Friday, November 15, 2013

டப்பாஸ்

”ஷாமீ! டப்பாசு குடு ஷாமீயோவ்....”

ரெண்டாயிரம் வாலாவைக் கொளுத்திவிட்டு காம்பௌண்ட் சுவரோரம் ஒண்டிக்கொண்டு நின்றிருந்த எனக்கு வெகு சமீபத்தில் அந்தக் குரல் கேட்டது. மேனியெங்கும் புழுதியடித்து தோலெது தோளெது என்று இனம் காண முடியாதவாறு மேலாடையின்றி இருந்த நரிக்குறவர் ஒருவர் என் பத்திக் கைக்குக் அருகில் நின்று கையேந்தினார். ஏற்கனவே இரு கையிலும் புஸ்வானமும், இரண்டு சங்கு சக்கரங்களும் இருந்தன. ஜடாமுடித் தலையும், அழுக்குத்துணியும், துர்நாற்றமும் அவரிடமிருந்து குபீரென்றுக் கிளம்ப எனக்குச் சட்டென்று கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறிய ஆதிசங்கரர் எதிரே நாய்களோடு வந்த புலையனும் மனீஷா பஞ்சகமும் நியாபகத்துக்கு வந்தன.

“இந்தா..” என்று கவருக்குள்ளிருந்த ஒரு செங்கோட்டை சரத்தை எடுத்துக் கையில் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே தெருவைப் பார்க்கத் திரும்பினார். பின்னாலேயே இடுப்பில் குழந்தையுடன் கழுத்தில் கலர்க் கலர் மாலைகளுடனும் குறத்தி பக்கத்தில் வந்தார். தட்டை, லட்டு, முறுக்கு என்று அக்குழந்தைக்கு பலகாரம் ஆகிக்கொண்டிருந்தது. மூக்கிலிருந்து சளி எட்டிப்பார்த்து லட்டுக்கும் முறுக்குக்கும் எக்ஸ்ட்ரா சுவையைக் கூட்ட உதட்டுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

“என்னா?” என்று தலையைத் தூக்கிக் கேட்டேன்.

“ஒரு ரூவா.. ரெண்டு ரூவான்னு எதனா குடு சாமீ!” என்று கேட்டது.

“அதென்ன டினாமினேஷன் போட்டுக் கேட்கிறே!” என்றேன் குசும்பாக.

“சரி ஷாமீ! அப்ப அஞ்சு ரூவாயாக் குடு..” என்று வெள்ளந்தியாகக் கேட்டது. இடுப்பிலமர்ந்து முறுக்குக் கடித்துக்கொண்டிருந்த கொழு கொழுக் கன்னக் குழந்தையின் கண்களில் தகதகவென்று ஒளி இருந்தது. ஒன்றும் கிடையாது போ என்று விரட்டித் துரத்த மனம் வரவில்லை.

ஐந்து ரூபாய் நாணயமொன்றை கையில் இட்டேன்.

பல்லிடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருந்த பூந்தி தெரிய குறத்தி இடுப்பிலிருந்த கைக்குழந்தை சிரித்தது.

இப்போது இந்த வருஷத்திய எனது தீபாவளிக் கொண்டாட்டங்களின் சந்தோஷம் பரிபூரணமடைந்தது.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தீவாளி பட்டாசு தான்! சந்தேகமில்லை!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails