Showing posts with label வரலாற்றுக் கதை. Show all posts
Showing posts with label வரலாற்றுக் கதை. Show all posts

Sunday, November 28, 2010

காதல் இளவரசி

ராணிக்கு ஒரே சங்கடமாக இருந்தது. காலையில் இருந்தே அந்த செய்தி மனதை பிசைந்தது. மன்னனிடம் எப்படி இதை தெரிவிப்பது என்று மிகவும் பயந்தாள். நாலைந்து தேசங்களை வென்றவன், போர்க்களத்தில் எதிரிகளின் தலைகளை பூப்பந்தாடுபவன்,  வீர கேசரி, ராஜாதி ராஜன், ராஜ மார்த்தாண்டன் இந்தச் செய்தியை எப்படி ஜீரணிப்பான் என்று தெரியாது. பெருங்கோபிஷ்டன். ரேகைகள் அழிய கையை இருக்க பிசைந்து கொண்டு அந்தப் பெரிய அந்தப்புரத்தில் தனியொரு ஆளாய் சேடிப்பெண்கள் புடைசூழ குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தாள். தூண்களில் சொருகியிருந்த தீப்பந்தங்கள் விஷயத்தின் அனலை கூட்டுவது போல ஜ்வாலையுடன் திகுதிகுவென்று எறிந்து கொண்டிருந்தது. இரண்டு தாதிகள் பஞ்சனை பக்கத்தில் ஏவலுக்கு உட்கார்ந்து இருக்க, நான்கு இளம் பெண்கள் வளைந்த வாசலில் காவலுக்கு நிற்க அந்த முன்னிரவு நேரம் முக்கி முக்கி மெல்லமாக நகர்ந்துகொண்டிருந்தது.

முதல் ஜாமம் முடிந்ததும் மன்னர் நிச்சயம் இங்குதான் வருவார். மணிமுடிக்கு அப்புறம் அவர் காதல் கொள்வது ராணியின் தலை முடியைத்தான். பஞ்சணையில் படுக்க வைத்து தலை கோதிக்கொண்டே சாய்ந்து இருப்பார். கண்கள் சொருகி "அலை அலையாய் அலை அலையாய்.." என்று வாய்கள் முனுமுனுக்க அப்படியே தூங்கியும் போவார். அவர் என்ன கட்டிளம் காளையா? வயதாகிறதல்லவா? அதான். கதை தொடங்கிய இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகர்ந்து விட்டது. அந்தப்புர உப்பரிகைக்கு வந்தாள் ராணி. மார்கழி மாத குளிர்ந்த காற்று மேனியெங்கும் தடவி மனதின் உஷ்ணத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது. பனிச்சாரல் அடித்தது. நந்தவனத்து பவிழமல்லி செடிகளும் முல்லைக் கொடிகளும் நந்தலாலா பாடி ஆடிக்கொண்டிருந்தன. அவர்கள் ஆட்டத்திற்கு நிலா விளக்கடித்து பொதுச்சேவை புரிந்துகொண்டிருந்தான். எங்கிருந்தோ சுவர்க்கோழிகள் "கிர்..கிர்க்..கிர்க்.." என்று ஒரு புதிய பின்னணி இசையை அந்த நேரத்திற்கு அளித்துக்கொண்டிருந்தது. மீண்டும் நேற்று நடந்த நிகழ்சிகளின் நினைவலைகளில் மூழ்கினாள்.

மன்னரின் சமீப வெற்றிகளை கொண்டாடும் பொருட்டு நேற்று விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு. பட்டத்தரசி வருகிறாள் என்று ஊர்கூடி ஏற்பாடு செய்திருந்தார்கள். சங்காபிஷேகம் மஹாருத்ர ஜபம் என்று வெகுவிமரிசையாக பலவிதமான பூஜைகள் நடத்தப்பட்டன. வழிபாட்டை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு பல்லக்கில் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில்தான் அதைக் கவனித்தாள் மகாராணி. கூதிர்க்காலமாகையால் மக்கள் அதிசீக்கிரம் தங்கள் இருப்பிடங்களுக்குள் முடங்கிப் போயிருந்தார்கள். ஊர் அடங்கியிருந்தது. குளிரின் கை ஓங்கியிருந்தது. பல்லக்கு தூக்கிகள் "ஹோ.ஹோ.ஹோ.ஹோ" என்று ஒலிஎழுப்பி ஒரே சீராக சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். சற்றைக்கெல்லாம் முன்னால் ஒரு சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது. திரை விலக்கி ராணி மெல்ல எட்டிப்பார்க்கையில் வெண்ணிற புரவியில் இளவரசி மட்டும் தனியாக பறப்பது தெரிந்தது.

பக்கத்தில் கைகட்டி நடந்து வந்துகொண்டிருந்தவரை "தேவரே.. என்னவென்று கொஞ்சம் பாருங்கள்." என்று அந்த வயோதிக ஊர்க்காவல் தலைவனுக்கு கண்களால் சைகை காண்பித்து அரண்மனைக்கு சென்றுவிட்டாள் மகாராணி.

****************

full moon

குதிரை நேராக ஊருக்கு வெளியே இருந்த ஒரு பாழுங்கிணறு பக்கத்தில் நின்று கனைத்தது. இடம் பழகிய குதிரை போல. இரவு ஆடையில் அதிக அலங்காரமற்று இருந்த இளவரசி குதிரையில் இருந்து குதித்து இறங்கி அந்தக் கிணற்றுக்குள் இறங்கினாள். சிலுசிலுவென்று அடித்த ஊதற்காற்று இவள் அங்கம் உரசி தன்னை சூடேற்றிக்கொண்டது. ஏற்கனவே நிலவை தன்னுள் சிறை பிடித்து வைத்திருந்த பாழுங்கிணறு கால்முளைத்து வந்த இரண்டாவது முழு நிலவு உள்ளுக்குள் இறங்கியதும் தடுமாறியது. இறங்கும்போது காலில் இடறி கல் விழுந்ததில் கிணறு வரிவரியாக அலைஎழுப்பி கலங்கியது. கிணற்றின் உள்ளே கடைசிப் படியில் உட்கார்ந்திருந்த அவன் அண்ணாந்து மேலே பார்த்தான். எங்கேயோ ஒரு இரவுப் பறவை ஏதோ ஒரு வினோத சப்தம் எழுப்பி இறக்கைகள் சடசடத்து பறந்தது.

"தாங்கள் வந்து நீண்ட நேரமாயிற்றா?" என்றாள் இளவரசி.
"உன் நினைவுகளில் ஆனந்தமாக மிதந்தபடி இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இப்படியே ஏகாந்தமாக உட்கார்ந்திருப்பேன்" என்று பளீர் பற்கள் தெரிய சிரித்தான்.
"உம். சரி சரி. காதலிக்க ஆரம்பித்துவிட்டால் அனைவரும் கவிஞரே, புலவர் பெருமக்களே, பொய்யுரைப்பவர்களே..." என்று புன்னகை பூத்தாள் இளவரசி.
அவன் உட்கார்ந்திருந்த படியை தாண்ட முயல்கையில் மன்மதனின் விளையாட்டால் லேசாக கால் தடுமாறினாள். சட்டென்று இடையில் கையை கொடுத்து தாங்கி தூக்கி நிறுத்தினான் அவன். கருந்தேக்கு மரத்தில் தொழில்நுட்பம் தெரிந்த தச்சன் மிக நேர்த்தியாக செய்த நிலைவாசல் போன்று இருந்தன அவனது கைகள். சற்றைக்கெல்லாம் கன்னியை அவன் கை பிடித்த இடம் கன்னிவிட்டது. அவன் கரம் பட்டு சிவந்த இடம் அந்த நிலவொளியிலும் தெளிவாக தெரிந்தது. அவன் இப்படி ஒரு உடும்புப்பிடி பிடிப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை இளவரசி. எதிர்பாராத ஆண் தீண்டலில் துணுக்குற்றவள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு
"என்ன! கோவூராரே! எல்லை மீறுகிறீர்கள். தங்கள் கை கட்டுப்பாட்டில் இல்லையா?" என்றாள் இளவரசி.
"இந்தப் பாழாய்ப் போன கிணற்றுக்கும் உங்கள் மேல் காதல் இளவரசி. எங்கே உங்களை தன்னோடு ஆலிங்கனம் செய்ய உள்ளே இழுத்துகொண்டு விடப் போகிறது என்றுதான்..." என்று இழுத்தான்.
"நீஞ்சுவதில் மீனுக்கு சரியான போட்டி நான். சரி.சரி. அது கிடக்கட்டும். இப்போது அங்கு என்ன நிலவரம்.."
"மன்னனின் பிள்ளை சரியான போகி! மதுவும் மாதுவும் இல்லாமல் அவன் தினமும் காலைப் பொழுதுகளில் கண் விழிப்பதில்லை. மன்னவன் அதற்க்கும் மேல். போன பௌர்ணமி அன்று பதினாறு வயதில் ஒருவளை அந்தப்புரத்து ஆசைநாயகியாக அழைத்து வந்திருக்கிறான். ஆனந்தம் அளிப்பதற்கு காமக்கிழத்தியர்கள் மிகுந்து விட்டார்கள். நாட்டில் மக்களுக்கு நிம்மதி இல்லை. யதா ராஜா ததா பிரஜா. எல்லோரும் மன்னர்மன்னனைப் போல இரண்டு மூன்று என்று போட்டி போட்டுக்கொண்டு மணம் முடிக்கிறார்கள். கள்ளுன்னுகிரார்கள். பெண் சுகம் தேடி அலைகிறார்கள். மந்திரிகள் நாட்டு நலப்பணிகளில் ஊழல் புரிகிறார்கள். படை வீர்களும் சதா சர்வகாலமும் குடித்து கும்மாளமடிக்கிரார்கள். சேடிப் பெண்களை கையை பிடித்து இழுத்து வம்புக்கிழுக்கிரார்கள். குல ஸ்திரீகளுக்கு கூட பாதுக்காப்பு இல்லை."
மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருப்பவனை இமைக்காமல் பார்த்தாள் இளவரசி. சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவள் மௌனம் அந்த இருளைக் கிழித்தது. அவளது கரிய விழிகளை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.


"முந்தாநாள் தங்கள் குதிரை இந்த பகுதியில் மேய்ந்ததைப் பார்த்ததாக எனக்கு தகவல் வந்ததே!" என்று மௌனத்தை கலைத்தாள் இளவரசி.
"உங்கள் தேசத்திற்கு வந்தால் உங்களையன்றி நான் வேறு யாரை பார்க்கபோகிறேன்" என்று கள்ளத்தனமாக சிரித்தான்.
"இல்லை. அந்த கருவூல அதிகாரி மகள் இதே கிணற்றுக்கரையில் நேற்று யாருக்கோ காத்திருந்ததாக வேறு கேள்வி" என்று அவனை துருவும் கண்களோடு பார்த்தாள்.
"நீங்கள் என்னை சந்தேகிக்கிரீர்கள். நான் ஸ்திரீலோலன் என்று நினைக்கிறீர்கள் அல்லவா." என்றான் நெஞ்சு படபடக்க.
"உஹும்.. நினைக்கவில்லை. உண்மை அதுதான். சத்யம் அதுதான்."
"என்ன சொல்லுகிறீர்கள். உங்கள் மீது உள்ள அன்பினால், அபிமானத்தால் என் நாட்டைப் பற்றி கூட சகலத்தையும் உங்களிடம் ஒப்பிக்கிரேனே. உளவு சொல்கிறேன்"
"அதெல்லாம் என்னை மயக்க ஒரு சாகச நாடகம்." என்று சொல்லிவிட்டு சத்தமாக கைதட்டினாள்.
மெல்லிய வெள்ளை ஆடையில் கிணற்றுக்கு மேலே ஒருத்தி வருவது நிழலாடியது.
"வாருங்கள். மேலே சென்று அந்தப் பாவாடை பாவை யார் என்று பார்ப்போம்." என்று அவனை கைப்பற்றி அழைத்தாள். அவன் கைகள் மெல்ல நடுங்கியதும் அதில் வியர்வையின் ஈரமும் அவன் குற்றவாளி என்று இளவரசிக்கு உணர்த்தியது.
மேலேறி அவளைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனான் அவன். கருவூல அதிகாரியின் மகள் அனைத்தையும் இளவரசியிடம் ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தாள்.
"என்ன? இவளை யாரென்று தெரிகிறதா?" என்று வினவினாள் இளவரசி.
 "இல்லை.. உங்களைப் பற்றிதான் இவர்களிடம் நேற்று விசாரித்தேன்.." என்று தடுமாறினான்.
"அவள் வளைக்கரம் பற்றி இழுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு என்னைப் பற்றி விசாரித்தீர்கள். அப்படித்தானே. ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லை.." என்ற இளவரசியின் லேசான அதட்டலுக்கு சற்று தலையை குனிந்து பார்த்தவன் ஒரு சுதாரிப்புக்கு வந்தவனாய், இடுப்பிலிருந்த ஒரு சிறிய பிச்சுவா கத்தியை உருவி காண்பித்தான்.
"இளவரசி. நீ புத்திசாலி. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்னைப் போல் சக்திசாலி இல்லை." என்று இளித்தான்.
இதை முன்னமே எதிர்பார்த்த இளவரசி கொஞ்சம் கூட பதட்டப்படாமல் இருந்தாள். அதிகாரியின் பெண் கண்கள் மருள மிரண்டாள். சிரித்துக்கொண்டே முன்னேறி வந்த இளவரசி அவனை அணைக்கும் தூரத்தில் நெருங்கினாள். அவளது அருகாமையும் அவளின் மேனியிலிருந்து எழுந்த அந்த ராஜ சுகந்தமும் அவன் சித்தத்தை கொஞ்சம் நிலை தடுமாற வைத்ததது. இரு கால்களுக்கு இடையில் தன் காலை நுழைத்து இடறி விட்டாள். கிணற்றின் பாறையிலான படிக்கட்டுகளில் தலை இடித்து சிதறி "ஆ.ஆ..ஆ..." என்ற மரண ஓலத்துடன் மல்லாக்க கிணற்றினுள் சாய்ந்தான்.

*******************

அரைகுறையாக தேவர் பின்தொடர்ந்து சென்று வந்து கக்கியதை வைத்துக் கொண்டு ராணி என்னசெய்வதன்று தெரியாமல் முழித்தாள். அவளுடைய கவலைக்கான காரணமும் அதுதான். சாரையும் சர்ப்பமுமாக ஒரு இளைஞனுடன் பட்டத்து இளவரசி பாழுங் கிணற்றில் சல்லாபிக்கிறாள் என்று சொல்லிவிட்டார் அவர். அவன் வேற்று தேசத்தவன் என்றும் விளக்கி சொல்லியிருந்தார். இன்னமும் உப்பரிகையிலேயே நின்று கொண்டிருந்தாள் பட்டத்தரசி. முதல் ஜாமம் முடிந்து இரண்டாம் ஜாமம் துவங்கியிருந்தது. குளிர்க் காற்றை கிழித்து வந்தது புரவி ஒன்று. துள்ளிக் குதித்து இறங்கி வந்தவன் ராணிக்கு வந்தனம் தெரிவித்தான்.

"வணக்கம். மகாராணி!"
"உம். என்னாயிற்று.."
"மகாராணி ஊர்க் குளத்தில் ஒரு பிரேதம் மிதக்கிறது. தலை சிதறி ரத்த வெள்ளத்தில் கிணற்றில் கிடக்கிறான் ஒருவன். தேவரிடம் விசாரித்ததில் இவனைத் தான் நேற்று இளவரசியோடு பார்த்ததாக கூறுகிறார்."
மிக்க மகிழ்ச்சியோடு இளவரசியின் அரண்மனைக்கு சந்தோஷ நடை போட்டாள் மகாராணி. சேடிப் பெண்கள் ராணியின் வரவை இளவரசியிடம் சொல்வதற்கு உள்ளே சென்றபோது தான் கவனித்தாள் மன்னன் ஏற்கனவே அங்கு இருப்பதை.
"சபாஷ். நீ புலிக்குட்டி என் ராஜாத்தி!!" என்று தோல் தட்டி தன் மகளைப்  பாராட்டினான்.
"அப்பா! நிச்சயம் இது நாம் படை எடுப்பதற்கான சரியான நேரம். நீங்கள் இப்போதே நம் படையை தயார் செய்ய ஆரம்பித்தால் வெற்றி நமக்கு தான்! ஆயுத்தமாகுங்கள். அந்த நாடும் நமதேயாகட்டும்!! "

இருவரின் சந்தோஷத்தில் தானும் போய் கலந்துகொண்டாள் மகாராணி. அந்த இருளிலும் அரண்மனை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒளிர்ந்தது. கண்டவனை காதலித்த இளவரசி நாட்டைக் காத்த இளவரசியானாள்.


பின் குறிப்பு: ஒரு வரலாற்றுப் புனைவு எழுதவேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய அவா. இத்தோடு முடிந்தததா தொடருமா? பார்க்கலாம்.

பட உதவி: http://www.anitasgarden.com
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails