Tuesday, November 29, 2011

அஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு

ஒரு பெரிய கம்பெனியில் முக்கியமான ஒரு இயந்திரம் வேலை செய்யலை. அஞ்சாறு நாளா எல்லோரும் முக்கி முனகிப் பார்க்கிறாங்க அது அசைய மாட்டேங்குது. இதுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தன் இருக்கான். அவனைக் கூப்பிடலாம் ஆனா ஃபீஸ் நிறைய கேட்பான். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.. உற்பத்தி பாதிச்சவுடனே செலவானா பரவாயில்லைன்னு அவனைக் கூப்பிட்டாங்க....

ஒரு அஞ்சு நிமிஷம் கூட பார்த்திருக்க மாட்டான், “அஞ்சுக்கு பத்து ஸ்பானர் குடுப்பா”ன்னான். ஒரு போல்ட்டை ஒரு திருப்பு திருப்பி “உம். இப்ப மெஷினை ஆன் பண்ணுங்க”ன்னான். ஸ்டார்ட் பண்ணினா ஜோரா ஓட ஆரம்பிச்சிடுச்சு.

“சரி..சரி.. பீஸ் ஐம்பதாயிரம் எடுங்க”ன்னான். கம்பெனிக்காரங்களுக்கு பேஜாராயிடுச்சு. “என்னங்க அஞ்சு நிமிஷம் கூட பார்க்கலை. ஸ்பானரை வச்சு ஒரு திருப்பு திருப்பினதுக்கு ஐம்பதாயிரமா?” ன்னு சோகமாக் கேட்டாங்க.

“மூனு நாளா இந்தப் பராப்ளம் இருந்ததே! அப்ப நீங்களே அந்த திருப்பு திருப்பியிருக்கலாமே”ன்னு கேட்டானாம்.

##இதனால் விளங்கும் நீதி என்னான்னா
1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்
2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.
பின் குறிப்பு: பெருசா எழுத முடியலை.  மற்றுமொரு டிட்பிட் பதிவு.
பட உதவி: oceanstateclassifieds.com

Sunday, November 27, 2011

அடங்காதது

 
 
 
 
 
 
 
 
கொட்டித் தீர்த்த
மழை அடங்கியது

இலை சொட்டிய
நீர் அடங்கியது

அர்த்தஜாமம் முடிந்த
கோயில் அடங்கியது

எரிந்து அலுத்த
தெருவிளக்கு அடங்கியது

சப்தம் இரைத்த
வாகனம் அடங்கியது

சிக்னலில் கையேந்திய
பிச்சை அடங்கியது

காதலர்கள் மோகித்த
கடற்கரை அடங்கியது

பண்டம் விற்ற
கடை அடங்கியது

அழுது வடிந்த
டிவி அடங்கியது

பேசி அலுக்காத
ஊர் அடங்கியது

வாசலில் உட்கார்ந்த
செக்கியூரிட்டி அடங்கியது

வாலாட்டித் திரிந்த
தெருநாய் அடங்கியது

பேட்டரி கரைந்த
கடிகாரம் அடங்கியது

நாள் முழுவதும்
அலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!
 
படம்: இணையத்தில் அகப்பட்டது.

Wednesday, November 23, 2011

சுட்டு விளையாடு - ரிலே சிறுகதை

முன் குறிப்பு: ஒரு மாமாங்கத்துக்கு அப்புறமா ஒரு பதிவுக்கு முன்குறிப்பு எழுத வேண்டிய கட்டாயம் இப்போது. மெட்ராஸ்பவன் ப்ளாக் உரிமையாளர் சிவா ஒரு ரிலே கதை எழுதவேண்டும் என்ற அவரது அவாவை ஒருநாள் என்னிடம் தெரிவித்தார். ’சரி’ என்று நான் ஒப்புக்கொண்டேன். க்ளைமாக்ஸ் எழுத பதிவுல ஷங்கரைக் கூப்பிட்டிருக்கிறார் என்று இந்த வரியின் “க்ளை...” அடிக்கும்போதுதான் தெரியவந்தது. சரி ஒரு இழுப்பு இழுத்துப் பார்க்கிறேன். தலைப்பும் முதல் பாகமும் எடுத்துக்கொடுத்த சிவாவின் பதிவு இங்கே.

** சிவாவின் தொடக்கம் **
"இன்னாடி எங்கொடத்துக்கு முன்னால ஒங்கொடத்த வச்சிருக்க. அடிங்கு. அடிக்கடி எனக்கு தொந்துரவு குட்துனே கீற. நாரிப்புடும் நாரி. ஒம் புருஷன் $%$%^^&#. நீ இட்லிய மட்டுமா $%ஃ&$# " என சென்ற வாரம் B ப்ளாக் ராஜி செய்த குழாயடி ஷ்பெஸலாபிஷேகத்தில் அவமானப்பட்டவள்தான் அதே ப்ளாக்கின் கீழ் வீட்டில் வசிக்கும் மகா. மெயின் ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம். சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இருவருக்கும் அவ்வப்போது லேசான உரசல்கள் வருவதுண்டு. அதுவும் ராஜியின் கணவன் சேகர் அரசியலில் வைட்டான ஆள் என்பதால் மகாவை கொஞ்சம் அதிகமாகவே வசைபாடுவாள் ராஜி. மகாவும் சளைத்தவளில்லை. ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காதவள். கணவன் இல்லை. மகன் படிப்பது எட்டாம் வகுப்பு.  

நேற்று: 

ராஜியின் எதிர்வீட்டில் இருக்கும் சந்திரா பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் இட்லி பார்சலை தந்துவிட்டு சென்றாள் மகா. அடுத்த அரைமணி நேரத்தில் "ஐயய்யோ..பீரோல வச்சிருந்த 7,000 ரூவாயக்காணுமே. வூட்டு கதவ தாப்பா போடாம குளிஸ்ட்டு வர்துக்குள்ள யாரோ எத்துட்டாங்களே" என ஹவுசிங் போர்ட் அலற ராஜியின் ஒப்பாரி ஓங்கி ஒலித்தது. "யக்கா. மேட்ரு தெர்மா.  ராஜிக்கா வூட்ல யாரோ பண்த்த சுட்டுட்டாங்களாம்" என்று மகாவிற்கு ப்ளாஷ் நியூஸ் தந்துவிட்டு ஓடினான் பொட்டிக்கடை பாலா. அனைத்தையும் பீடியை வலித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஓணான். வயது 19. ராஜியின் கூச்சலை கேட்டு வெளியே வந்தாள் ரேகா. வயது 21. இருவருக்கும் படிப்பு வாசம் இல்லை. அவ்வப்போது கண்கள் மட்டும் லேசாக மோதிக்கொள்ளும்.

** ஆர்.வி.எஸ் பார்ட்**





ஓணான் நீங்கள் எதிர்பார்த்தபடி ஒல்லியான தேகக் கட்டோடு இருந்தாலும் அஞ்சப்பரில் ஒரு ஃபுல் சிக்கன் ஆர்டர் செய்து தனியாளாய் உள்ளே தள்ளிவிடுவான். ஆமாம். அதற்கு முன்னால் ஒரு ஷீவாஸ் ரீகல் ஹாஃப் வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வரப்போகும் “பவர்” பாண்டி பற்றி இப்போதே சொல்லிவிட வேண்டும். அவன் வந்தால் வேறு கதை எதுவும் சொல்லமுடியாது.

28வது வட்டச் செயலாளராக ஆளுங் கட்சியில் இருப்பதால் முழுநேரமும் கட்சிக் கரை வேட்டியோடு சுற்றும் பாண்டிக்கு இவன் தான் ஆல் இன் ஆல் அல்லக்கை. அவ்வப்போது போதையில் கண் சிவந்தால் கைம்பெண் மகாவை கழுகுப் பார்வையில் கொத்திக் கலைத்துப் போடுவான் பாண்டி.

“டே நாட்டார் கட்ல ஒர் சீர்ட்டு வாங்கு”

“யான்டா அந்த வூட்டாண்ட கல்லு, மணலு, பழுப்பெல்லாம் வந்து இறங்குதே யெஸ்ட்ரா துட்டு ஆவும்ங்கிற மேட்ர அந்த பேமானியாண்ட சொன்னியா?”

“..த்தா... கொசப்பயலே! சரக்கு அல்லாத்தையும் அப்டியே சரிச்சிப்புட்டியே நாங்க இன்னாத்த நாக்க வலிக்கறா?”

”டோம்ரு! சத்தியத்துக்கு ஓடிப் போயி ரஜினி பட்துக்கு நாலு டிக்கிட்டி வாங்கிட்டி வா”

“ஜல்தியா போயி ஒரு ஆட்டோ இட்டாடா.... புள்ள இஸ்கூலு போனும்”

படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து இரவு வாயில் எச்சில் ஒழுக டாஸ்மாக் வாசலில் விழுந்து மட்டையாய் கட்டையை நீட்டும் வரை ஓணான் கம்பெனியில்லாமல் நகராது அவன் தினப்படி வாழ்க்கை.

ஓணான் பீடியை தூக்கிக் கடாசிவிட்டு லூங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டான். காம்பௌண்ட் ஓரம் தண்ணி தூக்கப் போன ரேகாவைக் கபளீகரம் செய்யும் பார்வையோடு நெருங்கினான். அவன் கண்களில் ஃபுல் கேஸ் இருக்கும் கோலி சோடாவை உடைத்தது போல காதல் குபுகுபுவென்று கொப்பளித்தது. ”யம்மா நா இஸ்கூலுக்கு போயாரேன்” மகாவின் மகன் ரஜினி போல தலையைக் கோதியபடி இவர்களைக் கடக்க ஓணான் அவனை மறித்து “இன்னாடா, இன்னிக்கி ஈரோ கணக்கா படா ஷோக்காக் கீறே! ஈரோயின் குஜிலி எதாவது மடிஞ்சிடப்போவுது” என்று ரேகாவைப் பார்த்து இளித்துக்கொண்டே கேட்டான். “ஐயே!..சொம்மாயிரு.” என்று வெட்கப்பட்டவனிடம் “த்தோடா.. ரொம்பத் தான் சிலுத்துக்கிறியே” வம்பிழுத்தான் ஓணான். 

“யார்ரா அங்கின இஸ்கூலு போறவங்கிட்ட வம்பு பண்னிகினு” என்ற மகாவின் குரல் உயர்த்தலுக்கு அவனுக்கு வழிவிட்டு ரேகாவை பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ஓணான். “டே அக்கிஸ்டு இன்னாடா கையில வாச்சி கீச்செல்லாம் தூள் பரத்துது. நாஷ்டா துண்ட்டியா?” என்று பின்னால் வந்து தோளைத் தட்டினான் ’பவர்’ பாண்டி. பாண்டி டைனோசர் போல இருப்பான். இரவு நேர மிலிட்டரி ஓட்டல்களில் தாறுமாறாகத் தின்றுக் கொழுத்திருந்தான். பவர் ராஜியின் அரசியல் புருஷன்.

”அண்ணாத்தே! உன்னிய எங்கெல்லாம் தேட்றது. நைட்டுலேர்ந்து அண்ணி கிடந்து அல்லாட்றாங்க. எவனாது உன்னியப் போட்டான்னு நென்சேன். ஹக்காங்” ஓணான் பரபரப்பாக கேட்டான். ரேகா கையில் இருந்த ”மஞ்சா கலர் பக்கிட்டு”டன் டேங்கடிக்கு ஒதுங்கினாள்.

அடிங்.. கய்தே இன்னத்துக்குடா இம்மாம் பெருசா குரல் உட்றே. நைட்டு வண்ணாரப்பேட்டையில ஒரு பஞ்சாயித்துன்னு இட்டுகினு போய்ட்டானுங்கடா. அங்க ஒரே பேஜாராப் பூடிச்சு”

டீக்கடைப் பக்கம் ஒதுங்கி சிகரெட் பற்ற வைத்த பாண்டியிடம் உரிமையாக ஒன்று வாங்கி கொளுத்தி இழுத்தான் ஓணான். பெர்முடாஸ் போட்ட மெட்ரோ வாட்டர்காரன் ரேகாவின் புடவை விலகிய இடுப்பை ரசித்துக்கொண்டே அவள் குடத்தில் தண்ணீரைப் பீய்ச்சினான். ”பீரோல வச்சிருந்த ஏளாயிரம் காணும்னு அண்ணி சவுண்டு குடுக்குது” என்றதற்கு சலனமில்லாமல் அவனைப் பார்த்தான் பவர்.  பின்பு நிதானமாக சிகரெட்டை ரசித்துக் குடித்தான். புகை வளையம் விட்டான். ஐந்தாறு முறை அவனைச் சுற்றி ”தூ..தூ”வென்று காரித் துப்பிக்கொண்டான்.

”படா மேட்ரு சொல்லியும் அசால்ட்டாக் கீறபா நீ..” என்று பேச்சை ஆரம்பித்தான் ஓணான்.

“எங்கூட்டுல்யே கை வக்கிறதுக்கு காலனில எவ்னுக்குடா அவ்ளோ தெகிரியம். லோக்குலு டேஸ்னுல நம்பாளுதான் இன்ஸ்பெட்டரு. அவராண்ட சொல்லி டவுட்டுல அக்கிஸ்டு நாலு பேரை முட்டிக்கு முட்டி தட்டினா சரியாயிடும்” கொஞ்சம் கொஞ்சமாக காரமாகப் பேச ஆரம்பித்தான் பவர். கோபம் தலைக்கேறினால் ”க்..க்..” என்று கனைக்க ஆரம்பித்துவிடுவான். தண்ணீர் நிரம்பிய குடத்தை இடுப்பில் ஈரத்துடன் ஏந்தி செல்லும் ரேகா ஒரு ஓரப்பார்வையில் ஓணானுக்குக் கொக்கி போட்டாள். இவன் மடிந்து விட்டான்.

”டே டோமரு! இங்க பாருடா. வளிஞ்சது போதும். அந்த ஃபிகருக்குதான் எங்கூட்டுப் பணத்த சுட்டியா” என்று எதிர்பாராத விதமாக திடீரென்று ஓணானின் சட்டையைப் பிடித்தான் பவர். 

“தோ பாருபா. மேலேர்ந்து கைய எடு. எம்மேல எந்த மிஷ்ட்டேக்கும் இல்ல”

“அப்டியே மெறிச்சேன்னா. நீ பெரீய ரீஜென்டாடா”

“புடாக்கு மாறி பேசாதபா. ஓவ் வூட்ல நா கை வைப்பனா”

“அடிங்.. எதுனா பேசுன மெர்சலாப் பூடும்.  நா பாக்கலுன்னு நென்ச்சியா. ம்மால..  அந்த இட்லிக்காரி பையங்கூட உன்கு இன்னாதுடா பேச்சு!”

“அலோ. இட்லிக்காரி பையங் கூட பேசுனா உன்கு என்னாத்துக்கு ஏறிக்குது..” வலது கையை நடுவிரல்கள் அனைத்தையும் மடித்து கட்டையையும் சுண்டியையும் விரித்து சங்கூதும் போஸில் வைத்துக்கொண்டு கேட்டான் ஓணான்.

”யெஸ்ட்ரா ஒரு வார்த்த பேசுன. மூஞ்சியப் பேத்துடுவேன். வாய் வெத்தலபாக்கு போட்டுக்கும். தெர்தா. ”

“சொம்மா உதாரு உடாத. போன வாரம் பீச்சாண்ட உன்னியும் இட்லிகாரியையும் ’சுண்டி சோரு’ சேகரு ஒன்னா பார்த்தானே. எங்களுக்குத் தெரியாதா பின்ன!”

இருவருக்கும் கொஞ்ச கொஞ்சமாய் வார்த்தை தடித்தது. “த்தா...ஓவரா பேசுற” என்று விரலை மடக்கி ஓணான் முகத்தில் பலமாக ’சொத்’தென்று ஒரு குத்துவிட்டான் பவர். கடைவாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ”உம் மூஞ்சில எம் பீச்சாங்கைய வக்கோ. இப்போ நீ பீஸுடா!!” என்று பதிலுக்கு ஓணான் அவன் முகத்தில் இடது கையை வைத்து கீழே தள்ளினான். விழுந்து புரண்டு எழுந்தான் பவர். அப்போது அடித்த காற்றில் அவர்களைச் சுற்றி புழுதி பறக்க ஒரு ஃபைட் சீனுக்கு அந்த காலனி தயாரானது. சண்டை முற்றி இருவரும் ஆடை அவிழ கட்டிப் புரள்வார்கள் என்று ஜனம் கூட்டமாய் வேடிக்கைப் பார்த்தது. ரேகா முன்னால் அவமானப்பட விரும்பாத ஓணான் கைலியை இறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினான்.

பவர் வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டும்போது இடுப்பில் சொருவியிருந்த லைசென்ஸ் இல்லாத ரிவால்வார் கீழே விழ அதைப் பார்த்து பயந்து ஒதுங்கினான் ஓணான். அப்போது.....

****இங்கிருந்து பதிவுல ஷங்கர் கேபிள் சங்கர் க்ளைமாக்ஸைத் தொடருவார்****


பட உதவி: www.thehindu.com

-

அன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்

நல்ல கும்மிருட்டு. வெளியே நசநசவென்று மழை. ஊரடங்கிவிட்டது. நிசப்தமான நிர்ஜனமான வீதியில் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ”யாரிந்த வேளையில்?” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா?” என்று கேட்கிறார். சட்டிப் பானையெல்லாம் கழுவிக் கவிழ்த்து மூன்று நாளாயிற்று. கோயிலில் தெருவில் கிடைத்ததை உண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர் அந்த முந்நாள் செல்வந்த தம்பதியினர். முதியவரின் அந்தக் கேள்வியினால் விதிர்விதிர்த்துப் போகிறார்கள். என்ன செய்வதென்றியாது கையைப் பிசைகின்றனர். வந்தவர் மனம் கோணாது “உள்ளே வந்து அமருங்கள். உணவு படைக்கிறோம்” என்று உபசாரம் செய்து முதல் கட்டில் உட்கார வைத்தார்கள்.

இருவரும் என்ன செய்யலாம் என்று பதறி சமையலறையில் கூடிப் பேசுகிறார்கள். செல்வச் செழிப்புடன் இருந்த காலத்தில் உற்றாருக்கும் ஊராருக்கும் நித்தம் நித்தம் அன்னமளித்த அந்த அம்மையின் உள்ளம் பதறுகிறது. நடைதளர்ந்த ஒரு பெரியவருக்கு அன்னமிட வழியில்லையே என்று மருகுகிறாள். ஆனால் அந்த வீட்டின் பெண்மணி கூர்மதியாள். கணவனை மீறிப் பேசத் தயக்கப்பட்டு சிறிது நேரத்தில் மெதுவாக ஒரு உபாயம் கூறுகிறாள். “நேற்று நமது வயலில் நட்ட செந்நெல் இருக்கிறது. இப்போது எப்படியாவது ஒரு மரக்கால் அந்த நட்ட நெல்லை களைந்து எடுத்துவந்தால் இவருக்கு வயிராற சோறு படைக்கலாம்” என்றாள். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மனையாளின் நுண்ணறிவைப் பாராட்டி, இடையறாது கொட்டும் மழைக்காக தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறார்.


மை பூசிய இருட்டில் வயலுக்கும் வீட்டுக்கும் போய் பழகிய கால்கள் சரியாக அவரது வயலை கண்டடைகின்றன. அந்த சேற்றிலிருந்து துழாவித் துழாவி கணிசமான நெல் விதைகளை எடுத்துவிடுகிறார். பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் அவ்விதைகளை கழுவி எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதே என்று ஓடுகிறார். நெல் கொண்டு வரச் சென்ற கணவன் வரவில்லையே என்று வாசலில் வந்து நிற்கிறார் அந்த அம்மணி. ஈர நெல்லைக் கையில் கொடுத்தவுடன் ஓடிப்போய் அடுப்பிலிட்டு வறுக்கிறார். பின்னர் அதையெடுத்து குத்தி அரிசியாக்கி உளையிலிடுகிறார். “அவருக்கு கறி சமைக்க என்ன செய்வது?” என்று கணவனைப் பார்த்து வினவுகிறார். வெறும் சோற்றை எப்படியளிப்பது என்று அப்போது தான் அவரும் யோசித்தார்.

கொல்லையில் போட்டிருந்த கீரைச் செடிகளை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு வருகிறார் அன்பர் பூசையில் ஈடுபட்டிருந்த அந்தப் பண்பாளர். அந்த ஒரே கீரையை கறியாக்கி, குழம்பாக்கி எல்லாமுமாக சமைக்கிறார் அவர் மனைவி. சாப்பாடு தயாரான அந்த நடுநிசியில் வாசலில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை இல்லாளுடன் சேர்ந்து கூப்பிடுவதற்காக வந்தவருக்கு அதிர்ச்சி. திண்ணையில் அவரைக் காணோம். இவ்வளவு கஷ்டப்பட்டு அமுது சமைத்து அவருக்கு விருந்து வைக்கும் நேரத்தில் அவர் எங்கே போயிருப்பார் என்று குழம்பினார். அவரைத் தேடும் போது....

மனிதநேயமே சமயப் பண்பு என்று விருந்து வைத்த சமய இலக்கியங்களில் வருபவர் இவர் யாரென்று தெரிகிறதா?

விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் அந்த அன்னதானப் பிரபுவின் பெயரைத் தெரிவிக்கவும்.

பின் குறிப்பு:  இந்தக் கதைக்கு லேபிள் கொடுத்தால் கண்டுபிடிப்பது எளிது. க்ளைமாக்ஸும் எழுதாமல் விட்டிருக்கிறேன். கூகிள் படம். கிரெடிட் கொடுப்பதற்கு யூஆரெல் விடுபட்டுவிட்டது.

பின் பின் குறிப்பு: நேற்று எழுதி இன்றைக்கு லேபிள் மற்றும் தலைப்பு மாற்றுகிறேன்.  க்ளைமாக்ஸ் என்னவென்றால் விண்ணிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. அவருடைய சிவபக்தியை மெச்சி உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சியளித்தான் இறைவன்.

-

Friday, November 18, 2011

பிறன்மனை நோக்காப் பேராண்மை

இராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது! ஆச்சரியமாக இருக்கிறதா?



சீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில் வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை செய்ய தனது மந்திரியை அழைக்கிறான்.

சீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.

“அரசே! சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.

அதற்கு இராவணன் “அமைச்சரே! அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.

இராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.

சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.

#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.
பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம்.
-

Sunday, November 13, 2011

யாருக்கு அந்த முறைப் பெண்?


ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம். இந்தக் கதையை இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும். ரொம்பப் புராதனமான கதை சொல்லலாக இருக்கிறது. பரவாயில்லை. மேலே சொல்லுவோம். அந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள். பார்ப்பவர்கள் மயங்கி மூச்சடைக்கும் அழகுள்ள அதிரூப சுந்தரி அவள். எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும் என்ற உலக நியதிப்படி அவளுக்கு மூன்று முறைமாமன்கள் க்யூ கட்டி நின்றார்கள். மூவருமே அவர்களுடைய அக்காவிற்கு ஆத்ம தம்பிகள். இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அந்த அக்கா ஒரு போட்டி வைத்தாள். ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்து “இதை மூலதனமாக வைத்துக்கொண்டு யார் அதிகம் சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கே என் மகள்” என்றாள் சவாலாக.

மூவரும் அந்த நூறு ரூபாயை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினர். இறுதியாக மைசூரில் வந்திறங்கினர். மூத்தவன் ஒரு மாயக் கண்ணாடி வாங்கினான். யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அந்த ஆளைக் காட்டும் கண்ணாடி அது. இரண்டாமவன் ஒரு மரத்தொட்டில் வாங்கினான். அதுவும் ஒரு அதிசயப் பொருள். எங்கே செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கே நம்மை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும். இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. இவற்றினால் அக்காளைத் திருப்திப்படுத்தி அவளது மகளை மணந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.

சின்னவன் கொஞ்சம் விஷயாதி. பொறுமையாக அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு பதுமை விற்கும் கடைக்குச் சென்றான். அதுவும் விசேஷமான பொம்மைதான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் பொம்மை அது. மிகவும் சந்தோஷமாக சின்னவன் அதை வாங்கினான். 

மூவரும் அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு ஒரு மரத்தடியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். திடீரென்று மூத்தவன் தான் வாங்கிய பொருளை சோதித்துப் பார்க்க எண்ணினான். கண்ணாடியைத் தன் முன்னால் விரித்து வைத்துக்கொண்டு தன் அக்கா மகளை நினைத்தான். அப்போது அவன் கண்ட காட்சியால் மூர்ச்சையடைந்தான்.  அக்கா மகள் பிணமாகக் கிடந்தாள். அக்காள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

உடனே பக்கத்திலிருந்த இரண்டாமவன் தனது தொட்டிலில் அண்ணனையும் தம்பியையும் ஏற்றிக் கொண்டு ஊரை நினைத்தான். கணநேரத்தில் தொட்டில் பறந்து வந்து அவர்களை ஊரில் தரையிறக்கியது. தொட்டிலிலிருந்து குதித்து ஓடிய சின்னவன் தனது அபூர்வமான பொம்மையால் இறந்து கிடந்தவளை பிழைக்கவைத்தான். 

கொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ?

பின் குறிப்பு: தலைப்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி. அவரவர் விதிப்படி முறைப்பெண் கிட்டும் என்பதறிக. பேரா.இரா.மோகன் தொகுத்த ”விருந்தும் மருந்தும்” என்ற நூலிலிருந்த வட கன்னட நாட்டுப்புறக் கதை. மூலத்திலிருந்த கதைமொழி இங்கே என் மொழியில். பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு ஆராயாமல் கதையைப் படித்து இன்புற்றமைக்கு நன்றி.

படக் குறிப்பு: பழைய கதையாதலால் cinefundas.com-ல் கண்டெடுத்த சரோஜாதேவி இங்கு அதிரூப சுந்தரியாக வர சம்மதித்தார்.

-

Thursday, November 10, 2011

உம்மா கொடுத்த மழை

கொஞ்ச நாளா திண்ணை ரொம்ப காலியா இருக்கு. அடிக்கடி ப்ளாக் பக்கம் வர நேரமில்லை. இருந்தாலும் மூக்கு முட்டச் சாப்பிட்ட பின்னும் தவறாமல் வாய்க்கு எதையாவது போட்டுக் கொரிப்பது போல முகப்புஸ்தகம் என்னை அடியோடு ஆட்கொண்டுவிட்டது. நண்பர்கள் குழாமும் நன்றாக சத்தம் வர தாளம் தப்பாமல் கும்மியடிப்பதால் கச்சேரி அங்கே களை கட்டுகிறது. சில நாட்களாக அங்கே நண்பர்களுக்காக பகிர்ந்ததை இங்கே உங்களுக்காகவும்.


**************** உம்மா கொடுத்த மழை *************


வங்கக்கரையோரம் மையம் கொண்ட சமீபத்திய புயல் சின்னத்தினால் தெருக்களை படகு விடும் கணவாய்களாக மாற்றிய மழை பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட்.
சென்னையை இறுக்கி அணைத்து
உம்மா கொடுத்தது மழை!
பொறாமையில் பாதாள சாக்கடைக்கு
மூச்சடைத்துப் போய்விட்டது!!

#கவிதையா படிச்சா கவிதை. கவிவாசகமா வாசிச்சா வாசகம்.
##எல்லாம் படிக்கிறவங்க கையில இருக்கு
மழையின் தாக்கம் மனதிற்குள் தாக்கத்தை ஏற்படுத்த என்னிடமும் பேஸ்புக் இருக்கிறது என்று எழுதினேன் இன்னொரு கவிதை. 
ஏதோ
கோபப்பட்ட பொண்டாட்டி
திட்டுவதைப் போல
பாட்டம் பாட்டமாய்
பெய்கிறது மழை

#இன்னுமொரு மழைக் கவிதை
#போன மழைக் கவிதைக்கு எழுதிய “#” வாசகங்கள் இதற்கும் செல்லுபடியாகும் என்பதை அறிக
’#’  வாசகங்களில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!
*****************  அடித்து வி்ளையாடும் ஆசிரியர் ********************
"ஸார் நம்ப முடியவில்லை” என்றேன். அவர் தன் பெண் பிறந்து வளர்ந்ததையும், வளர்ந்த சூழ்நிலையையும் 1500 வார்த்தைகளில் சொன்னார். அவள் எப்படி மாறிப் போனாள் என்பதை விவரித்தார். அதைப் பகுதி பகுதியாக இந்த அத்தியாயத்தில் இறைத்திருக்கிறேன். ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி - பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள்.
#இப்படி வார்த்தைகளால் நான்கு ஆறுகளாக அடித்து விளையாடும் எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யார்னு புரிஞ்சிருக்குமே! எங்க சொல்லுங்க பார்ப்போம்!!!! :-)
  ***************** புத்தக அலமாரி ********************
அரை மணியில் அடுக்கி விடலாம் என்று ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் பெண்டு நிமிர்த்தியது என்னுடைய புத்தக அலமார். அது பற்றிய ஒரு அப்டேட்.
நாலரை மணிக்கு அடுக்க ஆரம்பித்தது இப்போதுதான் முடிந்தது.

ஷெல்ஃபில் குந்தியிருந்த ஆதவன், கி.ரா, சா.க, தி.ஜா,எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,லா.ச.ரா, இரா.முருகன்,சுஜாதா, பாரதி, அ.கா.பெருமாள், புதுமைப்பித்தன், பி.ஏ. கிருஷ்ணன், சு.ரா, அசோகமித்ரன், ஜி.நாகராஜன், மாலன், வாலி, எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன், வி.ஸ.காண்டேகர்,அ.முத்துலிங்கம், கவிஞர் முத்துலிங்கம், இரா.கணபதி, ஜெ.மோ,சாரு, சோ, பா.ரா எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி!

Malcom Gladwell, Richad Dawkins, Martin Gardner, Rashmi Bansal, JULIAN ASSANGE, GURCHARAN DAS, CHARLES MOSLEY (THE ART OF ORATORY) போன்ற ஆங்கில ஆத்தர்களும் VERY VERY HAPPY!!

#எல்லோரையும் மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்த்ததில் எனக்கும் மட்டட்ற மகிழ்ச்சியே!
***************** கண்டீஷன்ஸ் ****************************
”அப்பா! ஒன்னு சொல்லட்டா?”
”என்ன?”
”அடிக்கக் கூடாது”
“......”
“திட்டக் கூடாது”
”......”
“அம்மாக் கிட்ட சொல்லக் கூடாது”
“.....”
“அம்மாக் கிட்ட சொன்னாலும், அம்மா திட்டக்கூடாது”
“.....” (நம்ம கையில இல்லையே!)
“அம்மாவும் அடிக்கக் கூடாது”
“.....” ( அவுட் ஆஃப் அவர் ஸ்கோப்)
“ப்ராமிஸ் பண்ணு”
“.....”
“எம்மேல பண்ணு”
“.....”
“மதர் ப்ராமிஸ் பண்ணு”
”....”

(என் கையை எடுத்து தன் கைமேல் வைத்துக்கொண்டாள்)

”சார்ட் ஓரத்தில லேசா கிழிஞ்சிடிச்சு”

#இந்த சம்பாஷணையில் ஒரு ”என்ன”க்கு அப்புறம் வேற எதுவும் கேட்காத அப்பிராணி இந்த ஆர்.வி.எஸ்
#லொடலொடா என் ரெண்டாங் க்ளாஸ் படிக்கும் ரெண்டாவது. பதில் சொல்லமுடியாத எவ்ளோ கண்டீஷன்ஸ்!!
 என்னுடைய இரண்டாவது பெண்ணின் ஒரு பள்ளிக் காலை நேர கறார் பேச்சு.
*********** கவிச்சக்ரவர்த்தியின் லேட்டஸ்ட் புக் **************
அகஸ்மாத்தாக லக்ஷாதிபதியான ஒருவர் பதிப்பகத்தாருக்கு பின்வருமாறு ஒரு லிகிதம் எழுதினார்:-

அன்புள்ள ஐயா,
தாங்கள் அனுப்பிய கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம், வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவை கிடைக்கப் பெற்றேன். இவர்கள் சமீபத்தில் எழுதிய நூல்களும் வி.பி.பியில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

# Ravi Prakashஅவர்கள் தொகுத்த விகடன் காலப் பெட்டகத்திலிருந்து..
##நல்லவேளை, திருக்குறள் படித்துவிட்டு அந்த தாடி வைத்த ஆளின் அட்ரெஸ் என்ன என்று கேட்காமல் விட்டார்!
### இது துணுக்குதான் :-)
*************** ’ஓய் மாமா’வும் நாராயணனும் ************
”ஓய் மாமா!” அப்டீன்னு ரோட்ல எதிர் சாரியில போற மாமாவைக் கைத்தட்டிக் கூப்பிட்டா சைக்கிள்ல நம்ம பக்கத்தில போற மாமா திரும்பி “என்னைக் கூப்பிட்டியா?” அப்டீன்னு கேட்டாராம். அதுமாதிரி நாராயணன்னு பையனுக்கு பேர் வச்சுட்டு அவனைக் கூப்பிட்டாலும் ஒவ்வொரு தடவையும் வைகுண்டவாசன் தன்னைக் கூப்பிட்டதா நினைச்சுப்பன்.
#ரெண்டு நாளா கார் போக்குவரத்தில சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரோட ஸ்ரீமத் பாகவத சப்தாகம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.
##பக்தி மார்க்கத்தில் பகவன் நாமாவை எப்படிச் சொன்னாலும் அவனை அடையலாம் என்பதற்கு தீக்ஷிதர் சொன்ன உதாரணம்.
###சிரிப்பை வரவழைத்தாலும் எவ்ளோ பெரிய உண்மை!
**************** கூண்டுக் குரங்குகள் *****************
 மானேஜ்மெண்ட் கதைகளில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகளின் கதை ஒன்று உண்டு.

மூன்று குரங்குகளைக் கூண்டில் அடைத்து மேலே மூடியைத் திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் குரங்குகள் மேலே தப்பிக்க ஏறும்போதெல்லாம் குழாய் மூலம் கொதிக்க கொதிக்க வெந்நீர்ப் பாய்ச்சுவார்கள். குரங்குகள் சூடுபட்டு பொத்தென்று கீழே விழுந்துவிடும். சிறிது நாட்களுக்குப் பிறகு வெந்நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தினாலும் குரங்குகள் மேலே ஏறும் பழக்கத்தை விட்டுவிடும்.

ஒரு நாள் ஒரு புதிய குரங்கை கூண்டுக்குள் விடுவார்கள். குரங்கு தப்பித்துப் போக எண்ணி கூண்டுக்கு மேலே ஏறும். ஏற்கனவே கூண்டுக்குள் சூடுபட்ட குரங்குகள் புதிய குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து “ஏ! மூடனே! ஏறாதே.. கொதிநீர்ப் பாய்ச்சுவார்கள்” என்று எச்சரிக்குமாம்.

சில புதியகுரங்குகள் மறுபேச்சு பேசாமல் சமர்த்தாக உட்கார்ந்துவிடும். சில விஷமக் குரங்குகள் முயற்சி செய்யும்.

#இதில் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறார்கள். புரிகிறதா?
பின் குறிப்பு: இந்த திண்ணைக் கச்சேரி ஒரு புகழ்பெற்ற தினசரியில் தொடர வாய்ப்பு வருகிறது. அது வாய்த்தால் இனி வாரம் ஒருமுறை இது இங்கே பிரசூரிக்கப்படும்.
படக் குறிப்பு: மேற்படி படம் அடியேனால் எங்கள் அலுவலக வாசலில் பிடிக்கப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பொளந்து கட்டியது அடை மழை.
-

Monday, November 7, 2011

கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்

”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா? அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.

விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.

சிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.

எனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .

  1. தேவர் மகன்
  2. மகாநதி
  3. மைக்கேல் மதன காம ராஜன்
  4. நாயகன்
  5. குணா
  6. அவ்வை ஷண்முகி
  7. காக்கிச் சட்டை
  8. சிகப்பு ரோஜாக்கள்
  9. இந்தியன்
  10. உன்னால் முடியும் தம்பி


பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார். அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பத்துப்பாட்டும் போட்டுடுவோம்.

டிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...

-

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....

தெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...

ராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...

நீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்... 


அம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...


ஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம்  பாடல்....




அமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....

கௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...




கிண்ணத்தில் தேன் வடித்து....


-

Friday, November 4, 2011

மக்கு நான் கொக்கல்ல


சலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.

பொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் "தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.

நாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை கேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.

கோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ?” என்று கேலியாகக் கேட்டாள்.

ஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம். 

“அம்மா! நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.

 ”முனிவரே! நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

அம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.

கசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.

மிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.

வீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”

இதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.

“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.

இவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே! அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.

அதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்?” என்று கேட்டார்.

“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.

மேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.

இப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.

பின்குறிப்பு: மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன்.

பட உதவி: mbp.photoshelter.com

-

Tuesday, November 1, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்

ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கெட், ஐம்பது காசு கடலை உருண்டை, சரம் சரமாக பல டினாமினேஷன்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஏ.ஆர்.ஆர் மற்றும் நிஜாம் பாக்குப் பொட்டலங்கள், ஹால்ஸ் டப்பா, பின் பாகத்தில் பஞ்சு வைத்த மற்றும் அல்லாத பல கம்பெனி சிகரெட்டுகள், சணல் கயிறில் நெருப்பு, உள்ளே ரெண்டு ப்ளாஸ்டிக் டேபிள் மற்றும் நாலைந்து ஸ்டூல்கள் என்று முன்புறம் பாய்லர் வைத்த டீக் கடைகளுக்கு மாடர்ன் நாமகரணம் ஸ்நேக் பார்! மன்னையில் முக்காலே மூணு வீசம் இளைஞர்கள் திருட்டு தம் அடிக்கத் தேடும் இடம் அது. “காலிப் பய. அவன் சிகிரெட்டு பிடிப்பான்” என்று உற்றாரும் ஊராரும் தூற்றக் கூடாது என்று மறைவிடம் தேடுவோர் நாடுமிடம் ஸ்நேக் பார்.

பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் எதிரில் ஒரு சேட்டன் ஸ்நேக் பார் வைத்திருந்தார். பல பேருக்கு அதுதான் ஆஸ்தான ’தம்’மிடம். சேட்டன் கட்டையாய் பூப்போட்ட கைலி கட்டியிருப்பார். சேரநாட்டு அநேக சேட்டன்மார்கள் போல முன்பக்கம் சொட்டை வாங்கி, சட்டையில்லாமல் இருப்பார். அவரே டீ மாஸ்டர், அவரே சப்ளையர். எனது நண்பர்களில் பலர் அவருடைய டீக் கஸ்டமர்கள். “எந்தா!” என்று விளிக்கும் சட்டையில்லாத கைலிச் சேட்டனின் கட்டஞ்சாயாவில் பல இளைஞர்கள் கவிழ்ந்திருந்தார்கள். ஏனைய வென்ட்டிலேஷன் இல்லாத கீக்கிடமான ஸ்நேக் பார்களைவிட கொஞ்சம் விஸ்தாரமானது அந்த மலையாள ஸ்நேக் பார்.


அந்நாளில் ஜனசந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில் மலிந்திருந்தன ஸ்நேக் பார்கள். “மாப்ள” என்று தோளோடு தோள் சேர்த்து ஓருயிர் ஈருடலாக உட்புகுவர். ஒரு அரைமணி நேரம் புகை சூழ்ந்த தேவலோக வாசம். கடைசியில் ஒரு ஹால்ஸ் அல்லது பாக்குப் போட்டுக் கொண்டு வெளிவரும் வேளையில் அவர்கள் முகங்களில் ஜொலிக்கும் திருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு இவ்வையகத்தில் வேறெங்கிலும் கிடைக்காது.

ஏட்டனின் பாருக்கு தொழில் போட்டியாக அதே ஏரியாவில் இனிய உதயமானது இன்னொரு ஸ்நேக் பார். எஸ்.பி.பியும் ராஜாவும் கைக் கோர்த்துக்கொண்டு அவர்களுக்காக உழைத்தார்கள். வெளியே தைரியமாக சிகரெட்டும் கையுமாக திரியும் தீரர்களைக் கூட கட்டி இழுத்தது தேன் சொட்டும் பாடல்கள். சில சமயம் காது கிழியும் பாடல்களுக்கிடையில் ஒரு சிகரெட்டை வாங்கி விரலிடுக்கில் சொருக்கிக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்போரும் உண்டு. ஏதோ தயிர் சாதத்துக்கு எலும்பிச்சங்காய் ஊறுகாய் போல டீக்கு தொட்டுகொள்ள சிகரெட்டா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியுற்று “கண்ணு வழியா புகை விடட்டா” என்றான் கிங்ஸ் சிகரெட் போல நெடுநெடுவென வளர்ந்த நண்பன் ஒருவன்.

புதியதாய் அரும்புமீசை முளைத்து குறும்புப் பார்வையுடன் ஆணாகி ஆளாகி வரும் விடலைகளுக்கு சிகரெட் போன்ற லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள். “அக்கும்..ஹுக்கும்” என்று இருதயம் வெளியே வந்து விழும்வரை இருமி உள்ளுக்கு இழுப்பார்கள். திருட்டு தம் கோஷ்ட்டிகளின் புகலிடமாகவும் கூடாரமாகவும் செயல்பட்டுவந்த ஸ்நேக் பார்களில், தான் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் பிச்சையெடுத்து காலில் விழுந்து காசு பொருக்கிக்கொண்டு வந்தாலும் உருப்படியாக வாய்பொத்தி சமர்த்தாக இருக்கும் நண்பனிடம் “மாப்ள! தம் வேணுமா” என்று விருந்தோம்பி தனக்கொரு இழுப்பு அவனுக்கொரு இழுப்பு என்று ’தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் காத்து நட்புக்கு இலக்கணமாக நின்ற நண்பர்களை நினைக்கும் பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிறது.

இதற்கு மேல் இந்த தம் பர்வத்தை விலாவாரியாக எழுதி, நீங்கள் என்போன்று இப்போது காபி மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற பயத்துடன் முடிக்கிறேன். வணக்கம்.

பின் குறிப்பு: சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது, அதைப் பற்றி படித்தல் அதைவிட தீங்கானது என்றெண்ணி இதைப் படிக்காமல் ஸ்க்ரால் பாரை உருட்டி கடைசி வரை நீங்கள் வந்துவிட்டால், மேலே போய் ஒருக்கா படித்துவிடுங்களேன்.


பட உதவி: http://flashnewstoday.com/
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails