Showing posts with label மொழிமாற்றம். Show all posts
Showing posts with label மொழிமாற்றம். Show all posts

Friday, March 9, 2012

கணவர்களின் லக்ஷணங்கள்

மனைவிகள் கணவ ஜந்துக்களுடன் தினமும் பழகித்தான் பார்க்கிறார்கள்
அவைகளுடன்தான் தினந்தோறும் டிஃபனும் டின்னரும் போஜிக்கிறார்கள்
அவர்கள் அவசியமில்லாமல் குழந்தை வளர்ப்பில் மூக்கை நுழைப்பார்கள்
மண நாட்களை மறந்துத் தொலைப்பார்கள்
மொத்தமாக சொதப்பியதை ஒரு காவிய முத்தத்தில் ஈடுகட்ட நினைப்பார்கள்
பொறுக்கமுடியாமல் அவர்களது அபத்தத்தை இடித்துரைத்தால்
பரமசாந்தமாக ஒரு பார்வை சிந்தி குமிழ் சிரிப்பை உதிர்ப்பார்கள்
இவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தபிறகும் மனைவி
சொல்பநேரத்தில் சமாதானமாகி விடுவார்கள் என்று பகற்கனவு காண்பார்கள்
கோப்பையில் ஊற்றுவதற்குள் சரக்கை அப்படியே சரித்துக்கொள்வார்கள் 
சற்றே அவர்கள் பயணிக்கும் பாதையை கவனிக்கத் தொடங்கினால் உங்களால் பலிகடாவாகப் போகும் தியாகசீலர்கள் போல வெளியே நடிப்பார்கள்
கோல்ஃப் விளையாட உற்சாகமாக ஐந்து மைல் நடப்பவர்கள் வீட்டுக்கு கூடமாட உருப்படியாக ஒத்தாசை செய்வதில் வாழைப்பழ சோம்பேறியாகிவிடுவர்
பெண்களுக்கு காரணகாரியங்களும் புரிவதில்லை மதிநுட்பமும் பத்தாது என்று பினாத்துவார்கள்
பத்தினிகள் பின் தூங்கி முன் எழ சந்தர்ப்பமே தரமாட்டார்கள்
நீங்கள் பூசும் சாதாரண சாயங்களுக்குக்கூட உங்களை பேயோட்டும் சாமியாரினியாக நினைப்பார்கள்
பிறத்தியார் வியாதியை சொஸ்தப்படுத்துவதில் தீரராகவும் வீரராகவும் இருப்பவர்; தும்மலும் வயிற்றுவலியும் தனக்கென்று வந்துவிட்டால் மரித்து விடும் அவஸ்தையில் வியாதி கொண்டாடுவார்கள்.
இருவரும் ஏகாந்தமாக இருக்கையில் உங்களைப் பற்றி சட்டை செய்யாதவர்கள் பார்ட்டியில் சாண்ட்விச்சும் வெண்ணையுமாக படைத்துப் புருஷ சேவை நாடகம் புரியும் போது அவர்களை நாலு சாத்து சாத்தத் தோன்றும்
இல்வாழ்வில் கணவர்கள் ஹிம்சையானவர்கள்
இப்படியாக பல பிணக்கங்கள் இருந்தாலும் கடவுளின் அனுக்கிரஹத்தால் மனைவியரின் அன்பில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆக்டன் நாஷை வாத்தியார் அறிமுகப்படுத்திதான் தெரியும். இரத்தினச் சுருக்கமாக நாலைந்து வரிகளில் மண வாழ்க்கை சிறக்க என்று க.பெ-ம்மில் ”தப்பென்றால் ஒத்துக்கொள்! சரியென்றால் பொத்திக்கொள்” என்று நாஷை தமிழ்ப்படுத்தி அறிமுகப்படுத்தியிருந்தார். அவரது அறிமுகங்கள் என்றுமே சோடை போனதில்லை. நாஷைப் படித்ததில் எனக்குப் பிடித்த ஒன்றை இங்கே நானும் தமிழ்ப்’படுத்தி’யிருக்கிறேன். வாத்தியார் is uncomparable!!


நேற்றைக்கு மகளிர் தினத்தில் அடக்கஒடுக்கமாக இருந்த ஒருசில கணவன்மார்களின் சுயரூபம் இன்று பலருக்குத் தெரிந்திருக்கலாம். இந்தக் கவிதை அதற்கு சான்றாகவும் இருக்கலாம். நாஷின் ஒரிஜினல் இங்கே: http://www.poemhunter.com/poem/what-almost-every-woman-knows-sooner-or-later/


-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails