Friday, November 15, 2013

ரோல் மாடல்!

”நீ மாமா.. நீ மாப்ளே... ” என்று விஜய் டிவியில் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துப் பாடியபோது மொத்த அரங்கமும் கரகோஷித்தது. தத்தம் வீட்டு சோஃபாக்களில் சாய்ந்து கொண்டு காலாட்டி ரசிப்பவர்களுக்கும் தீப்பொறி பட்ட கேஸ் அடுப்பு போல பக்கென்று அந்த சந்தோஷம் பற்றிக்கொண்டது. அதில் பாடிய திவாகர் என்பவரின் ப்ரொஃபைல் AV ஒன்றைத் திரையில் காட்டினார்கள். இதைப் பார்க்காமல் விட்டவர்கள் விஜய்டிவியின் யூட்யூப் பக்கத்தில் பகிரும்போது ஓசியில் ஆஃபீஸிலோ அல்லது குடும்பத்தினர்களை சுற்றி உட்கார வைத்துக்கொண்டு வீட்டிலேயோ பார்ப்பதற்கு பரிந்துரைக்கிறேன்.

பரம்பரையில் சங்கீதத்தின் வாசனையே தெரியாத ஒரு தினக்கூலி குடும்பத்தில் பிறந்து, சைக்கிளில் தண்ணீர் கேன் போட்டு, இராத்திரிகளில் பால் வண்டி ஓட்டி படித்து, தன்னுடைய அப்பா[கொத்தனார் வேலை செய்கிறார்], அம்மா[சித்தாளோ, பெரியாளோ], அண்ணனின்[லேத்தில் பணி புரிகிறார்] தியாகத்தினாலும் பாசத்தினாலும் மேடையேறிப் பாட வந்திருப்பதைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரக்கனுடைய மனதையும் அசைக்கும் நிஜம்! மெய் சிலிர்க்கிறது. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவரது கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறது.

உள்ளங்கையில் வைத்துத் தாங்கி, கண்ணுக்கு கண்ணாக வேளாவேளைக்கு இன்னமுது ஊட்டி, ”என்ன வேணாலும் வாங்கிக்கோ ராசா..” என்று எல்லாக் கடையிலும் பல சலுகைகள் காட்டினாலும் எவ்ளோ தூரம் முன்னுக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஸ்வயம்மை சுட்டெரிக்கும் தீராத கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

ஒருக்கால் அத்தியாவசியத் தேவைகள்தான் மனிதனின் வெற்றிக்கு அச்சாரம் போடுகிறதோ? வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தியானவன் அந்த திருப்தி சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்க மனதிருப்பதில்லையோ? நீதிபதிக் குழுவில் இடம்பெற்றிருந்த பின்னணிப் பாடகி சுஜாதாவின் மகள் வெளிப்படையாகச் சொன்னார் “உங்களை நான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளப்போகிறேன்” என்று. நானும் அதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் அனைவரும் பார்க்க வெட்ட வெளிச்சமான சபையில் ஒளிபரப்பிய விரகதாப ”பொன்மேனி உருகுதே”வினால் [பார்க்கவேண்டிய, கேட்கவேண்டிய வயதினர்க்கு அது அற்புதமான பாட்டு என்பதில் வேறு கருத்துக் கிடையாது. ஜானகியின் டெலிவரியும் எக்ஸ்ப்ரஷன்ஸும் எக்ஸ்ட்ரார்டினரி! ] தீட்டுப்பட்டச் சேனலுக்கு திவாகரின் இன்றைய வெற்றிப் புராணத்தால் புண்ணியாவசனம் செய்துகொண்டார்கள் விஜய் டிவிக்காரர்கள்.

வாழ்க!

கேஜே! ஜேஜே!

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோகா செய்யும் நுட்பத்தோடு பாடலில் கவனத்தைச் செலுத்தினேன். “மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்..... மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்” என்று தேனாய் காதில் விழுந்தது. இன்பம்! இன்பம்! செவிக்கின்பம். மனதிற்கின்பம். எதற்காக ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் என்பது பின்வரும் இரண்டு பாராக்களில் இருக்கிறது.

கர்மபலனில் நம்பிக்கையில்லாத பத்து பேரைக் குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து, காலையிலோ மாலையிலோ சென்னையின் பீக் ஹவர் ட்ராஃபிக்கில் காரோட்டச் சொன்னால், வண்டியை விட்டு இறங்கியவுடன் மட்டையாய் மடங்கிய காலோடு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று துண்ணூறு போட்டுக்கொண்டு பயபக்தியுடன் ”இனி பிறத்தியாரை இம்சிக்கமாட்டேன்” என்று சங்கல்பம் செய்துகொள்வார்கள். போன ஜென்மத்தில் சவாரியில்லாத ஆட்டோவாய் பிறந்து நடு ரோட்டில் நடைவண்டியாய் பயணித்து படுத்தியிருப்பதன் பலனாக இப்படி அவதியுறுகிறேன் என்றும், அந்தப் பிறவியிலும் கர்ப்பஸ்த்ரீகள் ஆஸ்பத்திரியில் சென்று பிரசவிக்குமாறு சௌகரியமாக ஓட்டியதால் அட்லீஸ்ட் சென்னையிலாவது இருக்கிறேனாம். இல்லையென்றால் பெங்களூருவில் கார் ஓட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஐம்பது நிமிடங்கள் உருட்டி உருட்டி பணிஷ்மெண்ட்டாகக் கடக்கும்படி உத்தரவாகியிருக்குமாம். இவ்வாறு யாரோ மூளைக்குள்ளிருந்து எச்சரிக்கை ஓலமிட்டார்கள்!

சேப்பாயி தன் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் வெள்ளத்தில் உயிர்பிழைக்க நீந்திக்கொண்டிருக்கும் போது ”நகராச்ச்சியில...” என்று காதை அறுத்துக்கொண்டிருந்த ஒரு எஃப்பெம் சானலிலிருந்து விடுபடுவதற்கு டாஷ்போர்டிலிருந்த சிடி பௌச்சை பலங்கொண்ட மட்டும் வெறியுடன் இழுத்தேன். தற்கொலைக்காக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு க்ளைமாக்ஸில் தன்னைத் தூக்க வந்த ஹீரோவிடம் மேஜை ட்ராயரைத் திறந்து தனது லவ் டாக்குமெண்ட்களைக் காட்டும் உயிர்க் காதலியைப் போல இடது கையால் தட்டுத் தடுமாறி பௌச்சின் ஜிப்பைத் திறந்து ஒரு ஸிடியை எடுத்து ப்ளேயரின் வாயில் காணிக்கை போல உள்ளே தள்ளினேன். ரேடியோவின் கழுத்தை முறித்துவிட்டு அந்த க்ஷணமே ஸிடி பாட ஆரம்பித்தது. இதற்கப்புறம் முதல் பாராவில் படித்துவிட்டீர்கள். மேலே படியுங்கள். அதாவது கீழே படியுங்கள்.

இப்போது இருபுறமும் சேப்பாயியைக் கட்டி ஏறுகிறார்கள். கரையை உடைத்துச் சுழித்துக் கொண்டு வரும் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஆட்டோக்களும் மாநகர பேருந்துகளும் இருமருங்கும் அணைக்கின்றன. இங்கே ”இளநீரும் பாலும் தேனும்... இதழோரம் வாங்க வேண்டும்..” என்று ஸ்வரம் ஸ்வரமாய் இழுத்த வயலின்களுக்குப் பின்னர் காதுகளில் இழைய ஆரம்பித்திருந்தது. கல்லூரியில் படிக்கும்போது(?!) வீட்டிற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது சுமாராய் இருந்த தாவணி ஒன்று ஏறியதும் இந்தப் பாட்டு தலைக்கு மேலே ஒலிக்க ஆரம்பித்தது. எதற்கோ அந்தப் பெண் அநியாயத்திற்கு வெட்கப்பட்டு ஜன்னல் வழியாக வாய்க்கால் வரப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது. அபாண்டமாக நீங்கள் இப்போது பழி சொல்வீர்கள் என்று அப்போதே அது இறங்கும் போது என்னைப் பார்க்கவில்லை. தெய்வீகராகமோ!!

இந்த உன்மத்த மனோ நிலையில் க்ரேனே பின்னால் வந்து காரை அலேக்காகத் தூக்கியிருந்தால் கூட பாடல் சுகத்தில் பட்டமாய்ப் பறக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பேன். பாடல் பாதி நினைவுகள் பாதி என்னை போதையூட்ட வாகன வெள்ளத்தில் சேப்பாயி அதன் போக்குக்குக் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. ”கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ.. உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ...” என்று காதலைக் கரைத்துக் காதுகளில் ஊற்றிக்கொண்டிருந்த என் ஸிடி ப்ளேயரை அஃறிணைப் பொருளாகப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை. டெல்லிவாழ் ராஜபுத்திரர்கள் யாரவது சென்னை வந்து திரும்புகிறார்கள் என்ற சாக்கை வைத்துப் போக்குவரத்துக் காவலர்கள் ஒரு அரைமணி அப்படியே நம்மை நிப்பாட்ட மாட்டார்களா? திரும்பத் திரும்ப இதையே ரிப்பீட்டில் கேட்கமாட்டோமா என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது.

சற்றுநேரத்தில் ”பெண்மையின் இலக்கணம் அவளது வேகம்..” என்ற வரிகள் வரும் போது ஹோண்டா ஆக்டிவாவில் ஒரு பெண் சரேலென்று விரைந்து சென்றாள் என்று இப்போது எழுதினால் நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் பழிப்பீர்கள். சரிதான்! அப்படியாரும் அந்த வரி வரும்போது செல்லவில்லை. ஆனால், “முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி” பாடும் போது ஸ்கூட்டியில் விரைந்தது கண்ணைத் தவிர மொத்தமும் மூடிய ஒரு மாது.

”மதுவின் குடத்தை மடியில் நீ மறைத்து வைத்த மலரோ...” என்று குழையும் போது நமக்கும் ஜில்லென்று சிறகடித்துப் பறந்தது நினைவுகள். ”விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்.. தொடங்கு கண்ணா புதிய பாடம்...” கதறக் கதற காதலைச் சொட்டும் பாடல்களால் சேப்பாயியின் அங்கமெல்லாம் நனைந்துவிட்டிருந்தது. எனக்கு ஜுரம் எடுத்துவிடும் அபாயமிருந்தது. காதல் ஜுரமல்ல! இப்படி ஒன்றல்ல இரண்டல்ல... நிச்சயம் பத்துக்கு மேல் பாடல்கள் கடந்திருக்கும். காது கொடுத்துவிட்டு கண்டபடி கரைந்துகொண்டு வண்டியோட்டிக்கொண்டிருக்கிறேன்.

“இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆறும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம்..யோகம்...” என்று அனாயாசமாக பாடிக்கொண்டிருந்தார் அவர். இந்த வியாசத்தை இப்படியே நான் முடித்துவிடப்போகிறேன். ஆனால், நீங்கள் இரட்டை மேற்கோளில் இதில் எழுதியிருக்கும் பாடல்கள் எவையெவை என்றும் பாடியவர் யாரென்றும் இசையமைத்தவர் இன்னாரென்றும் ஆராய்ச்சியில் இறங்கப்போகிறீர்கள். தெரிந்த பாடல்களை கமெண்ட்டில் எழுதுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் தூங்கப் போகிறேன். காதுகளில் கேஜே..... ஸாரி! தூங்கிவிட்டேன்.

ஆணா? பொண்ணா?

ஊர்க்கோடியிலிருக்கும் சிவன் கோயில் பிரகாரத்தில் தேமேன்னு உட்கார்ந்து உண்டி வளர்த்து உயிர் வளர்த்துக் காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தார் அவர். யாரோ ஒரு ஆன்மிக ப்ரமோட்டர் போகிற போக்கில் “இவருக்கு அதீத சக்தியிருக்குப்பா. சொல்றதெல்லாம் அப்டியே நடக்குது...இருவத்தஞ்சு வருஷமா புள்ளையில்லாத எங்கூரு பண்ணையாருக்கு இவரோட ஆசீர்வாதத்தால புத்திர பாக்கியம் கிடைச்சுடுச்சு..” என்று சொல்லி நமஸ்காரம் செய்துவிட்டு மக்களுக்குக் காட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் நிச்சயமாக சாமியார் கிடையாது. பிரகாரத்திலிருந்தாலும் ப்ளாட்ஃபாரத்திலிருந்தாலும் ஜவ்வாதும் குங்குமமும் மணக்க மணக்க பார்க்க பந்தாவாக இருப்பார். கொஞ்சூண்டு மழுமழு வெள்ளைக் கன்னங்களின் பளபளப்புக்கு நடுவே வெண் நிற தாடி ஒரு முழம் நீளத்திற்கு வளர்த்திருப்பார். வலது கையால் தாடியை உருவிக்கொண்டே வேதாந்தமாக அள்ளி வீசும்போது ரிக், யஜுர், சாம அதர்வணங்களை ஒரு 200ML ஹார்லிக்ஸ் டம்பளர்ல அடக்கிக் கரைச்சுக் குடிச்சுட்டாரோன்னு என்னை மாதிரி அஞ்ஞானிங்க அப்படியே வாய் பொளந்துடும்.

”பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஆம்பிளைப் புள்ளை பொறக்கும்னு சொன்னாரு.. அப்படியே பொறந்துச்சுடி.” என்று கண்ணாலேயே ஸ்கேன் செய்து சொன்னது போல அவ்வூர் மக்கள் அதிசயப்பட்டு அவரிடம் கருவுக்குள் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா என்று அறியும் ஆர்வத்தில் லைன் கட்டி நின்று ஆரூடம் பார்த்துக்கொண்டது. கூட்டம் வளர வளர தாக்குப்பிடிக்க முடியாமல் பக்கத்தில் ஒரு அஸிஸ்டெண்ட் வைத்துக்கொண்டார் அவர்.

சனி ஞாயிறுகளில் சன்னிதிகளில் இருக்கும் பக்தர் கூட்டத்தை விட இந்த பித்தர் கூட்டத்தால் பிரகாரம் நிரம்பி வழிந்தது சிவன் கோயில். ஒரு ஐந்தாறு மாதங்கள் சென்றது.

“நீங்க சொன்னது தப்பு” என்று ஒரு ஆள் கோபத்தோடு எரித்துவிடும்படி உள்ளே பிரவேசித்தான்.

பக்கத்திலிருந்தவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர் எந்தவித பரபரப்பும் காட்டாமல் சிரித்துக்கொண்டே அஸிஸ்டெண்ட்டைப் பார்த்து “அந்த நோட்புக்கை எடுத்து வாப்பா..” என்று அருட் பார்வையுடனும் கருணாமூர்த்தியாகவும் கேட்டார்.

நோட்புக் வந்தது.

”நீ என்னிக்குப்பா வந்தே?”

“இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை”

பரபரவென பக்கங்களைப் புரட்டினார்.

“உன் பேர் என்னப்பா?”

”அறிவுடையநம்பி”

“உங்கிட்ட என்ன குழந்தைன்னு சொன்னேன்”

“ஆம்பிளை”

“உனக்கு என்ன பொறந்துருக்கு...”

“பொம்பளைப் பிள்ளை”

”இந்த நோட்டைப் பாரு.. நான் என்ன எழுதியிருக்கேன்னு”

அங்கே அட்சர சுத்தமாகப் ”பெண்” என்று எழுதியிருந்தது.

கோயிலேறி கேள்வி கேட்டவனுக்கு பகீரென்றது. நாம மறந்துட்டு இவரைத் தப்பாச் சொல்லிட்டோமோ என்று குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்ளமுடியாதவனைப் போல “சாரிங்க...”ன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவர் அவன் போன திசையைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். அஸிஸ்டெண்ட் வியந்தார்.

இந்த டெக்னிக் எப்படி என்று உங்களுக்குப் புரிந்ததா?

ஆயிரத்தெட்டு விளக்குகள்!

ஒன்றிரண்டு ஆடவர்கள் சட்டை, டீஷர்ட்டுகளைக் கழற்றிக் கக்கத்திலிடுக்கிக் கொண்டும் இடுப்பில் அங்கவஸ்திரமாகச் சுற்றித் துணிக் கையிரண்டையும் இடுப்பைச் சுற்றி முடிந்து கொண்டும் உள்ளே நுழைவது தூரத்திலிருந்தே கண்ணில்பட்டது. இன்னும் கொஞ்சம் நெருங்கியவுடன் துவஜஸ்தம்பத்துக்குப் பின்னால் மாட்டியிருந்த போர்டில் ”OM NAMO NARAYANA” என்று சிகப்பிலும் ”ஓம் நமோ நாராயணா” என்று பச்சையிலும் புள்ளிப் புள்ளியாய் டிஜிட்டல் எழுத்துகள் இடமிருந்து வலமாக ஒரே சீராக அங்கப் பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தன. நெற்றியில் விபூதித் தீற்றலோடும் கொக்கி முதுகோடும் மேனியெங்கும் பக்தியோடும் நின்ற பாட்டியொருத்தி படியருகிலிருந்தே கைகூப்பிக்கொண்டிருந்தாள்.

சேப்பாயியை ரோட்டை விட்டு இறக்கி நிறுத்திவிட்டு நங்கைநல்லூர் குருவாயூரப்பன் கோயில் வாசற்படியில் நின்று என் சட்டையைக் கழற்றும் போது குத்துவிளக்குகளின் தீப ஒளியில் கர்ப்பக்கிரஹத்திலிருந்து குட்டிக் க்ருஷ்ணன் க்யூட்டாகக் காட்சியளித்தார். மேலே கழட்டாமல் சென்ற ஒரு பொடியனை “யே! ச்ச்சட்டையை கழட்டோ” என்று யானை பிளிருவது போலக் குரல்விட்டார் கவுண்டரில் உட்கார்ந்திருந்த ஒரு ஆகிருதியான மாமா. அவன் நடுநடுங்கிப்போய் ட்ராயரையும் சேர்த்துக் கழட்டிவிடும் அவசரத்தில் சட்டையை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டான்.

புஷ்டியான ஃபோகஸ் விளக்குகளைப் பாய்ச்சி கண் கூசச் செய்யாமல் விட்ட அந்த தேவஸ்தானத்துக்கு ஒரு முறை நிச்சயம் தெண்டனிட வேண்டும். கேரளக் கோயில் சாஸ்திரப்படி நிலைவாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். எதிரே ஒல்லி ஒல்லி விளக்குகளில் அமைதியாக சேவை சாதித்துக்கொண்டிருந்தார் உத்தர குருவாயூரப்பன். மூர்த்தி சிறிசு. கீர்த்தி பெருசு போன்ற கிளேஷக்களுக்கு அவசியமேயில்லாமல் உள்ளே காலை வைத்ததும் ஒரு அதிர்வை உணர முடிந்தது. இரா. முருகனின் விஸ்வரூபம் படித்துக்கொண்டிருப்பதால் அம்பலப்புழை கிருஷ்ணனும் ஞாபகத்துக்கு வந்தான். வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தார்கள். வலதுகைப் பக்கம் ஐந்து கிளைகளுடன் சரவிளக்கு தொங்கியது. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து முகத்திரி போட்டு எரியவிட்டிருந்ததில் குருவாயூரப்பன் அங்கமெல்லாம் வெள்ளி மின்னியது. புஷ்பாங்கி. கிரீடத்துக்கு மேலே ஒரு தாமரை.

காலுக்கடியில் ஏக தண்டில் பூத்த மூன்று தாமரைகள் போல மும்முகத்துடன் ஒரு வெங்கல விளக்கு. ஒவ்வொரு தாமரைக்கும் மூன்று முகம். மூன்றிலும் மும்மூன்று திரிகள். ஒரு பத்து நிமிஷமாவது கண்ணிமைக்காமல் பார்த்திருப்பேன். ஸ்ரீமத் பாகவத சப்தாகத்தில் “ஆதிமூலமேன்னு கதறிய கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்க நீயே நேர்ல போனியாமே.. அது சத்தியமா?ன்னு கேட்டார் பட்டத்திரி. ஆமாம்னான் குருவாயூரப்பன்” என்று நாராயணீயத்தை சேர்த்துச் சொல்லும் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் பேசுவது இப்போது எனக்கு மட்டும் சத்தமாகக் காதில் கேட்டது. ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்தேன். குத்துவிளக்கின் ஒளியில் அழகு கொஞ்சும் குருவாயூரப்பன் எனக்கும் ”ஆமாம்” சொல்வது போலிருந்தது. போன பாராவின் முதல் வரியை இப்போது ”ஆமாம்” என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.

”ஓய்! ராஜம் ஐயர்....செத்தே நில்லும்..” என்ற சப்தம் என்னைக் கலைத்து சந்நிதியை விட்டு வெளியே இழுத்தது. வேஷ்டிக்கு மேலே இடுப்பில் பெல்ட்டாகக் கட்டிய காசித்துண்டோடு துளசி மாலைக் கழுத்தோடு டைனோசர் நடை நெடு நெடு ராஜமைய்யரை பிரகாரத்தில் விரட்டிக்கொண்டு ஓடிய பெரியவருக்கு சுமார் எழுபது இருக்கலாம். ஆனால் அவர் காலுக்கு இருபது என்பது ரா.ஐயரைத் துரத்திய வேகத்தில் தெரிந்தது. பிரகாரத் தூணில் சாய்ந்துகொண்டு ஒரு முட்டை சந்தனத்தை உள்ளங்கையில் தெளித்து “தீபாராதனை ஆகப்போறது...” என்று வாய்வழி குறுந்தகவல் கொடுத்தார் குருக்கள் மாமா. இடுப்பில் சிவ சிவ எழுதிய பச்சைத் துண்டு சிவாவிஷ்ணுவின் ஃப்ரெண்ட்ஷிப் அடையாளம்.

கதவை மூடிய பிறகு லோக்கல் வாலண்டியர் மாமா ஒருத்தர் “ஜெண்ட்ஸ் ரைட். லேடீஸ் லெஃப்ட்” என்று உத்தி பிரித்து விட்டு ஸ்வாமி சேவிக்கச் சொன்னார். வலதுபக்க திண்ணையில் மணி கட்டியிருந்தது. அதனடியில் ராஜமைய்யரை விரட்டிய மாமா உட்கார்ந்திருந்தார். சந்நிதிக் கதவை திறக்கும் போது மக்கள் காட்டிய ஆர்வத்தில் தெரிந்து கொண்ட அவர் உட்கார்ந்த படியே தலைக்கு மேலே இருந்த மணியை ஆட்டிய போது அவரது பக்தி ஊருக்கே தெரிந்தது. சளைக்காமல் நூறு முறை அடித்திருப்பார். அடித்து அடித்து அந்த வெங்கல மணிக்கு நாக்கு வலித்திருக்கும்!

அடுக்கு தீபாராதனை, கும்பார்த்தி என்று தரிசித்துவிட்டு பிரதக்ஷிணம் முடித்துக்கொண்டு பாதியாய் வெட்டிய வாழைப்பழத்தை பிரசாதமாய் வாங்கிக் கொண்டு நகர்ந்த போது ”அந்தக் குச்சிய வாங்கிண்டு விளக்கேத்திட்டுப் போயேன்....” என்றார் உரிமையோடு பிரசாதப் பெரியவர். பிரகாரத்தைச் சுற்றிலும் மாபெரும் எக்ஸெல் ஷீட் போல சட்டமடித்த rowவிலும் columnத்திலும் விளக்குகளை உட்கார வைத்து ரெடியாய் எண்ணெயிட்டு திரியோடு “என்னை வந்து ஏற்று” என்று கொளுத்திக்கொள்ளத் தயாராக இருந்தது. “எவ்ளோ விளக்கு?” என்று பக்தியார்வத்தில் கேட்டேன். “1008 இருக்கு... எல்லோரும் ஏத்துவா.. பயப்படாதே...” என்றார் என்னைத் தெம்பூட்டும்விதமாக. மூங்கில் ப்ளாச்சின் நுணியில் காட்டன் துணித் சுற்றி எண்ணெயில் முக்கிக் கையில் கொடுத்தார்கள். ஆளுக்கொரு குச்சியுடன் குறுக்கும் நெடுக்குமாக விளக்கேற்றத் துவங்கினோம். எங்கெங்கு நோக்கினும் நரைத்த தலையுடனும் நரைக்காத பக்தியுடனும் வயதானவர்களின் கூட்டம் குழந்தையின் ஆர்வத்தோடு விளக்கேற்றியது. ஐந்து நிமிட நேரத்திற்குள் ஊர் கூடி விளக்கேற்றிவிட்டோம்.

மன்னையில் கார்த்திகைக்கு தெப்பக்குளத்தைச் சுற்றி அகல் விளக்கேற்றியது நியாபகத்துக்கு வந்தது. ஆயிரத்தெட்டு விளக்கொளியில் குருவாயூரப்பன் கோயில் வைகுண்டமாக ஜொலித்தது. லேசாக வருடிய காற்றில் அத்தனை விளக்கில் ஆடிய தீபமும் குருவாயூரப்பனுக்கு நடன காணிக்கை செலுத்தியது போலிருந்தது. சாஸ்தா, பகவதி என்று அனைத்து சந்நிதிகளும் விளக்கேற்றப்பட்டிருந்தன. ஒரு சுற்று விளக்கேற்றி விட்டு வரும் சமயம் காராமணி சுண்டல் பிரசாதத்தோடு நின்றிருந்தார் அந்தப் பி.பெரியவர். “இந்தப் பிரசாதமும் எடுத்துக்கலாமா?” என்று தயக்கத்துடன் அல்பமாகக் கையை நீட்டினேன். “தாராளமா..” என்று கண்களில் சந்தோஷம் பொங்க அள்ளிக் கொடுத்தார்.

கொடிமரத்தருகில் நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்துடன் வெளியே வந்தேன். மெல்லிய குளிரடித்தது. தேங்காய்ப் பூ தூவிய வெள்ளைக் காராமணியை மென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார்போல ஒரு மடிசார் பாட்டி தனது ஆம்படையான் தாத்தாவை [பஞ்சகச்சம்] “இதை மூக்கப் பிடிக்க நன்னா சாப்டாச்சுன்னா... ஆத்துக்கு வந்தா பலகாரம் கிடையாதுன்னேன்..” என்று ஏற்ற இறக்கங்களுடன் கொத்திக் கொண்டிருந்தாள். எனக்கும் பக்கத்தில் நின்ற புதுமணத் தம்பதிக்கும் குபீரென்று சிரிப்பு வந்தது. உள்ளேயிருந்து குருவாயூரப்பனும் இதழ் விரியச் புன்னகைத்துக் கொண்டிருந்தான். காரைக் கிளப்பி இரண்டு தெரு நகர்ந்த பின்னும் கண்ணை விட்டு அகலாத அந்த ஆயிரத்தெட்டு விளக்குகள்.

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே......

மன்னையில் தனுர் மாசம் முப்பது எம்பாவாய் சொல்லிவிட்டு சாரங்கன் மாமா பொங்கலுக்காகத் நித்திரைத் தியாகம் செய்து பச்சைத் தண்ணீரில் வெடவெடக்கக் குளித்துவிட்டு கோதண்டராமர் கோயிலுக்கு ஓடுவது போல் காலங்கார்த்தாலையே ஹோட்டலுக்கு வரச்சொன்னார்கள். கேவலம் ஸ்டார் ஓட்டல் ஓசி டிஃபன் ஆசையில் ”காஃபி மட்டும் போதும்” என்று அரை டம்ப்ளர் வாயில் சரித்துக்கொண்டு ச்சீஸை நோக்கி ஓடும் அப்பாவி ஜெர்ரியாக சேப்பாயியில் ஆரோகணித்து விரைந்தேன். வழியெங்கும் பல ஸ்டாண்டுகளில் ஆட்டோக்காரர்கள் நெற்றியில் குங்குமம் (அ) துண்ணூற்றுடன் கையில் தந்தியும் வாயில் பீடியுமாக பக்திப் பழமாகச் சவாரிக்காகச் சாலையோரத்தில் காத்திருந்தது கிருஷ்ணனைக் கூடையில் ஏந்திய வசுதேவருக்கு ஒதுங்கி வழிவிட்ட யமுனை போல மௌண்ட் ரோடு காட்சியளித்தது.

ஆதியோடந்தமாக சேப்பாயியை துருவித் துருவிப் பரிசோதித்த செக்யூரிட்டியிடம் விடைபெற்று தாஜ் க்ளப் ஹௌஸில் நுழைந்தவுடனே ஒரு ரூபாய் வட்டத்துக்குள் சிகப்புக் கலர் கௌபாய் தொப்பியுடன் ஜெய்சங்கர் தலையைச் சாய்த்து துப்பறியும் சாயலிலிருகும் ஐகான் அச்சடித்த பதாகைகள் பரவலாகக் கண்ணில்பட்டன. ஊரிலிருக்கும் ஒன்பது தாஜ்ஜுகளில் எந்த தாஜ்ஜில் என்று இங்கி பிங்கி பாங்க்கி போட்டுக் குன்ஸாக தாஜ் க்ளப் ஹௌஸிற்குள் வந்திருந்தேன். அதை நிவர்த்தி செய்யும் சந்தேக நிவாரணியாக ரெட் ஹேட் லோகோ தெரிந்தது. கணினியை இயக்குவதற்கு ஆதார ஸ்ருதியாக இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் யுனிக்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ரெட்ஹேட் லைனக்ஸ் ஜாதியின் சமூகத்தார் நடத்தும் வாழ்த்துக் கூட்டம். பயப்பட வேண்டாம். இங்கு நான் சாஃப்ட்வேர் பற்றிப் பேசப்போவதில்லை. நம் இருவருக்கும் தெரிந்ததைப் பார்ப்போம்.

நித்யமும் பொழுது விடிந்து பொழுது போனால் எனது தொழிலில் நான் பல ஹார்ட்-டிஸ்க்குகளில் இதை ஏற்றி இறக்கும் போது தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்தான் ஞாபகம் வருவார். இந்த செமினாரில் அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீர்த்திகளை ஒவ்வொருவராக மேடையேறி வாழ்த்துப்பா படித்தார்கள். தூங்கி எழுந்து பல் தேய்ப்பதற்கு முன்னர் வாயில் சேர்ந்திருக்கும் கோழை எச்சிலை வைத்துக்கொண்டு முழுங்காமல் பேசுவது போல ஒரு வெள்ளைக்காரர் படே கொழகொழத்தனமாகப் பேசி வார்த்தைகளை நம் காதுக்கு வரும் முன் வழுக்கினார். ஒவ்வொரு வாசகத்தின் வாலாக வந்த ஓகே மட்டும் தெள்ளெனப் புரிந்தது.

சன்னதம் வந்தது போல சிலசமயங்களில் மேனியதிர பெருங்குரலெடுத்து ஆங்காரப்பட்டார். மெல்லிய இதமான ஏசியின் சூழலில் அலுவலக அழைப்புகள் இல்லாமல் காலையில் சுகமாகக் கண்ணை மூடுபவர்களுக்கு இவ்விரைச்சலினால் ஜன்னி வந்தது போலத் தூக்கித் தூக்கிப் போட்டது. ”இந்த ஜென்மத்தில நீ யாருக்காவது எந்த மாதிரி கெடுதல் பண்றியோ...அதே மாதிரி அடுத்த ஜென்மத்துல நோக்கும் நடக்கும்” என்று பாட்டி மிரட்டி வளர்த்தது நினைவில் வந்து உரைத்தது. அதற்கப்புறம் பின்னாலையே வந்த ஒரு பகல் கனவுக் காட்சியில் வெள்ளைக்காரனும் நானும் இடம் மாறிக்கொண்டோம். நான் மேடையில் ஏறிப் படம் போட்டேன் அவன் முதல் வரிசையில் தூங்கி வழிந்தான்.

தன் கண்ணுபடவே சொக்கி விழுபவர்களை எழுப்பும் முயற்சியில் “யாராவது கோபால் ப்ரோகிராமிங் பண்ணினவங்க இந்த திருக்கூட்டத்தில் இருக்கீங்களா?” என்று எட்டூருக்கு கேட்கும்படி இரைந்தான் அந்த வெ.கா. சட்டென்று கையைத் தூக்கிவிட்டு ”எதற்காக?” என்று திருதிருவென விழித்தவரிடம் “கோபால்..” என்றதற்கு மையமாகத் தலையை ஆட்டிவிட்டு தன் அசட்டுத்தனத்தை எண்ணி நொந்துகொண்டு கையை இறக்கிக்கொண்டார். பிக்கல்பிடுங்கலில்லாமல் நிம்மதியாகத் தூங்குபவர்களை ஒரு கண்ணாடிக்காரர் கையில் நிகானுடன் படம்பிடித்துக்கொண்டிருந்தார். என் பக்கம் வரும்போதெல்லாம் உதட்டைக் கடித்துக்கொண்டு பிரசவ வேதனையில் கண்ணிமைகள் மூடிக்கொள்ளாமல் பாதுகாத்துக்கொண்டேன். மானத்தையும் சேர்த்துத்தான்.

ரெட் ஹேட்டை உபயோகப்படுத்தி பயனடைந்த பெரும் கம்பெனிக்காரர்கள் சிலரும் இந்த கோஷ்டி கானத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அப்படிப் பேசியதில் ஒரு டெக்னாலஜி பேச்சாளி ரேகாவிடம் I know சொல்லும் ரகுவரன் போல You Know சேர்த்துச் சேர்த்துப் பேசி நம்மை No No சொல்ல வைத்தார். பக்கத்தில் ஒருவர் ஹோட்டல்காரர்கள் சப்ளை செய்த ஸ்கிரிப்ளிங் பேடில் பால் கணக்கு எழுதி டேலி பண்ணிக்கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு மாதுவின் குரல் தேனாய் ஒலித்தது. இது கனவிலோ என்று அசிரத்தையாக இருக்கும் போது மீண்டும் சர்க்கரையாய் ஒலித்து கரும்பாய் இனித்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் ”எல்லோரும் ஒரு பத்து நிமிஷத்துக்குள் ஓடிப் போய் டீ காஃபி குடித்துவிட்டு மறுபடியும் சமர்த்தாகச் தங்களது இருக்கையில் வந்து அமருவீர்களாக!” என்று செல்லமாக ஆக்ஞை பிறப்பித்தார். இனியும் தாமதித்தால் தெவசச் சாப்பாடு மாதிரி ரெண்டு மணிக்கு மேலேதான் போடுவார்கள் போலிருக்கிறது என்று கொலைப்பட்டினியுடன் ஆஃபிஸுக்குச் சென்று ராகவனை சரவணபவனில் ஒரு மசால் தோசையும் தயிர் சாதமும் வாங்கிவரப் பணித்துச் சாப்பிட்டேன். ஒரு டபரா மாவில் ட்ரேஸிங்க் பேப்பராய் தோசை ஊற்றி அது கிழியாமல் உருளைக் கிழங்கு கறி பொதித்த கலைஞனை மனதாரப் பாராட்டினேன். கூடவே ஒரு தொன்னை தயிர்சாதமும் ரெண்டு வாயில் உள்ளேயிறங்கியது. “அடேய்! கொஞ்சம் பொறுமையாயிருந்தால் ஸ்டார் ஹோட்டலில் வயிறார சாப்பிட்டிருக்கலாமே” என்று வயிற்றுக்குள்ளிருந்து கடாமுடாவென்று கத்தின.

அடுத்த முறை எப்பாடுபட்டேணும் ஐம்புலன்களையும் அடக்கி ஒரு முனிசிரேஷ்டர் போல இந்த அரையிருட்டு ஹால்களில் தவமியற்றிவிட்டு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுதான் ஆஃபீஸுக்கு வரணும் என்று ஒரு பிரசவ வைராக்கியம் பிறந்தது.

போன வாரத்திலிருந்து எழுதவேண்டும் என்றிருந்த ஆத்திரத்தை இன்று அள்ளிக் கொட்டிவிட்டேன். என் பாரத்தை நான் இறக்கி வைத்துவிட்டேன். நீங்கள்.......

ஸ்நேகித சிஸ்டர்ஸ்

அப்படியொன்றும் அவர்கள் அமிர்தவர்ஷினியெல்லாம் பாடிவிடவில்லை. ஸ்ருதி பாக்ஸை திருகி விட்டு வாயைத் திறக்க ஆரம்பித்ததும் வானத்தைக் கிழித்துக்கொண்டு மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இன்று சின்னதும், பெருசும் அவர்களின் ஸ்நேகித சிஸ்டர்களுடன் எங்கள் பேட்டையிலுள்ள முருகன் கோயிலில் திருப்புகழ் கச்சேரி செய்தார்கள். சேர்ந்திசை.

திருப்புகழ் கற்றுக்கொடுக்கும் பத்மா மாமி கையில் ஜால்ராவுடன் தாளம் போட “பாதிமதியென”வும், “பத்தியால் யானுனை பலகால”முவுக்கும் போவோர் வருவோர் கேட்டுவிட்டு திருநீரும் கையுமாக இராச் சாப்பாட்டுக்குக் குக்கர் வைக்கவும், சன்னையோ, ஜெயாவையோ, கலைஞரையோ, விஜயையோ பார்க்கச் சடுதியில் பறந்தார்கள்.

மழை பெய்யும் போது திருக்கோயிலுக்குள் அகப்பட்டுக்கொண்ட பக்தர் கூட்டம் நாலைந்து திருப்புகழை போனால் போகிறது என்று உட்கார்ந்து கேட்டது.

கடைசியில் நாகராஜ் குருக்கள் ”அடுத்த வருஷம் சஷ்டிக்கும் நீங்களெல்லாம் ஒரு கச்சேரி பண்ணனும்” என்று வாழ்த்தி, பெண்டுகளுக்கு ஒரு துண்டு சாமந்திப் பூவும் தேங்காய் மூடியும் சம்பாவனையாகக் கொடுத்து மரியாதை செய்தார்.

அந்த சாமந்திப்பூ செண்பகப்பூப் போல மணத்தது. கொடுத்த தேங்காய் மூடி பிரசாதம் பூரண பொற்கும்பமே கொடுத்தாற் போலவும் எனக்குத் தோன்றியது.

டப்பாஸ்

”ஷாமீ! டப்பாசு குடு ஷாமீயோவ்....”

ரெண்டாயிரம் வாலாவைக் கொளுத்திவிட்டு காம்பௌண்ட் சுவரோரம் ஒண்டிக்கொண்டு நின்றிருந்த எனக்கு வெகு சமீபத்தில் அந்தக் குரல் கேட்டது. மேனியெங்கும் புழுதியடித்து தோலெது தோளெது என்று இனம் காண முடியாதவாறு மேலாடையின்றி இருந்த நரிக்குறவர் ஒருவர் என் பத்திக் கைக்குக் அருகில் நின்று கையேந்தினார். ஏற்கனவே இரு கையிலும் புஸ்வானமும், இரண்டு சங்கு சக்கரங்களும் இருந்தன. ஜடாமுடித் தலையும், அழுக்குத்துணியும், துர்நாற்றமும் அவரிடமிருந்து குபீரென்றுக் கிளம்ப எனக்குச் சட்டென்று கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறிய ஆதிசங்கரர் எதிரே நாய்களோடு வந்த புலையனும் மனீஷா பஞ்சகமும் நியாபகத்துக்கு வந்தன.

“இந்தா..” என்று கவருக்குள்ளிருந்த ஒரு செங்கோட்டை சரத்தை எடுத்துக் கையில் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே தெருவைப் பார்க்கத் திரும்பினார். பின்னாலேயே இடுப்பில் குழந்தையுடன் கழுத்தில் கலர்க் கலர் மாலைகளுடனும் குறத்தி பக்கத்தில் வந்தார். தட்டை, லட்டு, முறுக்கு என்று அக்குழந்தைக்கு பலகாரம் ஆகிக்கொண்டிருந்தது. மூக்கிலிருந்து சளி எட்டிப்பார்த்து லட்டுக்கும் முறுக்குக்கும் எக்ஸ்ட்ரா சுவையைக் கூட்ட உதட்டுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

“என்னா?” என்று தலையைத் தூக்கிக் கேட்டேன்.

“ஒரு ரூவா.. ரெண்டு ரூவான்னு எதனா குடு சாமீ!” என்று கேட்டது.

“அதென்ன டினாமினேஷன் போட்டுக் கேட்கிறே!” என்றேன் குசும்பாக.

“சரி ஷாமீ! அப்ப அஞ்சு ரூவாயாக் குடு..” என்று வெள்ளந்தியாகக் கேட்டது. இடுப்பிலமர்ந்து முறுக்குக் கடித்துக்கொண்டிருந்த கொழு கொழுக் கன்னக் குழந்தையின் கண்களில் தகதகவென்று ஒளி இருந்தது. ஒன்றும் கிடையாது போ என்று விரட்டித் துரத்த மனம் வரவில்லை.

ஐந்து ரூபாய் நாணயமொன்றை கையில் இட்டேன்.

பல்லிடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருந்த பூந்தி தெரிய குறத்தி இடுப்பிலிருந்த கைக்குழந்தை சிரித்தது.

இப்போது இந்த வருஷத்திய எனது தீபாவளிக் கொண்டாட்டங்களின் சந்தோஷம் பரிபூரணமடைந்தது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails