Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 10 : சொற்போர்: கற்புக்கரசி இடும்பி

இதோ ஞானசூரியனாக நடந்துவரும் கணபதி நவத்வீபா சர்வகலாசாலைக்குள் நுழைவதற்கு முன்னர் பின்வரும் இரு பாராக்களில் அதன் புகழ் பாடிவிடுவோம்.

புராதன காலத்திலிருந்து காஞ்சீபுரம், அமராவதி, நாலந்தா, உஜ்ஜயினி மற்றும் நவத்வீபா ஆகிய ஐந்தும் மேற்படிப்புக்கான பிரசித்தி பெற்ற கலாசாலைகள். முதல் நான்கும் மூடி விட்டாலும் நவத்வீபா மட்டும் துடிப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வருடந்தோரும் தேசத்தின் அனைத்து திக்கிலிருந்தும் மாணவர்களும் பண்டிதர்களும் நவத்வீபாவை முற்றுகையிட்டு பரீக்ஷையில் தேறி தத்தமது துறையின் சான்றிதழ் பெற்று ஊரில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை பெருமையாகக் கொண்டார்கள்.

இறுதி பட்டமளிப்பு விழா நடைபெறும் ஆயிரம் பேர் அமரும் பிரம்மாண்டமானக் கூடத்திற்கு “ஹரிஸபா” என்று பெயர். இங்கு வழங்கப்படும் பட்டயச் சான்றிதழ் அகிலமெங்கும் போற்றி புகழப்படும் ஒன்று. இந்தக் கூடத்திற்கு முன்னர் வாயிலில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு எழுதி தகுதியடைவதற்கே பிரம்மப்ரயர்த்தனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வு போன்ற ஹரிஸபா பரீக்ஷை மிகக் கடினமானது. பல்லை உடைக்கும். இதனால் இங்கு பட்டம் பெற கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை வித்யார்த்திகளின் வரிசை அமிர்தம் கடைந்த வாசுகியாய் நீண்டது.

அலங்கார வளைவுகளுவும் ஐவர் சேர்ந்தாலும் கைகோர்த்துக் கட்டிப் பிடிக்க முடியாத பிரம்மாண்டமான துண்கள் தாங்கிய வேலைப்பாடுகள் அமைந்த மேற்கூரையுள்ள அந்தக் கல்லூரிக்குள் தேசலான கணபதி சாந்தமாக நுழைகிறார். நுழைவுத் தேர்வுக்கான சிட்டுகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் இங்குமங்கும் விசாரணைக்காக அரக்கபரக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பிரம்ம தேஜஸுடன் அந்தத் தூணருகில் மாணவர்களை வழிநடத்த நிற்பவர்தான் சிதிகண்ட வாசஸ்பதி. அவர்தான் நுழைவுத் தேர்வு நடத்துபவர். ஸம்ஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்தவர். சாந்த சொரூபி. இரைச்சலோடு கூட்டம் சுழற்றியடித்தது. கணபதியால் அவரை நெருங்கவே முடியவில்லை. பல நாழிகைகள் காத்திருப்பில் கடந்தது. சிதிகண்டரைப் பார்ப்பதற்கு கணபதி தவமிருந்தார்.

“தம்பி.. நான் குலபின்யா... மிதிலையிலிருந்து வருகிறேன்” தோளுக்குப் பின்னால் மென்மையான குரல் கேட்டது.

மனசு ”யாரிவர்?” கேட்க நெற்றி சுருக்கத்துடன் கணபதி கைகூப்பி அவருக்கு ”வந்தனம்..” சொன்னார்.

“இவர்கள் என் மாணவர்கள். பரீக்ஷைக்கு வந்திருக்கிறார்கள். நீ தனியாகதான் வந்தாயாப்பா?”

“இரு நண்பர்களுடன் வந்திருக்கிறேன். என் பெயர் கணபதி. ஸ்ரீமான். சிதிகண்ட வாசஸ்பதியைப் பார்க்கவேண்டும். காலையிலிருந்து காத்திருக்கிறேன்...”

“நிச்சயம் இன்று அவரைச் சந்திப்பது கடினம். இன்றிரவு என்னுடன் வந்து தங்கிக்கொள். அவரை நாம் நாளைச் சந்திக்கலாம்...” என்று கணபதியையும் அவருடன் வந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றார் குலபின்யா.

இரவு அவரது அறையில் இருவரும் நிறைய இலக்கியம் பேசினார்கள். கொஞ்சம் விவாதித்தார்கள். அவ்வப்போது சிரித்தார்கள். கணந்தோரும் சத்விஷயங்களைச் சிந்தித்தார்கள். “ஓ! சிவகுமாரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேறு வைத்திருக்கிறாயா? சபாஷ்” என்று தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் குலபின்யா. இரவு உணவுக்கப்புறம் மாணவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்றார்கள்.

குலபின்யாவுக்கு புரிந்துவிட்டது. ”கணபதி லேசுப்பட்ட ஆளில்லை. ஞானச்சுடர். நிச்சயம் நாளை ஹரிசபையினரால் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடப்படப் போகிறவர்” என்று நித்திரை வராமல் புரண்டு படுத்த ஒரு சிஷ்யனிடம் கணபதியின் பெருமை பேசினார்.

பொழுது விடிந்தது. கணபதி சிதிகண்ட வாசஸ்பதியை கலாசாலை வாசலிலேயே ”நமஸ்காரம்” என்று சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி மடக்கினார். தன்னிடமிருந்த சிவகுமாரின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்து நீட்டினார். “அனுமனைப் போல் அபார திறமைபடைத்தவர்” என்று சிவகுமார் கணபதியை சிலாகித்து ரெண்டு வரி எழுதியிருந்தார். பின்னால் வந்த குலபின்யாவும் ”இவர் தீர்க்கமான ஆள்... இதிகாச புரணாங்களிலும் காவியங்களிலும் கரை கண்டவராக இருக்கிறார்...” என்று கணபதியின் பெருமை பாடினார்.

சிதிகண்ட வாசஸ்பதி கணபதிக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து ”பரீக்ஷை முடியும் வரை என்னுடனேயே இருப்பா...” என்று தங்கவைத்துக்கொண்டார். அனுதினமும் தனது நித்யானுஷ்டங்களான ஜபதபங்களை விடாது செய்துவந்தார் கணபதி. சிதிகண்டருக்கு இப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பார்ப்பதில் கொள்ளை சந்தோஷம்.
இறுதிப் பரீட்சைக்கான நாள் வந்தது. தேர்வாளர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் அம்பிகா தத்தர். லோகமறிந்த பிரசித்தி பெற்ற பண்டிட். ஸம்ஸ்கிருத பராக்கிரமம் மிக்கவர். பிரதானமான சிம்மக்கை நாற்காலியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். நாலாபுறமும் கூடியிருந்த அறிஞர்களை நோக்கியபடி வரும் கணபதியுடன் சிதிகண்டாவும் ஹரிசபையினுள் நுழைகிறார்.

அங்கே அமர்ந்திருக்கும் அம்பிகா தத்தரின் காதில் விழும்படி “யாரிந்த பண்டிட்?” என்று சிதிகண்டாவிடம் கேட்கிறார் கணபதி. அதற்கு அம்பிகா தத்தர் ”கவுடத்திலிருந்து வந்திருக்கும், நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் அம்பிகா தத்தா நான்...” என்று பெயர், அவரது தகுதி மற்றும் எங்கிருந்து வருகிறார் என்கிற தகவலைத் தந்து பாதியில் நிறுத்தி கணபதி முடிப்பார் என்று கேள்வியாய் பார்த்தார். புன்னகையுடன் புருவங்களை நெறித்தார்.

அசராமல் கனைத்துக் கொண்டு கணீரென்று ஆரம்பித்தார் கணபதி. “தெக்ஷின தேசத்திலிருந்து கவிக்குலபதியான கணபதி யாம்..” என்று கவிதையாக முடித்தார். அறிவார்ந்த சபையோர் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்க ஒரு கண மௌனத்திற்கு பிறகு “அம்பிகைக்கு தத்துப்புத்திரன் நீர் (அம்பிகா தத்தா) கணபதியாகிய நான் அம்பிகையின் சத்புத்திரன்...” என்று ஒரு போடு போட்டார். அவையில் பலத்த கரவொலி எழுந்தது. ”ஜெய் கணபதி! ஜெய் கணபதி!!” என்ற ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது.

அம்பிகா தத்தாவிற்கு கணபதியின் சாதூர்யமான பதில் பிடித்துப்போயிற்று. தட்டிக்கொடுத்து கவிமேடைக்கு அழைத்தார். சமஸ்யங்கள் எனப்படும் கவிப்புதிர் போட்டியை ஆரம்பித்தார். கவிதையாகக் கேட்கப்படும் புதிர் முடிச்சுகளைக் பதில் கவிதையினாலேயே அவிழ்க்கவேண்டும்.
காணக்கிடைக்காத ஒரு சொற்போருக்கு அங்கே காத்திருந்தவர்கள் தயாரானார்கள்.

”டாங்...டாங்..” என்று இரண்டு முறை கண்டா மணி அடித்து ஓய்ந்தது. அம்பிகா தத்தர் கணீரென்று ஆரம்பித்தார்.. “பூர்வாங்கமாக நான் கேட்கும் நான்கு சமஸ்யங்களுக்கு விடையளி...”

”மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள். ஆனால் கற்பில் சிறந்த கற்புக்கரசி அவள்...”

“வருஷத்திற்கு ஒருநாள் சிவனாரின் முகத்தைப் பார்க்க மறுக்கும் கௌரி....”

”அமாவாசையில்லாத ஒரு நாளில் சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது.....”

“பிறைச்சந்திரனை முத்தமிட்ட எறும்பு.....”

கேள்விகளின் விஸ்தீரணத்தால் கூட்டத்தில் கனத்த மௌனம். சான்றோர்களின் அந்த அவை கப்சிப்பென்று அடக்கமாக இருந்தது.

அனாயாசமாக பதிலளித்தார் கணபதி.

“மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள் மஹாபாரத இடும்பி. கசக்கிப் பிழியும் வேனிற் காலத்தில் பீமனின் (வாயு புத்திரன்) மனைவி இடும்பி குளிர் காற்று (வாயு பகவான்: மாமனார்) வாங்குவதற்காக தனது மேலாடையை விலக்கினாள்...”. கூட்டம் ”ஆ”வென்று வாய் பிளந்தது. அம்பிகா தத்தர் விடவில்லை.

“ஏன் த்ரௌபதியில்லை?” என்று மிரட்டல் தொனியில் கர்ஜித்தார்.

“த்ரௌபதி ஐவருக்கு மனைவி. பீமனுக்கு மட்டும் மனைவியில்லை. அப்படியானால் பல மாமனார்கள் கணக்கில் வருவார்கள். மேலும் த்ரௌபதி ராஜபோகமாக அரண்மனையில் வளர்ந்தவள். காட்டுவாசி போல சட்டென்று மேலாக்கை கழட்டி வீசமாட்டாள்.”

அம்பிகா தத்தர் உள்ளுக்குள் ரசித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த பண்டிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கண்களால் பாராட்டினார்கள்.

“உங்களுடைய கவிதையில் ஒரு சிறு திருத்தம் செய்யலாமா?” என்று விண்ணபத்துடன் நின்ற கணபதியைப் பார்த்து அதிசயத்தார். அழைத்து வந்த சிதிகண்டருக்கு கதி கலங்கிற்று. என்ன திருத்தம் செய்யப்போகிறார் என்று பண்டிதர்களும் மாணவர்களும் நிரம்பிய சபை ஆர்வத்துடன் காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது.

“என்ன?” என்று சபை அதிர உறுமினார் அம்பிகா தத்தர்.

“இடும்பியின் ஸ்தனவஸ்திரம் என்று எழுதிய தங்கள் கவிதையை உத்தரீயம் என்று மாற்றினால் கவித்துவம் மிகுந்து மேலும் அர்த்தபுஷ்டியாகக் காணப்படும்....”

சபை ஸ்தம்பித்தது.

“அடுத்த சம்ஸ்யத்துக்கான பதில்?”

கணபதி புன்னகை தவழ ஆரம்பித்தார்.......

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_10‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails