Showing posts with label மன்னார்குடி டேஸ். Show all posts
Showing posts with label மன்னார்குடி டேஸ். Show all posts

Tuesday, September 15, 2020

மத்யமா செகண்ட் க்ளாஸ்

"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி.." என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் தெரியவில்லை. "ஈ...." என்று முப்பத்திரெண்டும் தெரிய 'மய்யமாக' இளித்துவைத்தேன். வாயைத் திறந்தால் பொறிக்குள் எலியாகச் சிக்கிக்கொள்வோம் என்று தெரியும். ஒன்றிரண்டு நாள்கள் சென்ற பிறகு காலையில் கல்லூரி முடிந்து வந்து மத்தியான்ன போஜனம் ஆகிக்கொண்டிருக்கும் போது சாதத்துக்குக் கெட்டித் தயிர் இரண்டு கரண்டி ஊற்றிய பாட்டி முகத்தருகே குனிந்து கேட்டாள்.


"தம்பி.. தெக்குத் தெருவில ஒரு வாத்யார் ஹிந்தி கத்துத்தரார்... அவரண்ட  வாசியேண்டா... நாளைக்கு வடக்கே போனா பிரயோஜனமா இருக்குமோல்யோ?"

இந்த வேதாளத்தைப் பன்மொழி வித்தகனாக்கும் முயற்சியில் சற்றும் தளராமல் விக்கிரமாதித்த கிழவியாய்க் கேட்டாள். பல்லிடுக்கில் சிரிப்பு தொங்கியது. தலையைத் தூக்காமல் தட்டைப் பார்த்துச் சாப்பிட்டேன். கை அலம்ப எழுந்திருக்கும் போது.....

"பாட்டீ!  காலேஜ் போயிட்டு ரெண்டு மணி மூணு மணிக்குதான் வரேன்.. இதுக்கும் மேலே எங்கே போயி படிக்கிறது? நேரமேயில்லையே..."

"வடகரை மணி டீக்கடை வாசல்ல இறங்குடா.. அப்டியே காலாற நடந்து போனின்னா தெக்குத் தெரு ஹிந்தி வாத்யார் ஆத்துக்குப் போயிடலாமே... ஒரு மணி வாசிச்சுட்டு வந்தியாக்க... சூடா தோசை வார்த்துப் போடறேன்... அப்புறமா நீ ஒன் மட்டையைத் தூக்கிண்டு ஆடக் கிளம்பலாம்..."

என்னுடைய நாளின் முழு ப்ரோக்ராமும் பாட்டி தன் உள்ளங்கையில் வைத்திருந்தாள்.

"ப்ராக்டிகல்ஸ் வரும்... செமஸ்டர் வரும்... அப்போல்லாம் படிக்க முடியாதே... அரைகுறையாயிடுமே..."

மனசுக்குள் பச்சைத் தமிழனாய் ஹிந்தி எதிர்ப்பு அலைமோதியது. அது ஹிந்திக்காக அல்ல. எதை அதிகப்படியாக படிக்கச் சொன்னாலும் பருவ வயது களியாட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்பதால் வரும் நொண்டிச் சாக்கு. ஹிந்திக்குள் தலையை விட்டுவிட்டால் ஊர் சுற்ற முடியாது. ஏக் தோ தீன் நினைவுக்குள் வந்து படுத்தி தகிடதகிமி என்று ஆடியது.

"போடா பைத்தாரா... (பயித்தியக்காராவின் பாட்டி பாஷை மரூஉ).. இப்ப மட்டும் எப்பப் பார்த்தாலும் பாட பொஸ்தகம் வாசிச்சிண்டு இருக்கியாக்கும்... எப்போப்பார்த்தாலும் வடக்குத் தெரு மதில்கட்டை... இல்லே மட்டையாடக் கிளம்பிடுவே.. இல்லேன்னா ஸ்நேகிதாளோட ஊர் மேய வேண்டியது... இராப்பகலா பொஸ்தகத்தை கீழே வைக்காம படிக்கிறியாக்கும்... உருப்படியான வேலை பாருடான்னா... சாக்குபோக்கு சொல்லிண்டு திரியறே... வர்ற அமாவாசைலேர்ந்து போ.. நல்ல நாள்.. வெத்தலை பழம் பாக்கு வாங்கிண்டு போய் அவருக்கு வச்சுக்கொடுத்து நமஸ்காரம் பண்ணிட்டு ஹிந்தி வாசிக்கிற வழியைப் பாரு..."

அவ்ளோதான். தீர்ப்பு எழுதிவிட்டாள். வீட்டுக்குள்ளேயே ஹிந்தித் திணிப்பு. பாட்டியைப் பகைத்துக்கொண்டு ஹரித்ராநதியில் காலம் தள்ள முடியாது. அவளது உத்தரவுக்கு கீழ்ப்படியும்வரை தொணதொணவென்று வார்த்தைகளாலேயே சுள்சுள்ளென்று அடிப்பாள். எல்லை தாண்டும் சீனாவே சாரதா பாட்டியின் வாய்க்குப் பயப்படுமளவிற்கு ரேஸர் நாக்கு. கன்னாபின்னாவென்று கண்டிப்பு கறார் பேர்வழி.

தெற்குத் தெரு ரவி வீட்டிற்கு நாலைந்து வீடு தாண்டி ஜைனன் மல்லிகார்ஜுன் இருந்தான். தெற்கு தெருவில் கிரிக்கெட் விளையாடும் நான்கு பேரில் அவனும் ஒருத்தன். "மல்லி... அடுத்த ஓவர் போடு" என்றால், கை வைத்த பனியனோடு வேகப் பந்து வீசுவான். இல்லை. எறிவான். ஏதோ கை கழன்று போவது போல சுழற்றி எறிவான். அவன் வீட்டிலிருந்து ஒரு படித்துறை தாண்டி ஹிந்தி வாத்யார் வீடு.

"ஹிந்தி சார் எத்தனை மணிக்கு இருப்பாரு?" என்று எங்கள் கிழக்குத் தெருவில் படிக்கும் ஏழாம் வகுப்புச் சிறுமியிடம் கேட்டேன்.

"ஹிந்தி சார்னு சொல்லக்கூடாது. அவரை அத்யாபக்னு" கூப்பிடணும் என்று சொல்லிச் சிரித்தது. ஐயகோ! அடிப்படையே தெரியவில்லையே என்று எனக்குப் பக்கென்று இருந்தது. கண்ணாமுழி பிதுங்கி வெளியே விழ ஒரு வழிசல் சிரிப்பை உதிர்த்தேன்.

"காலம்பரலேர்ந்து வீட்லதான் இருப்பாரு... சாயந்திரமா கடைத்தெருவுக்குப் போவாரு" என்று அவரது தினப்படி செயல்திட்டத்தைத் தெரிவித்தது அந்தப் பொடிசு.

வெற்றிலைப் பாக்கு பழம் தட்சிணையுடன் அத்யாபக்கை அவர் வீட்டு திண்ணையில் சந்தித்தேன். நமஸ்காரம் செய்தேன்.  நறுநெய் தடவி மீசை வளர்த்திருப்பார். ஹிந்தி பாரதியார். ஒரு கோணத்தில் ஐயனார் கோயில் வாசலில் இருக்கும் மதுரை வீரன் சிலை மாதிரியே அச்சு அசல் இருப்பார். அதே உயரம். அவருக்கு கண்கள் இரண்டும்  இரண்டு பக்கமும் பார்க்கும் வசதியிருந்தது.

"ம்... அந்த பொஸ்தகத்தை பிரிங்கோ" என்று அவர் சொல்லும்போது வாயிலிருந்து பிரிபிரியாய் வெற்றிலைச் சக்கை சிதறும். திண்ணையில்தான் வகுப்பு. ஏக் காம் மே... ஏக் கிஸான் சொல்லி தலையில் குட்டு வைக்கல்லாம் மாட்டார் என்ற தைரியம் எனக்கிருந்தது. கதரில் V கழுத்து ஜிப்பாவும் அரைக்கு வேஷ்டியும் கட்டியிருப்பார். அவருக்கு திருமணமாகாத ஒரு மகள் இருக்கிறார் என்பது தெருப் பசங்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிலைவாசல் மரக்கதவு எப்போதும் உள்ளே தாளிடப்பட்டிருக்கும். வகுப்புக்கு கொஞ்சம் முன்னால் போனால் கூட கதவைத் தட்டி திண்ணையில் காத்திருந்தால் வெற்றிலை மென்றுகொண்டே அவர் உருவம் நுழையுமளவிற்கு மட்டும்... அவ்ளோதான்.. தம்மாத்தூண்டு.... கதவைத் திறந்துகொண்டு வந்து ஒரு ஈ கொசு உள்ளே போவதற்குள் பட்டென்று சார்த்திவிடுவார். அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு ஜாகை இருக்கிறதென்ற நினைவே உங்களுக்கு எழாது! :-)

ஒருநாள் கல்லூரியிலிருந்து வரும்பொழுதே தாகமாக இருந்தது. ஹிந்தி வகுப்புக்குச் சென்றுவிட்டேன். பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். விக்கல் வருமளவிற்கு தொண்டை வறட்சி. கமறுகிறது. வார்த்தைகள் பிசிறடிக்கின்றன.

"சார்! குடிக்க தண்ணீ வேணும்... தாகமா இருக்கு" என்றேன் தயக்கத்துடன்.

தலையை உள்பக்கம் திருப்பி "நீலு...." என்று ஏதோ தெலுங்கில் சொன்னார். நிமிஷத்திற்குள் ஒரு எவர்சில்வர் சொம்பு மட்டும் கதவிடுக்கில் தெரிந்தது. அந்தரத்தில் தெரிந்த சொம்பை அலேக்காக வாங்கி என்னிடம் கொடுத்து என் தாகம் தணித்தார் ஆசிரியர்பிரான். "ம்... அடுத்த பக்கம்..." என்று பாடம் நடத்துவதற்குள் நுழைந்துவிட்டார்.

இதற்குள் நான் அங்கே ஹிந்தி பயிலச் செல்வது தெப்பக்குளத்தின் நான்கு கரைக்கும் சில விஷமிகளால் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் மல்லியின் கை இருக்கும் என்று எனக்கொரு சம்சயம். ஏதோ ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வி படிப்பது போல ஸ்நேகிதச் செல்லங்கள் என்னிடம் விஜாரிப்பதற்கு ஆர்வமாக மொய்த்தார்கள்.

"வெங்குட்டு... அங்கே அவர் வீட்ல ஒரு பொண்ணு இருக்குமேடா" என்று சகஜமாய் தோளில் கைப்போடு ஒருவன் ஆரம்பிக்க மூன்று பேர் சூழ்ந்துகொண்டார்கள். திண்ணை என்ற எல்லை தாண்டாமல் இருக்கும் சௌஜன்யமான பயங்கரவாதி நான் என்னும் விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் ஹிந்தி படிக்கச் செல்வதை விட ஏதோ கணக்குப் பண்ண செல்கிறேன் என்று நினைத்துக்கொண்டார்கள். நான் தண்ணீர் கேட்க ஒரு எவர்சில்வர் சொம்பு அந்தரத்தில் பறந்து வந்த கதையை எப்படி நான் விவரிப்பேன்!? அழுகையை அடக்க வாய்க்குள் தோள் துண்டைத் திணித்து அழும் கருப்பு வெள்ளை படம் சிவாஜி போல திக்பிரமையுடன் நின்றிருந்தேன். தினமும் நான் எழுதிக்கொண்டு வரும் எனது ஹிந்தி நோட்டிலிருந்து அப்போதே ஐம்பதை எட்டியிருந்த என் பவானி சித்திப் படியெடுத்துப் படிப்பாள்.

"படிக்கறத்துக்கு வயசெல்லாம் இடைஞ்சல் கிடையாது... பார்த்தியா... பவானி உங்கிட்டேயிருந்து வாங்கி படிக்கிறா" என்று ஒரு நாள் பாட்டி தனது விசேட குறிப்பை என் தலையில் குட்டுவதைப் போன்று வெளிப்படுத்தினாள். அடுத்தது பாட்டியும் ஹிந்தி படிக்கக் கிளம்பிவிடுவாளோ என்று எனக்குள் உதறல் எடுத்தது.

முதலில் வந்த ப்ராத்மிக் பரீக்ஷை மிகவும் சுலபமாக இருந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தால் கேள்வியில் வந்திருக்கும் வார்த்தைகளை இடம் வலமாகவும் வலம் இடமாகவும் மாற்றிப்போட்டு எழுதினால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று யுக்தி சொல்லிக்கொடுத்தார்கள். என்னால் இயன்ற அளவு கந்தர்கோலமாக jumbled sentence ஆக எழுதினேன். இந்தப் பரீக்ஷையில் தோற்று விட்டால் "கடங்காரனுக்கு அவன் படிப்புதான் வரலேன்னு பார்த்தா ஹிந்தியும் வரலையேடி" என்று பாட்டி ஆற்றாமையில் ஒரு டோஸ் விட்டுவிட்டு "இனிமே இந்த பிரஹஸ்பதிக்காகக் காசை வீணடிக்கவேண்டாம்... இது பேசாம ஊர் சுத்தவே போகட்டும்" என்று ஹிந்தியை நிறுத்திவிடுவாள் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் தெய்வம் வேறுவிதமாக முடிவெடுத்தது. பிராத்மிக் பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்று ஹிந்தி வாத்யார் என் தோளில் தட்டாத குறையாக பெருமையாகச் சொன்னார். நான் அப்போதே ஹிந்தி பண்டிட் ஆகிவிட்டது போல பாட்டிக்குப் பரம சந்தோஷம்.

மத்யமா என்ற ஹிந்தியின் ரென்டாம் வகுப்பு தொடங்கியது. அரை மணி ஒரு மணி பாடம் நடக்கும். ப்ராத்மிக்கை விட கொஞ்சம் கஷ்டம். வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஜாலமெல்லாம் காட்டமுடியாது. வாசிக்கும் போதே திணறி... தெருவில் எனக்கு ஹிந்தியில் சீனியர் சிறுமியிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். எல்லாம் பாட்டி கழுத்தைப் பிடித்துத் தெருவில் தள்ளியதால் நடந்த விபரீதங்கள். மத்யமாவில் இரண்டாம் இடமே கிடைத்தது. ஆனால் ஹிந்தியில் என்ன எழுதியிருந்தாலும் எழுத்துக்கூட்டிப் படிக்கும் பேராற்றல் வந்துவிட்டது. அலுவலக விஷயமாக புதுடில்லிக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஒரு முகவரி தேவடுவதற்காக அலைந்த போது நான் எழுத்துக்கூட்டிப் படித்துச் சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். நண்பர் அசந்துவிட்டார்.

"உங்களுக்கு ஹிந்தி சுத்தமா தெரியாதா?" என்று முதலில் அவரிடம் கேட்டறிந்துகொண்டேன். கழுத்து சுளுக்கும்வரை தெரியாது என்று ஆட்டினார். எனக்கு மொழிச் சுதந்திரம் கிடைத்தது போல ஆகிவிட்டது. பின்னர் டில்லியில் இருந்த இரண்டு நாள்களும் தைரியமாக எல்லா பில்போர்டுகள், துண்டுச் சீட்டுகள், லோக்சத்தா தலைப்புச் செய்திகள் என்று ஹிந்தியில் வாசித்துக்காட்டி பிரமாதப்படுத்திவிட்டேன். அங்கேயே ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆஃபீஸ் நண்பர்கள் எதிரே "ஆர்விஎஸ்... ஹிந்தி அபாரமாகப் படிப்பான்" என்று என் தோளைத் தட்டி அந்த நண்பர் ஒரு செய்தித்தாளைக் கொடுத்து படிக்கச் சொன்னபோது என் கண்களில் "தெய்வாதீனமாக" தூசி விழுந்து மறைத்துவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டே அமுக்கமாக அறையை விட்டு வெளியேறி விட்டேன். படித்திருந்தால் அந்த அறையில் இருந்தவர்கள் கண்களைக் கசக்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்திருக்கும்.

ரொம்ப வருஷமாக என்னிடம் யாராவது "உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?" என்று கேட்டால் "ஹிந்தி தெரியாது போடா" என்று அதிகப்பிரசங்கித்தனமாக பதில் சொல்லாமல் "மத்யமா செகன்ட் க்ளாஸ்" என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வேன். சங்கீதாவும் என் அக்காள் கீர்த்திகாவும் அத்யாபிகாக்கள் என்பதை இந்தச் சமூகத்திற்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்! :-)


#மன்னார்குடி_டேஸ்
#ஹிந்தி_ட்யூஷன்
#புது_எபிஸோட்

Sunday, January 5, 2020

கர்மயோகி சாரதா

"தல ஒரேடியா வலிக்கறதுடா..." என்றாள் பவானி சித்தி .
டாக்டர் க்ளினிக்கில் அடியெடுத்து வைத்ததும் கண்களைச் சாய்த்து "இப்போ பரவால்லே போல்ருக்கு...." என்றாள்.
"முன்னாடி அவர் கொடுத்த மாத்திரையெல்லாம் சாப்டியோ"
"ம்.... இப்ப சரியாயிடுத்து.. இனிமே மாத்திரை வேண்டாம்..."
"குணத்துலே அப்படியே பாட்டியை உரிச்சு வச்சுருக்கே...." என்ற எனக்கு என்னுடைய அரைடிராயர் மன்னார்குடி நாட்களும் சாரதா பாட்டியும் கண்ணுக்குள் காட்சிகளாக ஓட ஆரம்பித்தார்கள். பவானி சித்தியை டாக்டர் பரிசோதிப்பதற்குள் எம்பளதுகளின் மன்னையை எட்டிப் பார்ப்போம் வாருங்கள்! 
******* இப்போது sepia modeல் மன்னை **********
"சாயரக்ஷை ஆறரைக்கெல்லாம் வெங்கடாஜலம் வண்டிக்குச் சொல்லுடா.." என்று கோபாலன் திருவிழா இல்லாத காலத்தில் சாரதா பாட்டி என்னிடம் சொன்னால் ஒரு வாரமாகத் தேகத்தோடு மல்லுக்கட்டி பின்னர் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று அர்த்தம். "சந்திரசேகர் டாக்டராத்துக்குப் போயிட்டு வருவோம்". காலையிலேயே இந்த முடிவு எடுக்கப்படும்.
"வெங்கடாஜலம் ராங்கி பண்ணிக்கிறானே... வேற வண்டி எதாவது வச்சுக்கலாமே" என்று ஒரு முறை பவானி சித்தி சொன்னாள்.
"ச்சே...ச்சே...அவன் அப்பாவிடி...... புள்ளைக்குட்டி கூட கிடையாது... போனாப் போறான்.." என்பாள் பாட்டி இரக்கசுபாவத்தோடு...
ஹரித்ராநதி மேல்கரையின் பின்னால் உள்ள சந்தில் வெங்கடாஜலம் வீடு. நாலாபுறமும் முள்வேலிக்குள் ஒரு அழகான குடிசை வீடு. வாசலில் கறுப்பு நிறத்தில் வயிற்றில் வெள்ளைக் கலரில் திட்டுத் திட்டாய்த் தீவு படங்களோடு காளை புல் மேய்ந்துகொண்டிருக்க பச்சைக் கூண்டு வண்டியின் நுகத்தடி புல்தரையை முத்தமிட்டபடி முன்னால் சாய்ந்திருக்கும்.
"வெங்கடாஜலம்... வெங்கடாஜலம்..." என்று ஒன்றிரண்டு முறைக் கூப்பிட்டால் தலையில் முண்டாசுடன் சுருங்கிய மார்போடு குடிசையிலிருந்து எட்டிப்பார்ப்பார். வாமன ரூபம். அரையில் வேஷ்டிக்கு மேலே குண்டான பச்சை பெல்ட். வெற்றிலைக் குதப்பும் வாய். வலது கண்ணில் பூ விழுந்திருக்கும். உதட்டில் இருவிரல்களைப் பிரித்து வைத்து வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு..
"ம்... எங்க போவணூம்?"
"டாக்டராத்துக்கு... சாயங்காலம் ஆறரைக்கு..."
"ம்... சரி வரேன்..."
வண்டிக்கார வெங்கடாஜலம் வார்த்தைகளை அளந்து மணிரத்ன சுருக்கமாகப் பேசுவார்.
"என்னமோ வரவர உடம்பு சொன்னத்தைக் கேக்கமாட்டேங்கறதுக்கா... டாக்டராத்துக்குப் போயிட்டு வரேன்..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆறரைக்கு வண்டி ஏறுவாள். சாரதா பாட்டிக்கு ஆம்பிளைத் துணையாக நானும் பிடித்துக்கொள்ள பவானி சித்தியும் அந்த பியெம்டபிள்யு கணக்காக வந்து நிற்கும் வெங்கடாஜலம் ஒத்தை மாட்டுவண்டியில் ஏறுவோம்.
வெங்கடாஜலம் வண்டியோட்டும் அழகே தனி. வண்டிக்கு ஆக்ஸிலேட்டர் கொடுக்க வேண்டும் என்றால் கையிலிருக்கும் சாட்டையால் நுகத்தடியை இணைக்கும் ஏர்க்காலில் "சொளீர்...சொளீர்" என்று இரண்டு முறை சுழற்றி அடிப்பார். காளை வேகமெடுத்து ஜல்ஜல்லென்று தேரடி தாண்டும். வண்டிக்குள் வைக்கோல் போடப்பட்டு அதன் மேலே உரசாக்கில் தைத்த ஒரு மெத்தை போட்டிருக்கும். அதையெல்லாம் மீறி டிராயருக்குக் கீழே பரப்பியிருக்கும் வைக்கோல் சுருக் என்று தொடையில் குத்துவது அக்குபஞ்சரில் எந்த வியாதிக்கு என்று விவரிக்க இயலாத அனுபவம்.
"வெங்கடாஜலம்... மாட்டு வண்டி குதிர வண்டியாப் போறதே... மொள்ளமாவே போவேமே... டாக்டர் அங்கேயேதான் இருப்பார்...."
பாட்டியின் இந்த வார்த்தைக்கு வெங்கடாஜலத்தின் கட்டளைக்கு முன்னரே மாடு கட்டுப்படும். "ஹோ..ஹோ...ஹோய்..." என்று வெங்கடாஜலம் ராகமிழுத்து கயிற்றை இழுக்கும்போது மூன்றாம் தெருவில் சோமேஸ்வரய்யா வைத்தியசாலை என்ற பேருந்து நிறுத்தம் எதிரிலிருக்கும் சந்திரசேகர் டாக்டராத்துக்கு வந்திருப்போம். சோமேஸ்வரய்யா, டாக்டரின் அப்பா. மிகவும் பிரசித்தமான மருத்துவர்.
சீனு மாமாதான் கம்பௌன்டர். நெற்றியில் ஸ்ரீசூர்ணமும் அரைக்கை சட்டை வேஷ்டி. வெந்நீர் உலைகொதிப்பது போல தளபுளக்கும் பாத்திரத்தில் இஞ்செக்ஷன் சிரிஞ்சிகளை சுத்தப்படுத்த போட்டிருந்து உள்ளேயிருந்து "ட்ட்ரிரிரிங்க்" என்ற பஸ்ஸருக்கு ஒரு சிரிஞ்சை கிடுக்கியில் எடுத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் செல்லும் சீனு மாமாவிடம்....
"சீனு.... நாங்க எப்போ?" என்று கேட்பாள் சாரதா பாட்டி. பக்கத்தில் கூத்தாநல்லூரிலிருந்து புர்க்கா அணிந்தவர்கள் சென்ட் வாசனைத் தூக்க அமர்ந்திருப்பார்கள்.
"பாட்டீ.... இப்போதானே வந்தேள்... உங்களை நாங்கெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சே.... பேசிண்டிருப்போமே..." என்பார்.
கதவு திறந்து மூடும் போது டாக்டர் பாட்டியைப் பார்த்துவிட்டால் பாட்டியின் தள்ளாத வயதினால் சீனு மாமாவிடம் பாட்டியை உடனே உள்ளே அனுப்பும்படி சொல்லிவிடுவார்.
"வாங்கோ... எப்படியிருக்கேள்?"
"உடம்பு சொன்ன பேச்ச கேட்கமாட்டேங்கிறது.. அதான் உங்களாண்ட காமிச்சுட்டுப்போகலாம்னு வந்தேன்"
"ஜுரம் இருந்தா குளிக்காதீங்கோம்பேன்.... நீங்க போய் ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணுவேள்.... ரசம் சாதமா சாப்பிடுங்கோம்பேன்... நீங்க மோரூத்தி சாப்பிடுவேள்"
பாட்டியின் சொல்பேச்சுக் கேளாமையை வரிசையாக டாக்டர் அடுக்குவார். டாக்டரின் பெரிய பையன் பாலாஜியும் நானும் வகுப்புத் தோழர்கள். சின்னவன் ராம்ஜி எங்களுக்கு ஒரு க்ளாஸ் குறைச்சல்.
"டாக்டர், ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணலைன்னா எனக்கென்னமோ பண்றது... அதுக்கு ஜுரம் பரவாயில்லை போல்ருக்கே"
"நீங்க நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேள். இருந்தாலும் இப்படி வந்து என்னைப் பார்த்துட்டுப் போறேள்" என்று நமுட்டாகச் சிரிப்பார் டாக்டர். சந்திரசேகர்.
"வைத்தியனுக்குன்னு இவ்ளோ கொடுக்கணும். அப்போதான் உடம்பு சரியாகும்...." என்பாள் பாட்டி பதிலுக்கு.
அரைமணியில் வெளியே வந்தால் மாட்டைக் கட்டிப்போட்டுவிட்டு வெங்கடாஜலம் பக்கத்தில் நாலாம் தெரு போகும் முனையில் உட்கார்ந்திருப்பார். பெரியாஸ்பத்திரி பக்கத்தில் சீனிவாசா மெடிக்கலில்தான் சீட்டுக்கு மருந்து வாங்குவோம்.
"தம்பீ! டாக்டர் ரெண்டு எழுதினா ஒண்ணு வாங்கு... ஒண்ணு எழுதினா அரை வாங்கு..."
"டாக்டர் கேட்கறது சரிதான்.. அப்புறம் ஏன் டாக்டராத்துக்கு வரே" என்பாள் பவானி சித்தி.
"நாளைக்கு ஒரு சொம்புப் பாலை ஹரித்ராநதி தாயாருக்கு வுட்டுட்டு ஸ்நானம் பண்ணிட்டேன்னா.... எல்லாம் சரியாயியிடும்... விருந்தும் மருந்தும் மூணு நாள்டா"
ஓடிப்போய் மருந்துவாங்கிக்கொண்டு வண்டியில் தாவி ஏறிக்கொள்வேன். சவாரி முடியும் வேளை வந்துவிட்டதால் மாடு துள்ளியோடும். அன்னவாசல் தெரு தாண்டி கற்பகம் ஸ்டோர்ஸ் தாண்டி கிழக்குத் தெரு மூலையில் மாட்டுவண்டி நுழையும் போதே பாட்டி.....
"பவானீ.... வண்டிச்சத்தம் கொடுத்துடுடீ..." என்பாள்.
எட்டு எட்டரைக்கே ஊர் அடங்கிவிடும். ஹரித்ராநதியும் சலனமேயில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும். சோழன் போக்குவரத்துக்கழக பஸ் அரசு பஸ் என்பதின் அனைத்து இலக்கணங்களையும் ஒத்து டகடகடக என்று மொத்த பாடியும் கழன்று விழும் அபாயத்தில் கடகடக்க... அழுது வடியும் விளக்குகள் உள்ளே எரிய ஒன்றிரண்டு பயணிகள் ஜன்னலில் தலைசாய்த்து தூங்கியபடி பஸ்ஸ்டாண்ட் செல்வார்கள்.
வெங்கடாஜலம் வண்டியிலிருந்து இறங்கியவுடன் எதிரே தெரியும் ஹரித்ராநதிக்கு இருகைக்கூப்பி வணக்கம் சொல்வாள்.
"வெங்கடாஜலம்... பார்த்துப் போப்பா..." என்று அவருக்கு அவள் பாணியில் ஒரு பை சொல்லிவிட்டு கூன் விழுந்த முதுகோடு படியேறி கைகால் அலம்பிவிட்டு வழக்கமான பாய் போட்டுக்கொள்ளாமல் காலையில் துவைக்க வைத்திருக்கும் எதாவது விழுப்பு புடைவையை கீழே போட்டுத் தரையில் படுத்துக்கொள்வாள்.
டாக்டர் சொன்னது போல காலையில் எழுந்து ஹரித்ராநதியை பிரதக்ஷிணம் செய்துவிட்டு கீழ்கரை மங்கம்மா படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு ஈரப்புடவையை சுற்றிக்கொண்டு ராத்திரி தரையில் போட்டுப் படுத்த புடவையை துவைத்துத் தோளில் போட்டுக்கொண்டுக் கரையேறிக்கொண்டிருப்பாள்.
"பிரதக்ஷிணம் வர்றச்சே மேல்கரையில பார்த்துட்டு... திரும்ப எப்போ பாட்டீ போகலாம்ன்னு வெங்கடாஜலம் கேட்கறாண்டா...." என்று பொக்கை வாய் தெரிய சிரிக்கும் சாரதா பாட்டியை நான் கர்மயோகியாகத்தான் பார்த்திருக்கிறேன்.

Monday, December 30, 2019

தாவணி போட்ட தீபாவளி

சின்னப் பசங்களாக இருக்கும் வரையில் வெடி கொளுத்தி குஜாலான மனசு வாலிபம் தலைப்பட புத்தாடையில் குஜிலிகளைக் காணும் ஆசை அரும்புமீசையோடு சேர்த்துத் துளிர்விட்டது. கன்னியரின் மனசைத் தெரிந்துகொள்ளாத கபோதிகள் சிலர் வெங்காய வெடியைக் கையில் கொண்டு போய் சாலையில் மெல்ல நடந்து செல்லும் பாவாடைத் தாவணிகளின் காலருகே அடிப்பார்கள். தீவிரவாதிகள். அப்போது திடுக்கிட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மான் போல மிரளும் குட்டிகளைக் கண்டு சிரித்துக்கொண்டே சைக்கிளில் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரிலிருந்து எடுத்து அகலவிரித்து ஹீரோயிஸம் காட்டி மகிழ்வார்கள். அது உண்மையில் வில்லத்தனம் என்று அந்த அறிவிலிகளுக்குத் தெரியாது. இந்தப் பூர்வ பீடிகையின் பின்னே சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. சொல்கிறேன்.
மன்னை ஹரித்ராநதியின் கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்று பிரதக்ஷிணமாக வரும் தெருக்களில் சக ஸ்நேகிதர்கள் யாரையெல்லாம் சைட் அடித்துச் சுற்றுகிறார்களோ அந்த மங்கல பெண்டிர் தீபாவளிக்கு என்ன கலர் ட்ரெஸ் போடுவார்கள் (தாவணியோ பாவாடையோ) என்பதை முட்டை மந்திரிக்காமல் தெரிந்து கொண்டு அதே கலருக்கு மேட்ச்சிங்காக சட்டை பேண்டு போட்டு அன்று அவள் முன்னால் உலாத்துபவன், நேரம் கனிந்து வரும்போது அப்பெண்ணின் மணவாளனாகிவிடுவான் என்ற கிறுக்குத்தனம் கலந்த மூட நம்பிக்கை ஒரு தீபாவளியில் உதயமானது.
அந்த தீபாவளியில் டெய்லர்கள் எல்லாம் படு பிசி. ஸ்டைலோ மணி உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் ஆஸ்தானம். என் அப்பா ஒரு பண்டில் கதர் துணி வாங்கிக்கொடுத்தால்... பத்து பதினைந்து சட்டைகளாக தைத்துக் கொடுப்பார் மணி. குரலில் கொஞ்சம் நளினமாக பெண்கள் சாயலில் இருந்தாலும் ஆண்களுக்கான முதல்தர டெய்லர். அடுத்ததாக சூப்பர்ஃபைன் டைலர் என்னுடன் பள்ளியில் படித்த ஸ்நேகிதனின் அப்பா. பந்தலடியில் இந்தப் பக்கம் கலா ஒயின்ஸ் எதிர்புறம் ஸ்டைலோ. அந்தப் பக்கம் உடுப்பி கிருஷ்ணபவன் எதிரில் சூப்பர்ஃபைன். இளைஞர்களின் அந்தக்கால விருப்பமாக சூப்பர்ஃபைனும் சாந்தி தியேட்டர் எதிர்புறம் இருக்கும் மாரீஸ் டைலர்ஸும் ஆடைப்புரட்சி நடத்தி கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
மாரீஸ் டைலர்ஸ் அண்ணன் தம்பி மூன்று பேர். 2 அண்ணன் ஒரு தம்பி. ஒரு அண்ணனுக்கு இரண்டு தம்பி. சரி இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். அங்கே சட்டை பேண்ட் தைத்த கதைக்கு வருவோம். அந்த வருஷம் சத்தியராஜ் "பூ விழி வாசலிலே" படத்தில் கொசுவலை போல உள்ள துணியை சும்மா கை வைத்துத் தைத்து ஃப்ரீ சைஸில் சட்டை மாட்டிக்கொண்டு "அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?" என்ற பாடலுக்கு திரையில் ஆடியாடி நடந்து வந்ததைப் பார்த்து இளைஞர் உலகமே அதே சட்டையை (சத்யராஜ் கொடுப்பாரா? கொடுத்தால் எவ்வளவு பேருக்குக் கொடுப்பார்?  ) ..ச்சே... அந்த சட்டை மாதிரியே போட்டுக்கொண்டு கன்னியரை அசத்தத் துடித்தார்கள். அதே போல துணியை வாங்கும் முயற்சியில் அனைவரும் இறங்க ஆபத்பாந்தவனாக வந்தவன் புவனேந்திரன். "நண்பேன்டா" புவனேந்திரன் கம்மாளத் தெரு நாகோடா டெக்ஸ்டைல்ஸில் பகுதிநேர ஊழியன். தானுண்டு கடையுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு உத்தமன்.
அவரவருக்கு என்ன கலரில் அந்த கொசுவலைத் துணி வேண்டும் என்பதில்தான் இந்த வியாசத்தின் இரண்டாம் பாரா சங்கதி அடங்கியிருக்கிறது. தெற்குத் தெருவில் அழகான அக்கா தங்கை இருந்தார்கள். ஆமாம். இருவருமே அழகிகள். சிலசமயம் அக்கா நன்றாக இருந்தால் தங்கை இராவணனின் தங்கை போலவும்; தங்கை பார்க்க லக்ஷணமாக இருந்தால் அக்கா ஜ்யேஷ்டாதேவி போலவும் இருப்பது பொது மரபு. இங்கே இருவருமே அற்புதமான சைட். அப்படி "சைட்" என்றுத்தான் சைத்தான்கள் பேசிக்கொள்வார்கள். அக்காவைச் சிலரும் தங்கையைச் சிலரும் பின்தொடர்ந்தார்கள். இந்த ஃபேஸ்புக் போன்று ஃபாலோயர்களைக் கணக்கிடும் காலமாக இருந்தால் மன்னை மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவும் அவர்கள் பின்னாடிதான். சரி. இதற்கு மேல் டீட்டெயிலிங் தேவையில்லை. நிறுத்துவோம். இவ்வியாசத்தில் இங்கிருந்து அக்கா என்றால் மேற்படி 'அழகிய' அக்காவும் தங்கை என்றால் மேற்கண்ட 'லவ்லி' தங்கையுமாக வாசகர்கள் படித்துக்கொள்ளவும்.
அந்த அக்காவின் உடை என்ன கலராக இருக்கும் என்ற யூகத்தில் சிலரும் தங்கையைப் பின்பற்றுபவர்கள் வேறு யூகத்திலும் துணியெடுக்கப் படையெடுத்தார்கள். அக்கா கலருக்குப் போட்டியிட்டவர்கள் சிகப்பு மஞ்சள் பச்சையென்று வண்ணமயமான கற்பனையில் துணியெடுத்துக்கொண்டார்கள். தங்கையின் அபிமானியாக இருந்தவன் ஆப்தன் ஸ்ரீராம். ஸ்ரீராமுக்கு தங்கையின் தாவணி நிச்சயம் நீலம்தான் என்று ஏதோ ஒரு பட்சி சொல்லியது. நீலக்கலரில் சொக்காயும் அதற்கேறவாறு அன்ட்ராயரும் தைத்துக்கொள்ளமுடிவு செய்தான்.
மாரீஸுக்கு தீபாவளி ஆர்டர்கள் மலைபோலக் குவிந்தது. மாரீஸில் அண்ணன் வெட்டித் தர ஒரு தம்பி மூட்டிக்கொடுக்க இன்னொருத்தர் காஜா. அசுரத்தனமாக அனைவரும் ஒரு மாதகாலமாக வேலைப்பார்த்ததில் கைவேறு காலர்வேறாக தைத்துவிடுவார்களோ என்றஞ்சி துணி கொடுத்தவனே அருகில் இருந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. அடியேனின் கொசுவலை தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே தயாராகியது அடியேன் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியம். தீபாவளி அதிகாலையில் "ஒரு பொதை வெய்யேன்டா தம்பி" என்று பாட்டிச் சொல்லைத் தட்டாமல் புஸ்வானம் வெடிக்கும் போது சரவணன் மாரீஸிடமிருந்து புதுச்சட்டை பேண்ட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.
கங்கா ஸ்நானம் ஆனபின் எல்லோரும் புதுத்துணி அணிந்துகொண்டாயிற்று. இப்போது துணி தைத்துக்கொண்டதின் புண்ணிய பலனாக அக்கா-தங்கைகளின் ஆடை நிறம் பார்க்க ரோமியோக்கள் தயாரானார்கள். சைக்கிள்தான் அப்போது எங்கள் ஹார்லே டேவிட்சன். ஐயனார் கோயில் திருவிழாவில் இரவு முழுவதும் பல்பு கட்டி இறங்காமல் சுற்றும் சாகசக்காரன் போல அதிகாலையிலிருந்து நாலுவீதியையும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஏழு மணி போல ஒருவழியாக அழகிகள் தரிசனம் ஆனது. அக்காக்காரர்கள் எல்லோருக்கும் ஏமாற்றம். பச்சை மஞ்சள் சிகப்பு என்று தெலுங்கு ஹீரோக்கள் போல கண்ணைப்பறிக்கும் கலரில் ஸ்டைலாக துணிபோட்டிருந்தவர்கள் முகத்தில் ப்ரௌனைப் பூசி விட்டாள் அக்கா. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். இதுபோன்ற 'லவ்'கீக சமாசாரங்களில் ஸ்ரீராமின் குறிகள் என்றுமே தப்பியதில்லை. அத்தங்கையும் நீலம். ஸ்ரீராமும் நீலம். அன்று வானமும் நீலம். வானத்தின் வண்ணத்தை வாங்கிக்கொண்ட ஹரித்ராநதியும் நீலமாக இருந்தது. Blue Everywhere!
ஸ்ரீராமுக்கு ஒரே குதூகலம். அவன் நோட்டமிட்டவளும் அவனும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தை விட அந்த அக்காக்காரியை பின்தொடரும் பிரகஸ்பதிகள் அசடுவழிய ஏமாற்றம் அடைந்ததில் அலாதியான ஆனந்தம் அடைந்தான். தாவணி போட்ட தீபாவளிகள் என்றுமே அழகு என்ற கிளிஷேவுடன் இதை முடித்துக்கொள்கிறேன். 
~~~~~~
எல்லோருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
~~~~~~~
பொறுப்புத் துறப்பு: நான் இந்த செயலில் ஈடுபடவில்லை எனவும் வெகுகாலத்திற்குப் பின்னர் இப்படியெல்லாம் கலரில் விளையாட்டு நடந்தது எனவும் ஸ்ரீராம் சொன்னதை கிளுகிளுப்பாக இருக்கட்டும் என்று சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இங்கே இவ்வியாசம் எழுதப்பட்டது. நன்றி.

Monday, October 23, 2017

தெப்போற்சவம்


இன்று கோபாலனுக்கு ஹரித்ராநதியில் தெப்பம். பிரத்யேகமாக மன்னையை ஆளும் மன்னவன், ஸ்ரீகோபாலன், ஆனி மாசத்தில் பத்து நாள் அவன் கோபிள கோபிரளய முனிவர்களுக்கு தனது 32 சேவைகளையும் நிகழ்த்திக்க்காட்டிய ஹரித்ராநதி கரைக்கு ஹாயாக வந்துவிடுவான். அங்கு கோபியர்களுடன் ஜலக்ரீடை கூட நிகழ்த்திக் காட்டினானாம்.
தெற்குத் தெரு மண்டபத்தில் அலங்காரம் ஆகி நான்கு கரையும் வலம் வந்து திருமஞ்சன வீதி வழியாக கோயிலில் பள்ளிக்கொள்ள செல்வான் அந்த அழகன். பாட்டியும் பாட்டியின் ஸ்நேகித பாட்டிகளும் வாசல் படியில் ஊர்வம்பு பேசிக்கொண்டு தவம் கிடப்பார்கள். வடக்குத்தெரு மூலையில் மணி டீக்கடை தாண்டும் போது பவானி சித்தி நடுரோட்டில் தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். தினமும் கோபாலனுக்கு தேங்காய் பூ பழத்தோடு வீட்டு வாசலில் ஒரு அர்ச்சனை.
தீவட்டி வெளிச்சத்தில் சிரிக்கும் கோபாலனைப் பார்க்கும் போது நாம் அவனுடன் ஸ்வர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். காற்றடித்து தீவட்டியில் பொறி பறக்கும் போது பாட்டி தன்னிலை மறந்து வலம் வருவாள். “கோபாலன் இருக்கும்போது இத்துணூண்டு தீவட்டிப் பொறி என்னடா செய்யும்?”. பின்னால் வேத பாராயணமும் முன்னால் கோஷ்டியும் வருவார்கள். சில நாட்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கும் வரும். பாதி நாள் அது முழுவதும் பத்திக்கொண்டு சரியாக எரியாமல் ஓரத்தில் பழுது பார்த்துக்கொண்டிருப்பார்கள். “தீவட்டி வெளிச்சத்துலதாண்டா கோபாலான் கொள்ளை அழகு” என்று சாரதா பாட்டி சமாதானப்படுத்திக்கொண்டு சிலாகிப்பாள்.
ஆனி மாச பௌர்ணமி தெப்பம். முதல் நாளிலிருந்து தகர டின்களும் மூங்கிலும் கொண்டு வந்து தென்கிழக்கில் போட்டு தெப்பம் கட்டுவார்கள். வணிகர் சங்க மண்டகப்படி. தெப்பத்தன்று முன்மாலைப் பொழுது மூன்று மணியிலிருந்து வளவிக் கடையும், சொப்பு பாத்திரங்களும், மண் பொம்மைகள், பொரிகடலை, ஜவ்வு மிட்டாய் என்று வீதியில் விரித்திருப்பார்கள். ஏதாவது சிறப்புக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். காளையர்கள் கன்னியர்களை எதிர்பார்த்து நான்கு கரையையும் சுற்றிச் சுற்றி வருவர். ஏதோ ஒரு தெப்போற்சவத்தின் போது ஈசான்ய சிவன் கோவில் வாசலில் இருகுழுக்கள் இடையே அடிதடி நடந்தது. புஜபலம் மிக்கவர்கள் ஜெயித்தார்கள். தோற்றவர்கள் வேஷ்டி அவிழ அரை அம்மணமாய் ஓடினார்கள். “அடிச்சான் பாருடா..” என்று விடிகாலை வரை பேசிக்கொண்டார்கள்.
சீரியல் விளக்குகள் மாட்டி ஜிகுஜிகுவென்றிருக்கும் தெப்பம். ஜெனரேட்டர் ஒன்றை உபரியாகச் சின்னத் தெப்பத்தில் இணைப்பாக கட்டி இழுத்துவருவார்கள். ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கிருஷ்ணர் அலங்காரத்தில் சேவை சாதிப்பார். கொள்ளைச் சிரிப்போடு. மொத்தம் மூன்று சுற்று. ஒரு தடவை நடுவளாங்கோயிலுக்கு சென்று வருவர். தெப்பத்தின் உள்ளேயே கச்சேரி நடக்கும். மங்கம்மா படித்துறைக்கு முன்னால் பிள்ளையார் கோயில் படித்துறையில் நானும் பாட்டியும் பவானி சித்தியும் ஏறுவோம். தென்கிழக்கு மூலையில் இறங்கிக்கொள்வோம். முன்னதாக தெப்பத்தில் பெருமாள் ஏறும்போதே ஒரு முறை தரிசித்துவிட்டு வீட்டிற்கு வருவோம். சுற்றுப்புற கிராமத்திலிருந்து தெரிந்தவர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு வருவார்கள். “தொப்பம் பார்க்க வந்தோம்...” என்று ஆதிச்சபுரம் மரியதாஸ் ஒரு முறை பெரிய வாழைத்தாரோடு வந்திறங்கினார். மறுநாள் சீப்புசீப்பாகத் தெருமுழுக்க விநியோகித்தாள் பாட்டி.
தெப்பத்தன்று மட்டும் இராத்திரி பத்து மணி வரைக்கும் ஆத்தில் சுடச்சுட ஃபில்டர் காஃபி கிடைக்கும். விருந்தாளிகள் வந்தவண்ணம் இருப்பதால் ஒன்றுக்கு மேல் ஒன்றாக காஃபி இறங்கும். ஐந்தாறு முறை டிகாக்ஷன் இறக்கி இறக்கி.....ஆஹா.. நண்பர்கள் கோஷ்டி வீதியிலேயே திரிவார்கள். நிறைய வீடுகள் விடிய விடிய திறந்திருக்கும்.
இன்றைய தெப்பத்தை Vijay Ram நேரலையாக ஃபேஸ்புக்கில் காட்டினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் வர்ச்சுவலாக தெப்பத்தில் மிதந்தேன். மிக்க நன்றி. இத்துடன் இணைத்திருக்கும் ராஜகோபாலன் படம் இன்றைய தெப்பத்தில் அந்த அழகனின் அலங்காரம். பட உதவி மற்று அலங்காரம் Sriramman Sriraman. நண்பன் Rajagopalan Rengarajanஐ காணலை! கோஷ்டியில் இருப்பான் என்று நம்புவோமாக!! 

சாதம் போட்ட அன்னபூரணிகள்

எனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடா பேத்தறே..”ன்னு கேட்பாள். காது சுத்தமாகக் கேட்காது. செவிக்கருவிகளுக்கெல்லாம் சவால் விடும் காது. தாத்தா கைலாய பதவி அடைந்த பிறகு தலையை முண்டனம் செய்துகொண்டு நார்மடியோடு காலத்தை தள்ளினாள்.
சாரதாம்பாள், ஜெகதாவின் சாப்டியோ.. பசிக்குமேடா கூட “படிக்கறதே இல்லை.. கட்டேல போறவன்... தோசைக்கல்லை அடுப்புல போட்டதும் தட்டைத் தூக்கிண்டு வந்துடறான்.. போய்ப் படிச்சுட்டு வாடா.. அப்பதான் தோசை...” என்று விரட்டுவாள். கையில் பிரம்பிருக்கும் ஹெட் மிஸ்ட்ரஸ் போல இருந்தவள். அவளிடம்தான் வளர்ந்தேன். மடி ஆசாரம் என்பது உயிர் மூச்சு. ”என்ன பாட்டி.. காலேல குளிச்சுட்டியே... ஏன் இப்போ திரும்பவும் இப்போ மத்தியானம் ஸ்நானம் பண்றே?” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா? ஸ்நானம் பண்ணிட்டேன்... கொடில மடியா புடவை ஒனத்தியிருக்கேன்.. “ என்று கூன் விழுந்த முதுகோடு கொல்லைக் கிணற்றிலிருந்து டங்குடங்கென்று வேகமாக நடந்து உள்ளே செல்வாள்.
சமையற்கட்டிலிருந்து “கையிலே.. கதை புஸ்தகம் போல்ருக்கேடா தம்பி...” என்று ரேழியில் படித்துக்கொண்டிருக்கும் என்னை கேட்பாள். ரஸ்க் தடிமனுக்கு கண்ணாடி போட்டிருந்தும் என்னுடைய அசையாத ஸ்ரத்தையான படிப்பைப் பார்த்து அது பாடபுஸ்தகமல்ல என்பதைக் கண்டுபிடித்துவிடுவாள். வெளி ஆட்களிடம் நியாய தர்மங்கள் விவாதிப்பாள். “இப்டி நடக்குமோடி இந்த லோகத்துலே...” என்று அதிசயித்து வலது கையால் தாவாங்கட்டைக்கு முட்டுக் கொடுத்து பேசுவாள்.
எண்பத்தேழு வயது வரை எங்கள் மன்னை ஹரித்ராநதியின் நான்கு கரையையும் பிரதக்ஷிணம் வந்து நடுவளாங்கோயில் வேணுகோபாலஸ்வாமியை கும்பிட்டு வீட்டுக்குள் வருவாள். தானே இருபது படி இறங்கி ஹரித்ராநதி மங்கம்மாள் படித்துறையில் ஸ்நானம் செய்வாள். தன் துணியை தானே துவைத்து மடியாக தானே கொம்பு பிடித்து உத்தரத்தில் தொங்கும் கொடியில் உலர்த்தி... “ஒரு சொம்பு பால் குடுடீ பவானி.. ஹரித்ராநதித் தாயாருக்கு விட்டுட்டு வேண்டிண்டு வரேன்...” என்று இருநூறு மிலி பாலை குளத்தில் ஊற்றி அதைத் தெய்வமாக மதித்து வேண்டிக்கொள்வாள். ஏதோ நம்பிக்கை. ”கார்த்தாலே வேண்டிண்டு பால் விட்டுட்டு வந்தேன்.. சாயரக்ஷை தொலைஞ்சு போன மோதரம் கிடைச்சுடுத்து...”. இந்த சாரதாம்பாள்தான் என்னுடைய மன்னார்குடி டேஸ் தொடரில் பாட்டி பாத்திரத்தை நிரப்புபவள்.
*
தேகாரோக்கியத்தோடு இருந்தவரையில் ஜெகதா உழைப்பின் சிகரம். கைகால்கள் விழுந்த பிறகு, அலமேலம்மா அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டாள். சாரதாவைவிட ஜெகதாவிற்கு சரீரம் பெருசு. ரேழி நடுவில் முக்காடுத் தலையோடு உட்கார்ந்திருக்கும் போது யார் வீட்டில் நுழைந்தாலும் “பாட்டீ... நமஸ்காரம் பண்ணிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...” என்று நெடுஞ்சான்கிடையாக விழத் தோன்றும். ஆரோக்கியத்தோடு இருந்த ஜெகதா ஆயிரம் பேருக்கு சமைப்பாளாம். அவள் அருகில் சென்று கறுப்பு லக்ஷ்மியைத் தடவி கொடுத்து “விருந்தாளியெல்லாம் வந்துருக்காடி.” என்று சொன்னதும் அரை லிட்டர் பால் கூடக் கறக்குமாம். ஜெகதாவின் நடமாட்டம் கண்டவுடன் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணி அடித்து ஜாடையாய்ப் பேசும். வைக்கோல் பிரி உருவி போட்டுவிட்டு கழுத்தில் தடவிக்கொடுத்துவிட்டுச் செல்வாள்.
”ஸ்கூலுக்கு போலயாடா?”
“லீவு விட்ருக்கா”
“ஏன்?”
“தோ... இந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்கறத்துகாக..”
என்று டிவியைக் காட்டி இப்படிச் சொன்னால் நம்பிவிடுவாள். “ஓ... சர்தான்... சாப்ட வரியா?” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா? படிக்கவேண்டாமா? என்கிற கேள்விகள் அவளுக்கு கேட்கத் தெரியாது! அன்னபூரணிக்கு சரஸ்வதி டிபார்ட்மெண்ட் பற்றித் தெரியாது. ஒரு சமயம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. வடக்கத்தியர்கள். ஜெகதாவோடு நானும் அக்காவும் சென்று பார்த்தோம். நடுவில் ஜெகதாவும் பாடிகார்டு போல இருபுறமும் நானும் கீர்த்திகாவும். உயரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய பெண்களைச் சிலர் ஆச்சரியத்தோடும் சிலர் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜெகதா என் காதில் “பாவம்டா.. ஒரு ஜான் வயித்துப்பாடுக்காக அந்தரத்துல தொங்கறாள்கள்.. நமக்கு பகவான் நிறைய கொடுத்துருக்கான்.”
நடை தடுமாறியபோது கூட தொழுவம் எட்டிப்பார்த்து மாட்டுக்கு வாளியில் தீவனம் கலந்து வைத்து பார்த்துக்கொண்டாள். ”தட்டை அலம்பிண்டு வரியா? சாதம் போடறேன்” என்று தள்ளாத வயதிலும் கேட்டவள். ஊரிலிருந்து அகாலத்தில் யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜீரா ரசம் மோர் சாதமாவது கிடைக்கும். ஜெகதாவை நினைக்கும் போதெல்லாம் அன்னதானப் பிரபுவான இளையான்குடி மாற நாயனார் கதை நியாபகத்துக்கு வரும்.
இன்று ஜெகதாவின் ஸ்ரார்த்தம். சாப்பிட்டுவிட்டு கண் அயரும் நேரத்தில் சட்டென்று நினைவு அடுக்குகளிலிருந்து எழுந்திருந்த இரு பாட்டிகளும் என்னை இவ்வியாசம் எழுதச் சொன்னார்கள். இதுபோன்ற அம்பாள் பாட்டிகளின் சாம்ராஜ்யமாக வீடுகள் இருந்தபோது கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் அமைதியும் குன்றாத சந்தோஷமும் குடியிருந்தது.

Sunday, October 22, 2017

ஐம்பது மேல் வந்த ஆசை

மன்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் எங்களுக்குக் கணிசமாக காணி நிலம் இருந்தது. ஆம். பராசக்தி அருளியது. காவிரிக்கரைகாரர்கள் பங்கு என்று சொல்வோம். ரோட்டை ஒட்டிய, மவுசு அதிகம் வாய்ந்த பங்கு. அவ்வப்போது நடவு அறுப்புக்கு நானும் சென்று வாய்க்கா வரப்பில் இறங்கி காலில் சேறு பூசிக்கொள்வது வழக்கம். நான்கு திக்கிலும் பச்சை தெரிய கண்ணுக்குள் ஜில்ஜில்.

அப்பா கழுத்து நீண்ட ஸுவேகாவை விற்று விட்டு புதுசாக டி.வி.எஸ் 50 (சிகப்புக் கலர்) வாங்கினார். ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் பூஜை போட்டு அதன் கழுத்தில் போட்ட மாலை நார் நாராய் தொங்கியும் கழன்றாலும்... அதற்கு வலிக்காமலும்... பத்து நாட்கள் ஓட்டியிருந்தார். சம்பவத்தன்று... (என்ன சம்பவம்? மேலே படிக்கவும்...) புதுக்கருக்கு கலையாமல் வண்டி வாசலில் ஜம்மென்று நின்றிருந்தது. ஸில்வர் கலர் பொட்டி இணைத்திருந்ததில் அதன் மெருகு இன்னும் ஒரு படி கூடியிருந்தது. டிவிஎஸ் 50 என்பது அன்றைய காலத்தின் ஹார்லே டேவிட்சன். வெயிலுக்கு பத்து நிமிடம் மர நிழலில் ஒதுங்கினால் கூட பெட்டி திறந்து பனியன் க்ளாத்தால் சீட்டு, ஹாண்டில் பார், பெட்ரோல் டேங்க் என்று தூசி துடைப்பார் அப்பா. புது வண்டி பராமரிப்பிற்காக ஓரத்தில் ஒரு பொட்டுக் கிழிசல் விழுந்த புது பனியனை அப்பணிக்கு அர்ப்பணித்திருந்தார். வண்டியின் மேல் தீராத பக்தி. காதல். அன்பு. பாசம்.
சுந்தர்... இந்தப் பதிவின் படத்தில் இருப்பவர். (’ன்’னில்லாமல் ர் போட்டு எழுதியிருக்கிறேன்). “மாப்ள.. வண்டிய எடுத்துட்டு வா... பங்கு வரைக்கும் போய்ட்டு வருவோம்...” என்று இருசக்ரவாகன மோகத்தில் என்னை முடுக்கிவிட்டான். (ர் அன்னியோன்ய நட்புக்கு ஒத்து வராது என்று ஒரு வரி முடிவதற்குள் ’ன்’க்கு தாவி விட்டேன்).
“ப்பா.. பங்கு வரைக்கும் டிவியெஸ் 50ல போயிட்டு வரேன்...”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... உன் சைக்கிள்ல போ...” என்று டிவிஎஸ் ஐம்பதை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார் அப்பா.
வாசலில் சுந்தர் கண்ணால் என்னைப் பார்த்துக் கெஞ்ச நான் உள்ளே பார்த்து ”ப்ளீஸ்...ப்ளீஸ்..ப்ளீஸ்...” என்று கெஞ்சியும் ஒத்தைக்காலில் நின்று அழிச்சாட்டியம் செய்தும் அதில் கிளம்பினோம்.
ஸ்டார்ட் செய்து உடனே ஆஃப் செய்து விட்டு ஸ்டாண்ட் போட்டேன்.
“ஏண்டா? என்னாச்சு? சீக்கிரம்.. உங்கப்பா மனசு மாறுறத்துக்குள்ள கெளம்பு.” என்று எக்கச்சக்கமாகப் பதறினான் சுந்தர்.
“மாப்ள.. ஒரு ட்ரே சில்வர்கப் வாங்கி ஃப்ரிஜ்ல அடிக்கிருக்காருடா... ரெண்டு எடுத்துப் போட்டுக்கிட்டு போவோம்...” என்றேன் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு. “ம்..ம்..” என்று அவனும் ஆசையாய் பூம்பூம் மாடு போல தலையாட்டினான்.
ஓசையெழுப்பாமல் பூனை போல உள்ளே சென்று இரண்டு ஆரஞ்சு சில்வர்கப் எடுத்து பொட்டியில் போட்டுக்கொண்டேன். சில்வர்கப் என்பது அந்தக்கால பெப்ஸி, கோக் பானமாக நாங்கள் பாவித்திருந்தோம். அருகிலிருக்கும் சாலியமங்கலத்தின் தயாரிப்பு. கிணற்றுத் தண்ணிருக்கு சர்க்கரைப்போட்டு கலர் தூவித் தந்தால் கூட புது ஃப்ரிஜ்ஜில் வைத்து ஸ்ட்ரா போட்டு உறிஞ்சியிருப்போம். அது கிடக்கு. தொடங்கிய சங்கதிக்கு வருவோம்.”
நான் ஓட்ட அவன் பில்லியனில் இரு கையையும் இயேசு நாதர் சிலுவையில் இருப்பது போல பிரித்து.. காற்றில் கேசம் கலைய... ஒரு காதலியைப் போல.. இருசக்கர ரைடை அனுபவித்துக் கொண்டிருந்தான். பங்கு வந்தவுடன் ஸ்டாண்டை நான் காலால் அழுத்த பின்னால் பிடித்து இழுத்து ஸ்டாண்ட் போட ஒத்தாசை செய்தான் சுந்தர். வரப்பிலறங்கி போர் செட் ரூம் வரை சென்றவுடன் சுந்தருக்கு ஞாபகம் வந்தது “மாப்ள.. சில்வர் கப் இருக்கே.. மறந்துட்டோமே..”. ரோட்டுக்கு ஓடினான். அவன் கையில் சாவியில்லை என்பது வண்டியை நெருங்கியவுடன் அவனுக்குத் தெரிந்தது. திரும்பி “ஆர்வியெஸ்” என்று என்னைக் கூவி அழைப்பதற்கு முன் நானும் அவன் பின்னால் சாவியோடு ஓடி அடைந்திருந்தேன்.
பொட்டியை ஆவலுடன் திறந்தோம். திறந்தவுடன் பொட்டிக்குள் சில்வர்கப் பாட்டில்கள் சுக்குநூறாக உடைந்து பொட்டியை ஈரப்படுத்தியிருந்தது குளிர்பானம். இருவரும் ‘ஞே’ என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.
“மாப்ள.. வரும் போது பள்ளம் மேட்டுல சலக் சலக்னு சத்தம் கேட்டுச்சு... என்னடா சலங்கை சத்தம் மாதிரி கேட்குதேன்னு நெனைச்சேன். இதான் மேட்டரா...” என்று சீரியஸாக சிந்தித்தான். இனி என்ன பேசியும் பிரயோஜனமில்லை. போர்செட்டிலிருந்து வாளியில் தண்ணீர் கொண்டு வந்து பொட்டியைக் கழுவினோம். வண்டி ஓட்டிய சுகானுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய் வீட்டுக்குப் போனால் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது? டின் கட்டி விடுவாரே.. என்றெல்லாம் பயந்து இருவருக்கும் முகம் சுண்டிப்போனது.
“சரிடா வீட்டுக்கு கிளம்புவோம்” என்ற சுந்தர் டி.வி.எஸ். ஐம்பதின் ஹாண்டில் பாரைப் பிடித்திருந்தான். அதில் இன்னொரு வெடி இருக்கிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
“டேய்.. உனக்கு ஓட்டத் தெரியாதே.. நீ ஏண்டா கிளப்புறே” என்றேன் பீதியுடன்.
“மாப்ள.. எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும். ஹாண்டில் பாரை அட்ஜஸ்ட் பண்ணத் தெரிஞ்சா போதும்டா.. எதுவேணா ஓட்டலாம்..” என்று விமானமே ஓட்டுவதற்கு தகுதி சைக்கிள் ஓட்டத்தெரிவது என்ற பாணியில் நைச்சியமாக என்னிடம் பேசி இணங்க வைத்தான். பாவிப்பயல். சரியும் இல்லாமல் இல்லையும் இல்லாமல் மத்தியமாக தலையை ஆட்டும் போதே என்னை பின்னால் ஏறச்சொல்லி வண்டியைக் எடுத்தான்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் லான்ச் செய்வது போல எடுத்தவுடன் டிவியெஸ் 50யின் காதை கண்டபடித் திருகி விரட்டினான். வண்டி அங்குமிங்கும் அலைமோதியபோது “சுந்தர்.. வேகத்தைக் குறைடா...” என்று அலறினேன்.
“மாப்ள.. பயப்படாதடா.. எப்டி ஜிங்குன்னு போவுது பாரு...” என்று இன்னமும் திருகினான். அதன் சப்தமே எனக்கு வினோதமாகப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதன் ஜீவனை விட்டுவிடும் போல இருந்தது.
“டேய்.. வேகத்தைக் குறைடா..” என்று டிவியெஸ்ஸின் அலறலுக்கு மேலே நானும் கத்தினேன். ஊஹும். ஓட்டும் மோகத்தில் இருந்தான் சுந்தர். அவன் தரையில் இல்லை. வானத்தில் மிதப்பது போல சுகித்திருந்தான்.
அப்போது அந்த சம்பவம் நடந்தது.
பின்னால் இருந்து திருத்துறைப்பூண்டி சோழன் போ.கழக பஸ் ஒன்று “பாம்...” என்ற இரைச்சலுடன் எங்களைக் கடந்தது. சுந்தருக்கு தூக்கி வாரிப் போட்டிருக்க வேண்டும். முன்னால் வைக்கோல் ஏற்றிய ஒரு இரட்டை மாட்டு வண்டி. ப்ரேக் என்ற ஒன்றை மறந்து சுயநினைவை இழந்திருந்தான் சுந்தர். அந்த ஹார்ன் சப்தத்தில் முன்னால் போய்க்கொண்டிருந்த வண்டியின் இடது சக்கரத்தில் டிவியெஸ்ஸின் சக்கரத்தை உரசி எது திடமான வஸ்து என்று பார்த்துவிட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ரோட்டோர கால்வாயில் கிடந்தோம். அவ்வளவு அராஜக ட்ரைவிங்கிற்குப் பிறகும் டிவியெஸ் 50க்கு எங்கள் மேல் கருணை இருந்ததால் எங்களை விட்டு பத்தடி தள்ளிப் போய்க் கவிழ்ந்தது. மாட்டு வண்டிக்காரர் இறங்கி வந்து எங்களை தூக்கிவிட்டு “ஐயிரூட்டு பையனா.. ஏம்பா இப்படி வந்தே.. புதுசாக் கத்துக்கிறியா?’ என்றார். நான் சுந்தரைப் பார்த்தேன். கரகாட்டக்காரன் நாதஸ் செந்தில் போல தலையைக் குனிந்து கொண்டான் சுந்தர். எனக்கு வண்டிக்காரர் கேட்ட கேள்வியை விட அப்பாவுக்கு என்ன பதில் என்று தவித்தேன்.
வண்டிக்கு ஒன்றும் பெரிதாக ஆகவில்லை. திடகாத்திரமாக இருந்தது. பெட்ரோல் ஓவர்ஃப்ளோ ஆகி நாறியது. இரண்டு முறைக்கு நான்கு முறை பெடலை சுற்றியதில் ஸ்டார்ட் ஆனது. நான் தான் ஓட்டினேன். வீட்டுக்கு வந்துவிட்டோம். அப்பா வாசலில் காத்திருந்தார். ஸ்டாண்ட் போட்டோம். இந்த முறை டிவியெஸ் 50 ஸ்டாண்ட் போட சுந்தர் ஒத்தாசை செய்யவில்லை. பில்லியனிலிருந்து இறங்கியவுடன் வேட்டை நாய் துரத்தியது போல ஓடி தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு “அப்பா வரேன்.. ஆர்வியெஸ் வரேண்டா..” என்று தெருமுனை வரைக்கும் சொல்லிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் பறந்துவிட்டான்.
நான் ஸ்டாண்ட் போட்ட போது அப்பாவுக்கு சந்தேகமில்லை. “தண்ணி குடிச்சுட்டு வரேன்.. ஸ்டாண்ட் போடு..” என்று உள்ளே சென்றார். அப்பா திரும்பவும் வாசலுக்கு வரும்போது நானும் அங்கில்லை என்று இங்கு எழுதவேண்டுமா என்ன?
பின் குறிப்பு: பல வருடங்கள் கழித்து இன்று ஆஃபீஸ் வந்திருந்தான் சுந்தர். பழைய நினைவுகளை இருவரும் கொஞ்சநேரம் கிளறிக்கொண்டிருந்தோம். ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அவன் சென்றுவிட்டான். வீட்டுக்கு வந்து இன்னொரு முறை எண்பதுகளுக்குச் சென்று நான் இங்கே வ்யாசமாக எழுதிவிட்டேன்.

பங்குனி பெருவிழா - இரண்டாம் பாகம்

”பெரிய திருநா கடை போட்டான்னா இந்த முறுக்குப் பிழியற நாழி ஒண்ணு வாங்கணும்டீ பவானி” என்பாள் பாட்டி. ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் பங்குனி பிரம்மோத்ஸவத்துக்கு மன்னையில் ”திருவிளாக் கடை” போடுவார்கள். விடையாற்றி வரையில் மக்கள் வருவதும் போவதுமாய் முப்பது நாட்கள் கடை இருக்கும். முழு ஆளைப் போட்டு வறுத்தெடுக்கத் தோதாக இருக்கும் மண் அடுப்பு எரியும் நிலக்கடலைக் கடைதான் பிள்ளையார் சுழி. பட்டாணி படாரென்று வெடிக்க... சூடாகக் கடலை வறுபடும் வாசனைச் சுண்டி இழுக்கும். பின்னர் சமையல் ஐட்டங்கள், அமுக்கினால் குதித்தோடும் நாய், விளக்கேற்றி வைத்தால் தண்ணீரில் ஓடும் தகரப் படகு, பம்பரம், பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் சாதனங்கள் என்று ஐந்தடிக்கு ஐந்தடி வேஷ்டி வேலிக்குள் ஒரு கடை.
“இது போன வருஷமே வாங்கினேயேடா... தம்பி... ஒவ்வொருவருஷமும் இதையேதான் வாங்கறான். பாவம் அவனுக்குப் புதுசாக் கூட வெளையாடத் தெரியல...” என்று Bombay Trade Game வாங்கியதை சக பாட்டிகளிடம் சொல்லி கிண்டலடிப்பாள் பாட்டி.
கோபாலனின் பங்குனி பிரம்மோற்சவத்தில் பெரிய திருநாள் என்பது ”சிம்ஹ வாகனத்தில்” ஆரம்பிக்கும். சிம்ஹ வாகனத்தில் இராஜா அலங்காரம். கோபாலன் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் சேவை சாதிப்பார். ஒரு நாள் ராஜாவாக இருந்தால் அடுத்த நாள் சூர்யபிரபையில் வேணுகானம் வாசித்து கோபியர்களை மயக்கிய குழலூதும் கண்ணன் அலங்காரம். நேத்திக்கு பிரஜைகளின் காவலன் இன்று கோபிகாஸ்த்ரீகளின் காதலன். தங்கசூர்யபிரபை தீவட்டி வெளிச்சத்தில் தகதகக்கும். அந்த வட்டத்திற்குள் ஒய்யாரமாக குழலூதும் கண்ணன்.
ரோட் ஸைட் ரோமியோ என்பது போல ஆல் ஸைட் ரோமியா கோபாலனுக்குதான் பொருத்தமாக இருக்கும். வீதியுலாவில் கோபாலன் அழகை என்னால் சொல்லில் வடிக்கமுடியாது என்பதால் ஊத்துக்காடு வேங்கடகவியின் குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்பும் பாடலில் வரும்..
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ........
மிகவும் எழிலாகவும் ....... காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ....

சிருங்காரம் ததும்பும் இந்தப் பாடல் உங்களுக்கு அப்போது நினைவுக்கு வந்தால் பரமசுகம்தானே.
அடுத்தநாள் வெள்ளி சேஷ வாகனப் புறப்பாடு பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். அதுவும் நாலாம் தெரு தாண்டி கோபிநாதன் கோயில். சேரங்குளம் டோர்னமெண்ட்டுக்கு சைக்கிளில் போகும் போது பார்க்கும் கோபுரம் அந்தக் கோயில். “வெங்கடாசலம் வண்டி ஓட்ட முடியாதும்பன்... ரொம்ப நாழி ஆறதும்மான்னு கயண்டுப்பன்....தம்பி... புறப்பாடுக்கு வேட்டு போடற சத்தம் இங்க கேட்குமோடா?” என்று கேட்டுக்கொண்டே கேட்காத காதைத் தடவிக்கொண்டே சயனத்துக்குப் போய்விடுவாள் பாட்டி. ஒரு வருஷம் திருவிழாவுக்கு வெங்கடாசலம் மாட்டு வண்டியில் சென்றுவிட்டு கண் தெரியாமல் முப்பது டிகிரிக்கு குடைசாய்வது போல ரோட்டை விட்டு இறங்கிவிட்டது. “சேச வாகனம் மட்டும் கஸ்டம்மா” என்று அப்போதிலிருந்து வெங்கடாசலம் வண்டி கட்டாமல் ஒதுங்கிவிட்டார்.
கருடவாகனம். கோயில் புறப்பாடு. வேட்டுப் போட்டால் கூட வீட்டிலிருந்து வேகமாக ஓடிவந்தால் கோபாலனைப் பிடித்துவிடலாம். காலை ஒய்யாரமா வெச்சுண்டு கருடன் மேலே எழுந்தருளுவார். ”வேதங்களே கருடனா வந்ததாலே பாதம் கருடன் தோள் மேலே படாது பாருங்கோ... லேசா தூக்கிண்டிருப்பார்” என்று தென்னாங்கூரில் புறப்பாட்டின் போது அர்ச்சகர் மாமா சொல்வது இப்போது நினைவுக்கு வந்தது. வைரமுடி சேவை. புறப்பாடுக்குப் பின்னர் தேரடி வரை குடுகுடுன்னு ஓடி வந்துடுவார். அங்கே ஒரு சின்ன நாதஸ்வரக் கச்சேரி நடக்கும். பின்னர் இரட்டைக் குடை சேவை ஆகும். இரண்டு பெரிய வெண்குடைக்குள் வைரமுடி சேவையில் கோபாலன் அருட்பார்வை அமுதம். பெரும்பாலும் கோயில் புறப்பாடு நடைதான். திரும்பும் போது தாலுகாஃபீஸ் ரோடு முனையில் நிற்கும் கடலை வண்டிக்காரரிடம் ஐம்பது காசுக்கு வ.கடலை கூம்பு வாங்கிக் கொண்டு காலியாவதற்குள் வீடு வந்து சேர்ந்துவிடலாம்.
அடுத்த நாள் அனுமந்த வாகனமும் தேரடிதான் புறப்பாடு. காலை பல்லக்கு புறப்பாட்டில் காளிங்க நர்த்தன சேவை. பல்லக்குக்குள் காளிங்க நர்த்தன கிருஷ்ணனை காணக் கண் ஆயிரம் வேண்டும். மாலையில் ஆண்டாள் நாச்சியார் திருக்கோலத்தில் கோபாலன். இரவு அனுமந்த வாகனத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. தேரடித் திடல் வடுவூர் துரைசாமி நூலகத்துக்கு முன்னால் வெடி போடுவார்கள். ஐந்து நிமிடத்துக்கு ”பட்பட்படார்பட்பட்படார்...” என்று தாளகதியில் சரமும் எல்லாவற்றிர்க்கும் மகுடம் வைத்தாற்போல கிளைவெடி என்றொரு வகையறாவும் உண்டு. மரம் போல நிற்க வைக்கப்பட்ட வெடியில் கிளைகளில் தொங்கும் கனிகள் வெடித்து கடைசில் உச்சியில் இருக்கும் பெரிய வெடி காது கிழிய அணுகுண்டு சோதனை நடத்தும். தாமரைக்குளம் தாண்டி வரும் மீன்கடைச் சந்து கடந்தால் வாணக்காரத் தெரு வரும். அப்பெருமக்களின் வெடி பங்களிப்புதான் இவ்வேடிக்கைகள். ஒரே நாளில் காளிங்க நர்த்தன கிருஷ்ணனாக, ஆண்டாளாக அனுமன் மேலே இராமனாக என்று விதம் விதமாக கோபாலன் தரிசனம்.
வாணக்காரத் தெரு வழியாகவும் யானை வாகன மண்டபம் செல்லலாம். அப்படிதான் வெங்கடாசலம் வண்டியில் அழைத்துக்கொண்டு செல்வார். “ஹே..ஹே”வுக்கு மட்டும் ஓடும் செல்ல மாடு அது. யானை வாகனத்தில் ராஜகோபாலன் ராஜா அலங்காரத்தில் சேவை. சங்கும் சக்கரமும் போட்ட நீலக்கலர் திரை திறக்க மண்டப ஓரத்தில் வண்டியில் அமர்ந்தே பார்த்துக்கொண்டிருப்போம். இரண்டு வேட்டுக்குப் பிறகு கம்பீரமாக உலா வருவார்.
கோரதம் கலர்க் கலர் சீரியல் விளக்குகளோடு தேரடியில் பார்த்துவிட்டு அன்று முழுவதும் திருவிளாக் கடை பார்ப்பதுதான் வேலை. கிருஷ்ண தீர்த்தம் அருகே ஜெயண்ட் வீல் ராட்டினம் போட்டிருப்பார்கள். “இன்னிக்கி எதுவும் வாங்க வேண்டாம்.. ஆத்துக்குப் போகலாம்...” என்று கோரதம் அன்று கையைப் பிடித்து தரதரவென்று ஒரு திருவிழாவுக்கு வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சோகமாக வாசல் படியில் உட்கார்ந்து ஆட்டீன் பலூன் வாங்கிக்கொண்டு போகும் சிறுவனைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது “அப்படியே தலையே பிச்சுண்டுடுத்தாமே...” என்று ரமா பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு வெளிறினேன். ஜெயண்ட் வீலில் சுற்றிய பக்கத்துக் கிராமப் பெண்ணின் பின்னிய கூந்தல் மாட்டிக்கொண்டு மண்டைஓட்டிலிருந்து மொத்தமாக பிய்த்தெறிந்துவிட்டதாம். அகோரம். ஊர் முழுக்க இரண்டு நாட்கள் இதே பேச்சாக இருந்தது.
மரணக்கிணறு என்று ஒரு விளையாட்டு. ரெண்டு ரூபாய் டிக்கெட் என்று நியாபகம். தேரடியிலிருந்து பஸ்ஸ்டாண்ட் செல்லும் சாலையில் பெரிய போஸ்ட் ஆஃபீஸ் முன்னால் கொட்டாய் போட்டிருப்பார்கள். இருபது முப்பது அடி ஆழத்திலிருந்து டூவீலரில் “டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”ரென்று டரியலாக மேலே ஏறிவருவார் கழுத்தில் கர்ச்சீப் கட்டிய ஆசாமி ஒருவர். அவர் ஏறுவதற்குள் பூர்வ பீடிகை அதிகம். ம்யூசிக் போட்டு அவர் வண்டியின் காதை இரத்தம் வர “டர்ர்...டர்ர்ர்..டர்ர்ர்ர்ர்...” என்று திருகி கொடுத்த காசிற்கு பத்து நிமிடம் நிற்க வைத்து வித்தை காட்டுவார். அதற்கு அடுத்ததாக கடல்கன்னி கொட்டாய். ஒரு ஜன்னலில் முகமும் அடுத்த ஜன்னலில் மீன் வாலுமாக ஒரு பெண் படுத்திருப்பாள். நடுவில் என்ன என்று அறியும் ஆர்வம் அப்போது இருந்தது. இப்போது விளங்கியது.
வெண்ணைத்தாழி முக்கியமான திருநாள். வெண்ணைத் திருடனை பல்லக்கில் தூக்கி வருவார்கள். பூவரசு இலையில் ஒரு பொட்டு வெண்ணை வாங்கி அவன் மேல் எறிவார்கள். பல்லக்கில் ஏறி வரும் தீக்ஷிதருக்கும் வெண்ணைக் காப்பு நடக்கும். “பின் பக்கம் வாடா...” என்று இழுத்துச்சென்று பின்னல் அலங்காரமும் முட்டி போட்டிருக்கும் அவனது பின்னழகையும் கண்டு ரசிப்பது பக்தர்களின் பொழுதுபோக்கு. மாலையில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டியார் அலங்காரத்தில் கையில் தராசோடு கோபாலன். பின்னர் அன்று இரவு வெட்டுங்குதிரை. ராஜா அலங்காரத்தில் செட்டித்தெருவில் வையாளி போவார்கள். அதாவது குதிரை ஓடுவது போல இங்குமங்கும் அந்தத் தெருவில் ஓடிவருவார்கள்.
அன்று பந்தலடியில் குறவன் குறத்தி ஆட்டமெல்லாம் உண்டு. விஸ்தாரமான நாதஸ்வர கச்சேரிகளும் நடக்கும். பெரியகோயில் திருவிழா என்பது சுற்றுப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் பெரும்விழா. ஒரு முறை கௌரி என்னுடன் வெ.குதிரைக்கு வந்தான். பந்தலடியில் குறவன் குறத்தி ஆட்டம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பொம்பளை வேஷம் போட்ட ஆம்பளைக் குறத்தியைப் பார்க்க ஆயிரம் ஆம்பளைகள் சுற்றி நின்று வேடிக்கை. கௌரியும் நானும் அதைக் கண்கொட்டாமல் இரசித்துக்கொண்டிருக்கும் போது இரவு பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. “போலாம் வா..” என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தேன். ஹரித்ராநதி நுழைவதற்கு முன்னர் சின்ன கான்வெண்ட் அருகில் ஒரு கட்டையில் அதற்கு மேலும் ஏதோ பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.
“டேய்.. போலாம்டா..”
“இன்னும் கொஞ்ச நேரம்.. போலாம்..”
“ரொம்ப லேட்... பன்னெண்டுக்கு மேலே ஆச்சுடா...”
“போலாம்.. போலாம்..”
நேரம் துரிதமாக ஓடிக்கொண்டேயிருந்தது. தூரத்தில் சைக்கிளில் இருவர் வருவது தெரிந்தது. உடனே கௌரி ஆர்வமாக எழுந்தான். உடனே என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.. “டேய் மாப்ள.. வா போவோம்...” என்று என்னை இழுத்துக்கொண்டு திரும்பவும் வந்த வழியே சைக்கிளை மிதித்தான். “டேய்.. நாம்ப இப்படிப் போகனும்..” என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்தேன்.
அந்த மயில் அதன் போலீஸ்கார மாமாவுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தது. அது தனியாகவோ அல்லது தோழிகளுடன் வருமெனக் காத்திருந்த கௌரிக்கு போலீஸுடன் வந்தவுடன் அட்ரலின் சுரக்க எஸ்கேப் ஆகியிருக்கிறான் என்று புரிந்தது. வீடு வரும் வரை அவனை வெறுப்பேற்றி வயிறு வலிக்கச் சிரித்தேன். அடுத்த சில நாட்கள் அர்த்த புஷ்டியுடன் “மாப்ள..” என்றாலே கன்னம் சிவந்தான் கௌரி.
திருத்தேர் பற்றி என்னுடைய முந்தைய மன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா முதல் அத்தியாயத்தில் எழுதிவிட்டேன். விடையாற்றி திருவிழாவில் இலக்கிய பட்டிமன்றங்களும், வீரமணி, சீர்காழி சிவசிதம்பரம் போன்றோரின் இறையிசைக் கச்சேரியும், அபூர்வமாக ஆர்கெஸ்ட்ராவும், புலவர் கீரன் போன்றோரின் உபன்யாஸங்களும் கேட்டது பற்றி விரிவாக வேறொரு பதிவில் பார்க்கலாம். நன்றி!
பங்குனிப் பெருவிழாவில் பெரிய திருநாட்கள் பற்றி என்னை எழுதத் தூண்டிய என் நண்பன் Rajagopalan Rengarajan க்கு இப்பதிவு சமர்ப்பணம்.
மன்னார்குடி மஹாத்மியங்கள் தொடரும்.......
படம்: இன்றைக்கு சிம்ஹ வாகனம். ராஜா அலங்காரத்தில் ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி, மன்னார்குடி.
பட உதவி: Vicky Vicky

Thursday, December 15, 2016

மன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி

சமையல்கட்டிலிருந்து கொல்லைக் கோடியில் இருக்கும் கிணற்றுக்கு போவதற்கு ஒரு ஒத்தையடிப்பாதை இருந்தது. அக்டோபர் நவம்பர் மழைக்கு சறுக்கியடிக்கும். வேனிற் கால கொளுத்தும் வெய்யிலில் கூட கால் சுடாது. கொல்லைகொரு கிணறு என்பது கிராமத்து வீடுகளின் ஆதி சம்பிரதாயம். ஒத்தையடிப் பாதையின் இரண்டு புறமும் அருகம்புல் கால் உரச மண்டியிருக்கும். "இன்னிக்கி சதுர்த்தி.. பூஜைக்குப் பறிச்சுண்டு வந்தேன்..." என்று பாட்டி மடியிலிருந்து கொத்து புல் எடுத்துப் போடுவாள். அதைத் தாண்டி பட்ரோஸ், வயலட்டும் ஆரஞ்சுமாக டிஸம்பர் பூச்செடிகள், செகப்பு செம்பருத்தி, நந்தியாவட்டை, எறும்பு ஊறும் செண்பகம் என்று இருமருங்கும் மலர்கள் மண்டிய வாசமிகு கொல்லை.

மழையில் சறுக்குகிறது என்று பின்னர் அந்த நடைபாதையை மட்டும்ரெண்டு கல் வைத்து சிமென்ட் வழித்துவிட்டோம். வெய்யிலுக்குச் சுட்டது, மழைக்கு சறுக்கவில்லை. ஆனால் கொல்லைக்குள் வந்தால் அமேசான் காட்டுக்குள் வந்தது போலிருக்கும். சித்திரை மாதத்தில் கூட சூரியனால் வேலை காட்ட முடியாத இடம். அணிலாடும் கிணற்றடி. குயிலோ அக்காக் குருவியோ அங்கிருந்து தெரியும் பாமணியாற்றுக்குக் குரல் கொடுத்து பேசிக்கொண்டிருக்கும் இடம்.
மரக்கிளையிடையில் சிந்தும் பௌர்ணமி இரவுகளில்.... வயதானவர்களுக்கு அபிராமி பட்டரும் அம்பாளும்.. ”மா.. தேவீ...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும்படியாகவும் வயதோடு வாலிபமாய் இருப்பவர்களுக்கு கயித்துக் கட்டில் போட்டு நேத்து ராத்திரி யம்மாஆஆஆ..... என்றும் வயதுக்கேற்றவாறு பலப்பல கற்பனைகளைத் தூண்டுமிடம். மதியமோ மாலையோ சில சமயம் சாரையும் சர்ப்பமும் கட்டிப்புரண்டு விளையாடும். சாயந்திர வேளைகளில் இந்த "நல்லது" களைப் பார்த்துவிட்டால் " நீலா.. ஒரு அகல் வெளக்கு ஏத்துடீ" என்ற பாட்டியின் கட்டளைக்கு கொல்லைப்புற துளசிக்கருகே நல்லெண்ணெயில் பஞ்சு திரி போட்ட அகல் எரியும்.
கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் குளித்தபோது தோள் பட்டைகள் வலுவாகவும் இரண்டு மலைகளைக் கட்டி இழுத்து வரும்படி தேகாரோக்யம் இருந்தது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ஆனால், குளிப்பது என்பது ஒரு சுறுசுறுப்பான சமாச்சாரமாக இருந்தது. சுற்றிலும் செம்பருத்தி, நந்தியாவட்டை பூச்செடிகளும், கன்றோடு வாழையும், நெடிதுயர்ந்த தென்னையும் பக்கத்தில் ஒரு பெரிய நெல்லி மரமும் சூழ இருக்கும் கொல்லைப்புறக் கிணற்றில் குளிப்பது என்பது குற்றால அருவியில் குளிக்கும் பேரானந்தம்.
முதல் முறை தலையில் ஊற்றிக்கொள்ளும் போது ஒட்டு மொத்த தேகமும் உதறிச் சிலிர்க்கும். மயிர்க்கால்கள் நட்டுக்கும். அடுத்தடுத்த வாளிகள் சுகவாளிகள். இன்னும் இப்படியே லட்சம் வாளிகள் ஊற்றிக்கொண்டாலும் கை அசராது. கண்ணிரண்டும் சிவந்துவிடும். விரல் நுனிகளில் தோலூறி வரிவரியாகிவிடும்.
ஒரு சமயம் கேணித் தண்ணீர் கொஞ்சம் கடுத்தது என்று "தம்பி... வானரம் மாதிரி ஏறி உட்காண்டிருக்கியே.. அந்த நெல்லிக் கெளையை ஒடிச்சு கிணத்துக்குள்ளே போடேன்... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்..." (கவனிக்க.... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்...) என்று நெல்லிமரக் கிளையை ஒடித்துப் போடச் சொல்லி கிணற்று நீரை கல்கண்டு நீராக்கினாள் பாட்டி.
பாத்திரங்களை அலம்பி கிணற்றுக் கட்டையில் வைக்கும் போது சிலசமயங்களில் கயிறு தட்டியோ வாளி தட்டியோ கிணற்றுக்குள் விழுந்துவிடும். அதை எடுப்பதற்கு கீழிருந்து மேலாகக் கிளைக் கிளையாக இரும்பில் கொக்கிகள் அமைத்துச் சின்ன ராட்டினம் போலிருக்கும் "பாதாளக் கரண்டி" பயன்படும். "வாணா விழுந்துடுத்து... பாதாளக் கரண்டி போட்டு எடுடா... சித்த வா..." என்று கேரம்போர்டில் ரெட்டை உள்ளே தள்ளி ஃபாலோ முயற்சிக்கும் போது கூப்பிடுவாள். உடனே எழுந்து ஓடவேண்டும். இல்லையேல் அஷ்டோத்ரசதம்தான்.
கிணற்றுக் கயிற்றுலிருந்து வாளியைக் கழட்டிவிட்டு பாதாளக் கரண்டியைக் கட்டி கீழே இறக்க வேண்டும். சுருட்டிச் சுருட்டி வட்ட வட்டமாக ஆட்டிக்கொண்டே இருந்தால் உங்கள் அதிர்ஷ்டப்படி ஐந்து நிமிடத்திலேயோ ஐம்பது நிமிடத்திலேயோ பாத்திரம் பாதாளக் கரண்டிக்கு தட்டுப்படும். அந்த இடத்தில் உசரக்கத் தூக்கி ஒரு தடவை உள்ளே போட்டு.. இடதும் வலதுமாகச் சுழற்றினால் அந்த பாதாளக் கரண்டியின் ஒரு கிளைக்குள் விழுந்த பாத்திரம் சிக்கிக்கொள்ளும். மீன் பிடிக்கும் லாவகத்துடன் சடாரென்று தூக்கக்கூடாது. பாத்திரத்தின் மேனி வலிக்காமல் தூக்கவேண்டும்.
சில வீடுகளில் பாதாளக் கரண்டி இருக்காது. "பாட்டி.. எங்காத்து கிணத்துல சொம்பு விழுந்துடுத்து.. பாதாளக் கரண்டி வேணூம்" என்று தெருமக்கள் யாரவது வந்து கேட்டால் "உங்காத்துலேர்ந்து ஒரு பாத்ரத்தைக் கொண்டு வந்து ரேழி மூலேல வச்சுட்டு... பாதாளக் கரண்டி எடுத்துண்டு போ.. அப்பத்தான் அது ஆப்டும்..." என்று சொல்லிவிடுவாள்.
கொண்டு போனவர்கள் பாதாளக்கரண்டியை மறக்ககூடாதென்பதற்காக பாட்டியின் தந்திரம் அந்த பாத்திரம் அடகு வைக்கும் உத்தி. பாதாளக்கரண்டியை சுருக்கு சரியாகப் போடாமல் கிணற்றுக்குள் தவற விட்டு ஜேம்ஸை இறக்கி எடுத்துத் தந்திருக்கிறார்கள். கழுத்தில் சிலுவையாடும் ஜேம்ஸுக்கு அப்போது ஐம்பது வயதிருக்கும். ஆறடிக்கு ரெண்டு விரக்கடை கம்மியான உயரம். அவர்தான் மனித பாதாளக் கரண்டி. கைலியை அவிழ்த்துவிட்டு கௌபீணத்துடன் கிணற்றுக்குள் குதிப்பார்.
இரண்டு முங்கு இல்லையேல் அதிகபட்சமாக மூன்று முங்குகளில் கையில் பாத்திரத்துடன் கரையேறுவார். ஒரு வீட்டில் வெள்ளிக் கொலுசு ஒன்று விழுந்துவிட்டது. "கரண்டிக்கு ஆப்டாதுடா..." என்று பாட்டி சொல்லிவிட்டாள். ஜேம்ஸைக் கூப்பிட்டார்கள். ”போன மாசம் ராயர் ஆத்துல பஞ்சபாத்ரம் விழுந்துடுத்து.. ஒரே முங்குல உத்ரிணியோட எடுத்துண்டு... ஜிங்குன்னு கிணத்துலேர்ந்து மேல ஏறிட்டான்”. இது போன்று கியாதி பெற்ற மனிதக் கரண்டி அவன். மொபைல் இல்லாத காலம். "இன்னிக்கு வரேன்னிருக்கான்..." " நாளைக்கு வருவானாம்..." என்று ஒரு மாதம் ஓடியது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாலைந்து மாமிகள் பாட்டியிடம் வாசல் படி மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். "ஊர்ல இருக்கிற கிணத்துத் தண்ணில முங்கி பாத்திரத்தல்லாம் எடுத்துக் கொடுத்தான். அவனுக்கு தண்ணிலயே சாவுன்னு எழுதியிருக்கே....". அடப்பாவமே... ஜேம்ஸ் குடிகாரனா? என்று நீங்கள் தேம்புவது தெரிகிறது. இவர்கள் டயலாக்கை முழுக்கக் கேட்போம்.
"ஆத்துல புதுத்தண்ணி தொறந்து விட்டாளோன்னோ... மேலப்பாலத்துக்கிட்டே கொழந்தை தவறி விழுந்துடுத்துன்னு யாரோ கதறியிருக்கா... இவன் அந்த வழியாப் போயிருக்கான்... தொபகடீர்னு குதிச்சு கொழந்தையைக் காப்பாத்தி கரையில கொண்டு வந்து அப்பாம்மாட்ட ஒப்படைச்சுட்டான். கொழந்தையை உச்சிமோந்த அம்மாக்காரி... அதோட காலைப் பார்த்துட்டு ஒரு கால்ல கொலுசக் காணுமேன்னுருக்கா... உடனே இவன் திரும்பவும் ஆத்துக்குள்ள குதிச்சுருக்கான்.. சட்ரஸ் பக்கத்துலே சுழி ரொம்ப ஜாஸ்தி.. புதுத் தண்ணி... காவு வாங்கும்னு சொல்லுவா.. ரெண்டு ஆழமான ஊத்துக் கெணறும் இருக்கோன்னோ... இவனைப் பிடிச்சு தலை குப்புற அழுத்திடுத்து... ஃபயர் சர்வீஸ்காரா வந்து.. கரையோட கரை தேடித் தேடி... நாலு மண் நேரத்துக்கப்புறம் கயித்தைக் கட்டி தூக்கியிருக்கா... பாவம்.. ஆயிரம் வாட்டி கிணத்துல குதிச்சு பாத்திரமெல்லாம் எடுத்துருப்பன்.. அதே கெணறு பிராணனை வாங்கிடுத்தே..."
பாழுங்கிணறு விழுங்கினால் அது அதன் சுபாவம்.பழகிய கிணற்றுக்கும் பழகாத கிணற்றுக்கும் வித்யாசம் உண்டோ?

Saturday, May 9, 2015

மன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்

மன்னையில் பொங்கலோடு பசுநெய்யாய் சேர்ந்த இன்னொரு விஷயம் சேரங்குளம் கிரிக்கெட் டோர்ணமென்ட். சிறிய திருவடி ஆஞ்சநேயர் கதாயுதம் போல பேட்டைத் தோளில் சார்த்திக்கொண்டு மேட்சுக்குக் கிளம்புவோம். முத்துப்பேட்டை ரோட்டோரம் செல்லும் ஆற்றங்கரைக் கரையில் சைக்கிளில் பேரணி போல சேரங்குளத்தை நோக்கிப் படையெடுப்போம். நடுவில் வரும் மயானத்தில் ப்ரேதம் எரிந்தால் சுப சகுனம். வெற்றி நிச்சயம். கையில் கண்டங்கத்திரி கட்டிக்கொண்டு அபரகாரியமாக யாராவது அஸ்தியில் எலும்பு பொறுக்கிக்கொண்டிருந்தால் மேட்ச் இழுபறி. இது சுசானக்கரை ஆரூடம்.

ஆற்றைக் கடக்க ஒரு சைக்கிள் பாலம் வரும். எதிர்த்தார்போல ஈர்க்குச்சியாய் யாராவது நடந்து வந்தால் கூட ஆற்றுக்குள் குதிக்கவேண்டும் இல்லையென்றால் சர்வ மரியாதையாக பின்னால் திரும்பவேண்டும். பெர்ண்டாட் ஷாவுக்கு யாரோ அனானி சொன்ன “முட்டாள்களுக்கு நான் வழிவிடுவதில்லை...” போன்ற டயலாக்குகள் எடுபடாது. அதில் ஏறி அக்கரையடைந்தால் சேரங்குளம். அங்கிருக்கும் பெருமாள் கோயிலுக்கெல்லாம் எட்டிப் பார்த்ததில்லை. மேட்ச்சே குறி. ஜெயிப்பதே பிரதானம். நேரே ஸ்கூல் க்ரௌண்ட். பெவிலியன் மரத்தடியில் ஸ்கூல் பென்ச்சை இழுத்துப்போட்டு உட்கார்ந்திருக்கும் ஸ்கோரர். வேஷ்டியிலோ முழுக்கால்சட்டையிலோ அவரவர் சௌகரியத்துக்கு அணிந்து கொண்டு உள்ளூர் அம்ப்யர்கள். ஹெச்சிசி என்று நாமகரணம் சூட்டப்பெற்ற எங்கள் ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் மன்னையில் பிரசித்தி பெற்ற டீம். அணியினரை லிஸ்ட் பண்ணலாம் என்றால் எஃப்பியிலேயே Rajagopalan Regupathy Rajagopalan Rengarajan AR Ramesh Kannan என்று ப்ளேயர்கள் தேறுகிறார்கள். இன்னொரு போஸ்ட்டில் எங்கள் டீமோடு கிரிக்கெட் விளையாடலாம்.

சேரங்குளம் பார்த்தா மாமாவுக்கு க்ரிக்கெட் வெறி. வேஷ்டியில் பௌண்ட்ரி லைனில் ஃபீல்டிங் போல ஏதோ செய்வார். மெனக்கெட்டு பந்து வராத திசையில் அவரை நிறுத்திவைத்தால் சோதனையாக பேட்டின் எட்ஜில் பட்டு அங்கே பாய்ந்து வரும். குனிவதற்கு கொஞ்சம் சிரமம். முதுகு பிடித்துக்கொள்ளுமோ என்று பயம். மனசளவிற்கு தேகம் இடம் கொடுக்காது. நடையோட்டமாகச் சென்று ஃபீல்ட் செய்யும் போது தேவி விட்டால் “பார்த்தாஆஆஆ... “ என்று ஊருக்கே எக்கோ கேட்கும்படி அவரது சகவயது கிரிக்கெட்டர் மரத்தடியிலிருந்து இரைவார். பார்த்தா மாமா ஆர்வமிகு சேரங்குளத்தார். இப்போது எப்படியிருப்பார் எங்கிருக்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கால் மற்றும் பந்து வீசும் முனைகளில் முள்வேலியும் மட்டை திசையில் பெவிலியனும் வாய்க்கப்பெற்ற சர்வதேச அரங்கம். மாட்டை மேயவிட்டுவிட்டு முண்டாசோடு சில பெரியவர்களும், அரை நிஜாரும் மேலுக்கு சட்டையில்லாத சில பொடியன்களும் சேர்த்து செலக்ட்டடாக ஒரு ஐம்பது பேர் ஆடியன்ஸ்.

1994 ஜனவரி. பொங்கல் தினம். டோர்ணமெண்ட் ஃபைனல். மைதானமெங்கும் சரமாரியாக ரன் மழை பொழிந்துகொண்டிருந்தது. ஓட்டங்கள் நினைவில் இல்லை. வழக்கம் போல் கோபால் நிதானமாக விளையாடினான். கோப்லி ரமேஷ் ஸ்ரீராம் என்று சப்போர்ட்டுன் நானும் களமிறங்கினேன். ஆத்தா பரமேஸ்வரி ஆசியில் அடித்ததெல்லாம் கனெக்ட் ஆகி நான்கும் இரண்டும் மூன்றுமாய் ரன்கள் குவிந்தன. கடைசி ஓவரிலோ என்னமோ ஜெயித்திருந்தோம். எனக்கு மேன் ஆஃப் தெ மேட்ச் அவார்ட் வழங்கி சிறப்பித்தார்கள். ரஸ்னாவும் ஒரு உள்ளங்கை உசர கோப்பையும் பரிசு. மனசுக்குள் ஜில்ஜில்.

கேரியரில் மட்டையை சொருகிக்கொண்டு மைதானத்திலிருந்து கிளம்பி சைக்கிளில் ஏறினேன். எதிரே ஊரிலிருந்து தெரிந்த பையன் ஒருவன் சைக்கிளில் அரக்கப்பரக்க வந்து கொண்டிருந்தான்.

“என்னாச்சு?”

“உங்க அக்காவுக்கு ஆண் கொழந்தை பொறந்திருக்காம். நீங்க மாமா ஆயிட்டீங்க...”

புல்லரித்துப்போனது. வீட்டுக்குப் பையனாய் திரிந்து கொண்டிருந்ததிலிருந்து முதல் ப்ரமோஷன் மாமா. அந்த ஆண் கொழந்தை Sabareesh Hariharanக்கு இன்னிக்கி பொறந்தநாள். எங்கேயோ ட்ரீட் கொடுக்கிறானாம். “மாமா.. டின்னருக்கு வா..” என்று குழந்தை நச்சரித்துக் கூப்பிடுகிறது. போய்ட்டு வரேன். பை.

Wednesday, September 17, 2014

மன்னார்குடி டேஸ்: ஜீவா துரை

”சாமீ.. எப்படியிருக்கீங்க?”

”நல்லாயிருக்கேன்.. நீங்க எப்டி இருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன்... ப்ளம் கேக் தரவா? சாப்டவா? வீட்டுக்கா?”

“வீட்டுக்குத்தான்...”

“பிள்ளைங்க வந்துருக்குதா?”

“ம்.. அதோ வண்டியில இருக்காங்க.. ”

”உள்ற வரச்சொல்லுங்க.. வண்டி எங்க நிக்கிது?”

“ஊஹும். எட்டிப் பார்த்தா தெரியாது. ட்ராஃபிக்கா இருக்குன்னு எஸ்பிஐ வாசல்ல நிறுத்தியிருக்கேன்... பிஸ்கெட்டெல்லாமும் குடுங்க... அஸார்ட்டடா.. சரியா?”

“கால் கிலோ போடட்டா? அரைக் கிலோவா?”

இப்படித் தொணத்தொணவென்று கேள்வி கேட்கும் இவர் பெயர் துரை. கால்கள் சக்கரமாய்ச் சுழல ஓடியாடி எல்லா கண்ணாடி சீசாவின் மூடியைத் திறந்து ரெவ்வண்டு பிஸ்கட் எடுத்து எடை போடுகிறார். ”டிங்..டிங்..” என்று சீசா மூடியின் ஜலதரங்க பின்னணி இசையுடன் அசார்ட்டடும் இன்ன பிற பேக்கரி ஐட்டங்களும் அவர் எடை போட்டு முடிப்பதற்குள் கடை வாசலிலேயே நின்று ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டுவோம்.

இவர் மன்னையின் ஜீவா பேக்கரிக்காரர். மேலராஜவீதியில் குள்ளப்ப முதலியார் ஜவுளிக்கடைக்கு ரெண்டு கடை தள்ளி கீழண்டை கடை. ஜீவா பிஸ்கட் பேக்கரி. ஆதிகாலத்திலிருந்து ஜீவாவும் க்ருஷ்ணா பேக்கரியும் மேலராஜவீதியின் தீனி அடையாளங்கள். க்ருஷ்ணா பேக்கரி வாசலில் கறுப்புச் சட்டைக்காரர்களின் சைக்கிள்களின் ஆதிக்கம் அதிகம். எடமேலையூர் சேகர் கறுப்புச் சட்டையானாலும் எனக்கு நெருக்கமானவர். அவருக்கு க்ருஷ்ணா என்றால் எனக்கு ஜீவா. ஜீவா துரை மிதவாதி. ஒரு கன்னத்தில் கொடுத்தால் அடுத்த கன்னத்தைக் காட்டுமளவுக்குச் சாந்தமாக இருப்பார். காலையில் நான் குளித்து வாசலில் நிற்கும்போது ஹரித்ராநதியில் குளித்துவிட்டுக் கடை திறக்க சைக்கிளில் பறப்பார் துரை.

துரை பேக் செய்துகொண்டிருக்கும் இதே அசார்ட்டட் பிஸ்கட்ஸின் ஒரு படி குறைச்சலான ஐட்டம் அப்போது வேறு ஒரு ரூபத்தில் கிடைக்கும். அதன் பெயர் ரொட்டித் தூளு. ஹரித்ராநதி கீழ்கரையில் ஒரு பேக்கரியின் கிச்சன் இருந்தது. கைலியும் முண்டா பனியனுமாய் இரண்டு அண்ணாக்கள் பீடிக் கை சகிதம் எப்போதும் ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒரு கண்டிப்பு கசியும். மருந்துக்கும் சிரிக்க மாட்டார்கள். “ரெண்டு ரூபாய்க்கு ரொட்டித் தூளு”ன்னு சில்லரையை நீட்டினால் பல வகை பிஸ்கட் கேக் தயாரிப்பிலிருந்து வெட்டிப் போட்ட மிச்சம் மீதியைப் பொருக்கி வைத்திருக்கும் தகர டப்பாவுக்குள் கையை விட்டு ரெண்டு பிடி ஒரு ஜவ்வுத்தாளில் போட்டுத் தருவார்கள்.

அந்தப் பிச்சைக்காரன் திருவோட்டிற்கு அவ்ளோ மவுசு. கும்பல் தூளுக்குப் பேயாய் அலையும். இதே ரொட்டித்தூளை ஒரு முறை துரையிடம் கேட்டதற்கு சுவைக்கக் கொடுத்ததுதான் ப்ளம் கேக். அன்று மலர்ந்தது அந்த பந்தம். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியிலிருந்து விலகி இருந்தது ஜீவா பேக்கரி. பள்ளி விட்டதும் அங்கு போக வேண்டும் என்று ஒரு நாள் நாக்கு கேட்டது. அதற்கு முன்னர் தினமும் வீடு திரும்பும் மகாத்மியத்தைப் பற்றி இங்கே ரெண்டு ரீல் சொல்லியாக வேண்டும்.

மன்னையில் சைக்கிளுக்கு ட்ரைவர் வைத்த ராயல் ஃபேமிலி நாங்களாகத்தானிருக்கும். நேஷனல் ஸ்கூலில் படித்த ஆறாவதிலிருந்து எட்டாவது வரை கோவிந்து எனக்கு சைக்கிள் ட்ரைவராக அருட் தொண்டாற்றினார். சம்பிரதாயத்துக்கு சட்டைக்கு நடு ரெண்டு பட்டன் போட்டிருப்பார். மேலும் கீழும் காத்து வாங்கும். அதற்கு மேல் அழுக்காக அந்த வேஷ்டியில் ஒரு நூல் இருக்காது. ஓடி உந்தி சர்க்கஸ் காட்டி வேஷ்டி அவிழாமல் சைக்கிளில் ஏறும் வித்தகர் அவர். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கல்லில் ஒற்றைக் காலை ஊன்றி பகீரதத் தவமாய் நேஷனல் ஸ்கூல் வாசல் காம்பௌண்ட் ஓரம் சாய்ந்திருப்பார். ஸ்கூல் விட்டு என் தலை வெளியே தெரிந்ததும் ”சீக்கிரம் ஒக்காரு...” என்று பேதி புடுங்கும் அவசரத்துடன் பேய்த்தனமாக ஓட்டுவார். சீட் பெல்ட் இருக்கும் சைக்கிள் அந்தக் காலத்தில் தயாரிப்பில் இல்லை. எந்தக் காலத்திலும் கிடையாது என்று இன்று புரிகிறது.

அழகப்பா தாளகத்திலிருந்து நேரே பந்தலடி தாண்டி பால் சொஸைட்டி மூ.சந்தில் திரும்பி, அரிசிக்கடை சந்து பின்புறம் வந்து, மீன் மார்க்கெட் கடந்து, தாமரைக்குளம் வழியாக உப்புக்காரத் தெரு மாரியம்மன் கோயிலை கன்னத்தில் போட்டுக்கொண்டு, சின்ன கான்வெண்ட் ஏறி, வலது பக்கம் திரும்பினால் கும்பகோணம் ரஸ்தா ஹரித்ராநதிக் கரையைத் தொட்டுச் செல்லும். இதுதான் அவரது வாடிக்கையான ராஜபாட்டை. ”இன்னிக்கிதான் கடேசி. இனிமே கேட்கப்டாது”ன்னு லட்சத்திச் சொச்சம் தடவையாக ஆட்காட்டி விரலை ஆட்டி ரெண்டு ரூபாய் தாளைக் காலமே கொடுத்திருந்தாள் பாட்டி. அன்றைக்கு கேக் ஆசையில் அவரைத் திசை திருப்பிவிட்டேன்.

பந்தலடி நெரிசலில் “இப்படி சரிப்படாது சொன்னா கேட்கிறியா?” கரகரவென்று பல்லை அரைத்து உஷ்ணமானார். காலை உந்தி முந்தி நாட்டு மருந்துக் கடையை தாண்டி ஜீவாவை ஜாக்கிரதையாக அடைந்தார். துள்ளிக் குதித்து இறங்கி கடைக்குள் ஓடி ”ரொட்டித் தூளிருக்கா?” என்ற என் பாமரக் கேள்விக்கு “ப்ளம் கேக்கு சாப்பிடு..”ன்னு பேப்பரில் சுற்றித் தின்னக் கொடுத்தவர் துரை. அன்றிலிருந்து தொடர்ந்த பந்தம். க்ரீம் கேக் வாரம் ஒரு நாள். பவானி சித்தியுடன் கையைப் பிடித்துக்கொண்டு கடைத்தெருவுக்கு போனால் இரண்டு துண்டு சோழி வடிவ பிஸ்கட் நடுவில் வெள்ளையாய் க்ரீம் நசுக்கிய பிஸ்கட் பத்து வாங்கித் தருவாள். கையில் அடக்கிக்கொண்டு வழிநெடுக கொறித்துக்கொண்டே வீட்டிற்கு திரும்பலாம்.

இரவு ஏழரை மணிக்கு ஒரு முறை அகோர பசி. அப்போதுதான் சொந்த சைக்கிள் வாங்கி ஓட்டும் பாக்கியஸ்தனாகியிருந்தேன். ஜீவாவில் கேக் வாங்கலாம் என்று நெருங்கிய சமயத்தில் சைக்கிளோடு உருட்டிக்கொண்டு கடைவாசலில் தெண்டனிட்டேன். பசியில் இரண்டு செகண்ட் ப்ளாக் அவுட் ஆனது போல இருந்தது.

ஓடோடி வந்து தூக்கி முட்டிக் கைகால் தட்டிவிட்டு, தண்ணீர் தெளித்து, குடிக்கக் கொடுத்து, இன்’பன்’ ஊட்டியவர் துரை. அப்புறம் பல நாட்கள் அங்கே கேக் மொக்கியிருக்கிறேன். கேக் வாயோடு சிரித்திருக்கிறேன். ஊர்க் கதை பேசியிருக்கிறேன். மழைக்கு ஒதுங்கியிருக்கிறேன். பசியாறியிருக்கிறேன். ருசித்து ரசித்திருக்கிறேன்......

“சாமீ.. இந்தாங்க...” துரையின் கரகரக் குரல் பின்னணியில் ஓடிய காட்சிகளை வெட்டி விட்டது. யாரது ஜீவா கேக்கரி எதிரில்.....

"எதிர்த்தாப்புல வர்றது குமாரு மாதிரியிருக்கே...”

“ஆமா... குமாருதான்...”

“சைக்கிள்ல பின்னால பொட்டி கட்டிக்கிட்டு பன்னும் கேக்கும் பிஸ்கட்டும் எடுத்துக்கிட்டுப் போவாரில்ல..”

“இப்பெல்லாம் யாரும் லைனுக்கு போவறதில்லை..”

“குச்சி ஐஸ்.. பால் ஐஸ்.. பொட்டியெல்லாம்...”

“அதெல்லாம் லைன்ல பார்க்கிறது கஷ்டம் சாமீ.. சைக்கிளை மிதிச்சு.. தெருத்தெருவா போயி... அப்படியெல்லாம் கஸ்டப்பட யாருக்கும் பிடிக்கலை.. அதோ கடை உள்ற அந்தப் பொட்டியைப் பார்த்தீங்களா? அதுல ஐஸ் இருக்கு..”

“ஓ...சரி..சரி... இப்பெல்லாம் காலையில தெப்பக்குளத்துக்கு குளிக்க வர்றீங்களா?”

“இல்லீங்க.. வீட்லயே குளிச்சுக்கிறது...”

“ஏன்?”

“குளத்துல ஒரே பாசியாயிருக்கு. நாறுது.. குப்பையா ஒதுங்குது.. ஆத்தாங்கரையிலும் தண்ணியில்லை. யாரும் ஒளுங்கா பராமரிக்கிறதில்லை. யாருங்க எந்த தொளில்ல தர்ம நியாயம் பார்க்கிறாங்க..” என்று கேள்வியாய்ப் பார்த்தார். குற்றம் செய்யும் சமுதாயத்தின் மீது ஒரு தார்மீகக் கோபம் அவர் கண்களில் தெரிகிறது. குங்குமம் துலங்கும் நெற்றியும் பளீர்ச் சிரிப்பும் என்னை பற்றிக்கொண்டது.

“வரேன் துரை...”க்கு வாயெல்லாம் பல்லாக வழியனுப்பி வைத்தார். இன்னும் பத்து வருடம் கழித்து வந்து பார்த்தாலும் துரை அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருப்பார் என்றே தோன்றுகிறது. மனசுல பாரம் இல்லாமல் நேர்மையாய் வேலை பார்த்துப் பிழைக்கிறார். என்றும் மார்க்கண்டேயனாக இருப்பதில் வியப்பில்லையே!

ம்.. முக்கியமாக ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். துரை ஜீவா பேக்கரி ஓனரில்லை. நித்ய தொழிலாளி.

‪#‎மன்னார்குடி_டேஸ்‬

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails