Showing posts with label கோபு. Show all posts
Showing posts with label கோபு. Show all posts

Friday, August 19, 2016

மதராசப்பட்டினம்

நேற்று அடையாறில் அலுவல் நிமித்தம் ஒரு அவசர சந்திப்பு. அது நேரத்தோடு முடிந்தால் ஆறே முக்காலுக்கு கோபுவின் “மதராசப்பட்டினம்” நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என்பது நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்ட பேரவா. பெரும்பாலும் கோபுவின் சொற்பொழிவுகளை தவறமால் கேட்கவேண்டுமென்று சங்கல்பம் செய்துகொண்டிருக்கிறேன்.
மாலை ஆறுமணிக்கு மேல் அடையாறிலிருந்து தி நகர்.... கூகிள் மேப்பில் பார்த்தால் ”இந்தா...” என்று மானஸா பாதி கடித்துவிட்டு நீட்டும் பிட்டு காராசேவு மாதிரி சின்ன கொக்கியாய்த் தெரியும். ஆனால், நிஜம் அலற வைக்கும். அது காராசேவு துண்டல்ல... இடியாப்ப பாதை. வெளக்கு வச்ச நேரத்தில் ஒட்டு மொத்த சென்னையும் வீடு துறந்து, ஓரணியாய்த் திரண்டு சர்தார்பட்டேல் ரோட்டில் குடியிருக்கிறதோ என்றஞ்சும்படியான பம்பர்-டு-பம்பர் நெரிசல். ”நெருங்கி வா.. முத்தமிடாதே...” என்று யாரோவொரு யுகக்கலைஞன் டாட்டா 407 முதுகில் எழுதிக் கண்டித்த செக்ஸியான திருவாசகம் ஞாபகம் வந்தது. முன்னால் ஹோண்டா சிட்டியின் சீட்டிலிருந்து ”எதிரே ரோடு இருக்கிறதா?” என்ற தீவிர சந்தேகத்தோடு எக்கி எக்கிப் பார்த்து தவித்தபடி ஓட்டும் லேடியை, ”ஏழு கடல்... ஏழு மலை...” தாண்டும் லாவகத்தோடு முந்தி விட்டால் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் சென்றுவிடலாம் என்பது எனக்கான சவால். ஊஹும். இடதும் வலதுமாக சீறும் கடலலையில் மாட்டிய அப்பாவித் தோணியாய் ஆடியது அந்த ஹோண்டா சிட்டி. “பிதாவே இவரை மன்னியும்... சாலையில் திரியும் (அப்)பாவிகளை காப்பாற்றும்...”.
கோபுவே அங்கு இல்லையென்றாலும் “ஆறே முக்கால்னா.. ஆறே முக்கால்தான்...” என்று துப்பாக்கிநேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பித்துவிடுவார்கள். நேரந்தவறாமை காந்தியின் கொள்கையன்றோ! 
”ஐஐடிக்கு கீழே போய்...கான்சர் இன்ஸ்ட்டிட்டியூட் ரைட்ல போய் கோட்டூர்புரம் பிரிட்ஜ் ஏறி அப்படியே ஜி.கே.மூப்பனார் பாலத்துல ஏறிடுங்கோ.. லெஃப்ட் திரும்பி நேரே நந்தனம் சிக்னல்.. ரைட்ல தக்கர் பாபா.. இதுதான் ஈஸி ரூட்.. வேறெங்கியாவது இந்த டயத்ல போனா நிச்சயமா மாட்டிப்பேள்..” என்று மொபைல் வழி திசை காட்டியிருளினார் வீகேயெஸ். 6:43க்கு தக்கர் பாபாவுக்குள் சேப்பாயி சேஃபாக நுழைந்தது.
டிடிகே சாலையிலிருந்து அண்ணாசாலையில் கலக்கும் பெருவாரியான சந்துபொந்துகளில் நுழைந்து சூறாவளியாய் ஹரிகிச்சுவுடன் நுழைந்தார் வல்லபாவும். உள்ளே சென்று ஆற அமர வந்தமர்ந்த ”எல்டர் ப்ரதர்” ஆர்வியின் அமைதியான நடையில் அவரது அடுத்தவீட்டுக்கார கமலகாசத்தனம் தெரிந்தது. ராஜாராம் அருகில் அமர்ந்தவுடன் உத்யோகத்தில் எனக்குக் கிடைத்த பதவி உயர்வுக்கு ”கங்க்ராட்ஸ்” சொல்லி கைகுலுக்கினார். விபூதி மணக்கும் மஹாதேவன் அனன்யாவுடன் ரிஷபாரூடராய்க் (வித்தவுட் நந்தி) காட்சியளித்தார். கிஷோர் மஹாதேவன் சாந்தமான ஸ்நேகப் புன்னகையில் மயக்கினார். சிஷ்யர் கோபுவைப் பார்த்தவண்ணம் பாலு சார் முன்னே அமர்ந்திருந்தார். பியெஸ்ஸென்னல் வைத்தியநாதன் சார் கோபுவையே பார்த்துக்கொண்டு தவமாய் அமர்ந்திருக்க... கோபு ஆஸ்தான சேரில் புரொஜெக்ட்டரை தாஜா செய்துகொண்டிருந்தார். all set to go....

***

இளையராஜாவுக்கு முதல் ரெக்கார்டிங்கில் மின்தடங்கலாம். அன்னக்கிளி அமோகமாக வந்தது ஊரறிந்த வரலாறு. அதுமாதிரி வரப்போகும் ஒரு அற்புதமான நிகழ்வுக்கு ப்ரொஜெக்டர் மக்கர் பண்ணியது. எல்லா எலெக்ட்ரானிக் உபகரணங்களின் International Technology யான அணைத்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழவைக்கும் முயற்சியெல்லாம் எடுபடவில்லை. விளக்கேற்றி முகத்தோடு முகம் பார்த்து பேச ஆரம்பித்தார். இதுவரையில் தான் தக்கர் பாபாவில் ஆற்றிய புத்தக சொற்பொழிவுகளைப் பற்றி முதலில் பேசினார் கோபு. அதில் ஹாரிபாட்டர் பற்றியதும் டார்வின்ஸ் ஆர்மடாவும் சூப்பர் ஹிட் முக்காபுலா.
புத்தகத்தை உயர்த்திப் பிடித்து அட்டை காண்பித்து ”1600ம் வருடங்களிலிருந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்..”. என்ற கோபுவைப் புத்தகாசிரியர் நரசய்யா முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார்.
நரசய்யா சென்னையின் முக்கிய நிகழ்வுகளை Index பண்ணியது பற்றி சிலாகித்தார். அந்தப் புத்தகத்தின் முன்னுரையை எழுதிய எஸ். முத்தையா சென்னையைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியிருக்கிறார் என்றும் இந்த புத்தகத்திற்கான முன்னுரையையும் ஆங்கிலத்திலே எழுதியிருக்கிறார் என்றும் தமிழர் எஸ். முத்தைய்யா பற்றி அங்கதமாய்ச் சொன்னது ரசிக்க வைத்தது.
இந்த சொற்பொழிவில் எனக்குத் தெரியாதவை பல விஷயங்கள். கோபு அதைக் கோர்வையாக பல உதாரணங்களுடன் சொன்னது நிறைவாக இருந்தது. தினுசுதினுசான ஜாதிமதங்களுக்கிடையில் ஜாதிகளுக்குள்ளேவே வலங்கை இடங்கை என்று வலதுசாரி இடதுசாரிகள் போல உட்பிரிவுகள் இருந்ததாம். அவைகளுக்குள் சண்டையிட்டுக்கொண்டார்களாம். வெள்ளையர்கள் மிரண்டு போனார்களாம்.
சமஸ்க்ருதமும் பாரசீக மொழியும் சகஜமாகப் புழங்கிய காலகட்டமாம். மோதிலால் நேரு பாரசீகப் பண்டிதர் என்பது வியப்பான விஷயமாகும். சமஸ்க்ருதம் போலவே ஆளுமையுடன் பாரசீகம் விளங்கியது என்றார்.
சைனாவும் தமிழகமும் மட்டும்தான் பேசும் மொழியாலேயே அழைக்கப்படும் சிறப்புப்பெற்ற பிராந்தியங்களாம். சிலிர்ப்பாயிருந்தது.
ப்ரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் போல ஆர்மேனியர்களும் வியாபாரம் செய்ய சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே! அவர்கள் வந்து புழங்கியதுதான் ஆர்மினியன் ஸ்ட்ரீர்.. அரண்மனைக்காரத் தெரு என்று பேச்சுவழக்கில் மாறிய தெரு... அங்கிருக்கும் சர்ச்சுக்கும் அந்த வயசுதானாம்...சாந்தோமே சர்ச்சும் அதைச் சுற்றி ஒரு கோட்டையும் இருந்ததாம். போர்ச்சுகீஸியர்கள் கட்டியது என்று சொன்னதாக நினைவு.
கோர்ட் பக்கம் பேச்சு திரும்பியது. சென்னகேசவப் பெருமாள் கோயில்... சத்ரபதி சிவாஜி வந்து வணங்கிய காளிகாம்பாள்.... என்று பாரிமுனையின் பல்வேறு கோணங்கள்.... ஒரு புத்தக மதிப்புரையாக இல்லாமல் மதராஸை பயாஸ்கோப் மாதிரி காண்பித்தது அத்புதம். மேல் கோர்ட்டு கீழ்க் கோர்ட்டெல்லாமில்லாமல் தீர்ப்பு வழங்கிய காதைகளைச் சொன்னார். மனுஸ்மிருதியின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டது என்கிற வழமையான வாதங்களை நிராகரித்தார். மனுஸ்மிருதி போன்று நிறைய நீதிசதகங்கள் உண்டென்பது அவரது வாதம்.
ஆங்கிலேய துரைகள் காலத்தில் துபாஷிகள் வலுவாக இருந்தார்கள். பாரீஸ்கார்னரில் இருக்கும் முக்கால் வாசித் தெருப்பெயர்கள் துபாஷிகளின் பெயர்கள் தாம்... சுங்குராம செட்டித் தெரு...போன்று. பச்சையப்பாஸ் காலேஜ் பச்சையப்ப முதலியார் பெரிய துபாஷிதானாம். துய்ப்ளேயிடம் துபாஷியாயிருந்த புதுச்சேரி அனந்தரங்கம்பிள்ளை ஞாபகம் வந்தது. (நாட்குறிப்புகள் எழுதிவைத்த மகானுபாவர்)
வங்காள விரிகுடாவில் இயற்கைத் துறைமுகம் ஈஸ்ட் பக்கம் அமையவே முடியாது..இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை படகில் கடலுக்குள் சென்று சரக்குகளையும் பயணிகளையும் கரைக்கு கொண்டுவருவார்களாம். நானூறு ஐநூறு மீட்டர் வரை கடலுக்குள் செல்லவேண்டுமாம். எனக்கு எழுத்தாளர் EraMurukan Ramasamiயின் ’விஸ்வரூப’ கிட்டாவைய்யன் நினைவுக்கு வந்தான். லண்டனிலிருந்து கப்பலில் தாய்நாடு திரும்பும்போது படகில் கரையேறுவான். விசாகப்பட்டினம் தவிர்த்து எதுவுமே இயற்கைத் துறைமுகமில்லை. ப்ரெஞ்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த ஊர் பேரத்தில்... ப்ரெஞ்சுக்காரர்கள் சென்னையை விட்டுக் கொடுத்து Quebec வாங்கியது எவ்வளவு முட்டாள்தனமான காரியம்!!
நரசய்யா கப்பலில் பணி புரிந்தவர். ஆகையால் இந்த கடல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சமுத்திரமாக சரித்திரப்பின்னணிகளைக் கொடுத்திருக்கிறார். துறைமுக போக்குவரத்தானது நதிமுகங்களில்தான் நடக்குமாம். அதாவது பௌர்ணமி அமாவாசைக் காலங்களில் எழும் நீள் அலைகளில் கப்பல் பயணித்து நதிமுகத்திற்கு வந்துவிடுமாம். சரக்குகளை இறக்கிய பிறகு அடுத்தடுத்த நாட்களில் அலைகளும் அடங்கிய பிறகு மீண்டும் கடலுக்குள் பிரயாணப்பட சென்றுவிடும் போன்ற குறிப்புகள் என்போன்ற கடல்சாரா தற்குறிகளுக்கு தரப்பட்ட தகவல் பிரசாதம்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியானது மூன்றுவிதமான காலக்கட்டத்தில் நடந்தது. ஒன்று கிழக்கிந்திய கம்பெனியாக, இரண்டாவது இன்னும் கொஞ்சம் கால் ஊன்றிய அதிகாரத்தோடு நடந்ததாகவும் மூன்றாவதாக அரசாங்கமே அமைத்த ஜோரில் நடந்த ஆட்சியையும் பிரித்துச் சொன்னார்.
ஆங்கிலேயர்கள் காலத்திலும் பஞ்சத்தில் மதராஸ் அடிப்பட்டது. சுயமாக உணவு சம்பாதிக்க தெரியாதவர்கள் அடிமைகளாக விலைபோக தலைப்பட்டார்களாம். அப்போது ஒரு அடிமை விலை எட்டணாவாம். அடிமை நோஞ்சானாக இருந்தால் கிண்டல் செய்வார்கள் என்பதை விளக்கும் போது கோபுவின் குரலில் பதபதைப்பு இருந்ததை ஸ்பீக்கர் வழி உணர முடிந்தது. இந்த அடிமைக் கதைகள் சொல்லும் போது சத்திய சந்தனாக இருந்த அரிச்சந்திரன் தனது மனைவி மக்களை அடிமையாக விட்டது ஞாபகம் வந்தது. ஆனால் கோபு மஹராஜ்ஜுக்கு எது ஞாபகம் வந்தது தெரியுமா? சுந்தரமூர்த்தி நாயனாரும்... தடுத்தாட்கொண்ட புராணமும்... அரண்டு விட்டேன். சீட்டை விட்டு எழுந்து கை தட்டி விசிலடிக்க எத்தனித்து அறிஞர்கள் நிரம்பிய சபையாதலால் அடக்கிக்கொண்டேன். ஆனாலும் சுற்றி உட்கார்ந்திருந்த ஸ்நேகித வட்டத்திடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனேன். “எப்படி ஐயா உமக்கு உதாரணம் வருகிறது?”
ஹரிகிச்சு வீகேயெஸ் இடத்தை நிரப்பினான். வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்தான். “அங்கிள்...அவருக்கு லோக்கல் க்ளோபல்ன்னு நிறையா டேட்டாபேஸ் மூளைக்குள்ளே இருக்கே...” என்று அதையும் IT-யுடன் வீகேயெஸ் போலவே சேர்த்துத் தொட்டுக்காட்டினான். சமர்த்து!!
”கோட்டையாளப் போகிறோம்...” என்கிற தேர்தல் கோஷங்கள் வானை முட்டும் நேரமிது. ஆனால் ஜார்ஜ் கோட்டை என்பது அரசாங்கக் கோட்டையன்று ஒரு வணிகக் கோட்டை என்று போட்டுடைத்தார். துணிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அங்கே கிடத்தியிருப்பார்கள் என்கிற அரிய தகவலுடன் ஆங்கிலேயர்கள் லினன் துணி இறக்குமதி செய்து காட்டன் துணிகளை ஏற்றுமதி செய்யும் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய இடம் ஜார்ஜ் கோட்டையென்றார்.
ஸ்விட்ச் போர்டில் ஒட்டியிருந்த ரமணர் இழுத்ததால் இந்தக் கதை எதற்கு சொல்ல ஆரம்பித்தார் என்பதை கவனிக்க முடியவில்லை. ஆனால் புத்தர் பற்றிய அபாரமான கதை.
விவசாயி உழுது கொண்டிருக்கும் நிலத்தில் ஏதோ பொட்டி தட்டுப்பட்டது. அந்த வழியாக சென்ற புத்தர் ”ஆனந்தா பாம்பிருக்கு... ஆனந்தா பாம்பிருக்கு...” என்று சொல்லிக்கொண்டே சென்றார். அந்த விவசாயிக்குப் புரியவில்லை. கிடைத்த பெட்டியை திறந்து பார்த்தால் தங்கமும் வைர வைடூர்யங்கள் இருக்கும் பெட்டி. வாயைப் பிளந்து அதிசயப்படும் போது அரசாங்க வீரர்கள் வந்து பார்த்துவிட்டு.. இது அரசரிடம் திருடுபோன பெட்டி.. நட அரண்மனைக்கு என்று அழைத்துக்கொண்டு போய் ராஜா முன்னர் நிறுத்துகிறார்கள். அரசன் அவனை சிறையிலடைக்க உத்தரவிடுகிறார். சிறையில் அவன் “ஆனந்தா.. .பாம்பிருக்கு..” என்று முனகிக்கொண்டிருக்கிறான். இதில் ஏதோ அர்த்தம் இருக்கும் போலிருக்கிறதே என்று அவர்கள் விழித்துக்கொண்டு சொன்னவரை தேட ஆரம்பிப்பதாக கதை போகிறது....
சரியாக ஒரு மணி நேரத்தில் எண்ட் கார்டு போட்டார் கோபு. பின்னர் நண்பர்கள் அனைவரும் படமெடுத்துக்கொண்டு எங்கள் குழுத்தொழிலான அரட்டையில் சிறிது நேரம் ஈடுபட்டு சிரித்துக்கொண்டோம். வைத்தியாதன் சாருடன் வீடு திரும்புகையில் அவரது கல்பாக்கம் டெலிஃபோன் எக்ஸேஞ்ச் அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரே பேட்டையில் வசிப்பவர். தெருமுனையில் இறக்கிவிட்டுவிட்டு வீடு சேர்ந்தேன்.
இரவு உணவு முடித்து பால்கனியில் வந்து நின்றபொழுது கறுப்பு-வெள்ளையில் சென்னை மதராஸாகத் தெரிந்தது. தெருவிளக்கின் அடியில் கும்பலாக நிற்கும் நண்பர்களுக்கு மத்தியில் கோபு கதை சொல்வது போன்ற பிரமை.
இதன் முதல் பகுதி முதல் கமெண்ட்டாக கீழே!
பட உதவி: வல்லபா ஸ்ரீநிவாசன்

Sunday, August 2, 2015

வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே!!

கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களைப் பற்றி சொல்லிலே கலை வண்ணமாகப் பேசினார் கோபு. சனி மாலை மல்லை மாலையாகியது. மாலை 5:30 மணிக்கு தக்கர் பாபாவிற்குள் நுழைய முடியாது என்பது திண்ணமான போது ”கோபு.. அஞ்சரைக்கே நிச்சயம் ஆரம்பிச்சிடுவீங்களா?” என்று மொபைலில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டேன். “ஒரு பத்து நிமிஷம் கூட ஆகும்....நீங்க வாங்க..” என்ற பதிலில் தெம்பாக ஓட்ட ஆரம்பித்தேன்.

தமிழ் ஹெரிட்டேஜ் அறக்கட்டளையின் மாதாந்திர முதல் சனிக்கிழமை செமினாருக்காகத் தக்கர் பாபா வினோபா ஹாலில் நேற்று மாலை கூட்டம் அலைமோதியது. ப்ரொஃபஸர் ஸ்வாமிநாதன் சாருக்கு எனது மனைவியை அறிமுகம் செய்துவைத்தேன். மகாபலிபுர ஆராய்ச்சி புத்தகம் வெளியிட்டவர்வகளில் ஸ்வாமிநாதன் சாரும் ஒருவர். வெள்ளையாய் சிரித்தார். திவாகர தனுஜஹா என்ற பெயரில் தமிழில் இலக்கண சுத்தமாகப் பல பாவகைகளில் கவி புனைபவரைக் கண்டு அளவளாவினேன். தமிழ்த்தாயின் ஆசீர்வாதம். ராமசுப்பிரமணியன் ஸ்வாமிநானையும் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி. வரவேற்புரை நிகழ்த்திய கிஷோர் மகாதேவனுக்கு ஒரு சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்தேன். ஐந்து ஐம்பதிற்கு கோபு அரங்கினுள் நுழைந்த போது ஐரோப்பிய கால்பந்து மைதானங்களில், ஆட்ட இடைவெளியில், ரசிகக் கூட்டம் அலையலையாய் எழும்பி வீரர்களின் பெயரைச் சொல்லி கோரஸாகக் கோஷமிடுவது போல “கோ...பு... கோ...பு... கோ...பு..” என்று பரவசமடைந்தார்கள். அன்புச் சங்கிலி.
லாப்டாப்பில் “மல்லை தொன்று தொட்டு இன்று வரை” என்று தலைப்பிட்ட பவர்பாயிண்ட்டை திறக்கும்போது கண்ணில் பட்டது 106 செய்திப் பட்டைகள். விடிய விடியப் பேசலாம்.

ஓப்பனிங் சீனே அசத்தல். மாமல்லபுரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அங்கே பயணிக்கவேண்டுமல்லவா? எப்படியெல்லாம் பழங்காலங்களில் மாமல்லபுரத்தை சென்றடைந்தார்கள் என்று பார்க்கும் போது திருமங்கையாழ்வார் நடையாய் நடந்தார் என்றும் கர்ணல் நுவெல் காரில் சென்றார் என்றும் காலவரிசைக்கிரமமாக பட்டியல் போட்டார். சேப்பாயியில் நானும் குடும்பத்தோடு சென்று சிற்ப அஞ்ஞானியாக ரசித்ததை அசை போட்டுக்கொண்டேன். சரிப்பா... மஹாப்ஸ் போயாச்சு. மகாபலிபுரத்தை எந்தெந்த வடிவங்களில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்கள்? பாசுரங்களில் ஆரம்பித்து ரயில்வே கைடு வரை அலசியிருக்கிறார்கள்.
ஆயிரத்து எழுநூறுகள் எண்ணூறுகளில் யாரெல்லாம் மகாபலிபுரத்தைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்ற ஸ்லைடில் 1854 நேப்பியர் என்ற பெயர் மட்டும் எனக்குத் தெரியும். சென்னைவாசிகள் உங்களுக்கும் தெரியும். ஆமாம். கூவம்நதிக்கரை ப்ரிட்ஜ் கட்டின ஆளா என்று கோபு சொல்வார். (அறிவுப்பூர்வமாக எனக்கு உதித்த கேள்வி!!)
தங்களது ஆக்கங்களிலும் ஆராய்ச்சிகளிலும் மாமல்லபுரத்தை அலசிப்பார்த்தவர்களின் பட்டியல் 2010 பாலுசாமியிலிருந்து முன்னோக்கி நாகசாமி, கல்கி என்று நீள்கிறது. ”கல்லா பார்க்கிறவனுக்குக் கல்.. செலையா பார்க்கிறவனுக்கு செலே... வாசுதேவப் பெருமாளாப் பார்க்கிறவனுக்கு வாசுதேவப்பெருமாள்..” என்று சாரதா பாட்டி கல்லைக் கல்லாகவும் கலையாவும் கடவுளாகவும் பார்ப்பவர்களைப் பற்றி மன்னை ராஜகோபாலஸ்வாமி கோயிலில் சொல்லியிருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்குத் தத்தம் நோக்கில் ஒவ்வொன்றாக தோன்றியிருக்கலாம்.
”இங்கே குழுமியிருப்பவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...” போன்று சோடா பாட்டில் கையோடு கரகரத் தொண்டை கழகப் பேச்சாளர்கள் போலில்லை கோபுவின் சொற்பொழிவு பாணி. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு ஆதூரமாகப் பேசும் தோழன் போல ஸ்நேக பாவ நடை.
பெறும்பாண் ஆற்றுப்படை மற்றும் பூதத்தாழ்வாரின் பாசுரம் போன்றவைகளில் மல்லையை மற்ற பெயர்களில் தொட்டதை ஸ்லைட் போட்டுக் காட்டிவிட்டு தண்டின் எழுதிய அவந்தி சுந்தரி கதாவில் மகாபலிபுரம் பற்றி குறிப்புகள் இருப்பதைச் சொன்னார். லலிதாலயன் என்கிற சிற்பி ஸ்தல சயனப் பெருமாளின் கை ஒன்றை செப்பனிட்டதையும் அதை மன்னன் ”எந்தக் கையை சீர் செய்தீர்கள்...” என்று கேட்கும் போது “இதுவே எனக்கு வெற்றி...” என்றானாம். மங்கலான ஞாபகம்.
”கள்வா! கடல்மல்லை கிடந்த கரும்பே!
வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே” என்று திருமங்கை மன்னனின் திருவாய்மொழியை நினைவு கூர்ந்தார். கள்வா.. கரும்பே.... ஆஹா.. தமிழமுது.

பிரிட்டீஷ் லைப்ரரியிலிருந்து சேகரித்த 1890ம் ஆண்டு பஞ்சபாண்டவ ரதப் படத்தையும் 2015ல் பஞ்சபாண்டவ ரதத்தையும் முன்னும் பின்னும் ஓட்டிக்காண்பிது இருகாலங்களுக்கும் ஏககாலத்தில் பயணிக்கவைத்தார். 1890களில் எடுக்கப்பட்ட படத்தில் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு நின்ற ஆள் யாராக இருக்கும்? துரைகளைப் பல்லாக்கில் தூக்கிக்கொண்டு வந்த ஆளா? டேய் ஆர்விஎஸ்! இங்கே வா... கோபு அடுத்த ரெண்டு ஸ்லைட் போயாச்சு...
ஆங்கில உவேசா என்று காலின் மேகன்ஸீயைக் காட்டினார். முட்டி வரை பூட்ஸ் அணிந்து சேப்புக் கோட்டோடு மூன்று பேர் முண்டாசோடு சூழ்ந்து நிற்க ஒரு ஃபோட்டோ. முதலில் மோகன்ஸீ என்று படித்துவிட்டு, உதட்டைக் கடித்துக்கொண்டு மேகன்ஸீ என்று திருத்திக்கொண்டேன். அவர் ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், ஆவணங்கள், சிற்பங்கள் ப்ரியராம். ஆதொண்டை சக்கரவர்த்தி வரலாறு மற்றும் குரும்பர் வரலாறு எழுதியவர்.
ஒரு வெள்ளைக்கார மாமாவும் அவர் மருமானும் 1786லிருந்து 1794வரை இந்தியா முழுவதும் சுற்றிவந்து படம் வரைந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கோரமண்டல் கரையோர மாவலிபுரத்தை...வரைந்த சில படங்களை காண்பித்தார். தத்ரூபம். இப்பதிவில் கோபுவின் பக்கத்திலிருப்பது அந்தப் படமே.பார்த்துக்கொண்டேயிருக்கலாம். நேரம் ஓடுகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளை கோபு மாற்றினாலும் அந்த ஓவியங்கள் என் கண்ணோடு ஒட்டிக்கொண்டுவிட்டன. தேடிக் கண்டுபிடித்து தக்கர்பாபாவில் ஸ்லைடோட்டிய கோபுவுக்கு கோடான கோடி நன்றி.
பேபிங்டன் என்கிற ஆராய்ச்சியாளர் மகாபலிபுரத்திலுள்ள மஹிஷாசுரமர்த்தினி சிற்பம்தான் இந்திய சிற்பங்களிலேயே அதிகமான அசைவுகளை காட்டிய சிற்பம் என்றாராம். அப்படிச் சொன்னபிறகு இப்போது பார்த்தால் சிற்பம் பேசுகிறது, நடக்கிறது, சிரிக்கிறது, சிங்கத்தின் மேலே பயணிக்கிறது..இப்படி பல காட்சிகளாக நம் கண்முன்னே விரிகிறது. அதே பேபிங்டன் தமிழ் சம்ஸ்கிருத லிபிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அட்டவணைப் போட்டிருப்பதைப் பார்த்த போது மெய்சிலிர்த்தது. தெரியாத மொழியில் என்ன ஒரு அர்ப்பணிப்பு!!
தர்மராஜா மண்டபமும் அதிலிருந்த க்ரந்த லிபியையும் தமிழும், ஆங்கிலமும், சம்ஸ்கிருத சந்தஸ் கலையாமல் கலந்து கலந்து கோபு மணிப்பிரவாளமாக பேசும்போது நமக்கு மகாபலிபுரம் கருப்பு-வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், மணிரத்தினம் பட பி.ஸி.ஸ்ரீராம் கலர் என்று மாறிமாறி வர்ணமயமாகத் தெரிகிறது.
அதிரணசண்ட மண்டபத்தில் ராஜசிம்ஹன் எழுதிய கவிதையைப் படித்துக்காண்பித்தார். அத்யந்தகாமா என்கிற பதத்தை பிரித்து அர்த்தம் சொன்னார். தீரா ஆசைகொண்டவனாம். 1850ல் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிற சரித்திரக்குறிப்பொன்றை சொற்பொழிவின் நடுவே உதிர்த்துவிட்டு ஸ்லாக் ஓவர்களில் பத்து விக்கட்டுகளும் மிச்சமிருக்கும் அணி துவம்சம் செய்வது போல ஸ்லைட் மாற்றி ஸ்லைட் புகுந்து விளையாடினார். ஸ்லைடுகளின் அசுர பொழிவு.
1827ல் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவர் மல்லை ஒரு புத்த ஸ்தலம் என்றாராம். ராஜராஜசோழனின் ”திருமகள் போல பெரு நிலச்செல்வியுந் தனக்கே உரிமை” கல்வெட்டு காண்பித்தார். அதன் பின்னர் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல். தமிழ்நாட்டு மன்னர்களின் டைம்லைனை ஸ்லைடாக்கியிருந்தார். சரித்திர ஆர்வலர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நேரக்கோடு.
பழங்கால கோயில்கள் கர்ப்பக்கிரஹம் மட்டுமே இருந்தது. அது பாண்டியர்கள்/பல்லவர்கள் கட்டினது. பின்னர் வந்த சோழர்கள் அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டி இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினார்கள். அதன் பின்னர் ஆண்ட நாயக்கர்கள் காலத்தில்தான் பல கோயில்களுக்கு விண்ணை முட்டும் பெரிய கோபுரமும் பிரம்மாண்டமான மதில்சுவர்களும் கட்டப்பட்டன என்ற தகவலைச் சொல்லும் போது “மன்னார்குடி ராஜகோபாலன் கோயில் கோபுரமும் மதிலும் விஜயரகுநாத நாயக்கர் காலத்துல கட்டினதுன்னு சொல்லுவாங்க...” என்றேன் சங்கீதாவிடம். கோயில்கள் வளர்ந்த வரலாறு.
தூபே என்பவர் வேதியல் ஆசிரியர். மல்லை ஆராய்ச்சியில் உந்தப்பட்டு பல்லவர்களைப் பற்றி புஸ்தகம் எழுதுகிறார் மேலும் மண்டகப்பட்டு கல்வெட்டுகளை கண்டறிகிறார். அதில் விசித்திரசித்தன் தான் கட்டிய கோவிலானது செங்கல்லில்லாமல், மரமில்லாமல், சுண்ணாம்புக் காரையில்லாமல், உலோகமில்லாமல் பிரம்மா, ஈஸ்வரன் மற்றும் விஷ்ணுவிற்காகக் கட்டியது என்று எழுதிவைத்திருக்கிறானாம். ஆஹா!
பின்பு பல்வேறு சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து அதன் காலங்கள் வேறுபட்டவையா ஒன்றேவா என்ற ஆராய்ச்சிகளைப் பற்றி பேசினார். மண்டபங்களில் அமைத்திருக்கும் சிம்மங்கள் உட்கார்ந்திருப்பது, நின்றிருப்பது போன்றவைகளை வைத்தும் அதன் காலங்களைக் கணித்திருக்கிறார்கள். சிம்மம் மட்டுமா துவாரபாலகர்களின் உருவம் மற்றும் தோற்றங்களையும் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறார்கள்.
மன்னர்களின் பெயரால் நாம் இதை காலக்கிரமப்படுத்தினாலும் எந்த காலத்திலும் இவ்வளவு நேர்த்தியாக சிற்பம் வடித்த அனானி சிற்பிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவர்களின் மேல் கொண்ட தீராத பாசத்தினால் கோபு தானியற்றிய ஒரு வெண்பாவை வெளியிட்டார். அதை அவரது மும்பாய் பெரியம்மா பாடிக்காட்டினார் என்று சொன்னது நம்மை உருக வைத்த விஷயமாகும். அந்த வெண்பா..
கல்லே தகளியா கற்பனையே நெய்யாக
பல்லவன் கட்டளை இடுதிரியா – மல்லை
ஆழி கரையோரம் உளியால் விளக்கெடுத்தார்
வாழி எம் சிற்பியர் புகழ்

லாக்வுட் சிரோன்மணி சோமாஸ்கந்த உருவங்களை வைத்து அந்த சிற்பங்களின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம். சிவபெருமானின் எந்தக் கால் கீழே தொங்குகிறது, காலின் அணிகலன்கள், காதில் மாட்டியிருக்கும் அணிகலன், தலையில் சூடியிருப்பவை மற்றும் உமையின் முகம் நம்மைப் பார்த்து இருக்கிறதா அல்லது சிவனை நோக்கியவாறு அமைக்கப்பட்டிருக்கிறதா, முருகனை உமை மடியில் வைத்திருக்கிறாளா, காது அணிகலன்கள் வெண்சாமரம் வீசுபவர்கள் என்றெல்லாம் நுணுக்கமாகப் பார்த்து பல விஷயங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
“No one has last word regarding Mamallapuram” என்று நாகசாமி சொன்னாரம். அதையே திரும்பச் சொல்லி கோபு நிறைவு செய்த போது மொத்த கூட்டமும் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தது. காரணம் என்னவென்றால் யாருமே மாமல்லபுரத்திலிருந்து திரும்பவில்லை. சூட்சும சரீரமாக எல்லோரையும் மாமல்லபுரக் கடற்கரையில் உலவவிட்டு கோபு தக்கர்பாபாவுக்குத் திரும்பி வாட்டர் பாட்டிலை வாயில் சரித்துக்கொண்டிருந்தார். அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக திநகருக்கு திரும்பி வந்து கோபுவுக்கு கைகொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
ராதிகா பார்த்தசாரதி மேடம், அன்பு ஆர்.வி, ஜேயார் சார், லதா மேடம், பாலு சார் போன்றோரிடம் ஒரு சின்ன அரட்டையில் ஈடுபட்டு வெங்கடேஷ் க்ருஷ்ணமூர்த்தியுடன் வீடு திரும்பினேன். யாரேனும் இனிமேல் மாமல்லபுரம் செல்ல ஆசைப்பட்டால் கோபுவுடன் செல்வது சாலச்சிறந்தது. கோபு இன்னொரு செமினார்... நீங்கள் சொன்ன அந்த விட்டுப்போன படங்களோடு... மீண்டும்.. மீண்டும்...
பின்குறிப்பு: இதில் விடுபட்டவைகள் இருக்கலாம். மாமல்லபுரத்தை ஒரிரு பக்கங்களில் நிரப்ப நினைப்பது எத்தகைய பேதமை!!


ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails