Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 7 : துர்க்காமந்திர் யோகி

...கூட்டத்திலிருந்து தலையைத் திருப்பிய முண்டாசுக்காரன் “தர்பங்கா சமஸ்கிருத கல்லூரியின் முதல்வர் சிவகுமார் விடுமுறையில் வந்திருக்கிறார்... சமஸ்கிருத இலக்கிய விழா போல ஒன்று இங்கே நடைபெறுகிறது...” என்றான். சிவகுமார் ஆந்திரத்தில் பிரசித்தியான பண்டிதர் பாலா சாஸ்திரியின் பிரதான சிஷ்யர். கணபதி அந்த வித்வத் சதஸில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். சமஸ்கிருதத்தில் புகுந்து விளையாடினார். கூட்டம் வியந்தது. அங்கே கணபதியின் பிரகாசம் கூடியது. “பிரம்ம தேஜஸுடன் ஜொலிக்கும் இந்த சூட்டிகையான யுவன் யார்?” என்று அக்கம்பக்கம் வினவினார் சிவகுமார்.

கணபதி அந்த சதஸ்ஸில் உபன்யாஸம் செய்தார். சமஸ்கிருத அறிஞர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கொட்டியது. கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல பீறிட்டுப் பிரவாகமாக வந்தன இலக்கிய எடுத்துக்காட்டுகளும் இதிகாச புராண சம்பவங்களும். கேட்கக் கேட்ட இது சிவகுமாரைக் கட்டிப் போட்டது. மந்திரம் போட்டது போல ஒரேயிடத்தில் அமர்ந்திருந்தார். வங்காளத்தின் பிரசித்திப் பெற்ற நவத்வீப சமஸ்கிருத மையத்தில் போய் மேற்படிப்புப் படிக்கும்படி அறிவுறுத்தி கைப்பட சிபாரிசுக் கடிதமும் கொடுத்தார்.

சிவகுமார் தர்பங்கா திரும்பும் வரையில் இருவரும் திண்ணையில் அமர்ந்து சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்களை அக்கக்காக அலசுவதில் பொழுது ஓடியது. வீட்டுச் சுவர்களெல்லாம் சமஸ்கிருதத்தில் தேறின. அவர் காசியை விட்டுச் சென்ற மறுகணம் கணபதி தபஸுக்கு ஊர் அண்டாத ஒரு இடத்தைத் தேடி மீண்டும் அலைய ஆரம்பித்துவிட்டார். ஆனால் எந்த ஒரு இடமும் தோதாக இல்லை. இறுதியில் காசியில் தான் விருந்தாளியாகத் தங்கியிருந்த பவானி சங்கரத்தின் கிரஹத்திலேயே ஜபதபங்களைத் தொடர்ந்தார்.
அன்று காலை கணபதி வழக்கம்போல நித்யபடி தியானத்தை செய்துகொண்டிருந்தார்.

“கணபதி... கணபதி... ”.

ஒரு கணீர்க் குரல். கண் விழித்தார் கணபதி. கண்களில் ஆச்சரியம் பொங்கஉள்ளே நுழைந்தவர் ஆஜானுபாகுவாக இருந்தார். கார்வண்ணன். பஞ்சகச்சம். கட்டுக் குடுமி. நெற்றியில் விபூதிப் பட்டை. கழுத்தில் பெரிதும் சிறிதுமாக ருத்ராட்ச மாலைகள். ”யாரிவர்?” என்ற யோசனையோடு கைகூப்பினார். அவரை கண்ணெடுக்காமல் தீர்க்கமாகப் பார்த்தார் கணபதி. “ஹே! பவானி சங்கரம் நீ இங்கு வந்திருப்பதாகச் சொன்னார். உன்னைச் சந்தித்து பேசும் ஆவலில் பல மைல் கடந்து வந்தேன். ஆனால் உன்னோடு இப்போது பேச இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று தெரிகிறது. சரி.. சரி... நீ உன்னுடைய தியானத்தை முதலில் செய்து முடி.. பிறகு நாம் விஸ்ராந்தியாக பேசலாம்...” என்று நடு கூடத்தில் தூணில் சாய்ந்து சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார்.

கணபதிக்கு ஆச்சரியமும் குழப்பமும் கை கோர்த்துக்கொண்டது. நெற்றியில் சுருக்கங்கள் நெளிந்தன. வந்த பெரியவரைப் பார்த்துக் கொஞ்சமாகப் புன்னகைத்தார். “மன்னிக்கவும். தாங்கள் யாரென்று என்னால் அடையாளம் காண முடியவில்லையே...” என்று திக்கித் திக்கிக் கையைப் பிசைந்தார். மீண்டும் கும்பிட்டார்.

“அப்பனே! என்னை ஞாபகமில்லையா? அது சரி.. தன்னையே மறந்தவனுக்கு என்னை எப்படி ஞாபகமிருக்கும்? நான் ராமநகர் துர்க்காமந்திர் யோகியப்பா... ”. சிரித்தார் யோகி.

“ஸ்வாமி என்னை க்ஷமிக்கணும். யோகி ஆவதற்கு முன்னர் தங்கள் பூர்வாசிரமப் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் மிகவும் தன்யனாவேன்”. பவ்யமாக கணபதி.

“சோமயாஜுல ஸூர்யநாராயணா. ஆனால் நான் யோகியாவதற்கு முன்பே நாமிருவரும் தொடர்பில்தானே இருந்தோம்...”

“எப்படி? புரியவில்லையே.... ”. கணபதிக்கு அவரது பேச்சு புதிராக இருந்தது.

“அடப்போப்பா! பத்ரகா மாதிரி எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லணுமா?”

பத்ரகாவின் பெயரைக் கேட்டமாத்திரத்தில் கணபதி ஆர்வத்தில் துள்ளி எழுந்தார். ஆச்சரியமான ஆச்சரியம். ”ப....த்..ர...கா...” ரகஸியம் பேசுவது போல வாய்விட்டு ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார்.

“உங்களுக்கும் பத்ரகாவைத் தெரியுமா?... ம்.. தெரியுமா?” வார்த்தைகளால் வந்திருந்தவரை உலுக்கினார்.

“ஏன் தெரியாது? நாமெல்லாம் ஒரே குழுவினர். நம்மில் மொத்தம் பதினாறு பேர். இப்போது மறு ஜென்மம் எடுத்திருக்கிறோம். பத்ரகாவிற்கு சித்தித்த எல்லையில்லா ஆனந்த நிலைக்கு நாமும் பிரயர்த்தனப்படுகிறோம். என் பெயர் ஸுகேது. ராமநகர் துர்க்காமந்திர் எனது வசிப்பிடமாக இருப்பதால் நான் துர்க்காமந்திர் யோகியாக ஜனங்களால் அழைக்கப்படுகிறேன்.”

“நானெப்போது எங்கே கரையேறுவேன் ஸ்வாமி? இப்போதே தெரியப்படுத்துவீர்களா?” ஆர்வத்தில் திளைத்தார் கணபதி.

“ ’ஸ்தூலசிரஸி’டமிருந்து நீ அதை தெரிந்துகொள்வாய். அதுவரை அமைதியாயிறு. அறிந்து கொள்ள அலையாதே. கடும் தவம் புரிந்து உன்னை நீயே வருத்திக்கொள்ளாதே. இப்புவியில் நீ ஜனித்தகணத்திலிருந்தே உன்னுடன் தவமியற்றும் வலிமையும் இருக்கிறது. தக்க நேரத்தில் அது சித்திக்கும். அதுவரையில் பரோபகாரியாக இருந்து கஷ்டப்படுபவரின் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் தடைகளைக் களைந்து பயனடையுமாறு உதவிகள் பல புரிவாயாக.....”

“ஆனால் என் முன் தோன்றிய பத்ரகா தவமியற்றச் சொன்னாரே! ஏன்? லோகக்ஷேமத்திற்காகவா? அல்லது எனக்காகவா?” அடுத்தடுத்து கேள்விகளை பாணங்களாய் தொடுத்தார் கணபதி.

“உன் சுயலாபத்திற்காக அல்ல. லோகக்ஷேமத்திற்காகத்தான். ஜகத்தினில் நல்லது செய்வது லேசுப்பட்ட காரியமல்ல. நற்தொண்டு புரிபவர்களுக்கு இப்போது பல தடைகள், சங்கடங்கள், முட்டுக்கட்டைகள். இந்த இடர்களை ஜெயித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பாடுபடும் அந்த தர்மவான்களுக்கு ஒத்தாசையாக இருப்பதே இப்போது உனக்கிட்ட பணி”

கூடத்தில், கொல்லையில், சந்தில், திண்ணையில் என்று நெடுநேரம் அங்குமிங்கும் நடந்தும் நின்றும் உட்கார்ந்தும் வெகுநேரம் பல கார்யங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். யோகி நிறைய பேசினார். கணபதியின் நிறைய சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். கணபதிக்கு மனநிறைவு ஏற்பட்டதை அவரது பளபளக்கும் கண்கள் காட்டிக்கொடுத்தது. வந்த வேலை முடிந்தது என்று யோகி எண்ணினார்.

“சரி கணபதி! உனக்கு இப்போது எல்லாம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் புறப்படுகிறேன்” என்று துர்க்காமந்திர் யோகி வாசலுக்கு வந்தார். “தேவரீர்! நான் என்னை அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன். என்னை விட எனது பிதாவிற்கு என்னைப் பற்றி அறிய ஏகப்பட்ட ஆவல். இப்போது நிகழ்ந்த இந்த சந்திப்பையும் நீங்கள் அறிவுரை செய்ததைப் பற்றியும் அவருக்கு நானொரு லிகிதம் எழுதவிருக்கிறேன். அதில் நீங்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதினால் நான் புண்ணியம் செய்தவனாவேன். எனது பிதாவும் மிக்க மகிழ்ச்சியடைவார்” என்று விண்ணப்பித்தார்.

“தங்களது புத்திரனை தவம் செய்ய அனுமதியுங்கள். இல்லறப் பொறுப்புகளைக் கொடுத்து அவனை வீணடித்துவிடாதீர்கள்.” என்று இரண்டு வரிகள் எழுதிக் கோடிட்டு “சோமையாஜுல ஸூர்யநாராயணா” என்று கையெழுத்திட்டார். பின்னர் அஞ்சலுறையில் ஆங்கிலத்தில் நரசிம்ம சாஸ்திரியின் முகவரியைக் கேட்டு எழுதினார். “நீ ஒரு முறை துர்க்காமந்திர் வாப்பா” என்று சிரித்தார். கணபதியிடம் லிகிதத்தைக் கேட்டு வாங்கி அவரே வரும் வழியில் ஒரு தபால்பெட்டியில் சேர்த்துவிட்டு துர்க்காமந்திருக்கு சென்றுவிட்டார். இவ்வளவு அமர்க்களங்கள் இங்கேநடந்த போதும் பவானி சங்கரம் அங்கே தலைகாட்டவேயில்லை.

லிகிதம் கண்ட நரசிம்ம சாஸ்திரி பரமானந்தம் அடைந்தார். “ரொம்ப சந்தோஷம்” என்று பதிலுக்கு தந்தி அடித்தார். கணபதிக்கு துர்க்காமந்திர் போக கால்கள் துறுதுறுத்தன. ராமநகருக்கு விரைந்தார் கணபதி. அங்கு ஒரு பேராச்சரியம் அவருக்குக் காத்திருந்தது. ஊரில் பலரிடம் விஜாரித்தும் அவருக்கு ஒரே பதில்தான் கிடைத்தது. “துர்க்காமந்திர் யோகி என்று இங்கே யாருமில்லையே” என்று எல்லோரும் கையை விரித்தார்கள். வித்தியாசமாகப் பார்த்தார்கள். துர்க்காமந்திரில் அந்த யோகியைக் காணத் தவம் கிடந்தார். பிரயோஜனமில்லை. அப்படியொருவர் இல்லவே இல்லை என்று ஊர்ஜிதமானதும் கணபதிக்கு மெய் சிலிர்த்தது. சரீரமெங்கும் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. எங்கும் நிறைந்த பரம்பொருளே நேரில் வந்து எனக்கு காட்சி தந்தானா என்று கண்களிலிருந்து நீர் தாரைதாரையாய் சொரிந்தது. காசிக்குத் திரும்பினார். மாமா தாத்தா பவானி சங்கரத்திடம் ராமநகரில் நடந்தவைகளை ஒன்றுவிடாமல் கூறினார்.

“நீ புண்ணியாத்மா கணபதி. வீட்டில் யாருமில்லா நேரத்தில் அந்த சர்வேஸ்வரனே துர்க்காமந்திர் யோகியாக உனக்கு நேரில் காட்சியளித்திருக்கிறார். சோமயாஜுலுவுடன் உங்கள் குடும்பத்தின் இஷ்ட தெய்வமான ஸூர்யநாரயணரின் பெயரைக் கூட்டிக்கொண்டு உன்னிடம் சித்து விளையாடியிருக்கிறார். பத்ரகாவும் ஸுகேதுவும் இப்புவியில் எந்த மூலையிலாவது ஜனித்திருப்பார்கள். உங்களுடைய அவதார மகிமையைக் காட்டுவதற்கும் பிறந்த நோக்கத்தை தூண்டி விட்டு நினைவுறுத்தவுமே இந்த ஸுகேது தோன்றியிருக்கிறார். பதினாறு பேர்கள் என்று சொன்னாரே.. அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்துவார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் நீ முப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்....” என்றார் பவானி சங்கரம்.

அன்றிரவே ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர்........

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_7‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails