Showing posts with label பெரிய அத்தை. Show all posts
Showing posts with label பெரிய அத்தை. Show all posts

Saturday, May 9, 2015

பெரிய அத்தை

“சாயரக்ஷை வெளக்கு வெச்ச பிறகு வாசல்ல உட்கார்ந்து தல பின்னலாமாடீ....? ம்... ஸ்ரீதேவி வருவாளா? அவ அக்காதான் வருவா...”

“ஈரத்துண்டைக் கட்டிண்டு பூஜை பண்ணப்டாதுடா... ரெண்டு வஸ்திரம் வேணும். பஞ்சகச்சம் கட்டிண்டு உத்தரீயத்தை இடுப்புல கட்டிக்கோ....”

”எச்சப் பண்ணப்டாது.. டம்பளரை முழுங்கிடாதே... ம்.. சொல் பேச்சு கேட்கமாட்டியா... ம்.. ம்...”

“பசுஞ்சாணம் கொஞ்சூண்டு கொல்லேல வச்சுக்கணும்.. பத்து தொடைக்கும்போது ரவையாணும் சேர்த்துக்கணும்...”

நடுஹாலில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு நேற்றுவரை எல்லோரையும் அரசாட்சி செய்துகொண்டிருந்தவள் இப்போது இல்லை. பெரிய அத்தை. ஜானகி. அப்பாவுக்கு மூத்தவள். மூன்று தலைமுறைக்காரி.

விறகுக் கட்டை மெத்தையில் விறட்டி போர்த்தி ஆவடி சுசானக்கரையில் சம்பிரதாயமான தகனம். குடும்பத்தில் நல்லது கெட்டதுகளை அதிகாரமாய் இடித்துச் சொல்லும் பெரியவளின் இழப்பு. ”ஸோடியம் குறைச்சல்... ரெண்டு மூனு நாள் ஏத்தினா சரியாயிடும்..” என்று டாக்டரின் வாக்குறுதியில் நேற்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ரொம்பவும் அவதியில்லை. மாட்டுப்பொண், மகள், மகன் என்று ஷிஃப்ட் போட்டு ஆஸ்பத்திரி வராண்டா கொசுக்கடியில் படுக்கவைத்து யாரையும் படுத்தவில்லை. போய்ச் சேர்ந்துவிட்டாள். பேரிழப்பு.

”பொட்”டென்று சுடுகாட்டுக் கூரை தாங்கிய பில்லரில் பானை உடைக்கப்பட்டுச் நெஞ்சருகே சிதை மூட்டும் போது முன்னை..பின்னை...அன்னை.. தீ மூள்கமூள்கவே..பட்டினத்தார் ஞாபகம் வந்தார். “கேஸ், எலெக்ட்ரிக்கெல்லாம் விட இதான் சார் சூப்பர். என்னதான் லேட்டஸ்ட்டா எது வந்தாலும் இதுதான் மனசுக்குத் திருப்தியாயிருக்கும்...” சுடுகாட்டாங்கரைக் குட்டையில் ஆசை தீரக் குளித்துக்கொண்டிருந்த எமதர்மராஜன் வாகனங்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்த வேளையில் பின்னாலிருந்து ஒரு அந்நியர் உள்ளம் உருகினார்.

விட்டேத்தியாகப் பார்த்தேன். அஸ்தியாவதில் எது சூப்பர்? எதில் திருப்தி?

“அத்தே... கிரஹணம்... எத்தனை மணி வரை சாப்பிடலாம்... எப்போ விட்ட ஸ்நானம் பண்ணணும்...”. ஊஹும். வீட்டிற்குள் கேட்க ஆளில்லை.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails