன்னுரைகள் இருக்க வேண்டும். இம்முறை பிரபலங்களிடம் பேட்டி போல ஒரு தொடர் பதிவு. இம்முறை தொடுப்புக் கொடுத்தது கல்லிடையின் காதல் நாயகன் தக்குடு. முடிந்த வரையில் கேள்விக்கு நேரடியான பதில் அளித்திருக்கிறேன், படிப்போர் ரசிக்கும் வகையில்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

இன்னொரு பால்யம் இப்பிறவியில் அமைந்தால் மீண்டும் அதே ’கெட்ட’ சகவாசங்களுடன் வடக்குத் தெரு மதில் கட்டையில் ராப்பூரா அரட்டையும், ராஜகோபாலன் உற்சவங்களும், கிரிக்கெட் போட்டிகளும் திணறத் திணற நிரம்பிய மன்னார்குடி வாசம்.

பசிக்கும் போது சூடான இட்லி, தேங்காய் சட்னியுடன் வயிறாற சாப்பிட்டவுடன் கண்கள் சொருக போதையேற்றும் கள்ளிச்சொட்டு ஸ்ட்ராங்காய் ஃபில்டர் காஃபி.

மேல் சட்டை போடாமல் bare body-யுடன், கையில் பேய்க் கரும்பு இல்லாமல் வேஷ்டி மட்டும் இடுப்புக்கு மேலே பட்டினத்தார் போல சுற்றிக்கொண்டு சிவனேன்னு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருத்தல்- சில நேரங்களில்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

ஒலியெழுப்பக் கூடாத பிரதேசமான ஆஸ்பத்திரி வாசலில் கூட ”டர்...டர்”ரென்று காதைக் கிழிக்கும் ஆட்டோ சத்தம். “பாம்..பாம்” என்று பஸ்கள் இரையும் ஏர் ஹார்ன்கள். ஆண்டவன் சன்னதியில் ”மாட்டுப்பொண் ஊருக்கு போயிருக்காளா” போன்ற கடைந்தெடுத்த கண்ணியம் இல்லாத செயல்கள்.

கோயிலில் “என்ன கோயிலுக்கா?”என்றும் சினிமாக் கொட்டாயில் “சினிமாவுக்கா?” என்றும் பீச்சில் “பீச்சுக்கா?” என்றும் அப்பாவியாகக் கேட்கப்படும் அச்சுப்பிச்சான சம்பிரதாயக் கேள்விகள். நல்லவேளை இறுதி ஊர்வலத்தில் கொள்ளி தூக்கிக்கொண்டு முன்னால் செல்பவரிடம் “என்ன சுடுகாட்டுக்கா?” என்று கேட்காமல் இருக்கிறார்கள்.

அருள் புரிவதற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பாராட்டாத ஏடு கொண்டல வாடாவிர்க்கு பல டினாமினெஷனில் டிக்கெட் அச்சடித்து வசூல் செய்து ‘பணக்கார சாமியாக’ க்யூ கட்டிப் பார்க்க விடுவது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

இந்த லோகாயாத வாழ்வில் ”நீங்களே பார்த்து நல்லதா வாங்கிட்டு வாங்க” என்று அஸைன் ஆகும் சில பல கிரகஸ்தாஸ்ரம வேலைகள்.

புள்ளைகுட்டிகளுக்கு வீட்டுப் பாடங்கள் மற்றும் பரீட்சைக்கு சொல்லிக் கொடுப்பது. வெரி டேஞ்சரஸ். ‘அவளுக்கு கொஞ்சம் மேத்ஸ் பாருங்க’ என்று மிஸ்ஸஸ் சொன்னால் உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது.

மக்கள் சமுத்திரமான தி.நகரில் கடை விரித்திருக்கும் பல அடுக்கு மாடி ஷாப்கள் மற்றும் ஸ்டோர்களில் திருகாணியில் இருந்து தீபாவளிப் பட்டு வரை எல்லாரையும் ஒட்டி உரசி ஈஷிக்கொண்டே மூச்சு முட்ட சகட்டு மேனிக்கு சாமான்கள் வாங்கும் அசாத்திய தைரியசாலிகளைப் பார்த்து. அந்தக் கடைகளைப் பார்த்தும் தான்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அட்டெண்ட் செய்த யாரோ ஒருவரின் கல்யாண ரிஷப்ஷன் ஆடை அலங்காரங்களை இப்போதும் எப்போதும் ராத்திரி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் நினைவில் வைத்திருக்கும் மாதர் குல மாணிக்கங்கள். - #எப்படி இவ்ளோ ஞாபகம் இருக்கிறது என்று சுத்தமாகவும் அழுக்காகவும் கூட புரியவில்லை.

அடுப்பில் கொதிக்கும் போதே வாசனை பார்த்து ”ரசத்துக்கு உப்பு பத்தாது” என்று ஹாலிலிருந்து அடுக்களை பார்த்து சத்தமிடும் மூக்கை நாக்காக வளர்த்த சில வாசனாதிப் பெரியோர்கள்.

ஆஸ்ரமங்களில் நித்யமும் ’ஆனந்த’ சாமியார்கள் ‘கட்டிப் பிடி வைத்தியம்” தான் செய்கிறார்கள் என்ற நிஜம் தெரிந்தும் கூட்டம் கூட்டமாய்க் குவியும் பக்தைகள் கூட்டம்.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ரகுநாதனின் ‘ரஸிகன் கதைகள்’

நாலு வயசு கௌதம்மின் பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய மானஸா போட்டிருந்த ரோஸ் கலர் ஜிகுஜிகு கோமாளி கேப்.

இந்த நவீன உலகத்தின் இரக்கமில்லாத எஜமானன் - செல் ஃபோன்.

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

கல்யாண ரிஷப்ஷனில் கோட் சூட்டோடு சிரித்துக் கொண்டு எதிர்கால பயமின்றி போஸ் கொடுத்து நிற்கும் மாப்பிள்ளை. (பெண் சிங்கங்கள் சண்டைக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் ஆண் சிங்கங்கள் எனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

”போதா பதவா.. தாஸ்கல்.. மூக்க அதுத்துதுவேன்” என்று என்னைத் திருப்பித் திட்டும் மழலைகள்.

எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுசாமி போல ”ஹார்ட் டிஸ்க்ன்னா ரொம்ப ஹார்டா கெட்டியா இருக்கும். லேசுல உடையாது. எங்க கீழ போட்டுப் பாருங்க”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைத்து உளறுபவர்கள்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

வாகனம் ஓட்டிக்கொண்டு, ரோட்டில் பிலாக்கு பார்த்துக் கொண்டு, யாருடனாவது நீலப் பல்லில் பேசிக்கொண்டும் வீடு திரும்பும் அசாத்திய திறன் எனக்கு உண்டு. வலையில் உலவும் உலாவி போல நான் ஒரு மல்ட்டி டாஸ்க்கிங் மென்பொருள்.

தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கட்டக் கடேசிப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

”லேட்டாயிடுத்து சாப்பிட வரியா” என்று என்னைக் கூப்பிட்ட அம்மாவிற்கு ”இதோம்மா..” என்று பதில் கூறுகிறேன்.

”ஸிஸ்டம் குடு” என்று என் கையை தட்டிவிட்டு என்னிடமிருந்து பிடுங்கும் என் செல்லங்களிடம் இருந்து கெஞ்சிக் கூத்தாடி தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

வேறென்ன? இலக்கியத் தரத்தில் இல்லையென்றாலும் நாலு பேர் படிக்கும் விதமாகவாவது. அட்லீஸ்ட் புரட்டும் விதமாகவாவது  ஹி ..ஹி.. ஒரு புஸ்தகம் போட வேண்டும்.

பாதியில் விட்ட மிருதங்கத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்து “தத்.தி.தொம்.நம்” மிலிருந்து ஆரம்பித்து முழுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு முறை மண்டையை பிளக்கும் கொளுத்தும் வெய்யிலில் மன்னையில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் ஒன்று விளையாட வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

இருபத்து நான்கு மணி நேரமும் அன்னம் தண்ணீர் ’அரசியல்வாதி சோடா’ போன்ற தேவைகள் இல்லாமல் வாய் மூடாமல் பேச முடியும்.

மனசொடிஞ்சு போய் நிர்கதியாக யாராவது வந்தால் “அதோ பாரு நிலா! அந்தக் கறை அதுக்கு எப்படி வந்துச்சு தெரியுமா? கறை இருந்தாலும் நிலா அழகு தானே”ன்னு பக்கத்துல உட்கார்த்தி வச்சு கதை சொல்லி மூடை மாற்றத் தெரியும்.

ஓராயிரம் ஆட்டோக்களுக்கு மத்தியில், சாலையெங்கும் வாகனங்கள் விரவியிருந்தாலும் மனோதிடத்துடன் நாற்சக்கர வாகனம் ஓட்ட முடியும். பத்து வருஷ ’வண்டியோட்டி சர்வீஸ்’ பேசுது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

மார்கழி மாத சபாக் கச்சேரிகள் கேட்டுவிட்டு  நானும் கச்சேரி செய்கிறேன் பார் என்று வாயைப் பிளந்து தெருவே கேட்கும்படி கதறும் புதிய உத்வேகப் பாடகர்கள் பாடும் எ(ச்)சப்பாட்டுகள்.

நான் படிக்கும் போதும் சரி இப்போது என் பெண்கள் பாடசாலையில் வாசிக்கும் இந்தக் கர வருஷத்திலும் சரி, ”பவி தேர்ட் ரேங்க். உங்க பொண்ணு எத்தனாவது ரேங்க்?” என்ற தேவையற்ற ஒப்பீட்டுக் கேள்வி. இதையே கிரேட் வைத்தும் கேட்பார்கள் என்று அறிக.

நுனி கூராக உள்ள மண்வெட்டியை மணல் இரைந்து கிடக்கும் தார் ரோட்டில் போட்டு “டர்..டர்.” என்று கரண்டும் ஓசை. அந்த மண்ணின் நரநர ஓசை காது வழியாக உள் புகுந்து உடம்பெங்கும் அரித்துக் கொண்டு பரவும். Oh God!

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

ஓயாமல் லொடலொடவென்று Chatter Box போல பேசாமல் தேவைக்கு மட்டும் வாயைத் திறப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாநகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் போது கடிவாளம் கட்டியது போல ரோட்டை மட்டும் பார்த்து ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நெடு நாள் பிடிக்கும் போலிருக்கிறது.

கமகமவென்று தெருவே மணக்கும் வண்ணம் வாசனை மூக்கைத் துளைக்க சமைக்க (கரண்டி பிடிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

365 நாட்களும் இரவும் பகலும் இட்லி தோசை  அதன் இணை பிரியாத ஜோடி சட்னி சாம்பாருடன். ஸ்டார் ஹோட்டலுக்கு போனால் கூட இட்லி தோசைக்கு ஆளாய்ப் பறக்கும் இட்லி விசிறி நான். சாக்கடை கசியும் பிளாட்பார தட்டுக்கடை மல்லிப்பூ இட்லி போல கமகமக்கும் ஸ்டார் ஹோட்டல் குஷ்பூ இட்லி அவ்வளவு சுகம் இல்லை.

ரொம்பவும் தளர்ந்து இல்லாமலும், கெட்டியாகவும் இல்லாமலும் தொட்டுக்க மாவடு அல்லது விழுதுடன் ஊறிய ஊறுகின்ற ஊறப்போகும் ‘வினைத்தொகை’ ஆவக்காயுடன் தயிர் சாதம். பகாசுரன் போல பத்து நிமிடத்தில் ஒரு படி சாதம் உள்ளே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈவினிங் டிஃபனுக்கு வெங்கலப் பானையில் கிண்டும் தேங்காய் துறுவலுடன் அரிசி உப்புமா வித் மவுத் வாட்டரிங் நீர்க்க இருக்கும் கத்திரிக்காய் கொஸ்த்து. ரவையூண்டு புளி அதிகமாய் இருந்தால் கொஸ்துக்கு உப்புமா தொட்டுக்கலாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அவ்வப்போது டைனமிக்காக மாறும் பட்டியல் இது. இப்போது கீழே கொடுக்கும் லிஸ்ட், சென்ற ‘ட்’ அடித்த பிறகு டக்கென்று நினைவில் வந்தது.

என் கண்மணி என் காதலி... இளமாங்கனி....
படைத்தானே பிரம்ம தேவன்....
குருவாயூரப்பா... நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி.

எல்லாம் எஸ்.பி.பியாக முணுமுணுத்தாச்சோ!

14) பிடித்த மூன்று படங்கள்?

கிளாஸிக்
தேவர் மகன்
மகாநதி
குணா

காமடி
மைக்கேல் மதன காமராஜன்.
பஞ்ச தந்திரம்
பம்மல் ‘உவ்வே’ சம்பந்தம்.

படையப்பா
முத்து
பாட்ஷா

அண்ணாமலை......

Pursuit of Happiness என்று வாழ்க்கையில் கஷ்டப்படும் விற்பனைப் பிரநிதி ஒருவனின் கதை. ஆங்கிலத்தில் ஆக்‌ஷன் படங்கள் மட்டும் பார்த்த நான் கண்ணீர் வரவழைக்கும் படமாக பார்த்த சினிமா இது. ரியலி சூப்பர்ப். எவ்ளோ நாள் தான் கமல்/சிவாஜி படத்துக்கு மட்டும் ’ஓ’ன்னு அழறது.

....ஓ! மூன்று தான் சொல்லவேண்டுமோ? மும்மூன்றாய் நிறையச் சொல்லலாம். படமும் பாடலும் மூன்றில் நிறுத்தி முக்கோணமிட முடியுமா?

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

ரொம்ப சொகுசுக்கு உடம்பு பழகிடிச்சு.

பற்கள் கிடுகிடுக்கும் குளிர் காலத்திலும் இருவது டிகிரியில் இயங்கும் காரியர் ஸ்பிளிட் ஏ.ஸி.

முகத்தை மூடும் புழுதி, குளிப்பாட்டும் சாக்கடைப் புனித நீர், ஹார்ன் மாணிக்கங்களிடம் இருந்து செவிப்பறையை காப்பாற்றிக் கொள்ள என்று மூன்றுக்கும் சேர்த்து ஜன்னலேற்றிய ஒரு ஏ.ஸி கார்.

அட்லீஸ்ட் தினமும் ஒரு வேளையாவது ஒரு கவளமாவது தயிர் சாதம். யொகர்ட்டின் குண விஷேஷங்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் ஏகத்திற்கும் சிலாகிக்கிறார்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

பதிவுலக சூறாவளி ராஜராஜேஸ்வரி
எழுத்தை ஆயுதமாய் வைத்திருக்கும் ஏ.ஆர்.ராஜகோபாலன்
தில்லியில் பதிவாட்சி செலுத்தும் வெங்கட் நாகராஜ்



பின் குறிப்பு: இதுவரை தமிழ்மணத்திலும் தொடர்ந்து வந்து படித்த அனைத்து அப்பாவி ஜீவன்களுக்கும் மிக்க நன்றி.

பட உதவி: http://journeyforth.wordpress.com/. நடு நாயகமாக  உட்கார்ந்திருக்கும் அந்தக் குரங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பாடுதா? பேசுதா?

-

Monday, April 18, 2011

பெண்ணெழுத்து பொன்னெழுத்து

eppodhum penபெண்ணெழுத்து எப்போதும் கொள்ளை அழகு. குண்டு குண்டாக மணி மணியாக சீராக பார்ப்போரை வசீகரிக்கும்படி எழுதுவார்கள். எதிலும் பொறுமையும் சிரத்தையும் மனம் ஒருமித்து உள்ளவர்களால் மட்டுமே அதுபோல சிறப்பாக எழுத முடியும். ஔவையார் பெண்ணெழுத்துகளின் தானைத் தலைவி. Don. பக்தி இலக்கியம் மற்றும் நிறைய நன்னெறிகள் நயமாக நச்சென்று போதித்தவள். இந்தக் கிழவி ஒரு தொந்திக் குழந்தையுடன் கொஞ்சியது என்றால் ஒரு குமரி தலையில் மயிற்பீலி சொருகிய ஒரு கள்வனோடு குலாவியது. ஆண்டாள் எழுதிய திருப்பாவை பெண்ணினத்தின் காதல் வெளிப்பாடுகள். நான் பொதுவாக எழுத்துக்களில் HE SHE வித்தியாசம் பார்ப்பதில்லை. பெண்கள் கைப்பட எழுதினால் தான் அது பெண்ணெழுத்து என்று நான் எடுத்துக்கொள்வதில்லை. பெண்மையை போற்றும் எதுவும் பெண்னெழுத்தே. எப்போதுமே Macho ரசம் மிகும் எந்த எழுத்துமே பெண் எழுதினாலும் ஆண்மை மிளிரும் தன்மை உடையதாக மாறுகிறது. எழுத்தில் நளினம் வந்துவிட்டால் அது பெண்பாற் எழுத்தாக உருமாறி விடுகிறது. நான் படித்த வரையில் தி.ஜா, லா.ச.ரா போன்ற நிறைய பழம்பெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கதைகளில் நாவல்களில் அது உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண் எழுத்துக்களில் இரண்டு ஆடவர்களை நான் இங்கே சேர்த்துக்கொள்வேன். ஒருவர் முண்டாசுக்கவி பாரதி. இரண்டாமவர் சுஜாதா. சுஜாதாவின் "எப்போதும் பெண்" ஆண் எழுதிய ஒரு அற்புதமான பெண்ணிலக்கியம். பெண்களின் நட்பு, காதல், பொறுப்புணர்ச்சி, பாசம், கடமை, மடமை, விவாகரத்து என்று சகலத்தையும் அக்கக்காக அலசிய கதை. சின்னு என்ற பெண் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை படும் பாடுதான் கதை. நடு நடுவே வரும் பாட்டிகளும், சிநேகிதிகளும், அம்மாக்களும், புதியதாய் கல்யாணம் கட்டியவர்களும், புள்ளைதாச்சிகளும் என்று எப்போதும் பெண்ணில் எங்கெங்கும் பெண். தி.ஜாவின் 'சிலிர்ப்பில்' ஒரு ஏழைப் பெண் குழந்தையின் மனமொருமித்த வேலைக்குணம் பற்றி எழுதி கண்களில் நீரை வரவழைப்பார். என்னைப் பொறுத்த வரையில் அதுவும் பெண் எழுத்தே! லா.ச.ரா கல்யாணம் ஆகி கணவனைப் பிரிந்து தனியாளாக இருப்பவள் கணவனுக்கு எழுதும் கடிதமாக 'பாற்கடல்' எழுதியிருப்பார். அது ஒருவகையில் ரசனையான பெண் எழுத்து.

சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி என்று தமிழில் நிறைய ஜாம்பவானிகள் உண்டு. கரண்டி பிடித்த பல கைகள் பேனா பிடித்து சங்கப்பலகை பார்த்ததுண்டு. சங்க இலக்கியங்களில் காக்கை பாடினியார் நச்செள்ளை, வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற்புலவர்கள் பலர் பாடல் பாடியது உண்டு. நம்மில் அவர்கள் வெகு பரிச்சயம் என்பதால் நான் படித்த ஒரு சில வங்காளப் பெண் எழுத்தாளர்களின் கதைப் புஸ்தகத்தில் இருந்து ஒன்றிரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

Three Sides of Life

தௌலி - மஹாஸ்வேதா  தேவி
தாழ்ந்த ஜாதிப் பெண் ஒருத்தியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டிய இந்தச் சிறுகதை பெண் இலக்கியத்தில் ஒரு வரலாறு. மாமனார் மாமியார் நாத்தனார் என்று ஒரு வட்டத்திற்குள் அடங்கும் கதைகளுக்கு இடையில் இது போன்ற எழுத்துக்கள் என்னை வெகுவாக ஈர்க்கிறது. ஒரு உயர்ந்த ஜாதி பண்ணையாரின் கடைசி மகனை லவ்வினாள் தௌலி. எல்லாப் பெரியமனுஷன் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவள் வயிற்றை நிரப்பி விட்டு தந்தையின் பேச்சை மீற முடியாமல் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு நகரத்திற்கு போய் விடுகிறான். வயிறு வளர்பிறையாக வளர்ந்து மடிகனத்தை ஊருக்கு காட்டிகொடுகிறது. அவள் தாய் அக்கருவை அழிக்கச் சொல்லுகிறாள். மறுதலித்த இவள் தைரியமாக பெற்றுப் போடுகிறாள். இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் நகரத்தில் ஒரு விலைமாதாகிப் போகிறாள். தனி ஒருத்தியாக போராடிய ஒரு பெண்ணின் ஆசாபாசங்களை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் கதாசிரியர். தௌலி என்றால் அழகான பெண் என்று அர்த்தம்.

தி காயக் -  நபனீத தேவ் சென்
காயக் என்றால் ஒருவர் மட்டுமே செல்லும் படகு என்று அர்த்தமாம். கெளஷிகி என்ற பேத்தி அமேரிக்கா செல்கிறாள். இந்தியாவில் தனியாக விட்டு விட்டு வந்த அவளின் பாட்டியை பற்றிய நினைவலைகள் தான் கதை. அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு நண்பியின் வீட்டில் அவளுடைய பாட்டியை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்து மனம் பதபதைக்கிறாள். ஒரு பாட்டி-பேத்தி உறவை அதி அற்புதமாக கதைப்படுத்தியிருப்பார். பாட்டியை பற்றிய இடங்களில் பெண்களின் பல பரிமாணங்களை தொட்டிருப்பார் இக்கதாசிரியர். இக்கதையின் தலைப்பை பாட்டியின் வாழ்க்கையுடன் சேர்த்துப் படிக்கவேண்டும். இதுவும் ஒரு அக்மார்க் பெண்ணெழுத்து.


ஹாரி பாட்டர் - ஜே.கே ரவ்லிங்  
துடப்பக்கட்டையை இரு கால்களுக்கு இடையே சொருகி கேரக்டர்களை பறக்கவிட்டு சிறார்களையும் அவர்கள் கூடவே சிறகடிக்க வைத்த பெருமை இந்த வெள்ளைக்கார ரவ்லிங் அம்மையாருக்கு உண்டு. அண்டமெங்கும் இருக்கும் பாலகர்களை மயக்கிய பெருமைக்கு உரிய எழுத்து அது. எப்போதுமே தாத்தா கதைகளை விட பாட்டி சொல்லும் கதைகளுக்கே மவுசு அதிகம். இந்தப் பாட்டியின் அதீத கனவுகள் எல்லா வயதினரையும் கவர்ந்திழுத்த எழுத்தானது இவ்வுலகிற்கு பாக்கியமே.

கடைசி பத்து பக்கங்கள் கிழிந்த ஒரு புஸ்தகத்தை படிக்க மாட்டேன் என்று மறுத்த நண்பரிடம் அவரது உறவினர் "அறுநூறு பக்க புஸ்தகத்தில் கடைசி பத்து பக்கங்கள் இல்லை என்று 590 பக்க சுவாரஸ்யத்தை ஏன் வேண்டாம் என்று இழக்கிறீர்கள்" என்று கேட்டாராம். அதுபோல ஆண்/பெண் பேதம் பிரித்துப் பார்க்காமல் பெண்ணினத்தை சிறப்பிக்கும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் எந்த எழுத்தும் பெண் எழுத்தே என்று வாசிப்போம்.

இந்தத் தொடர் பதிவிற்கு அழைத்த ராஜிக்கு நன்றி சொல்லிக் கீழ் கண்ட பதிவர்களை அழைக்கிறேன்.
பத்மநாபன்
கக்கு-மாணிக்கம்
அறிவன்
மோகன்ஜி
சுந்தர்ஜி
மாதங்கி மாலி 
இப்படிக்கு இளங்கோ

பின் குறிப்பு: மேற்கண்ட இரு வங்காளக் கதைகளும் படித்த கதைத் தொகுதி.
Three Sides of Life - Short stories by Bengali Women Writers.
Oxford University Press
Price: Rs. 350

பட உதவி: thehindu.com மற்றும் uyirmmai.com
-

Monday, February 28, 2011

ஒரு சாமானியனின் பெயர்க்குறிப்புகள்

my name is

ம மா மி மீ மோ மொ மௌ போன்ற மகாரத்திலோ, க கா கி கீ கூ கு கெ கே போன்ற ககாரத்திலோ, த தா தி தீ போன்ற தகாரத்திலோ பெயர் சூட்டினால் இவ்வையகம் போற்ற உங்கள் தவப்புதல்வன் சிறந்து விளங்குவான் என்று டிவிக்கு டிவி மூலைக்கு மூலை இப்போது கூவும் நேமாலஜி அவ்வளவு பிரபல்யம் அடையாத ஒரு வருஷத்தில் நான் பிறந்ததால் பெற்றோருக்கு இதுபோல விஞ்ஞானத்தனமாக யோசித்து பெயர் வைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை.  வைத்தபிறகும் சுயம்புவாக முன்னாடி எம் சேர்த்தால் மன்னனாகிவிடலாம் என்று நம்பர் கணக்கு பார்த்து அதையும் வைத்துக்கொள்ளவில்லை. வைத்த பெயர் வைத்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
 
என்னுடைய சித்தப்பா மாமாக்களுக்கு மற்றும் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூணு விட்ட சொந்தபந்தங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் திருப்பெயர்; ஒரே திருநாமம் வெங்கட்ராமன். சில சமயங்களில் வெங்கட்ராமன் இன்று சென்னை வருகை என்று செய்தித்தாளில் உரக்கப் படித்தால் கூட என் பாட்டி என் சித்தப்பாவை ஜனாதிபதி ஸ்தானத்திற்கு உயர்த்தி "எப்படா இஞ்ச வரான்?" என்று கேட்காத தன் காதை தீட்டிக் கொண்டு கேட்பாள். சித்தப்பாவிற்கு ஏன் வெங்கட்ராமன் என்றால் தாத்தாவின் அப்பா வெங்கட்ராமன். பிற்கால சந்ததியினர் பாட்டன் முப்பாட்டன் பெயர்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயரை பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தால் தீர்ந்தது. பிள்ளைகள் அந்தப் பெயரைக் காப்பாற்றுமா என்று தெரியாது ஆனால் எப்படியும் மறக்கமாட்டார்கள். இப்போது உங்கள் பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி. பெயரைக் காப்பாற்றுதல் என்றால் என்ன?

இந்த அப்பா தாத்தா பெயர்களை வைக்கும் பாணியில் உச்சம் தொட்ட ஒரு சங்கதி. முன்பு என்னுடன் வேலை பார்த்த நண்பர் பெயர் பழனியப்பன். பழனியப்பனில் பிரச்சனையில்லை. அவர் அப்பாவின் பெயரும் அதுதான். அதையும் சரியென்று பொறுத்துக்கொள்ளலாம். அவருக்கு பிறந்த, அதாவது அப்பா பழனிக்கு பிறந்த பிள்ளை பழனியின் பிள்ளையின் பெயரும் பழனியப்பன். பயந்து போய் பீதியில் நான் கேட்ட கேள்வி இதுதான். "உங்க பையனுக்கு ஒரு பொண்ணு ப்ரியமுள்ள பழனிக்குன்னு லவ் லெட்டர் எழுதி கவர் மேல பழனியப்பன்னு உங்க வீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் பண்ணி.. பையனை தவிர்த்து மிச்சம் இருக்குற உங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் பிரிச்சி படிச்சா அந்தப் பொண்ணோட கதி என்னவாகும்.". பதிலுக்கு கேவிக்கேவி சிரித்தார். பதில் இயம்பவில்லை. இது இப்போது ஏற்பட்டிருக்கும் ஈமெயில் புரட்சிக்கு முன்னர் நான் கேட்ட கேள்வி. ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் இருந்தார்களாம். இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தில் ஒரு அட்ரஸில் ஒரு கதவிற்குள் இல்லை என்றும் காலங்கள் வேறு வேறு என்றும் அறிகிறோம்.

உன் பேரைப் பற்றி சொல்லுப்பான்னா ஏன் ஊர் பேரைப் பற்றி சொல்கிறாய் என்று நீங்கள் புருவம் நெரிப்பது புரிகிறது. முதல் பாராவில் வெங்கடசுப்பிரமணியன் என்ற என்னுடைய முழ நீளப் பெயரின் அரை முழத்தை அளந்தேன். கொள்ளுத்தாத்தாவின் பெயரை என் பெயருக்கு பாதியாக்கிய என் தாத்தா தன்னை விட்டுக்கொடுப்பாரா? தாத்தாவின் பெயர் சுப்ரமணியன். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. காலிரண்டும் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியில் நொடித்துவிட கம்போடு நாற்காலியில் உட்கார்ந்தபடியே பல காரியங்கள் சாதித்தவர். தன் தகப்பனார் பெயரில் பாதியும் தன் பெயரில் மீதியையும் சேர்த்து என்னை வெங்கடசுப்ரமணியனாக்கினார். வெங்கடராமனும் சுப்பிரமணியனும் வாழ்க்கையில் செய்ததை, சாதித்ததை நான் ...தித்தேனா ...திப்பேனா என்பது தெரியவில்லை. 


இப்படி ஒரு கூட்ஸ் ரயில் நீளப் பெயரை இட்டு என் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட்டால் "யன்.." என்று முடிக்கும் போது நிச்சயம் தெருமுனையை கடந்திருப்பேன். ஆகையால் உலகமக்களின் பயனைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் ஆர்.வி.எஸ்.எம் ஆனேன். பஞ்சம் பிழைக்க துரித கதியில் இயங்கும் சென்னைக்கு வந்த பிறகு அந்த நான்கெழுத்தும் இங்குள்ளோருக்கு பெரியதாகப்பட்டதால் அன்பு, அழகு, அறிவு மற்றும் கடமை போன்ற மூன்றெழுத்து வரிசையில் சுருக்கி ஆர்.வி.எஸ் ஆக்கப்பட்டேன். ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்? (இந்த தேவையில்லாத இடைச்செருகலை மக்கள் மன்னிக்க மற்றும் மறக்க வேண்டுகிறேன்!!)

ஆங்கிலத்தில் அழைப்பது பிடிக்காமல் என் தெருவில் வசித்த தமிழ் தீவிரவாதிகளின் அழைப்பிற்கு 'வெங்கிட்டு'வானேன். அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். செல்லத்தில் வெல்லக்கட்டியாக என்னை சின்னதம்பி என்று என் குடும்பம் என்னை அழைத்த சில வைபவ தினங்களும் என் நாட்காட்டியில் உண்டு. இதே சின்னதம்பி வக்கீல் பாலு சார் வீட்டு ராதாக்காவிர்க்கு "ஸ்மால் ப்ரதர்." கோபத்தில் திட்டும் போது "சுப்பிரமணியா கொப்பரவாயா" என்றும் பொளந்து கட்டிக்கொண்டு புதுப் பெயர்கள் என்னை வந்து அடைந்ததுண்டு. அப்போது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் ராமு சார் என்னை "வாடா ஹார்ட் அட்டாக்கு" என்று அட்டாக்கிங்காக கூப்பிடுவார். நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!

எனை அழைத்த எல்.கேவிற்கு ஒரு சல்யூட் அடித்து இந்த ரிலே ரேஸ் விளையாட நான் அழைக்கும் அன்பர்கள் பட்டியல் கீழே..

தக்குடு
மோகன்ஜி
மாதவன்
இளங்கோ
பாலாஜி சரவணா
வெங்கட்நாகராஜ் 
ராஜி
அப்பாதுரை

கூப்பிட்ட எல்லோரும் எழுதுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என் பெயரை சேர்ப்பதற்கு தோதாக படமளித்த புண்ணியவான் http://www.stanford.edu/

-


ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails