Monday, February 28, 2011

ஒரு சாமானியனின் பெயர்க்குறிப்புகள்

my name is

ம மா மி மீ மோ மொ மௌ போன்ற மகாரத்திலோ, க கா கி கீ கூ கு கெ கே போன்ற ககாரத்திலோ, த தா தி தீ போன்ற தகாரத்திலோ பெயர் சூட்டினால் இவ்வையகம் போற்ற உங்கள் தவப்புதல்வன் சிறந்து விளங்குவான் என்று டிவிக்கு டிவி மூலைக்கு மூலை இப்போது கூவும் நேமாலஜி அவ்வளவு பிரபல்யம் அடையாத ஒரு வருஷத்தில் நான் பிறந்ததால் பெற்றோருக்கு இதுபோல விஞ்ஞானத்தனமாக யோசித்து பெயர் வைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை.  வைத்தபிறகும் சுயம்புவாக முன்னாடி எம் சேர்த்தால் மன்னனாகிவிடலாம் என்று நம்பர் கணக்கு பார்த்து அதையும் வைத்துக்கொள்ளவில்லை. வைத்த பெயர் வைத்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
 
என்னுடைய சித்தப்பா மாமாக்களுக்கு மற்றும் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூணு விட்ட சொந்தபந்தங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் திருப்பெயர்; ஒரே திருநாமம் வெங்கட்ராமன். சில சமயங்களில் வெங்கட்ராமன் இன்று சென்னை வருகை என்று செய்தித்தாளில் உரக்கப் படித்தால் கூட என் பாட்டி என் சித்தப்பாவை ஜனாதிபதி ஸ்தானத்திற்கு உயர்த்தி "எப்படா இஞ்ச வரான்?" என்று கேட்காத தன் காதை தீட்டிக் கொண்டு கேட்பாள். சித்தப்பாவிற்கு ஏன் வெங்கட்ராமன் என்றால் தாத்தாவின் அப்பா வெங்கட்ராமன். பிற்கால சந்ததியினர் பாட்டன் முப்பாட்டன் பெயர்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயரை பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தால் தீர்ந்தது. பிள்ளைகள் அந்தப் பெயரைக் காப்பாற்றுமா என்று தெரியாது ஆனால் எப்படியும் மறக்கமாட்டார்கள். இப்போது உங்கள் பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி. பெயரைக் காப்பாற்றுதல் என்றால் என்ன?

இந்த அப்பா தாத்தா பெயர்களை வைக்கும் பாணியில் உச்சம் தொட்ட ஒரு சங்கதி. முன்பு என்னுடன் வேலை பார்த்த நண்பர் பெயர் பழனியப்பன். பழனியப்பனில் பிரச்சனையில்லை. அவர் அப்பாவின் பெயரும் அதுதான். அதையும் சரியென்று பொறுத்துக்கொள்ளலாம். அவருக்கு பிறந்த, அதாவது அப்பா பழனிக்கு பிறந்த பிள்ளை பழனியின் பிள்ளையின் பெயரும் பழனியப்பன். பயந்து போய் பீதியில் நான் கேட்ட கேள்வி இதுதான். "உங்க பையனுக்கு ஒரு பொண்ணு ப்ரியமுள்ள பழனிக்குன்னு லவ் லெட்டர் எழுதி கவர் மேல பழனியப்பன்னு உங்க வீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் பண்ணி.. பையனை தவிர்த்து மிச்சம் இருக்குற உங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் பிரிச்சி படிச்சா அந்தப் பொண்ணோட கதி என்னவாகும்.". பதிலுக்கு கேவிக்கேவி சிரித்தார். பதில் இயம்பவில்லை. இது இப்போது ஏற்பட்டிருக்கும் ஈமெயில் புரட்சிக்கு முன்னர் நான் கேட்ட கேள்வி. ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் இருந்தார்களாம். இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தில் ஒரு அட்ரஸில் ஒரு கதவிற்குள் இல்லை என்றும் காலங்கள் வேறு வேறு என்றும் அறிகிறோம்.

உன் பேரைப் பற்றி சொல்லுப்பான்னா ஏன் ஊர் பேரைப் பற்றி சொல்கிறாய் என்று நீங்கள் புருவம் நெரிப்பது புரிகிறது. முதல் பாராவில் வெங்கடசுப்பிரமணியன் என்ற என்னுடைய முழ நீளப் பெயரின் அரை முழத்தை அளந்தேன். கொள்ளுத்தாத்தாவின் பெயரை என் பெயருக்கு பாதியாக்கிய என் தாத்தா தன்னை விட்டுக்கொடுப்பாரா? தாத்தாவின் பெயர் சுப்ரமணியன். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. காலிரண்டும் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியில் நொடித்துவிட கம்போடு நாற்காலியில் உட்கார்ந்தபடியே பல காரியங்கள் சாதித்தவர். தன் தகப்பனார் பெயரில் பாதியும் தன் பெயரில் மீதியையும் சேர்த்து என்னை வெங்கடசுப்ரமணியனாக்கினார். வெங்கடராமனும் சுப்பிரமணியனும் வாழ்க்கையில் செய்ததை, சாதித்ததை நான் ...தித்தேனா ...திப்பேனா என்பது தெரியவில்லை. 


இப்படி ஒரு கூட்ஸ் ரயில் நீளப் பெயரை இட்டு என் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட்டால் "யன்.." என்று முடிக்கும் போது நிச்சயம் தெருமுனையை கடந்திருப்பேன். ஆகையால் உலகமக்களின் பயனைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் ஆர்.வி.எஸ்.எம் ஆனேன். பஞ்சம் பிழைக்க துரித கதியில் இயங்கும் சென்னைக்கு வந்த பிறகு அந்த நான்கெழுத்தும் இங்குள்ளோருக்கு பெரியதாகப்பட்டதால் அன்பு, அழகு, அறிவு மற்றும் கடமை போன்ற மூன்றெழுத்து வரிசையில் சுருக்கி ஆர்.வி.எஸ் ஆக்கப்பட்டேன். ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்? (இந்த தேவையில்லாத இடைச்செருகலை மக்கள் மன்னிக்க மற்றும் மறக்க வேண்டுகிறேன்!!)

ஆங்கிலத்தில் அழைப்பது பிடிக்காமல் என் தெருவில் வசித்த தமிழ் தீவிரவாதிகளின் அழைப்பிற்கு 'வெங்கிட்டு'வானேன். அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். செல்லத்தில் வெல்லக்கட்டியாக என்னை சின்னதம்பி என்று என் குடும்பம் என்னை அழைத்த சில வைபவ தினங்களும் என் நாட்காட்டியில் உண்டு. இதே சின்னதம்பி வக்கீல் பாலு சார் வீட்டு ராதாக்காவிர்க்கு "ஸ்மால் ப்ரதர்." கோபத்தில் திட்டும் போது "சுப்பிரமணியா கொப்பரவாயா" என்றும் பொளந்து கட்டிக்கொண்டு புதுப் பெயர்கள் என்னை வந்து அடைந்ததுண்டு. அப்போது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் ராமு சார் என்னை "வாடா ஹார்ட் அட்டாக்கு" என்று அட்டாக்கிங்காக கூப்பிடுவார். நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!

எனை அழைத்த எல்.கேவிற்கு ஒரு சல்யூட் அடித்து இந்த ரிலே ரேஸ் விளையாட நான் அழைக்கும் அன்பர்கள் பட்டியல் கீழே..

தக்குடு
மோகன்ஜி
மாதவன்
இளங்கோ
பாலாஜி சரவணா
வெங்கட்நாகராஜ் 
ராஜி
அப்பாதுரை

கூப்பிட்ட எல்லோரும் எழுதுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என் பெயரை சேர்ப்பதற்கு தோதாக படமளித்த புண்ணியவான் http://www.stanford.edu/

-


Sunday, February 27, 2011

சுஜாதா எழுதிய எழுதாத கதை

1
என் பெயர் முருகன். இதைவிட தமிழ்த்தனமாகப் பெயர் இருக்க முடியாது. நான் பங்களூரில் மூன்றாவது தலைமுறைத் தமிழன். என் தாத்தா கோலாரிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர். அல்சூர்ப் பகுதியில் கையகலத்துக்கு நிலம் வாங்கி ஒரு ஒட்டு வீட்டையும் கட்டிவிட்டார். என் தந்தை, ஒரே மகன், அதில் வாழ்ந்தார். வாழ்ந்ததைத் தவிர வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்ததாகத் தெரியவில்லை. வெஸ்ட் எண்டு ஓட்டலில் வேலையில் இருந்ததாகவும் வெள்ளைக்காரர்களுடன் பழகியதாகவும் கதை பண்ணுவார். இங்கிலீஷ் தப்புத் தப்பாகப் பேசுவார். என்னுடன் எட்டுச் சசோதர சசோதரிகளை ஒரு மால்தூசியன் அவசரத்தில் படைத்துவிட்டு அம்பத்தி ஐந்தாம் வயதில் காலமானார். எங்கள் சிறிய ஒட்டு வீட்டில் அவரைக் கிடத்துவதற்கே இடமின்றி நாங்கள் நிறைந்திருந்தோம். அவசரத்தில் அவரை எரித்துவிட்டு வீட்டுக்கு வந்து யார் இருப்பது என்று சண்டை போட்டோம்.

2
"கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்கங்க!" 
"இப்படியா ஸார்"
"இல்லை. கொஞ்சம் இடது பக்கமா, தட்ஸ் இட், அப்புறம் மார்ல அந்த சாரியை லேசா.. ஒ எஸ் போதும்! ப்யுட்டிஃபுல். கொஞ்சம் சிரிங்க! என் இடது கையைப் பாருங்க! ரிலாக்ஸ்! தட்ஸ் இட்!"
அப்பெர்ச்சர் எப் 8.
காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் என் வ்யுஃபைண்டரில் தீட்டப்பட்டாள். அவளை நிறையவே பார்க்க முடிந்தது.
க்ளிக்!
"தாங்க்ஸ்! நீங்க ட்ரெஸ் சேஞ்ச்  பண்ணிக்கிட்டு வாங்க"
"நீச்சல் உடை இருக்குதுங்க. நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு."
"போட்டுக்கிட்டு வாங்களேன்."
உள்ளே சென்றாள்.

வீட்டுக்குள் மாடி அறையில் நீச்சல் உடையில் பாய்ச்சல் காட்டுகிற மாதிரி போட்டோ எடுத்துக்கொள்ள இவர்கள் எல்லோருக்கும் ஆசை. நம் நாட்டுப் பெண்களுக்கு உடம்பு வாகு கிடையாது. இடுப்பு பெரிசாக இருக்கும். கால்கள் குட்டையாகவும் தொடைகள் ஒன்று சேர்ந்தும் இருக்கும். எனெக்கென்ன! காசு கொடுக்கிறார்கள்; எடுத்துடறேன்.

3
அந்த எண்ணம் என்னை மின்னல் மாதிரிதான் தாக்கிச்சு. இந்தப் பொண்ணு என்னைப் பார்க்கிறதில வெறும் பார்வை மட்டும் இல்லை. கொஞ்சம் ஆசைகூட இருக்கு. ஆசை மட்டும் இல்லை. கொஞ்சம் காதல்கூட கலந்திருக்குன்னு எனக்குத் தோணிப்போச்சு. இப்பவும் அவ என்னைக் கண் கொட்டாம நான் போட்ட சட்டையை எனக்கு சைஸ் சரியா இருக்கான்னு அழகு பார்த்துக் கிட்டுத்தான் இருக்கா. உனக்கும் எனக்கும் ஒரே சைஸுன்னு சொல்லிவிட்டு கலகலன்னு சிரிக்கிறா. நான் இந்தப் பொண்ணுக்கு மனசுக்குள்ள பிரியமுள்ள நிம்மின்னு ஆரம்பிச்சு கடிதம் எழுதிக்கிட்டிருக்கேன். அந்தக் காதல் கடிதத்தை நாள் பூரா எழுதினேன். குளிக்கறப்போ ரெண்டு வரி, நாஷ்தா பண்றப்ப ரெண்டு வரி. அப்புறம் கறிகா வாங்க மார்க்கெட்டுக்குப் போனப்ப, போஸ்ட் ஆபிஸ் போய் தபால் இருக்குதான்னு பார்த்தப்ப பாதிக் கடிதத்தை எழுதிட்டேன். மனப்பாடமாத்தான். சாயங்காலத்துகுள்ள இதைக் கடிதமாவே எழுதி நிம்மிகிட்ட கொடுத்துவிட்டு ஓடி வந்துரப் போறேன். அவ என்ன செய்வா? படிப்பா. படிச்சு அவளுக்கும் எங்கிட்ட இஷ்டம்னா பதில் எழுதுவா. இல்லை, அம்மாகிட்ட சொல்லிட்டு என்னை வேலையை விட்டுத் துரத்திருவாங்க. ரெண்டு விதத்திலும் சௌகரியம்தான். நிம்மிக்கு எம் பேர்ல இஷ்டம்னா அந்தப் பழக்கத்தை சுலபமா விட்டுருவேன். அவங்க கோவிச்சுகிட்டாங்கன்னா வேலையை விட்டுருவேன். எப்படி?

4
ராத்திரி சினிமாவுக்கு போறாங்க. இந்தச் செய்தி கூட என்னை வந்து எப்படித் தற்செயலா சேருது பாருங்க. நேத்துத்தான் பகவான் சொல்றான். இன்னிக்கு சினிமா போறேங்கறாங்க! என்ன ஒரு பொருத்தம் பாருங்க! எனக்குத் தீவிரமான நம்பிக்கை வந்துருச்சு. நம்ம கையில ஏதும் இல்லை. என்னவோ நடக்க வேண்டியது நடந்துகிட்டு இருக்கு!
"அவங்கெல்லாம் சினிமாக்குப் போறாங்க"ன்னு வத்சலா கொஞ்சம் அழுத்தமா சொல்லிச்சு, நான் திரும்பி பார்த்தேன். புதுசா நைலான் கட்டியிருந்தது. நெத்திப்  பொட்டு, பவுடர், பெரிசா மை எல்லாம் சோக்காத்தான் இருந்திச்சு. சன்னமா ரவிக்கை போட்டிருந்ததில உள்ளே கருப்பா பாடி போட்டுக்கிட்டு இருந்தது தெரிஞ்சுது.
ஒரு நிமிஷம் வேற பிளான் யோசிச்சேன். பகவான்கிட்ட சொல்ல வேண்டாம். இன்னிக்கி சொல்ல வேண்டாம்.

இதுவரைக்கும் என் கதையைப் பொறுமையாப் படிச்சுகிட்டு வந்தீங்களே, இந்த இடத்தில நிறுத்தி உங்ககிட்ட ஒன்னு கேக்க விரும்பறேன். இத்தனை சம்பவங்கள்ள ஏதாவது ஒரு திருப்பம் மட்டும் வேற மாதிரி ஆயிருந்ததுன்னா? இவங்களுக்கு ஏன் சினிமா டிக்கெட் கிடைக்கலை? கிடைச்சிருந்ததுன்னா..
பெட்ரூம்ல நுழைஞ்சேன். அம்மா எங்க கிடந்தாங்களோ அங்கதான் இன்னம் கிடக்கறாங்க. அவங்க பக்கத்தில சைடால ரத்தம் மெல்ல குழம்பி ஒரு சின்ன குளமா சேர்ந்துகிட்டு இருக்குது. கையால தடுத்திருக்காங்க போல. கைல பெரிய வெட்டு அப்புறம் கழுத்தில இருந்து ஆரம்பிச்சு முகத்தில எல்லாம் சுமார் பதினாறு பதினேழு வெட்டு, மூஞ்சியை அடையாளமே கண்டுக்க முடியாத படி, அப்புறம் படிக்கைக்கடியிலிருந்து நிம்மியுடைய காலுங்க தெரியுது "ஐயோ நிம்மி!  நிம்மி"ன்னு குனியறேன்.

"பாவிங்களா, கொன்னுட்டீங்களா!"
"வேற என்ன செய்ய! வாடா கிளம்பலாம். பேசாம சினிமாப் பார்த்துக்கிட்டு இருக்கிறவங்க எதுக்காகத் திரும்பி வரணும்? எதுக்காகத் திரும்பி வரணும்?" மயிர் எல்லாம் ரத்தக் கொத்தாகியிருந்தன. நடு மண்டையிலே அடிச்சுருக்கான். அவளை இழுத்துக் கட்டிலுக்கடியில தள்ளியிருந்தது ரத்த ரோடு போட்டிருந்தது.
*****************************
vaathiyaar

பின்குறிப்பு: இன்று வாத்தியாரின் நினைவு நாள். பெரும் எழுத்தாளர்களோ இலக்கிய விற்பன்னர்களோ தமிழறிஞர்களோ சொல்லின் செல்வர்களோ எழுதி பாராட்டுவது போல என்னால் முடியாது. எனக்கு அவ்வளவு தமிழ்த் திராணியில்லை. அஞ்சாறு படத்தைக் கோர்த்து கொலாஜ் பண்றா மாதிரி இது ஒரு கொலாஜ் கதை. வாத்தியாரின் இரண்டு மூன்று நாவலில் இருந்து இப்படி அவரின் வார்த்தைகளை தோரணமாக தொடுத்து ஒரு கதை தயாரித்தேன். கொஞ்சம் டயலாக். கொஞ்சம் வர்ணனை. கொஞ்சம் மர்மம். வார்த்தை மாறாமல் வரி பிசகாமல் ஈயடிச்சான் காப்பி செய்தது இது. இதன் மூலம் என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். வாத்தியாருக்கு ஜே!

சென்ற வருடத்திய அஞ்சலி இங்கே.

பட குறிப்பு: இந்த மாதிரி கதைக் கலப்பு பண்ணியதற்கு "கொன்டே போடுவேன்"ன்னு விரல் நீட்ரா மாதிரி இருக்குல்ல...

பட உதவி: ஹிந்து.காம் 

-


Saturday, February 26, 2011

மன்னார்குடி டேஸ் - ஆடிய கதா

முன் குறிப்பு: இது கிரிக்கெட் ஆட்டம் பற்றிய பதிவு அல்ல. உலகக்கோப்பை நடந்துவரும் இவ்வேளையில் மன்னையில் போட்டி முடிந்ததும் அல்லது அதற்கு முன்னரும் தெருவில் குளத்தங்கரை படித்துறை வாயிலில் உள்ள மதில் சுவற்றில் (குட்டிச் சுவருன்னு சொல்ல வேண்டாமேன்னுதான்) உட்கார்ந்து வாய்ப்பந்தல் போடும் கி.கதைகளும் மற்றும் மைதானத்தை டான்ஸ் மேடையாக்கி கதகளி, குச்சிபுடி விளையாண்ட மக்களைப் பற்றியும் எழுதலாம் என்று விருப்பம். முகப்புத்தகத்தில் வந்து தெருவில் என்னுடனாடிய நண்பன் கோப்லி உரிமையுடன் எழுதக் கேட்டவுடன் பதியவேண்டும் என்று நினைத்தேன். பகிர்கிறேன்.

*********
ராப்பூரா கொட்டக் கொட்ட கண்முழித்து கண் எரிய டி.வியில் கிரிக்கெட் பார்த்தாலும் மறுநாள் பல் கூட தேய்க்காமல் காலை ஓசி ஹிந்துவில் ஸ்கோர்கார்டுடன் ரிப்போர்ட் வாசிக்கும் இன்பமே தனி. இதுபோல அன்றைக்கு  விளையாடிய மேட்ச்களுக்கு இரவில் தெருவிளக்கில் நனையும் மதிலில் உட்கார்ந்து ஹர்ஷா போகலே, ரவி சாஸ்திரி, கவாஸ்கர் பாணியில் குழுமி யார் செய்த குற்றத்தால் தோற்றோம், எவன் சதி செய்தான், அழுகுணி ஆட்டம் ஆடியது யார் போன்றவற்றை அலசி ஆராய்வோம். கெலித்தால் சிரிப்புக் குரல்கள் நான்கு கரைகளிலும் எதிரொலித்து வெற்றியை பறை சாற்றும். தொடர்போட்டிக் கால ராவேளைகளில் எங்களது காரசாரமான பேச்சுவார்த்தையில் தூங்கும் குளம் முழித்துக் கொண்டு படித்துறையில் 'ப்ளக்..ப்ளக்' என்று சிறிது சலம்பும்.

இருபது ஓவருக்குள் அணியில் பதினொன்றாம் நம்பரில் இருக்கும் பிரகிருதிக்கு கூட ஒரு பந்திற்காவது மட்டை பிடிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை இருக்கும். மட்டையில் பட்ட ஒரே ஒரு பந்து பத்து தப்படி உருண்டோடி தடவித் தடவி தத்தக்கபித்தக்காவென்று ஓடி ஒரு ரன் சேர்த்து விட்டால் ராஜகோபாலஸ்வாமியின் வானளாவிய கோபுரத்தின் கலசத்தை ஏறி பிடித்தது போன்ற ஒரு உணர்வோடு ஜிவ்வென்று அன்று முழுதும் ஆகாசத்தில் பறப்பான். ரெண்டு நாள் தெருவில் எப்போ எங்கே பார்த்தாலும் "அந்த ஃபிலிக் பண்ணிட்டு ஒரு ரன் ஓடினேன் பாரு.." என்று என்னத்த கண்ணையா மாதிரி அதே டயலாக். கேட்கும் காதுக்கு வாய் இருந்தால் அழும்.

"என்னதான் இருந்தாலும் நீ அந்த சிங்கிள் எடுக்க ஓடியிருக்கக் கூடாது. மேச்சே டர்ன் ஆயிடுச்சு.." என்று தான் முதலில் விவாதப் பேச்சு ஆரம்பிக்கும். அணியின் அனைத்து வீரர்களும் வேஷ்டியுடனோ அல்லது கைலியுடனோ மதில் கட்டைக்கு டின்னருக்கு பின்னர் சீரிய இடைவெளியில் வந்து சேருவர். பருவகாலத்திர்க்கு ஏற்ப மேல்சட்டை போட்டுக்கொள்வது தீர்மானிக்கப்படும். எம்மேனியும் உருகும் சுட்டெரிக்கும் கோடையில் திறந்தமேனி தான். தெக்ஷினாமூர்த்திக்கு ஆலமரம் போல மதில் கட்டை பின்னால் எங்களுக்கு மாரியாத்தா அருள் குடியிருக்கும் தலைவிரித்து நிற்கும் ஒரு மிகப்பெரிய வேப்ப மரம். குளம், மதில், மரம். அது ஒரு வரம். பூலோக சொர்க்கம். ரன் ஓடிய பெருமகனாரும் அவரால் அவுட் ஆக்கி பெவிலியனுக்கு ஒட்டப்பட்டவருக்கும் நடக்கும் சூடான சுவையான விவாதம் இரவு வெகுநேரம் வரை தொடரும். கடைசியாக எங்களை தாங்கிய மதில்கட்டை "வீட்டுக்கு போங்கடா விளக்கெண்ணைகளா..." என்று திட்டுவதற்கு முன்னர் பின்னால் தட்டிக்கொண்டு நடையை கட்டுவோம்.

cricket

எப்போதுமே ஸ்ரீக்கு ஓட்டம் தகராறு. நிறைய போட்டிகளில் எதிராளியுடன் கபடி விளையாடுகிறோமோ அல்லது கிரிக்கெட்டா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படும். ஏறு கோடு தொட்டு பாடித் திருப்பும் கபடி வீரர் மாதிரி பாதி பிட்ச் வரை ஓடிவந்துவிட்டு எதிர்முனையில் யாரோ அடிக்க துரத்துவது போல கிளம்பிய இடத்திற்கே பின்னங்கால் பிடரியில் அடிக்க திரும்பி ஓடிச் சென்று தன் விக்கெட்டில் அடைக்கலமாகி விடுவான். திருப்பிவிடப்பட்ட பிரகஸ்பதியை, விலுக்கென்று தன் திசையில் ஓடி மறுமுனையில் விழுந்து புரண்டு ரன் அவுட் ஆகும் கூட்டாளி ஆட்டக்காரரை, ப்ருஷ்டத்திர்க்கு பேட் முட்டுக்கொடுத்து ஹாயாக நின்றுகொண்டு கண்ணாரக் கண்டு ரசிப்பான்.

இப்படி அவுட் ஆக்கிய தலைவரை ஈவ்னிங் குளத்தாங்கரை மீட்டிங்கில் கிழி கிழி என்று கிழித்துவிடுவார்கள். ரன் எடுக்காமல் கட்டைப் போட்டு ரொம்பவும் ரம்பம் போடும் ஆட்டக்காரர்களை ராமன் துணையுடன் வாலியை வலிய சண்டைக்குக் கூப்பிட்ட சுக்ரீவன் போல "எஸ்ஸ்ஸ்ஸ்.." என்று துரிதகதியில் கூப்பிட்டு அவரை கிரீஸை விட்டு வெளியே நடுவழிக்கு அழைத்து வந்து "நோ....." என்று கண்ணெதிரே தற்கொலை செய்துகொள்ளும் காதலியை நிறுத்தச் சொல்வது போல பீறிட்டு அலறி அவுட் ஆக்கும் மிகப்பெரிய வித்தை நிறைய ஆட்டங்களில் வெற்றிக்கு வித்திடும். அடுத்த ஆட்டத்தில் கட்டாயம் இந்த வாலி சுக்ரீவன்கள் இடம் மாறிக்கொள்வார்கள். பழிவாங்கும் படலங்கள் தொடரும்.

"இண்டியா கேட்" போல இருகால்களை விரித்து குனிந்து பந்தை அள்ளமுடியாமல் பவுண்டரிக்கு நழுவ விட்டவர்களை பிடித்து ஒரு ராவு ராவிவிடுவார்கள். "கவுட்டிக்கு கீழே குனிஞ்சு தத்தி தத்தி போகும் பால் எப்படி ஃபோர் போறதுன்னு பாக்கராண்டா..சரியான தத்திடா.." என்று வெறுப்பேற்றும் போது அணியில் புதிதாய்த் சேர்ந்த சில இளம் வீரர்களுக்கு கண்களில் ஜலம் முட்டும். காட்ச் நழுவ விடும் போட்டிச் சருக்கர்களைப் பார்த்து "எங்கயாவது கோயில்ல உண்ட கட்டி வாங்கப் போயேன்" என்றும் "பந்து என்ன ரொம்ப சுடுதா.. கையில விழுந்தாலே அப்படியே உதறிடுற.." போன்ற சிந்தனையைத் தூண்டும் திட்டுக்கள் ஏராளம். இரண்டு மூன்று தென்னைமரம் உசரத்திர்க்கு வானளாவிய தூரம் மேலெழும்பும் பந்துக்கு நாலு பேர் கூடி நின்று இருகையையும் பிச்சை எடுக்கும் போஸில் வைத்துக்கொண்டு நின்று ஒருத்தரும் பிடிக்காமல் பந்தை நடுத்தரையில் தாரைவார்த்து விட்ட கேட்சுகள் கணக்கிலடங்கா.

இவ்வகை கேட்சுகள் பிடிப்பது எப்படி என்று அன்றைக்கு குளத்தங்கரை மரத்தடியில்  நிச்சயம் கோச்சிங் உண்டு. "லீவ் இட் எவனாவது சொன்னீங்கன்னா... இன்னொருத்தன் நவுந்துடுவான்....என்னதான் கருமம் ஆடரீங்களோ.." என்று கைலியும் மேல்துண்டுமாய் எங்கள் கோச் அண்ணன் மொக்கு (எ) மோகன் சொல்லும் போது துக்கம் தொண்டையை அடைத்து எல்லோரும் இழவு வீட்டில் நிற்பது போன்று முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு நாணிக்கோணி நிற்பர். "வாயில என்ன கொளக்கட்டையா?" என்று கேட்டு யாராவது விளக்கம் சொல்லிவிட்டார்கள் என்றால் போச்சு. அவ்வளவுதான். "உக்ஹும்..இங்க நல்லா வக்கனையா பேசு.. கிரவுண்டுல கேச்சு பிடிக்காம அண்ணாந்து வானத்துல போற காக்காவ எண்ணிக்கிட்டு வேடிக்கை பாரு..." என்ற ரசனையான திட்டு காதில் வந்து ஈட்டிபோல பாயும்.

எந்த ஒரு போட்டிக்கு முன்பும் குளத்தங்கரையில் கேப்டன் தலைமையில் மந்திராலோசனை நடக்கும். (யாரும் நடப்பு அரசியல் காட்சிகளை பிடிவாதமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். இது கிரிக்கெட் கேப்டன் தான்.) சிலசமயங்களில் சதியாலோசனை பலசமயங்களில் மதியாலோசனை. பேப்பர் பேனா கொண்டு மைதானம் வரைந்து எவரெவர் எங்கு எப்படி நிற்க வேண்டும், எப்படி பிடிக்கவேண்டும், எப்படி பந்து வீச வேண்டும், எப்படி ஓட வேண்டும் என்று பல வியூகங்கள் அமைத்துவிட்டு மறுநாள் போட்டிக்கு போனால் வியவகரித்த ஒன்றில் கூட முதல் நாள் பேசியதுபோல விளையாட மாட்டோம். ஆஃப் சைடில் கும்பலாக தோளோடு தோள் இடிக்கும் படி எல்லோரையும் வரிசையாக படைபோல நிறுத்தி பந்து வீசச் சொன்னால் அங்குலம் தப்பாமல் துல்லியமாக கால்புறத்தில் பந்தை வீசி ஆறும் நான்குமாக கர்ணபரம்பரையில் தோன்றியது போல வாரி வழங்குவர். "சும்மா போய் விளையாண்டாலே ஜெயிப்போம். ...மொதெல்ல இந்த வெட்டி மீட்டிங் போடறதை நிறுத்தனும்" என்று ஏகமனதாக முடிவெடுத்தவுடன் சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் எடுத்தோம் என்று நினைவு.

"மொத்தம் மூணு பந்து தெரிஞ்சுது.. எல்லா தடவையும் நடு பந்தைப் பார்த்து நச்சுன்னு பேட்டை சுத்தினா அதெல்லாம் தன்னால சிக்சர் போவுது....". தண்ணி அடித்துவிட்டு விளையாடி சிக்செர் சிக்செராக அடித்து வெளுத்து வாங்கிய எங்கெளுக்கெல்லாம் சூப்பர் சீனியர் எங்கள் கோச்சின் நண்பர் கமலக்கண்ணன் அண்ணாவிடம் மேச் முடிந்து பேட்டிகாண்கையில் அவர் போதையாக சொன்னது இது. இதுவல்லாமல் எங்கள் பள்ளி கிரிக்கெட் டீம் கோச் திரு.ராமு சார் ஒரு சிலரை புதுவிதமாக ட்ரீட் பண்ணுவார். வடுவூர் சுரேஷ் என்னும் ஒரு அன்பருக்கு போட்டி துவங்கும் முன் மைதானத்தின் மூலையில் இருக்கும் மாமரத்தடிக்கு கொண்டு சென்று பிடரியில் நாலு தட்டி தட்டி பின்னர் தான் விளையாடுவதற்கு உள்ளே அனுப்புவார். காரணம் கேட்டால் அப்போதுதான் நன்றாக பவுலிங் போடுவான் என்பார். அது அப்படியே நூறு சதம் பலிக்கும். சாருக்கு மரியாதையான ஒரு தனிப் பதிவு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில். 

பின்குறிப்பு: ஒன் டே மற்றும் ட்வென்டி ட்வென்டி மாதிரி எழுதலாம் என்று நினைத்தால் டெஸ்ட் மேச் அளவிற்கு இந்தப் பதிவு வளர்ந்துவிட்டது. நடந்த சம்பவங்கள் இதுபோல இன்னும் நாலு பதிவுகள் காணும் என்றாலும்... இப்போது இதை ஸ்டம்ப்பை பிடுங்கி நிறைவு செய்வோம். இந்த உலகக் கோப்பையில் "ஜெயம் நமக்குதான்", "மங்களம் உண்டாகட்டும்" போன்ற வெற்றி வாசகங்களை கொண்டு இந்தியாவை ஊக்கப்படுத்தினால் யார் அந்த ஜெயமும் மங்களமும் என்று கேட்கிறார்கள். நாடு நன்றாக இருக்கட்டும். நன்றி.

படக் குறிப்பு: நிச்சயமா நாங்கள் விளையாண்ட மைதானங்கள் இவ்வளவு செழுமையாக பசுமையாக இல்லை. படம் நன்றாக இருந்ததால் இங்கே இடம் பெற்றது. http://www.guardian.co.uk/

(ச்சே.. ஒரு குறிப்பற்ற பதிவுல எவ்ளோ குறிப்பு.. குறி பார்த்து சுடனும் இவனை..;))) )

-

Thursday, February 24, 2011

(பு)கார் படலம்

car driver


என் ஜாதகத்திற்கு நடப்பு தசையில் புது வாகன யோகம் உண்டு என்று ஜோதிட சிம்மங்கள் கணித்து எல்லா பெயர்ச்சி புஸ்தகங்களிலும் போட்டிருப்பதாக வீட்டில் தகவல் சொன்னார்கள். ஒன்பது கட்டங்களும் ஒரு சேர ஒத்துழைப்பதால் வாங்கிவிடலாம் என்று தீர்மானித்து வண்டி வாங்கும் படலத்தில் இறங்கினேன். "மூணு வருஷத்துக்கு மேல ஒரு வண்டியை வச்சுக்ககூடாது சார்! தொல்லை கொடுக்கும். சீக்கிரம் மாத்திடுங்க." என்று தபோமுனிவர்கள் கைதூக்கி "தீர்க்காயுஷ்மான் பவ:" ஆசிர்வாதம் செய்வது போல காரறிவாலர்களின் அறிவுரை மழையில் நனைந்தேன். இப்போது நமக்கேற்ற நல்ல மாடல் சந்தையில் விற்பனையில் இருக்கிறதா என்ற விசாரணையின் போது If you could have waited for some more time, you would have got a better model என்று ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு நெடிதுயர்ந்த கட்டிட வாசலில் தேநீர் பருகும்போது என் ஒழுக்கசீல நண்பன் ஒருவன் கூறிய முதுமொழி இளமொழி ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்து ஆட்டம் போட்டது. அவனது இந்த திருவாசகம் வெளியான அதே நேரத்தில் என் கண்ணுக்கு முன்னால் அங்கே வேலை பார்க்கும் நாலைந்து அழகிய பெண்கள் அந்தச் சாலையில் வளைய வந்துகொண்டிருந்தார்கள். விஷமக்கார பயல்கள். விஷமக்கார கமெண்ட்டுகள். கெட்ட சகவாசம்.


பதிவு திசை தப்பி போகிறது. 'யு' டர்ன் அடித்து திரும்புவோம். நம் குடும்பம் மட்டும் செல்லும் ஐந்து இருக்கை வாகனமா அல்லது அம்மம்மா, அப்பப்பா, அண்ணன்னா, ங்கொக்காமக்கா  என்று சுற்றம் சூழ எல்லோரையும் தூக்கி உள்ளே போட்டுகொண்டு செல்லும் வசதி மற்றும் கொள்ளளவு அதிகமாக இருக்கும் வண்டியா என்று யோசித்தோம். இந்த கலந்தாலோசனையின் போது "ரெண்டு நாள் மழைக்கு சென்னையின் சப்வே குளத்தில் சைலன்சர் நனையாமல் உயரத்தில் ஒட்டி இருக்கும் வண்டியே மிகச் சிறந்தது" என்று நாட்டாமை தீர்ப்பாக சொன்னேன். நமக்கு ட்ரைவன் புத்தி. குளத்தில் ஓட்டுவதற்கு போட் வாங்க வேண்டும் கார் வாங்குவது உசிதம் அல்ல ஆகையால் இது ஒரு காரணியே அல்ல என்று நறுக்கு தெறித்தாற்போல பேசி முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு முக்கிய அங்கத்தினர். யார் அதுவா? வேறு யாராக இருக்க முடியும்... என் வீட்டு உயரதிகாரி. தலைமை செயல் அதிகாரி. எங்களை மேய்க்கும் டைரக்டர். என் மனைவி. மனைவியே மணாளனின் பாக்கியம்!!

புது கார் வாங்குவது என்றால் இப்போது புழக்கத்தில் உள்ளதை விட பெரியதாக இருக்கவேண்டும் என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சிந்தனை. அப்பாவிடம் கோபித்துக்கொண்ட முருகப்பெருமான் பெரியது என்ன? என்று சுந்தராம்பாளிடம் கேட்டுப் பெற்ற பதிலைப் போல... பெரிய கார் என்பது சுமோ, ஸ்கார்பியோ, ஜைலோ(Xylo), இன்னோவா போன்ற எட்டு பேர் கொண்ட பெரியகுடும்பங்கள் பயணிக்கும் வண்டி. இப்போது போலவே சின்னதா செல்லமா ரொமான்சா இருக்கும் கார் எல்லாம் குட்டிக் கார் (தற்போது என்னிடத்தில் அவதிப்படும் Wagon-R-ஐ நான் Wagon Full of Romance என்று பீத்திக்கொண்டதின் விளைவாக) என்று கார்களை பகுத்து ஆராய்ந்து தரம் ரகம் பிரித்து எடுத்துச் சொல்லப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் பர்ஸுக்கு அதிகம் வேட்டு வைக்கும் கார் பெரிய்ய்யய்ய்ய்ய கார்! மற்றதெல்லாம் சோட்டா கார்.

ஸ்கார்பியோ வாங்கினால் வெள்ளை அண்ட் வெள்ளை போட்டு ஆலமரம் இல்லாமல் தெருவுக்கு தெரு கட்டப் பஞ்சாயத்து நடத்தும் வார்டு கவுன்சிலர்கள் போல் இருக்கும் என்று வீட்டு கவுன்சிலர்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டார்கள். சுமோவிற்கு ஏற்கனவே FKV (Family Killing Vehicle) என்ற ஒரு கொலைகாரப் பட்டம் வாகன உலகத்தில் உண்டு. டாடா குழுமம் என்னதான் பிரேக்கிங் தொழில்நுட்பத்தை சீரமைத்தாலும் சீந்துவாரில்லை. இன்னோவாவிற்கு நம்மிடம் அந்தளவுக்கு ஹைவேஜு இல்லை. இல்லையென்றால் சொத்தை எழுதித் தந்தால் ஒரு அமர்க்களமான சீமையில் தயாரான ஒரு பெரிய வண்டி தருகிறேன் என்று கேட்கிறார்கள். அதில் ஒரு குடும்பம் குடியிருக்க முடியுமா என்றால் முறைக்கிறார்கள். இதில் இன்னொரு தேசியப் பிரச்சனை என்னவென்றால் ஒரு லிட்டர் பெட்ரோலோ டீசலோ ஒரு தெருவிற்கு மட்டும் தான் காணும். இம்மாம் பெரிய வண்டியில் இப்படி எரிபொருள் நிரப்பி சென்னையின் இருவேறு துருவங்களில் இருக்கும் என் ஆபீசுக்கும் வீட்டிற்கும் போய்விட்டு வருவதற்கு டேபிளுக்கு கீழ் கைநீட்டி காசு வாங்கும் "கௌரவமான" உத்தியோகமும் நான் பார்க்கவில்லை.

சென்னையின் உலகத்தரம் வாய்ந்த ரோடுகளில் என் போன்ற தினக் கூலிகள் இளையராஜா கச்சேரி வைத்து ஒரு கல்யாணம் முடிக்கும் பட்ஜெட்டில் கார் வாங்கி விடுவது பிரபுத்துவம் மிக்கதாக தெரிகிறது. இரண்டு மி.மீ இடைவெளியில் கரணம் தப்பினால் மரணம் போன்று ஆட்டோ ஒருபுறம் மாநகரப் பேருந்து மறுபுறம் அணைத்து கொண்டு ஆசை முத்தம் கொடுக்க சீறிப் பாய்ந்து வருகையில் கார் வாங்கிய லட்சங்கள் கண்முன்னே வந்து கைகொட்டி சிரிக்கும். மேலும் மக்களுக்கு எப்போதுமே பெரிய வீட்டை விட சின்ன வீடு அதிகம் கிக் அளிப்பதாகபட்டது எனக்கு. அதுபோல பெரியதை விட அதிக போதை தரும் சின்னது ஸ்லிம் பியுட்டி வாங்குவது என்று தேர்வாகியது.

இவ்வளவு அறுத்த/வறுத்த பின்னர் என்ன வண்டி என்று சொல்வதுதான் இந்தப் பதிவிற்கு முடிவுரையாக அமையும். மாருதி காரர்கள் பெயருக்காகவே ரொம்ப பிடிக்கும். யசோ தைரியத்திற்கு துணை வரும் அனுமனின் பெயர் தாங்கிய வாகனம். இந்திய சர்வதேசத்தர சாலைகளுக்கு ஏற்றார் போல் வண்டியின் கீழ் உள்ள பாகங்களை தயாரிக்கிறார்கள். ஒரு பள்ளத்தில் விழுந்து அடுத்த பள்ளத்தில் எழுந்தாலும் வண்டி உருக்குலைவதில்லை. ஒரு லிட்டருக்கு சில கிலோ மீட்டர்கள் ஓடி மீதியை நமக்கு சில்லரையாக தருகிறது. அதிக மைலேஜ். யானை வாங்கி அங்குசம் வாங்கமுடியாமல் தவிக்காமல் உதிரிகள் சொற்ப விலையில் கிடைக்கிறது. இவ்ளோ அளந்தியே என்னப்பா மாடல் என்று கூவுவது என் காதில் விழுகிறது. போன வாரத்தில் ஒரு மங்கள நாளில் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து Swift-Dzire-ZDI மாடல் காருக்காக கால் கடுக்க கியூவில் நின்றுகொண்டிருக்கிறேன்.

பின் குறிப்பு: (பு)கார்ப் படலம் என்பது புதிய கார்ப் படலம் என்பதை பொதுஜனங்கள் அறியுமாறு வேண்டிக்கொள்கிறேன். புக் பண்ணியதற்கு இப்படி என்றால் வாங்கியபின் என்ன செய்வானோ என்று கவலைப்படாதீர்கள். அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். யாராவது இதை மாருதி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எடுத்துக்கொண்டு காரைப் பரிசளித்தால் நான் தன்யனானேன். நன்றி.


பட உதவி: http://images.vectorfinder.net/i

-

கபடவேடதாரி



ஒரு ஹனுமத் ஜெயந்தியில் காலை ஒன்பது நாற்பதுக்கு கல்யாணி ஹாஸ்பிடல் அதிர அழுது பிறந்தவனுக்கு ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய்விட்டு குங்குமம் ஒட்டிய துளசி பிரசாதமும் கையுமாக இந்தப் பெயர் வைத்தது அவன் அப்பா. முட்டி போட்டு தவழ்ந்து வீட்டுக் கூடத்தில் விளையாடும் போது கூட வாயை உப்பி கொழக்கட்டை அடைத்த கன்னம் போல வலம் வருவான். "வச்ச பேருக்கு பங்கம் வரமா நடந்துக்கறான் பாரு..." என்று விளையாட்டாக கூடி நின்று சொந்தபந்தங்கள் கிண்டலடித்து நகைச்சுவை கும்மியடித்தன.

"போன வாரம் தஞ்சாவூர்லேர்ந்து கோகுல் வந்தப்ப கொடுத்த அரையணா கிளு கிளுப்பையை கூட கதை மாதிரி ஜோரா தோள் மேல போட்டுக்கிட்டு மூலையில உக்காந்திருந்தது.." என்று ரொம்பப் பெருமையாக ஊராரிடம் மெச்சிக் கொண்டாள் அவன் அம்மா. இரண்டு மூன்று வயதில் "அனுமந்து..மாமாக்கு உம்மாச்சி ஸ்லோகம் சொல்லிக்காமி" என்றால் எந்த உம்மாச்சி என்று கேட்காமல் "புத்திர் பலம் யாஷோதைர்யம்..." என்று ஆஞ்சநேயர் ஸ்லோகம் தான் சொல்வான். இப்படி பிறந்ததிலிருந்து உண்டான நெருக்கமான பந்தம் அவனுக்கும் அனுமாருக்கும். ஸ்கூல் படிக்கும் போது ஃபான்சி டிரஸ் காம்ப்பெட்டிஷன் வந்தால் நீள தாம்புக் கயிறு எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு பின்னால் வால் விட்டு கன்னத்தை 'உப்' பண்ணிக்கொண்டு வேஷத்திற்கு தயாராகிவிடுவான். 

பாண்ட் போட்டு அழகு மயில்களை நோட்டம் விடும் வயது எட்டியபோது ஒரு டை ஹார்ட் அனும பக்தன் ஆனான் அனுமந்து. பிரதி சனிக்கிழமை உபவாசம் இருப்பது. ராமர் கோயில் பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சார்த்துவது, மாதம் ஒரு சனிக்கிழமை 108 வடமாலை சார்த்துவது என்று கிட்டத்தட்ட ஆஞ்சநேயர்க்குள் ஐக்கியமானான். "அனுமந்து பார்த்துடா ஆஞ்சநேயர் நெஞ்சை கிழிச்சு காமிக்கற படத்தில எல்லாம் காலேண்டர்காரங்க இனிமே உன்னைப் போட்டுடப் போறாங்க" என்று நண்பர்கள் கலாய்த்தார்கள். இதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஜானகிராமன், கல்யாணராமன் என்று பெயர் கொண்டவர்களிடம் அளவுக்கு அதிகமான மரியாதையுடன் நடந்துகொண்டான். சீதாராமன் என்று பெயர் இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக பயபக்தியுடன் விழுந்து சேவித்து விடுவான். அது என்னடா சீதாராமன் மாமாட்ட அவ்ளோ பக்தி என்று கேட்டால் "அவர் பேர்ல தாயாரே இருக்காளே.." என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு பக்திரசம் மேலோங்க சொல்லி பூரிப்படைவான்.

படித்து நல்ல வேலைக்குபோனான். வீட்டிலிருந்து ஆபிஸ் சென்று சீட்டில் உட்காரும் வரை கண்ணில் தென்படும் அனுமார் சுவாமி கோயில்கள் ஆறு. அனைத்திற்கும் தாவாங்கட்டையில் ஒரு போடு போட்டுக்கொண்டு கொக்கி மடக்கிய ஆள்காட்டி விரலை கிஸ் அடித்துவிட்டு தான் செல்வான்.

போன வாரம் வியாழக்கிழமை ஆறு கெஜம் புடவை, ரெண்டு முழம் ஜாக்கெட் தலையில் ஒரு முழம் பூவோட வந்த பக்கத்து சீட் மல்லிகாவை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் அனுமந்து. சின்னக் குழந்தைபோல குலுங்கி குலுங்கி அழுத மல்லிகா புருஷனுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கா? சொல்லுங்க...

பின் குறிப்பு:  மெய்யாலுமே இப்படி ஒரு கேரக்டரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

பட உதவி: http://commons.wikimedia.org/
-

Tuesday, February 22, 2011

கடற்கரைக் காட்சிகள்

கடற்கரை சமீபம் நெருங்க நெருங்க மக்கள் அலை அடித்துக் கொண்டிருந்தது. இந்த வருடம் சட்டென்று குளிர் விட்டு வெய்யில் காய ஆரம்பித்திருந்தது. புழுக்கம் தாங்காமல் கடற்காற்று வாங்க வியர்வை உரச மக்கள் கரையில் அலைமோதினர். பொதுவாக எனக்கு காந்தியும் கண்ணகியும் குடியிருக்கும் மரீனாதான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இம்முறை பெஸன்ட் நகர் சென்றோம். மாதா கோவில் மணியோசையுடன் கலகலப்பாக இருந்தது எலியாட்ஸ் பீச். சர்ச் தாண்டி உள்ளே நுழையும் அந்த குறுகலான சந்து திருப்பத்தில் தான் நீங்கள், நான், என் கார், பிளாஸ்டிக் பேப்பர் தின்னும் பசு மாடு, தெருவில் ஓடும் சொறி நாய், வெளிமாநில மற்றும் லோக்கல் பிச்சைக்காரர்/காரி, தள்ளுவண்டி வாழைப்பழக்காரர், ஸ்கார்பியோவை நடுரோடில் நிறுத்திவிட்டு முருகன் இட்லி கடையில் ஜிகர்தண்டா பருக வரும் மென்பான ப்ரியர்கள், பீச்சில் மறைவில் ஒதுங்குவதற்கு நுழையும் முன்னரே இறுகக் கைப்பற்றி தோளோடுதோள் உரச ஈருடம்பு ஓருயிராய் செல்லும் காதலர்கள் என்று சகலமும் சகலரும் செல்லவேண்டும். 

பொறுமை இதைத் தாண்டி உள்ளே இருக்கும் கடலை விடப் பெரிது. எல்லோருக்கும் வழி விட்டு அமைதி காத்து உள்ளே ஆடினாலும் வெளியே புன்னகைத்து பீச்ரோடில் இணைந்தோம். இரண்டு பக்கமும் ஒரே வாகன வெள்ளம். குழந்தைகள் தள்ளும் நடைவண்டியில் ஆரம்பித்து எங்கூருக்கு கிழக்கே இருக்கும் கிராமத்தில் இருந்து மெட்ராச சுத்திப்பாக்க வந்த ஜனம் பயணித்த டூரிஸ்ட் பஸ் முதற்கொண்டு அங்கே எனக்கு முன்னால் துண்டுபோண்டு இடம்பிடித்து நிறுத்தியிருந்தார்கள். அந்த ரோட்டின் இடது புறத்தில் செல்லும் பல கிளை சாலைகளில் அப்பகுதி வீடுகளில் குடியிருப்போர் போல் வால்ட் தாண்டி வெளியே வரும்படி அவர்கள் வீட்டு வெளிக்கதவை அடைத்து பலபேர் "யார் எக்கேடுகெட்டா எனக்கென்ன" என்ற உன்னத பாலிசியில் வண்டி நிறுத்தியிருந்தார்கள். முருகன் ஞானப்பழத்திற்காக உலகத்தை சுற்றியது போன்ற ஒரு முழு வலம் அந்த ரோடைச் சுற்றி வந்து சோத்துக்கைப் பக்கம் வந்தோம். எங்கிருந்தோ ஒருவர் இயக்கிய தானியங்கி கதவு திறப்பான் "பீப்..பீப்.." ஒலித்ததும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அந்த ஹோண்டா சிட்டி அருகில் ஒரு நிமிடம் காந்திருந்தோம். ஆடி அசைந்து லெக்கின்ஸ்-டிஷர்ட் மாட்டியிருந்த ஒரு நவயுக நங்கை வந்து அலட்சியமாக கதவை திறந்து டிக்கி கூடையில் வைத்திருந்த ஒரு பேபி ஜட்டியை எடுத்துக்கொண்டு எங்களை ஏளனமாகப் பார்த்துக்கொண்டு போனாள்.

எங்களுக்கும் இந்த புண்ணிய பீச்சில் ஒரு இடம் கொடுத்து இறைவன் ஆட்கொள்ளமாட்டானா என்று குலதெய்வத்திடம் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொள்ளாத குறையாக பார்க்கிங் தேடினோம். நாங்கள் நம்பிய தெய்வம் எங்களை கைவிடவில்லை. எங்கள் பிரார்த்தனை பலித்தது. பிளானெட் யெம் வாசலில் காரை ஒருவர் ரிவர்சில் எடுப்பது கண்களுக்கு புலப்பட்டது. ஒரு இரண்டுசக்கர வாகனாதி "அண்ணன் எப்போ காலியாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று ரெடியாக இடத்தை பிடிக்க வாகனத்தை உறுமிக்கொண்டு எதிர்திசையில் நின்றுகொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த தர்மபத்தினியை தட்டி எழுப்பி ஓடோடி சென்று அந்த ஸ்லாட்டில் நின்று இடம்பிடிக்க சொன்னேன். அவர் நின்று இடம் பிடித்ததால் ஒரு கார் நிற்கும் இடத்தை அவர் நிரப்புவார் என்றில்லை என்பதை அறிக. ஒரு ஆயுளின் கனவாக கிடைத்த அந்த இடத்தில் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு சமுத்திர ராஜனின் தரிசனத்திற்கு மணலில் கால் புதைய உள்ளே புகுந்தோம்.
maize vendor

கதிரவன் காதலர்களுக்காக மறையத் தொடங்கியிருந்தான். பொங்கும் கடலில் ஆண் அலையும் பெண் அலையும் ஓடிப்பிடித்து விளையாண்டு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. இக்கரையில் ஆணும் பெண்ணும் ஒருவருக்குள் ஒருவர் ஒளிஞ்சுப் பிடிச்சு விளையாண்டு கொண்டிருந்தார்கள். ஒருத்தர் தோளுக்கு இன்னொருவர் முட்டுக்கொடுக்க பேராதரவாக உட்கார்ந்து இருந்தார்கள். இது சாயங்காலமா மடிசாயுங்காலமா என்று ஆண் மடியில் பெண், பெண் மடியில் ஆண், ஆண் மடியில் ஆண் (சிநேகிதர்கள் போல) என கட்டையை நீட்டிப் படுத்து மண்ணில் புரண்டார்கள். அரை மணி குளித்தாலும் அந்த ஜீனி மண் போகாது. தலை கோதி, கை கோர்த்து, சிரித்து, ஐஸ் கிரீம் நக்கி லவ்வினார்கள். அரை நிஜார் போட்ட சுண்டல் பையன் பக்கத்தில் வந்த ஸ்மரணை கூட இல்லாமல் லஜ்ஜை கெட்டுப் போய் இருவர் கரைபுரண்ட காதலில் காற்றுப் புகா வண்ணம் இருக்க்க்க்க்க்க அணைத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் சோளம் சுட்டுத் தரும் அடுப்பில் இருந்து அவர்களை பற்றவைப்பது போல தீப்பொறி ஈசலாய் பறந்தது. சினிமாவிற்கு A சான்றிதழ் வழங்குவது போல பீச்சில் சில இடங்களுக்கு A போர்டு போட்டால் அரசாங்கத்திற்கு ஒரு ஜே போடலாம். குழந்தைகளை ஜாக்கிரதையாக U போட்ட இடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

elliots

பீச்சில் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு சிமென்ட் உட்காரும் இடம் சுற்றியும் நின்றுகொண்டே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எட்டூருக்கு நாறிக்கொண்டிருந்தது. அதற்கு எதிப்பக்கத்தில் இருவர் வாசனையோடு மிளகாய் பஜ்ஜி சுவைத்துக் கொண்டிருந்தனர். அவ்விருவருக்கும் ஆண் வாசனையும் பெண் வாசனையும் அன்றி அந்நேரத்தில் வேறு துர்கந்தங்கள் தெரிய வாய்ப்பில்லை. நேற்றைக்கு தான் ஆர்மியில் இருந்து ரிடையர் ஆனா மாதிரி ஒரு வடக்கத்தி தாத்தா குண்டப்பா விஸ்வநாத் கால கிரிக்கெட் போட்டி ரவுண்டு தொப்பி, டிஷர்ட்டை இன் பண்ணி ஷார்ட்ஸ் சகிதம் அட்டேன்ஷனாக லெஃப்ட் ரைட் போட்டுக்கொண்டிருந்தார். ஒரு ரவுண்டு, மொத்தம் ஏழு குண்டுகள், பத்து ரூபாய் மேனிக்கு பலூன் சுடுவதற்கு வேஷ்டித் திரையில் வண்ண வண்ண பலூன் கட்டி காற்றில் படபடக்க கன்னம் ரெண்டும் வாய்க்குள் சுருண்டுகொள்ள ஒட்ட தம் கட்டி இழுத்து மலபார் பீடி பிடித்துக்கொண்டு கடைக்காரர் போனிக்கு உட்கார்ந்திருந்தார்.

லல்லுவோ, மாயாவதியோ, அத்வானியோ, மன்மோஹனோ, பால் தாக்கரேவோ பேசும் ஒரு பாஷையில் 'பாத்'திக்கொண்டு தினமும் சுக்கா சப்பாத்தி ஆலுவுடன் போஜிக்கும் ஆறரை அடி கணவனும் ஐந்தரை அடி மனைவியும் பலூன் சுடுவதற்கு வந்தனர். கோதுமை தோலில் மின்னியது. அந்தம்மா கைகாட்டி சொல்லும் பலூன் எல்லாவற்றையும் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தி கார்கில் போரில் இந்திய சேனையோடு சென்றுவந்த ஒரு வெற்றிவீரனாக துப்பாக்கி முனையை "ஃபூ" என்று ஊதி வாகை சூடிக்கொண்டிருந்தார். அவர் நகர்ந்ததும் ஆசை விடாமல் நானும் என்வீட்டு அம்மணியை டார்கெட் காண்பிக்க சொன்னேன். அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை. ஏழுக்கு ஐந்து பணால்.

சோடியம் வேபோர் விளக்குகள் பற்றி எரிந்துகொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் இருந்த ஜோடிகள் இன்னும் விலகியபாடில்லை. நடைபாதையில் குடும்பக் கூட்டம் அதிகரித்தது. அந்தத் தார் சாலையில் ஒன்றிரண்டு இளசுகள் யமஹாவில் வட்டமடித்து புர்ர்ரினார்கள். எதிரே எருமையில் எமன் வருவது நம் கண்களுக்கு தெரிகிறது. இளங்கன்று யமனறியாது. குவாலிட்டி வால்ஸில் இருபது ரூபாய்க்கு குல்ஃபி ஐஸ் விற்றார்கள். பத்தடி நூல் கைக்கு கொடுத்து பானாக் காத்தாடி விற்றார்கள். சிங்கம் புலியில் இரண்டு சிறுவர்களை உட்காரவைத்து கையால் சுற்றும் குடை ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கிண்ணி இருபது ரூபாய்க்கு அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் பெப்பர் மற்றும் மசாலா போட்டு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊதினால் மட்டும் சங்கீதம் வரும் என்பது போல இருக்கும் புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நடைபாதையில் பள்ளி சென்று படிக்கும் வயதில் பழைய புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தான் அழுக்குச் சட்டை போட்ட சிறுவன் ஒருவன். அவனுக்கு நன்றாக போனியாகவேண்டுமே என்று மீண்டும் ஒருமுறை தெய்வத்தை ப்ரார்த்தித்துக்கொண்டேன்.

பின் குறிப்பு: சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றுவந்தது.

பட உதவி: http://www.trekearth.com மற்றும் http://www.sulekha.com/mstore/rangarajan/albums/default/elliots.jpg

-


Sunday, February 20, 2011

மனதை மயக்கிய மலேஷியா

இருவர் என்று ஒரு நிகழ்ச்சி நாலைந்து வருடங்களுக்கு முன் விஜய் டி.வியால் ராயப்பேட்டையில் ராயலாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு இரு இமயங்கள் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஒருவரில் ஒருவர் எஸ்.பி.பி அடுத்தவர் மலேஷியா வாசுதேவன். இவர்கள் இருவரும் திரையில் ரெண்டுபேர் சேர்ந்து பாடும் பாடல்கள் நிறைய பாடியிருக்கிறார்கள். இருவரும் ஜோடியாக மேடையில் தோன்றிய போது பலத்த கரகோஷம். ஏறியவுடன் பாடிய முதல் பாடல் என்னம்மா கண்ணு சௌக்யமா? ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான். அப்போதே சற்று சோர்வாகத்தான் இருந்தார். அவர் இழுத்த இழுப்புக்கு குரல் வரவில்லை. எஸ்.பி.பி அவருக்கு நன்றாக ஒத்துழைத்தார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து சிரித்துப் பாடினார்கள். மேடையில் பார்ப்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது. சிறிதுகாலமாக உடல்நலம் குன்றி இருந்த மலேஷியா வாசுதேவன் இன்று இயற்கை எய்தினார். சமீப காலத்தில் பாடக சமூகத்தில் பேரிழப்பான இரண்டாவது மரணம்.

இளையராஜா-மலேஷியா வாசுதேவன் ஜோடி தமிழ் ரசிக நெஞ்சகளுக்கு நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். முதல் மரியாதையில் கிட்டத்தட்ட ஒரு படத்தையே ம.வாசுதேவனுக்கு அர்பணித்தார் இளையராஜா. எஸ்.பி.பி, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற ஸ்டார் பாடகர்கள் ஜொலித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு புது மாதிரியான வசீகரக் குரல் வாசுதேவனுடையது. ஒரு சிலப் படங்களில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் குரலில் கூட சில பாடல்கள் ராஜாவின் இசையில் பாடியிருந்தார். எந்தப் பாடகரின் குரலிலும் சாராத ஒரு தினுசானக் குரல் மலேஷியா வாசுதேவனுடையது. ஆகாய கங்கையில் வரும் குரலும் அண்ணனுக்கு ஜே.. காளிங்கனுக்கு ஜே...வில் வரும் குரலும் இருவேறு சங்கதிகள் காட்டும். டி.எம்.எஸ்ஸுக்கு பிறகு கடைசி கால சிவாஜிக்கு எல்லாப் பாடலும் மலேஷியா பாடினார் என்று ஞாபகம்.

என்னையும் நிச்சயம் உங்களையும் கவர்ந்த சில மலேஷியா வாசுதேவன் பாடல்கள் இங்கே அவருக்கு அஞ்சலியாக...

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ..


 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...


நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே...


காதல் வைபோகமே...


கோடை கால காற்றே....


மலையோரம் மயிலே...


பொதுவாக எம்மனசு தங்கம்...


பூவே இளைய பூவே...


பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....



கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசை...


அவருடைய அன்பு மனசை நாம் கட்டிவைத்துக்கொள்வோம். மறைந்த மலேஷியா வாசுதேவனுக்கு எனது இசையஞ்சலியாக இதை சமர்ப்பித்தேன். அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பட உதவி.: www.raaga.com

-

Saturday, February 19, 2011

ட்ரைவன்!

"யார்ரா அந்த ட்ரைவன்?" என்று கிண்டல் தோரணையில் வண்டியை குறுக்கு நெடுக்காக சிலுப்பி சிலுப்பி ஒட்டியவனைப் பார்த்துக்கொண்டு செட்டில் பக்கத்தில் நின்றவனிடம் கேட்டான் கட்டை கார்த்தி. புரியாமல் குழம்பி "என்ன" என்பது போல சமிஞ்ஞை செய்து தலையை ஆட்டினால், "மாப்ள. டிரைவர் அப்படின்னு கூப்பிட்டா அது அவனுக்கு மரியாதை. ட்ரைவன் அப்படின்னு கூப்பிட்டா தானே அவனை திட்டினா மாதிரி இருக்கும்" என்று கேட்டுவிட்டு அகில உலகத்திர்க்கும் ஆங்கில அகராதிக்கு ஒரு புதுவார்த்தையை அறிமுகம் செய்து வைத்தான். கட்டை கார்த்தி சவுக்கு உருட்டுக் கட்டை போல இருப்பான். நாலேமுக்காலிலிருந்து ஐந்தடிக்குள் வாட்டசாட்டமாய் வளர்ந்திருப்பான். டாக்சி ஸ்டாண்டில் வண்டியைப் போட்டுவிட்டு பக்கத்து கிராமங்களுக்கோ அல்லது ப்ளஷர் கார் வைத்துக்கொண்டு போகும் அளவிர்க்கு லக்ஷ்மிகடாக்ஷம் நிரம்பிய தனவான்களுக்கோ வாடகைக் கார் ஓட்டுபவன். பலகாத தூரம் நிற்காமல் ஓட்டச்சொன்னாலும் பீடி சிகரெட்டிற்கு நிற்காமல் கண்கொட்டாமல் ஓட்டும் நல்ல தேர்ந்த டிரைவர். 

ஒருமுறை அமாவாசை கும்மிருட்டில் பக்கத்து கிராமத்திற்கு சிங்கப்பூர் ரிடர்ன் சவாரிக்கு சென்றதில் அம்பாசிடர் காருக்கு அளவெடுத்து கட்டியது போல இருந்த ஒரு சிங்கிள் பெட் வாய்க்கால் பாலத்தில் ரசமட்டம் பிடித்தாற்போல ஓட்டி கின்னஸ் சாதனையை மன்னை சாதனையாகச் செய்தவன். கட்டையாய் பிறந்த காரணத்தினால் காலை எக்கி எக்கி பெரிய சைக்கிள் சீட்டின் மீது டான்ஸ் ஆடி லோக்கலில் பெடலடிப்பதால் ஹாண்டில் பார் ரொம்பவும் கோச்சுக்கும். வேண்டாம் வேண்டாம் என்று தலையை பெண்டுலமாய் ஆட்டும். இதைப் பார்த்துவிட்டு "ஹையோ!" என்று தலையில் அடித்துக்கொண்டு "சைக்கிள் கூட ஓட்டத்தெரியலை" என்றுதான் அவன் பராக்கிரமம் தெரியாத ஊர்ஜனம் பேசும். ஸ்டீரிங் வீலோடு சேர்ந்து சுழன்று சுழன்று கை ரெண்டும் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள வண்டியை கண நேரத்தில் தலை வால் மாற்றி திருப்பிப் போடுவான். நான் அவனை "அசகாயசூரன் டிரைவர்" என்று தான் அழைப்பேன்.

************
Lorrydriver
ரொம்ப தூரம் குவாலிஸில் இரவுப் பயணங்கள் செல்லும் போது எங்கள் டிரைவர் அண்ணனிடம் "எப்படின்னே இதுல லைட்டு எரியுது?" என்று பெட்ரோமாக்ஸ் விளக்கு செந்தில் ரேஞ்சுக்கு கேள்விகள் கேட்டு துளைத்துவிடுவேன். நடுநிசிக்களில் ரெண்டுபேரும் தூங்கக் கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வு கேள்வி பதில் செஷன் வைத்துக் கொள்வேன். தன் தகுதிக்கு மேல் போகும் இடங்களிலெல்லாம் பிளாஸ்டிக் கார்டு தேய்த்து கண்ட சாமான்கள் வாங்கி லோல்படும் அப்பாவி மனித ஜீவன்கள் போல எட்டு டன் லாரியில் முட்டமுட்ட பதினெட்டு டன் ஏற்றி "கன்னி" லாரியை இரவோடு இரவாக நிறைமாத "புள்ளைத்தாச்சி"யாக்கி ஓட்டிச் செல்லும் டிரைவக் கிளிகளையோ குரங்குகளையோ பற்றி நான் கேட்ட வினாக்களும் டி.அண்ணனின் விடைகளும் இங்கே தருகிறேன்.

இதற்குமேல் ஒரு குண்டூசி பாரம் கூட தாங்காத முழு லோடில் வானூர்தி சப்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் "டர்ர்ர்ர்ரர்ர்ர்ர்" என்ற டயர் ஓசை காதைக் கிழிக்க சென்ற ரோடூர்தியைப் பார்த்து.....
ரா.வெ.சு: வெயிட் ரொம்ப அதிகமா இருக்கேன்னே.
டி.அண்ணன்: மரம் லோடு தம்பி!
ரா.வெ.சு: எப்படின்னா சொல்றீங்க?
டி.அண்ணன்: அது தான் போர் மாதிரி ஒன்னுமேல ஒன்னு அடுக்க முடியும் தம்பி.
ரா.வெ.சு: எங்க போகுது.
டி.அண்ணன்: திருப்பூர்.
(அத எப்படிச் சொன்னீங்க என்று கேட்கவில்லை!)
ரா.வெ.சு: ஆக்சிலேட்டேரை விட்டு காலை எடுக்க முடியாதுல்ல! பாவம் கால் கடுக்கும்.
டி.அண்ணன்: எடுத்துருவாங்க தம்பி.
ரா.வெ.சு: எப்படின்னே! (மீண்டும் பெட்ரோமாக்ஸ் விளக்கு செந்தில் வாய்ஸ்)
டி.அண்ணன்: ஆக்சில் மேல செங்கல்ல வச்சுருவாங்க.
ரா.வெ.சு: எப்படின்னே! 
(இம்முறை கேட்டவுடன் சிரிப்பார்!)
ரா.வெ.சு: செங்கல்ல வச்சா எப்படி பிரேக் போடுவாங்க?
டி.அண்ணன்: கல்ல உதச்சு தள்ளிட்டு ப்ரேக் போடுவாங்க.
ரா.வெ.சு: கால் வலிக்காது?
டி.அண்ணன்: அதான் ஆக்சிலேட்டர்ல அழுத்தி வைக்கலையே..
ரா.வெ.சு:  ஊஹூம். கல்ல காலால உதைச்சா வலிக்காதான்னு கேட்டேன்.
(அடுத்த டீக்கடை வரும்வரை ஆள் "கப்சிப்")

நாங்கள் டீக்கடையில் அந்தக் கழனியைக் குடித்துவிட்டு வண்டி எடுக்கும்முன் வந்து சேர்ந்த அந்த புள்ளைத்தாச்சி லாரி டிரைவரிடம்.. (வண்டியை ஒரு தடவை உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு)
ரா.வெ.சு: அண்ணே!
பு.டிரைவர்: (ஒட்டிய களைப்பில் சற்றே விரைப்பாக) என்ன?
ரா.வெ.சு: காலால எப்படி ஓட்டரீங்க?
பு.டிரைவர்: (முதல் கேள்வியிலேயே விக்கித்துப்போய் மேலும் கீழும் ஏற இறங்க பார்த்துவிட்டு)  கையாலயும் ஓட்டறோம்!
ரா.வெ.சு: இல்ல ஆக்சில் மேல செங்கல்லு வைப்பீங்கலாம். அதான் கேட்டேன்.
பு.டிரைவர்: அதெல்லாம் ஒன்னும் இல்ல.. (என்மேல் கல்லைத் தூக்கிப் போடும் அளவிற்கு கோபம் வந்து கண்ணாமுழி பிதுங்க என்னைப் பார்த்துவிட்டு அந்த ரோட்டோர இரவுக் கடையில் "ஒரு முட்ட தோசை..." என்று சொல்லி கைகழுவி பெஞ்சில் உட்கார்ந்து எங்கள் வண்டி ரோடு ஏறும்வரை திரும்பித் திரும்பி முறைத்துப் பார்த்தார். 

எங்கள் டிரைவர் அண்ணனுடன் பேட்டி தொடர்கிறது...

ரா.வெ.சு: தூக்கம் வாராதான்னே?
(உள்ளுக்குள்ள ஒரு கிலி.. அதனால இந்தக் கேள்வி)
டி.அண்ணன்: ஜில்லுன்னு தண்ணி போட்டு மூஞ்சி களுவக் கூடாது.
ரா.வெ.சு: மூஞ்சி அலம்பினா ஃபிரஷ் ஆயிடும்ல.
டி.அண்ணன்: மொதெல்ல நல்லாருக்கும். அப்புறம் போகப்போக கண்ணை இழுத்துடும் தம்பி.
ரா.வெ.சு: எப்படின்னே!
டி.அண்ணன்: அந்த சில்லு தண்ணிக்கும் காத்துக்கும் தூக்கம் தன்னால வந்து கண்ணை அசத்திடும் தம்பி.
ரா.வெ.சு: தூக்கம் வராம இருக்க என்ன செய்யணும்?
டி.அண்ணன்: சில பேர் பச்ச மொளகா கடிச்சுகிட்டே ஓட்டுவாங்க..
ரா.வெ.சு: பச்ச மொளகாவா?
டி.அண்ணன்: ஆமாமாம்...
(சுரத்து இல்லாமல் மெயின் ரோட்டைப் பார்த்து தன் விதியை நொந்து வண்டியை விரட்ட ஆரம்பித்தார்!)
எங்கள் டிரைவரும் பு.லாரி டிரைவர் ராஜாக்கண்ணும் ரொம்ப நல்லவர்கள்! என்னை ரொம்பவும் சகித்துக்கொண்டார்கள். நன்றி.

**********
கல்லூரிக் காலங்களில் பயணம் செய்த பஸ்களில் வரும் டிரைவர் அண்ணாத்தேக்கள் பலரும் பலவிதம். சர்க்கார் வண்டி ஓட்டுபவர்கள் எப்போதும் ஏதோ சிந்தனையில் ரோடிலிருந்து வைத்த கண் எடுக்காமல் ஏறியவர் இறங்கினவர் கவலையில்லாமல் நாற்பது தாண்டாமல் உருட்டி நல்ல டிரைவர் என்று பெயர் எடுத்து அவார்ட் வாங்குவார்கள். ஒரு ஆத்திர அவசரத்திற்கு வரப்பிலிருந்து ஓடி வந்து கை காண்பித்தால் கூட பிரேக் மேல் கால் வைக்க மாட்டார்கள். நிறுத்தத்திற்கு நிறுத்தம் ஆள் இருந்தாலும் நாய் படுத்திருந்தாலும் ஒரு முறை நின்று பார்த்துவிட்டு கிளம்புவர். ஒரு நல்ல மாரிக்காலத்தில் வானத்தை பொத்துக்கொண்டு ஊற்றிய மழையில் சிவலிங்கத்துக்கு மேல் தாரா பாத்திரம் தொங்கவிட்டு நீர் சொட்ட விடுவது போல சொட்டசொட்ட உடலெங்கும் நனைந்து கண்ணில் வழியும் மழை நீரை வழித்து உதறி ஒட்டிய ஒரு நீலச் சட்டை போட்ட வயசான டிரைவரை சல்யூட் அடித்து "உயர்திரு டிரைவர்" என்று எழுந்து நின்று இந்த தேசமே கூப்பிடலாம்.

தனியார் வண்டிதான் அந்தக் காலத்தில் மஜாவே. உள்ளே நுழைந்ததும் இளமை பொங்கும். தைரியமாக வெள்ளைப் பேன்ட் போட்டுக்கொண்டு பயணிக்கலாம். உட்கார்ந்தால் அழுக்கு ஒட்டாது. சீட்டும் சீட்டுக்கு அடியிலும் ஒரு அடி நீள ப்ரஷால் துடைத்திருப்பார்கள்.  செட்டு கட்டி பாட்டு போடுவார்கள். குறுந்தகடு டெக்னாலஜி அப்போது பிறக்காததால் கேசெட்டு தான். ஸ்டாப்பிங்கில் பூவையர் காத்திருந்தால் அவர்களின் அடுத்த அடி நிச்சயம் பஸ் படிக்கட்டில் எடுத்து வைக்கும் அளவிற்கு பக்கத்தில் ஆதரவாக நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். நிச்சயம் அந்த குஜிலிகள் ஏறும் ஸ்டாப்பிங் முன்னால் ஒரு முறை சிகையழகை சீர் படுத்திக் கொள்வார்கள்.

காலேஜ் மங்கையர் ஓடி வந்து பஸ் ஏறி நான் பார்த்தே இல்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் அரைச் சேலையான தாவணி தென்பட்டால் வண்டி இம்மியளவு கூட நகராது. மூச்சிரைக்காமல் வேர்க்காமல் நோகாமல் பெண்ணினம் ஏறிய பின்னர் மனமெங்கும் சந்தோஷம் பொங்க முன்னால் இருக்கும் பின்னால் பார்க்கும் காண்ணாடி எல்லாவற்றிலும் ஒரு முறை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வண்டி குலுங்க கிளப்புவார். சாயந்திரம் பெண்கள் டிக்கெட்டுகள் வண்டியை காலி செய்தவுடன் காற்றிரக்கிய பலூன் போல புஸ்ஸாகி கடனே என்று ஓட்டி ஸ்டாண்டில் விடுவார். இவர்கள் "மன்மத ஓட்டுனர்கள்" என்கிற இளமை வகையறாவை சேர்ந்தவர்கள்.

*******
சென்னை மாநகரப் பேருந்துகளில் நான் பார்த்தவர்கள் தான் இந்த லோகத்திற்கு நல்லது செய்யும் மாந்தர்கள். எந்த ஒரு ஸ்டாப்பிலும் பஸ் ஸ்டாப் என்று போட்ட இடத்தில் இருந்து குறைந்தது இருபது அடி முன்னோ பின்னோ நின்று சோம்பேறியாக நிற்கும் மக்களை உள்ளே ஏற்றுவதர்க்குள் ஒரு சிறு உடற்பயிற்சி கொடுக்கிறார்கள். சுகர் கொலஸ்ட்ரால் உள்ள மக்களுக்கு மிகவும் ஏற்றது சென்னை நகர பஸ்கள். ஏறிய பின்னர் இவர்கள் அடிக்கும் கட்டிர்கும் ப்ரேக் குத்திர்க்கும் கூட்டத்தில் நின்று கசங்கி பஞ்சாமிர்த வாழைப்பழமாக ஆக்கிவிடுவார்கள். ரெண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டுவிட்டு சைதாப்பேட்டையில் ஏறினால் நந்தனம் வருவதற்குள் ஜீரணம் நிச்சயம். இவர்கள் பஸ்ஸையே ஜிம்மாக பாவித்து மக்களுக்கு தொண்டு புரிவதால் "மாஸ்டர் டிரைவர்கள்" என்ற கேட்டகரியில் அடங்குகிறார்கள்.

அப்படியே நிறுத்தலாம் என்று கொஞ்ச நஞ்சம் மனசாட்சியுடன் நெஞ்சில் ஈரம் உள்ள டிரைவரைக் கூட நிறுத்தவிடாமல் செய்பவர்கள் அடாவடி ஆடோக்காரர்கள். இவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் டிரைவன்கள் மீதி பேர் டிரைவர்கள். மக்கள் காத்திருக்கும் இடமெங்கும் இவர்களுக்கு நிறுத்தங்கள். மெயின் ரோடு ஓரம் மகாவீர் சந்த் இலவச பொது கழிப்பறை வாசலில் கியூவில் நின்றால் கூட பக்கத்தில் சென்று "எங்க சார் போகணும்?" என்று கேட்பார்கள். இன்னும் சிலர் சவாரி ஏற்றி சர்க்கஸ் காண்பிப்பார்கள். என்னுடைய ஆட்டோ ராஜாக்கள் பதிவு இதை விலாவாரியாக புட்டுபுட்டு வைத்துள்ளது. இந்த மயிர்க்கூர்ச்செரிய வைக்கும் மக்களை பற்றி அங்கே சென்று தெரிந்துகொள்ளுங்கள். இவர்கள் "தாதா டிரைவர்கள்" என்றழைக்கப் படுவார்கள்.

சமீப காலங்களில் பிரபலமான இன்னொரு டைப் ஒட்டுனர்கள் ரயில்பஸ் ஓட்டுனர்கள். நோக்கியா, ஹுண்டாய் கம்பெனிகள் மற்றும் சென்னையின் புறநகர்ப் புகுதி வயற்புரங்களை கல்லூரிப்புரங்களாக உருமாற்றிய எஞ்சினியரிங் கல்லூரிகள் போன்றவற்றின் பிரத்யேக பேருந்துகள் ரயில்பஸ் என்ற விசேஷ கலப்பின ஜாதியில் அடங்கும். பஸ் திரும்பி ரெண்டு செகண்டு பின்னர் தான் வால் திரும்புகிறது. ரயிலின் ரெண்டு கோச்சு சேர்த்தார்போல இருக்கும் நீள பஸ்ஸை நகரின் சந்து பொந்துகளில் எல்லாம் அனாயாசமாக விட்டுத் திருப்பி கல்விப்பணி மற்றும் தொழிலாளர் நலம் நாடும் டிரைவர் அண்ணாக்கள் "எஞ்சின் டிரைவர்கள்" என்று அழைக்க தகுதியானவர்கள்.

பின் குறிப்பு: ட்ரைவன் என்று மன்னையில் சொன்னவரை நேற்று சென்னையில் பார்த்தேன். எழுந்த சிந்தனைகளை பதிந்து உங்களுக்கு எனக்குத் தெரிந்தவர்களை சற்று காட்டினேன். இதற்காகவே என்னைப் பதிவன் என்று அழைத்தாலும் ஏற்றுக்கொள்வேன். நன்றி.

பட உதவி: http://k53.pbase.com

-


Thursday, February 17, 2011

அக்கா மாலா ரெசிபி

எலக்ஷன் வரப்போகிறது. ஆளாளுக்கு பொதுக்கூட்டம் போட்டு எதிராளி என்ன செய்யவில்லை இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று வாய் கிழிய பேசப்போகிறார்கள். மைக் செட்டு கட்டுவோருக்கு நல்ல காலம். பணம் பைசா பாக்கியில்லாமல் செட்டில் பண்ணினால்! ட்ராவல்ஸ்காரர்களுக்கும் அதே நிலை. கூட்டம் கூட்டமாக மந்தை மந்தையாக பொதுஜனங்கள் என்று கூறிக்கொண்டு "எதிர்க்கட்சி காரர்களிடம் கேட்கிறேன்.. நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...." என்று இவர்கள் ஆட்சியின் சாதனைக் கதைகள் புருடா விட கேட்பார்கள். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் ஓட்டுப்போட ரோட்டுக்கு வரமாட்டார்கள். அன்றைக்கு எக்ஸ்ட்ரா லீவு. டி.வி, சீரியல், அழுகை என்ஜாய். அது சரி. இப்போ திண்ணைக் கச்சேரிக்கு வருவார்களா மாட்டார்களா!

********சிகரெட் பிடிப்பதால் விளையும் நன்மைகள்**********
சப் டைட்டில் பார்த்து அதிர்ந்து விட்டீர்களா! தம் அடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்று நன்னெறி பாடி அட்வைஸ் மழை பொழிந்தாலும் ஊதித் தள்ளுபவர்கள் நிறுத்தியபாடில்லை. பாக்கெட் மேல் மண்டையோடு போட்டால் செத்தகாலேஜில் இருந்து சாம்பிளுக்கு போட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையால் 'தம்'மின் பயன்களை பட்டியல் இட்டுப் பார்த்தோம். தமிழ் எக்ஸாம் எழுதுவது போல.. அவையாவன..
ஒன்று. நாய் கடிக்காது.
இரண்டு. வீட்டிற்கு திருடன் வரமாட்டான். 
மூன்று. முதுமை வாராது.
இம்மூன்றும் ஏன் என்று யோசியுங்கள். காரணங்கள் பதிவின் முடிவில்...

*********** நிலையான முகவரி*************
ஏதோ கிண்டல் கேளிக்கையாக தொடங்கப்பட்ட இந்த தீ.வி.பி இணையத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டான். எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று ஒரு மக்கள் என்பது போல தனியே ஆண்டியாகாமல் www.rvsm.in என்ற வலை முகவரியைப் போன வாரத்தில் எனக்காக சொந்தமாக்கிக் கொண்டேன். net4.in நிறுவன பெருமக்கள் வேண்டிய அளவு தொந்தரவு கொடுத்துப் பார்த்தார்கள். உஹும். இறுதியில் எனக்கே வெற்றி! "ஏற்கனவே ப்ளாக்ஸ்போட்டில் ஒரு அட்ரெஸ் இருந்தும் எதற்கு காசு கொடுத்து ஒரு டொமைன் ரெஜிஸ்டர் செய்தாய்" என்ற ஹோம் மினிஸ்டரின் கவன ஈர்ப்புத் தீர்மான கேள்விக்கு என்னிடம் பதில் இல்லாமல் திருதிருவென்று வழக்கம் போல் முழித்ததில் அவர்களே திருவாய் மலர்ந்து பதில் செப்பினார்கள். "எல்லாம்.....(ஒரு பாஸ் கொடுத்து) பர்ஸுக்கு புடிச்ச கேடு".

இந்தப் புதிய உருவத்தில் சிரசில் இருக்கும் தலைப்புப் படம் மெல்போர்ன் விளையாட்டு மைதானம். ஸ்டேடியம் முழுக்க ரசிகர்கள் உட்கார்ந்திருக்க இரண்டு பக்கமும் பரந்து விரிந்த Panoramic View. காலையில் இருந்து மாலை வரை டோர்னமென்ட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து கால் வலிக்க வலிக்க புரண்டு படுத்தபோது நான் கண்ட சொப்பனத்தில் வந்த அதே கிரவுண்டு இது. கபில்தேவ் என் தோளில் கை போட்டு அரவணைத்து அவுட்  ஸ்விங்கர் போடுவது பற்றி கையை பவுலிங் போடும் போஸில் ஒருபக்கம் க்ராஸாக ஒருக்களித்து காண்பித்து டிப்ஸ் கொடுத்தார். "தம்பி! காலேஜ் போகணும் எழுந்துக்கரியா.. இல்ல மேல தண்ணீ ஊத்தட்டுமா" என்று பாட்டி மிரட்டி எழுப்பிய பின்னர்தான் நான் மெல்போர்னில் இல்லை மன்னையில் இருக்கேன் என்ற ப்ரக்ஞை வந்தது. விடிகாலை கனவு பலிக்காமலே போய்விட்டது வருத்தம் தான். இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் இல்லை.

************ அக்கா மாலா ரெசிபி ************
வலையுலகில் கிச்சன் பதிவு எழுதும் அம்மணிகளின் அபிமான கவனத்திற்கு. கொத்துப் புரோட்டோ, மசால் தோசை, கைமா இட்லி போன்றவற்றை நீங்கள் சுடச்சுட தயாரித்து கணவன்மார்களை 'குஷி'ப்படுத்தியது போதாதென்று இப்போது கொக்ககோலாவின் தயாரிப்பு முறையை நெட்டில் விட்டிருக்கிறார்கள். என்னென்ன பதார்த்தங்கள்  எந்தெந்த விகிதாசாரத்தில் கலக்க வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள்.
The recipe:
Fluid extract of Coca: 3 drams USP
Citric acid: 3 oz
Caffeine: 1 oz
Sugar: 30 (unclear quantity)
Water: 2.5 gal
Lime juice: 2 pints, 1 quart
Vanilla: 1 oz
Caramel: 1.5 oz or more for color
The secret 7X flavor (use 2 oz of flavor to 5 gals syrup):
Alcohol: 8 oz
Orange oil: 20 drops
Lemon oil: 30 drops
Nutmeg oil: 10 drops
Coriander: 5 drops
Neroli: 10 drops
Cinnamon: 10 drops
பொருட்களை சொல்லிவிட்டார்கள். அடுப்பில் ஏற்றி இறக்கும் முறையை பகிரவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சி அனுபவம் உள்ளோர் முயற்சிக்கலாம். இதன் பின் விளைவுகளுக்கோ பக்க விளைவுகளுக்கோ எதிர் விளைவுகளுக்கோ இந்த வலைத்தளம் பொறுப்பேற்காது. குடித்து விஷச்சாராயம் அருந்தியது போல கண் தீஞ்சு போய், கிட்னி அவிந்து போய் அரசுமருத்துவமனியில் அட்மிட் ஆகும்படி தங்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோர் நிச்சயம் தயாரிக்க வேண்டிய ஒரு பானம்.

அடிக்கோடிட்ட குறிப்பு: Kerry Tressler என்ற கொக்ககோலாவின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் இதை திட்டவட்டமாக மறுத்து கைகொட்டி சிரித்திருக்கிறார். இது ஒன்றும் எங்கள் கம்பெனியாரின் ரெசிபி இல்லை என்கிறார். ஒருக்கால் 23-ம் புலிகேசி அரண்மனையில் தயாரித்தார்களே அதுதான் நிஜமான கலவையோ! சிம்புதேவனுக்கு கோலாவின் தொழில் ரகசியம் தெரிந்திருக்கிறது. ஏதேனும் படம் பப்படமானால் கோலா தயாரித்து பிழைத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

************* ஒலக தண்ணி அடிப்போர் எண்ணிக்கை ************
டாஸ்மாக் வருமானத்தில் தமிழ்நாடு ஒளிருகிறது. பூமியே தண்ணியடித்து தலையை சுற்றுகிறது என்று குரு படத்தில் அபிஷேக் பச்சனை தண்ணியடித்து ஆடவிட்டு வைரமுத்து எழுதியிருப்பார். எஸ்.பி.பி வாய் குழறி அதி அற்புதமாக பாடியிருப்பார். உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள பதினைந்து வயதுக்கு மேற்பட்டோர் நாடு வாரியாக குடித்து மட்டையாகும் அளவு பற்றிய பயனுள்ள மப்பான மேப் கீழே.  ஐரோப்பியர்கள் அதிகம் குடிக்கிறார்களாம். புவனமெங்கும் ஆண்டொன்றுக்கு 2.5 மில்லியன் மக்கள் குடித்துச் சாகிறார்கள். இது எயிட்ஸ் மற்றும் டி.பியில் காலமாவோரை விட அதிக எண்ணிக்கையாம்.



************* சூர்யாஸ்தமயம்***************
அடிவானத்தில் சூரிய கோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது  போலிருந்தது. ஆரம்பத்திலேதான் கண் கூசும். சிறுது நேரம் உதறி நோக்கிக்கொண்டிருந்தால் பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய்விடும். இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும். கீழே இருப்பது சுத்தமான மின் வட்டம். மேலே மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை!

பச்சை தகடு பின்புறத்திலிருக்கும் மின் தகட்டை முழுதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக்கிரணங்கள் கண்மீது பாயும்.

பார்! சூரியனைச் சுற்றி மேகங்க ளெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தணையாயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சிவிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்! நீல ஏரிகள்! கரும் பூதங்கள்!

எங்கு பார்த்தாலும் ஒளித்திரள். வர்ணக் களஞ்சியம். போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது!

இந்தச் சூர்யாஸ்தமயத்தை வர்ணித்தது சாட்ஷாத் பாரதிதான்.  என்ன தமிழ்! என்ன தமிழ்! இதை தட்டச்சு செய்யும்போது மாலை நேர சூரியனை என் மனக்கண்ணால் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

************ பாஸ்கரனின் (அன்றைய) பணி நிறைவு **********

மேலே பாரதியின் வாசகங்களில் பார்த்த அஸ்தமனம் இங்கே...


***********

பதிவாரம்பத்தின் மூன்று தம் பயன்களின் காரணங்கள் பின்வருமாறு.
ஒன்று: //நாய் கடிக்காது.// சிகரெட் பிடித்து உடல் தளர்ந்து கைத்தடி வைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆகையால் நாய் கடிக்க வந்தால் குச்சியால் போட்டு தப்பித்துக்கொள்ளலாம்.
இரண்டு: //வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.// நுரையீரல்கள் முழுக்க தேவலோகப் புகை கட்ட ராத்திரி பூரா "லொக்கு லொக்கு" என்று இருமி முழித்திருக்கிறேன் என்று தெரியப்படுத்துவதால் செக்யூரிட்டி ஆகிறார்.
மூன்று: //முதுமை வாரா// இது கொஞ்சம் ஓவர் தான். என்னவென்றால் முதுமை வருவதற்குள் போய் சேர்ந்துவிடுவார். அதனால் முதுமை வாரா!

பட உதவிகள்: http://www.reefnews.com மற்றும் www.economist.com

-

Wednesday, February 16, 2011

நாட்டு ராஜாவும் காட்டு ராஜாவும்

ஐ.ஐ.டி யில் படிப்பு.
பெரிய உத்தியோகம்.
பாதி சம்பளத்தை மாதாமாதம் இ.எம்.ஐ கட்டி வாங்கின பெரிய பங்களா மாதிரி சொந்த வீடு.
குண்டு குழி இல்லாத ரப்பர் போல வழுக்கும் ரோடு.
சுத்தமான நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் ருசியான சரவணபவன் சாப்பாடு.
லுஇ  பிலிப், வான் ஹுசைன் வரிவரி சர்ட் மற்றும் பேண்ட்.
ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் ஹாயாக போய்ட்டு வர சொகுசு கார்.
இலவம் பஞ்சு அடைத்து தைத்த அருமையான மெத்தை. மெத்தைக்கோர் தத்தை. தத்தைக்கோர் முத்தம் நித்தமும்.
காத்து இல்லாத வெக்கை காலத்திலும் கம்பளி போர்த்தும் குளிரடிக்க ஒரு ஜிலுஜிலு ஏ.ஸி.
காண சகிக்காத முகத்தைக் கூட மிளர மற்றும் ஒளிரச் செய்யும் அழகு நிபுணத்துவங்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை உல்லாச சுற்றுலா.

ஸ்கூல் படி மிதிக்காமல் கோட்டை ஏறி கொடியை நாட்டும் பொதுவாழ்வு எனும் ஜால வித்தை.
ஒரு ரூபா சம்பளம் வாங்கி ஒரு தெருவில் பாதி வீதி கரையக் கட்டிய அரண்மனை.
சுவரில் மாட்டிவைத்த ஐம்பத்தி நான்கு இன்ச் ஆஜானுபாகு LED டி.வி.
மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் டி.வி சொரூபத்தில் வந்து பிழிய பிழிய அழவைக்கும் அரசிகள், செல்விகள், தங்கம்கள்....
காணி நிலத்திற்கு வெட்டுக் குத்து சண்டை போடும் ஒரே ரத்தங்கள்.
ஊரை ஏச்சு சம்பாதிச்ச மீதி இருக்கும் கட்டுக்  கட்டுக் கரன்சியில் இ.சி.ஆரில் பண்ணை வீடு.
ஒரு வீடு இருவீடானதும் ஒன்று இரண்டான கார், டீ.வி, பொண்டாட்டி.. மற்றும் இத்யாதி..இத்யாதிகள்...

நாட்டுக்கே ராஜா! எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!!
(நாட்டு ராஜா என்ற தலைப்பை பார்த்தவுடன் ராசாவை நம்பி மக்கள் ஏமாந்தால் கம்பெனி பொறுப்பல்ல..)

இனி காட்டு ராஜா...

இவருக்கு நான் ஒன்றும் அறிமுகம் தரத் தேவையில்லை. நீங்களே பாருங்களேன்.

இது பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் வசிக்கும் காட்டுவாசிகள். Survival என்ற அமைப்பினர் இப்படியும் இங்கே வாழ்கிறார்கள் என்று படம் எடுத்து போட்டிருக்கிறார்கள். பேட்டியில் ஒரு வயசாளியும் தேக்குமரத் தேகம் கொண்ட ஒருவரும் வெள்ளை மனிதர்கள் வந்து மரங்களை வெட்டி கொள்ளை கொண்டு போனது பற்றி பேசுகிறார்கள். பெரியவர் முகத்தில் என்ன ஒரு ஆக்ரோஷம். பெண்டு பிள்ளைகள் கள்ளம் கபடம் இல்லாமல் சுற்றித் திரிகிறார்கள். பேட்டி காண்பவரும் சப் டைட்டிலிலும் இந்தியன் என்றே விளிக்கிறார்கள். சிகப்பிந்தியர்கள் என்றாவது போட்ருக்கலாம். காடு அமோகமாக உள்ளது. நீர்வீழ்ச்சியும், விண்ணைத் தொடும் மரங்களும், செடிகொடிகள் நிறைந்த ஒளிபுகா அடர்ந்த பசுமை நிறைந்த காடுகளும், மாசற்ற சுற்றுப்புற சூழ்நிலையும், இயற்கை உணவுகளும்...  நாமதான் இதை விட்டுவிட்டு ரொம்ப தூரம் வெளியில் வந்துவிட்டோமோ!!




அமேசான் காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்..







இக்கரைக்கு அக்கரை பச்சை! இந்தக் காடுக்கு அந்தக் காடு சொர்க்கம்!!


-

Monday, February 14, 2011

லலிதபிரபாகர்

thin
திண்ணையில் உட்கார்ந்து திருடன் போல எக்கிப் பார்த்தால் பக்கத்தில் அவள் வீட்டு நிலைவாசல் தெரியும். தலைவாசல் தலையில் கட்டியிருக்கும் காய்ந்த மாவிலைத்தோரணம் காற்றுக்கு சடசடத்து அசைந்தாடுவது மிகத் தெளிவாக காதுக்கு தெரியும். அந்தக் காலத்து முஹலாய பாதுஷாக்கள் ஒய்யாரமாக வீற்றிருக்கும் திண்டு போல இருக்கும் சாய்ந்த திண்ணை அது. சிமென்ட் பால் ஊற்றி வழுவழுவென்று சலவைக்கல் தோற்றதுபோல பளபளவென்று ஜொலிக்கும். மார்கழில் உட்காரும் இடம் ஜில்லிட்டு குளிர் தலைக்கு ஏறும். மேற்கு பார்க்கும் வீட்டிற்கு வெளியே இலவச இணைப்பு மாதிரி இடது புறத்தில் வடக்கு பார்த்த சிங்காரத் திண்ணை அது. குறைந்தது நான்கு எஸ்.பி.பிக்கள் தாராளமாக உட்கார்ந்து கொண்டு சிரம பரிகாரம் செய்யும் அளவிற்கு விசாலமான திண்ணை. பாஸ்கி, விக்கி, ஆனந்த், பாச்சு ஆகியோருடன் ஸ்டாண்ட் இல்லாத சைக்கிளை அந்தத் திண்ணையின் ஓரத்தில் சாய்த்துவிட்டு ராத்திரி பத்து மணி கணேசா ரோட்வேய்ஸ் பஸ் ஸ்டாண்ட் போகும் வரை உட்கார்ந்து கதை அளந்துவிட்டுதான் வீட்டிற்கு போவான் பிரபாகர். அப்பவும் பாச்சு அப்பா வந்து வைஷ்ணவ சிம்மமாய் "போங்கோடா.. கோட்டான் மாதிரி கொட்டகொட்ட முழிச்சிண்டு..." என்று விரட்டியபின் கலைவார்கள். நல்ல தங்கமான பையன். வெள்ளை உள்ளம் படைத்தவன். மேனி நிறம் மட்டும் விவியன் ரிச்சர்ட்ஸ் கலர். கார்மேக வண்ணன். அட்டக் கரி. தொட்டு திருஷ்டிப் பொட்டு வைத்துக்கொள்ளலாம். கருப்பை சிகப்பாக மாற்ற பெண்கள் உபயோகப்படுத்தும் ஏழுநாட்களில் சிகப்பழகு க்ரீம் ஒன்று உபயோகிக்கையில் ஒரு விஷமக்காரன் "மாப்ள.. அப்புறம் நீ மொழுக்குன்னு லேடீஸ் மாதிரி ஆயிடுவே.. மீசை எல்லாம் மொளைக்காது.. எல்லோரும் உன்னை ஒம்போதுன்னு கூப்பிடுவானுங்க.." என்று கயிறு திரித்ததில் ஆண்மையின் அடையாளத்தை இழக்க விரும்பாமல் அந்த உபாயத்தையும் கைவிட்டான். கையில் கட்டியிருக்கும் சிகப்பு முடிச்சுபோட்ட முடிகயிறு மணிக்கட்டு அருகில் ஒரு திராவிடக் கட்சியின் கொடியை ரிஸ்ட் பான்ட் ஆக சுற்றிக் கட்டியிருப்பது போல காட்டும். கிராமத்துப் படங்களில் வரும் மனோரமா ஆச்சியின் பிள்ளையாக வரும் கார்த்திக் காஸ்ட்யூமில் இருப்பான்.

அது ஒரு ப்ரீ-டேலி காலம். கம்ப்யூட்டர் அப்போதுதான் சந்தைகளில் தனது கடையை பிளாட்ஃபாரத்தில் விரித்திருந்தது. பிரபாகர் ஒரு லோக்கல் அரிசி மண்டியில் ஆயுதபூஜைக்கு சந்தனகுங்குமம் அட்டையில் வைத்த லாங் ஸைஸ் தடியட்டை அக்கௌன்ட் புத்தகத்தில் கோடு போட்டு உச்சியில் "லாபம்" எழுதி புள்ளையார் சுழி கிறுக்கி மாசக் கூலிக்கு வியாபாரக் கணக்கு எழுதிவந்தான். ஆமாம். அவனே அதை சம்பளம் என்று சொல்லமாட்டன். டாண்ணு எட்டேமுக்காலுக்கு கடைக்கு போகலைன்னா "என்னா தம்பி.. கலெக்டர் உத்தியோகமா.. நினச்ச நேரத்துக்கு ஆட்டிகிட்டு வரே...." என்று பூங்கொத்து கொடுத்து வரவேற்காத குறையாக பட்டையும் சொட்டையுமாக வெள்ளை அண்டு வெள்ளையில் மொதலாளி வாசலில் நின்று முகமன் கூறி வரவேற்பார். காலை ஒன்பது மணிக்கு ஸ்கூல் மணி அடிக்கும் நேரத்தில் இருந்து மாலை ஆறு மணிக்கு ஃபிசிக்ஸ் டியூஷன் போகும் வரை அவனுக்கு ஆஃபிஸ் உண்டு. சே.சே. அதை ஆபிஸ் என்று சொன்னால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். அவனுக்கே நாம் கிண்டல் செய்கிறோம் என்று கோபம் வரும். யாருக்கு ஸ்கூல் மணி அடிக்கும்... யார் பிசிக்ஸ் டியூஷன் போவார்கள் என்று புருவம் நெறித்து கேட்கிறீர்கள். இல்லையா? இந்தக் கதையின் முதல் வரியில் ஒரு வீட்டு நிலைவாசப்படி தெரியப் பக்கத்து வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள் அல்லவா? அந்த நிலைவாசல் வீட்டுப் பெண். லலிதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பருவச் சிட்டு. போனவாரம் ஈரெட்டு முடிந்தவள். மேலும் கீழும் பார்ப்போருக்கு மூவெட்டாய் மூச்சடைக்க தெரிபவள். மான் விழி. தேன் மொழி. "படிச்சாலும் படிக்கலைன்னாலும் இன்னொருத்தன் கையில் அவளை பிடிச்சுக் கொடுக்க வேண்டியதுதானே" என்று அவள் பாட்டி அவள் அப்பா "மண்டு.. மக்கு ப்ளாஸ்த்ரி... ஆயி மாதிரியே இருக்கியே....." என்று அவளுக்கு அர்ச்சனை செய்யும்போது சப்போர்ட்டுக்கு வருவாள். அவர் திட்டுவது நூற்றுக்கு ரெண்டு மார்க் குறைத்து எடுத்த புத்திசாலிப் பெண்ணை. முன்னோர்கள் சூரியனைப் பார்த்து நேரம் அறிந்து கொண்டது போல இந்த லலிதாவின் நித்யபடி காரியங்களைப் பொறுத்துதான் நாளின் நேரம் கணிக்கக் கற்றுக்கொண்டான் பிரபாகர்.

"கர்..கர்..கர்.." என்று செயின் தன் கார்டோடு உரஸும் அவள் குட்டை சைக்கிளை இழுத்துக்கொண்டு அவன் கடைத் தாண்டி ஃபிசிக்ஸ் டியூஷன் போகும் போது அது "பிரபா..கர்.. பிரபா...கர்.. கர்..." என்று செல்லமாக கூப்பிடுவது போல இருக்கும் அவனுக்கு. அவன் நோட்டை மூடி பேனாவை சட்டையில் சொருகுவதர்க்கும் அவள் கடந்து போவதற்கும் நேரம் துல்லியமாக இருக்கும். கடைத் தெருவில் இருந்து நேராக கீழத் தெரு திண்ணைக்கு தஞ்சம் அடைவான். விக்கி வீட்டில் யாரும் இல்லை என்றாலும் அந்த திறந்தவெளி திண்ணையில் ஏறி சொகுசாக உட்கார்ந்துகொள்வான். அவன் துணைக்கு சைக்கிள் பக்கத்து சுவற்றில் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். தனியாக உட்கார்ந்திருந்தால் அப்படியே சூட்சும உடம்போடு லலிதாவும் அவனும் கிளம்பி ஆகாயமார்க்கமாக வெள்ளை ட்ரெஸ் தேவதைகள் இருகைகளையும் இறக்கையாக்கி பறக்க பல தேசங்களுக்கும் சென்று டூயட் பாடிவிட்டு சோர்வின்றி திரும்பி வருவான். வானத்தையே பார்த்துக்கொண்டு அக்காடான்னு உட்கார்ந்திருந்தான் என்றால் அண்ணன் தனது ட்ரீம் கேர்ள் உடன் கனாலோகத்தில் டான்ஸ் ஆடி சஞ்சாரிக்கிறார் என்று அர்த்தம். இரண்டு வருடங்களாக கடுமையான உழைப்பினால் அவளை நிழலெனப் பின்தொடர்ந்ததில் ஏதோ கிரிக்கெட் பிளேயர் மனோஜ் பிரபாகர் போல நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு லேடியின் பெயரை முன்னால் ஒட்டவைத்து லலிதபிரபாகர் என்றாகியிருந்தான்.

விக்கி வீட்டு சுவற்றில் மாட்டியிருந்த ஆங்கிலேயர் காலத்து ரொலெக்ஸ் "டிங்..டாங்" என்று ரெண்டு தட்டு தட்டி ஏழரை சொன்னதும் சைக்கிள் கர்கருக்க லலிதா வீட்டு வாசலில் ஒரு சின்ன குதி குதித்து பாவாடையில் கிரீஸ் ஒட்டாமல் ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டு இறங்கினாள். நுழையும் முன் மின்னலென ஒரு பார்வையை தூக்கி அவன்மேல் வீசிவிட்டு அதே வேகத்தில் உள்ளே போய்விட்டாள். பார்வை பட்டதும் அருள் வந்த பூசாரி போல பிரபாகர் உடம்பு ஜன்னி கண்டு ஆட "டேய். மாப்ள.. பார்த்துட்டு போறாடா... டேய்....யேய்..." என்று பல வினோத சப்தங்கள் எழுப்பி ஆனந்த கூத்தாட ஆரம்பித்தான். "பின்னாடி ஒரு தெரு நாய் தொரத்துச்சு... வீட்டுக்கு வந்தவுடனே ஒரு பயத்தல அது தொரத்துதான்னு திரும்பி பார்த்தாடா..உன்னைன்னு நினச்சுகிட்டியா" என்று கைகொட்டி சிரித்து நக்கலடித்தான் ஆனந்த். மறுநாள் அரிசி மண்டியில் கணக்கு எழுதிவிட்டு சைக்கிள் எடுக்கையில் "டிங்.டிங்.டிங்." என்று தொடர்ந்து மணியோசை எழுப்பி பார்வையாலும் கண்ணெறி போர் நடத்தினாள். அதோடு மட்டுமல்லாமல் இதழ்கள் எனும் சிப்பிகளை லேசாக திறந்து உள்ளே இருக்கும் முத்துக்களை வெட்கத்தோடு காண்பித்தாள். பிரபாகருக்கு பித்தம் தலைக்கேறியது. ரத்தம் உடம்புக்குள்ளே தாறுமாறாக ஓட ஆரம்பித்து தலை சுற்றியது. காதலியரின் கடைக்கண் பார்வை படும் எல்லோருக்கும் ஏற்படும் அந்த உன்னத நிலைமையை அடைந்து ஒன்றும் புரியாமல் சித்தப்ரமை பிடித்தவன் போல் கொஞ்ச நேரம் முயக்கமுற்றான். மீண்டும் ஒருவாராக நினைவுக்கு வந்து மனோவேகத்தில் அவளை சைக்கிளில் பின்தொடர்ந்து இருவரின் வேதியலும் ஒர்க் அவுட் ஆக அவளை இயற்பியல் சிறப்பு வகுப்பிற்கு ஆண் துணையாய் கொண்டுபோய் பத்திரமாக விட்டான்.

அன்றிலிருந்து தெருத் திண்ணைக்கு வருவது சுத்தமாக நின்று போயிற்று. சாயந்திரம் கடையில் இருந்து நேராக இ.வகுப்பு அப்புறம் கைலாசநாதர் கோயில் முச்சந்தியில் அற்பசங்கைக்கு ஒதுங்கும் இடத்திற்கு ஒரு பத்தடி விட்டு இரண்டு சைக்கிளையும் முட்டி நிறுத்திவிட்டு காதல் மொழி பேசி தினமும் வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் பிரபாகர். ஏழரைக்கு வந்து கொண்டிருந்த லிலிதா எட்டு அடித்து வர ஆரம்பித்தாள். மார்க் ஆசை பிடித்த லலிதாவின் தகப்பன் கூடுதல் நேரம் மகள் விழுந்து விழுந்து படிக்கிறாள் என்று சந்தோஷப்பட்டான். காதலில் விழுந்து டியூஷனுக்கு போகிறேன் என்று ஆறுமணிக்கே ஊர் எல்லையில் இருக்கும் பேச்சியம்மன் கோயில் தாண்டி இருக்கும் அந்த நூறு வயது நிரம்பிய தொந்தி பெருத்த புளியமரத்தின் பின்னால் சிரித்தார்கள், கொஞ்சினார்கள், கெஞ்சினார்கள், திட்டினார்கள், வாழ்த்தினார்கள், முத்தமிட்டார்கள். வாலிபம் இழுத்த இழுப்புக்கெல்லாம் போனார்கள்.

*********
அன்று ராத்திரி பத்துமணிக்கு அரட்டை கச்சேரி முடித்து விக்கி, ஆனந்த் எல்லோரும் நடையை கட்டுகையில் லலிதாவின் அப்பா கை வைத்த பனியனோடு வெளியே வந்து துண்டால் வாய்பொத்தி சின்னக்குழந்தை போல கேவிக் கேவி அழுதார்.  "என்ன சார் ஆச்சு?" என்று கேள்விக்கு நேற்று இரவு வீட்டில் நடந்த ரகளையையும் லலிதா பிரபாகர் பற்றியும் விவரமாக சொன்னார். "இப்போல்லாம் பிரபாகர் இங்க வரது இல்லை சார்! ரோட்ல எங்களைப் பார்த்தாலும் பேசறதில்லை..." என்று சொன்ன விக்கியிடம் நேரம் காலம் தெரியாமல் எப்போதோ படித்த ஷேக்ஸ்பியர் இங்லிஷில் "வாட்? பார்டி Elopedஆ?" என்று அவருக்கு நேராகக் கேட்டு எல்லோரையும் நெளியவைத்தான் ஆனந்த்.
**********

தினமும் காலையில் உயிரியல் டியூஷன் போகும் கலா அந்த ஞாயிற்றுக்கிழமை லலிதா வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்கள் வீட்டில் காதல் துக்கம் விசாரித்து விட்டு வரும்போது வாசலில் பாச்சாவுடன் நின்று வேடிக்கைப் பார்த்த விக்கியிடம் "பாவிப்பய... காலையில என்கூடவும்... சாயந்திரம் இவகூடவும் சந்தோஷமா இருந்துட்டு போயிட்டானே.. இவன் நாசமாப் போக" என்று சபித்துவிட்டு அழுது வயிற்றெரிச்சலுடன் போனாள். இப்படி பல பெண்களைக் கவிழ்க்கும் கலையில் கில்லாடியாக திகழும் அவன் லலிதப்ரபாகரா? அல்லது கலாப்ரபாகரா? என்று புரியாமல் தவித்தான் விக்கி. கலா தன் களையிழந்து போய்க்கொண்டிருந்தாள். "லலிதா எப்போ திரும்பி வருவாள்?" என்று பாச்சா விக்கியின் தோளைச் சுரண்டி கேட்டுக்கொண்டிருந்தான்.

திண்ணைப் பட நன்றி: http://muralikkannan.blogspot.com/

-


Sunday, February 13, 2011

காதல் மிக்ஸ்சர்

நாளாம் நாளாம் திருநாளாம் என்று கண் நிறைய காதலுடன் வாய் ஒழுகும் ஆறாக ஜொள்லோடும் யுவதிகள் பின்னால் காதல் அடிமையாக யுவன்கள் அவர்களை அழுது தொழுது காலடி பின் தொடர்வார்கள். அவனியெங்கும் காதலர்களின் புண்ணிய தினமாக கொண்டாடப்படும் பெப்ரவரி பதினான்கு நாளைக்கு. டி. கல்லுப்பட்டியிலிருந்து புதுடில்லி வரை நாளை ரோஜாப்பூவுக்கு ஏக மவுசு இருக்கும். கருப்பு ரோஜா செல்வமணியை காதலித்து திருமணம் புரிந்துகொண்டார் என்பது தெரிந்தும் சிகப்பு ரோஜாப்பூவிற்கு தனி மரியாதை. அனேக பேர் மணமில்லாத ரோஜாப்பூவை மனமில்லாமல் பரிமாறிக்கொண்டு காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்.

நாளை "காதல் வந்துருச்சு ஆசையில் ஓடிவந்தேன்.." என்று கல்யாணராமன் பாணியில் ரோசாப்பு கொடுத்து தங்களது காதலன் ஸ்டேட்டசை தக்கவைத்துக் கொள்வார்கள். இன்னமும் நிறைய காதலர்கள் இருட்டுக்குள் தான் பேசிக்கொள்கிறார்கள். தெருவிளக்கு இல்லாத இருளோன்று இருக்கும் தெருமூலையில், சுவர் ஓரமாய் நிர்கதியாக நிற்கும் கார் மறைவில், பீச்சாங்கரை படகு மறைவில், கல்யாணம் ஆகும் முன்னரே ரெஸ்டாரன்ட் ஃபேமிலி ரூம்களில் என்று ஒதுங்கிவிடுகிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பதால் வெளிச்சம் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை தான். அதனால் இதையெல்லாம் கூட நாம் மன்னித்துவிடலாம். ஆனால் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு பள்ளிப் பருவம் தாண்டாத பிஞ்சுகள் சைக்கிள் பின்னாலோ பைக் பில்லியனிலோ பல்லி போல ஓட்டிக்கொண்டு முன்னால் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது நெஞ்சு பதபதைக்கிறது.

ஸ்டாப் அட்வைஸ் என்று எல்லோரும் சேர்ந்து இரைவது காதில் விழுகிறது.

காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி. மீசைக்காரன் சொன்னதை அமுல் படுத்தியவன் நான். காதலர் தின சிறப்பு பாடல்களாக என் உள்ளத்தை தொட்ட சில..


முதன் முதலில் பார்த்தேன்..
தேவா ஏதோ ஒரு ஹிந்தி படத்திலேர்ந்து காப்பி அடிச்சாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது.. ஸ்டார் வால்யூ இல்லாம சிம்பிளா ஜோக்கா எடுத்த படம் ஆஹா.




அப்டி பார்க்கதுல்லாம் வேணாம்... 
அழகுக் கோணல் வாய் சவுந்தர்யா ஆர்.பார்த்திபன்.... ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன் புத்தகத்தில் அச்சாவேன்..  என்ற பழனி பாரதியின் அமர்க்களமான வரிகளுடன்... ராஜா... இளையராஜா இசையில்...


காதலின் தீபம் ஒன்று.. 
எஸ்.பி.பி இளையராஜா கூட்டணியில் விளைந்த அதி அற்புதமான பாடல்.. இடை இடையே வரும் வயலின் குழல் இரண்டும் பாழும் மனதை பாடாய்ப்படுத்துகிறது. என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன்...


வெள்ளி மலரே.....
ஏ.ஆர். ரஹ்மான் எஸ்.பி.பி .. வைரமுத்துவின் வைரவரிகள்.. அற்புதம்..  இளந்தளிரே..இளந்தளிரே.. என்று எஸ்.பி.பி ஆரம்பிக்கும் கட்டம்... அடடா...



நறுமுகையே நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.
உன்னிகிருஷ்ணன் - பா.ஜெயஸ்ரீ இருவரும் வைரமுத்துவின் காவியக் காதலுக்கு குரல் கொடுத்தது போல..  மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன... செம்புலப் பெயல் நீர் ... அன்புடை நெஞ்சம் கலந்ததுவே... இலக்கியக் காதல்... காட்சி அமைப்புகள் அற்புதமான ஒன்று... ரஹ்மானின் இமாலய இசை.. நடுநடுவே வரும் அந்த ஃப்ளூட். சூபெர்ப்.



எந்தன் நெஞ்சில் நீங்காத...
யேசுதாஸ்.. ஜானகி..  பனியில் நனையும் மார்கழிப் பூவே... வரிகள் வாலியுடையதா வைரமுத்துவுடையதா.. உதடுகள் உரசிடத்தானே வலிகளும் பறந்திடும் மானே...




பின் குறிப்பு: இன்னமும் நிறைய உள்ளது. காதலர் தினத்திற்காக இது ஒரு சம்ப்ரதாய பதிவாகி விட்டது. காதல் ரசம் சொட்ட கதை ஒன்று எழுதி வைத்திருந்தேன்.. டாஷ் போர்டு கிளீன் செய்யும்போது சற்றுமுன்னர் அழித்துவிட்டேன். வாலண்டைனுக்கு பிடிக்கலை போலருக்கு. நீங்கள் தப்பித்து விட்டீர்கள்.

-

Thursday, February 10, 2011

மன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே

rvs alone
ஆர்.வி.'எஸ்.'
கன்னிப் பருவத்திலே அப்படிங்கற மாதிரி பள்ளிப் பிராயத்திலே என்று ஆரம்பித்துவிட்டேன். அழகி மற்றும் தங்கர்பச்சான் போன்றோரின் யதார்த்த படங்களில் வருவது போல "ஓரோன் ஒன்னு" என்று மண் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து ராகம் பாடி குனிந்து தலை தரையை முட்டி நிமிர்ந்தெழுந்து வாய்ப்பாடு சொல்லும் பள்ளிப் பதிவு இல்லை இது. கை கால் ஸ்திரமாக வளர்வதற்கு முன்னால் ப்ளே ஸ்கூல், கே.ஜி என்று  அனுப்பி ஐ.ஐ.டிக்கான போஷாக்கான மூளை வளர்ப்பில் ஈடுபடும் இக்காலப் படிப்பிற்கும் மன்னையில் நாங்கள் படித்ததற்கும்(?) எவ்வளவு வித்தியாசம் என்று ஆச்சர்யபட்டு புருவம் தூக்கி சொன்னால் நான் ஏதோ மொஹஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் படித்தவன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடும். மேலும் நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் CBSE, Matriculation, State, வார்டு, டிஸ்ட்ரிக்ட், நேஷனல் போன்ற பல தினுசுகளில் போதிக்கும் முறைகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கோட் அடித்து ஒரே கிளாசில் ஒன்பது வருஷம் உட்கார்ந்திருக்கும் உதவாக்கரை மாணவன் கேஸாக இதையே பதிவு பூரா எழுதி போரடித்துவிடுவோம். ஆகையால் 'ஜோ' மழைக்கு சொல்ப பேர் ஒதுங்கும் படியாக இருந்த ஒரு கூரைப் பள்ளியில் நான் புது ட்ராயர் சொக்காவுடன் நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன் சேர்க்கப்பட்டதிலிருந்து தொடங்குவோம்.

சின்னக் கான்மெண்டு என்று தான் வழிவழியாக அந்தப் பகுதியில் இருந்த எல்லோரும் அப்பள்ளியை கூப்பிட்டு வந்தார்கள். பெயருக்கேற்றாற்போல் உப்புக்காரத் தெரு இறக்கத்தில் வலது பக்கம் கூரை வேய்ந்த கொட்டாயும் இடது பக்கம் கான்க்ரீட் கட்டிடமுமாக சின்னதாக ரெண்டுபட்டிருந்தது அந்த ஸ்கூல். கூரைக் கொட்டாய் நிச்சயம் புராண காலத்து குருகுலவாசத்தின் ஃபீலை கொடுக்கும். மழை பெய்தால் கீழே மியூசிக் கேட்கும். பசங்கள் உட்காராத எறும்பூரும் ஓரங்களில் கார்பொரேஷன் பைப்புகளில் தண்ணீர் வருவது போல லேசாக சொட்டும். தமிழ் மீடியம். ஆனால் "உள்ளேன் ஐயா"-வெல்லாம் கிடையாது. சிலர் "ப்ரஜன்ட் டீச்சர்" இன்னும் சிலர் "ப்ரஸண்ட்  டீச்சர்". ஐந்தாம் கிளாஸ் படிக்கும் போது புன்னகை அரசியாய் பாடமெடுத்த சகாய மேரி டீச்சர் இன்னமும் நினைவில் சிரிக்கிறார்கள். சிடுசிடுவென்று ராணுவ ஒழுக்கம் கற்றுக்கொடுத்த தையல்நாயகி டீச்சரும்தான். சுவற்றில் கருப்பு அடித்து பார்டர் கட்டிய போர்டில் ஈசான்ய மூலையில் கட்டம் போட்டு பதிவு, வருகை நிரப்பச் சொல்வார்கள். அதில் எழுதினால் அவன் அந்த வகுப்பில் பெரியாள். இந்திய கிராமங்களின் அனேக பள்ளி வளாக வாசலைப் போல் புழு நெளியும் நான்வெஜ் இலந்தைப்பழம், தண்ணீர் குடித்தால் தொண்டையில் ஜில்லிடும் அதியமான் அவ்வைக்கு பரிசளித்த பெரிய நெல்லிக்காய், அந்த பிஞ்சு வயசிலேயே கண்ணடிக்க வைக்கும் அருநெல்லி, முருகன் அவ்வைக்கு கொடுத்த சுட்ட நாகப்பழம் என்று பலசரக்கும் அஞ்சு பத்து பைசா டினாமிநேஷனில் கிடைக்கும். அவித்த மரவள்ளிக் கிழங்கு, கமர் கட்டு, ஜவ்வு மிட்டாய் போன்ற ஈ மொய்க்கும் பண்டங்களும் வயதான பல்லு போன தொள்ளைக் காது ஆயாக்கள் கையை விசிறி விசிறி விற்பார்கள்.

rvs-nostalgia1
அதே ஆர்.வி.எஸ்.
மூன்றாவது படிக்கும் போது முன்னோர் நினைப்பில் ஜானி கூரைக்கொட்டையின் ஒவ்வொரு உத்தரக் கம்பமாக தொங்கி ஊஞ்சலாடி தாண்டி எனக்கும் ஆவலைத் தூண்டியதில் நானும் அந்தரத்தில் கொஞ்ச நேரம் ஹாயாக ஆடினேன். ஒன்று ரெண்டு என்று லாவகமாக ஆடித் தாண்டி போகையில் மூன்றாவது கம்பத்தில் ஏற்கனவே எனது விதி குடியேறி மொழுக்கென்று வழுக்கியதில் கைநழுவி 'சொத்'தென்று கீழே விழுந்து ரெண்டு கையையும் முறித்துக் கொண்டேன். மரண வலி. கடைசி பெல் அடிக்கும் வரை பொறுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மூச்சுக் காட்டாமல் புத்தக மூட்டையை ஹால் ஓரத்தில் தூக்கி கடாசிவிட்டு இரு கையையும் தொடைகளின் இடுக்கில் சொருகிக்கொண்டு உடம்பை சுருக்கி படுத்துவிட்டேன். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. நேரமாக நேரமாக கை புசுபுசுவென்று ஸ்பினாச் தின்னும் போப்பாய் தி செய்லர் போல வீங்கி முறிந்ததை காட்டி கொடுத்தது. கம்பத்தில் ஆனந்த ஊஞ்சலாடிய கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டி பதினைந்து நாள் கன்னூஞ்சலாட விட்டார்கள். அதன் பின்னர் யாராவது கம்பியில் அல்லது கம்பத்தில் வானரமாய்த் தொங்கி ஆடிப் பழகினார்கள் என்றால் AVM சரவணன் போல இருக்க கைகட்டி கண் மட்டும் பார்க்க பழகிக்கொண்டேன்.

பெரிய கான்மெண்டு என்று ஒரு விசாலமான அழகிய ஸ்கூல் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் தங்கச்சிகளும் தாவணி போட்ட பெரிய அக்காக்களும் படிப்பது என்பது எங்கள் ஏரியாவிலிருந்து பெரிய ஸ்கூலிற்கு தன்னந்தனியே சைக்கிள் ஓட்டிக்கொண்டு போனபோது தான்  தெரிந்தது. முழு பேண்ட் போட்ட நிறைய பெரிய கிளாஸ் படிக்கும் அண்ணாக்கள் குறுக்கு வழியில் ஸ்கூலுக்கு போகாமால் பஸ் ஸ்டாண்ட் சுற்றி அக்கா தங்கைகள் படிக்கும் அந்தப் பள்ளி வழியே 'லுக்' விட்டுக்கொண்டே வந்த மர்மம் எனக்கு அப்போது விளங்கவில்லை. தலை சீவுதல் ஒன்றே தங்களின் தலையாய கடமை போல் கையாலும் உள்ளங்கை அளவு சீப்பாலும் கபாலத்தில் வரி விழும்படி கை ஓயாமால் வாரிக்கொண்டே இருப்பார்கள். பெரிய கான்மெண்டுக்கு முன்னால் தங்களுடைய நட்புகளின் கடைகளில் ஒரு நிமிடம் ஒதுங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டு ரெண்டு இன்ச் பவுடர் பூசி தலைவாரி மீண்டும் பளிச்சென்று சைக்கிலேறிப் புறப்பட்ட மன்மத அண்ணாக்கள் பலரை அப்போது விஷயம் தெரியாமல் வியப்பாக கண்விரிய பார்த்திருக்கிறேன்.

பெரிய லாங் ஸைஸ் ரெகார்ட் நோட்டுகளை மார்போடு வாரி அனைத்து குனிந்த தலை நிமிராமல் கொவ்வைச் செவ்வாய் மூடி செல்லும் வெள்ளைத் தாவணி நீல நிறப் பாவாடை சீருடை அக்காக்கள் பின்னாலேயே போய் 'டிங்கி..டிங்கி..' என்று சைக்கிள் மணி கழண்டு விழும் வரை அடித்தும் "டேய்..கோபாலு...." என்று தெருமுனை திரும்பும் முகம் தெரியாத நண்பனை தொண்டை கிழிய கத்தி கூப்பிட்டும் அக்காக்களின் கவனத்தை தன் வசம் ஈர்க்க முயலுவார்கள்.  பதிலுக்கு "க்ளுக்" என்று நகைத்து பக்கத்து வாண்டு தங்கைகளிடம் பேசிக்கொண்டே தான்பாட்டுக்கு மான் போலத் துள்ளி துள்ளி போய்கொண்டே இருப்பார்கள். அந்தத் தளிர் சிரிப்பு கிடைக்கப்பெற்ற அண்ணாக்கள் அன்று முழுவதும் போதமுற்று இருப்பார்கள். அந்தப் பெண்கள் படிக்கும் பள்ளியை தீவிரமாக முற்றுகையிடுவது தேசிய மேனிலை பள்ளி மற்றும் பின்லே மேனிலைப் பள்ளி என்ற இரண்டு ஆண்கள் போகும் பள்ளிகள். தேனிருக்கும் பூவை சுற்றி வண்டுகள் ரீங்காரமிட்டு பறப்பது போல மகளிர் எண்ணிக்கையை விட காளைகளின் டிராஃபிக் அந்த ரோடில் நெட்டித் தள்ளும்.

nhss
ரெண்டு வருஷத்துக்கு முன்னால் ஷூட் பண்ணியது. இந்தக் காம்பவுண்டு அப்ப இவ்ளோ பெருசு இல்லை.
டென்னிஸ் ராக்கெட்டுகளுக்கு நெட் பின்னும் சாமி கடை எங்கள் தே.மே பள்ளி காம்பவுண்டு சுவற்றுக்கு பத்தடி தள்ளி இருக்கும். உறுதியாக ஆறரை அடி இருப்பார். எங்கள் ஊர் பெரியகோவில் மூலவர் பரவாசுதேவர் மாதிரியான நெடிதுயர்ந்த ஆகுருதியான சரீரம். மஞ்சள் வெள்ளையில் நெற்றி நிறைய வடகலை நாமம். எப்போதும் எட்டுமுழம் வேஷ்டியுடன் இருப்பதால் மேல்சட்டை அணியா தேகம் முழுவதும் சத்யராஜ் போல சுருட்டை சுருட்டையாய் இருமடங்கு அடர்த்தியான கேசம். ஜடைப் பின்னி ரிப்பன் கட்டலாம். கடையில் பிரதானமான ஷெல்பில் நடுநாயகமாக இப்போதைய 36 இன்ச் டீ.வி பொட்டி போல வால்வ் ரேடியோ ஒன்று எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். மாலை 6:30-க்கு மாநிலச் செய்திகள் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் இருந்து அங்கே ஒலிபரப்பாகும். மற்ற நேரங்களில் தெரு கிரிக்கெட் கமெண்டரி ஒலிபரப்பினால் கூட கர்மஸ்ரத்தையாக காது கொடுத்து கேட்பார். அப்படி ஒரு கிரிக்கெட் பித்தம் பிடித்த வெறியர். ரீசஸ் பீரியடில் காம்பௌண்டை ஒட்டி நின்றுகொண்டு "ஸ்கோர் என்ன?" என்று கையை என்ன போஸில் சைகையால் கேட்டால் சளைக்காமல் கேட்ட அத்துணை பேருக்கும் அன்பாக ஸ்கோர் சொல்வார்.

சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளின் அப்துல் ஜபார், கூத்தபிரான், ராமமூர்த்தி போன்றோரின் சுந்தரத் தமிழ் கமேன்ட்டரியை சத்தமாக வைத்து ஒரு மாய சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை மன்னைக்கு வரவழைத்து விடுவார். சாரியின் சிறப்பு வர்ணனை அவர் உச்சரிப்பில் கொஞ்சம் காதில் விழாமல் தகராறு பண்ணும். சட்டென்று புரியாது. பெரியவர் சாரி எல்லா ஆட்டக்காரர்களையும் "அவன்" "இவன்" என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவார். பெல் அடித்தாலும் கரவொலியோ "ஹோ.." என்ற சப்தமோ நம்மை நிறுத்திவிட்டால் ஒன்றுக்கு கூட போகாமல் நின்று கேட்டுவிட்டு வகுப்புக்கு ஓடுவோம். கேட்பவர்களின் ஆர்வம் அதிகமாகி நச்சரிக்க ஆரம்பித்த தருணங்களில் ஒரு அட்டை போர்ட் வாங்கி  அதை ஸ்கோர் போர்டாக்கி எழுதி தொங்கவிட்டு விட்டார். இந்த முறையில் வகுப்பின் ஜன்னலிளிருந்தும் லேட்டஸ்ட் ஸ்கோர் பார்க்க வசதியாயிருந்தது.

மன்னையின் அதிகாரப் பூர்வ ஸ்கோரிங் பார்ட்னர் திருவாளர் சாமி.

தே. மேனிலைப் பள்ளி நாட்களில் மற்றுமொரு முக்கியமான அம்சம் பகவத் கைங்கர்யம். பெரியகோவில் ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனி தேர். அம்பாள் படி தாண்டா பத்தினி. உள் பிரகாரத் தேர். ஸ்வாமிக்கு வெளியே மாட வீதி பெரிய தேர். இரண்டு இமாலயத் தேர்களை இழுக்கும் கட்டளை எங்கள் பள்ளியுடையது. இன்றுவரை தொடருகிறது. ஆறிலிருந்து பன்னிரண்டு வரை படித்த ஏழு வருடங்களும் அந்தத் தேர் வடம் பிடித்து மீண்டும் நிலைக்கு வரும் வரை இழுத்திருக்கிறேன். தேர் அன்று அணிந்த யூனிஃபார்ம் மீண்டும் உடுத்த முடியாது. எவ்வளவோ பாட்டிகள் நடுவில் வந்து தேர் வடம் தொட்டு கும்பிட்டு போவார்கள். மஞ்சள் கிழங்கு சட்டி பானை விற்பார்கள். மாட வீதிகளில் சில வீடுகளில் நடுவில் நிறுத்தி அர்ச்சனை செய்வார்கள். எல்லாம் முடிந்து ஆறு ஆறரை மணிக்கு தேரை நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி கீழே இருந்து அண்ணாந்து ராஜகோபாலனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு வீடு சென்றது இன்னமும் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது.

முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் தேர் இழுத்த என்னை இதுவரை வாழ்க்கையில் சௌக்கியமாக இழுத்து வந்திருக்கிறான் ராஜகோபாலன். நான் நிலைக்கு வரும் வரை இனிமேலும் கட்டாயம் இழுப்பான். கோபாலனுக்கு அனேக கோடி நமஸ்காரம்.


பின்குறிப்பு: 
பதிவு முழுக்க ஸ்கூலுக்கு போனதைப் பற்றியும் அண்ணாக்களின் அட்டகாசங்கள் பற்றியும் ஸ்கோர் கேட்டதை பற்றியும் தேர் இழுத்ததை பற்றியும் எழுதினீர்களே தவிர நீங்கள் படித்ததை பற்றி எதுவும் இல்லையா என்று கேட்போருக்கு.. மீண்டும் உங்களுக்கு அந்த அறிவியல், வரலாறு புவியியல், ஆங்கிலம் படிக்க ஆசையா? என்னால முடியாதுங்க. டெர்ரர் தாண்டான் சார் முட்டி போட வைப்பார்! ஜாக்கிரதை!!

(ஆசிரியர்களைப் பற்றியும் வகுப்பு ரகளைகள் (ஏராளம்!! ஏராளம் !!!!) பற்றியும் எழுத ஆசை. இதுவே ஆஞ்சநேயர் வாலாக வளர்ந்துவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொண்டேன். பிறிதொரு பதிவில் முடிந்தால் அட்டகாசங்கள் மட்டும் எழுதுகிறேன்.)
-

Tuesday, February 8, 2011

ஒரு பிசாத்து பதிவரின் நேர்காணல்

நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க்  சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.


இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.

உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.

பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.  ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.


இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்...  இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.

பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.
myphoto

பட குறிப்பு: ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒரு நல்ல கேமேராவினால் என்னைக் கூட அழகாக படமெடுத்த அந்த புகைப்படக்காரரை இருகை கூப்பி வணங்குகிறேன்.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails