Showing posts with label காஞ்சி மடம். Show all posts
Showing posts with label காஞ்சி மடம். Show all posts

Tuesday, July 29, 2014

நாத வெள்ளம்

"நாதவெள்ளத்தில் நீந்தினேன்” என்று ஆனந்தக் கூத்தாடுபவர்களைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அந்த நாதவெள்ளம் தன்னோடு சப்ஜாடாக இழுத்துச் சென்றவைகளில் நானும் சுழலுக்குச் சுழல் தக்கையாகச் சுழன்று அடித்துச் செல்லப்பட்டேன். சரி! விஷயம் என்னவென்று சொல்கிறேன்.

காலையில் சட்டென்று கிளம்பி நகரேஷு காஞ்சிக்கு ஒரு அதிரடி விஸிட். சங்கர மடத்தில் காலையில் சந்த்ரமௌளீஸ்வர பூஜை நடந்துகொண்டிருந்தது. கண்குளிரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பக்தகோடிகளோடு கடையனாய்க் கலந்து கொண்டேன். தசாங்கத்தின் நறுமணத்தோடு சாம்பிராணி புகை சேர்ந்துகொள்ள எந்த நேரத்திலும் பரமேஸ்வரன் பார்வதியோடு ரிஷபாரூடராகக் காட்சி தருவாரோ என்கிற தெய்வமணம் கமழும் பக்திச் சூழ்நிலை.

பூஜைக்கிடையில் ”பீப்பீ..” என்று சீவாளியைப் பரிசோதிக்கும் ஓசை கழுத்தைத் திருப்ப வைத்தது. தொடர்ந்து “டம்..டம்..டப்..” ஒலி. நாகஸ்வர இசை மெல்லியை ஓடை போல ஆரம்பித்தது. இரட்டை நாகஸ்வரம். பட்டையைக் கிளப்பும் இரட்டை தவில். ஒரு நாகஸ்வரம் எஸ்பிபியென்றால் இன்னொன்று டியெம்மெஸ். ஒன்று நளினம். இன்னொன்று அட்டானிக்கால் போடும் காம்பீர்யம்.

”நாத தனுமனிசம்”த்தில் ஆரம்பித்து நாகஸ்வரத்தைத் தூக்கிச் சீராகப் பிடித்தார்கள். ஒவ்வொரு ஸ்வர வரிசைக்கும் பெரிசும் சிறுசுமாய் இரண்டு நாகஸ்வரங்கள் ஊதின. அபார வாசிப்பு. அவர்களுக்கு ஈடு கொடுத்து தவில்கள் முழங்கின. காதுக்கு வலிக்குமோ கைக்கு வலிக்குமோ என்றில்லாமல் தவிலைத் தவிடுபொடியாக்கினார்கள். மடத்தைக் கடப்பவர்களில் அந்த சங்கீதம் நனைக்காத செவிகள் கண்ணாடி மாட்ட மட்டும் உபயோகப்படுபவையாக இருக்கும்.

இடையறாத வாசிப்பின் வேகத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல அடுத்து ஊஞ்சலாடி வந்தது “க்ருஷ்ணா நீ பேகனே”. க்ஷண நேரத்தில் நம்முன்னே காற்றலைகளில் க்ருஷ்ணனைத் தவழவிட்டார்கள். நல்ல காத்திரமான நாகஸ்வரம் கூட ”பேகனே...”யில் புல்லாங்குழல் போலக் குழைந்த மாயமென்ன என்று இன்னமும் ஆச்சரியப்படுகிறேன். திரை திறப்பதற்கு முன்னர் அகஸ்திய மாமுனியின் ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரி ஆரம்பித்தார்கள். அடுக்கு தீபாராதனையின் போது ”உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி” வரிகள் இசைத்தது. குருமார்களின் தரிசனத்தோடு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

செவிகளைத் தொட்டு இதயத்தைக் குளிர்விக்கும் இசை நம்மை இறைநிலைக்கு இட்டுச்செல்கிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails