Wednesday, September 17, 2014

மல்லிகை இளவரசன்

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தானாம். அவன் சிரிச்சா எட்டூருக்கு மல்லியப்பூ வாசனை வீசுமாம். ஆனா வலிய சிரிக்க வைச்சா அந்த மாதிரி மணம் வராது. அவனா மெய்மறந்து ரசிச்சு சிரிச்சாக்க வாசனை மூக்கைத் துளைக்குமாம். அப்படியிருக்கும் போது அவன் கப்பம் கட்டிக்கிட்டிருக்கிற ராஜாவுக்கு இந்த விஷயம் காதுக்கு எட்டிச்சாம். “யாரங்கே! போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்...” என்று மீசை முறுக்கிக்கொண்டே வீரர்களைப் பார்த்துக் கட்டளையிட்டானாம்.

ரெண்டு பேர் வேலேந்திய கையோட அந்த ம.இ கிட்டே போய் “ராஜா கூட்டியாறச் சொன்னாங்க... வாங்க...”ன்னு அழைச்சிக்கிட்டுப் போய் தர்பார்ல நிறுத்தினாங்களாம். சக்கரவர்த்தி “ஏம்ப்பா... நீ சிரிச்சா மல்லியப்பூ வாசனை வீசுமாமே.. ஜனங்க பேசிக்கிறாங்க.. இப்ப சிரி...”ன்னு கேட்டானாம். ”பஹ்பஹ்..” சிரிக்கிறான் ம.இ வாசனை வரலை. கிச்சுக்கிச்சு மூட்டிப் பார்த்தாங்க. சிரிக்கிறான். கொஞ்சகூட மணம் வீசலை. ராஜாவுக்குப் பயங்கர கோவம் வந்திருச்சு. “டேய்.. இவன் என்னை அவமானப் படுத்தறான். நா சிரிக்கச் சொன்னா வாசனை வரலை..இவனைத் தூக்கி ஜெயில்ல போடுங்கடா..”ன்னு ஆர்டர் பண்ணினான். தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போய் ஜெயில்ல போட்டாங்க.

இந்த ம.இ இருந்த ஜெயில் அறையோட ஜன்னல் வழியா பார்த்தா ஒரு முடவனோட குடிசை இருந்ததாம். ஜன்னல் வழியா தெனமும் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ ஒரு விஷயம் கவனிச்சானாம். ராத்திரியானாக்க அந்த தேசத்து ராணி முடவனோட குடிசைக்கு வந்து அவனோட குஜால இருக்கிறத பார்த்தானாம். அப்படி வர்ற போது ராஜ போஜனம் எடுத்துக்கிட்டு வந்து அவ கையாலயே அவனுக்குப் பரிமாறுவாளாம். அவனுக்கு அப்படி ஒரு கொடுப்பினை.

ஒரு நாளு ராணி வந்து அவனுக்கு சோறு போட ரொம்ப லேட்டாயிடிச்சாம். அவனுக்கு பிபி ஏறிப்போயி கண்டமேனிக்கு அடிச்சு வெளுத்து வாங்கிட்டானாம். எல்லாத்தையும் சகிச்சுக்கிட்ட ராணி வாயைத் தொறக்காம அவனுக்கு சோறு போட்டா. அவன் சாப்பிட்டு முடிச்சவுடனே “ராணி.. எம்மேல கோவமா.. ஸாரி”ன்னு கையக் காலப் பிடிச்சிக்கிட்டுக் கெஞ்சினானாம். அதுக்கு அந்த ராணி சொன்னாளாம் “ச்சே.,.ச்சே., உங்க மேலே கோவமெல்லாமில்லை. நீங்க அடிச்சபோதெல்லாம் நான் ஈரேழு பதினாலு லோகத்துக்கும் போய்ட்டு வந்தேன்”ன்னு ஒண்ணுமே நடக்காத மாதிரி சகஜமாச் சொன்னாளாம்.

அப்போ அந்தக் குடிசைக்குப் பக்கத்துல மழைக்கு ஒதுங்கி ஒரு சலவைத் தொழிலாளி உட்கார்ந்திருந்தானாம். வெடவெடன்னு நடுங்கிக்கிட்டு சோகத்துல இருந்தான். குடிசை உள்ளாற ராணி இருக்கான்னு அவனுக்குத் தெரியாது. ”ஈரேழு பதினாலு லோகமும் போய்ட்டு வந்தேன்னு” அந்த லேடி சொன்னது இவனுக்கு காதுல விழுந்தது. உடனே பாய்ஞ்சு உள்ள நுழைஞ்சு “ஏம்மா.. ஈரேழு பதினாலு லோகமும் போனேன்னு சொன்னியே... எங்கயாவது தொலைஞ்சு போன என்னோட கழுதையைப் பார்த்தியா”ன்னு கேட்டானாம்.

இதைக் கேட்டுக்கிட்டு இருந்த ம.இக்கு சிரிப்புப் பொத்துக்கிட்டு வந்திச்சாம். ஜெயிலே அதிரும்படி சிரிச்சானாம். அப்ப கிளம்பிச்சாம் மயக்கும் மல்லிகை வாசனை. இது கற்கல்ல நடந்துச்சு.. ஜெயிலரெல்லாம் ஓடிப்போய் ராஜாவை எழுப்பி “ராஜாதி ராஜனே... இப்ப அவன் சிரிக்கிறான். வாசனை வருது பாருங்க.. ஆளை மயக்குது...”ன்னு அழைச்சுக்கிட்டு ஜெயிலுக்கு ஓடி வந்தானுங்க. அந்த ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியலை..

ஓடி வந்தான். “ஏம்ப்பா.. நான் கேட்டப்ப நீ சிரிச்ச.. அப்பெல்லாம் வாசனை வரலை. இப்ப எப்படி?”ன்னு கேட்டான். ம.இ காரணத்தைச் சொன்னான்.

இவனை ரிலீஸ் பண்ணிட்டு அந்த ராணியைத் தூக்கிச் சுண்ணாம்புக் காளவாய்ல போட்டானாம் அந்த சக்கரவர்த்தி.

***
A.K. Ramanujan தொகுத்த Folktales from India (பெங்குயின்) படித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தியிரண்டு இந்திய மொழிகளில், வட்டார வழக்கில், கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். மூலம் கெடாமல் என்னளவில் ஒரு கதையைத் தமிழ்ப்படுத்தினேன். ஏகேயாரையெல்லாம் என்னைப் போன்ற சிறியோனுக்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீரெங்கம் எஸ்ஸார்! வாழ்க நீ எம்மான்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails