Saturday, July 31, 2010

சனிக்கிழமை சங்கதி - அக்னிப் பழம்

ஒரு வாரம் முழுவதும் வீட்டில் உழைத்துக் கொட்டிய "வீட்டுப் பொண்டாட்டிகள்" (HOUSE WIVES) முதல் வெளியே சென்று கூலி சம்பாதித்து வரும் "வேலைப் பொண்டாட்டிகள்" (WORKING WIVES) வரை வார இறுதிகளில் இந்த சமையல் வேலையில் இருந்து விடுதலை பெறுவதனாலும், எப்போதும் ஒரே மாதிரியான வீட்டு சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து அதை உயிர்ப்பிக்க கொஞ்சம் விதவிதமான ஹோட்டல் சாப்பாடு கேட்பதனாலும் வியர்வை சிந்த(?) உழைத்த ஆண்வர்கமும், பள்ளி கல்லூரிகளில் பாடம் பயிலும் இளைய சமுதாயமும் வாரத்தில் ஒரு நாளாவது வெளி உணவு விடுதிகளில் சென்று மூக்கு முட்ட தின்று தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர்.

junkfood obesityசெட்டி நாட்டு சமையல், காரைக்குடி ரெஸ்டாரன்ட், பஞ்சாபி தாபா, ஆந்த்ரா மீல்ஸ், கடல் வாழ் உயிரினங்கள் போட்டு சமைத்த மலையாள குமாரகம், இரண்டு இட்டிலிக்கு ஒரு சட்டி சாம்பார் தரும் திருவல்லிக்கேணி ரத்னா கபே, ஹோட்டலில் வயிறு நிரப்பும் போது அறுபடை வீட்டு முருகனையும், பக்தி இலக்கியங்கள் மூலம் தமிழ் அமுது ஊட்டிய தெய்வத் திரு திருமுருக கிருபானந்தவாரியாரையும் தரிசிக்க வைக்கும் சரவணபவன், ஊருக்கு ஊர் தெருக்கு தெரு மார்க்கெட்டுக்கு மார்க்கெட் பேட்டைக்கு பேட்டை இருக்கும் ஆரிய,வசந்த பவன்கள், சுத்தமான தோசைக்கல்லில் கல் தோசை  சுட்டுக் கொடுக்கும் சாக்கடை ஓரத்து கையேந்தி பவன்கள், ராயர் கபே, மாமி கடை, ஜிலேபி சமோசா கடை, உள்ளங்கை அளவு சூடான இட்டிலி சாப்பிடும் தட்டுக் கடைகள் என்று சிற்றுண்டி, பேருண்டி என்று பேதம் பாராமல் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று சாப்பிட்டு வந்த நம்மக்கள் நாக்கு இப்போது அயல்தேச அடுப்பங்கரை ஐட்டங்களின் மேல் சப்புக்கொட்டுகிறது.

மெக்டோனால்ட்ஸ், கெ.எஃப்.சி, இடாலியன் ஃபுட் என்று நாடு வாரியாக வாரத்திற்கு ஒன்று என்று அட்டவணை போட்டு வைத்துக்கொண்டு குடும்பமாக இழுத்துக்கொண்டு திரிகிறார்கள். ஊரில் எந்த ஒரு உணவு விடுதியில் வார இறுதிகளில் டேபிள் கிடைப்பது குதிரைக்கொம்பு. இன்னும் கொஞ்சம் நாட்களில் சர்வர் அல்லது சூப்பர்வைசரிடம் லஞ்சம் கொடுத்து டேபிள் புக் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன். அவ்வளவு டிமாண்ட். மசால் தோசை இருபத்து ஐந்து என்று சொன்னாலும் நாக்கடிமைகள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். உட்கார வைத்து சோறு போட்டால் லேசில் எழுந்திருக்க மாட்டார்கள் என்று ஒரு தன்னிலை முடிவெடுத்து "வேக உணவு" ( அது வேக உணவா அவசர உணவா என்று தெரிய பாப்பையா  தலைமையில் வரும் தீபாவளிக்கு பட்டிமன்றம் வைக்கலாம்.) என்று சொல்லி தட்டை கையில் கொடுத்து நிற்க வைத்து காசு வாங்கிக்கொண்டு பதார்த்தம் கொடுத்து கடை வாசலில் உண்ண வைத்து அனுப்பிவிடுகிறார்கள். 
இந்த மெக்டோனால்ட்ஸ் சாப்பாடு எப்படி என்று வெள்ளைக்காரர் ஒருவர் நமக்கு அளிக்கும் கீழ்காணும் டெமோ நம் வயிறு எவ்வளவு பாடு படுகிறது என்று அறிந்து கொள்ள உதவும் ஒரு அளவுக்கோல்.


"அக்கினி பழம் என்று தெரிந்திருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி....." என்ற ராவணன் படப் பாடல் கார்த்திக் காதலுக்காக பாடியது, அது மேக்டோனால்டுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

மேலே இட்ட தொப்பை பரிணாம வளர்ச்சி பட உதவி: blogs.miaminewtimes.com

Friday, July 30, 2010

வெற்றிக் களிப்பு

footballfishing

கால்பந்தாட்டங்களில் கோல் அடித்தவுடன் மைதானம் எங்கும் ஓடி உட்கார்ந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து சட்டையை கழட்டி அசிங்கமாக ஆட்டி ரகளை செய்து கூச்சலிடுவதையும், கோல் அடித்த ராசாவை குப்புற படுக்கவைத்து அனைவரும் மேலே ஏறி ஆர்பரிப்பதை பார்த்திருக்கிறோம், எம்பி குதிப்பது, எத்தி விளையாடுவது போன்ற இன்னும் எத்தனையோ விதங்களில் வெற்றியை கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம். ஐஸ்லாந்தில் நடைப்பெற்ற ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் கோல் அடித்தவுடன்,  மீனை தூண்டில் போட்டு ஒருவர் பிட்டிபது போலவும், தூண்டிலில் சிக்கிய ராட்சஷ மீன் துள்ளி துள்ளி வருவது போலவும், மாட்டிய மீனை கடைசியாக நான்கு பேர் தூக்கி கையில் வைத்துக்கொண்டு எல்லாவற்றிற்கும் மேலாக ஓடி வந்து ஒருவர் அதைப் புகைப்படம் எடுப்பது போல கோல் அடித்த வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். அற்புதம்.

மக்கள் பார்வைக்கு...



போன பதிவின் தீட்டைத் துடைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்... ஹா.. ஹா..... நவரசம்.

ஆங்கிலத்தில் வசைபாடும் கொரியன்

இந்த வசை பாடும் இலக்கணப் பதிவு கண்டிப்பாக ரசிப்பவர்களுக்கு மட்டும். மேலும் இதை ஒரு நகைச்சுவையாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்கள் இன்று என்னுடைய சைட்டுக்கு லீவ் என்று நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டு, நாளை சனிக்கிழமை சங்கதியில் சந்திக்கலாம் என்று பணிக்கிறேன். 

ரோடில் கொஞ்சம் ஓரமாக போய்க்கொண்டு இருந்தால் கூட "ஓரமா போடா சாவு கிராக்கி" என்று திட்டும் போது நமக்கு கொஞ்சம் பி.பி ஏறும். உடனே அவர்களை திட்டுவர்தற்க்கு நம்மில் சிலபேருக்கு வார்த்தை கிடைக்காமல் தடுமாறலாம். அவ்வளவு ஒழுக்க சீலர்கள் இருப்பார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இருந்தாலும் அடியேன் போல் பலருக்கு கெட்டவார்த்தை என்றால் எது காய்கனி கெட்டுப்போய்விட்டது என்று சொல்வார்களே அதுபோல ஏதோ வார்த்தை தான் கெட்டுப்போய்விட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். அவ்வளவு யோக்கிய சிகாமணி.
koreanswear1
கொரிய போன்ற நாடுகளில், ஆங்கிலம் பேசும் அந்நியர்கள் தங்களைத் திட்டினால் எப்படி அவர்களுக்கு மறுமொழி அளிப்பது என்பது பற்றி போர்டில் சாக்பீஸ் கொண்டு, டை கட்டி ஒரு பேராசிரியர் போல சொல்லிக்கொடுப்பதை பார்த்த பின்புதான், நம்முடைய ஒரு துறையின் அறிவாற்றலை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தது.தமிழில் என்ன ஒரு பிரச்சினை என்றால் ஏரியாவுக்கு  ஏரியா பேட்டைக்கு பேட்டை இது மிகவும் வித்தியாசப்படும். ஒரு பகுதியில் பேசும் நன்மொழி மற்றொரு பகுதியில் கொச்சை வார்த்தையாகவும், கொச்சை வார்த்தை நல்ல வார்த்தையாக மற்ற இடத்தில் வழக்கில் இருக்கும்.

ஒரு இலக்கணம் வகுத்து அவர் நடத்தும் இந்தப் பாடம் கொரியனில் இருந்தாலும் அதற்க்கு ஆங்கிலத்தில் கார்டு போடுகிறார்கள். இதில் மிக முக்கியம் என்னவென்றால் இதை சொல்லிக்கொடுக்கும் மகானுபாவனின் முகபாவனைகள் தான்.  ஒவ்வொரு வார்த்தைகளையும் தனியாகவும் அதோடு "THE" சேர்த்து சொல்லும்போது எப்படி அதன் பொருள் மாறுகிறது என்று சொல்லும் இலக்கண இலக்கிய வித்தியாசங்கள் அருமை. நான் இதைப் பார்ப்பதற்கு முன்னால் யூடுயூப்பில் 386,234 பேர் இந்த வகுப்பில் பங்குபெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆகையால் கொச்சை அல்ல என்று தெரிகிறது. கண்டு கேட்டு ரசியுங்கள்.

 

பார்த்தாயிற்றா? தயவு செய்து என்னை திட்டாதீர்கள். பார்க்கும் வரையில் ரசித்துவிட்டு பின்பு திட்டுவது என்ன நியாயம்.

Wednesday, July 28, 2010

ஆடி அடங்கும் பூமியடா...

"பூமி சுற்றுவது நின்று விட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை, புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் பெண் வாழ்வில் எந்நாளும் ஏற்றங்கள் இல்லை" இது நம்ம வைரமுத்து பம்பாய் படத்துக்காக எழுதிய "குச்சி குச்சி ராக்கம்மா" பாடல். இவர் எழுதியதை ஒருவர் கணினி கொண்டு சுற்றும் பூமியை நிறுத்திப் பார்த்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிள்ளார்.

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட Esri என்ற புவியியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் புவித் தகவல் தொழில்நுட்பங்கள் நிறுவனத்தில் அலுவலராக குப்பை கொட்டும் Witold Fraczek (தமிழில் எழுதுவதற்கு கொஞ்சமும் முயலவில்லை! மனிதர் மெத்த படித்திருக்கிறார்) என்பவர் ஜாக்ராபிக் இன்போர்மஷன் சிஸ்டம் துணை கொண்டு சுற்றும் பூமி தனக்கு தானே சுற்றுவதை ஒரு நன்னாளில்(?) நிறுத்திக்கொண்டு விட்டால் என்னென்ன மாற்றங்கள் இங்கு நிகழும் என்று விவரிக்கிறார். நமது தூக்கத்தை கெடுக்கும் பல அதிசய அறிய தகவல்கள் அவரது இந்த வித்தியாசமான ஆராய்ச்சியின் முடிவு. இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னரே "இதுதான் நம்முடைய எதிர் காலமல்ல, இது ஒரு அறிவியல் புனைவும் அல்ல, அண்டம் அபாண்டமாக ஒரு நாள் அப்படியே நின்றுவிட்டால் என்ற கற்பனையை ஒரு GIS-ன் திறன் கொண்டு செய்து பார்த்ததின் விளைவுகள் தான் இக்கட்டுரையில்" என்கிறார். ArcGIS என்பதன் வழியாக பூமியை இவர் நிறுத்திப் பார்த்தது கண்டுபிடித்ததை என்னவென்று ஒரு அறிவிலியின் (Lay Man Point Of View) பார்வையில் இருந்து ஒரு சில துளிகள்....

பூமி தன்னைத் தானே சுற்றி வரும்பொழுது அதற்க்கு ஒரு மையவிலக்கு விசை இருக்கும். ஆங்கிலத்தில் Centrifugal Force என்று பெயர். இந்த மைய விலக்கு விசை தான் நம் அனைவரையும் மற்றும் நம் வீடு, நாடு, நகரம் எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில்  இருக்குமாறு இப்புவியில் அப்படியே கட்டிபோட்டு இருக்கிறது. சமுத்திரங்களின் மட்டமானது நம்முடைய இப்புவியின் ஈர்ப்பு விசை மற்றும் இந்த மையவிலக்கு விசை என்ற இந்த இரண்டோடும் மிகவும் நெருக்கமான தொடர்புடையது. இந்தப் பூமி சுற்றுவதால், மையவிலக்கு விசை ஏற்படுவதால் இந்தக் கடல் மட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 சில பில்லியன் வருடங்கள் சுற்றிய பிறகு, கோள (sphere) வடிவாக இருந்த இப்புவி, சற்றே தட்டைக்கோள(ellipsoidal) வடிவிற்கு உருமாறியிருக்கிறது. இதன் விளைவாக வடதென் துருவங்களை காட்டிலும் பூமத்தியரேகை பகுதிகளில் புவியின் மைய நிறை (Center of Mass) அதிகமாக இருக்கிறது. துருவங்களைவிட பூமத்திய ரேகைப் பகுதிகளில் பூமியின் மைய நிறை கடல் மட்டத்தைவிட 21.4 கி.மி அதிகம் உள்ளது.

பூமி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்தி விட்டு, சூரியனை அதனுடைய அச்சிலும், அதே சாய்மானத்திலும் சுற்றிவந்தால் என்ன ஆகும்?  வருடத்தின் கால அளவு இப்போது உள்ளது போல 365 நாட்களாக இருந்தாலும்,  ஒரு நாள் ஒரு பொழுது ஒரு வருடம் என்ற வித்தியாசமே இல்லாமல் ஒரு வருடம் நீ......ண்டு இருக்கும் என்கிறார். இரவே இல்லை என்றால், கவிஞர்கள் எப்படி காதல் கவிதை எழுதுவார்களோ? ஆந்தைகள் எப்போது விழிக்குமோ? கரண்ட் செலவு மிச்சம் தான் ஆனால் வெய்யில் கொளுத்துமா என்று தெரியவில்லை. ஒரு வருடம் முழுவதும் ஆபிசில் இருக்க வேண்டும். கொடுமையடா சாமி.

தட்ப வெப்ப நிலைகளும், பருவ காலங்களும் தடம் மாறிப் புரண்டு போகும் என்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பூமியை ஒரு நிலை கொள்ள விடாமல் சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்படும். பூமியின் புவி ஈர்ப்பு விசை மட்டுமே கடலின் எல்லைகளை அதற்க்கு மேல் மீறி நிலப் பகுதிக்கு வரவிடாமல் தடுக்கும் அரணாக இருக்கும்.
lands2

அப்புறம், இந்தப் புவியின் சுற்று நின்ற நிலைமையால், கடல்கள் துருவங்களுக்கு நகர ஆரம்பித்து பூமத்திய ரேகை பகுதியில் இருக்கும் கடல் பரப்புகளை நிலம் கொண்டு நிரப்ப ஆரம்பிக்கும். துபாய், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளுக்கு தரை வழிப் போக்குவரத்து ஆரம்பித்து நம்மாட்கள் வால்வோ பஸ் விடுவார்கள். இருபது நாள் உல்லாச சுற்றுலா சொகுசு பயண பஸ் விட்டு பன்னாட்டு தரைவழி டூர் கூட ஏற்ப்பாடு செய்யப்படும். எவர் கண்டார்? நினைக்கவே நெஞ்சு ஆச்சர்யத்தால் மூழ்குகிறது அல்லவா? தற்போது இருக்கும் கடல்கள் இரு துருவத்திலும் சேர்ந்து இந்த புவிக்கே இரண்டே இரண்டு சமுத்திரங்களை உருவாக்கிவிடும். சென்னைக்கு மெரீனா இருக்காது, தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் வாங்கி திங்க முடியாது.

இந்த பூமி தன்னை சுற்றுதலின் வேகக்குறைவு காரணமாக, நம் புவியின் அணுக்கடிகாரத்தில் ஒரு நொடியை அவ்வப்பது சேர்த்து நாட்களின் அளவை சரிசெய்து கொண்டே வருகிறோம். இந்த நொடிக்கு பெயர் லீப் நொடி(Leap Second). நிறைய அறிவியல் ஆராச்சியாளர்கள் நம்முடைய பகல் பொழுது நீண்டு கொண்டே வருவதை உறுதிபட தெரிவிக்கிறார்கள். நானூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு, நாற்பது மடங்கு அதிகமாக அல்லது வேகமாக சுற்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இந்தப் புவியின் சுற்று வேகத்தை பொறுத்துதான் அதனுடைய வடிவமும், சமுத்திரங்களின் மட்டங்களும், அளவுகளும் இருக்கின்றன.

இப்போதைய குறையும் வேகத்தின்படி, இந்தப் புவி தன்னுடைய சுழலும் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னமும் குறைந்தது நான்கு பில்லியன் வருடங்களாவது பிடிக்கும். ஆகையால் அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தது ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள் என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

மேலதிகத் தகவல்களுக்கு: http://www.esri.com/news/arcuser/0610/nospin.html

Tuesday, July 27, 2010

அஞ்சாநெஞ்சன் ஜூலியன் அசாஞ்

julian2006 - ல் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் (www.wikileaks.org) என்ற இணைய தளத்தின் டைரக்டர் ஜூலியன் அசாஞ் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர். இந்த விக்கி கசிவு தளத்தில் இதற்க்கு முன்னர் கென்யா நாட்டின் முன்னாள் தலைவர் டானியல் அரப் மோய் அவர்களின் சொத்துக்குவிப்பு மற்றும் அவரது குடும்ப அன்பர்களின் அட்டகாசங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.  இது தி கார்டியன் பத்திரிக்கையில் 2007-ம் வருடம் வெளிவந்தது. இம்முறை இந்தக் கசிவுத் தாக்குதலுக்கு ஆளானோர் பெரிய இடம் ஆகையால் இந்த உலகமே ஜூலியன் அசாஞ் பக்கம் திரும்பியிருக்கிறது. 2004-09 வரை அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் அடித்த லூட்டியை ஒன்று விடமால் 92,000 ஆவணங்களில் வரிசைக்கிரமமாக ஏற்றி பாரில் உள்ளோர் பார்வைக்கு விட்டிருக்கிறது. பெண்டகன் கட்டிடம் தீ பிடித்தாற்போல் சூட்டோடும், பரபரப்போடும் இந்த பத்த வைத்த ஆளை பிடிக்க தீவிர முனைப்போடு ஈடுபட்டிருக்கிறது. பராக் ஒபாமா இது ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்க்கு வைக்கும் ஆப்பு என்று வர்ணித்துள்ளார். ஆப்கனில் சாதாரண குடிமக்கள் மீது நடத்திய தாக்குதல்களின் வீடியோ காட்சி உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிட உள்ளாதாக அஞ்சாநெஞ்சன் தெரிவித்துள்ளார்.  


2007-ல் தீவிரவாதிகள் அல்லது ஊடுருவல்காரர்கள்  என்று நினைத்து ஆப்கன் போலீசார் மீதே வான்வழித்  தாக்குதல் நடத்தி கொன்றது போன்ற அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களின் குறிப்புகள் கூட இதில் அடங்கியுள்ளது.  எந்த நாடோ எந்த ஊரோ எந்தப் பாவமும் அறியாத அப்பாவி மக்கள் பாவிகளால் வதைபடுவதும், கொலையாவதும் தடுக்கவேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே?

உலகில் உள்ள ஒட்டு மொத்த பத்திரிகை சமுதாயம் செய்ய மறுப்பதை, மறைப்பதை, தான் செய்வதாக மார் தட்டி ஆரம்பித்த ஜுலியனின் இந்த கீழ்காணும் பேட்டி அமெரிக்க பத்திரிக்கையாளர் க்றிஸ் ஆண்டேர்சனுக்கு ஜூலை 19-ம் தேதி அளித்தது. மேலும் தனக்கு இதுபோன்ற அத்துமீறல்களை தெரிவிப்பதற்க்கும், அநியாய அக்கிரமங்களை எதிர்த்து சங்கு ஊதுவதற்கும் நிறைய பேர் இருப்பதாகவும், அவர்கள் இணையம் வழியாக மிகவும் பத்திரமாக தனக்கு ஆவணங்களை சேர்ப்பிக்க ஏதுவாக சங்கேத பாஷையில் குறியீடாக்கி ஏற்றவும் அதை சகல ஜாக்கிரதையாக தரவிறக்கம் செய்யவும் வசதிகளை ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டார் ஜூலியன். 

இந்தப் பேட்டியின் இடையிடையே  சில முக்கியமான விஷயங்களை கசிவாக அம்பலப்படுத்தியதை போட்டுக் காண்பிக்கிறார்கள். முக்கியமாக இராக் போர் நேரத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாக்தாத் நகரில் சாலையில் நின்று பெசிக்கொண்டிருப்போரை வம்படியாக பொழுதுபோகாமல் துப்பாக்கியை இடது புற தோளிலிருந்து வலது புற தோளுக்கு சுட்டுக்கொண்டே மாற்றுவது போல, தீபாவளி துப்பாக்கி கொண்டு சுடுவது போன்ற செயலை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியது ஒரு துணிச்சலான அசாத்தியப் பணி,அந்த காட்சியும் இந்த பேட்டி வீடியோவில் உண்டு. 

அந்தப் பேட்டி கீழே..



நம்ம நாடு இவர்களிடம் என்றைக்கு கசியுமோ? எப்படி கசியுமோ? ஜூலியன் கூறுவது போல Whistle Blowers நம்ம ஊரில் இல்லையா?
 
க்றிஸ் ஆண்டர்சன் இந்தப் பேட்டியை நிறைவு செய்யும் தருவாயில் சொன்னதை ஒரு முறை நம் சார்பாக நாமும் ஜுலியனுக்கு சொல்வோம், "ஜாக்கிரதை ஜூலியன்!".

ஆப்கன் வார் டைரி: http://wardiary.wikileaks.com
Twitter முகவரி: http://twitter.com/wikileaks
 பட உதவி: 2012changesarenow.blogspot.com

Monday, July 26, 2010

மீசைகள் பலவிதம்

நம்ம ஏரியாவில் சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுக்கும், பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருக்கும் வேலு ஒரு கருப்பு புல்லேட்டில் "டம் டம் டம்" என்று வந்து தான் கடை திறப்பார். புஜங்கள் தெரிய கை மடித்த வெள்ளை சர்ட்டும், ஒரு காக்கி பேண்டும் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து அந்த என்பீல்டில் வரும் பொழுது நம்ம பேட்டைக்கு வந்திருக்கும் புது சப் இன்ஸ்பெக்டர் என்று தோன்றும். எல்லாவற்றையும்விட தூக்கலாக இருப்பது அவர் நறுநெய் தடவி வளர்க்கும் ஒரு காட்டான் மீசை. யாராவது புது ஆள் தெருவிற்கு வந்தால், வேலு வந்திறங்கும் தோரனையை பார்த்தவுடன் சல்யூட் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை. அப்படி ஒரு களை அந்த மீசையால் வந்தது வேலுவிற்க்கு. 

தி.நகர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் காவல் பணியில் ஈடுபடும் அந்த அரை அடி நீல மீசைக்காரை பார்த்து காவலர்களுக்கே வெட்கம் வரும். அவ்வளவு பெரிய மீசை, கேஷுவலாக அவரிடம் விசாரித்த போது நன்றாக நிமிர்ந்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அவர் மீசை வளர்ப்பில் ஈடுபட்டது பற்றி விலாவாரியாக பேசுவதற்கு முற்ப்பட்டபோது நாம் அங்கிருந்து எஸ்கேப். அருகில் சென்று பார்த்த நமக்கே சற்று உதறல் எடுத்துவிட்டது. 

கல்லூரி காலங்களில் நாங்கள் பயணிக்கும் வாடிக்கையான பேருந்தில் வரும் டிரைவர் அச்சு அசப்பில் ஊர் எல்லையில் காவல் காக்கும் வீரனார் மாதிரியே தோற்றமளிப்பார். உடற்கட்டிலும் கூட.  ஒரு நாள் கூட அவரது மீசை தொங்கியதே கிடையாது. வீட்டு மின்சாரத்திற்கு கரண்டு கம்பத்தில் இருந்து ஒயர் எடுத்து கட்டும்போது ஸ்டே வயர் கொடுத்து கட்டுவோம். அது கூட ஓரிரு மாதங்களில் தழைந்து கொடுத்து விடும். ஆனால் நம்ம டிரைவர் அண்ணன் மீசை கீழே இரும்பில் வளைத்து கம்பி கட்டி நிற்க வைத்தார் போல அப்படியே ஸ்ட்ராங் ஆக நிற்கும். மீசை அன்னிக்கு டூட்டிக்கு வரவில்லை என்றால் நமது மனசு தொங்கி விடும். அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி முளைக்க தொடங்கிய காலத்தில் அவரது மீசை அழகில் மயங்கி "மீசை டிரைவர் ஆசை மன்றம்" என்று ஒரு ரசிகர் மன்றமே தொடங்க உத்தேசித்து இருந்தோம்.  அந்த மீசையுடன் ஸ்டீரிங் பிட்த்தால் நமக்கே ஒரு தெம்பு வரும். ஆனால் பேசினால் அவ்வளவு தங்கம். இளகிய மனசு டிரைவருக்கு.

நவீன கால இலக்கியங்களுக்கு வித்தாக, சுதந்திர தாகத்திற்கு கவிதை தண்ணீர் ஊற்றி வளர்த்த, முண்டாசுக் கவியின் மீசை ஒரு தனி ரகம். இந்தியா ஆங்கிலேய அடிமைத் தனத்தில் ஊறிக் கிடந்த அந்தக் காலத்தில் புரட்சிகரமான மீசை பாரதியுடையது. ஒரு குங்குமப் பொட்டும் அந்த உதட்டு மேல் மேல்நோக்கி நிற்கும் கரு நிற மீசை ஒன்றுமே போதும் பாரதியின் அடையாளத்திற்கு. அதை மிக அழகாக வரைந்தவர் எழுத்தாளர் ஞானி. பேட்டன்ட் வாங்காததால் எல்லோரும் உபயோகிக்கிறார்கள். பரவாயில்லை, அது கூட தமிழுக்கு ஆற்றும் தொண்டுதான்.

தமிழர்களுக்கு மீசை தான் ஆண்மையின் அடையாளம். மீசை இல்லாமல் இருந்தால் பொம்பளை மாதிரி இருக்கான் என்று தூற்றுவார்கள். அப்பாஸ், குணால் என்று சுத்தமாக மழித்த நடிகர்களை களத்திலிருந்து வெளியே எறிந்து விட்டார்கள். ரிடயர்ட் ஆன போலீஸ் அதிகாரி தேவாரம், சர்வீசில் இருக்கும் சைலேந்திர பாபு, வி.சி.கவின் தொல்.திருமா, முன்னால் அ.தி.மு.க தற்போது தி.மு.கவில் கழகப் பணியாற்றும் KKSSR ராமச்சந்திரன், முன்னால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் மற்றும் மேர்வ் ஹுக்ஸ், என்று வெட்டரிவாள் மீசைக்காரர்கள் நம்மைச் சுற்றி ஏராளம். ஆனால், நாம் கணினியில் உபயோகப்படுத்தும் font ஸ்டைல்களை வைத்து மீசை வரைந்து ஒரு ரகளை செய்திருக்கிறார்கள் சுவாரஸ்யம் மிகுந்த சில கலாட்டாக்காரர்கள். அதைப் பிரிண்ட் போட்டு வேறு விற்கிறார்கள்.  ஒவ்வொரு மீசையும் தனி முறுக்கு மற்றும் ஒவ்வொன்றும் தனித்தனி நெய் தடவிய அட்டகாசம். ஒவ்வொரு font மீசையும் தனி அழகோடும் நேர்த்தியாகவும் செதுக்கி வரைந்து வளர்த்திருக்கிறார்கள் கணினியில். கொடுவா மீசைகளை பார்ப்போம்.
meesai
 

தேவர் மகன் படத்தில் வரும் கமல் வைத்திருக்கும் மீசையும், சிவாஜியின் மீசையும், மாயத்தேவன் நாசர் மீசையும் பற்றி சொல்ல முற்படுவதற்கு நம் வீரத் தமிழின் எந்த வார்த்தையிலும் அடங்காது. விருமாண்டி கமல ஹாசனும், பசுபதியும், வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜியும் நம் மனதை விட்டு இறங்குவதற்கு சண்டித்தனம் செய்கிறார்கள்.


வழக்கம் போல் ப்ளாக் முடிக்கும் தருவாயில் வெள்ளித்திரையோடு நமக்கு இருக்கும் பந்தம் காரணமாக மைக்கேல் மதன காமராஜனில் நம்ம ராஜ் கமல்ஹாசன் மீசை எடுக்கச் சொல்லும் மதன் கமலிடம் சிணுங்கும் காட்சி கீழே. காட்சியின் பின்புலத்தில் ஹிட்லர், பாரதி போன்ற மீசை வைத்தோர் பட்டியல் மாதிரி சுவற்றில் காட்சியளிப்பது இந்த சீனுக்கு பக்கபலம்.  ஓவர் டு வீடியோ.


எல்லாம் சரி, உங்களோட மீசை எந்த வகையறா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 
பட உதவி: http://torweeks.blogspot.com/2009/10/i-made-poster-for-you.html, www.outlookindia.com, http://videolife.tk/magan/

Sunday, July 25, 2010

அக்கரையில் இருக்கும் வீடு

பாக்கியம் ஆத்தா பொட்டிக்கடையில் தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடும் பக்கத்து வீட்டு அம்மு சொல்லித்தான் அது தெரியும் சுந்தருக்கு. சுந்தரை அரை மணிக்கு ஒருதரம் "மாமா அது நெஜமா? அப்படியெல்லாம் இருக்குமா?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டு துளைத்துவிட்டது. அம்மு ஐந்தாம் வகுப்பு படிக்கும் சின்னக் குட்டி. அதனிடத்தில் இந்த ஆத்தா ஏன் அப்படியெல்லாம் பேசுகிறது. அம்மு இன்னமும் ஆத்தா சொன்ன மோகினிப் பிசாசை நினைத்து பயந்து கொண்டிருப்பது அதன் கண்களில் தெரிந்தது. பயந்த அம்முவை எதைப் பார்த்தும் மிரளவோ பயப்படுவோ கூடாது என்று தேற்றுவதற்காக தான் படித்த ரஜ்னிஷ் கதை ஒன்றை சொன்னான் சுந்தர். பயத்தினால் கடவுளை அடையமுடியாது என்ற கதையை அம்முவுக்காக வேறுவிதமாக சொல்ல ஆரம்பித்தான்.
ஒரு ஊர்ல சுடுகாட்டை தாண்டி ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம். அவன் ரோட்டில கிடந்த ஒரு அப்பா அம்மா இல்லாத அனாதைப் பையனை எடுத்து வளர்த்தனாம். எப்போதும் அந்தப் பையன் சுடுகாட்டிலேயே விளையாண்டுகிட்டு இருப்பானாம். நாள்பூரா பொனத்தைக் கொண்டு வந்து பொதைக்கறதும் எரிக்கறதுமா அந்த சுடுகாடு ஒரே பிஸியா இருக்குமாம். அந்தப் பையன் எதை பத்தியும் கவலைப்படமா ஜாலியா பொழுதைக் கழிச்சுகிட்டு ஓடியாடிகிட்டு இருப்பானாம். நாளாக நாளாக அவனும் பெரியவனா ஆயிட்டானாம். பெரியவனா ஆனதும் அவனை ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும் அப்படின்னு ஆசைப்பட்டு ஊர்ல ஒரு பெரிய மனுஷனைப் பார்த்து சிபாரிசுடன் அந்தப் பையனை ஒரு பள்ளிகூடத்துல சேர்த்துட்டானாம் அந்த பிச்சைகாரன். முதல் நாள் ஸ்கூலுக்கு போகும்போது ஒரு கருப்பு கயிறை எடுத்து வந்து அந்தப் பையன் கையில் கட்டினானம் அந்த பிச்சைக்காரன். அதுக்கு அந்தப் பையன் இதை ஏன் என் கையில் கட்றீங்க அப்படீன்னு கேட்டானாம். அதுக்கு அந்தப் பிச்சைக்காரன் இல்ல நீ போற சுடுகாட்டு வழியில நிறைய பேய் பிசாசெல்லாம் இருக்கும் அதனால இந்தக் கயிறை கட்டிகிட்ட, அதெல்லாம் ஓடியே போய்டும்ன்னானாம். இந்தக் கயிறுல என்ன இருக்கு அப்படீன்னு அந்தப் பையன் கேட்டானாம். இல்லைப்பா இந்தக் கயிறு சாமி மாதிரி, அதனால இதைப் பார்த்தா அந்த பேய் பிசாசெல்லாம் ஓடிப் போய்டும் அப்படின்னு அந்தப் பிச்சைக்காரன் சொன்னான். அப்ப அந்தப் பையன் கேட்டான் இந்தக் கயிறுல இருக்குற சாமியை பார்த்து பேய் பிசாசெல்லாம் பயப்படுதே, அப்பன்னா இந்த சாமி எவ்வளோ பெரிய பேய் பிசாசா இருக்கணும் அப்படின்னானம். பிச்சைக்காரன்னால வாயே பேச முடியலையாம். 

அதனால பேய் பிசாசு அப்படின்னு எதுவும் இல்லை. பேய் பிசாசுக்கும் பயப்பட வேண்டாம், சாமிக்கும் பயப்படவேண்டாம். எல்லோருக்கும் உண்மையா அன்பா இருந்தா போதும் என்று சொல்லி கதையை முடித்தான் சுந்தர். அம்மு கதையினால் கொஞ்சம் புத்தி மாறி சமாதானமடைந்தாள்.
சுந்தர் நேராக ஆத்தா கடைக்கு சென்றான். என்ன விஷயம் என்று விசாரிக்கையில், ஆத்தா தினமும் ராத்திரி பன்னிரண்டு மணியளவில் பாமணிக் கரையோரத்தில் "ஜல் ஜல்" என்று கொஞ்சும் சலங்கை ஒலி கேட்பதாகவும், மல்லிகை கொள்ளையின் நடுவில் உட்கார்ந்து இருப்பது போல மல்லிகைப்பூ மனம் மூக்கைத் துளைத்து ஆளைத் தூக்குவதாகவும் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு பக்கிரி கூட முந்தாநாள் மதிய வேளையில் காவாய் பக்கத்தில் வெளிக்கு இருக்க போய்விட்டு வந்து "அதை"ப் பார்த்து பயந்து ஜுரம் வந்து மாரியாத்தா கோயில் நல்லக்கண்ணு பூசாரியிடம் மந்திரித்து வந்ததாக மேலதிக தகவல் வேறு சொல்லிற்று.
ghost
திலகம் அக்கா தெருவில் கொஞ்சம் தைரியமான ஆள். பத்து பதினொன்று மணிக்கு கூட ரோட்டில் தனியாக இங்குமங்கும் உலாத்திய வண்ணம் இருக்கும். அக்காவிடம் இது பற்றி விசாரித்ததில், நிஜமாகவே ஒரு வெண் புகை போல ஒரு தோற்றம் ஆற்றிற்கு அக்கரையில் இருக்கும் பாழடைந்த பட்டாமணியார் வீட்டிலிருந்து இக்கரைக்கு உலாவுவதாக தன் புருஷன் சொன்னதாக சொல்லியது. தினமும் முழு போதையில் அர்த்தராத்திரியில் வீடு திரும்பும் திலகம் அக்கா புருஷன் லாரி டிரைவர் கண்ணையன் கண்ணுக்கு டாங்கர் லாரி விடும் புகை பிசாசாகத் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டான். 

தமிழரசி அண்ணன் மதி எப்போதும் கயித்துக் கட்டிலை வீட்டிற்கு வெளியே போட்டு அரைக்கு கைலியை கட்டிக்கொண்டு மேலே சட்டையில்லாமல் தூங்கும் இருபத்தைந்து வயது கட்டிளம் காளை. பக்கத்தில் தலைச்சேரியில் போன வாரம் தான் பெண் பார்த்து பரிசம் போட்டு வரும் வாரம் கல்யாணத்திற்கு தேதி குறித்தார்கள். மேலும் மதியிடம் மோகினி துப்பு துலக்குகையில், நேற்று இரவு வெளியே படுத்திருந்ததில் நடு இரவுக்கு மேல் ஏதோ ஒரு உருவம் அவன் மேல் முழுவதுமாக படுத்து அழுத்தியதாகவும், அப்போது கை காலை அசைக்க முடியவில்லை என்றும், தானாக கைலி மேலே தூக்கப் பட்டதாகவும், யாரோ தன் மேலே ஏறி முன்பின் அசைந்து கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் அந்த கெட்டகாரியம் செய்ததாகவும், அதற்க்கப்புறம் கைலி கொஞ்சம் ஈரமானதாகவும் தொடை நடுங்கினான். மதிக்கு மூன்றுமுடிச்சு போடும் தருணம் நெருங்கி வருவதால் அதே ஞாபகமாக இருக்கிறான் என்றும், அவனுக்கு சொப்ன ஸ்கலிதம் இருக்கலாம் என்றும் நினைத்தான் சுந்தர். மோகன் லாட்ஜில் அடுத்த காளிமுத்து விஜயத்தில் கொண்டுபோய் காண்பிக்க சொல்லி மதியை கேலி பேசிவிட்டு வீடு வந்தான் சுந்தர்.

சரியாக பதினொன்று ஐம்பத்தைந்துக்கு அலாரம் வைத்துக் கொண்டான். ஊர் பார்த்த அந்த மோகினியை இன்று தான் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். எழுந்து நேராக பாக்கியம் ஆத்தா கடை தாண்டி ஆற்றுக் கரையோரம் சென்றான். நல்ல கரு மை பூசிய இருட்டில் அக்கரையில் இருக்கும் பாழடைந்த பட்டாமணியார் வீட்டை பாத்துக்கொண்டே நின்றான். ஏதோ புகை போல பரவிய ஒன்று இந்தப் பக்கம் வருவது போல இருந்தது. கண்களை கசக்கி கொண்டு திரும்பவும் பாத்தான். சுத்தமான தும்பைப்பூ நிற வெள்ளை சேலையில், தலையிலிருந்து தரை வரை தொங்கவிட்ட மல்லிகை சரத்தை சூடிக்கொண்டு இந்தப் பக்கம் வருவது தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், அதற்க்கு காலே இல்லாமல் ஒரு இரண்டு இன்ச் தரையில் இருந்து அந்தரத்தில் மிதந்து வருவது புரிந்தது. ஒரே ஓட்டமாக நாலு கால் பாய்ச்சலில் பறந்து வந்து வீட்டினில் புகுந்தான். தயாராக வைத்திருந்தா அருவாள், செருப்பு மற்றும் துடப்பக்கட்டை போன்ற பேய் விரட்டும் பொருட்களை தன்னை சுற்றி கடை பரப்பி கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்கிப் போனான்.

இப்போதெல்லாம் பகல் வேளையில் கூட அக்கரையை பார்ப்பதை விட்டுவிட்டான் சுந்தர். எப்படியாவது இரவு பத்து மணிக்குள் வீடு திரும்பி, போன பாராவில் விரித்த கடையை தினமும் படுக்கையருகில் பரப்பி, பன்னிரண்டு மணிக்குமேல் வரும் இயற்கை அழைப்புகளை கூட நிராகரித்தான். ரொம்ப நாட்களுக்கப்புறம் தான் அந்தப் பட்டாமணியார் வீட்டை விற்க முயற்சிகள் நடந்த பொழுதில், அதை விலைக்குறைவாக வாங்குவதற்காக கட்டிவிட்ட மோகினிக்கதையில் தானும் ஏதோ எங்கோ எழுந்த புகையை மனோரீதியாக மோகினி நினைவில் இருந்ததால் அது என்று நினைத்து அந்தக் கதையில் தானும் பங்குபெற்றதை அறிந்து மிகவும் வெட்கப்பட்டான்.

பட உதவி: http://www.24x7mediaclips.com/ 
அந்தப் பாலக்கரை பேய் படமும் அதன் தொடர்பான பி.பி.ஸி செய்தியும் இந்தச் சுட்டியில் http://news.bbc.co.uk/local/northeastwales/hi/people_and_places/history/newsid_8176000/8176747.stm

Saturday, July 24, 2010

சனிக்கிழமை சங்கதி - வெயிட்டான பாத்திரம்

lidஇந்த ப்ளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னடா சாப்பாட்டு சம்பந்தமாக எதுவுமே எழுதவில்லை என்று பசியோடு காத்திருந்த வேளையில் இந்த ஐட்டம் சிக்கியது. இந்தமுறை சனிக்கிழமை சங்கதி ஒரு சமையலறையில் அன்றாடம் புழங்கும் ஐட்டம். நடைமுறை வாழ்க்கையில் நமக்கு பல பாத்திரங்கள் உண்டு என்பது போல் சமயலறையில் பல தினுசு பாத்திரங்கள் கொண்டு உணவு தயாரித்து தான் நம்முடைய சாண் வயிற்றை நிரப்ப வேண்டியிருக்கிறது. தேசலாக இருக்கும் என்னை அளந்து பார்த்தாலே சானுக்கு மேலே வருகிறது. இதை எப்படி சாண் வயிறு என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. மேல் ஆராய்ச்சிக்கு ஏற்ற விஷயம் இது. அடுத்த  கட்ட ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம், "எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்" என்ற சொலவடை. ஓ.கே மேட்டருக்கு வருவோம்.

சிலிகோன்( சிலிக்கன் இல்லை. சிலிக்கன் ஒரு வேதிப்பொருள்) கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மூடி சர்வ சமையலுக்கும் ஏற்ற ஒரு உபகரணமாக இருக்கிறது. இது ஒரு ஸ்விஸ் தயாரிப்பு. காய் வேகவைக்கிறோமா, அவனில் மூடி அவிக்க பாத்திரம் வேண்டுமா, சூடான பதார்த்தங்களை மேசையில் வைத்து மூடுவதற்கு மூடி வேண்டுமா வேலைக்காரி வந்து பத்து பாத்திரம் தேய்த்து தரவில்லையா பக்கத்தில் வேறு எதுவும் பாத்திரம் இல்லையா கவலை இல்லை, இந்த மூடியைக் கொண்டு மூடினால் போதும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கும் ஏதுவானது.

எந்தப் பாத்திரத்திற்கு மேலே மூடுகிறோமோ அதற்க்கேற்றார்ப்போல் தோதுவாக தனது உடலை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ள மூடி இது. வாய் அகலமான பாத்திரத்தில் பாய் போல விரிந்தும் குறைவாக உள்ள பாத்திரத்தில் குடை போலும் தன்னை மாற்றிக்கொண்டு பாத்திரத்தின் விளிம்புகளை சுத்தமாக மூடி உணவுப் பொருட்களைக் சுகாதாரமாக காக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதை மூடினால் காற்றுப் புகாவண்ணம் வடிவமைத்துள்ளதால் உணவுப் பதார்த்தங்கள் கெட்டு விடாமல் காப்பாற்றுவதோடு, அப்படியே மூடியை பிடித்தே அந்த மூடிய பாத்திரத்தை தூக்கியே விடலாம். இப்படி இதைப் பற்றி மேலே விவரித்துக்கொண்டே சென்றால், நான் நம்நாட்டு தேசிய முகவர் மற்றும் விற்பனையாளர் என்று யாரேனும் நினைத்துக்கொள்ளக் கூடும் என்பதால் என்னுரையை முடித்து இங்கே சேர்த்துள்ள வீடியோவை காணுமாறு கோருகிறேன்.

நம்மூர்ல இந்த சாமான் கிடைக்கிறதா என்று தெரியாது, இது போல் உள்ள எனக்கு மிகவும் உபயோகப்படும் வேறு ஒரு பாத்திரம் தெரியும். அது தினமும் ஆபிஸிற்கு தயிர் சாதம் கொண்டு போகும் டப்பர்வேர்.  அவ்வளவுதான் ஆளை விடுங்கள். உபயோகத்தை பொறுத்து இது வெயிட்டான பாத்திரம் தானே? அப்பாடி ஒரு வழியாக தலைப்பை கொண்டு வந்தாச்சு. இன்னமும் என்ன முடிக்க வேண்டியது தானே. எல்லாம் சரி, ஓயாமல் எல்லோரையும் கலாய்க்கும் கலக வாயையும், ஊரில் ஏதாவது அற்ப சம்பவம் நடந்தால் கூட வாயில் அதக்கி ஊறவைத்து ஒரு வாரம் வம்பு பேசும் ஊத்தை வாயையும் மூடுவதற்கு ஏதாவது மூடி இருக்கிறதா?

பின் குறிப்பு: விக்ரம், லைலா நடிப்பில் வித்யாசாகர் இசையில் தில் படத்தில் வரும் "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா.." பாடலில் எதுவும் மூடி காண்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். நல்ல மெலடி. பின் குறிப்பிற்கு யூடுயூப் சேர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். என் கையை என்னால் அடக்க முடியவில்லை. வார இறுதிக்கு ஏற்ற பாடல். சேர்க்கிறேன் கேளுங்கள்.



Friday, July 23, 2010

சந்திரனுக்கு ஓர் பயணம்

armstrongஇரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தத் தளத்தில் வெளியிடவேண்டிய வீடியோ இது. சற்று தாதமதமாக இன்று. 1969 ம் ஆண்டு ஜூலை திங்கள் பதினாறாம் நாள் நிலாவைப் பிடிக்க மனிதன் மேற்கொண்ட முதல் தேனிலவுப் பயணம் பற்றிய வீடியோ இது.  ஜூலை மாதம் இருபதாம் தேதி சந்திரனை அடைந்தார்கள். இந்த மாதத்தோடு ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் பதித்து 41 ஆண்டுகள் நிறைவடைகிறது. அபோல்லோ பதினொன்று விண்கலத்தில் ஆம்ஸ்ட்ராங் வானுடையோடு ஏறுவது முதல், சந்திரனில் இறங்குவது வரை காண்பித்திருக்கிறார்கள். அப்போதைய வீடியோ அனிமேஷன் மூலம் பூமியின் ஆர்பிட்டிலிருந்து ராக்கெட் தன்னுடைய ஒவ்வொரு பாகமாக கழற்றிக் கொண்டு எப்படி சந்திரனை சென்றடைகிறது என்ற கூடுதல் விளக்கம் வானறிவியல் தெரியாத என் போன்ற கைநாட்டிற்கு பார்க்கப் பரவசமாக உள்ளது. ஒரு நாட்டின் திருவிழாவாக, கோலாகலமாக அவர்கள் கொண்டாடி மகிழ்ந்த நிலாப் பயணத்தின் ஆறு வீடியோ தொகுப்பையும் கண்டு களித்து மனிதனின் இந்த மகத்தான வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.









என்ன நிலவுக்கு போய் வந்தாச்சா? சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா....இல்லை நான் தானே.. என்று வைரமுத்து ரஹ்மானின் இசையில் பாட வைக்கிறார். சந்திரனை கீழிருந்து பார்த்தாலும் அதனுள் பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் பரவசம்தானே.

பின் குறிப்பு:  சந்திரனில் தண்ணீர் மற்றும் ஒரு குகை கண்டிபிடிக்கபட்டபோது நான் எழுதிய குப்புசாமி C/O சந்திரன் என்ற பதிவையும் முடிந்தால் ஒரு முறை கண்டுக்கவும். இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்த போது நான் எழுதிய சிக்ஸர் இது. அதாவது ஆறாவது பதிவு.

Photo courtesy: http://www.movieeye.com/

Thursday, July 22, 2010

வயலின் பேசுகிறது

சமீபத்தில் கண்டு ரசித்த கணேஷ் குமரேஷின் வயலின் டூயட். அட்டகாசம். ரசிகக் கண்மணிகளின் பார்வைக்கு இங்கே. வயலின் பேசுகிறது. தந்திகளை சங்கீத ஜாலம் செய்யவைக்கும் வித்தை. காதுகள் மோட்ஷமடையட்டும், இந்த மடை திறந்த இசை வெள்ளத்தை கேட்டு.


தலையின் ஆமோதிக்கும் அசைவுகளும், கையின் விளையாட்டும், செவி நிறைத்த இசையும் கேட்டு முடித்து ரொம்ப நேரமாக காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது. வாயில் இரண்டு கையையும் கொடுத்து சீட்டி அடிக்க வேண்டும் போல் உள்ளது.

ராஜாவின் இசையில் புல்லாங்குழலும் வயலினும் இரு கண்கள்.  வசனம் சொல்லாததை ஞானியின் குழல் பேசும். எண்ணற்ற பாடல்களில் காற்றும் தந்தியும் சேர்ந்திசைத்த பல கீதங்களில் என் மனதில் முன்னணியாக இருக்கும். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னரே பத்து வயலினில் ஆரம்பித்து  ஒரு புல்லாங்குழலில் முடித்து எஸ்.பி.பி "காதல் கவிதைகள் படித்திடும்...." என்று பாடி நெஞ்சத்தை அள்ளும் இந்தப் பாடல் இந்தப் பதிவுக்கு கொசுறாக கீழே...

பாடல் முழுவதும் இடையிடையே வயலினும் குழலும் செய்யும் வித்தைகள், மற்றும் முதல் சரணத்தின் ஆரம்பத்திலும் இரண்டாம் சரண ஆரம்பத்திலும் சேர்ந்திசையாக வயலினும் ஃப்ளுட் செய்யும் அட்டகாசத்திற்கு அளவேயில்லை..


இதன் மூலம் உங்களை மகிழ்வித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆமாம் இதில் நடித்த இந்தக் குண்டு பெண்மணி இப்போது எங்கே?

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

duplicateஎங்கு பார்த்தாலும் ஒரே போலி மயம். அசல் எங்கே போனது. அதுவும் டப்பாக்குள்ளே தான் போனது என்று அஜீத் படம் பார்த்து சொல்பவர்கள் நிற்க. சமீப காலங்களில் என்னென்ன போலி வருகிறது என்று பட்டியலிடலாம் என்ற உண்மையான ஆசையில் இந்த பதிவு.  ஒவ்வொரு உபதலைப்பிற்க்கும் போலி முன்னால் சேர்ப்பது வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் போளி அடுக்குவது போலிருக்கும் என்பதால், இங்கே ஒரே போலியோடு ஆரம்பிப்போம். இனி வரும் உபதலைப்பிற்க்கெல்லாம் முன்னால் போலி சேர்த்து படிக்கவும்.

மார்க் ஷீட்: கல்லூரிகளில் சேர்வதற்கு எங்காவது 420 ஆள் பிடித்து காசு கொடுத்து தேத்திக் கொண்டு வரும் பொய்யான மதிப்பெண் பட்டியல். தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் பெண்கள்தான் போலி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிப்பதிலும் முதலிடம் வகிப்பதாக இன்றைய செய்தித்தாளில் படித்தேன். பெருமையாக இருந்தது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே வெற்றி.

பட்டம்: காற்றில் பறப்பது அல்ல, கல்லூரி படிப்பு வெற்றிகரமாக நிறைவு செய்கையில் கையில் வாங்குவது. பல பேர் போலி பட்டத்தில் ஆகாயத்தில் பறப்பதாக நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. பாஸ் செய்து பட்டம் பெற்றவனை விட பரீட்ச்சையில் கோட் அடித்து போலிப்பட்டம் பெற்றவர்கள் மிக உயர்ந்த நிலையில் சில நிறுவனங்களை தூண் போல் தாங்கிக் காப்பதாக இரண்டு மூன்று சிநேகிதர்கள் தெரிவித்தார்கள். இது பரவாயில்லை, பாகிஸ்தானில் நாடாளுமன்ற எம்.பி க்கள் சில பேர் போலி பட்டச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக தெரிய வந்து ஒரே அமளி துமளியானது.  அதற்க்கு அந்நாட்டின் மதியூக அமைச்சர் ஒருவர் போலியாக இருந்தாலும் அதுவும் பட்டச் சான்றிதழ்தானே என்று பேட்டியளித்தாராம். எம்.பி என்ற சுருக்கத்திற்கு முட்டாப் பயல் என்று விரிவு வந்துவிடுமோ என்று ஒரே கலக்கமாக இருக்கிறது. அப்புறம் நாட்டின் இறையாண்மைக்கும் மாட்சிமைக்கும் பங்கம் வந்துவிடும்.

ஜாதிச் சான்றிதழ்: எந்த ஜாதிக்கு சலுகைகள் நிறைய கிடைக்கிறதோ அந்த பேர் போட்டு ஒன்று அடித்துக்கொண்டு அந்த சலுகைகளை அனுபவிக்க ஆசைப்படுவது. இப்படி எல்லோரும் சலுகைகளுக்காக போட்டுக்கொண்டால் நிஜமாகவே அதனால் பயனடைய வேண்டியவர்களுடைய சலுகை மறுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒன்று சர்வ நிச்சயம், எல்லோரும் ஓர் குலம் என்று நிரூபணமாகிறது. இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில்  சுடுகாட்டு கொட்டகை ஊழல் வெளிக்கொணர்ந்த புகழ் உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் வேலைக்கு சேரும் போது போலி ஜாதி சான்றிதழ் கொடுத்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஐயையே ஐ.ஏ.எஸ்.

சாமியார்: மாரிக்கால மதராசப்பட்டினத்தின் சாலைப் பள்ளங்களை எண்ண முடியுமா என்று கேட்டால் என்ன பதிலோ அதுதான் இன்றைய போலிச்சாமியார்களின் எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் ஒரு ஆஷ்ரம் அமைத்துவிடுகிறார்கள். ஒரு 'ஜி', 'ஸ்ரீ ஸ்ரீ', '...ந்தா' என்று எதையாவது முன்னாலே அல்லது பின்னாலே போட்டுக்கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்கு செல்வச் சீமான்கள், கதர் சட்டைகள், கார்போரேட்டுக்கள் என்று ப்ரமோட்டர்கள் வேறு. பல நிறத்தில் இருக்கும் கைக்காசை வெள்ளையாக மாற்றி வெள்ளையும் சொள்ளையுமாக நடமாடுவதற்கு கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் யோகா, கொஞ்சம் கீதை, போன்ற கொஞ்சம் கொஞ்சம் மொத்தமாக தெரிந்தவர்களை மேடையேற்றிவிட்டு அவர்களையும் பணக்காரர்களாக்கி தாங்கள் பெரும் தனவான்கள் ஆகி விடுகிறார்கள். அப்புறம் எல்லாம் கொஞ்சம் தெரிந்த, காசு பெருத்த போலிச் சாமியார்கள் யாராவது நடிகையை பார்த்து கொஞ்சப் போய்விடுகிறார்கள். சாமியாரின் இன்ப வெறி என்று இதுவரையில் ஒரு மலையாளப் படம் வெளிவராதது ஆச்சர்யமாக இருக்கிறது.

அப்புறம் சில உதிரி போலிகளாக அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் போலி முடி(Wig), முன்னழகை கட்டழகாக காண்பிப்பதற்காக போலி ஸ்தன மூடிகள், போலிச் சிகப்பாக அதரங்களை காண்பிப்பதற்காக உதட்டுச் சாயங்கள், தும்பைப்பூ போன்ற தலைக் கேசத்தை கார் முகிலென காண்பிக்கும் தலைச் சாயங்கள். (யாரும் ஆண்டி என்றோ அங்கிள் என்றோ கூப்பிடாமல் அண்ணா, அக்கா என்று கூப்பிடுவதற்க்காகவாம்.) ஐநூறு ருபாய் ஆங்கில புத்தகத்தை பக்கத்துக்கு முப்பத்தி இரண்டு காசு கொடுத்து நகலகங்களில் தயாரிக்கும் போலிப் புத்தகம், போலி நண்பர்கள், போலிக் காதலிகள் (கள்ளக் காதலி வேறு, போலிக் காதலி வேறு என்று வித்தியாசம் அறிக), போலிக் கணவன், போலி பொண்டாட்டிகள், போலி சினிமா சி.டிக்கள், போலி முகங்கள், போலி மருந்துகள், போலி ரூபாய் நோட்டுகள், போலி அன்பு, போலி பாசம், போலி அக்கறை, போலி தலைவன், போலி தொண்டன், போலி பாஸ்போர்ட், போலி ரேஷன் கார்ட், போலி போலிகள் என்று இந்த அசல் போலி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


யார் மாதிரி வேண்டுமானாலும் மேற்கண்ட முகமூடியை கொண்டு உருமாறலாம். ஒபாமா மாதிரி, ரஜினி மாதிரி, கமல் மாதிரி, தமண்ணா மாதிரி என்று. இதில் உள்ள பெரிய அபாயம் என்னவென்றால் ஏதாவது ஒரு வங்கி மேலாளர் மாதிரி இதை வடிவமைத்து ஒரு நாளின் அன்றைய கல்லா கட்டிய கலெக்ஷன் முழுவதையும் யாராவது ஒரேடியாக அடித்துக்கொண்டு போய்விட்டால்? இன்னும் நிறைய இதுபோல உபயோகமான பயன்பாடுகளை அவரவர்க்கு ஏற்ப கண்டுபிடித்து அனுபவிப்பார்கள். எதிர் காலத்தில் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

இவ்வளவு போலிச் சொற்கள் கொண்டு இந்தப் பதிவை அடித்தது ஆர்.வி.எஸ்ஸா அல்லது போலி ஆர்.வி.எஸ்ஸா என்று ஒரு போலி இல்லாத போலிஸ் ஆபிசரிடம் சொல்லி கண்டுபிடிக்கணும்.

பட உதவி: http://lawyermarketing.attorneysync.com/

Wednesday, July 21, 2010

ஆப்புப் பலகை

டோக்கன் போட்டால் காபி டீ கொடுத்தார்கள், அப்புறம் கொஞ்சம் அட்வான்ஸ்டாக போய் ரயில் மற்றும் விமான நிலையங்களில் காசு போட்டால் புத்தகத்தை தொப் என்று வெளியே போட்டார்கள். பார்த்திபன் அவருடைய ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் காயினை வெட்டி நூல் கட்டி காசு போட்டு பேசும் தொலைபேசி தொழில்நுட்பம் பற்றி பேசவே வேண்டாம் எல்லோருக்கும் தெரியும். காபி, டீ,  தொலை பேசுதல், புத்தகம் வெளியே வீசுதல் போன்ற வாழ்க்கையின் இன்றியமையாத அத்தியாவசிய தேவைகளுக்கு டோக்கேன் முறை அறிமுகப்படுத்தினார்கள். அதெல்லாம் பரவாயில்லை, அதற்க்கப்புறம் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கண்டபடி முழு மூச்சாக இறங்கிய இந்திய அரசு காசு போட்டால் காண்டம் கொடுக்க ஆரம்பித்தது. பாதி பேர் கடைகளில் வாங்க கூச்சப்(?)படுகிறார்கள் ஆகையால் இந்த முறையை செயல்படுத்தி நாட்டின் அசுர வேக மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தபோகிறோம் என்று மார் தட்டி சோதனை முயற்சியாக சில இடங்களில் விநியோகிக்கும் இயந்திரம் வைத்தார்கள். முன்பாவது கடைகளில் யாரும் இல்லா சமயத்தில் கேட்டு வாங்கிச்சென்றவர்கள் வெளியே இயந்திரம் வைத்ததும் பக்கத்தில் போகவே பெருங்கூச்சம் அடைந்து வாங்குவதை மட்டும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது. ம.தொகை கட்டுப்பாட்டில் ஒன்றும் மாற்றத்தை காணோம்.
parkbench
இந்த காசு போட்டு டோக்கேன் போட்டு இயந்திரம் வெளியே துப்பியதை கையில் பொறுக்கிக்கொண்டு போகும் முறையை முற்றிலும் புதிதாக வேறு ஒரு திசைக்கு பயணிக்க வடிவமைத்திருக்கும் ஒன்று தான் நாம் "பார்க்"கபோவது. இப்போது பீச், பார்க் போன்ற இடங்களுக்கு சென்று காலார  நடந்து, கண்ணார கண்டு ( இயற்கையை!) இன்புற்று மகிழ்கிறோம். இப்படி எப்போது பார்த்தாலும் ஜன சமுத்திரங்களாக எல்லா பொது இடங்களிலும் மக்கள் பொங்கி வழிவதால் பார்க், பீச் போன்ற இடங்களில்..... அதிர்ச்சி அடைய வேண்டாம்... ... மெல்லிய இதயம் படைத்தவர்கள் இத்தோடு திரும்பி போய் விடுங்கள்.... பெஞ்சில் உட்காருவதற்கு காசு போட்டு உட்கார்ந்து இளைப்பாறி  நேரம் முடிந்தவுடன் அது சத்தம் இட்டவுடன் எழுந்து ஓடிவிட வேண்டும். இல்லையேல் ஆப்புதான். சாதாரண ஆப்பு இல்லை இரும்பு ஆப்பு. என்ன கொடுமை சரவணன் இது? என்று சந்திரமுகி பிரபு மாதிரி கேட்போருக்கு, ஆசைக்கு ஆஸ்த்திக்கு என்று சொல்லி ஒன்று இடுப்பிலும் ஒன்று கையிலும் பிடித்துக்கொண்டு திரியாமல் எப்படியாவது ஜனப்பெருக்கத்தை குறைத்தால் இதுபோன்ற சமூக பொறுப்புள்ள பல புதிய கண்டுபிடிப்புகளிலிருந்து நமது வருங்கால சந்ததியினரை காப்பாற்றலாம்.


PAY & SIT: the private bench (HD) from Fabian Brunsing on Vimeo.

பொது இடங்களில் யாராவது ரொம்ப வம்பு பண்ணினால் அல்லது வாலாட்டினால் போலீசில் எல்லாம் சொல்ல வேண்டாம், காசு போட்டு இந்த பெஞ்சில் உட்காரவைத்து அசையமுடியாமல் கட்டிப்போட்டுவிட்டால், உட்காரும் நேரம் முடிந்தவுடன் ஆட்டமேடிக் ஆப்பு தன் கைவரிசையை காண்பித்து ஏற்ற வேண்டிய இடத்தில் ஏற்றி முடிவாக இறக்கி விடும். தண்டனை முடிந்தவுடன் ஆப்புப் பலகையிலிருந்து நாம் அந்த நபரை இறக்கி விட வேண்டியிருக்கும்.

நம்மூரு ஆட்கள் கையில் ஒரு மரப்பலகை எடுத்துக் கொண்டு போய் ஆப்பு மேலேயே ஆசனம் அமைத்து உட்கார்ந்துவிடுவார்கள். அல்லது யாராவது காசு போட்டு உட்காரும் போது, ரயிலில் முன்பதிவு செய்த பொட்டிகளில் ஏறி சகல உரிமையோடு நகர்ந்து உட்காரச் சொல்லி உட்காருவது போல, முதலில்  தன் பிருஷ்ட்டத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பெஞ்சில் வைத்து ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல காசு போட்டு உட்கார்ந்தவரை விரட்டிவிடுவார்கள். 

வர வர எந்த இடத்தில் எந்த ஆப்பு யாருக்கு இருக்கும் என்றே தெரியாமல் போய்விடும் போலிருக்கிறது. ஆப்புக்குள்ளே உலகமடா...

பட உதவி: terraformearth.wordpress.com

Tuesday, July 20, 2010

கழிப்பறை கணிதப் புலி

சிவன் கோவில் சனீஸ்வரன் சன்னதி பின்பக்கம் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி சுவர்கள் முழுக்க பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எண்கள் (இப்படி எழுதினால் பரீட்சையில் பாஸ் ஆவார்கள் என்று யாரோ ஒரு புண்ணியவான் கிளப்பி விட்டது), DYFI விளம்பரங்கள் நிரப்பும் பள்ளி மற்றும் கல்லூரி காம்பௌண்ட்கள்,  சினிமா கொட்டகையில் படம் பார்க்க நுழைவுச் சீட்டு வாங்கச் செல்லும், திரும்ப கூட முடியாமல் நிற்கும் கவுண்டர்கள் செல்லும் வழியில் ஒரு ருபாய் காய்ன் கொண்டு தங்கள் காதலை, சேகர் MA என்று பட்டப்படிப்போடு தங்கள் பெயரை வடிக்கும் சுரண்டல் சித்திரங்கள், மாநகர பேருந்துகளில் லட்சம்கட்டி வராகன்கள் கொடுத்து விளம்பரம் செய்யும் பெரும் விளம்பரதாரர் விளம்பரத்தின் வெள்ளை நிறப் பகுதிகளில் ஆட்டின் போட்டு அம்பு விட்டு எழுதும் பவி லவ்ஸ் மகி போன்று அன்பைச் சிறப்பிக்கும் காதல் ஓவியங்கள், பிஞ்சுக் கைக்கொண்டு பென்சில் பிடிக்க தெரிந்த நாள் முதல் வீட்டு சுவரெங்கும் மழலைகள் வரையும் கிறுக்கோவியங்கள் என்று பலவகை எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் இந்த அவனியில் உண்டு. பென்சில், பேனா, ஸ்கெட்ச், மார்க்கர் பென், அடுப்புக் கரிக்கட்டி, கலர் சாக்பீஸ் என்று கைக்கு அகப்பட்டதையெல்லாம் கொண்டு பார்க்கும் சுவெரெங்கும் கிறுக்கி மற்றும் வரைந்து  தங்கள் எண்ணங்களை உலகிற்கு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

பொதுவாகவே தன்னுடைய எண்ணங்களை மற்றவர் பகிர மற்றும் தனக்கு தானே பார்த்து சந்தோஷிப்பதர்க்கு மனிதன் இதுபோல் கிறுக்கி மகிழ்கிறான். இதில் ஒரு ஆத்ம சாந்தி ஏற்படுகிறது. இப்படி பொதுப்படையாக புறவெளியில் காதலையும், பரீட்சை நம்பர்களை தெய்வ சன்னதிகளிலும், கொஞ்சம் நாகரீகமான செயல்களை கண்டித்தோ ஆதரித்தோ எழுதி வருகிறார்கள். 

இதுவல்லாமல், ஒருவர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை, பொறாமையை, கோபத்தை சில மறைவான இடங்களில் எழுதி உளமாற மகிழ்வர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதற்க்கு தோதான இடம் கழிப்பறைகள். பொதுஇடங்களில் இதற்க்கு வாகான இடம் மூளை முடுக்குகளில் இருக்கும் உடைந்த குட்டிச் சுவர்கள், ஆள் அரவமற்ற மனித வாசம் காணாத ஆவி குடியிருக்கும் தன்னந்தனி பாழடைந்த வீடுகள், ஜன சந்தடி குறைவாக இருக்கும் சில தெருமுனைகள் போன்ற இடங்கள். இதுபோன்று கரிக்கொண்டு சுவர்களில் எழுதுவதும் பேடித்தனமாக மொட்டைக்கடுதாசி போடுவதும் ஒரே செயல்தான். ஆனால் இதில் ஒரு அளவில்லாத திருப்தி அடைந்து பரவசம் மிகுந்த ஆனந்த நிலை அடைகிறார்கள். 

தன்னை திட்டிய கல்யாணமான டீச்சரையும் அவர் அடிக்கடி சிரித்து பேசி அளவளாவும் பிரம்மச்சாரி வாத்தியாரையும் இணைத்து இருவரும் கல்யாணம் செய்து கொண்டது போல படம் வரைந்து திருப்தி அடைவது, தனக்கு கிடைக்கவேண்டிய ஃபிகரை மாற்றான் ரூட் போட்டு அபகரித்தவுடன் அந்தப் பெண் பிள்ளையை பற்றி அசிங்க அசிங்கமாக எழுதுவது, முட்டிக்கால் போட வைத்த ஹெட் மாஸ்டரை பற்றி --ளி, -----மவனே என்று திட்டி எழுதுவது போன்ற நற்காரியங்கள் தான் அதிகமாக பள்ளி கல்லூரி படிக்கும் நிலையில் இருக்கும் மாணவச் செல்வங்கள் செய்வது.


ஆனால் கீழே காணும் கழிப்பறைக் கணிதம் சற்று வித்தியாசமானது. ஆசிரியர்களின் கழிப்பறையில் அவர்கள் கற்பித்த கணிதத்தை அவர்களிடமே போட்டுக் காண்பித்து தீட்டிய மரத்தில் கூர் பார்த்திருக்கிறார்கள். இப்படி கணிதம் போட்ட அந்தக் கையில் ஒரு இருநூறு ரூபாயாவது கொடுக்கவேண்டும். கட் அடித்துவிட்டு புது ரிலீஸ் சினிமாவுக்கு போய்விட்டு வரும். ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட எல்லா பாடத்திற்கும் திறமை இருந்தால் அவனுக்கு அதில் KNOWLEDGE இருக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் கணிதத்திற்கு மட்டும் Mathematics SKILLS இருக்கிறது என்று குறிப்பிடுவார்கள். கீழ் காணும் படம் நிஜமாகவே ஒரு SKILLFULL JOB.

maths

இந்தப் படத்தில் அட்டக் கருப்பில் எழுதிய மாணவனுக்கு வெளுத்தக் கருப்பில் எழுதிய ஆசிரியர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். பதிலளிக்க முடியாத அந்த மாணவன் கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறான். காலம் எப்படி உள்ளது பாருங்கள்.

பட உதவி: http://hah.tumblr.com/post/832309154/written-on-toilet-wall-maths-faculty

சைக்கிளை மடக்கிக் கட்டு

அரை மணி ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம். பூபதி வாடகை சைக்கிள் கம்பனியிலிருந்து (லிமிடெட் மட்டும் தான் போட்டுக் கொள்ளவில்லை, அவ்வளவு பெரிய சைக்கிள் கம்பெனி. சைக்கிள் முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் பிரேக் இல்லாத பெல் இல்லாத சைக்கிள்தான் கிடைக்கும்)  சிகப்பு கலர் கட்டை வண்டி வாடகைக்கு எடுத்து ஓட்டும்போது, அதற்க்கு பூட்டும் கிடையாது, ஸ்டாண்டும் கிடையாது. சைக்கிள் எடுத்து வீட்டு வாசலில்  சுவற்றில் சார்த்தி வைத்து விட்டு தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் போனாலும் வெளியே பார்த்துக்கொண்டே குடிக்க வேண்டும். காரணம், இரண்டு அச்சுறுத்தல்கள், ஒன்று சைக்கிள் திருட்டு போய் விட்டால் வீட்டில் தர்ம அடி வாங்கி மீண்டும் சைக்கிள் ஒட்டவே முடியாது, இரண்டாவது காரணம் தெருப் பையன்கள் யாராவது எடுத்து சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். மணிக்கு ஒரு ரூபாய்க்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம். 

பக்கத்து வீட்டில் இருக்கும் கணேசன் வாத்தியார் எப்போதும் சைக்கிள் உடன் வரும் அழுத்துப் பூட்டு இருந்தாலும், வளையப் பூட்டு ஒன்று வாங்கி அதையும் பூட்டி அழகு பார்ப்பார். ஒரு நாள் பாங்கிற்கு போய் பணம் எடுத்த்க்கொண்டு வெளியே வந்து பார்க்கையில் சைக்கிள் அபேஸ். யாரோ எப்போதும் இவர்  இரண்டு மூன்று பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுப்பாகி, பேங்க்கிற்கு வந்தபோது தூக்கி சென்றுவிட்டார்கள். அதற்குப் பிறகு ஒரு பூட்டு போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். டைப் இன்ஸ்டிடுயூட் கண்ணன் மாஸ்டர் ஒரு தடவை பூட்டி விட்டு ஒன்பது முறை இழுத்துப் பார்த்துவிட்டு தான் வீட்டிற்குள்ளோ அல்லது கடைக்குள்ளோ செல்வார். அவ்வளவு ஜாக்கிரதை. அவசரமாக நம்பர் டூ வருகிறதென்று ஒரு நாள் மதியம் வீடு வாசலில் வைத்திருந்த வண்டியை எவனோ கிளப்பிக் கொண்டு போய்விட்டான். லபோ திபோ என்று அடித்துகொண்டார். எடுத்தவனை சகட்டு மேனிக்கு சபித்தார். போன சைக்கிள் போனது தான். மாவட்ட நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் மோகன் வண்டியை நாக்கால் நக்கி துடைப்பது போல் துடைத்து பள பள என்று கண்ணைப் பறிக்க வந்து நிறுத்துவார். ஒரு ஆயுத பூஜை முடிந்த பின் செந்தூர ஆஞ்சேநேயர் கோயில் வாசலில் வைத்துவிட்டு வடை மாலை பிரசாதம் வாங்குவதற்காக உள்ளே சென்றார். பக்தியை விட வடை மிக அவசரமாக உள்ளே இழுத்ததால் வெளியே நின்றிருந்த சைக்கிளை களவு கொடுத்துவிட்டு வெறும் வடைப் பிரசாதத்தோடு வீடு திரும்பினார். 

இவ்வளவு பேர் தொலைத்து விட்டதை இப்போது இழுத்து மடக்கி கம்பியோடு கட்டிவிட்டார்கள். பக்கவாட்டில் இருக்கும் ஒரு லிவரை இழுத்து மடக்கி தந்திக் கம்பத்தோடோ அல்லது  ஈ.பி அல்லது ஏதோ ஒரு கம்பத்தோடு சேர்த்து மாடு காட்டுவது போல கட்டிபோட்டுவிடலாம். இருபத்தோறு வயதே நிரம்பிய இங்கிலாந்து கெவின் ஸ்காட் என்பவரது இந்த டிசைன் லண்டன் புதிய வடிவமைப்பாளர்கள் கண்காட்சியில் ஐநூறு பவுண்ட் ஸ்டெர்லிங் பரிசைத் தட்டி சென்றது. வாழ்த்துக்கள்.

கீழே சைக்கிளை வளைத்துக் கட்டுகிறார் ஸ்காட்.. தம்பி அசப்பில் பார்ப்பதற்கு ஹாலிவுட் பட ஹீரோ மாதிரி இல்லை..
bendbike


சைக்கிளை வளைத்துக் கட்டுவது இருக்கட்டும், மாவீரன் திரைப்படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ஹெலிகாப்டரையே கயிறு சுற்றி வளைத்துப் பிடித்து ஒரு கம்பில் கட்டுவார் பாருங்கள். அந்தக் காட்சியில் தியேட்டரில் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவார். அந்தக் காட்சியிலிருந்து மீள்வதற்கு எனக்குப்  பல நாட்கள் பிடித்தது. அதோடு ஊரில் நிறைய கலர் கலராக கொடிகள் பல கம்பத்தில் கட்டி பறக்கவிட்டிருக்கிறார்கள். நமூருக்கு இந்த சைக்கிள் வந்தால் எல்லா கம்பத்திலும் மடக்கி கட்டிவிடுவார்கள். அதிலும் கட்சி பேதம் நிச்சயம் இருக்கும்.

தகவல் மற்றும் பட உதவி: http://www.engadget.com/2010/07/11/bendable-bicycle-wraps-itself-around-a-pole-in-a-good-way/

Monday, July 19, 2010

பண மழையில் நனையும் இசை மழை பொழிபவர்கள்

madonபோர்பஸ் பத்திரிக்கை உலகில் செல்வத்தில் விழுந்து புரளும் முதல் பத்து சங்கீத மாமணிகள் பற்றி ஒரு பட்டியல் தந்துள்ளது.  கித்தாரை தலைமை பாட்டுக் கருவியாக கொண்ட U2 என்ற ராக் இசைக்குழு முதலிடத்தில் உள்ளது. "அடல்ட்ஸ் ஒன்லி" ஆட்டம் மற்றும் பாட்டுக்காரி மடோன்னா எட்டாவது எடத்திலும் லேடி காகா ஏழாவது இடத்திலும் உள்ளார்கள். பல வருடங்கள் உருண்டு ஆடியும் பல பேர் போட்டியிடும் மேலைநாட்டு சங்கீத சாகரத்தில் வயசானாலும் 'அந்த' ஸ்டைல் மாறாத மடோன்னா முதல் பத்தில் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. மடோன்னாவிடம் வயது ஏற ஏற இளமையும் ஏறுவதாக அகில உலக மடோன்னா ரசிகர் மன்றத் தலைவன் என் நண்பன் மடோன்னா மனோகர் அடித்து ஆணித்தரமாக கூறுகிறான்.

வாரத்தின் ஆரம்பம் மடோன்னாவின் கொண்டாட்டத்துடன் குதூகலமாகத் தொடங்கட்டும்.. மடோன்னாவின் Celebration ஆல்பத்திலிருந்து...



இதைப் பார்த்துவிட்டு என்னை சபிக்கும் மக்கள் அனைவருக்கும், நமது தமிழ்ப் படங்களில் வரும் அங்க அசைவுகளும் இதுவும் சற்றேரக்குறைய ஒன்றே. நமது படங்களில் கருங்கூந்தல் கொண்டு ஆடுவார்கள், இங்கே மடோன்னா தங்கக்கேசம் கொண்டு ஆடுகிறார் அவ்வளவு தான் வித்தியாசம். விரசத்தனத்தில் தமிழ்ப் பட அசைவுகளைவிட கொஞ்சம் குறைவாக இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது. மேலே மடோனாவைப் பார்த்த விழி பார்த்தபடி பூத்தக் கையோடு கீழே கமலும் சௌந்தர்யாவும் ஆடும் "காதலா காதலா" படத்தில் வரும் "மடோன்னா பாடலா நீ.." பாடலைப் பாருங்கள். நான் மேலேசொன்ன வார்த்தைகள் நிஜமெனப் புரியும் சமயத்தில் "ஆமாம்..ஆமாம்" என்று உங்கள் தலை ஆடுவதை நீங்களே உணர்வீர்கள்.



கலையை ரசிக்கும் கலா ரசிகர்களுக்கு நன்றி. இதோ அந்தப் பத்துப்  பெரிய புள்ளிகளின் வரிசை..

  1. U2, $130 million.
  2. AC/DC, $114 million.
  3. Beyoncé Knowles, $87 million.
  4. Bruce Springsteen, $70 million.
  5. Britney Spears, $64 million.
  6. Jay-Z , $63 million.
  7. Lady Gaga, $62 million.
  8. Madonna, $58 million.
  9. Kenny Chesney, $50 million.
  10. Black Eyed Peas and Coldplay, tied at $48 million.

அதிருக்கட்டும், நம்ம இசைப் புயல், இசை ஞானி போன்றோர் வாங்கும் சம்பளம் இவர்களது தொகையில் எவ்வளவு பைசா என்று யாருக்காவது தோராயமாகவாவது தெரியுமா?

தகவல் உதவி: http://www.cbc.ca/arts/music/story/2010/07/17/forbes-musicians-u2.html?ref=rss
மடோன்னாவின் மேற்கண்ட படம்  மற்றும் மேலதிகத் தகவல்களுக்கு: www.madonna.com

Sunday, July 18, 2010

சர்ப்ப.. சர்ப்ப...

மகாபாரதத்தில் வரும் நகுஷனின் கதாப்பாத்திரம் ஒரு பேருண்மையை உலகிற்கு சொல்ல வந்த ஒன்று. புலன் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நகுஷன். மிகப்பெரிய பேரரசனான நகுஷன் மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி என்னும் ஐம்புலன்களும் தரும் இன்பத்தை மறுத்து வாழ்ந்தவன். உலகத்தில் அரசர்கள் யாவரும் அனைத்து இன்பகளையும் அசாதாரணமாக அனுபவித்து வாழ்ந்து வருகையில் நகுஷன் எந்தவிதமான இன்பங்களையும் நுகராமல் வாழ்வது கண்டு அவனது அமைச்சர்கள் கவலையுற்று நகுஷனிடம் புலனின்பங்கள் நுகராமல் அவன் வாழ்வது எதற்க்காக என்று கேட்டார்கள்.  அதற்கு நகுஷன் இனி மானிடப்பிறவியே தனக்கு வாய்க்கக்கூடாது என்ற காரணத்தால் இப்படி வாழ்வதாக கூறினான். அதற்க்கு அவனுடைய அமைச்சர்கள் இவ்வளவு நாட்கள் புலனடக்கி அவன் பெற்ற புண்ணியம் அனைத்தும் ஒன்று கூடி, இந்திரப் பதவியை நகுஷன் அடைந்தால் இந்த மானிடப் பிறவியிலிருந்து விடிவு பெறலாம் என்று கூறினார்கள். இந்திரப் பதவி தான் அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்டவனுக்கு நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அந்தப் பதவியை அடையலாம் என்று கூறினர் அவனது அமைச்சுகள். 
snake
நூறு அஸ்வமேத யாகங்களை வெற்றிகரமாக செய்து முடித்த நகுஷனை இந்திர உலகிற்கு அழைத்து செல்வதற்காக பல்லக்கோடு சப்த ரிஷிகளான ஏழு முனிவர்கள் வந்து சேர்ந்தனர். ஏழு முனிவர்கள் தன்னை தோளில் தூக்கிப் போவதற்கு வந்ததால் மிகவும் கூச்சமுற்றான் நகுஷன். இப்படி அவர்கள் தோளில் தான் ஏறித்தான் இந்திர லோகம் போக வேண்டும் என்று முன்னமே தெரிந்திருந்தால் தான் நூறு அஸ்வமேத யாகமே செய்திருக்க மாட்டேன் என்று சொன்னான் நகுஷன். முனிவர்கள் நூறு அஸ்வமேத யாகங்களை செய்தவனை சுமப்பது எங்களுக்கு பெருமை. நீ இதைப் பற்றி கவலைப்படவேண்டாம் ஏறி உட்கார் நாம் செல்லலாம் என்று அவனை ஏற்றி பல்லக்குள் உட்காரவைத்து சுமந்து கொண்டு ஒரே சீராக சென்றனர். போகும் வழியெல்லாம் முனிவர்கள் மீதேறிப் போகிறோமே என்ற கூச்சத்தில், மரியாதையில் அவர்கள் சிரமப் படுகிறார்களோ என்றெண்ணி "மெதுவாக மெதுவாக" என்று சொல்லிக் கொண்டே வந்தான். முனிவர்களும் "நகுஷா நீ ஒன்றும் கவலைப்படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நாங்கள் மெதுவாகவும் போகவில்லை வேகமாகவும் போகவில்லை. ஒரே சீராகத்தான் செல்கிறோம்" என்று சொன்னார்கள்.  இருந்தாலும் முனிவர்கள் மேல் கொண்ட பற்றினால் அவ்வப்போது "மெதுவாக மெதுவாக" என்று வழிநெடுக வேண்டிக்கொண்டே வந்தான். முனிவர்களும் "எங்கள்பால் உன் அன்பை கண்டு மெச்சினோம். இருந்தாலும் நாங்கள் வேகமாகவும் போகவில்லை மெதுவாகவும் போகவில்லை. நீ ஒன்றும் கவலைப்படாமல் வா" என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

பல்லக்கு ஏறக்குறைய இந்திரலோகம் அடைந்து இந்திரனின் அரண்மனை வாசலாக சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது இந்திராணி உப்பரிகையில் நின்று நீண்ட தலைமுடியை பறக்கவிட்டு தலை கோதிக் கொண்டிருந்தாள். அதுவரை பூஉலகத்தில் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பங்கள் வேண்டாம் என்று இருந்த நகுஷன், மண்ணுல இன்பங்கள் அனைத்தையும் மறுத்த நகுஷன் இந்திராணியின் அழகைக் கண்டவுடன் அளவற்ற ஆசை கொண்டான். அந்த ஆசையும், அவள்பால் கொண்ட மோகத்தின் காரணமாகவும் இப்போது பல்லக்கு மெதுவாக செல்வதுபோல் அவனுக்கு தோன்றியது. ஏன் மெதுவாகப் போகிறது என்று இப்போது ஆராய்ந்து பார்த்த நகுஷன் ஏழு முனிவர்களுள் அகத்தியர் சற்று உயரம் குறைவானவர். அவருடைய தோள்கள் பல்லக்கு காம்பில் சரியாக பொருந்தவில்லை. ஆகையால் பல்லக்கு மெதுவாகப் போகிறது என்று காரணம் எண்ணிக்கொண்டான். உடனே தன் கையில் இருக்கும் பிரம்பை கொண்டு அகத்தியரை "சர்ப்ப.. சர்ப்ப" என்று அடித்தான். சர்ப்ப சர்ப்ப என்றால் ஓடு ஓடு என்று அர்த்தம். அதுவரை பொறுமையாகவும் எப்போதும் ஒரே சீராகவும் பல்லக்கு தூக்கிக்கொண்டு வந்த அகத்தியர் சினம் கொண்டு சர்ப்ப சர்ப்ப என்று பிரம்பு கொண்டு நீ தீண்டியதால், எல்லோரையும் தீண்டும் சர்ப்பமாக போகக்கடவது என்று சாபமிட்டார்.  தன்னுடைய யாகத்தினாலும் விரதங்களினாலும் இந்திரலோகம் வரை சென்ற நகுஷன் பாம்பாக மாறி கீழே விழுந்தான். 

நீண்ட நாட்களுக்கு பிறகு, புலவர் கீரனின் "வில்லி பாரதம்" மீண்டும் கேட்டேன். கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது அவருடைய செந்தமிழ். அவர் கதை சொல்லும் பாங்கே தனி. அந்த ஏற்ற இறக்கங்கள்.. அப்பப்பா.. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதில் அவர் சொன்ன இந்தக் கதையை உங்களுடன் பகிர்ந்தேன். நீண்ட நேரம் யோசித்து பார்த்ததில் புலன் இன்பங்களே இல்லை என்று சொன்ன நகுஷ மகாராஜா , இந்திராணியின் அழகைக் கண்டு மயங்கி அகத்தியரை சர்ப்ப சர்ப்ப என்று சொல்லி அடித்து பாம்பானான். பூஉலக வாழ்வில் புலன் இன்பங்கள் ஏதும் அனுபவிக்காமல் இருந்த நகுஷனே இந்தக் கதிக்கு ஆளானான் என்றால், மாநிலத்துக்கு மாநிலம், ஜில்லாக்கு ஜில்லா, ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி ஆசிரமம் அமைத்து ஆடம்பர கார்களில் பவனி வந்து, மாதம் ஐந்தாறு நாடுகள் பறந்து ஆன்மீக சேவை  வியாபாரம் செய்யும் இக்கால திடீர் சாமியார்களுக்கு இந்திராணிக்கு பதில் ஒரு சினிமாராணி போதாதா என்ன?

பட உதவி: www.ondacero.es

Saturday, July 17, 2010

ஐம்பதுகளில் அமெரிக்கா

1925லேயே அமெரிக்க நகரங்கள் 1950களில் எப்படி இருக்கும் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த அமெரிக்க சிற்பி, இருபதுகளின் (அட வருஷம்பா... ) பிரபலமான கட்டிடக் கலைஞர் கோபார்ட் வடிவமைத்த சில மாதிரிகளை 1925ம் வருடம், ஆகஸ்ட் மாதம் வெளிவந்த பாபுலர் சயின்ஸ் மன்த்லியிலிருந்து எடுத்து நெட்டில் விட்டிருக்கிறார்கள். 1925லேயே இந்த மனிதருக்கு என்ன ஒரு கற்பனா சக்தி. 2050ல் இப்படித்தான் இருக்குமோ?

usa1


usa2

நம்மூர்ல  எப்ப இப்படி எல்லாம் கட்டுவாங்க. ஒரு ரயில் பாதை போடறத்துக்கே அஞ்சு வருஷம் ஆவுதே... இப்படி சீட்டுக்கட்டு மாதிரி மேலே மேலே கட்டிகிட்டே போறாங்களே.. யப்பப்பா சூப்பர்.. 
பட உதவி: http://www.sadanduseless.com/image.php?n=658

சனிக்கிழமை சங்கதி - பாதாள பார்க்கிங்

ஞாயிற்றுக்கிழமை தி.நகருக்கு குடும்பசகிதம் கார் எடுத்துக்கொண்டு போனால், நாம் கார் நிறுத்திவிட்டு வருவதற்குள் பிரம்மாண்டமாய்க்குள் சர்வஜனமும் குடியிருக்கும் சகல மாடியிலும் ஒரு ஐட்டமாவது வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிடலாம். இன்ச் இன்ச்சாக அப்படியே உருட்டிக்கொண்டே போய் யாராவது வண்டியை எடுக்கும் போது உள்ளே தள்ளலாம் என்று பனகல் பார்க்கை கிரிவலம் வருவதுபோல் கர்மசிரத்தையாக அண்ணாமலையாரை வேண்டிக்கொண்டு சுற்றி வந்தால் கூட ஒரு சைக்கிள் கேப் அளவு இடம் கிடைக்கமாட்டேன் என்கிறது. நல்லி போன்ற சில புண்ணியவான்கள், இடமும் மனசும்  காசும் தாராளமாக இருப்பவர்கள் கடைகுள்ளேயே கார் நிறுத்துவதற்கு கட்டிவிட்டிருக்கிறார்கள்.

கீழே நாம் பார்ப்பது ஹங்கேரியின் தலைநகரமான புடாபெஸ்ட்டில் இருக்கும் ஒரு பாதாள பார்க்கிங். ரோடுக்கு கீழ் ஒரு பாதலாலோகமே இருப்பது போல அவ்வளவு நிறுத்தங்கள். தளத்துக்கு நூற்று ஒன்று கார்கள் என்று, இருக்கும் நான்கு தளங்களில் மொத்தம் நானூற்று நான்கு கார்கள் வரை நிறுத்தலாம். வண்டியோட்டிகள் ஒன்றும் பெரியதாய் சிரமப்படத் தேவையில்லை. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒரு இடத்தில் காரை கொண்டுபோய் ஒரு நிறுத்தினால், சென்சார்கள் துணை கொண்டு நீங்கள் நிறுத்தியது சரியா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டு அப்படியே அலேக்காக எந்த தளத்தில் இடம் இருக்கிறதோ அங்கு தானே தூக்கிக்கொண்டு போய் வைத்துவிடுகிறது. வெளியே இருக்கும் தானியங்கி ஒன்றில் காசைப் போட்டு டோக்கென் பெற்றுக் கொள்ளலாம். திரும்பி வந்தவுடன் அந்த டோக்கனைப் போட்டால் நிற்கும் இடத்திற்கு வண்டி மறுபடியும் ஆஜர்.  வீடியோவைப் பாருங்கள். வெரி இன்ட்ரெஸ்ட்டிங்.

நிறைய அண்டர்கிரவுண்ட் சங்கதிகள் நடக்கும் நம் தேசத்தில், இப்படி ஒரு உருப்படியான அண்டர்கிரவுண்ட் வேலை எப்போது நடக்கும்? ஒன்றும் பெரிய விஷயமில்லை, இப்போது பலவிதமான கம்பனி ஒயர்கள் பதிக்க நோண்டும் ஆழத்தையே இன்னும் கொஞ்சம் தூரம் கீழே கூட எடுத்தால் போதும். கார் நிறுத்திவிடலாம்!!

கொஞ்சம் லைட்டான  சங்கதி. பார்கிங் சம்பந்தமாத்தான்... ஒரே தமாசு...

Friday, July 16, 2010

அய்யய்யே அட்டவணை

ஊர்ல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தையையும் ஒரு அட்டவனையில் கட்டம் கட்டி கலர் அடித்து சாதாரண வார்த்தையிலிருந்து ஸ்பெஷல் ஆக திட்டும் வார்த்தை வரை வகைப்படுத்தி உடனடி தேவைக்காக பக்கம் புரட்டாமல் போட்டிருக்கிறார்கள். அட்டவணை போட்டது மட்டுமல்லாமல் அந்தக் கருமத்தை ஆன்லைனில் விற்க வேறு செய்கிறார்கள். எவ்வளவு பேர் வாங்குகிறார்கள் என்ற புள்ளி விவரம் கிடைத்தால் அவ்வளவு பேருக்கு திட்டுவதற்கு கூட வார்த்தை கிடைக்காமல் அகராதி தேவைப்படுகிறது என்ற பொதுஅறிவு நமக்கு புலப்படும்.

இதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் அறிவியல் பிரிவு எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் Periodic Table படித்திருப்பார்கள். உலோகங்கள், வாயுக்கள் முதலானவற்றை அவற்றின் அணு எடை, நம்பர் கொண்டு அட்டவணைப் படுத்தியிருப்பார்கள். கெமிஸ்ட்ரியில் வரும். அதுபோல இதற்கும் Periodic Table என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் "அவங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி இல்லை. நமக்குள்ள கெமிஸ்ட்ரி மாட்ச் ஆனாதான் இது வொர்க் அவுட் ஆகும்." இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். அதோடு சேர்த்து இந்தக் கெமிஸ்ட்ரியும் மக்கள் தெரிந்துகொண்டு தங்கள் ஞானத்தை வளர்த்துக்கொள்ளட்டும்.

கெட்ட வார்த்தைகள் நன்றாக தெரிந்தவர்களும், ஒரு முறை கூட நாக்கு மேல பல் போட்டு கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று விரதமிருப்பவர்களும் தெரிந்தது போதும், என்று நினைப்பவர்களும் இந்த பாராவிற்கு மேல் கடந்து செல்லவேண்டாம். படித்துவிட்டு நீ அசிங்கம் அசிங்கமாய் எழுதுகிறாய் என்று சொல்லி கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டாதீர்கள். இந்த டேபிளில் உள்ளது படக் காட்சியாக சென்ற சில தினங்களுக்கு முன் நான் இட்ட பதிவு இங்கே உள்ளது.

bad


மேற்கண்ட படத்தில் எழுத்துகள் கண்களுக்கு தெரியாமல் இருந்தால், படத்தின் மேல் அழுத்தி தெளிவாக தெரிந்தபின் உங்களுடைய அசிங்க வக்காபுலரியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

மேற்கண்ட ஐட்டத்தை விலை கொடுத்து வாங்க இங்கே சொடுக்கவும். http://shop.moderntoss.com/?q=periodic+table ஆர்வமுள்ளவர்கள் வாங்கி பிரேம் போட்டு வீட்டில் நடுக்கூடத்தில் மாட்டி வைத்து அழகு பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஷங்கருக்கும் மணிக்கும் இது தெரியுமா?

என்னடா வர வர அட்டகாசம் ரொம்ப ஜாஸ்த்தியா போவுதே அப்படின்னு நினைக்கிறீங்களா? ஷங்கர் மணிக்கெல்லாம் ப்ளாக் மூலமா சேதி சொல்ல ஆரம்பிச்சிட்டான் இது எங்க போய் நிற்குமோ என்று கலங்குரீங்களா? கவலையை விடுங்க. மேலே படிங்க. கீழே படிங்கன்னு சொல்லணுமோ?

filmதலைப்பில் குறிப்பிட்ட ஸ்டார் இயக்குனர்களுக்கெல்லாம் இது நிச்சயம் தெரிந்திருக்கும்.  இணையத்தில் மேய்கிற ஆட்களை வலை போட்டு உள்ளே இழுக்கிற மாதிரி ஒரு தலைப்பு வேணும், அதோட மட்டுமல்லாமல் இப்போதைக்கு இந்த ரெண்டு பேர் தான் நிறைய பிரம்மாண்ட காட்சிகள் எடுக்கிறார்கள். இவர்களது தயாரிப்பாளர்கள் சீக்கிரம் தலையில் துண்டு போடுவதிலிருந்து கொஞ்சம் பிழைத்துக் கொள்ளட்டுமே என்று இந்த பதிவு.
   
பல மாடி கட்டிடங்களுக்கு மேலே கார் ஓட்டி, பைக் ஒட்டி, திருடனை துரத்தி, சைரென் வைத்த வண்டியில் போலீஸ் துரத்தோ துரத்து என்று துரத்தி, இருநூறாவது மாடி மேல் ஹீரோவும் வில்லனும் கட்டிப்பிரண்டு  சண்டை போடுவது,  மரம் விட்டு மரம் மாதிரி கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுவது போன்ற பல காட்சிகளுக்கும், நடுக்கடல், நடு பாலைவனம் போன்ற நட்ட நடு இடங்களையும் ஒரு ஹெலிகாப்டர் கொண்டு சிரமப்பட்டு எடுக்கும் காட்சிகளை கீழ்காணும் டெக்னாலஜி கொண்டு இலகுவாக எடுத்தது தள்ள முடியும். இதனால் நேரம் மிச்சப்படுவதோடு டப்பு நிறைய மிச்சமாகும் என்று சொல்கிறார்கள்.

எதை வைத்து இந்த மாதிரி காட்சிகள் எடுக்கிறார்கள் என்பது கீழே. ஒரு பையன் ட்ரம்ஸ் வாசிக்கறது, நீர் நிலைகள் மேலே நாம ஓட்டாஞ் சில்லு எடுத்து "தவளை" அடிக்கரமாதிரி தண்ணியோட உரசி, சில அற்புதமான ஷாட்ஸ் இந்த வீடியோவில் இருக்கு.



எப்படியெல்லாம் காட்சிகள் எடுக்கலாம் என்பது இங்கே.

இந்த இரண்டாவது Free Style Mountain Biking என்ற ஆபத்தான விளையாட்டு வீடியோவில் நடித்திருப்பது சாரி வண்டி ஓட்டியிருப்பது Basagoitia, இதுலதான் அவர் வாழ்க்கையும் ஓடுது ஏன்னா அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர். இந்த "பயம் அறியான்" நிகழ்ச்சியை வழங்குபவர்கள் Red Bull கம்பெனியார். ( இவரோட பெயரை தமிழில் எழுதுவதற்கு ஒரு கணம் கூட நான் முயற்ச்சிக்கவில்லை என்று தாழ்மையுடன் கூறிக்கொள்ள பெருமைப்படுகிறேன். நண்பர்கள் பின்னூட்டத்தில் முயற்சிக்கலாம்.) அண்ணன் சும்மா கில்லி மாதிரி காலாலேயே சைக்கிளை சுத்தி சுத்தி வளைய வர்றாரு பாருங்க. இந்த பறக்கும் கமெரா கொண்டு இவர் அந்தரத்துல ஆடுற விளையாட்டையும், மாடு நாக்கை தூக்கி மூக்கில விடறதை மாட்டோட மூக்கு துவாரங்கள் வரைக்கும் பறந்து போய் எடுத்துகிட்டு வருது.  Feast for Eyes. A must watch with Music.


இந்தக் கமெராவை வைத்து நம்மூர்ல இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாங்க அப்படீன்னு ரூம் போடாம யோசித்ததில்..


1. இந்தியா பாகிஸ்தான் பார்டர்ல தீவிரவாதிங்க போக்குவரத்தை உளவு பார்க்க வச்சுக்கலாம். 
 
2. எங்கயாவது குளம் மற்றும் ஆத்தோரத்துல சும்மா பட்டம் மாதிரி மேல பறக்க விட்டு குளிக்கறத படம் புடிச்சிட்டா நம்ம தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்னத்துக்கு ஆவறது? ரொம்ப டேஞ்சர்.

3. தீபாவளி, பொங்கல் சமயங்களில் தி.நகர் ரெங்கநாதன் தெரு போன்ற ஜன சந்தடி மிகுந்த இடங்களில் கூட்டம் மேலே பறக்கவிட்டு ஜேப்டி திருடர்கள், இடி மன்னர்களை கண்டு பிடித்து உள்ளே தள்ளி கவனிக்கலாம்.

4. நம்ம வீட்டுல ராத்திரி தங்கம் சீரியல் பார்க்கும்போது கரண்ட் இல்லாம பக்கத்து தெருவில இருந்தா கேமராவை அனுப்பி படம் புடிக்கச் சொல்லி வீட்டுக்கு கொண்டு வந்து கரண்ட் வந்தப்புறம் போட்டு பார்க்கலாம்.

ஏற்கனவே, அடர்ந்த காடுகள்ல பாம்பு பல்லி படம் புடிக்கறதுக்கு இந்தமாதிரி ஒரு ரிமோட் வச்ச கமெராவை ஒரு ஆள்  படுத்துகிட்டே படம் புடிக்கறதை ஒரு நாள் நேஷனல் ஜியாகரபி சானெல்ல காண்பிச்சாங்க.

இந்த ப்ளாக் மூலமாக தமிழ் திரைப்பட உலகத்திற்கு என்னால முடிந்த ஒரு அருந்தொண்டு ஆற்றியிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் புல் அரிக்குது.

Thursday, July 15, 2010

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..

blogதீவிரமாக சரசரவென நூறு பதிவுகளைக் கடந்த தீராத.வி.பிள்ளையைப் பற்றி ஊரெங்கும் தீப்பிடித்தார்ப்போல ஒரே தீப்பொறி பறக்கும் பேச்சு. ஒரே வாக்கியத்தில் எவ்வளவு தீ. ப்ளாக் பத்திக்கும் போலருக்கு. விட்டுடுவோம். நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஆட்டோ ஸ்டாண்டில் கூட ரெண்டு பேர் தந்தி படித்துக்கொண்டு மடக்கியது போக தொங்கவிட்ட காலை ஆட்டிக்கொண்டு இது பற்றி பேசியதாக அதிகாரப்பூர்வ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிண்டி மேம்பாலம் ஏறி வடபழனி நோக்கி இறங்கிய இடத்தில் நம் பேரன் பேத்தி காலத்தில் வரப்போகிற சென்னை மெட்ரோ ரயிலின் பாதை போடும் தடுப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி இரண்டு வெளியூர் சொகுசு பஸ், இரண்டு உள்ளூர் மாநகர பஸ், நான்கு ஆட்டோ, ஒரு எல் போர்டு சிகப்பு ஆல்டோ, இரண்டு சைக்கிள், கம்பி ஏற்றி நுனியில் சிகப்புதுணி சுற்றாத ஒற்றை மாட்டு வண்டி, பத்து டன் தண்ணீர் போத்தல்கள் எடை ஏற்றிய ஒரு குட்டி யானை, ரோடிலேயே ஆபிஸ் செல்லும் ரெண்டு பேரை இலவசமாக துணியோடு குளிப்பாட்டித் எஸ்டேட் திரும்பும் மெட்ரோ வாட்டர் லாரி என்று சகலவிதமான இடையூறல்களுக்குக்கிடையில் நாலைந்து பேர் என் கார் கண்ணாடியை தட்டி திறக்கச் சொல்லி "நூறு ஆச்சு எதுவும் சிறப்புப் பதிவு கிடையாதா?" என்று கொள்ளை ஆர்வமாக மனம் திறந்து கேட்க நம்முடைய ஆர்வக் கோளாறு ஆரம்பமாகியது. அதோடு மட்டுமல்லாமல் ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, ரெடிஃப் என்று மெயில் பேதம் பார்க்காமல் அனைத்து இலவச பொது மெயில் சர்வர்களிலும் குவிந்த எண்ணற்ற கணக்கிலடங்கா கேள்விகளுக்கு குலுக்கலில் எடுத்து பதில் சொல்லாமல் குலுக்கல் நடிகை (நம்மோட மனதை குலுக்கும்/உலுக்கும் நடிகை என்ற அர்த்தத்தில் படிக்கவும்) குமீதாவை நானாட நீ ஓட  நிகழ்ச்சியின் தேநீர் ஓய்வு நேரத்தில் அணுகி, கையை காலைப் பிடித்து (கெஞ்சி கேட்டதைத்தான் இவ்வாறு எழுதியுள்ளோம் என்று தீ.வி.பி வாசகர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்) அவரது பொற்கரங்களால் கிளிக்கி தேர்ந்தெடுக்கச் சொல்லி பதில் அளித்துள்ளேன்.  கிளி சீட்டு எடுப்பது போல அவர் தேர்ந்தெடுத்த சில மெயில்களுக்கு என்னுடைய அவையடக்கமான பதிலை படித்து இன்புறுக.


சுடலை.சுண்டல்@கிண்டல்.காம் கேட்டது....
நீங்க எப்போலேர்ந்து எழுத ஆரம்பிச்சீங்க?

நான் வடுவா ஒன்றாம் வகுப்பு படிக்கறதிலிருந்து எழுதிக்கிட்டு வரேன். நீ நல்லாவே எழுதலை, காக்கா கிறுக்கலா இருக்கு, காண சகிக்கலை அப்படீன்னு அப்பவே எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சகாயமேரி டீச்சர் அவங்க தலையில அடிச்சுகிட்டே சொல்லுவாங்க.

வெட்டியான்@சும்மாகிடந்தசங்கு.காம் ஊதியது...
பதிவு எப்போலேர்ந்து எழுதுறீங்க சார்?

2007 நவம்பர்ல இந்த பதிவு மூலமாக ப்ளாக் உலக சரித்திரத்திலேயே எவருமே என்ட்ரி ஆகாத வகையில் உள்நுழைந்து உலகப் பிரசித்தி அடைந்தேன்.  அந்தப் பதிவு மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியதால சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின் இந்த வருஷம் பிப்ரவரி முதல் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன்.

படைப்பாளி@நையபுடைப்பவர்கள்.காம்  புடைத்தது...
உங்களோடது எந்த மாதிரி படைப்புகள்?

மேல், கீழ், முன் மற்றும் பின்நவீனத்துவங்கள் அனைத்தும் எழுத்தில் கொண்டுவர ஆசைப்படுகிறேன். உப்புசப்பு இல்லாமல் எழுதாதே முடிந்தால் கொஞ்சம் கரம் மசாலா போட்டு காரமாக எழுது என்று என் நண்பர் எழுத்துலக தாதா சா.....தா குருபோதனை செய்துள்ளார். அவருக்கு குருவணக்கம் செய்யும் பொருட்டு அப்பப்போ அசைவமும் சைவத்தோடு சேர்த்து எழுதுகிறேன். நான் அக்மார்க் தூய தமிழில் எழுதினால் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போல் உள்ளது என்று தாய்லாந்தில் சியாங் மாய் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்யும் தூக்டா எனக்கு பாராட்டு கடிதத்துக்கு பதில் என்னைப் பற்றி எட்டுப் பக்க கட்டுரை வரைந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார். விரைவில் அதுவும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காமவம்பன்@குசும்பு.காம் வம்படித்தது..
நீங்க காரோட்டும் போது ரோட்ல போறவர பொண்ணுங்களை வச்சகண் வாங்காமவும் இமைக்காமலும் திருட்டுத்தனமா கள்ளப்பார்வை பார்க்குறதாகவும், சில சமயங்கள்ல சடார்னு பின்னால திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிகிட்டதாகவும் அதனாலதான் உங்க வலைதளத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை அப்படின்னு பொருத்தமா ஒரு பெயர் சூட்டினதா ஊர்ல எல்லாரும் கும்பலா கூடி நின்னு பேசிக்கிறாங்களே அது உண்மையா?

இந்தக் கேள்விக்கான விடையை சில மாதங்களுக்கு முன்னாடியே மயிலை மாங்கொல்லையில் போஸ்டர் அடித்து கலாமை கூப்பிட்டு மேடை போட்டு ஒரு பொதுக்கூட்டத்துல சொல்லிட்டேன். அது இங்க இருக்கு. படித்து புரிந்துகொள்ளுங்கள்.

வாலிபகுறும்பன்@வயசுப்பையன்.இன் லிருந்து...
நீங்க எழுதற கார்த்திக்கின் காதலிகள் தொடர் பற்றிய ஒரு கேள்வி. எல்லோரும் அது உங்களோட உண்மைக்கதை சொந்தக்கதை நொந்தக்கதை என்கிறார்களே... இதைப் பற்றி உங்கள் கருத்து...

இந்த கதைகளுக்கான குறிச்சொல்லே புனைவு அப்படின்னு தான் போட்டிருக்கேன். பொதுவா கதைன்னு சொன்னாலே இந்த சமூகம் கை கால் மூக்கு நாக்கு வச்சு பேசும். இதுல என்னை வச்சு பேசுது. அதோட மட்டுமல்லாமல் என்னை நேர்ல பார்க்கிறவங்களுக்கு என்னோட தகுதி என்ன என்பது நல்லா தெரியும். கதையில வர எல்லாப் பொண்ணுங்க கூடவும் இந்த நையாண்டி உலகம் எவ்வளவுதான் இணைத்து கிசுகிசு பேசினாலும், என் தங்கத் தாரம் சொல்றா "உங்க மன்மதனையொத்த அழகுக்கு நான் ஒருத்தி மாட்டிகிட்டதே அதிகம்"ன்னு.

உயிரைவாங்கும்நண்பன்@கால்வாரி.காம் வாரிவிட்டது..
நீங்க ப்ளாக் எழுதறதப் பற்றி உங்கள் நண்பர்கள் கருத்து.. யாராவது ஒரு நண்பரின் உள்ளக்கருத்தோடு எடுத்துக் கூற முடியுமா?

சமய சந்தர்ப்பங்கள் பார்க்காம எந்நேரமும் ஜில்லெட் மாக் 3 சவர பிளேடு மாதிரி என் நண்பர்களை வாயாலேயே வகுந்ததின் விளைவாக, ஐயா சாமி தாங்கமுடியலை, நீ இதையெல்லாம் ப்ளாக்கா எழுதுப்பா ராஜா. நாங்கெல்லாம் அங்க போய் படிச்சிக்கிறோம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களோட ஊக்கத்தின் சிறப்புப் பரிசாக அவங்களுக்காகத்தான் இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். 
உங்களோட உள் கேள்விக்காக சிநேகிதர் ஒருவரின் கருத்துக்காக நண்பர் ரவியிடம் தொலைபேசியில் கேட்டபோது....
(கேள்வி கேட்ட பின்னர் அவர் குரல் சற்று கம்மி குமுறியது. நம் போன் கேள்விக்கு வெறிகொண்டு அவர் எழுதிய மின் மடலை அக்ஷரம் பிசகாமல் அப்படியே வாசகர்களின் பார்வைக்கு கீழே தந்துள்ளோம்)
  
எப்போதுமே ஓயாம ஒரு ரூபா காயினை தகர டப்பால போட்டு ஆட்டற மாதிரி  பேசிக்கிட்டே இருப்பான். நம்மால காது கொடுத்து கேட்க முடியலைன்னு ப்ளாக் எழுதுன்னு சொல்லிட்டோம். ஆனா இப்பதான் ஹிம்சை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு. முன்னாடியெல்லாம் ஒரு முறை ஒரு விஷயத்தை சொல்வான். இப்போ ஒரு தடவை சொல்லிட்டு இதையெல்லாம் ப்ளாக்ல எழுதியிருக்கேன் படிங்க, படிங்கன்னு நச்சரிக்கறான். ரத்தம் வர சொரியறான். ஒரு ப்ளாக் எழுதி ஊர் முழுக்க போன் போட்டு "மாமா இது எழுதியிருக்கேன்", "மச்சான் அது எழுதியிருக்கேன் படிங்கடா" அப்படின்னு வேற பிடுங்கறான். தொல்லை தாங்காம  சரி படிச்சோம் அப்படின்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தா போர்டு எக்ஸாம் மாதிரி அவன் எழுதின ப்ளாக்லேர்ந்து கேள்வி வேற கேட்டு நாம படிச்சோமான்னு டெஸ்ட் வச்சு படுத்தறான். இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலமோ?
(மரண தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நண்பரின் கண்ணீர்த் துளிகள் மின்மடலிலும் கூட கொஞ்சம் ஈரம் செய்திருந்தது)
அநியாயவாதி@குடும்பத்தில்கும்மியடிப்பவர்.காம்  கும்மியடித்தது...
இதைப் பற்றி உங்க மனைவி என்ன நினைக்கறாங்க?

ரொம்ப பெருமையா இருக்கு அப்படின்னு முதல்ல சொன்னாங்க. எதுக்கு அப்படின்னு கேட்ட போது முன்னாடியெல்லாம் உங்களுக்கு எதிர்த்தாப்ல, கூப்பிடற தூரத்தில இருக்கறவங்களை தான் பேசிப் பாடா படுத்துவீங்க. இப்ப ப்ளாக் ஆரம்பிச்சு பிரபஞ்சத்ல இருக்குற சகலவிதமான தமிழ் எழுதப் படிக்க தெரிந்த ஜீவராசிகளையும் படுத்த முடியும் அப்படின்னு நீங்க நிரூபிச்சதால உங்களை கட்டிகிட்டதற்காக நான் ரொம்பவே பெருமைப்படறேன். அப்படின்னு சொல்லும்போது அந்தப் பெருமை அவ கண்கள்ல மின்னுறதை நான் கண்கூடாக பார்த்தேன்.

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. பதில் எழுதி(அடித்து) கை வலிப்பதாலும், இது எப்போதுமே எவர் கிரீன் சப்ஜெக்ட் என்பதால் இருநூறு, முன்னூறு, ஐநூறு, ஆயிரம் போன்ற நூற்பதிவுகள் கொண்டாட்டத்திற்கு கவனித்து கொள்ள(ல்ல)லாம்  என்று இப்போதைக்கு இப்பதிவு இத்துடன் நிறைவடைகிறது. 

(அப்பாடி! end கார்டு போட்டான்டா என்று ஏகமனதாக எல்லோரும் பெருமூச்சு விடுவது பெரிய ஆலமரத்தையே சாய்த்துவிடும் போலிருக்கிறது. சே. விவஸ்தையே கிடையாது end சொல்லியும் இன்னும் எழுதறான்பா... அவன் கையிலேர்ந்து கீபோர்டை பிடுங்குங்கப்பா.. என்று நாலு பேர் ஓடி வருகையில்.. நான் எஸ்கே..................ப்)
பட உதவி: http://blogs.worldbank.org/

Wednesday, July 14, 2010

அர்ஜுனா...அர்ஜுனா...

lightningமுந்தாநாள்  மதியத்திலிருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் அந்திநேரம் ஆபிசிலிருந்து கிளம்பும் பொழுது ஆகாயத்தை பிய்த்துக்கொண்டு கொட்டியது.  அப்படி ஒரு ராட்சஷ மழை. மழை இயற்கையின் கொடை. சந்தேகமில்லை. ஆனால் அதை இப்புவியில் சேர்ப்பதற்கு கூடவே வரும் பாதுகாப்பு பயில்வான் ரங்கநாதன்களான இடி மின்னல் போன்றவை வயிற்றில் புளியை கரைத்துவிடும். டி.வி., ப்ரிட்ஜ், மிக்சி, கணினி போன்ற எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு போவது போல் ஆட்களையும் சிலசமயம் கபளீகரம் செய்துவிடுகிறது. அரை நிஜார் போட்ட வயதில் இதுபோன்று வான வேடிக்கைகளோடு ஜோராக நின்று பொழியும் மழைக்கு நான் காது பொத்தி பயப்படும் பொழுது என் பாட்டி "அர்ஜுனா .... அர்ஜுனா... சொல்லுடா, ஒன்னும் ஆகாது" என்று சொல்லுவாள். ஒரு தசாப்தம் முன்னரே சிவலோகப் பதவி அடைந்த பாட்டி இப்போது காரில் என் கூட  துணைக்கு இல்லாதலால் "அர்ஜுனா..." மனசுக்குள் சொல்லி பாட்டியை நினைத்துக்கொண்டு பயத்தை போக்கிக்கொண்டேன். காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? நம்முடைய காரின் டயர் ரப்பர் பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதுதான் கீழே தரையைத் தொட்டு மின்னலையும் பூமியையும் இணைத்துக் கொண்டு நிற்கிறது. ஆகையால் மின்னல் தாக்கினால் ரப்பர் டயர் மேல் உட்கார்ந்திருப்பதால் நம் மேல் மின்சாரம் பாயாது என்ற  என்புத்திக்கு எட்டிய பொதுஅறிவின் துணையோடு வண்டி ஓட்டிக்கொண்டு வீடு போய் சேர்ந்தேன்.

இருந்தாலும் விடாமல் மூளைக்குள் இருக்கும் அனைத்து ந்யுரான்களிலும் இந்த சங்கதி தொடர்ந்து அரித்துக்கொண்டிருந்தது. இதைப் பற்றி ஆராயலாம் என்று கூகிள் துணைக் கொண்டு இணையத்தை தேடி அலசி ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த தகவல் இது. ஒரு ஆளை காரில் உட்காரவைத்து மின்னல் கொடுக்கும் மின்சாரம் பாய்ச்சி காண்பிக்கிறார்கள். தோராயமாக 10 முதல் 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் மின்னலால் தயாரிக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்க்காட்டார் கவனிக்கவும். மின்னலைக் கையில் பிடிக்கும் துணிச்சலோடு காரில் அவர் அமர்ந்திருப்பது நமக்கு ஷாக் அடித்தார்ப்போல இருக்கிறது. காரில் பயணிக்கும் போது ஏன் மின்னல் நம்மை தாக்குவதில்லை, அப்படியே கூராக தாக்கினாலும் நம் பூத உடலுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றால் நம்முடைய காரின் மெட்டல் பிரேம் ஒரு கவசம் போல காக்கிறது என்கிறார் ஸ்காட் மாண்டியா என்னும் தட்பவெப்பம் மற்றும் சீதோஷ்ணம் பயிற்றுவிக்கும் கல்லூரி பேராசிரியர். ஆனால் மின்னல் தாக்கும்போது காரினுள் உட்கார்ந்திருக்கும் நாம் காரிலிருக்கும் வெளியே தொடர்புள்ள பொருட்களைத் தொட்டால் ஆள் பஸ்பம் தான். சாம்பலாகிவிடுவார்கள். காரியம் செய்வதற்கு கூட ஒன்றும் கிடைக்காது. உதாரணத்திற்கு கார் கதவின் கைப்பிடி, ரேடியோ போன்ற பொருட்கள். பி.பி.ஸியின் இந்த வீடியோ நம் மின்னல் பற்றிய அறிவை செறிவூட்டும் என்ற நம்பிக்கையில்.....



மேலும் சில அறிவியல்பூர்வமான ஐந்தாறு கேள்விகளுக்கு கீழ்காணும் சுட்டியில் விளக்கியிருக்கிறார் இந்த பேரா. இதைப் படித்துவிட்டு அடுத்தமுறை ஜோ என்று மழை பெய்யும் போது வலுக்கட்டாயமாக நன்றாக மின்னலடிக்கும் வேளையில் காரில் உட்கார்ந்து பரிசோதித்து பார்க்கவேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே"யில் மாரிக்கால அந்தி நேரத்தை வர்ணிக்கும் ஒரு காட்சியில் கருமேகத்தில் தொலைந்து போன சந்திரனை வானம் மின்னல் விளக்கேற்றி இடிஇடித்து விசாரித்து தேடிக்கொண்டிருப்பதாக கவி வடித்திருப்பார். மின்னலை சாந்தமாக வெண்ணிலா தேடும் வேலைக்கு அமர்த்தியிருப்பார் கவியரசு. பதிவுக்கு ஒட்டாமல் இந்த சரக்கு எங்கே தேவையில்லாமல் இங்கே நுழைந்தது என்று கேட்போருக்கு...... மனம் ஒரு குரங்கு. தாவிக்கொண்டே இருக்கிறது. என்ன செய்ய? ஷாஜஹான் படத்தில் இளைய தளபதி விஜய் "மின்னலை பிடித்து.. மின்னலை பிடித்து.. மேகத்தில் துடைத்து பெண் என்று படைத்து வீதியில் விட்டு விட்டான்...." பாடல் கூடத்தான் ஞாபகம் வருகிறது. போதுமப்பா நிறுத்து என்று நீங்கள் கதறுவது காதில் விழுகிறது.

பட உதவி: www.etsu.edu
தகவல் உதவி: http://profmandia.wordpress.com/2010/07/12/no-this-weather-really-blows/

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails