Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 9 : தேனூட்டிய புவனேஸ்வரியம்மன்

...அந்தக் கடிதத்தில் கணபதியை கண்கொட்டா வாய்மூடா ஆச்சரியத்தில் அடித்துப்போட்டவை இரண்டு. ஒன்று அவர் கடிதம் எழுதி கவருக்குள் மடித்து வைக்கும் போது மஞ்சமசேரென்று இருந்த காகிதம் இப்போது பளீர் வெள்ளையில் டாலடித்தது. இரண்டாவதாக இவர் படமிருந்தது கடிதத்தின் மேல் பகுதியில். அங்கே இவர் எழுதியிருந்த எழுத்துகள் எல்லாம் கீழே ஒதுக்கிவிடப்பட்டிருந்தது. கையெழுத்து சாட்சாத் இவருடையதுதான். கடிதத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் இவர் எழுதியதுதான். மனுஷ்ய சக்திக்கு இது எப்படி சாத்தியமாகும்? தந்தையும் மகனும் எங்கும் நிறை பரப்பிரம்மமான ஈஸ்வரனின் திருவிளையாடலை எண்ணியெண்ணி நெக்குருகிப் போனார்கள். பக்திப் பரவசம் ஊற்றெடுக்க பூஜையறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.

பௌர்ணமிகளும் அமாவாசைகளும் மாறி மாறி உருண்டன. விசாலாக்ஷி கர்ப்பம் தரித்தார்கள். பிறந்தகம் சென்றார்கள். கணபதிக்கு மீண்டும் தவ எண்ணம் தலை தூக்கியது. புனிதப் பயணம் மேற்கொண்டு தவமியற்ற உத்தேசித்தார். “தயை கூர்ந்து வெகுதூரம் சென்றுவிடாதீர்கள்... “ என்று பிறந்தகம் போக மாட்டு வண்டியில் ஏறும் போது விசாலாக்ஷி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓரிஸா மாநிலத்தின் புவனேஸ்வருக்குச் செல்லத் தீர்மானித்தார்.

இம்முறையும் இவரோடு இருவர் தபஸ் புரிவதற்கு தொற்றிக்கொண்டனர். ஒருவர் கணபதியின் தம்பியின் மச்சினர் ராமா சாஸ்திரி. இன்னொருவர் காசியிலிருக்கும் மாமா தாத்தா பவானி சங்கரத்தின் மகன் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி. இவ்விருவருக்கும் கணபதிதான் மந்திர தீக்ஷை அளித்திருந்தார். ராமா சாஸ்திரி வைராக்கியமில்லாமல் ஒரே நாளில் புவனேஸ்வரிலிருந்து கலுவராயிக்கு திரும்பிவிட்டார். லக்ஷ்மிநாராயண சாஸ்திரி சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர். தாக்குப்பிடிக்க முடியாமல் அவரும் பின்னாலேயே வீடு திரும்பினார். கணபதிக்கு இப்போது நிம்மதி. புவனேஸ்வரில் அனந்த வாஸுதேவா கோயிலுக்குள் சென்றார். பின்புறம் இருக்கும் பிரகாரத்தில் பிறர் இம்சையில்லா ஓரிடத்தில் அமர்ந்து தவத்தைத் தொடங்கினார்.

பாஸ்கரன் மறையும் வரை ஆடாது அசங்காது பத்மாசனத்தில் தவமியற்றுவார். விண்ணில் நிலவு தோன்றியதும் கணீரென்று லலிதா சகஸ்ரநாமம் ஜெபிக்கத் தொடங்குவார். ஒன்பது முறை விடாமல் ஜெபிப்பார். ஒன்பது வாரங்களுக்கு சகஸ்ரநாமமும் ஜபமும் மாறிமாறி உச்சாடனம் செய்தார். ஒன்பதாவது வார இறுதியில் ஒரு கல் மேடையில் வாஸுதேவா கோயிலின் பின்புறம் நிலவொளியில் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார். வட்ட நிலவிலிருந்து கோடி சூர்யப்ரகாசமாக நிலவைக் கோட்டைக் கட்டிய பேரொளி ஒன்று தோன்றியது.

ஜொலிக்கும் புல்லாக்கும், ரத்ன க்ரீடமும், காதில் டாலடிக்கும் வைர தாடகங்களுமாக சர்வாலங்கார பூஷிணியாகப் புவனேஸ்வரி மாதா அந்த ஒளி வட்டத்துக்குள் அபயஹஸ்தத்துடன் காட்சி தந்தார். ஒரு மந்தகாசப் புன்னகையோடு தோன்றிய புவனேஸ்வரி மாதா கையிலிருந்த ஸ்வர்ண கிண்ணத்தில் தேன் தளும்பியது. தெய்வீகப் பரவசத்தில் ‘ஆ’வென்று அமர்ந்திருந்த கணபதிக்கு அந்தத் தேனை துளித்துளியாக ஊட்டினாள். சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியது போல. சொற்ப நேரமே நீடித்த அந்தக் காட்சி புகையாய்க் கலைந்து மீண்டும் விண்ணில் நிலா சோபனமாகத் தெரிந்தது. தனக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவத்தை அகக்கண்ணில் ஓட்டிப் பார்த்தார். நாக்கில் அமிர்தம் போல தெவிட்டாத தித்திப்பு. உதட்டருகே பிசுபிசுவென்றிருந்தது. கையால் உதடுகளைத் துடைக்க ஆள்காட்டி விரலில் ஒரு துளி தேன்!

அந்த க்ஷணத்திலிருந்து கவிதை கட்டுரை ஸ்லோகங்கள் என்று அவரெழுதிய ஆக்கங்களெல்லாம் அதிமதுரமாக இனித்தன. அவரது புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டது. புவனேஸ்வரியின் புன்னகை எப்போழுதுமே நினைவில் தங்க அவரெழுதிய காவியங்களுக்கு பலவாறு உறுதுணையாக இருந்து தீட்சண்யம் மிக்கதாக ஆக்கியது.

அன்றிரவு புவனேஸ்வர் கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எழுபது வயது மூதாட்டி ஒருவருக்கு ஒரு கனா. அதில் அவரது கணவர் தோன்றி “இப்போது வாஸுதேவர் கோயிலுக்குப் பின்புறம் நான் அமர்ந்திருக்கிறேன்” என்று கை காட்டினார். அவரது பெயர் லம்போதர்தாஸ். சிறிய இடைவெளியில் பிள்ளையாரப்பன் (லம்போதரா) தோன்றி அதையே கூறினார். மறுநாள் காலையில் தனது மகன் பாஸ்கர் தாஸை அழைத்து தனது சொப்பனத்தைச் சொல்லி வாஸுதேவர் கோயிலின் பின்புறம் ஏதேனும் விநாயகர் விக்ரகம் புதிதாக ஸ்தாபித்துள்ளார்களா என்று பார்த்துவரச் சொன்னார். பாஸ்கர்தாஸ் அங்கே பார்த்தது “கணபதி” என்னும் தவசிரேஷ்டரை! அந்தப் பெண்மணி பாஸ்கர் தாஸை கணபதியிடம் கணபதி மந்திர தீக்ஷை வாங்கிக்கொண்டு அவருக்கு சேவை புரியச் சொன்னார். பாஸ்கர் தாஸ் அவ்விதமே செய்தார். கணபதி மேலும் நான்கு மாதங்களுக்கு புவனேஸ்வரில் கலையாத தவம் இயற்றினார்.

13-02-1899 அன்று இரவு பசு ஒன்று காளைக் கன்று ஈன்றதாகக் கனவு கண்டார். இரண்டு நாட்கள் கழித்து விசாலாக்ஷி பதினான்காம் தேதி ஆண் மகவு பெற்றதாக அவருக்கு லிகிதம் கிடைத்தது. கணபதிக்கு காசியில் மஹாதேவரின் காட்சி கிடைத்ததால் குழைந்தைக்கு மஹாதேவன் என்று பெயரிட்டார் நரசிம்ம சாஸ்திரி.

இல்லம் திரும்பிய கணபதி, விசாலாக்ஷியின் வேண்டுகோளுக்கு இணங்க வேலை தேடினார். கஞ்சம் ஜில்லாவின் கோதா அக்ரஹாரத்தில் ஸம்ஸ்கிருத பள்ளியில் பண்டிட் வேலை காலியிருந்தது. ஆனால், வேலையில் சேருவதற்கு படிப்புச் சான்றிதழ்கள் கேட்டார்கள். சான்றிதழ்கள் இல்லாமல் வேலைக்கு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து ”இது சரிப்படாது” என்று மீண்டும் தவத்துக்குக் கிளம்பினார். இம்முறை கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தவளேஸ்வரத்தில் தவம் புரிந்தார். கொஞ்ச நாட்களுக்கு வாழைப்பழம் மட்டுமே புசித்து தவமியற்றினார். அதுவும் கிடைக்காமல் போகவே அதன் வாழைப்பழ தோலில் இருக்கும் நாரை உரித்துத் தின்றார். அதில் அவருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகி கேசனகுர்ரு என்ற கிராமத்திற்கு மருத்துவத்திற்கு சென்றார். சொஸ்தமாவதற்குள் அந்தக் கிராமத்தின் பண்டிதர் ஒருவரிடம் தர்க்கமும் வேதாந்தமும் பயின்றார். இரண்டு வருடங்கள் கடின உழைப்பில் படிக்க வேண்டிய பாடங்களை இரண்டே மாதங்களில் உள்வாங்கிக்கொண்டார்.

கலுவராயியில் முன்றே மாதத்தில் பானினி (இலக்கணம்) பயின்றார். 1900 வருடம் யுகாதியின் போது மந்தஸாவிற்கு புறப்பட்டார். மந்தஸா ஆந்திர ஒரிய எல்லையில் இருக்கும் ஊர். அவ்வூரின் ராஜா கணபதி ப்ரியர். புதுவருடந்தோரும் நடக்கும் தர்பாரில், அவ்வருடம் கணபதியின் அஷ்டாவதனம் நடந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை காணாத அம்மன்னர் கணபதிக்கு பதவிகள் கொடுத்து அரண்மனையிலேயே போஷிக்க ஆசைப்பட்டார். அந்த ராஜாவின் மைந்தன் கணபதியை தனக்கு சிவ பஞ்சாட்சரம் ஓதுவிக்க வற்புறுத்தினான். “இந்த தீக்ஷைக்கு உனது தந்தையாரின் சம்மதம் மிகவும் முக்கியம்” என்று அவனை அறிவுறுத்தினார்.

ராஜா தங்களது பரம்பரை புரோகிதரை இவ்விஷயமாக அணுகினான். அவர் வைணவர். சிவபஞ்சாட்சரத்தில் அவருக்கு லவலேசம் ஈடுபாடில்லை. “நமது ராஜ குடும்பத்துக்கு அது ஒவ்வாது. அந்த மந்திரமும் புனிதமானது இல்லை” என்று விலக்கினார். சைவ சமய மார்க்கத்தில் அரசகுடும்பம் திரும்பிவிட்டால் தனக்கு தக்க மரியாதை கிடைக்காது என்று புரட்டு பேசினார். மன்னர் அவையைக் கூட்டி சிவபஞ்சாட்சரம் பற்றி விவாதித்தார். அவரால் நிரூபிக்க முடியவில்லை. இப்படியிருக்கையில் ”வாக்பந்தனா” என்ற மந்திரத்தால் கணபதியின் வாயைக் கட்டிவிட முயற்சித்தார். ஆனால் அது கணபதியை நெருங்கவில்லை. ”தூய மனத்துடனும் நற்சிந்தனையுடனும் ஜெபித்தால்தான் பலனிருக்கும்..” என்று கணபதி சிரித்தார். இறுதியில் ராஜகுமாரன் கணபதியின் சீடனானான்.

மந்தேஸா ராஜா கணபதியை நவத்வீப் பண்டித பரிஷத்திற்கு அனுப்பினார். காசிக்கு க்ஷேத்திராடனம் செல்லவிருந்த இருவரிடம் நவத்வீப்க்கிற்கு செல்லும் கணபதியுடன் சென்று அங்கே அவருக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்துவிட்டுக் காசிக்குச் செல்ல உத்தரவிட்டார். காசியில் அவருடன் ஸம்ஸ்கிருத விசாரணையில் ஈடுபட்ட சிவகுமார் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை பத்திரமாக மடியில் சொருகியிருந்தார்.

நவத்வீப்பில்....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_9‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails