Showing posts with label அருளாளர்கள். Show all posts
Showing posts with label அருளாளர்கள். Show all posts

Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 15 : பசியாற்றிய பரமன்

அந்த நீண்ட வீட்டின் வாசல் திண்ணையில் ஒருவர் படுத்திருந்தார். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அங்கே நின்று கணபதி பசிக் கொடுமையை பிரஸ்தாபித்து ஒரு ஸ்லோகம் படித்தார். திண்ணை ஆசாமி உருண்டார். உறக்கம் உதறினார். எழுந்து உட்கார்ந்தார்.

“யாரப்பா நீங்கள்? உள்ளூர்வாசி போலத் தெரியவில்லையே! உங்களுக்கு இந்த ராவேளையில் என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“நாங்கள் ஆந்திர தேசத்தவர்கள். க்ஷேத்ராடமாக காஞ்சீபுரம் வந்தோம். பின்பு அங்கிருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்திருக்கிறோம். இதோ இவன் என்னுடைய இளைய சகோதரன். கொடும் பசியில் துடியாய்த் துடிக்கிறான். இந்த அகாலத்தில் சத்திரம்சாவடியெல்லாம் மூடிவிட்டார்கள். அன்னம் கேட்ட வீட்டிலெல்லாம் இன்றைக்கு ஏகாதசியென்று அடுக்களையை அலம்பிவிட்டு நித்திரைக்குப் போய்விட்டார்கள். உங்களால் இவனுக்கு அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்க முடியுமா?” என்று கேட்டார்.

“ஆஹா! இது தெய்வ சங்கல்பம். தெய்வ சங்கல்பம்” என்று பரவசமடைந்தார் அந்த திண்ணை ஆசாமி.

கணபதியும் சிவராம சாஸ்திரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர் தொடர்ந்தார்..

”என்னுடைய மனைவி இப்போதுதான் விரதம் முடித்தாள். விரதம் முடித்த பின்னர் ஒவ்வொரு தடவையும் இரண்டு பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து தக்ஷி்ணை கொடுப்பதாக வேண்டுதல். ஏகாதசியாதலால் இரவு போஜனத்திற்கு பிராமணர்கள் கிடைக்கவில்லை என்று கவலையாய் பூஜையறையில் இருந்தாள். கொஞ்சம் இந்த திண்ணையில் அமருங்கள். உள்ளே அழைக்கிறேன்” என்று துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

பத்து விநாடிகள் அமைதியாய் கழிந்தது. சிவராம சாஸ்திரிக்கு வயிறு கடபுடவென்று பசியில் திட்டியது.

“வாருங்கள்..வரவேண்டும்.. வரவேண்டும்..” என்று உள்ளிருந்து தம்பதி சமேதராய் அழைப்பு திண்ணைக்கு வந்தது.

அவ்வீட்டின் நடுக்கூடத்தில் திறந்த மித்தம் இருந்தது. அதன் நடுவில் காவி தீட்டப்பட்டத் துளசிமாடமும் அதனருகில் அகல் விளக்கும் சுடர் விட்டு எரிந்தது. வீடே அலம்பி துடைத்துவிட்டாற் போல துப்புரவாக இருந்தது. பூஜை முடிந்ததற்கு அடையாளமாக வாசனாதிகளின் நறுமணம் நாசியை நிறைத்தது. அவரது மனைவி மடிசார் கட்டில் கையெடுத்துக் கும்பிடும் படியாக லக்ஷ்மி கடாக்ஷமாக இருந்தார்கள். கணபதிக்கு நிறைவாக இருந்தது.

இலை போட்டு விருந்து பரிமாறினார்கள். அருகிலிருந்து தம்பதிகள் இருவரும் அனுசரணையாகப் பந்தியைக் கவனித்தார்கள். கூட்டு, கறி, பாயஸம், ரசம் என்று சிவராம சாஸ்திரி ”யதேஷ்டம்... யதேஷ்டம்” என்று மூக்கில் ஒரு பருக்கை வரும் வரை சாப்பிட்டார். கணபதிக்கு பசியேயில்லை. சாஸ்திரத்திற்கு கொஞ்சம் சாப்பிட்டுக் கையலம்பினார். சிவராம சாஸ்திரியின் அகோரப் பசி அடங்கியது.

இருவரையும் நிற்க வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர். தாம்பூலமும் தக்ஷிணையும் கொடுத்தார்கள். அங்கிருந்து விடைபெற்று இருவரும் ஒரு சத்திரத் திண்ணையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. பட்சிகள் இரை தேடப் பறந்தன. அருணை மலையடிவாரத்தில் பரமாத்மாவிடம் சமர்ப்பிப்பதற்காக ஜீவனைக் கழிக்கும் சில ஜடாமுடி அடியார்களின் நடமாட்டம் தெரிந்தது. நேற்றிரவு தடபுடலான விருந்து அளித்தவர்களுக்கு நன்றி சொல்ல இருவரும் புறப்பட்டார்கள். அந்தத் தெருவில் பல முறைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் நேற்று பார்த்த அந்த வீடு மட்டும் அகப்படவில்லை. கணபதிக்கே தனது நினைவாற்றலின் வழுக்கலைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. தப்பாக இரண்டு வீடுகள் ஏறி இறங்கினர். மொத்தமே இருபது இருபத்தைந்து வீடுகள் இருந்த அந்த தெருவில் விஜாரித்ததில் ”அறுபது வருஷமா இங்கே இருக்கேன். நீங்க சொல்லும் அடையாளத்தில் இங்கே யாரும் ஜாகையில்லையே...” என்று ஒரு மேலுக்கு துண்டு போர்த்திய வயோதிகர் ஒருவர் சொன்னார். கணபதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இது இறைவனின் திருவிளையாடல் என்று புரிந்தது. அந்த வீதியிலிருந்து திரும்பிப் பார்த்தால் அருணை மலை கம்பீரமாக நிற்பது தெரிந்தது.

ஜோதி ஸ்வரூபனான சிவபெருமானே அங்கே மலையாய் நிற்கிறான். உள்ளொளி பெருக்கினால் அம்மலையில் அக்னி ஸ்வரூபமாய் சிவனிருப்பது நமக்கு பிடிபடும். கோயில் கர்ப்பக்கிரஹத்தில் குடியிருக்கும் லிங்க ரூபமும் பரந்து நிற்கும் மலையும் ஈஸ்வரனே என உணர்ந்தார் கணபதி. ஹர..ஹர.. என்று சகோதரர்கள் இருவரும் அங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். ஆத்ம பிரதக்ஷிணம் செய்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் கணபதி அருணாசலேஸ்வரரின் பரம பக்தரானார். அவரது தவ வாழ்வில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது.

சிவராம சாஸ்திரியும் கணபதியும் மூன்று நாட்களுக்கு அந்த சத்திரத்தில் தங்கினர். யாத்ரீகர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் அனுமதியில்லை. கணபதி அங்கு வசிக்கும் தர்மிஷ்டர்களை இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுக்கொரு நாள் அவர்களுக்கு அன்னமிட முடியுமா என்று தேடினார். நான்கு பேர் கிடைத்தனர். அவர்களும் பகல்பொழுதில் மட்டும் போஜனம் அளிக்க முன் வந்தனர்.

கணபதிக்கு ஒரு பொழுது பிடி உணவு போதும். ஆனால் இளையவர் சிவராம சாஸ்திரியால் பட்டினி கிடக்க முடியவில்லை. “நீயானும் வீட்டிற்கு செல்லேம்பா..” என்று கெஞ்சினார் கணபதி.

இந்த இக்கட்டான நிலையில் இறைவனைத் துதித்து பாடிய ஸ்லோகத்தின் சாராம்சம்.

“இறைவா! வாழ்வாதாரத்தை தர மறுக்கும் நீயா எனக்கு ஆனந்தமயமான முக்தியளிக்கப் போகிறாய்? ஒரு பொட்டு மஞ்சளை கொடுக்க மறுக்கும் வியாபாரி கடையையே தூக்கிக் கொடுத்துவிடுவானா?”

இதிலெல்லாம் சற்றும் மனம் தளராத கணபதி அண்ணாமலையில் தனது தீவிர தவத்தைத் தொடர்ந்தார். அருணாசலேஸ்வரரைத் துதித்து ஆயிரம் ஸ்லோகங்கள் அடுக்கடுக்காகப் புனைந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்லோகத்தை அருணாசலேஸ்வரர் சன்னதியில் நின்று பண்ணோடு பாடுவார். படித்தவர்களும் பாமரர்களும் நிதமும் இந்த அற்புத ஸ்லோகங்களைக் கேட்க பெருமளவில் கூடுவர். கார்த்திகை திருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்னர் ”ஹர சஹஸ்ரம்” என்ற இந்த ஆயிரம் ஸ்லோகங்களை பூர்த்தி செய்தார்.

ஆயிரம் ஸ்லோகங்களைப் பூர்த்தி செய்தவுடன் ஊரின் சில முக்கியஸ்தர்கள் கணபதிக்கு அங்கிருந்த சம்ஸ்கிருதப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு ஏற்பாடு செய்தனர். சிவராம சாஸ்திரியையும் போஷிப்பதாக ஊக்கமளித்தார்கள். இச்சமயத்தில் சிவராம சாஸ்திரி “அண்ணா! நான் வீட்டிற்கு திரும்புவதாக உத்தேசித்துள்ளேன்” என்று திரும்பினார். கணபதி மறுப்பேதும் சொல்லாமல் சட்டென்று ஒப்புக்கொண்டார்.

அதுவரை கணபதிக்கு தமிழில் எழுத்துக்கூட்டக் கூடப் பரிச்சியமில்லை. விண்ணில் அமாவாசையிலிருந்து அரைவட்ட நிலவு ஆவதற்குள் தமிழ் கற்றுக்கொண்டு அம்மாணவர்களுக்கு சம்ஸ்க்ருதத்தை அர்த்தப்பூர்வமாகப் போதித்தார். அவரது விசாலமான அறிவும் எதையும் கப்பென்று கற்பூரமாய்ப் பிடித்துக்கொள்ளும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. மக்கள் அவரிடம் கோஷ்டியாகக் கூட ஆரம்பித்தனர். பின்னாலேயே எப்போதும் ஐந்தாறு பேர் ஊர்வலம் வந்தார்கள். இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்துகள் அவரது தவத்தைக் கெடுத்தன.

ஒரு நாள் கணபதி அருணை மலையில் ஏறிய போது...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_15‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 14 : கணபதியைக் காப்பாற்றிய இந்திரன்

ராஜகுடும்பம் வசிக்கும் மந்தேசா அரண்மனை கூட கோபுரங்களும் அலங்கார மாடங்களும் நிறைந்து பிரம்மாண்டமாகக் காணப்பட்டது. எழில் நிறைந்தது. உலகத்தின் ஒட்டுமொத்த வசதிகளையும் உள்ளடக்கியது. இம்மென்றால் நான்கு பேர் ஓடி வந்து உபசரிக்கவும் உம்மென்றால் ரெண்டு பேர் கைகட்டி நிற்கவும் என்று பெரிய ஆட்படையே குற்றேவலுக்குக் காத்திருந்தது.

உபாஸனை, ஜபம் தபம் போன்றவைகளை நித்யானுஷ்டங்களாகச் செய்துகொண்டு ஏனைய லௌகீக வாசனைகளிலிருந்து தள்ளியே இருப்பவர்களுக்கு இந்தமாதிரியான படாடோப அரண்மனை வாசம் சுத்தமாகப் பிடிப்பதில்லை. மந்தேசாவில் ராணிமார்கள் விசாலாக்ஷியை உள்ளங்கையில் வைத்துக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் இதில் இம்மியளவும் இஷ்டமில்லாத விசாலாக்ஷி அதிவிரைவில் தனது பிறந்தகம் திரும்பினார்.

கணபதிக்கும் இந்த டாம்பீக வாழ்வு சீக்கிரத்தில் கசந்தது. அவரும் மூட்டையைக் கட்டிக்கொண்டு தனது தம்பி சிவராம சாஸ்திரியுடன் புவனேஷ்வர் சென்றார். அளவுக்கதிகமான உபசாரத்தில் அன்பான குருவையும் அவரது மனைவியையும் அரண்மனையை விட்டு விரட்டிவிட்டோமோ என்று சந்தேசாவின் ராஜகுடும்பம் மனம் வருந்தியது.

புவனேஷ்வரில் ஒரு மாத காலம் ஜபதபங்களிலும் உக்கிரமான விரதங்களினாலும் கழிந்தது. அங்கே தந்தவாணி ராஜா கணபதியை அவரது தர்பாருக்கு கணபதியை அழைத்து மரியாதை செய்ய விரும்பினார். மந்தேசா ராஜாவின் நெருங்கிய ஸ்நேகிதர் இவர். அடிக்கடி லிகிதம் எழுதி பேசிக்கொள்வார்கள். மந்தேசா மகாராஜா கணபதியைப் பற்றி தந்தவாணி அரசருக்கு எழுதியிருந்தார். ஆகையால் அவர் கூப்பிட, அந்த மரியாதைக்கு கணபதியும் அவரது தம்பி சிவராம சாஸ்திரியும் அங்கு விஜயம் செய்தார்கள். விருந்திற்கு பின்னர் தன்மண்டல் ரயில்வே ஸ்டேஷனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

மாலை மங்கி இரவு தொடங்கும் நேரம். ரயில் தண்டவாளங்கள் பக்கத்தில் இருவரும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஏதேதோ யோசனைகள். திடீரென்று பேய்க் காற்று வீசியது. எங்கிருந்தோ வந்த கருமேகங்கள் சூழ்ந்து அந்தப் பிராந்தியமே பிரளய காலம் போல கும்மிருட்டாக ஆகியது. பளிச் பளிச்சென்று அக்கொன்றும் இங்கொன்றுமாக மின்னல் வெட்டியது. பல விஷயங்களை சிந்தித்துக்கொண்டே தண்டவாளத்தோடு நடந்தவர்கள் இன்னும் நான்கடியில் எதிரில் வரும் ரயில்வே பாலத்தைக் கவனிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் பின்னால் ஒரு சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கிறார்கள். ரயில் நெருங்கிவிட்டது. இருவரும் இன்னும் கவனிக்கவில்லை. ஆபத்து. அப்போது....

அவர்களது சிந்தனையைக் கலைத்து இழுத்து வருவது போல அந்தப் பிரதேசமே ஒளிரும் வண்ணம் பயங்கரமான மின்னல் ஒன்று ஆகாயத்தில் சடசடவென்று கிளைவிட்டுப் பிரிந்து கோடி சூர்யப் ப்ரகாசமாய் வெட்டி அணைந்தது. அதைத் தொடர்ந்த காது கிழியும் இடியோசையால் அண்டப் பெருவெளியே அதிர்ந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட சகோதரர்கள் இருவரும் எதிரே பாலமும் பின்னால் வெகு அருகில் சரக்கு ரயில் வருவதையும் கவனித்துத் தண்டவாளத்திலிருந்து விலகி ஓடி தப்பித்துக்கொண்டார்கள். “தேவேந்திரன் இன்று தனது வஜ்ஜிராயுதத்தை எறிந்து காப்பாற்றினான்..” என்று இதழோரம் புன்னகை பூக்க தம்பியிடம் சொன்னார் கணபதி.

ரயில்வே ஸ்டேஷனில் எக்கச்சக்க கூட்டம். கல்கத்தா செல்லும் வண்டிதான் முதலில் ப்ளாட்ஃபார்முக்கு வருவதாக இருந்தது. அதற்கு பயணச்சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் தென் திசை ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். கல்கத்தா வண்டி சென்றபின்னர் தான் தென் திசை ரயிலுக்குப் பயணச்சீட்டு விநியோகிக்கப்படும் என்றதால் ரயில்வே ஸ்டேஷனின் மரபெஞ்சில் வெறுமனே அமர்ந்திருந்தார்கள். சிவராம சாஸ்திரி “அண்ணா! நாம் பிரயாகை செல்லலாமே!” என்று அதிரடியாக பயணத் திட்டத்தை மாற்றினார். கணபதி ”வேண்டாம்.. ஊருக்குச் செல்லலாம்..” என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அவசரவசரமாக கல்கத்தாவுக்கு பயணச்சீட்டு வாங்கி பிரயாணப்பட்டார்கள்.

அபூர்வமாக மனைவியைப் பார்க்கவேண்டும் என்று ஊருக்கு செல்ல ஆசைப்பட்ட அண்ணாவை திசை மாற்றி கல்கத்தாவுக்கு அழைத்து வந்துவிட்டோமே என்று மனம் வருந்தினார் சிவராம சாஸ்திரி. கணநேரமும் தாமதிக்காமல் உடனே மீண்டும் அங்கிருந்து ஸ்ரீகாகுளத்திற்கு பயணப்பட்டு அங்கிருந்து பொடிநடையாக ஊருக்கு சென்றுவிட தீர்மானித்து வந்து சேர்ந்தனர். ஸ்ரீகாகுளத்தில் இருவரும் கால் வைக்கும்போது மழை பொத்துக்கொண்டு கொட்டியது. வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட கணபதியின் மனம் இப்போது குளிர்ந்து மாறியது.

தென்பகுதியில் இருக்கும் எதாவது ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்குச் சென்று தவமியற்ற விரும்பினார். சிவராம சாஸ்திரி விரைந்து சென்று விஜயவாடாவிற்கு டிக்கெட் எடுத்தார். அதற்குள் அங்கிருந்து கிளம்பிய விஜயவாடா செல்லும் ரயிலில் ஓடிப்போய் ஏறிய சகோதரர்கள் இருக்கையில் அமர்ந்ததும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ஏதோ ஒரு இறை சக்தி தங்களை இவ்விதம் இயக்குகிறது என்ற பொருள் அந்த சிரிப்பில் தொக்கி நின்றது.

ரயில் சிறிது தூரம் நகர்ந்ததுமே கணபதி முனி சடசடவென்று மேல் பர்த்தில் ஏறி சிவபஞ்சாட்சர ஜபம் செய்யத் துவங்கிவிட்டார். மறுநாள் பொழுது விடிந்தபோது விஜயவாடாவில் இறங்கி க்ருஷ்ணா நதிதீரத்தில் புண்ணிய ஸ்நானம் செய்தார்கள். அப்படியே கனகதுர்க்காவை தரிசித்தார்கள். அங்கேயிருந்த சிவகங்கை மடத்தில் தங்கினார்கள். கணபதியின் முக தீட்சண்யத்தைப் பார்த்து சிவகங்கை மடத்தின் தலைவர் அவர் ஒரு அறிஞர் என்று இனம் கண்டுகொண்டார். அவரைச் சிறப்பித்து அங்கிருந்து வழியனுப்பினார்.

விஜயவாடாவிலிருந்து காலஹஸ்தி ரயிலேறினார்கள். காலஹஸ்தீஸ்வரர் தரிசனத்துக்குப் பிறகு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கும் சகோதரர்கள் இருவரும் பயணித்தார்கள். ஏகம்பரேஸ்வரரின் அருட் தரிசனம் கிட்டியது. கோயிலிலிருந்து வெளியே வந்து காஞ்சீபுரம் கடைவீதியில் நாராயண ஜோஸ்யர் என்பவரை அகஸ்மாத்தாக சந்திக்கின்றனர்.

சிறிது நேர சம்பாஷனையில் நாராயண ஜோஸ்யர் கணபதியின் கூர்மையான ஜோதிடப் பாண்டித்தியத்தைக் கண்டு அசந்து போனார். “தயை கூர்ந்து தாங்கள் எனக்கு ஜோதிஷ சாஸ்திர நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும்” என்று கணபதியைப் பணிந்தார் நாராயண ஜோதிடர். பிரதி உபகாரமாக கணபதிக்கு அன்னபானங்கள் கொடுத்து அனுதினமும் கவனித்துக்கொண்டார். ஆற்றங்கரையோரமாக இருந்த ஆஞ்சநேயர் கோவிலில் சூரியன் மறையும் வரை கடும் தவம் புரிவார். இரவு நேரங்களில் நாராயண ஜோஸ்யருக்கு ஜோதிட நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பார். இப்படி தவத்திலும் ஜ்யோதிஷ உபாத்தியாயத்திலும் காஞ்சீபுரத்தில் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு நாள் நரசிம்ம சாஸ்திரி பணம் அனுப்பி வீட்டிற்கு வரும்படி இருவரையும் அழைத்தார். இம்முறை கணபதிக்கு வீடு திரும்ப ஆர்வமில்லை. தம்பி சிவராம சாஸ்திரி ”கணபதி நீயும் கூட வருவதாக இருந்தால் வீட்டிற்கு செல்லலாம்” என்று வைராக்கியமாக இருந்தார்.
இரவு ஜ்யோதிஷ சந்தேக நிவர்த்தி வகுப்பு முடிந்து சாப்பிடும்போது நரசிம்ம சாஸ்திரி ஊருக்கு அழைப்பதைப் பற்றி பேச்சு வந்தது. “நீங்கள் இருவரும் பஞ்சபூதத் தலங்களில் இரண்டை தரிசித்துவிட்டீர்கள். மீதமிருக்கும் மூன்றையும் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புங்களேன்” என்று திருப்பிவிட்டார் நாராயண ஜோதிடர்.

“இன்னும் பார்க்கவேண்டியவை எவை?” என்று கேட்டார் சிவராம சாஸ்திரி.

“திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரம் அப்புஸ்தலம், திருவண்ணாமலை அருணாசலம் தேயுஸ்தலம், சிதம்பரம் ஆகாயஸ்தலம்”

“இதில் இங்கிருந்து பக்கத்தில் இருப்பது எந்த க்ஷேத்ரம்”

“திருவண்ணாமலை அருணாசலம்” என்றார் நாராயண ஜோதிடர்.

அருணாசலம் பெயரைக் கேட்டவுடனேயே கணபதியின் உடலில் ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது. உள்ளம் பூரித்து உவகை பொங்கியது. பக்திரசம் ததும்ப ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி தன்னை அந்த திக்கில் இழுப்பதாகத் தோன்றியது. இலையில் இருப்பதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு அதற்கு மேல் சாப்பிட தோன்றாமல் கை அலம்பினார்.

ஜோதிடர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது ”அருணாசலத்திற்கு செல்வோம்.. வா” என்று தம்பியின் தோளைத் தொட்டார் கணபதி. இருவரும் ஊரடங்கிய அந்த இரவில் திருவண்ணாமலைக்குக் கிளம்பினர்.

*
கணபதி தனது தம்பியுடன் அருணாசலத்தில் வந்து இறங்கியது ஒரு நவராத்திரி பண்டிகைக் காலம். கடைசி நாள். சிவாகம சம்பிரதாயத்தில் சிவன் கோயில்களில் இறைவனைத் தரிசித்த பின்னரே இறைவியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது. அதுபோல அண்ணாமலையிலும் அருணாசலேஸ்வரரைத் தொழத பின்னர் அபீதகுஜாம்பாளைத் தரிசிக்க வேண்டும். ஆனால் ஒரு சக்தி கணபதியைக் கொக்கி போட்டு இழுக்க நேராக அபீதகுஜாம்பாள் சன்னிதிக்கு விரைந்தார்.

புஷ்பாலங்காரத்தில் கர்ப்பகிரஹத்தில் ஜெகஜ்ஜோதியாக அருள்பாலித்தாள் அம்பாள். திருவிளக்குகள் சிந்திய ஒளியில் அபீதகுஜாம்பாள் தங்கக் கிரீடத்தில் சிரித்த முகத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சிதருவது தெரிந்தது. மல்லியும், ரோஜாவும், சாமந்தியும், சம்பங்கியும் மாலை மாலையாக அணிந்திருந்தாள். இந்தத் திருக்கோலத்தைக் கண்டு தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்திருந்தார் கணபதி. அப்போது அம்பிகையின் கழுத்திலிருந்த சில மாலைகள் கழன்று பூமாரியாக பொழிந்தது. அது நல்ல சகுனமென்று பேரானந்தத்தில் திளைத்தார் கணபதி. மனசு கரைந்து கண்கள் ஊற்றெடுத்து கன்னங்கள் வழியாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அசைவற்று அங்கேயே இருந்த கணபதி கொஞ்ச நேரத்திற்குப் பிறகு உமையம்மையை விட்டு விலக மனமில்லாமல் ஸ்வாமி சன்னிதி சென்றார்.

அங்கே நின்ற சிறிதுநேரத்தில் பட்டென்று வெளியுலகத் தொடர்பு விட்டுப்போய் பக்தியெனும் பேரின்பசாகரத்தில் மிதந்தார். இதுவரையில்லாத அளவிற்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. “சிவராமா! நான் இந்த ஸ்தலத்தை விட்டு வருவதாக இல்லை. இங்கே தான் இனிமேல் தவமியற்றப்போகிறேன். என் தவத்திற்கான பலனை நான் இங்கு அடைவேன் என்று மனசு சொல்கிறது” என்று நெகிழ்ந்தார். அருணாசலேஸ்வரர் அவர் சன்னிதியை விட்டு அகலாதவாறு கணபதியைக் கட்டிப்போட்டார். எவ்வளவு நேரம் நிற்கிறோம் என்ற கால அளவில்லாமல் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட நிஷ்டையில் இருப்பது போல புறம் தவிர்த்து அகத்தில் குளிர்ந்தார்.

சிவராம சாஸ்திரிக்கு வயிறைக் குடைந்து பசித்தது. ஆனால் கணபதி அண்ணாமலையார் சன்னிதியை விட்டு வெளியே வருவதாக இல்லை. “பசியில் பிராணன் போய்விடும் போலிருக்கிறது...” என்று கணபதியை சுரண்டினார் சிவராம சாஸ்திரி. இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில்லரையை எடுத்துக்கொடுத்து “எதாவது வாங்கி சாப்பிடு...” என்று கோயிலுக்கு வெளியே அனுப்பி வைத்தார். முன்னிரவு நேரம். கொடுத்த காசிற்கு ஒரு பழக்கடையில் நான்கு பூவன் பழம் வாங்கி சாப்பிட்டார். தீராப் பசி. பழத் தோலிலிருக்கும் நரம்பை உரித்துச் சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. இதற்குள் கோவிலிலிருந்து தரிசனம் முடித்து வெளியே வந்த கணபதியிடம் “அண்ணா.. இன்னும் அசுரப் பசியாக இருக்கிறது.,.” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டார். கணபதி கவலையுற்றார். ”சத்திரம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்...” என்று சொல்லிக்கொண்டே வீதியில் இறங்கினார்.

வழியில் பார்த்த ஒரு சத்திரம் ஆளில்லாமல் காற்றாடியது. வாசலில் ஒத்தையாளாய் அமர்ந்திருக்கும் பரதேசியிடம் ஏனென்று கேட்க வாயெடுக்கும் வேளையில் “ஓ! இன்றைக்கு ஏகாதசியப்பா... அன்னசத்திரம் எதுவும் இனிமேல் திறந்திருக்காது...” என்றுவிட்டு இன்னும் கொஞ்சம் சில்லரையைக் கையில் அழுத்தி பழங்கள் வாங்கிச் சாப்பிடக் கொடுத்தார். இந்த முறை எட்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டார். அப்போதும் சிவராம சாஸ்திரியின் அகோர பசி தீர்ந்தபாடில்லை. மீனாட்சி கல்யாணத்தில் குண்டோதரனுக்கு வந்த பெரும் பசியைப் போல அவருக்குப் பசித்தது. கோயிலைச் சுற்றிய சன்னிதித் தெருக்களில் “இந்தச் சிறுவனுக்கு யாரேனும் உணவிடமுடியுமா?” என்று யாசிக்க ஆரம்பித்தார். தம்பியின் பசி வேதனை அவரை போவோர் வருவோரிடம் கையேந்த வைத்தது. அன்று ஏகாதசியாக இருந்ததால் பல வீடுகளில் இராச் சாப்பாடில்லை. விளக்கணைக்கப்பட்டு கதவு அடைத்துவிட்டார்கள்.

சிவராம சாஸ்திரியின் கண்களில் பசி தெரிந்தது. இது என்ன திருவிளையாடல்? இப்போது என்ன செய்வது? என்று செய்வதறியாது கையைப் பிசைந்து நின்றார் கணபதி.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_14‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 13 : சதுரங்க ஆட்டம்: அஷ்டதிக்கஜர்கள்

... அது ஒரு மாலைப் பொழுது. தொடுவானத்தில் பொன்னிறமாக தங்கம் மலர்ந்து மனதை மயக்கும் அமைதியான சூழல். இடையறாத சிவபஞ்சாட்சர ஜபத்திற்கு பின் லேசாகக் கண்ணிமைகளைத் திறந்தார் கணபதி. பக்கத்துத் தூணோரத்தில் சார்த்தியிருந்த அவரது மூட்டை முடிச்சுகள் கலைந்து கிடந்தன. அதில் சொருகி வைத்திருந்த சொற்ப பணத்தையும் யாரோ சுருட்டியிருந்தார்கள். இடுப்பு வேஷ்டியில் முடிந்திருந்த கால்காசு அரைக்காசு சில்லரைகளும் பழைய வேஷ்டி அங்கவஸ்திரங்களும்தான் மிஞ்சின. சதாசர்வகாலமும் சர்வேஸ்வரனின் ஸ்மரணையிலே இருப்பவருக்கு பணம் காசில் துளிக்கூட நாட்டமில்லை. திரும்பவும் கண்கள் தானாக மூடியது. வாய் “நமசிவாய” என்று ஜெபிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிஷ்டைக்குப் போய்விட்டார்.

வைத்தியநாத் கோயிலுக்கு அன்றாடம் ஸ்வாமி தரிசிக்க வருபவர் சுரேஷ் மித்ரா. தீர்க்கமான கண்களுடன் தேஜஸ்வியாக ஊரார் வணங்கும்படியான தோற்றம். கோயிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கணபதி அனுதினமும் மும்முரமாக ஜெபம் செய்வதைப் பார்ப்பார். அவருடன் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு அருகிலேயே சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். கணபதி பகல் பொழுதுகளில் ஒரு பொட்டுக் கூட இமை திறக்கவே மாட்டார். நித்யமும் இப்படியே சென்றதால், ”இன்று இவரைப் பார்த்துப் பேசியே தீரவேண்டும்” என்று தீர்மானம் பண்ணிகொண்டு ஒரு நாள் இரவு வரை அங்கேயே அசையாமல் வைராக்கியத்துடன் உட்கார்ந்திருந்தார். கணபதி கண்ணைத் திறந்தவுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சில நாட்கள் பழகியபின் “இராப்பொழுதுகளில் இங்கே மண்டபத்தில் படுத்து உறங்குவதை விட என் வீட்டில் நீங்கள் தங்கிக்கொள்ளலாமே!” என்று உபசாரமான அழைப்பு விடுத்தார். “சரி” என்று ஒப்புக்கொண்டு சுரேஷ் மித்ரா வீட்டில் சில இரவுகளைக் கழித்தார் கணபதி.

சுரேஷ் மித்ரா அம்பாள் உபாசகர். தீவிர சாக்தர். அவருக்கு காணும் யாவையும் சக்தி மயம். மந்த்ர மஹோததியில் தாராவின் வழிபாட்டு மந்திரங்களை தப்பும்தவறுமாக போட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு சக்தி வழிபாட்டில் கரை கண்டவர். வம்சாவளியாக அவர்கள் தாராவைத் துதித்துக்கொண்டிருக்கும் ஒரு ரகஸிய மந்திரத்தை கணபதிக்கு உபதேசித்தார். அவரது வீட்டில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் கணபதியின் கனவில் ஈஸ்வரன் பிரசன்னமானார். ஆனால் அவர் அப்போது என்ன சொன்னார் என்பது கணபதிக்குப் புரியவில்லை.

இந்த ஈஸ்வரானுக்கிரக சொப்பனத்திற்குப் பிறகு காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவரை நெட்டித்தள்ளியது. ஆனால் கையில் தம்படி காசில்லை. ஈஸ்வரனை நம்பித் தொழுவோரை அவன் லேசில் விட்டுவிடுவானா? காசிக்குப் போக காசுக்கு புதிய வழிபிறந்தது. கணபதி காசிக்கு காசு சம்பாதித்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

வைத்தியநாத்திற்கு அருகில் கார்வல் என்ற சிற்றூரில் ஒரு ஜமீன்தார் இருந்தார். அவர் ஒரு செஸ் பைத்தியம். அவருடைய பங்களாவில் எட்டு செஸ் ஆட்டக்காரர்களை ஜாகை வைத்து போஜனம் போட்டு சம்பளம் கொடுத்து அஷ்ட திக்கஜாஸ் என்று பெயரிட்டு சர்வ மரியாதைகளோடு போஷித்தார். அனைவரும் ஆட்டத்தில் விற்பன்னர்கள். சதுரங்கப் பலகையில் ரதகஜதுரகபதாதிகளுடன் குட்டி ராஜ்ஜியமே நடத்துபவர்கள். அந்த அவையில் நுழைந்த கணபதியை “இந்தக் கவிச்சிங்கத்திற்கு சதுரங்கம் ஆடத்தெரியுமா?” என்று சாதாரணமாகக் கேட்டார் அந்த ஜமீன்தார். ”ம்..பார்க்கிறேன்..” என்ற கணபதியிடம் “என்னுடைய அவையை அஷ்டதிக்கஜாஸ் என்று எட்டு சதுரங்க விற்பன்னர்கள் அலங்கரிக்கிறார்கள். அவர்களில் ஒரே ஒருவரோடு போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அது போதும்..” என்று கொக்கிப் போட்டு இழுத்தார். பதிலுக்கு “எட்டு பேருடனும் ஒரே சமயத்தில் விளையாடுகிறேன்...” என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார் கணபதி. ஜமீன்தாரால் நம்ப முடியவில்லை. ”மெய்யாகவா?” என்று மீண்டும் மீண்டும் ஐந்தாறு முறை கணபதியுடன் உறுதியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு தயாரானார்.

ஜமீன் ”யாரங்கே?” என்றதும் அவைக்கு நடுவில் எட்டு சதுரங்கப் பலகை கொண்டு வரப்பட்டு கீழே அமர்ந்திருந்த கணபதியைச் சுற்றி வைக்கப்பட்டது. பலகைக்கு ஒருவராக அஷ்டதிக்கஜாஸ் அலங்காரமாக எதிர்புறம் அமர்ந்தார்கள். எட்டு பேருடன் சுழன்று சுழன்று காய் நகர்த்தி சதுரங்கமாடினார் கணபதி. முதல் பலகையில் கறுப்பு ராஜாவுக்கு ஆடினால் அடுத்த பலகையில் வெள்ளை ராஜாவுக்கு ஆடினார். இப்படி பலகைக்குப் பலகை வித்தியாசமாக இருந்தது. எட்டு பலகையிலிருந்தும் ஒவ்வொரு சுற்றுக்கும் காய்கள் வெட்டப்பட்டு தரையில் உருண்டன. அரை நாழிகையில் அத்தனை பலகையிலும் எதிராளியின் ராஜாவுக்கு செக் வைத்திருந்தார் கணபதி. நிமிர்ந்து ஜமீனைப் பார்த்தார். அவை ஸ்தம்பித்தது. அந்த ஜமீன்தார் ”இப்படி ஒரு திறமையா?” என்று விழிகள் விரிய ஆச்சரியப்பட்டார்.

எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்ய, ராஜா “கணபதி! நீங்கள் ஒரு அபூர்வ பிறவி. இப்படியொரு அசாத்திய திறமைசாலியை நான் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. எனது சமஸ்தானத்தில் இப்படி ஒரு போட்டி நடைபெற்றதும் இல்லை. இனிமேலும் நாங்கள் இதுபோலப் பார்க்கப்போவதுமில்லை. இந்த சிறிய சன்மாணத்தைஏற்றுக்கொண்டு எங்களை பெருமைப்படுத்த வேண்டும்” என்று கையிலிருக்கும் பித்தளை தாம்பாளம் நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பரப்பி பணிவாக நின்றார்.

கணபதி புன்னகைத்தார். பணம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இல்லறத்தில் இருந்தாலும் தீவிர ஜபம் கடும் தவம் என்று முனிசிரேஷ்டராக வாழ்ந்துகொண்டிருப்பவர். ”மன்னிக்கவும்...” என்று இரு விரல்களால் பத்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டார். அதுதான் அந்த இடத்திலிருந்து காசிக்கு ரயில்பயணச் சீட்டின் தொகை. ”நன்றி. நான் புறப்படுகிறேன்” என்று காசிக்கு கிளம்பினார் கணபதி. இதுவரை நடந்தவைகளை நம்பமுடியாமல் அனைவரும் கணபதி சென்ற திக்கையே அதிசயமாக பார்த்துக்கொண்டே நின்றனர்.

இம்முறையும் காசியில் தவம் செய்வதற்கான அனுகூலமான சூழ்நிலையில்லை. காசியில் தன் மாமா தாத்தா பவானி சங்கரத்துடன் அயோத்திக்குக் கிளம்பினார். அயோத்தியை நெருங்கும்போது பவானி சங்கரத்திற்கு கடும் வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. காசியில் உயிரை விட்டால் முக்தியடையலாம். ஆனால் அயோத்தியில் பிராணனை விட்டுவிடுவோமோ என்று தவித்தார் பவானிசங்கரம். பவானி சங்கரத்தை காசியில் விட்டுவிட்டு கான்பூருக்கு சென்று மூன்று மாதங்கள் தொடர் தவத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் ஒரு உன்னதமான மனிதரைச் சந்தித்தார். அவர் பெயர் லக்ஷ்மண சாஸ்திரி. பொதுஜனத்திற்கு சித்த ஸ்வாதீனமில்லாதவர் போல இருந்தாலும் அனைத்தும் கற்றுணர்ந்த மஹா ஞானி.

ஆன்மிகத்தில் உச்ச நிலையை எட்ட நிறைய குறிப்புகளை கணபதிக்கு பாடமாகப் புகட்டினார். “இவ்வுலகில் எந்த வஸ்துவைப்பார்த்தாலும் அதை பரப்பிரம்மமென உணர்” என்று அத்வைத சித்தாந்தத்தை உபதேசித்து அருளினார்.

தான் எங்கு இருந்தாலும் அந்த முகவரியை தந்தைக்கு அனுப்ப தவறியதில்லை கணபதி. ஒரு நாள் நரசிம்ம சாஸ்திரி தனக்கு கண் பார்வை மிகவும் மங்கி வருவதாகவும் உடனே கிளம்பி கலுவராயிக்கு வரும்படியும் லிகிதம் எழுதியிருந்தார். ஊருக்கு திரும்புவதற்கு போதிய பணமும் அனுப்பியிருந்தார். கலுவராயிக்குத் திரும்பிய கணபதிக்கு ஒரு ஆச்சரியம். மந்தேஸா மகாராஜா பல பரிசுகளோடு நரசிம்ம சாஸ்திரியிடம் கணபதியின் காவ்ய கண்ட சான்றிதழை பத்திரமாகச் சேர்ப்பித்திருந்தார். தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தந்தையாக குளிர்ந்திருந்தார் நரசிம்ம சாஸ்திரி.

உத்தர பாரத தீர்த்தயாத்திரைகளை முடித்துக்கொண்டு கணபதி வீடு திரும்பிய வருடம் 1900. கலுவராயி கிராமத்தில் அவரைக் காண ஒரே தள்ளுமுள்ளு. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று சூழ்ந்து கொண்டார்கள். அவருடைய தீர்த்தயாத்திரை மற்றும் காவ்ய் கண்ட பரீக்ஷையின் கதைகளை விரும்பிக் கேட்டார்கள். ஆர்ப்பரித்தார்கள். மாலையிட்டார்கள். வணங்கினார்கள். வாழ்த்தினார்கள். ஆசீர்வதித்தார்கள். நரசிம்ம சாஸ்திரி பெருமைக் கடலில் மூழ்கினார். மனைவி விசாலாக்ஷி மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. கொஞ்ச காலம் கலுவராயி திருவிழாக்கோலம் பூண்டது.

மந்தேசா மஹாராஜா கணபதியை தனது தர்பாரிலேயே தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்பினார். இங்கே நரசிம்ம சாஸ்திரி கண் பார்வை மங்கி ரொம்பவும் கஷ்டப்பட்டார். கணபதி அந்திமக்காலத்தில் இருக்கும் தன் தகப்பனாருக்கு சேவை செய்ய விரும்பினார். மந்தேசா ராஜா விடுவதாகயில்லை. பால்யத்திலேயே பெற்ற தாயை இழந்த கணபதி தந்தையை இறுதிக்காலத்தில் தவிக்கவிடக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருந்தார். பதினைந்து மாதங்கள் அவருக்கு அருகாமையில் அமர்ந்து அனுதினமும் பணிவிடைகள் செய்தார். அந்த நேரத்தில் பொழுதை வீணடிக்காமல் ஆயுர்வேதத்தைப் படித்துக் கரைத்துக் குடித்தார். தந்தையின் கண் நோய்க்கு மருந்தும் கண்டுபிடித்து சொஸ்தப்படுத்தினார்.

இதில் தேறிய நரசிம்ம சாஸ்திரி “அப்பா கணபதி! நீ உன் மனைவியுடன் நந்திகிராமத்திற்கு சென்று ஒரு வாரம் க்ருஷ்ணம்மா நாயுடுவோடு தங்கு. அப்புறம் அங்கிருந்து மந்தேசா சென்று எதிர்வரும் தெலுங்கு வருடப் பிறப்பை ராஜாவோடு விமரிசையாகக் கொண்டாடு” என்று ஆசீர்வதித்து இருவரையும் அனுப்பிவைத்தார். கணபதியும் விசாலாக்ஷியும் மார்ச் 1902ம் வருடம் மந்தேசாவை வந்தடைந்தார்கள்.

மந்தேசா அரண்மனையில்.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_13‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 12 : காவ்ய கண்டர்

கணபதிக்கு அம்பிகா தத்தரை வாரிவிட லட்டான வாய்ப்பு கிடைத்தது. தத்தர் இலக்கணப் பிழையுடன் பாடிவிட்டார். கணீரென்று ஒரு ஸ்லோகத்தை ஆரம்பித்தார் கணபதி.

”அமிர்தமான பொருளைக் கண்டு நகைக்கிறது உமது கவிதை. தேனைக் குறை சொல்லி அதை உண்ட அதரங்களைப் புகழ்கிறது உமது வாய். தாராவின் புகழ் பாடிக்கொண்டிருப்பதால் அவளுக்கு தனது மேனியில் பாதியினை அளித்த உமையொருபாகனை மறந்தீரோ?” என்று அம்பிகா தத்தருக்கு எசக்கவிதை பாடினார் கணபதி.

அவையில் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. அந்தப் பண்டிதக் குழாம் அசைவற்று அமர்ந்திருந்தது. அம்பிகா தத்தர் சம்ஸ்க்ருதத்தில் பெரிய ஆள். ஊர் உலகம் மெச்சும் அறிஞர். மஹா பண்டிதர். இன்று அவரை எதிர்த்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு ஒரு இளம் பிள்ளை வார்த்தை விளையாடுகிறது. இதுவரை இப்படியாகப்பட்ட சிறுவர்களிடம் அவர் உரையாடியதில்லை. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டார். கண்களில் கோபம் கொப்பளிக்க கத்தினார்.

“ஓ மதம் பிடித்த யானையே! நீ அர்த்தமில்லாமல் பிளிறி தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை உசுப்புகிறாய். அது எழுந்தால் உன் மத்தகஜத்தில் ஏறி உன்னை அடித்துக் கொன்று உன் மூளையைத் தின்றுவிடும்.” கணபதியின் பெயருக்கு இணையாக மதம் பிடித்த யானையே என்று சொற்களைப் போட்டுக் கன்னாபின்னாவென்று ஏசினார். அவருடைய ஆங்காரத்தில் ஹரிசபையில் கடும் உஷ்ணம் நிலவியது.

இப்போது திட்டிப் பாடிய இந்தத் துக்கடாக் கவிதையிலும் தவறு செய்தார் அம்பிகா தத்தர். கோபம் அறிவை மறைத்தது. கணபதி இந்த இலக்கணப் பிழையையும் சுட்டிக் காட்டித் தன் பங்கிற்கு மீண்டும்

“ஓ மாமரத்தின் மீதமர்ந்த காகமே! வாயைச் சற்று மூடிக்கொண்டிரு. அப்போதுதான் உன்னைக் குயில் என்று இவ்வுலகம் போற்றும்” என்று பதில் கவிதையால் அடித்தார். ”வாயைத் திறக்காதே. திறந்தால் உன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடும்” என்கிற அர்த்தம் தொணிக்க பாடினார் கணபதி.

அம்பிகா தத்தரின் கோபம் சுறுசுறுவென்று உச்சிக்கு ஏறியது. எழுந்து நின்று கோபாவேசமாகத் தூண்கள் கிடுகிடுக்க

“ஏ மின்மினிப் பூச்சியே, இரவில் தானே நீ ஒளிர்வாய். பகலில் இங்கென்ன உனக்கு வேலை?” என்று கணபதியைப் பார்த்து வார்த்தைகளால் சுட்டார்.

அரங்கம் அதிர்ந்தது. யானை சிங்கம் என்று விலங்குகளை உதாரணம் காட்டி சண்டையிட்டவர்கள் இப்போது புழு பூச்சிக்கு இறங்கியிருந்தார்கள். இதற்கு கணபதியின் பதில் என்ன என்று அவையோர் அவர் அமர்ந்திருக்கும் திக்கைப் பார்த்தார்கள்.

”அட விளக்கே! கூண்டு வீட்டிற்குள்ளே மட்டும்தானே நீ ப்ரகாஸமாய் எரிவாய். வெளியே வந்தால் வீசும்காற்றினால் படபடக்கப்பட்டு கணநேரத்தில் அணைந்தொழிவாயே!” என்று அழுத்தம் திருத்தமாக இகழ்ந்தார்.

இருவரும் வாய்ச்சண்டையை விடுவதாகயில்லை. கணபதியை அம்பிகா தத்தரிடம் அறிமுகப்படுத்திய சிதிகண்டர் பொறுமை இழந்தார். விலுக்கென்று எழுந்தார். ” கவி சிரேஷ்டர்களே! இந்தச் சண்டையை இதோடு நிறுத்துங்கள். உங்களுடைய குலத்தைப் பற்றிக் கேலியாக ஆளுக்கொரு கவி புனைந்து இதை நிறுத்திக்கொள்ளுங்கள்..” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அம்பிகா தத்தர் முனுக்கென்று ஆரம்பித்தார். “தென்னகத்து அந்தணர்களெல்லாம் கள் குடித்து பெண்களின் மடியில் வீழுந்து கிடப்பவர்கள்..” என்று எக்காளமிட்டார். பதிலுக்கு கணபதி “வங்காளத்து கௌடர்களெல்லாம் மீனுக்கு விலையாக காசையோ உயிரையோ எதாகிலும் தாரை வார்ப்பார்கள்” என்று கவி படைத்தார். மீனை வைத்துக் கவுடர்களை பகடியாடினதும் அம்பிகா தத்தருக்கு பிடித்துப் போயிற்று.

“கணபதி! நீ அசாத்திய திறமைசாலியப்பா. உன்னுடைய அருவிபோல் பொழியும் கவிகளைக் கேட்டு இந்த “ஹரிசபை” இவ்வளவு நேரம் கட்டுண்டு கடந்தது. எதுகையும் மோனையும் உன் ஸ்லோகங்களில் துள்ளி விளையாடுகிறது. பலவித பாவங்களையும் ரசங்களையும் உன் கவிதையில் முடிந்து எங்களுக்கு ரசிக்கத் தருகிறாய். காதுக்கு இனிமையாகவும் மனசுக்கு இதமாகவும் புத்திக்கு அர்த்தபுஷ்டியுடனும் இருக்கிறது. உன்னைப் பெருமைப் படுத்த இச்சபை பெருமையடைகிறது” என்று பேசினார். கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

அவை நடுவில் அகண்ட தீபம் ஏற்றினார்கள். கணபதிக்கு ஆளுயர மாலை அணிவித்தார்கள். மங்கள வாத்தியங்கள் முழங்கின. ஹரிசபையின் தலைவர் “காவ்ய கண்ட” என்ற பட்டத்தை வழங்குவதாக அறிவித்தார். அனைவரும் அதை ஆமோதித்து “வாழ்க! வாழ்க!!” கோஷமிட்டார்கள். ஹரிசபை மங்களகரமாக இருந்தது. கணபதிக்குக் கிடைத்தப் பட்டம் தங்களுக்குக் கிடைத்தது போலவே அங்கு குழுமியிருந்த பண்டிதர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொண்டார்கள். காவ்ய கண்டர் என்பதற்கு தனது கண்டக் (தொண்டை) குழியில் கவிதையை எப்போதும் தேக்கி வைத்திருப்பவர் என்று பெயர். அதாவது எந்தப் பொருளிலும் விரல் சொடுக்குவதற்குள் கவி பாடும் திறமை படைத்தவர்.

”பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தைக் காட்டிலும் உன்னதமாக கவிதை என்கிற வித்தை மனிதகுலத்துக்கு வாய்த்தது. இறையருள் மிஞ்சி நிற்கும் ஒருவரால்தான் இப்புவியில் அதில் சிறந்துவிளங்க முடியும். அப்படி விளங்குபவர்கள் மேன்மையானவர்கள். நவத்வீபா ஜனங்களாகிய நாங்கள் உங்களை அப்படிப்பட்ட மேன்மை பொருந்திய உத்தமகவியாக தேர்ந்தெடுக்கிறோம். விசாகப்பட்டிணம் கலுவராயி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமத் கணபதி சாஸ்திரியாகிய நீங்கள் காளிதாஸன் போன்ற ஆதிகாலத்துக் கவிகள் அடைந்த புகழடைந்துச் சிறந்து விளங்குவீர்கள் என்று வாழ்த்தி “காவ்ய கண்ட” என்கிற உன்னத பட்டத்தை இந்நாளில் உங்களுக்கு அளிக்கிறோம்” என்று எழுதி பட்டயம் வழங்கினார்கள்.

கணபதியை அவைக்கு அழைத்து வந்த சிதிகண்டர் பூரித்துப்போனார். கூட்டத்தின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரம் பிடித்தது. அம்பிகா தத்தர் வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார். கணபதி தவ சிரேஷ்டர். இத்தகைய புகழ்ச்சிக்கும் இதற்கு முன்னர் அம்பிகா தத்தர் தொடுத்த இகழ்ச்சிக்கும் மனதைச் சாயவிடாதவர்.

இந்தச் சான்றிதழை மந்தேசா ராஜாவிடம் அனுப்பி தனது தந்தை நரசிம்ம சாஸ்திரிக்கு அனுப்பப் பணித்தார்.
நவத்வீபாவிலிருந்து வெளியே வரும்போது அலங்கார வாசலில் ஒரு குரல் கேட்டது.
”என்னோடு வருவீர்களா காவ்ய கண்டரே?”

திரும்பிப் பார்த்த கணபதி முனிக்கு ஆச்சரியம். நவத்வீபாவில் முதன்முதலில் தனக்கு ஒரு நாள் இரவு அறையில் தங்குவதற்கு ஏற்பாடளித்த குலபின்யா நின்றுகொண்டிருந்தார்.

“எங்கே?”

“முர்ஷிதாபாத். நான் அங்கே ராஜாவின் தர்பாரில் முதன்மைப் பண்டிதனாயிருக்கிறேன். நீங்கள் அங்கே வந்து எங்களையெல்லாம் பெருமைப்படுத்தவேண்டும்” என்று வேண்டினார்.

முர்ஷிதாபாத்தில் அரசன் வெகுவிமரிசையாக பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றான். உற்சாகமான பண்டிதர்கள் கணபதியுடன் சம்ஸ்க்ருத காவியங்கள் பேசிக் களித்தார்கள். மன்னன் மேலும் சிறிது நாட்கள் கணபதியை அரண்மனையில் தங்க ஏற்பாடு செய்தான். ஒரு வருட காலமாக தவமியற்றாமல் இருந்ததால் கணபதி சீக்கிரமாக அங்கிருந்து கிளம்ப முடிவுசெய்தார். அங்கிருந்து கிளம்பி வைத்தியாத் சென்றார். அங்கு நிலவிய தபோ சூழ்நிலையில் உடனே ”நமசிவாய” என்ற சிவபஞ்சாட்சர ஜபத்தில் இறங்கினார்.

ஒரு நாள் சலனமில்லாமல் ஆழ்ந்த ஜபத்தில் மூழ்கியிருந்த போது.......

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_12‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 11 : பிறைச்சந்திரனை முத்தமிட்ட எறும்பு

நவத்வீபா “ஹரிஸபா”வில் கணபதியின் பாண்டித்யம் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச் சுவர்களும் ரசிக்கும்படி அம்பிகா தத்தரும் கணபதியும் கன சுவாரஸ்யமாக தர்க்கம் செய்கிறார்கள். இங்கு புதிதாய் வருபவர்கள் அப்படி அந்த தூண் பக்கத்தில் இருக்கும் சந்து இடத்தில் சப்தமில்லாமல் அமர்ந்துகொள்ளுங்கள்.

“வருடத்தில் ஒரு நாள் கௌரி சிவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்...”... இது இரண்டாவது சமஸ்யம் என்று கணபதியை நோக்கி கையை ஆட்டினார் அம்பிகா தத்தர்.

“விநாயகர் சதுர்த்தி அன்று விண்ணில் தோன்றும் நிலவைப் பார்த்தால் துன்பம் பல வந்து சேரும் என்று கணேசபுராணம் சொல்கிறது. நான்காம் பிறை. சந்திரசேகரனாகிய சிவன் தன் சிரசில் தாங்கியிருப்பதால் உமையம்மை அன்று ஒரு நாள் சிவபெருமானின் வதனத்தை பார்க்கமாட்டாள்....” என்று கவி பாடினார். கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.
“ம்.. மூன்றாவது.....” இதில் கணபதி சறுக்கலாம் என்று வேடிக்கை பார்த்தார்.

”இது ஜாதகக் கட்டத்தில் வரும் புதிர். ஒரு குழந்தையின் ஜாதகத்தில் ராகு கோணத்திலும் குரு மூன்றிலும் குஜன் ஏழிலும் இருந்து சூரியன் சந்திரன் இருவரும் லக்னத்தில் சேர்ந்திருந்தால் அந்தக் குழந்தை பிழைக்காது*. இதுவே சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது....” அவிழ்க்க சிக்கலான இந்த முடிச்சுக் கவிக்கு கணபதியின் பதில் சுடச்சுட வந்ததும் அவையோர் எழுந்து கரகோஷித்து மரியாதை செய்தனர். அரங்கத்தின் உற்சாகம் அடங்க கொஞ்ச நேரம் ஆனது.

“அமைதி....அமைதி.. இப்போது நான்காவது சமஸ்யத்துக்கு விடையளிக்கலாம்...” என்று தேர்வைப் பிடித்து நகர்த்தினார் அம்பிகா தத்தர்.

“அப்போது தாக்ஷாயினியாக உமையவள் அவதாரமெடுத்திருந்தாள். தனது தந்தை தக்ஷன் நடத்தும் யாகத்திற்கு தன் கணவனை அழைக்வில்லை என்று அறிந்ததும் தக்ஷனிடம் போய் மல்லுக்கு நின்றாள். அவர் “இடுகாட்டில் சுடலைப்பொடி பூசியலைபவனுக்கு எதற்கு மரியாதை? அவனை ஏன் கூப்பிடவேண்டும்?” என்று ஏகவசனத்தில் தூஷிக்க கோபாக்கினியில் தன்னையே பஸ்பமாக்கிக்கொண்டு சாம்பலானாள். இந்த சங்கதி சிவனார் காதுக்கு எட்டியதும் சக்தியில்லாமல் மூர்ச்சையாகிக் கீழே சரிந்தார். அப்போது அவரது ஜடாமுடியில் தாங்கியிருந்த சந்திரனும் தரையைத் தொட்டது. தேனோ இனிப்போ கிடைக்குமா என்று அந்தப் பக்கம் ஊர்ந்து கொண்டிருந்த ஒரு எறும்பு அப்போது அந்த பிறைச் சந்திரனை நக்கி முத்தமிட்டது....” என்று கவிநயம் கொஞ்ச பதிலளித்தார்.

அவை ஆச்சரியத்தில் மூழ்கியது. எல்லா சமஸ்யத்திற்கும் பளிச்பளிச்சென்று மின்னலாய்ப் பதிலளித்தார். கவி மழை பொழிந்து கூடியிருந்தவர்களின் காதுகளுக்கு தேனூட்டினார். மொத்த சபையும் எங்கேயும் நகராது கேட்டுக்கொண்டிருந்தது. அற்பசங்கைக்குக்குக் கூட ஒதுங்காமல் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இப்போது அம்பிகா தத்தர் கணபதியை வைத்து அக்கூட்டத்தினருக்கு இலக்கிய விருந்து படைக்க உத்தேசித்தார். ஏதேனும் காவியத்திலிருந்து இரண்டு ஸ்லோகங்களை எடுத்துக்கொண்டு அதை அவையோர் முன்பு எளியோரும் தெளியும் வண்ணம் விஸ்தாரமாக விமர்சிக்க வேண்டும்.

முதலில் காளிதாசனின் ரகுவம்சம். ஒன்பதாவது சர்க்கத்தில் ஏழாவது ஸ்லோகம். இரண்டாவதாக பதினோராம் நூற்றாண்டில் போஜ ராஜாவின் அரண்மனையை அலங்கரித்த மம்மதா பட்டரின் காவ்யபிரகாஸத்திலிருந்து. அம்பிகா தத்தர் சைகை செய்ய கண்பதி ஸ்லோகங்களைக் அக்கக்காகப் பிரிக்க ஆரம்பித்தார். கடினமான பல ஸ்லோகங்களை பலாவிற்குள் இருக்கும் சுளை போல உறித்து தேனில் தோய்த்துச் சபை ருசிக்கக் கொடுத்தார். அறிஞர்களின் அச்சபை களை கட்டியது.

ரகுவம்ச காவியத்திலிருந்து அமிர்தங்களைப் பிழிந்து கொடுத்துவிட்டு காவ்யபிரகாஸத்திற்கு தாவினார். வெகுநேரம் பிரசங்கித்ததாலோ என்னவோ “சர்வேசம்” என்று உச்சரிப்பதற்குப் பதிலாக நா லேசாகப் பிழன்று “சர்வேசாம்” என்று கால் வைத்து நெடிலாக முடித்தார். உடனே நாக்கைக் கடித்துக்கொண்டு தவற்றைத் திருத்தி பிழையில்லாமல் மறுபடியும் பாடினார். காலையிலிருந்து இரைக்குக் காத்திருக்கும் கொக்கு போல விடாப்பிடியாக நின்ற அம்பிகா தத்தர் இதை கோட்டை விடுவாரா? லபக்கென்று பிடித்துக்கொண்டார்.

“உன் பாடலில் குறையில்லை; கட்டுரையில் சர்வஜனங்களையும் கட்டிப்போடுகிறாய்; ஆனால் பேச்சில் கோட்டை விட்டாயேப்பா? மூவுலகையும் பரிபாலணம் செய்யும் தாராவை வணங்குவதில்லையோ?” என்ற அர்த்தத்தில் சம்ஸ்க்ருத கவி பாடி எள்ளி நகையாடினார்.

சாக்தராகிய கணபதி முனிக்கு ஸ்ரீதாரா தேவியை வழிபடாதவனே என்று அம்பிகா தத்தர் சொன்னவுடன் சுறுசுறுவென்று ஏறியது. அம்பிகா தத்தரும் சரஸ்தாரா என்று பாடுவதற்கு மாறாக இலக்கணப் பிழையுடன் திரிபுவன ”சாரா தாரா”... என்று பாடிவிட்டார். கணபதி அவையைப் பார்த்து அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார். அம்பிகா தத்தருக்கு முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. ”என்ன?” என்று கையை ஆட்டி சமிக்ஞையினால் கேட்டார். அரங்கம் சூடு பிடித்தது. காவிய இரசிகர்களுக்கு கன்னல் விருந்து. கணபதி என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டம் கண் கொட்டாமல் ஆர்வமாய்க் காத்திருந்தது. நாமும் அடுத்த அத்தியாயம் வரை காத்திருப்போம்.

*ஜாதகக் கட்டங்களை விளக்கிய Vk Srinivasan க்கு நன்றி!

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_11‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 10 : சொற்போர்: கற்புக்கரசி இடும்பி

இதோ ஞானசூரியனாக நடந்துவரும் கணபதி நவத்வீபா சர்வகலாசாலைக்குள் நுழைவதற்கு முன்னர் பின்வரும் இரு பாராக்களில் அதன் புகழ் பாடிவிடுவோம்.

புராதன காலத்திலிருந்து காஞ்சீபுரம், அமராவதி, நாலந்தா, உஜ்ஜயினி மற்றும் நவத்வீபா ஆகிய ஐந்தும் மேற்படிப்புக்கான பிரசித்தி பெற்ற கலாசாலைகள். முதல் நான்கும் மூடி விட்டாலும் நவத்வீபா மட்டும் துடிப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வருடந்தோரும் தேசத்தின் அனைத்து திக்கிலிருந்தும் மாணவர்களும் பண்டிதர்களும் நவத்வீபாவை முற்றுகையிட்டு பரீக்ஷையில் தேறி தத்தமது துறையின் சான்றிதழ் பெற்று ஊரில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை பெருமையாகக் கொண்டார்கள்.

இறுதி பட்டமளிப்பு விழா நடைபெறும் ஆயிரம் பேர் அமரும் பிரம்மாண்டமானக் கூடத்திற்கு “ஹரிஸபா” என்று பெயர். இங்கு வழங்கப்படும் பட்டயச் சான்றிதழ் அகிலமெங்கும் போற்றி புகழப்படும் ஒன்று. இந்தக் கூடத்திற்கு முன்னர் வாயிலில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு எழுதி தகுதியடைவதற்கே பிரம்மப்ரயர்த்தனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வு போன்ற ஹரிஸபா பரீக்ஷை மிகக் கடினமானது. பல்லை உடைக்கும். இதனால் இங்கு பட்டம் பெற கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை வித்யார்த்திகளின் வரிசை அமிர்தம் கடைந்த வாசுகியாய் நீண்டது.

அலங்கார வளைவுகளுவும் ஐவர் சேர்ந்தாலும் கைகோர்த்துக் கட்டிப் பிடிக்க முடியாத பிரம்மாண்டமான துண்கள் தாங்கிய வேலைப்பாடுகள் அமைந்த மேற்கூரையுள்ள அந்தக் கல்லூரிக்குள் தேசலான கணபதி சாந்தமாக நுழைகிறார். நுழைவுத் தேர்வுக்கான சிட்டுகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் இங்குமங்கும் விசாரணைக்காக அரக்கபரக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பிரம்ம தேஜஸுடன் அந்தத் தூணருகில் மாணவர்களை வழிநடத்த நிற்பவர்தான் சிதிகண்ட வாசஸ்பதி. அவர்தான் நுழைவுத் தேர்வு நடத்துபவர். ஸம்ஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்தவர். சாந்த சொரூபி. இரைச்சலோடு கூட்டம் சுழற்றியடித்தது. கணபதியால் அவரை நெருங்கவே முடியவில்லை. பல நாழிகைகள் காத்திருப்பில் கடந்தது. சிதிகண்டரைப் பார்ப்பதற்கு கணபதி தவமிருந்தார்.

“தம்பி.. நான் குலபின்யா... மிதிலையிலிருந்து வருகிறேன்” தோளுக்குப் பின்னால் மென்மையான குரல் கேட்டது.

மனசு ”யாரிவர்?” கேட்க நெற்றி சுருக்கத்துடன் கணபதி கைகூப்பி அவருக்கு ”வந்தனம்..” சொன்னார்.

“இவர்கள் என் மாணவர்கள். பரீக்ஷைக்கு வந்திருக்கிறார்கள். நீ தனியாகதான் வந்தாயாப்பா?”

“இரு நண்பர்களுடன் வந்திருக்கிறேன். என் பெயர் கணபதி. ஸ்ரீமான். சிதிகண்ட வாசஸ்பதியைப் பார்க்கவேண்டும். காலையிலிருந்து காத்திருக்கிறேன்...”

“நிச்சயம் இன்று அவரைச் சந்திப்பது கடினம். இன்றிரவு என்னுடன் வந்து தங்கிக்கொள். அவரை நாம் நாளைச் சந்திக்கலாம்...” என்று கணபதியையும் அவருடன் வந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றார் குலபின்யா.

இரவு அவரது அறையில் இருவரும் நிறைய இலக்கியம் பேசினார்கள். கொஞ்சம் விவாதித்தார்கள். அவ்வப்போது சிரித்தார்கள். கணந்தோரும் சத்விஷயங்களைச் சிந்தித்தார்கள். “ஓ! சிவகுமாரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேறு வைத்திருக்கிறாயா? சபாஷ்” என்று தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் குலபின்யா. இரவு உணவுக்கப்புறம் மாணவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்றார்கள்.

குலபின்யாவுக்கு புரிந்துவிட்டது. ”கணபதி லேசுப்பட்ட ஆளில்லை. ஞானச்சுடர். நிச்சயம் நாளை ஹரிசபையினரால் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடப்படப் போகிறவர்” என்று நித்திரை வராமல் புரண்டு படுத்த ஒரு சிஷ்யனிடம் கணபதியின் பெருமை பேசினார்.

பொழுது விடிந்தது. கணபதி சிதிகண்ட வாசஸ்பதியை கலாசாலை வாசலிலேயே ”நமஸ்காரம்” என்று சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி மடக்கினார். தன்னிடமிருந்த சிவகுமாரின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்து நீட்டினார். “அனுமனைப் போல் அபார திறமைபடைத்தவர்” என்று சிவகுமார் கணபதியை சிலாகித்து ரெண்டு வரி எழுதியிருந்தார். பின்னால் வந்த குலபின்யாவும் ”இவர் தீர்க்கமான ஆள்... இதிகாச புரணாங்களிலும் காவியங்களிலும் கரை கண்டவராக இருக்கிறார்...” என்று கணபதியின் பெருமை பாடினார்.

சிதிகண்ட வாசஸ்பதி கணபதிக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து ”பரீக்ஷை முடியும் வரை என்னுடனேயே இருப்பா...” என்று தங்கவைத்துக்கொண்டார். அனுதினமும் தனது நித்யானுஷ்டங்களான ஜபதபங்களை விடாது செய்துவந்தார் கணபதி. சிதிகண்டருக்கு இப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பார்ப்பதில் கொள்ளை சந்தோஷம்.
இறுதிப் பரீட்சைக்கான நாள் வந்தது. தேர்வாளர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் அம்பிகா தத்தர். லோகமறிந்த பிரசித்தி பெற்ற பண்டிட். ஸம்ஸ்கிருத பராக்கிரமம் மிக்கவர். பிரதானமான சிம்மக்கை நாற்காலியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். நாலாபுறமும் கூடியிருந்த அறிஞர்களை நோக்கியபடி வரும் கணபதியுடன் சிதிகண்டாவும் ஹரிசபையினுள் நுழைகிறார்.

அங்கே அமர்ந்திருக்கும் அம்பிகா தத்தரின் காதில் விழும்படி “யாரிந்த பண்டிட்?” என்று சிதிகண்டாவிடம் கேட்கிறார் கணபதி. அதற்கு அம்பிகா தத்தர் ”கவுடத்திலிருந்து வந்திருக்கும், நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் அம்பிகா தத்தா நான்...” என்று பெயர், அவரது தகுதி மற்றும் எங்கிருந்து வருகிறார் என்கிற தகவலைத் தந்து பாதியில் நிறுத்தி கணபதி முடிப்பார் என்று கேள்வியாய் பார்த்தார். புன்னகையுடன் புருவங்களை நெறித்தார்.

அசராமல் கனைத்துக் கொண்டு கணீரென்று ஆரம்பித்தார் கணபதி. “தெக்ஷின தேசத்திலிருந்து கவிக்குலபதியான கணபதி யாம்..” என்று கவிதையாக முடித்தார். அறிவார்ந்த சபையோர் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்க ஒரு கண மௌனத்திற்கு பிறகு “அம்பிகைக்கு தத்துப்புத்திரன் நீர் (அம்பிகா தத்தா) கணபதியாகிய நான் அம்பிகையின் சத்புத்திரன்...” என்று ஒரு போடு போட்டார். அவையில் பலத்த கரவொலி எழுந்தது. ”ஜெய் கணபதி! ஜெய் கணபதி!!” என்ற ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது.

அம்பிகா தத்தாவிற்கு கணபதியின் சாதூர்யமான பதில் பிடித்துப்போயிற்று. தட்டிக்கொடுத்து கவிமேடைக்கு அழைத்தார். சமஸ்யங்கள் எனப்படும் கவிப்புதிர் போட்டியை ஆரம்பித்தார். கவிதையாகக் கேட்கப்படும் புதிர் முடிச்சுகளைக் பதில் கவிதையினாலேயே அவிழ்க்கவேண்டும்.
காணக்கிடைக்காத ஒரு சொற்போருக்கு அங்கே காத்திருந்தவர்கள் தயாரானார்கள்.

”டாங்...டாங்..” என்று இரண்டு முறை கண்டா மணி அடித்து ஓய்ந்தது. அம்பிகா தத்தர் கணீரென்று ஆரம்பித்தார்.. “பூர்வாங்கமாக நான் கேட்கும் நான்கு சமஸ்யங்களுக்கு விடையளி...”

”மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள். ஆனால் கற்பில் சிறந்த கற்புக்கரசி அவள்...”

“வருஷத்திற்கு ஒருநாள் சிவனாரின் முகத்தைப் பார்க்க மறுக்கும் கௌரி....”

”அமாவாசையில்லாத ஒரு நாளில் சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது.....”

“பிறைச்சந்திரனை முத்தமிட்ட எறும்பு.....”

கேள்விகளின் விஸ்தீரணத்தால் கூட்டத்தில் கனத்த மௌனம். சான்றோர்களின் அந்த அவை கப்சிப்பென்று அடக்கமாக இருந்தது.

அனாயாசமாக பதிலளித்தார் கணபதி.

“மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள் மஹாபாரத இடும்பி. கசக்கிப் பிழியும் வேனிற் காலத்தில் பீமனின் (வாயு புத்திரன்) மனைவி இடும்பி குளிர் காற்று (வாயு பகவான்: மாமனார்) வாங்குவதற்காக தனது மேலாடையை விலக்கினாள்...”. கூட்டம் ”ஆ”வென்று வாய் பிளந்தது. அம்பிகா தத்தர் விடவில்லை.

“ஏன் த்ரௌபதியில்லை?” என்று மிரட்டல் தொனியில் கர்ஜித்தார்.

“த்ரௌபதி ஐவருக்கு மனைவி. பீமனுக்கு மட்டும் மனைவியில்லை. அப்படியானால் பல மாமனார்கள் கணக்கில் வருவார்கள். மேலும் த்ரௌபதி ராஜபோகமாக அரண்மனையில் வளர்ந்தவள். காட்டுவாசி போல சட்டென்று மேலாக்கை கழட்டி வீசமாட்டாள்.”

அம்பிகா தத்தர் உள்ளுக்குள் ரசித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த பண்டிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கண்களால் பாராட்டினார்கள்.

“உங்களுடைய கவிதையில் ஒரு சிறு திருத்தம் செய்யலாமா?” என்று விண்ணபத்துடன் நின்ற கணபதியைப் பார்த்து அதிசயத்தார். அழைத்து வந்த சிதிகண்டருக்கு கதி கலங்கிற்று. என்ன திருத்தம் செய்யப்போகிறார் என்று பண்டிதர்களும் மாணவர்களும் நிரம்பிய சபை ஆர்வத்துடன் காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது.

“என்ன?” என்று சபை அதிர உறுமினார் அம்பிகா தத்தர்.

“இடும்பியின் ஸ்தனவஸ்திரம் என்று எழுதிய தங்கள் கவிதையை உத்தரீயம் என்று மாற்றினால் கவித்துவம் மிகுந்து மேலும் அர்த்தபுஷ்டியாகக் காணப்படும்....”

சபை ஸ்தம்பித்தது.

“அடுத்த சம்ஸ்யத்துக்கான பதில்?”

கணபதி புன்னகை தவழ ஆரம்பித்தார்.......

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_10‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 9 : தேனூட்டிய புவனேஸ்வரியம்மன்

...அந்தக் கடிதத்தில் கணபதியை கண்கொட்டா வாய்மூடா ஆச்சரியத்தில் அடித்துப்போட்டவை இரண்டு. ஒன்று அவர் கடிதம் எழுதி கவருக்குள் மடித்து வைக்கும் போது மஞ்சமசேரென்று இருந்த காகிதம் இப்போது பளீர் வெள்ளையில் டாலடித்தது. இரண்டாவதாக இவர் படமிருந்தது கடிதத்தின் மேல் பகுதியில். அங்கே இவர் எழுதியிருந்த எழுத்துகள் எல்லாம் கீழே ஒதுக்கிவிடப்பட்டிருந்தது. கையெழுத்து சாட்சாத் இவருடையதுதான். கடிதத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் இவர் எழுதியதுதான். மனுஷ்ய சக்திக்கு இது எப்படி சாத்தியமாகும்? தந்தையும் மகனும் எங்கும் நிறை பரப்பிரம்மமான ஈஸ்வரனின் திருவிளையாடலை எண்ணியெண்ணி நெக்குருகிப் போனார்கள். பக்திப் பரவசம் ஊற்றெடுக்க பூஜையறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.

பௌர்ணமிகளும் அமாவாசைகளும் மாறி மாறி உருண்டன. விசாலாக்ஷி கர்ப்பம் தரித்தார்கள். பிறந்தகம் சென்றார்கள். கணபதிக்கு மீண்டும் தவ எண்ணம் தலை தூக்கியது. புனிதப் பயணம் மேற்கொண்டு தவமியற்ற உத்தேசித்தார். “தயை கூர்ந்து வெகுதூரம் சென்றுவிடாதீர்கள்... “ என்று பிறந்தகம் போக மாட்டு வண்டியில் ஏறும் போது விசாலாக்ஷி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓரிஸா மாநிலத்தின் புவனேஸ்வருக்குச் செல்லத் தீர்மானித்தார்.

இம்முறையும் இவரோடு இருவர் தபஸ் புரிவதற்கு தொற்றிக்கொண்டனர். ஒருவர் கணபதியின் தம்பியின் மச்சினர் ராமா சாஸ்திரி. இன்னொருவர் காசியிலிருக்கும் மாமா தாத்தா பவானி சங்கரத்தின் மகன் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி. இவ்விருவருக்கும் கணபதிதான் மந்திர தீக்ஷை அளித்திருந்தார். ராமா சாஸ்திரி வைராக்கியமில்லாமல் ஒரே நாளில் புவனேஸ்வரிலிருந்து கலுவராயிக்கு திரும்பிவிட்டார். லக்ஷ்மிநாராயண சாஸ்திரி சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர். தாக்குப்பிடிக்க முடியாமல் அவரும் பின்னாலேயே வீடு திரும்பினார். கணபதிக்கு இப்போது நிம்மதி. புவனேஸ்வரில் அனந்த வாஸுதேவா கோயிலுக்குள் சென்றார். பின்புறம் இருக்கும் பிரகாரத்தில் பிறர் இம்சையில்லா ஓரிடத்தில் அமர்ந்து தவத்தைத் தொடங்கினார்.

பாஸ்கரன் மறையும் வரை ஆடாது அசங்காது பத்மாசனத்தில் தவமியற்றுவார். விண்ணில் நிலவு தோன்றியதும் கணீரென்று லலிதா சகஸ்ரநாமம் ஜெபிக்கத் தொடங்குவார். ஒன்பது முறை விடாமல் ஜெபிப்பார். ஒன்பது வாரங்களுக்கு சகஸ்ரநாமமும் ஜபமும் மாறிமாறி உச்சாடனம் செய்தார். ஒன்பதாவது வார இறுதியில் ஒரு கல் மேடையில் வாஸுதேவா கோயிலின் பின்புறம் நிலவொளியில் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார். வட்ட நிலவிலிருந்து கோடி சூர்யப்ரகாசமாக நிலவைக் கோட்டைக் கட்டிய பேரொளி ஒன்று தோன்றியது.

ஜொலிக்கும் புல்லாக்கும், ரத்ன க்ரீடமும், காதில் டாலடிக்கும் வைர தாடகங்களுமாக சர்வாலங்கார பூஷிணியாகப் புவனேஸ்வரி மாதா அந்த ஒளி வட்டத்துக்குள் அபயஹஸ்தத்துடன் காட்சி தந்தார். ஒரு மந்தகாசப் புன்னகையோடு தோன்றிய புவனேஸ்வரி மாதா கையிலிருந்த ஸ்வர்ண கிண்ணத்தில் தேன் தளும்பியது. தெய்வீகப் பரவசத்தில் ‘ஆ’வென்று அமர்ந்திருந்த கணபதிக்கு அந்தத் தேனை துளித்துளியாக ஊட்டினாள். சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியது போல. சொற்ப நேரமே நீடித்த அந்தக் காட்சி புகையாய்க் கலைந்து மீண்டும் விண்ணில் நிலா சோபனமாகத் தெரிந்தது. தனக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவத்தை அகக்கண்ணில் ஓட்டிப் பார்த்தார். நாக்கில் அமிர்தம் போல தெவிட்டாத தித்திப்பு. உதட்டருகே பிசுபிசுவென்றிருந்தது. கையால் உதடுகளைத் துடைக்க ஆள்காட்டி விரலில் ஒரு துளி தேன்!

அந்த க்ஷணத்திலிருந்து கவிதை கட்டுரை ஸ்லோகங்கள் என்று அவரெழுதிய ஆக்கங்களெல்லாம் அதிமதுரமாக இனித்தன. அவரது புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டது. புவனேஸ்வரியின் புன்னகை எப்போழுதுமே நினைவில் தங்க அவரெழுதிய காவியங்களுக்கு பலவாறு உறுதுணையாக இருந்து தீட்சண்யம் மிக்கதாக ஆக்கியது.

அன்றிரவு புவனேஸ்வர் கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எழுபது வயது மூதாட்டி ஒருவருக்கு ஒரு கனா. அதில் அவரது கணவர் தோன்றி “இப்போது வாஸுதேவர் கோயிலுக்குப் பின்புறம் நான் அமர்ந்திருக்கிறேன்” என்று கை காட்டினார். அவரது பெயர் லம்போதர்தாஸ். சிறிய இடைவெளியில் பிள்ளையாரப்பன் (லம்போதரா) தோன்றி அதையே கூறினார். மறுநாள் காலையில் தனது மகன் பாஸ்கர் தாஸை அழைத்து தனது சொப்பனத்தைச் சொல்லி வாஸுதேவர் கோயிலின் பின்புறம் ஏதேனும் விநாயகர் விக்ரகம் புதிதாக ஸ்தாபித்துள்ளார்களா என்று பார்த்துவரச் சொன்னார். பாஸ்கர்தாஸ் அங்கே பார்த்தது “கணபதி” என்னும் தவசிரேஷ்டரை! அந்தப் பெண்மணி பாஸ்கர் தாஸை கணபதியிடம் கணபதி மந்திர தீக்ஷை வாங்கிக்கொண்டு அவருக்கு சேவை புரியச் சொன்னார். பாஸ்கர் தாஸ் அவ்விதமே செய்தார். கணபதி மேலும் நான்கு மாதங்களுக்கு புவனேஸ்வரில் கலையாத தவம் இயற்றினார்.

13-02-1899 அன்று இரவு பசு ஒன்று காளைக் கன்று ஈன்றதாகக் கனவு கண்டார். இரண்டு நாட்கள் கழித்து விசாலாக்ஷி பதினான்காம் தேதி ஆண் மகவு பெற்றதாக அவருக்கு லிகிதம் கிடைத்தது. கணபதிக்கு காசியில் மஹாதேவரின் காட்சி கிடைத்ததால் குழைந்தைக்கு மஹாதேவன் என்று பெயரிட்டார் நரசிம்ம சாஸ்திரி.

இல்லம் திரும்பிய கணபதி, விசாலாக்ஷியின் வேண்டுகோளுக்கு இணங்க வேலை தேடினார். கஞ்சம் ஜில்லாவின் கோதா அக்ரஹாரத்தில் ஸம்ஸ்கிருத பள்ளியில் பண்டிட் வேலை காலியிருந்தது. ஆனால், வேலையில் சேருவதற்கு படிப்புச் சான்றிதழ்கள் கேட்டார்கள். சான்றிதழ்கள் இல்லாமல் வேலைக்கு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து ”இது சரிப்படாது” என்று மீண்டும் தவத்துக்குக் கிளம்பினார். இம்முறை கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தவளேஸ்வரத்தில் தவம் புரிந்தார். கொஞ்ச நாட்களுக்கு வாழைப்பழம் மட்டுமே புசித்து தவமியற்றினார். அதுவும் கிடைக்காமல் போகவே அதன் வாழைப்பழ தோலில் இருக்கும் நாரை உரித்துத் தின்றார். அதில் அவருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகி கேசனகுர்ரு என்ற கிராமத்திற்கு மருத்துவத்திற்கு சென்றார். சொஸ்தமாவதற்குள் அந்தக் கிராமத்தின் பண்டிதர் ஒருவரிடம் தர்க்கமும் வேதாந்தமும் பயின்றார். இரண்டு வருடங்கள் கடின உழைப்பில் படிக்க வேண்டிய பாடங்களை இரண்டே மாதங்களில் உள்வாங்கிக்கொண்டார்.

கலுவராயியில் முன்றே மாதத்தில் பானினி (இலக்கணம்) பயின்றார். 1900 வருடம் யுகாதியின் போது மந்தஸாவிற்கு புறப்பட்டார். மந்தஸா ஆந்திர ஒரிய எல்லையில் இருக்கும் ஊர். அவ்வூரின் ராஜா கணபதி ப்ரியர். புதுவருடந்தோரும் நடக்கும் தர்பாரில், அவ்வருடம் கணபதியின் அஷ்டாவதனம் நடந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை காணாத அம்மன்னர் கணபதிக்கு பதவிகள் கொடுத்து அரண்மனையிலேயே போஷிக்க ஆசைப்பட்டார். அந்த ராஜாவின் மைந்தன் கணபதியை தனக்கு சிவ பஞ்சாட்சரம் ஓதுவிக்க வற்புறுத்தினான். “இந்த தீக்ஷைக்கு உனது தந்தையாரின் சம்மதம் மிகவும் முக்கியம்” என்று அவனை அறிவுறுத்தினார்.

ராஜா தங்களது பரம்பரை புரோகிதரை இவ்விஷயமாக அணுகினான். அவர் வைணவர். சிவபஞ்சாட்சரத்தில் அவருக்கு லவலேசம் ஈடுபாடில்லை. “நமது ராஜ குடும்பத்துக்கு அது ஒவ்வாது. அந்த மந்திரமும் புனிதமானது இல்லை” என்று விலக்கினார். சைவ சமய மார்க்கத்தில் அரசகுடும்பம் திரும்பிவிட்டால் தனக்கு தக்க மரியாதை கிடைக்காது என்று புரட்டு பேசினார். மன்னர் அவையைக் கூட்டி சிவபஞ்சாட்சரம் பற்றி விவாதித்தார். அவரால் நிரூபிக்க முடியவில்லை. இப்படியிருக்கையில் ”வாக்பந்தனா” என்ற மந்திரத்தால் கணபதியின் வாயைக் கட்டிவிட முயற்சித்தார். ஆனால் அது கணபதியை நெருங்கவில்லை. ”தூய மனத்துடனும் நற்சிந்தனையுடனும் ஜெபித்தால்தான் பலனிருக்கும்..” என்று கணபதி சிரித்தார். இறுதியில் ராஜகுமாரன் கணபதியின் சீடனானான்.

மந்தேஸா ராஜா கணபதியை நவத்வீப் பண்டித பரிஷத்திற்கு அனுப்பினார். காசிக்கு க்ஷேத்திராடனம் செல்லவிருந்த இருவரிடம் நவத்வீப்க்கிற்கு செல்லும் கணபதியுடன் சென்று அங்கே அவருக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்துவிட்டுக் காசிக்குச் செல்ல உத்தரவிட்டார். காசியில் அவருடன் ஸம்ஸ்கிருத விசாரணையில் ஈடுபட்ட சிவகுமார் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை பத்திரமாக மடியில் சொருகியிருந்தார்.

நவத்வீப்பில்....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_9‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 8 : நாஸிக் தபசு

....ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர் சொப்பனத்தில் நின்றார். ”கணபதி. இன்னும் ஏன் இங்கு நேரத்தை விரயம் செய்கிறாய்? ஸுகேது உன்னிடம் பேசியதை என்னிடமும் சொன்னார். நாஸிக்தான் பிரம்மகிரியின் நுழைவாயில். அங்கிருந்து திரியம்பகம் சென்று தவமியற்று” என்று ஆக்ஞையிட்டார்.

கனவு கலைந்தது. சட்டென்று தூக்கம் விடுபட்டது. கண் விழித்தார். அது பிரம்ம முஹூர்த்தம் முடிந்து அதிகாலைப் பொழுது. காசி விழித்திருந்தது. பவானி சங்கரத்திடம் யாத்ரீகர் சொப்பனத்தைப் பற்றிக்கூறினார். ”இது தெய்வசங்கல்பம். ஆண்டவன் கட்டளை. அப்படியே செய் கணபதி....” என்று ஆசீர்வதித்தார். தந்தை சொல் கேட்காமல் எதுவும் செய்ததில்லை கணபதி. நாஸிக் செல்ல ஒப்புதல் அளித்து நரசிம்ம சாஸ்திரியும் கணபதிக்கு எழுதியிருந்தார். பவானி சங்கரத்திடம் விடைபெற்றுக் காசியிலிருந்து மேற்கே நாஸிக்கிற்கு பயணப்பட்டார்.

நாஸிக்கை இன்னும் சிறிது அவகாசத்தில் அடைந்துவிடலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக தலைகள் தெரிந்தன. கும்பலாக நிற்கிறார்கள். ஏதோ விவகாரம் போலிருக்கிறது.

தசக்கிரீன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம் நாஸிக். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை லக்ஷ்மணனின் கோபத்துக்கு ஆளான இடம் என்று நாஸிக்வாசிகள் சொல்வார்கள். நாஸிக்கின் விளிம்பில் இளையபெருமாள் லக்ஷ்மணன் கோயில் ஒன்றும் இதற்கு அடையாளமாக இருக்கிறது.

கணபதி நாஸிக்கை அடையும் போது நகரத்துக்குள் அன்னியர்கள் பிரவேசிக்க தடை விதித்திருந்தார்கள். நகரமெங்கும் பெரியம்மை தலைவிரித்தாடியது. நோயின் உக்கிரம் கருதியும் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டும் சுகாதரத்துறையினர் வெளியூர்க்காரர்களை நகர எல்லையில் தடுத்தார்கள். பெரிய அரசமரத்தின் கீழிருந்த கிராமக் கோயிலில் பகற்பொழுதைக் கழித்தார்.

இரவு வந்தது. நிர்மலமான வானத்தில் நட்சத்திரங்கள் ரத்தினங்களாக இறைந்திருந்தன. மினுமினுப்பு காண்போரைச் சொக்கியது. நடுவில் பால் நிலா பொழிந்தது. இதமான குளிர். இதில் கணபதியின் உள்ளம் குதூகலமடைந்தது. உற்சாகத்தில் காளிதாசனின் ரகுவம்சக் காவியத்திலிருந்து சில ஸ்லோகங்களைப் பிரவாகமாகப் பாடினார். பக்கத்தில் காவலிருந்த ஒரு சுகாதாரத்துறை அதிகாரி.. “ஆஹா... அற்புதமாகப் பாடுகிறாய். இந்த ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அர்த்தம் சொல்வாயா?” என்று ரசிகனாய்ப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார்.

சக்கரவர்த்தி ரகுவின் புத்திரன் அஜன் ஒரு ஸ்வயம்வரத்தில் பங்கு கொள்ள குதிரையில் பறந்து கொண்டிருந்தான். ஸ்வயம்வர நகரம் நெடுந்தொலைவு இருந்ததால் தனது பரிவாரங்களுடன் அன்றிரவு ஒரு மலையடிவாரத்தில் கூடாரமடித்துத் தங்கினான். பொழுது புலர்வதற்கு முன்னர் அஜனைத் துயிலெழுப்ப இந்த ஸ்லோகத்தை அவரது ஆஸ்தான பாடகர்கள் பூபாளமாகப் பாடினார்கள்.

“ராஜன்னு.. நீங்கள் துயிலும் போது லக்ஷ்மி சந்திரனோடு ஸ்நேகமாயிருந்தாள். நீங்கள் நித்திரை கலைந்து எழுந்ததால் உங்கள் முகத்தாமரையோடு போட்டி போட முடியாத சந்திரன் அஸ்தமிக்கிறான்.”

மன்னனின் முகமும் சந்திரனும் தாமரையாகப் பாடப்படுகிறது. லக்ஷ்மி பத்மாசினி.
சுகாதார அதிகாரிக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. கணபதியை நெருங்கி....

“இந்தப் பாட்டில் ஏதோ பிழை இருக்கிறது போலிருக்கிறதே... ” என்றார்.

“என்ன பிழை?”

“அஜ ராஜா சந்திரனோடு இரவைக் கழித்த லக்ஷ்மியை பகலில் தான் ஏற்றுக்கொண்டார் என்று பாடுவது கலாசாரமாகத் தெரியவில்லையே...நெருடுகிறதே....” என்று இழுத்தார்.

கணபதி வெடித்துச் சிரித்தார். விவரம் கேட்டவருக்கு சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. “தயை கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியுமா?”. கற்கும் ஆர்வம் கண்களில் பொங்கியது.

”லக்ஷ்மியோடு சந்திரனும் பாற்கடலில் பிறந்ததால் சகோதரன் ஆகிறான். ஆகையால் இது தவறாகாது..” பளிச்சென்று சூட்டிகையான விளக்கமளித்தார் கணபதி.

கணபதியின் இந்தப் பதில் சுகாதார அதிகாரிக்கு ரொம்பவும் திருப்தியளித்தது. தனது வாக்சாதூர்யத்தால் மறுநாள் அங்கிருந்து சிறப்பு அனுமதியில் நாஸிக்கிற்குள் நுழைந்தார்.

நாஸிக்கில் கச்சாமுச்சாவென்று இரைச்சல். சந்தைகள். கடை வீதிகள். ஜனநெருக்கடி. தவமியற்றயிலாத சூழ்நிலை நிலவியது. விடுவிடுவென்று பதினெட்டு மைல்கள் நடந்து த்ரயம்பக க்ஷேத்திரத்திற்குள் நுழைந்தார். அங்கு மஹாதேவரைத் தொழுதார். கதிரவன் மறையும் பின் மாலை பொழுதில் குசவர்த்தாவை அடைந்தார். அங்கிருந்து பிரம்மகிரிக்கு பொடிநடை தூரம்தான். பிரம்மகிரியில்தான் கோதாவரி நதி பிறக்கிறாள். ப்ரம்மகிரியை ப்ரம்மராந்த்ரா என்பார்கள். அதாவது தெய்வீக சக்திகளை உச்சி சிரசில் உள்வாங்கி உடம்புக்குள் செலுத்தும் இடம். குசவர்த்தாவை சக்தியின் பீடமாக சிரசிலிருக்கும் ஆயிரம் இதழுள்ள தாமரை. த்ரயம்பகாதான் ஹிருதயம். அங்கேதான் சிவன் சிம்மாசனமிட்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

குசவர்த்தாவில் ஒரு ஏழை அந்தணர் வீட்டில் அன்றிரவு ஓய்வெடுத்தார். மறுநாள் காலையில் ஒரு டாக்டரிடம் அந்த அந்தணர் அழைத்துச்சென்றார். அவர் தனவந்தர். ஸம்ஸ்கிருதம் பயில்வதில் ஆர்வமும் துடிப்பும் உள்ளவர். விருந்தினரை ”அதிதி தேவோ பவ:” என்று உபசரிப்பவர். அவரின் ஒத்தாசையோடு நீலாம்பிகா கோயிலில் ஒரு தனியிடத்தை தவத்துக்குத் தேர்ந்தெடுத்தார். பதினான்கு நாட்கள் இடைவிடாமல் தொடர் தவம் புரிந்தார். டாக்டர் தனது நண்பர்களிடம் கணபதியின் ஸம்ஸ்கிருத இலக்கிய ஆளுமையை பிரஸ்தாபித்தார். அன்றிலிருந்து தினமும் இரவு டாக்டர் தனது நண்பர்களுடன் நீலாம்பிகா கோயில் மண்டபத்தில் கணபதியின் இலக்கிய சொற்பொழிவுகளை ரசித்தார்கள்.

அப்போது நாஸிக்கிலிருந்து பிரவசனம் கேட்க வந்த ராம் பாவு என்ற நண்பர் “நீங்கள் இன்று அஷ்டாவதனம் செய்ய வேண்டுகிறேன்..” என்று கை கூப்பினார். மஹாவிரதத்தோடு தவமியிற்றிக் கொண்டிருந்ததால் போதிய தேகபலம் இல்லாதிருந்தார். ஆனாலும் ஆர்வலர்களுக்காக அதைச் செய்தார். ராம் பாவு அதிசயத்தில் ஆழ்ந்தார். கணபதியை நாஸிக்கிற்கு வரும்படி நச்சரித்தார். ”நான் அங்கே உங்களது தவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்” என்று உறுதியளித்தார்.

நாஸிக்கில் அனுதினமும் ராம் பாவு கணபதியுடன் இலக்கியவிசாரத்தில் ஈடுபட்டாரே தவிர தவமியற்ற ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. அதிருப்தியடைந்த கணபதி நகரெங்கும் சுற்றித் திரிந்து ஒரு தனியிடம் தேடினார். அப்போது லக்ஷ்மணன் கோயில் கண்ணுக்கு அகப்பட்டது. கோயில் மண்டபத்தில் காலெடுத்து வைத்ததும் கதவு மறைவிலிருந்து மின்னலென முன்னால் வந்த அர்ச்சகர் “வாடா... திருட்டுப் பயலே... அகப்பட்டாயா...” என்று திட்டி கையைப் பிடித்துத் தரதரவென்று கோயிலுக்கு வெளியே இழுத்துப்போனார். “நானா திருடன்? ஏனிப்படி.. “ என்று கணபதி சொல்லவந்ததையும் அவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. “உன்னை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு போய் நிறுத்துகிறேன் பார்.. உன்னை ஜெயிலில் போடுவார்கள்.... அப்போதுதான் புத்தி வரும்...” என்று குதியாய்க் குதித்தார்.

அப்போது அக்கோயிலைக் கடந்த ராம் பாவுவின் ஸ்நேகிதர் கூச்சலைக் கேட்டுக் கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். கணபதியைப் பிடித்து வைத்திருந்த அர்ச்சகரைப் பார்த்தார். கணபதியின் அசௌகரியமான முகத்தைப் பார்த்தார். அவர் கணபதியின் ப்ரவசனங்களை கேட்டு இன்புற்றவர். “நிறுத்துங்கள்.. இவரைப் பிடித்துத் தள்ளாதீர்கள்...” என்று லக்ஷ்மணன் கோயில் அர்ச்சகரைப் பாய்ந்து தடுத்தார். அர்ச்சகர் கோபமாக முறைத்தார். முகம் சிவந்தது. “எதற்காக இவரைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று ராம் பாவுவின் நண்பர் கேட்டார். ”ராம லெக்ஷ்மண சீதாவுக்கும் ஆஞ்சநேயருக்கும் ஆபரணங்களை எடுத்து வந்தேன். இங்கே மண்டபத்தில் வைத்துவிட்டு பிரகாரக் கிணற்றில் ஜலம் எடுக்க சென்றேன். அப்போது சில ஆபரணங்களை யாரோ திருடிவிட்டார்கள். மிச்சமிருப்பவைகளை திருட வருவான் என்று நினைத்தேன். அதே போல் வந்தான். பிடித்துவிட்டேன்” என்றார்.

“இல்லை.. இவர் ஸம்ஸ்கிருத பண்டிட். தவமியிற்றும் உத்தமர்.. அருட்கலைகள் வாய்க்கப் பெற்றவர்..”

“திருடனுக்கு வக்காலத்து வாங்குகிறீரா? உம்மையும் மாஜிஸ்ட்ரேட்டிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டியதுதான்...” என்று அவரையும் திட்டினார்.

அதுவரை பொறுமையாக நின்ற கணபதி முனிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே முகம் சிவக்க ”இந்த நாஸிக் நகரமே அழியட்டும்...” என்று கோபாக்னியில் ஒரு ஸ்லோகம் சொன்னார்.

அந்த ஸ்லோகத்திலிருந்த மொழியும் அதை ஜபித்த தோரணையும் அர்ச்சகரை கிடுகிடுக்க வைத்தது. ”திருடன் என்று தவறாக எண்ணிவிட்டோமே” என்று மனம் வருந்தினார். ஆனால் சாபமிட்டது இட்டதுதான். கணபதியும் வருந்தினார். ஒருவர் செய்த தவற்றுக்கு ஊரைச் சபித்துவிட்டோமே என்று நொந்துகொண்டார். இச்சாபத்திலிருந்து நாஸிக் நகர மக்களைக் காக்க வேண்டி கடவுளிடம் வேண்டினார். மீண்டும் ராம் பாவு வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் தவத்துக்குத் தனியிடம் தேடினார்.

ஒரு பாழடைந்த கோயில் தென்பட்டது. நவசூட்டி என்று பெயர். அங்கு தவமியற்ற ஆரம்பித்தார். லக்ஷ்மணன் கோயிலில் நடந்த துர்சம்பவத்திற்கு தானே காரணம் என்று ராம் பாவு மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த பாழடைந்த கோயிலில் கணபதி தொடர்ந்து எழுபது நாட்கள் தவமியற்றினார். நித்யமும் ஒரு தம்ப்ளர் பால் மட்டும் அருந்தினார். ராம் பாவு தான் செய்த தவற்றுக்கு பரிகாரமாக தினமும் நவசூட்டி கோயிலுக்கு கணபதிக்காகப் பால் கொண்டு செல்வார். எழுபதாவது நாள் சிவபெருமான் கணபதியின் கனவில் தோன்றி “நீ திரும்பி ஊருக்குச் செல்..” என்று கட்டளையிட்டார். மறுநாள் காலையில் ஜபதபங்களை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப ஆயத்தமான கணபதியிடம் ராம் பாவு “நாஸிக்கில் பெரியம்மை நிறைய பேரை தீர்த்துவிட்டது. உங்களைத் திட்டிய அர்ச்சகரின் குடும்பமும் பூண்டோடு அழிந்தது. பெரும்புயல் வீசியது. மரங்களை வேரோடு பிடிங்கி கட்டிடங்களில் சாய்த்து பலர் மாண்டனர். ஊரில் இரண்டு கோயில் கூட இடிந்துவிழுந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாஸிக்கிற்கு வெளியே பொட்டு காற்று மழை இல்லை.”

கனத்த இதயத்துடன் கணபதி அங்கிருந்து விடைபெற்றார். செகந்திராபாத்தில் இறங்கி தந்தை நரசிம்ம சாஸ்திரியைச் சந்தித்து நமஸ்கரித்தார். ”வீட்டிற்கு போகலாம்ப்பா...” என்றார் நரசிம்ம சாஸ்திரி.

“பத்ராசலம் ராமரை தரிசித்துவிட்டு வருகிறேன்...”

“குடும்பத்தை கொஞ்சம் நினைத்துப்பாரப்பா.. நீ இப்போது கிரஹஸ்தன்.. தபஸிற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகின்றன... ” என்று சுனங்கினார்.

சரியென்று அவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டு தந்தையுடனேயே கலுவராயிக்கு சென்றார். வீட்டில் தன்னுடைய காசி நாஸிக் த்ரியம்பக தபோ அனுபவங்களைத் தந்தையிடம் பகிர்ந்துகொண்டார். பவானி சங்கரத்தின் காசி அகத்தில் சந்திந்த துர்க்காமந்திர் யோகி தபால்பெட்டியில் சேர்த்தக் கடிதத்தை கையில் எடுத்தார் நரசிம்ம சாஸ்திரி.

“யாரப்பா உனது படத்தை இந்தக் கடிதத்தில் அழகாக வரைந்தது?” என்ற தந்தையின் கேள்விக்கு கண்பதியின் கண்கள் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. கடிதத்தின் மேல் பாதியில் கணபதியின் படம் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. இதைக் கண்டவுடன் விர்ர்ர்ர்ர்ரென்று ஒருவித மின்சாரம் அவர் சரீரத்தில் பாய்ந்தது போல உணர்ந்தார். இது எப்படி? மூடிய உறையைப் பிரித்து அந்த கடிதத்தில் யோகி படம் வரைந்திருக்கலாம். பரவாயில்லை. ஆனால்.. ஆனால்.. இது எப்படி?

இது எப்படி சாத்தியமாகும்? மேனி அதிர்ந்தது. ஒரு பரவச நிலையில் இருந்தார்.. இது கடவுளின் திருவிளையாடலோ?... மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தார்... இது எப்படி சாத்தியமாகும்.. நரசிம்ம சாஸ்திரி “என்னப்பா?” என்று வினோதமாகப் பார்த்தார்... கணபதிக்கு மீண்டும் காசி க்ஷேத்திரத்தில் நடந்தவைகள் காட்சிகளாக மனக்கண்ணில் ஓடின... இது எப்படி?.. இதே கேள்வி மூச்சு விடும் போதும் இழுக்கும் போதும் தோன்றித் தோன்றி மறைந்தது....

கணபதி முனியையே ஆச்சரியத்தில் தலைசுற்ற வைத்த அது என்ன?... ஒன்பதாம் அத்தியாயத்தில்...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_8‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 7 : துர்க்காமந்திர் யோகி

...கூட்டத்திலிருந்து தலையைத் திருப்பிய முண்டாசுக்காரன் “தர்பங்கா சமஸ்கிருத கல்லூரியின் முதல்வர் சிவகுமார் விடுமுறையில் வந்திருக்கிறார்... சமஸ்கிருத இலக்கிய விழா போல ஒன்று இங்கே நடைபெறுகிறது...” என்றான். சிவகுமார் ஆந்திரத்தில் பிரசித்தியான பண்டிதர் பாலா சாஸ்திரியின் பிரதான சிஷ்யர். கணபதி அந்த வித்வத் சதஸில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். சமஸ்கிருதத்தில் புகுந்து விளையாடினார். கூட்டம் வியந்தது. அங்கே கணபதியின் பிரகாசம் கூடியது. “பிரம்ம தேஜஸுடன் ஜொலிக்கும் இந்த சூட்டிகையான யுவன் யார்?” என்று அக்கம்பக்கம் வினவினார் சிவகுமார்.

கணபதி அந்த சதஸ்ஸில் உபன்யாஸம் செய்தார். சமஸ்கிருத அறிஞர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கொட்டியது. கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல பீறிட்டுப் பிரவாகமாக வந்தன இலக்கிய எடுத்துக்காட்டுகளும் இதிகாச புராண சம்பவங்களும். கேட்கக் கேட்ட இது சிவகுமாரைக் கட்டிப் போட்டது. மந்திரம் போட்டது போல ஒரேயிடத்தில் அமர்ந்திருந்தார். வங்காளத்தின் பிரசித்திப் பெற்ற நவத்வீப சமஸ்கிருத மையத்தில் போய் மேற்படிப்புப் படிக்கும்படி அறிவுறுத்தி கைப்பட சிபாரிசுக் கடிதமும் கொடுத்தார்.

சிவகுமார் தர்பங்கா திரும்பும் வரையில் இருவரும் திண்ணையில் அமர்ந்து சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்களை அக்கக்காக அலசுவதில் பொழுது ஓடியது. வீட்டுச் சுவர்களெல்லாம் சமஸ்கிருதத்தில் தேறின. அவர் காசியை விட்டுச் சென்ற மறுகணம் கணபதி தபஸுக்கு ஊர் அண்டாத ஒரு இடத்தைத் தேடி மீண்டும் அலைய ஆரம்பித்துவிட்டார். ஆனால் எந்த ஒரு இடமும் தோதாக இல்லை. இறுதியில் காசியில் தான் விருந்தாளியாகத் தங்கியிருந்த பவானி சங்கரத்தின் கிரஹத்திலேயே ஜபதபங்களைத் தொடர்ந்தார்.
அன்று காலை கணபதி வழக்கம்போல நித்யபடி தியானத்தை செய்துகொண்டிருந்தார்.

“கணபதி... கணபதி... ”.

ஒரு கணீர்க் குரல். கண் விழித்தார் கணபதி. கண்களில் ஆச்சரியம் பொங்கஉள்ளே நுழைந்தவர் ஆஜானுபாகுவாக இருந்தார். கார்வண்ணன். பஞ்சகச்சம். கட்டுக் குடுமி. நெற்றியில் விபூதிப் பட்டை. கழுத்தில் பெரிதும் சிறிதுமாக ருத்ராட்ச மாலைகள். ”யாரிவர்?” என்ற யோசனையோடு கைகூப்பினார். அவரை கண்ணெடுக்காமல் தீர்க்கமாகப் பார்த்தார் கணபதி. “ஹே! பவானி சங்கரம் நீ இங்கு வந்திருப்பதாகச் சொன்னார். உன்னைச் சந்தித்து பேசும் ஆவலில் பல மைல் கடந்து வந்தேன். ஆனால் உன்னோடு இப்போது பேச இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று தெரிகிறது. சரி.. சரி... நீ உன்னுடைய தியானத்தை முதலில் செய்து முடி.. பிறகு நாம் விஸ்ராந்தியாக பேசலாம்...” என்று நடு கூடத்தில் தூணில் சாய்ந்து சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார்.

கணபதிக்கு ஆச்சரியமும் குழப்பமும் கை கோர்த்துக்கொண்டது. நெற்றியில் சுருக்கங்கள் நெளிந்தன. வந்த பெரியவரைப் பார்த்துக் கொஞ்சமாகப் புன்னகைத்தார். “மன்னிக்கவும். தாங்கள் யாரென்று என்னால் அடையாளம் காண முடியவில்லையே...” என்று திக்கித் திக்கிக் கையைப் பிசைந்தார். மீண்டும் கும்பிட்டார்.

“அப்பனே! என்னை ஞாபகமில்லையா? அது சரி.. தன்னையே மறந்தவனுக்கு என்னை எப்படி ஞாபகமிருக்கும்? நான் ராமநகர் துர்க்காமந்திர் யோகியப்பா... ”. சிரித்தார் யோகி.

“ஸ்வாமி என்னை க்ஷமிக்கணும். யோகி ஆவதற்கு முன்னர் தங்கள் பூர்வாசிரமப் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் மிகவும் தன்யனாவேன்”. பவ்யமாக கணபதி.

“சோமயாஜுல ஸூர்யநாராயணா. ஆனால் நான் யோகியாவதற்கு முன்பே நாமிருவரும் தொடர்பில்தானே இருந்தோம்...”

“எப்படி? புரியவில்லையே.... ”. கணபதிக்கு அவரது பேச்சு புதிராக இருந்தது.

“அடப்போப்பா! பத்ரகா மாதிரி எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லணுமா?”

பத்ரகாவின் பெயரைக் கேட்டமாத்திரத்தில் கணபதி ஆர்வத்தில் துள்ளி எழுந்தார். ஆச்சரியமான ஆச்சரியம். ”ப....த்..ர...கா...” ரகஸியம் பேசுவது போல வாய்விட்டு ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார்.

“உங்களுக்கும் பத்ரகாவைத் தெரியுமா?... ம்.. தெரியுமா?” வார்த்தைகளால் வந்திருந்தவரை உலுக்கினார்.

“ஏன் தெரியாது? நாமெல்லாம் ஒரே குழுவினர். நம்மில் மொத்தம் பதினாறு பேர். இப்போது மறு ஜென்மம் எடுத்திருக்கிறோம். பத்ரகாவிற்கு சித்தித்த எல்லையில்லா ஆனந்த நிலைக்கு நாமும் பிரயர்த்தனப்படுகிறோம். என் பெயர் ஸுகேது. ராமநகர் துர்க்காமந்திர் எனது வசிப்பிடமாக இருப்பதால் நான் துர்க்காமந்திர் யோகியாக ஜனங்களால் அழைக்கப்படுகிறேன்.”

“நானெப்போது எங்கே கரையேறுவேன் ஸ்வாமி? இப்போதே தெரியப்படுத்துவீர்களா?” ஆர்வத்தில் திளைத்தார் கணபதி.

“ ’ஸ்தூலசிரஸி’டமிருந்து நீ அதை தெரிந்துகொள்வாய். அதுவரை அமைதியாயிறு. அறிந்து கொள்ள அலையாதே. கடும் தவம் புரிந்து உன்னை நீயே வருத்திக்கொள்ளாதே. இப்புவியில் நீ ஜனித்தகணத்திலிருந்தே உன்னுடன் தவமியற்றும் வலிமையும் இருக்கிறது. தக்க நேரத்தில் அது சித்திக்கும். அதுவரையில் பரோபகாரியாக இருந்து கஷ்டப்படுபவரின் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் தடைகளைக் களைந்து பயனடையுமாறு உதவிகள் பல புரிவாயாக.....”

“ஆனால் என் முன் தோன்றிய பத்ரகா தவமியற்றச் சொன்னாரே! ஏன்? லோகக்ஷேமத்திற்காகவா? அல்லது எனக்காகவா?” அடுத்தடுத்து கேள்விகளை பாணங்களாய் தொடுத்தார் கணபதி.

“உன் சுயலாபத்திற்காக அல்ல. லோகக்ஷேமத்திற்காகத்தான். ஜகத்தினில் நல்லது செய்வது லேசுப்பட்ட காரியமல்ல. நற்தொண்டு புரிபவர்களுக்கு இப்போது பல தடைகள், சங்கடங்கள், முட்டுக்கட்டைகள். இந்த இடர்களை ஜெயித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பாடுபடும் அந்த தர்மவான்களுக்கு ஒத்தாசையாக இருப்பதே இப்போது உனக்கிட்ட பணி”

கூடத்தில், கொல்லையில், சந்தில், திண்ணையில் என்று நெடுநேரம் அங்குமிங்கும் நடந்தும் நின்றும் உட்கார்ந்தும் வெகுநேரம் பல கார்யங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். யோகி நிறைய பேசினார். கணபதியின் நிறைய சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். கணபதிக்கு மனநிறைவு ஏற்பட்டதை அவரது பளபளக்கும் கண்கள் காட்டிக்கொடுத்தது. வந்த வேலை முடிந்தது என்று யோகி எண்ணினார்.

“சரி கணபதி! உனக்கு இப்போது எல்லாம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் புறப்படுகிறேன்” என்று துர்க்காமந்திர் யோகி வாசலுக்கு வந்தார். “தேவரீர்! நான் என்னை அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன். என்னை விட எனது பிதாவிற்கு என்னைப் பற்றி அறிய ஏகப்பட்ட ஆவல். இப்போது நிகழ்ந்த இந்த சந்திப்பையும் நீங்கள் அறிவுரை செய்ததைப் பற்றியும் அவருக்கு நானொரு லிகிதம் எழுதவிருக்கிறேன். அதில் நீங்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதினால் நான் புண்ணியம் செய்தவனாவேன். எனது பிதாவும் மிக்க மகிழ்ச்சியடைவார்” என்று விண்ணப்பித்தார்.

“தங்களது புத்திரனை தவம் செய்ய அனுமதியுங்கள். இல்லறப் பொறுப்புகளைக் கொடுத்து அவனை வீணடித்துவிடாதீர்கள்.” என்று இரண்டு வரிகள் எழுதிக் கோடிட்டு “சோமையாஜுல ஸூர்யநாராயணா” என்று கையெழுத்திட்டார். பின்னர் அஞ்சலுறையில் ஆங்கிலத்தில் நரசிம்ம சாஸ்திரியின் முகவரியைக் கேட்டு எழுதினார். “நீ ஒரு முறை துர்க்காமந்திர் வாப்பா” என்று சிரித்தார். கணபதியிடம் லிகிதத்தைக் கேட்டு வாங்கி அவரே வரும் வழியில் ஒரு தபால்பெட்டியில் சேர்த்துவிட்டு துர்க்காமந்திருக்கு சென்றுவிட்டார். இவ்வளவு அமர்க்களங்கள் இங்கேநடந்த போதும் பவானி சங்கரம் அங்கே தலைகாட்டவேயில்லை.

லிகிதம் கண்ட நரசிம்ம சாஸ்திரி பரமானந்தம் அடைந்தார். “ரொம்ப சந்தோஷம்” என்று பதிலுக்கு தந்தி அடித்தார். கணபதிக்கு துர்க்காமந்திர் போக கால்கள் துறுதுறுத்தன. ராமநகருக்கு விரைந்தார் கணபதி. அங்கு ஒரு பேராச்சரியம் அவருக்குக் காத்திருந்தது. ஊரில் பலரிடம் விஜாரித்தும் அவருக்கு ஒரே பதில்தான் கிடைத்தது. “துர்க்காமந்திர் யோகி என்று இங்கே யாருமில்லையே” என்று எல்லோரும் கையை விரித்தார்கள். வித்தியாசமாகப் பார்த்தார்கள். துர்க்காமந்திரில் அந்த யோகியைக் காணத் தவம் கிடந்தார். பிரயோஜனமில்லை. அப்படியொருவர் இல்லவே இல்லை என்று ஊர்ஜிதமானதும் கணபதிக்கு மெய் சிலிர்த்தது. சரீரமெங்கும் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. எங்கும் நிறைந்த பரம்பொருளே நேரில் வந்து எனக்கு காட்சி தந்தானா என்று கண்களிலிருந்து நீர் தாரைதாரையாய் சொரிந்தது. காசிக்குத் திரும்பினார். மாமா தாத்தா பவானி சங்கரத்திடம் ராமநகரில் நடந்தவைகளை ஒன்றுவிடாமல் கூறினார்.

“நீ புண்ணியாத்மா கணபதி. வீட்டில் யாருமில்லா நேரத்தில் அந்த சர்வேஸ்வரனே துர்க்காமந்திர் யோகியாக உனக்கு நேரில் காட்சியளித்திருக்கிறார். சோமயாஜுலுவுடன் உங்கள் குடும்பத்தின் இஷ்ட தெய்வமான ஸூர்யநாரயணரின் பெயரைக் கூட்டிக்கொண்டு உன்னிடம் சித்து விளையாடியிருக்கிறார். பத்ரகாவும் ஸுகேதுவும் இப்புவியில் எந்த மூலையிலாவது ஜனித்திருப்பார்கள். உங்களுடைய அவதார மகிமையைக் காட்டுவதற்கும் பிறந்த நோக்கத்தை தூண்டி விட்டு நினைவுறுத்தவுமே இந்த ஸுகேது தோன்றியிருக்கிறார். பதினாறு பேர்கள் என்று சொன்னாரே.. அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்துவார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் நீ முப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்....” என்றார் பவானி சங்கரம்.

அன்றிரவே ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர்........

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_7‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 6 : காசியில் கணபதி

எதிரே குபுகுபுவென்று வெண்புகை கிளம்பியது. முழுநீள தாடியுடன் அவ்வெண் புகையில் நனைய மசமசவென்று கண் முன் தோன்றிய அந்த உருவம் கணபதியைப் பார்த்து தமிழில் சரளமாகப் பேச ஆரம்பித்தது. “நான் பத்ரகா. நீ கணகா. உனக்கும் எனக்கும் முன் ஜென்மாந்திர தொடர்பு உண்டு. நீயும் நானும் முற்பிறவில் சகதபஸ்விக்கள். இப்பிறவியிலும் நீ தவ வாழ்வில் ஈடுபட வேண்டும்.” அவ்வளவுதான். செய்தி தெரிவிக்கப்பட்டது. அவ்வுருவம் பட்டென்று மாயமாய் மறைந்துவிட்டது. சூழ்ந்த புகை விலகியது.

கணபதி தமிழ் பக்கம் போகாதவர். ஆனால் எம்மொழிக் கிரந்தமானாலும் அக்ஷரம் பிசகாமல் நினைவில் நிறுத்திக்கொள்ளும் அபார நினைவாற்றல் இருந்தது. கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரிக்கு தமிழ் தெரியும். அவரிடமிருந்து பத்ரகா சொன்னதை தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டார். அப்போதிலிருந்து கணபதியின் மனஸ் தவமியற்ற தவியாய்த் தவித்தது.

இதற்கிடையில் நந்திகிராமம் சென்றிருந்த கணபதியின் தம்பி சிவராம சாஸ்திரி தந்தைக்கு ஒரு லிகிதம் எழுதினார். அதில், கணபதி ஒரு பிரம்ம தேஜஸான தவ சிரேஷ்டருடன் ஐராவதத்தின் மீதேறி எங்கோ தவமியற்றப் போவது போன்று கனவு கண்டதாக எழுதியிருந்தார். நரசிம்ம சாஸ்திரி தனது மகன் ஒரு அபூர்வச் செயலுக்காக இப்புவியில் பிறந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டார். கணபதி தவமியற்ற போவதற்கு ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். ”தங்களது கட்டளை என்ன?” என்று தாள் பணிந்து கேட்டார் கணபதி. “நான் அழைக்கும் போது உடனே நீ திரும்பிவிட வேண்டும்.” சங்கரருக்கு ஆர்யாம்பாள் இட்ட கட்டளை போன்ற கேள்வி. கணபதி ஒத்துக்கொண்டார்.

கணபதி தவமியற்றித் திரும்பும் வரையில் விசாலாக்ஷி பிறந்தகத்திலேயே இருக்க ஏற்பாடாயிற்று. தனது இருபதாவது பிறந்தநாளில் (18-11-1897) தந்தையின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் காசி க்ஷேத்திரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

புண்ணிய காசியை வந்தடைந்து வைத்தியநாத சாஸ்திரியுடன் ஸ்நேகிதரானார். அவரின் ஸ்நேகிதர் கைரேகை சாஸ்திர விற்பன்னர். கணபதியின் உள்ளங்கையில் ஓடிய ரேகைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு “ரேகைகளில் சங்கு சக்கர அடையாளங்கள் தெரிகிறது. தெய்வாம்சம் பொருந்திய ரேகைகள்” என்று கண்கள் விரிய அதிசயித்தார்.

வைத்தியநாத சாஸ்திரியிடம் சொல்லிக்கொண்டு அங்கவஸ்திரத்தில் கொஞ்சம் அவலை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு கங்கையைத் தாண்டிவிட்டார். அங்கிருக்கும் சங்கமாதவ கோயிலின் மண்டபத்தில் தவமியற்ற சம்மணமிட்டார். ஆளரவமற்ற நிசப்தமான பகுதி. எப்பவாவது பட்சிகள் எதாவது சப்தமிடும். காற்று வீச கிளைகள் அசையும் அரவம் கேட்கும். மற்றபடி எவரும் தொந்தரவு செய்யாத இடம். கண்களை மூடி இரவு முழுவதும் ”நமசிவாய... நமசிவாய....” என்று சிவ பஞ்சாட்சரம் ஜெபித்தார்.

கண் விழித்த போது பொழுது விடிந்திருந்தது. அவரது கம்பளி, வேஷ்டி துண்டு மற்றும் வைத்திருந்த சொற்ப அனாக்களும் காணாமல் போயிருந்தன. இராவேளையில் நடமாட்டம் இல்லாத அந்த இடத்திற்கு தனியாளாக எவரும் நுழைந்திருக்க சாத்தியம் இல்லை. அவசியமும் இல்லை. கடைசியில் அங்கே மீதமிருந்தது அவரது கமண்டலமும் ஒரே ஒரு வேஷ்டியும். மனிதர்கள் யாரும் வரவில்லை என்றால் எப்படி மற்றவையெல்லாம் காணாமல் போயிருக்கும்? கணபதிக்கு இதில் ஆச்சரியமேதுமில்லை.மெலிதாக புன்னகைத்தார். இது கடவுளின் லீலை. தன்னை பரீட்சிக்கும் சோதனை.

அது உடல் விரைக்கும் குளிர் காலம். பனிக்கட்டியாய் ஜில்லிட்ட கணபதி விடாமல் தவமியற்றினார். கையில் கொண்டு சென்ற அவல் பத்து இரவுகளின் பசியை ஆற்றியது. பகற்பொழுதில் வாயில் எதையும் போடாமல் தவ வேள்வியில் ஈடுபட்டார். பத்து நாட்கள் தொடர் தவத்திற்கு பிறகும் தெய்வாதீனமாக எதுவும் நடக்கவில்லை என்றதும் குந்துமணியளவு மனம் குன்றினார். கங்கைக்கு அருகில் கடவுளைத் தேடும் சிலருக்கு இதன் ரகஸியம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தார். கங்கைக் கரையில் தனியனாய் இங்குமங்கும் அலைந்து திரிந்தார்.

சதா சர்வகாலமும் இறை சிந்தனையோடு பல மைல்கள் நடந்து ஒரு ஆசிரமக் குடிலை அடைந்தார். அங்கு தொங்கு தாடியுடன் இருந்த சிரேஷ்டர் ஒருவர் கணபதிக்கு இலை போட்டு பிராம்மண போஜனம் அளித்தார். சற்றுநேரம் அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவரும் இறை தரிசனத்திற்காக இங்கே தவமிருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு நாளிரவு மட்டும் அங்கு தங்கினார். காலையில் மீண்டும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

அப்போது எதிர்புறம் வந்த ஒரு பிரம்மச்சாரி தவம் செய்வதற்கு தோதான ஒரு இடத்தைக் காண்பிப்பதாக அழைத்துச்சென்றார். அவர் ஹம்ஸ தீர்த்தத்தைக் காட்டினார். அயோத்தி மஹாராஜா நிர்மாணித்த சமஸ்க்ருத ஆசிரமப் பள்ளியும் அங்கு இருந்தது. அப்பள்ளியின் இலக்கண ஆசிரியர் கணபதியின் முகப்பொலிவைக் கண்டு பரம சந்துஷ்டியோடு குளிருக்கு ஷாலும் சில துணிமணிகளும் கொடுத்து உதவினார். மீண்டும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து தவமியற்றினார். பின்னர் கணபதிக்கு அவ்விடம் கசந்தது. அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக ஆனது.

சூரியகிரஹணத்திற்காக அந்த ஆசிரமவாசிகளும் மற்றவர்களும் காசிக்குப் பயணப்படவேண்டும். கிரஹணத்திற்கு இன்னும் ஒரு மாசம் இருந்தாலும் அதற்கு முன்னரே உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓயாமல் ஆரவாரம் செய்தார்கள். கணபதியின் தவத்திற்கு இது இடைஞ்சலாகி முட்டுக்கட்டைப் போட்டது.

காசிக்குப் புறப்பட்ட அவர்களுடன் கணபதியும் படகில் ஏறிக்கொண்டார். விந்தியமலைச்சாரலை அப்படகு வந்தடைந்தவுடன் அதிலிருந்து இறங்கினார். அங்கே தவம் செய்யலாம் என்று ஒரு உத்வேகம் அவருக்குள் ஏற்பட்டது. விந்தியமலைச்சாரலின் பிரதான தெய்வம் நந்த தேவி. நந்ததேவியை வணங்கிவிட்டு அன்றிரவு உக்கிரமான ஜபத்தில் ஆழ்ந்தார். ஜபத்தின் ஊடே அவரது உடம்புக்குள் ஏதோ புகுந்து கொண்டது போல அவரது மேனி தடதடவென்று உதறியது. சம்மணமிட்டக் கால்கள் தூக்கித் தூக்கி போட்டு படபடவென்று அடித்துக்கொண்டது. கண்கள் மேலே சொருகியிருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....

அவரை ஏதோ ஒரு சக்தி அப்படியே அலேக்காக ஒரு பதினைந்து அடி தூரம் தரையிலிருந்து தூக்கியது. சில வினாடிகளில் மீண்டும் ஒரு புஷ்பம் போல மெதுவாகதரையில் இறக்கி வைத்தது. இந்த புதுவித அனுபவத்தில் கணபதி ரொம்பவும் ஆடிப்போனார். உடம்பு ஒருவித பயத்தில் வெடவெடவென்று நடுங்கியது. அப்போது அவர் ஒரு ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தார்.

அவந்த்யா விந்த்யா பூமி ப்ருத்
ததால்யா தயாவதி
விசார தௌத சேடஸம்
இயம் பயம் வ்யபோஹது
[வளமிகுந்த விந்தியமலைச்சாரலில் அமைந்திருக்கும் கோயிலில் உறையும் அன்னையே..உனது அருளாலும் உன் கருணா விசாரணையால் உன்னைத் துதிப்பவரின் மனோ பயங்கள் துடைக்கப்படட்டும் என்ற அர்த்ததில் எழுதப்பட்ட ஸ்லோகம். சமஸ்கிருத ஸ்லோகத்தை தமிழில் என்னல் இயன்றளவுக்கு எழுதியிருக்கிறேன்]

தெய்வ சிந்தனைக்கு எதிரான தீயசக்திகள் நடமாடும் இடம் போலிருப்பதாக எண்ணி அது தவமியற்ற ஏற்ற இடமல்ல என்று அங்கிருந்து அகன்றார் கணபதி முனி. மறுநாள் அங்கிருந்து நாராயணபுரம் என்ற கிராமத்தை வந்தடைந்தார். நாராயணபுரத்திலிருந்து ஒன்பது மணிநேரங்கள் நடையாய் நடந்து வ்யாஸ காசிக்கு(ராமநகர்) வந்தார். அங்கே கடைவீதியில் அவருடைய அங்கவஸ்திரத்தைஇரண்டு அனாக்களுக்கு விற்றார். ஒரு அனாவிற்கு வாழைப்பழங்கள் வாங்கிக்கொண்டார். இன்னொரு அனாவை படகுக் கட்டணமாகக் கொடுத்துக் கங்கையைக் கடந்து காசி வந்தடைகிறார்.

காசியில் வசிக்கும் ஆர்யசோமயாஜுலு பவானி சங்கரம் என்ற பெரியவர் கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரியின் தாய் மாமன். அவர் வீட்டில் தங்கினார். அன்று அன்னபூரணி மற்றும் காசி விஸ்வநாதர் தரிசனம் கிட்டியது. காசி நகரை ஒரு வலம் வந்தார். ஓரிடத்தில் மக்கள் ஆர்வம் ததும்ப திரளாக கூடியிருந்தனர். ”இங்கே என்ன நடக்கிறது..” என்று கணபதி எட்டிப் பார்த்தபோது.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_6‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 5 : ஜோதிஷ திலகம்

...வெகுண்டு போன அந்த ஜோதிடர் ஜாதகக் கட்டுகளை திண்ணையில் விசிறியெறிந்து “இதைவிட பெருசா உன்னால் என்ன சொல்லிவிட முடியும்? ம்.. ” என்று உறுமி காட்டுக் கத்தலாகக் கத்தினார். இதற்கெல்லாம் கணபதி அசரவேயில்லை. கை அனாயாசமாகச் சீட்டாடிக் கொண்டிருந்தது. ராமதாஸ் பந்துலு கேட்ட ஜாதக சந்தேகக் கேள்விகளுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் தங்குதடையில்லாமல் ப்ரவாகமாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

இந்த இளைஞன் லேசுப்பட்டவனில்லை என்று அந்தக் கூட்டம் அதிசயித்தது. கூச்சலிட்ட ஜோதிடர் பொட்டிப்பாம்பாக அடங்கினார். வாய் பிளந்தார். கோஷ்டியினர் அடுத்தநாளும் அங்கேயே தங்கும்படி வேண்டினார்கள். “மன்னித்துக் கொள்ளுங்கள்...” என்று ஒற்றை வார்த்தையில் கணபதி க்ஷேத்திராடனம் புறப்படுவதைத் தெரிவித்தார். பந்துலு கணபதிக்கு கைகொள்ளா வெகுமதிகள் அளிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனாலும் அதிகாலையில் கணபதி மற்ற இருவரோடும் விறுவிறுவென்று கிளம்பினார்.

நேற்று தாம்தூமென்று குதித்த அந்த வயதான ஜோதிடர் பந்துலுவின் ஏவலின் பேரில் தர்மசாலாவிலிருக்கும் வாரனாசி அச்சுதராம சாஸ்திரி என்பவரிடம் காதும்காதும் வைத்தார்ப்போல சில விஷயங்களை போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். அச்சுதராம சாஸ்திரி புலவர். தர்மசாலை வைத்திருக்கும் கிருஷ்ணம்மா நாயுடுவின் ஆப்த நண்பர். நாயுடுவுக்கு நேரமே சரியில்லை. எதையெடுத்தாலும் சறுக்கல். தனது நண்பனுக்கு விடிவுகாலம் வராதா என்று காத்திருந்த அச்சுதராம சாஸ்திரி, கணபதியின் மேதாவிலாசத்தைப் பற்றி அந்த ஜோதிடர் சொன்னவுடன் எப்படியாவது கணபதியை கிருஷ்ணம்மா நாயுடு வீட்டிற்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தார்.

கிருஷ்ணம்மா நாயுடு தர்மசிந்தனையுள்ள மிராசுதார். முதல் தாரத்தின் வழியே சந்ததியில்லை என்பதால் இரண்டாவது மணம் புரிந்துகொண்டார். துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது கல்யாணத்திற்குப் பிறகு தீராத மலட்டுத்தனமை அவரைத் தொற்றிக்கொண்டது. கணபதி அவருடைய ஜாகத்தைப் பிரித்தார். சில நிமிடங்களில் “மூன்று மாதத்தில் இந்த நோயிலிருந்து சொஸ்தப்படுவீர்கள். உங்களது இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் பிறப்பாள். நீங்கள் ஒரு மகனை வேறு சுவீகாரமெடுத்துக்கொள்வீர்கள்” என்று சரமாரியாகப் பொழிந்தார்.

கணபதி அங்கு இருந்தாலே நாயுடுவுக்கு அது ரோக நிவாரணமாகயிருந்தது. நாயுடுவும் அந்த வியாதியிலிருந்து ஏறக்குறைய விடுபட்டது போல உணர்ந்தார். மற்ற இரு யாத்ரீகர்களுக்கும் பணம் கொடுத்து வழி அனுப்பிவிட்டு கணபதியை தன்னுடன் பத்திரப்படுத்திக்கொண்டார்.

கணபதியின் காசி யாத்திரை தடைப்பட்டது. அச்சுதராம சாஸ்திரியுடனும் இன்னும் சிலருடன் சத்சங்கம் அமைத்துக்கொண்டு இலக்கியங்களையும் காவியங்களையும் அக்கக்காக அலசினார். திண்ணைகள் திணறின. யாராவது முழநீள பாடலைப் பாடினால், அவர்கள் முடித்ததும் திரும்ப ராக தாளம் மாறாமல் கணீரென்று பாடுவார். கையில் நீட்டிய புஸ்தகத்தை குன்ஸாக ஒரு பக்கத்தைத் திறந்து பார்ப்பார். இரண்டு மூன்று தடவை தலைக்கு மேலே தூக்கிப் போட்டு விளையாட்டாக கேட்ச் பிடிப்பார். குழுமியிருப்போர் வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருக்க, சற்று முன்னர் திருப்பிய பக்கத்தை அக்ஷரம் பிசகாமல் அப்படியே ஒப்பிப்பார். அனைவரும் திறந்த வாய் மூடாமல் இதை இரசிப்பார்கள்.

அவரது ஆற்றலுக்கு எல்லையே இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு கையாலும் சுற்றி அமர்ந்திருக்கும் நாலைந்து பேருடன் செஸ் விளையாடுவார். அந்த ஐந்து பேருக்கும் நகர முடியாமல் செக்கும் வைப்பார். ஆட்டம் ஜெயிப்பார். இப்படி சகஜமாக அனைவரோடும் விளையாடிக்கொண்டிருக்கும் வேளையிலும் சரளமாக சமஸ்கிருதக் கவி புனைவார். அந்த அமுதத்தைக் கேட்பவர் உணர்ச்சிவசப்பட்டு புளகாங்கிதமடைவார்கள். நந்திகிராமத்தில் அவர் இருந்த வரையில் அவ்வூரிலிருந்த நிறைய புத்திசாலிகளைக் கவர்ந்து தம் பக்கம் காந்தமாய் இழுத்தார். அதே சமயத்தில் அவர் கணித்தது போல நாயுடு தனது நீங்கா மலட்டுத்தன்மையிலிருந்து பூரண நலம் பெற்றார். நாயுடுக்கு சந்தோஷமான சந்தோஷம்.

கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரியை அழைத்து வர ஆளனுப்பினார். தந்தையையும் மகனையும் சதஸ்ஸில் நிற்க வைத்து பூரண கும்ப மரியாதை அளித்து கௌரவித்தார். வருடத்திற்கு ஐம்பது ரூபாய் கணபதிக்கு சம்பாவணையாகத் தருவதாக வாக்களித்தார். மேலும் அவரது தீர்த்தயாத்திரைக்கு தேவையான பொருட்செலவையும் ஏற்பதாக உறுதியளித்தார். “இவருக்கு தீர்த்தயாத்திரை போவறதுக்கு எவ்வளவு வேணுமின்னாலும் உதவலாங்க...ஆனா ரொம்ப சின்ன வயசா இருக்காருங்க.. அதான்.. காசி வரைக்கும் ரொம்ப தொலைவுக்கு இப்ப எப்புடி ஒண்டியாளா அனுப்புவீங்கன்னு?.. ” என்று நரசிம்ம சாஸ்திரியிடம் தடுமாறினார்.

மகோன்னதமாகத் தவத்துக்கு கிளம்பிய கணபதியின் தீர்த்தயாத்திரைப் பயணம் கிருஷ்ணம்மா நாயுடு என்கிற நல்ல நண்பரை சம்பாதித்ததுடன் நிறைவுக்கு வந்தது. தந்தையுடன் கலுவராயவிற்கு அமைதியாகத் திரும்பினார்.

கணபதி இப்போது கலுவராயவில் கிரஹஸ்தாஸ்ரமத்தில் ஊறியிருந்தார். குடும்பஸ்தனாக அவர் தவத்தை விட்டவர் போல இருந்தாலும் மனசுக்குள் தவமும் ஆன்மிகமும் கனலாகக் கனன்று கொண்டிருந்தது. அற்ப வாழ்க்கை வாழ்கிறோம் என்று அடிக்கடி குமுறிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் பூஜையறையில் ஜபம் செய்துகொண்டிருந்த போது அவருக்கு முன்னால் புசுபுசுவென்று புகைப் போலக் கிளம்பிய இடத்தில் முழுநீள தாடியுடன் ஒரு உருவம் மசமசவென்று தெரிந்தது.. அது.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_5‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 4 : தவம்

இல்லற தர்மத்திலிருந்து ரவையளவு வழுவாமல் அகத்திலுள்ளோரின் அகங்களைக் கவர்ந்து சந்துஷ்டியாக கணபதி - விசாலாக்ஷியின் குடும்ப வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஒருநாள் அன்னம் பரிமாறிக்கொண்டிருந்த விசாலாக்ஷியிடம் நரசிம்மசாஸ்திரி “எந்த மந்திரங்களை உபாஸனை செய்து கொண்டிருக்கிறாயம்மா?” என்று வினயமாக விஜாரித்தார். ”கணபதி மந்திரமும் ஸ்ரீ வித்யா உபாஸனையையும் செய்துகொண்டிருக்கிறேன்...” என்ற விசாலாக்ஷியின் பதிலில் மனம் நிறைந்தார். அந்த பதில் கிடைத்த த்வனியில் ஒரு விதமான மனமகிழ்ச்சியும் அடைந்தார். ”தேவியையும் கணபதியையும் நித்யபடி உபாசிப்பது மகோன்னத சக்திகளைத் தரும் ஒன்று... தொடர்ந்து செய்..” என்று உபதேசித்தார்.

அந்த ”கணபதி உபாஸனை” பதிலில், தனக்கு தெய்வத்தன்மையை சூட்சுமமாக ஒட்ட வைத்துப் பார்ப்பதில் விசாலாக்ஷி அகமகிழ்வதைக் கணபதி கண்டு கொண்டார். தன்னுடைய நுட்பமான இலக்கிய அறிவையும் மொழியின் ஆளுமையையும் காரணிகளாகக் கொண்டு தன்னை அருளாளன் என்று விசாலாக்ஷி புகழ்வதை ஏற்கமுடியாமல் தவியாய்த் தவித்தார். தவத்தினால் பெறும் அரிய குணாதிசயங்கள் இதுபோன்ற அற்ப காரியங்களால் வந்துவிடாது என்று விடாப்பிடியாக நம்பினார். உடனே தவமியற்றத் தோதான இடத்திற்கு விரைய எண்ணினார்.

இவருக்கு சற்றே மூத்தவராகயிருந்தாலும் இவரிடம் மந்திர தீக்ஷை பெற்றவர் வெங்கட சாஸ்திரி. வீட்டிலுள்ள பெரியவர்கள் அசரும் சந்தர்ப்பத்தில் வீட்டை விட்டு தவமியற்ற செல்ல வேண்டும் என்று கணபதியும் வெங்கட சாஸ்திரியும் கலந்து தீர்மானித்தனர். எப்படியோ இதை அரசல்புரசலாகக் காதில் வாங்கிய கணபதியின் அண்ணா பீமா சாஸ்திரி “என்னை உங்களுடன் அழைத்துச் செல்லவில்லையென்றால் உங்களை வீட்டுப் பெரியவர்களிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்” என்று மிரட்டினார். அவரையும் சேர்த்து அந்த மூவரும் கண்காணாத ஒரு புனிதமான க்ஷேத்திரத்திற்கு பயணிக்க தயாரானார்கள்.

இவர்களின் தீர்மானத்திற்கு ஒத்தாசையாக ஷரவண மாதம் பிறந்தது. விசாலாக்ஷி மங்கல கௌரி விரதத்திற்காக பிறந்தகம் சென்றாள். அது 1896ம் வருடம். அன்று மூவரும் ரகஸியமாக வீட்டை விட்டுப் புறப்பட்டனர். தவ உத்வேகத்தில் விறுவிறுவென்று கால்நடையாகவே ராஜமஹேந்திரவரம் (இன்றைய ராஜமுந்திரி) அடைந்தனர். அங்கிருந்து ஒரு படகில் ஏறி கௌஷிகி நதிக்கரையில் அமைந்த பேரம்ம அக்ரஹாரத்தில் இறங்கினர். இப்பிராயணத்தில் துவண்ட பீம சாஸ்திரி தனது தவ வைராக்கியத்தை எப்பவோ இழந்திருந்தார். ”ரிஷிகள்தான் தவமியற்றுவார்கள்.. நம்மை ஒத்த பையன்கள் எவனாவது தவம் செய்வானா?” என்றெல்லாம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணபதியின் சமாதானங்களும் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காமல் பீமா சாஸ்திரி ஊருக்குத் திரும்பிவிட்டார்.

நம் கணபதி தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்களுக்கு விடாமல் பெருந்தவம் செய்தார். அதற்கு மேல் தொடர ஏனோ மனமில்லாமல் விட்டேத்தியாய் அமர்ந்திருந்த போது வெங்கட சாஸ்திரியின் பெற்றோர் அவரையும் கணபதியையும் வீடு திரும்ப லிகிதம் எழுதியிருந்தார்கள். இங்கு வந்திறங்கியதில் இருந்து வெங்கட சாஸ்திரி தனது வீட்டு மக்களோடு தொடர்பு வைத்திருந்தது கணபதிக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.

கணபதி அன்றைய ஜபதப அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வெங்கட சாஸ்திரியுடன் ஊரைப் பார்க்க கிளம்பினார். சிகடம் வரை ரெயிலில் வந்தனர். ஆனால் அந்த இடத்திலிருந்து கலுவராயிக்கு நடந்துதான் செல்லவேண்டும். வாகன வசதியில்லை. கணபதிக்கு சிந்தனையெல்லாம் தவத்தை சுற்றியே வட்டமிட்டிருந்தது. வீட்டிற்கு செல்ல மனமேயில்லை. புனித காசிக்கு செல்ல ஆசைப்பட்டார். அங்கேயே வெங்கட சாஸ்திரியிடமிருந்து நழுவி இரவோடு இரவாக ராமசந்திரபுர அக்ராஹாரம் என்ற கிராமத்தை அடைகிறார்.

மறுநாள் க்ஷீராப்தி துவாதசி. பவித்ரமான நாள். அங்கிருந்த ஒருவர் கணபதிக்கு ப்ராம்மண போஜனம் செய்வித்து இரண்டு அனா தட்சிணையும் கொடுத்து சேவித்தார். தனக்கு அதிர்ஷ்டமாகக் கிடைத்த காசிற்கு துசிக்கு டிக்கெட் எடுத்தார். துசியில் தீர்த்தயாத்திரைகளுக்கு உதவும் ஒரு தர்மிஷ்டரைச் சந்திக்கிறார் கணபதி. அம்மனிதர் கணபதியை அங்கு முகாமிட்டிருந்த பக்தர்களுக்கு மஹாபாரதத்திலிருந்து சாந்திபர்வத்தை உபன்யாசம் செய்யச் சொல்கிறார். கணபதியின் சொல்லாட்சியும் அர்த்தப்பூர்வமான எடுத்துக்காட்டுகளும் கதை சொல்லும் தோரணையும் அவரை ஆச்சரியமடையச் செய்கிறது. கேட்டவர்கள் பரவசமடைந்தார்கள். அவரது பாண்டித்தியத்தைப் பாராட்டி அந்த தர்மவான் ஆறு ரூபாய்கள் பரிசளிக்கிறார்.

அப்பரிசிலை வாங்கிக்கொண்டு துசியிலிருந்து முன்னிரவு நேரத்தில் தெக்கலை என்ற இடத்திற்கு வந்தடைகிறார். அங்கு அதிதியாக ஒரு வீட்டில் இரவு உணவு உண்டு சிரமபரிகாரத்திற்குத் திண்ணையில் உட்காருகிறார். அப்போது மேலும் இரண்டு யாத்ரீகர்கள் அந்தத் திண்ணையில் அவருடன் சேர்ந்துகொண்டார்கள். கையில் சீட்டுக்கட்டோடு விஸ்ராந்தியாக அமர்ந்தவர்கள் “ஏம்ப்பா... நீயும் ஒரு கை போடேன்..” என்று கணபதியையும் ஆட பிடித்து இழுத்தார்கள். சீட்டாட்டம் கன ஜோராக நடந்து கொண்டிருந்தபோது இன்னும் கொஞ்ச பேர் கையோடு கையாக விளையாடச் சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒரு வயசாளி ஜோதிடக்காரரும் அடக்கம். சீட்டுக்கட்டு விசிறியாட ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே வீட்டின் உரிமையாளர் ராமதாஸ் பந்துலு வந்துவிட்டார். சற்று நேரத்தில் எல்லோரும் சேர்ந்து சில ஜாதகங்களை எடுத்து அலச ஆரம்பித்தார்கள்.

கணபதிக்கு கை சீட்டாடினாலும் கவனம் கன சிரத்தையாக இவர்கள் ஜாதகம் அலசுவதில் இருந்தது. அந்த வயதான ஜோதிடர் குருட்டாம்போக்குக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் ஆரூடமாகச் பிதற்றிக்கொண்டிருந்தார். அவரது அழிச்சாட்டியம் எல்லை தாண்டிய ஒரு தருணத்தில் கணபதி ஊடே புகுந்து “ஏங்க இவருக்கு சுத்தமா ஜோஸியமே தெரியாது போல்ருக்கே....” என்றார் சீட்டு விளையாடிக்கொண்டே திடமாக. வெகுண்டு போன அந்த ஜோதிடர்.......
‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_4‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 3 : விளையும் பயிர்

”பிரசவிக்கும் பெண்மணி அக்கணமே உயிர் துறப்பார்..” என்ற திடுக்கிடும் துக்கச் செய்தியைச் சொன்னார் கணபதி. அப்படியே நடந்தது. இறந்தபோது அவரது அன்னைக்கு வயது 35. வீட்டிலுள்ளோர் கதறி அழும்போது அதிர்ச்சியில் செய்வதறியாது திண்ணையில் நிலைகுத்திக் கிடந்தார். 

சமஸ்கிருத இலக்கணத்தையும் கவிராஜர்கள் பாரவி* போன்றோரையும் வேதூல வெங்கடராய சாஸ்திரியிடம் கற்றுத்தேர்ந்தார். தனது அண்ணன் பீமா சாஸ்திரி மற்றும் தங்கை அன்னபூர்ணா ஆகியோருக்குத் திருமணம் நடந்தேறிய பின்னர் தனது பனிரெண்டாவது வயதில் விசாலாக்ஷியை கரம் பற்றினார். அப்போது விசாலாக்ஷிக்கு வயது எட்டு. புதுமாப்பிள்ளையாக ”பிருங்க சந்தேஸா” என்று ஒரு சிறிய சிருங்கார காவியம் படைத்தார். தன் காதல் மனைவிக்கு அர்ப்பணித்தார். வெங்கடராய சாஸ்திரி புகழ்ந்து தள்ளினார். அவருக்குப் பெருமை. காளிதாஸனின் மேகதூதம் போல அமையவில்லையே என்று குறைப்பட்டுக் கொண்டு படைத்ததைக் கிழித்தெறிந்தார் கணபதி. 

பதினான்கு வயதுக்கு முன்னர் அவரெழுதிய சில ஸ்லோகங்கள் கண்டெடுக்கப்பட்டு பத்திரமாக சேமிக்கப்பட்டது. ஒரு சில...

வந்தேமாஹே மஹாதேவம்
யாஸ்ய வந்தாரவோ ஜனாஹ்
நவிந்தந்தி புணர்மாதுஹ்
குச கும்ப பயோரஸம்
மஹேஸ்வரனை வந்தனம் செய்பவர்கள் மீண்டுமொரு ஜென்மம் எடுத்து அம்மாவிடம் பாலுண்ணும் நிலையடையாமல் முக்தி அடைவார்கள் என்பது மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.

காகோல முஞ்ச கர்வம்
படபானல முஞ்ச திவ்ரதாதர்பம்
வேகவதி ஜலம் ஏதத்
தாருணசூடாமணிர் ஜெயதி
உன்னுடைய செருக்கை காகோல விஷம் அழிக்கட்டும். பாடபாக்கினி கடற் தீ உன்னுடைய ஆணவத்தை ஒழிக்கட்டும். வேகவதி நதியின் ஜலம் உன்னுடைய துக்கத்தைத் துடைத்து ஜெயத்தை அருளட்டும்.

இஹகேஸாம்சித் ஏச ச்சேனா
சந்தோஸாய கா க்ஷதி
கிம் ஆனந்தாய காகானாம்
பாலகோகில காகலி
இது யாருக்கும் இன்பமளிக்காவிட்டால் என்ன நஷ்டம்? இளங்குயில் காக்கைகளின் கூட்டத்திற்கா பாடுகிறது?

பதினான்கு வயதில் காவியங்கள், நாடகம் அலங்கார சாஸ்திரங்கள் என்று சர்வகலா வித்தகரானார். நினைத்தால் அந்தக் கணமே அவ்விடத்திலேயே ஸ்லோகங்கள் புனையும் திறன் பெற்றிருந்தார். பதினெட்டு வயதில் இதிகாச புராணங்கள் அவருக்கு அத்துபடியாயிற்று. மேடையேறி அஷ்டாவதானம் புரியுமளவிற்கு திறமைகளை வளர்த்துக்கொண்டார். இலக்கிய சபையில் எட்டு கேள்வியாளர்கள் சூழ அமர்ந்து அவர்களின் கேள்விகளுக்கு பாட்டாக பதில் சொல்லவேண்டும். முடிவுறும் தருவாயில் கவி அனைத்து கேள்விகளையும் பதில்களோடு பாட்டாக படித்துக் காட்ட வேண்டும். 

மஹாபாரதம் அவருடைய ரிஷியாகும் வைராக்கியத்தை மேலும் முடுக்கியது. நரசிம்ம சாஸ்திரி மந்திர ஜெபங்களிலும் தியானத்திலும் கணபதியை வெகுவாகத் தயார்படுத்தியிருந்தார். வீட்டுச் சூழ்நிலை தவமியற்றுவதற்கு இடையூராக இருக்கும் என்று முடிவு செய்து ஏதாவதொரு புண்ணிய ஸ்தலத்திற்கு யாத்திரை சென்று தபஸில் ஈடுபட காத்திருந்தார்.

இதற்கிடையில் நரசிம்ம சாஸ்திரி கணபதிக்கு மணமுடிக்க விரும்பி பெண் பார்க்க ஆரம்பித்தார். குடும்பஸ்தனாக ஆவதற்கு முன்னர் தவமியற்ற விரும்பினார் கணபதி. “க்ருஹஸ்தாஸ்ரம தர்மத்திலிருந்து தப்பித்து நான் ஓடவில்லை. ப்ராசீனமான குடும்பப் பொறுப்பிலிருந்து கேவலமாகத் தப்பித்து ஓடுவது மகோன்னதமான காவியுடுத்தலை களங்கப்படுத்தும் துர் செயலாகும்.” என்று நரசிம்ம சாஸ்திரியிடம் சுய விளக்கமளித்தார். பெண்களைப் பாவத்தின் பிறப்பிடமாகவும் மாயீகளாகவும் நம்பிய நாட்களில் அதை திட்டவட்டமாக மறுத்தார். 

பண்டைய காலத்தில் ரிஷிகள் குடும்ப வாழ்க்கையை விட்டு விலகாமல் தங்களது தர்மபத்தினியோடு இல்லற தர்மத்தில் எளிமையாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்கள். மெய்ஞ்ஞானம் அடைந்தார்கள். பெண்களை வெறும் போகப்பொருளாக அவர்கள் நடத்தவில்லை. ரிஷிபத்தினிகளும் ஆன்மீக வேள்விகள் இயற்றும் யோக்கிதையைப் பெற்றிருந்தார்கள். ரிஷிகளும் தங்களது தர்மபத்தினகளுக்கும் நல் ஆசானாக இருந்து தீக்ஷையளித்து ஒழுக்கமான சமூகத்தை உண்டாக்கினார்கள். இதுபோன்றவைகளை வேதங்களிலும் புராணங்களிலும் படித்துத் தன்னை உரமேற்றிக்கொண்டார் கணபதி.

நரசிம்ம சாஸ்திரிக்கு கணபதியின் இந்த மார்க்கம் மனசுக்கு நிம்மதியளித்தது. தன்னுடைய மருமளும் பூஜை தபஸ் போன்றவைகளில் ஈடுபடுத்தவேண்டும் என்று விரும்பினார். திருமணத்திற்கு கணபதி விதித்த நிபந்தனை விசித்திரமானது. “கிரஹஸ்தாஸ்ரம தர்மங்களை மீறாமல் நடந்து கொள்கிறேன். ஆனால், வீடாறு மாதம்... தபமியற்ற காடாறு மாதம் என்று சென்றுவிடுவேன்”. 

பொமிகபடு கிராமத்திற்கு நரசிம்ம சாஸ்திரி வந்தடையும் போது மிகவும் கலக்கத்தில் இருந்தார். கணபதியின் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்று விசாலாக்ஷியிடம் சொன்னபோது “அப்படியே அவர் விருப்பம்படியே ஆகட்டும் அப்பா. எனக்கும் ஒரு விருப்பம் உள்ளது.. நீங்களும் அதை ஆமோதிக்க வேண்டும்” என்றதும் குழுமியிருந்தவர்கள் நெற்றி சுருக்கினார்கள். ”இரண்டு பிள்ளைகளை நான் பெற்ற பிறகு இதுபோன்ற தபஸ்களில் நான் ஈடுபடுவதையும் யாரும் தடுக்கக்கூடாது” என்றதும் ஜாடிக்கேற்ற மூடியாக பொருந்திவிட்டார்கள் என்று இருவீட்டாரும் மகிழ்ந்தனர்.

இப்படி இருவரும் தபஸ்விகளாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட போது கணபதிக்கு வயது பதினெட்டு, விசாலாக்ஷிக்கு பதினைந்து!

*பாரவி எழுதிய கிராதார்ஜுனியம் புகழ்பெற்ற காவியம். அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் வாங்கிய சரிதம்.

[ஸ்லோகங்களின் தமிழ் வடிவம் என்னுடைய சமஸ்கிருத பாஷையறிவினால் கொஞ்சம் தடுமாறியிருக்கலாம். நட்புகள் மன்னிக்க! ]

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails