Tuesday, August 7, 2012

ஏடிஎம்


இன்னாரின்னார் இன்னின்னிக்கு இந்தந்த நேரத்தில் இவ்வளவ்விளவு பணம் எடுத்தார் என்று ஏடிஎம்மின் கதவிற்கும் எதிர்வீட்டு வாசற்படிக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். வாக்கிங் போகும்போதே ஹெச்டிஎஃப்சி ஏடிஎம் வாசலில் ஏகக் கூட்டம். ஒருவர் பின்னால் ஒருவர் நிற்க வெட்கப்பட்டுக்கொண்டு கோணல்மாணலாக பரமபத பாம்பு வரிசையாக நீண்டிருந்தார்கள்.

மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளப் பணத்தை ஏடிஎம் வாயிலாக உருவுபவர்களைப் பார்த்ததும் தொ. பரமசிவத்தின் ”உணர்வும் உப்பும்” என்கிற கட்டுரையில் சம்பளம் பற்றி படித்தது ஞாபகம் வந்தது. செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர் என்கிறார் தொ.ப. அந்தக் காலத்தில் சம்பளப் பட்டுவாடா இதுபோல ஏடிஎம்மாக வைத்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு விபரீத யோசனை நான் காலையில் வாக்கிங் போய்க்கொண்டிருக்கும் போது சீன் சீனாய் என்னுள்ளே ஓடியது. அப்படியே நீங்களும் ராஜாக்கள் காலத்துக்கு என் கூட வந்துடுங்க.

இராஜாக்கள் மற்றும் பிரபுக்கள் அரசின் இலட்சிணைப் பொறித்துச் செப்புக்காசைத் தட்டையாக்கி அதில் 12 மாதங்களும் மாதத்துக்கு 4 தவணைகளையும் பொறித்து வேலையாட்களுக்குத் தருகிறார்கள். ஒவ்வொரு ஏடிஎம் வாசலிலும் ஒரு கண்காணிப்பாளர் முண்டாசும் கையுமாக சுத்தியல் மற்றும் உளி போன்ற ஒரு உபகரணத்துடன் தயாராய் உட்கார்ந்திருக்கிறார். செப்புத்தகட்டை நீட்டுபவரிடம் அந்தந்த மாதத்துக்கு நேரே அந்தந்த தவணைக்கு ஒரு துளையிட்டு திரும்பக் கையில் கொடுத்து உள்ளே அனுப்புகிறார். கீற்றுக்கூரை மேல் வைக்கோல் வேய்ந்த அந்த விவசாய ஏடிஎம்முள்ளே நெல்லுக்கு ஒரு பத்தாயமும் பக்கவாட்டில் உப்புக்கு ஒரு பெரிய மண் கலையமும் வைக்கப்பட்டிருக்கிறது.

செப்புத்தட்டைக்காசை பத்தாயத்தின் வாயில் சொருகியதும் அதன் ஓட்டை போய் அளவு வாரியாக அமைக்கப்பட்ட உள் தடுப்புகளின் மேல் அடிக்கப்பட்ட ஆணியில் ஒன்றை மாட்டி இழுத்துத் திறந்து அந்தத் தவணைக்கான நெல் சரிந்து வெளியேக் கொட்டுகிறது. அதே ஆள் அந்தச் செப்புத்தகட்டை உப்புக் கலையத்திற்குள் சொருகினால் ஒரு மரக்கால் உப்பைத் துப்பும். அள்ளிக்கொண்டு அப்படியே நகர்ந்துவிட வேண்டும். அது 24X7 ஏடிஎம் காலம் அல்ல. கதிரவன் சாய்வதற்குள் கடையடைத்து விடுவார்கள். ஏடிஎம்மின் ரீஃபில்லிற்கு அந்தந்த கிராமக் கோயிலின் நிலத்திலிருந்து சாகுபடியாகி வரும் நெல்லை அந்தந்தக் கோயிலின் நிர்வாகத்தார் கொண்டு வந்து நிரப்பவேண்டும். பத்தாயத்திலிருந்து நோ ஸ்டாக் வந்து நெல்மணிக்காக ஒரு பெண்மணி காத்திருக்கும் வேளையில்.........................

”பா..........................ம்” என்று காது கிழியும் டெஸிபலில் ஹார்ன் அடித்து இப்படியே தாறுமாறாக நீண்டு கொண்டிருந்த விபரீதக் கற்பனையைக் கலைத்தார் அந்த பொறியியல் கல்லூரி பஸ் டிரைவர். கற்பனாலோகத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்த பின்னர் சாதமும் உப்பும் இப்போதெல்லாம் கண்டமேனிக்கு எல்லோருக்கும் தாராளமாகத் தரமுடியுமா என்று யோசனை வந்தது. புழுங்கல் அரிசிதான் ஷுகருக்கு நல்லது. ப.அரிசி, பு.அரிசி என்று ரெண்டு பத்தாயம் வைக்கவேண்டும். டையூரிடிக்ஸ் மருந்து சாப்பிடும் பீ.பி ஆசாமிகள் உப்பைத் தொடமாட்டார்கள். பீபி ஆட்களுக்கு உப்புக்கு பதிலாக கூடுதல் அரிசி தரவேண்டியிருக்கும், ஷுகர்க்காரர்களுக்கு அரிசிக்குப் பதில் நிறைய கோதுமை தரவேண்டியிருக்கும்.. ஆமாம் அதற்குதான் இப்போது ரேஷன் கடை இருக்கிறதே... அதிலும் கார்டு கொண்டுவருபவரின் ஃபேமிலி ஹிஸ்டரி மற்றும் வியாதி பார்த்து பொருள் தருகிறார்களா? புழுக்கள் நெளியும் நான்வெஜ் அரிசி இல்லாமல் இருக்கிறதா? அவர்கள் அளக்கும் ஒரு கிலோ ஜீனி ஒரு கிலோவாகவே பைக்குள் விழுகிறதா? என்றெல்லாம் கண்டபடி யோசித்துக்கொண்டே வந்ததில் நடை வேகம் பாதிக்கப்பட்டு பத்து நிமிடம் லேட்டானதுதான் மிச்சம்.

#இந்த அவசரயுக ஜி.டி.நாயுடுவின் Wild Thinking. யாராவது ஏடிஎம். (Agri-products Transaction Machine) ஒன்று கண்டுபிடித்தாலென்ன?
பட உதவி: அந்த அழகிய தமிழ் மகனைக் கண்டெடுத்த இடம்  funxite.com

Thursday, August 2, 2012

ஆற்றங்கரையோர ஆடிப்பெருக்கு!



புளிசாதத்திலிருந்து ஆறடி கூந்தல் அழகி தன் தலைக்குச் சதும்பத் தேய்த்துக் குளிக்கும் அளவிற்கு எண்ணெய் என் கையில் இறங்கியிருந்ததில் என் முகத்தை அதில் பார்த்துக்கொண்டே கேட்டேன் ”இன்னிக்கி என்ன எல்லாம் கலந்த சாதமாயிருக்கு?” 

“இன்னிக்கு பதினெட்டாம் பெருக்குடா”

அம்மா சொன்னதும்தான் இன்று ஆடி பதினெட்டு என்று புத்தியில் உரைத்தது. பதினெட்டாம் பெருக்கு. பால்ய வயது ஞாபகங்கள் என் உள்ளங்கை எண்ணெய்க் கண்ணாடியில் கனாப் புகையின் நடுவே கலர்க் கலர் காட்சிகளாய் இரண்டு மூன்று ரீல்கள் ஓடியது.பதினெட்டாம் பெருக்குக்கு இரண்டு நாட்கள் முன்னரே மூலையில் கிடந்த பழைய சப்பரத்தை தூசித் தட்டி எடுத்து ஆங்காங்கே ஆப்படித்து ஆணியடித்து இன்னும் சில மராமத்துப் பணிகள் செய்துச் செப்பனிட்டுக் கொள்வோம். மத்தியான்ன நேரத்திலிருந்து காகிதக் கப்பலும், கொடிச்சப்பர அலங்காரமும் கும்பலாக உட்கார்ந்து குருவி சோப்பிற்கு லேபிள் மடிக்கும் குடிசைத் தொழில் போல நடக்கும். அந்த வருஷத்திய வாசனை தொலையாத புத்தம் புது நோட்டிலிருந்து சலவைக் காகிதக் கப்பல் செய்துவிட்ட தனவந்தர்களின் வாரிசுகளும் எங்களுடன் விளையாண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது சற்றே பெருமையாக இருக்கிறது. அந்தி வரும் நேரத்தில் கொடிச்சப்பரத்தை தரதரவென்று வீதியில் இழுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குத் துள்ளி ஓடுவோம். நாற்புரமும் கேட்கும் ”ஹோய்” என்ற ஆனந்தக் கூச்சலும் சப்பரத்தின் மரச் சக்கரம் மண்ணோடு உராயும் ஒலியும் பதினெட்டாம் பெருக்கின் பிரதான பின்னணி இசை.  

பொசுபொசுவென்று மார்பு ரோமங்கள் தெரியும், தொப்புள் வரை திறந்த, பட்டன் பிய்யும் ”இறுக்கிப்பிடி” சட்டையும் தரை பெருக்கும் பெல் பாட்டமுமாய் (பிரத்யேகமாக அடியில் ஜிப் வைத்துத் தைத்தது) எதையோ தொலைத்த பாவனையில் அண்ணாக்களும், எதையோ தேடும் பாவனையில் கண்களை அலையவிட்டு ஹாஃப் ஸாரி, பாவாடை, இடுப்பில் சொருகிய வெள்ளைக் கர்ச்சீஃப் சகிதம் பதினெட்டுகளின் கூட்டமும் காவிரிக்கரையோரம் காதலுடன் நடமாடும். என்னைப் போல் ஒன்றும் தெரியாத அச்சுப்பிச்சு அரை ட்ராயர்கள் அந்த அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் இடையே ”சிறார்”விடு தூதாக இடையூறில்லாத இடையர்களாய் பணியாற்றும்.

இதமாகத் தலைகோதும் தென்றல், சலசலக்கும் ஆறு, காற்றில் தலையாட்டும் கரையோர அரசமரம், சுற்றிலும் காற்றாடி விட்டு ஓடியாடும் சின்னஞ் சிறுசுகள், மனைவியிடமிருந்து கண்ணடிக்க வைக்கும் புளிசாதம் கையில் வாங்கித் தின்ணும் கணவன், குழுமி உட்கார்ந்து அரட்டையடிக்கும் சிநேகிதங்கள், “டேய்! புதுத்தண்ணி காவு வாங்கிடும். ஜாக்கிரதை” என்று நொடிக்கொருதரம் பிள்ளைகளைப் பார்த்து அலெர்ட் செய்யும் அக்கறையான பாட்டிமார்கள் என்று அந்த பாமணியாற்றங்கரை அரசமரமிருக்கும் தேவலோகமாகக் காட்சியளிக்கும்.

தேங்காய் சாதம், புளி சாதம், எலும்பிச்சை சாதம் என்று பல வீட்டுச் சித்ரான்னங்கள் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அன்போடு அளவில்லாமல் கிடைக்கும். சுவை மிகுந்த சோத்துச் சட்டிகள் சீக்கிரம் தீர்ந்துவிடும். ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட வ.ஊ.சியின் பெருமிதத்தோடு காகிதக் கப்பல்கள் விடுவோம். நுரை பொங்க வரும் புதுப் புனலில் மிதந்து சொற்ப நேரத்திற்குள் கோரைப்புற்களால் கவிழும் கா.கப்பல்களின் அணிவகுப்பு அந்த நொடி தண்ணீரில் முளைத்த இன்ஸ்டண்ட் அல்லிப்பூக் கூட்டம் போல மிதக்கும். வயிறும் மனசும் நிறைந்து முழுத் திருப்தியடைந்த அந்தி சாய்ந்த நேரத்தில் ஒரு பக்கக் கால் கழன்ற சப்பரத்தை இழுத்துக்கொண்டு, தலை கலைந்து, சட்டை அழுக்காகி புத்துணர்வுடன் இல்லம் திரும்புவோம்.

இந்த வருஷம் பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் சொட்டுத் தண்ணீர் இல்லையாம். ஆற்றங்கரையில் துவங்கிய நாகரீகங்கள் ஆற்றங்கரையில்லாமலே முடிந்துவிடும் அபாயத்திலிருக்கிறது. ”ஆடியில அடிக்குதம்மா அதிர்ஷ்டக்காத்து”ன்னு டிவி பார்த்துக்கொண்டு பாப்கார்ன் கொரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இன்றைய இளைய சமுதாயம் இதுபோல சந்தோஷங்களை அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களுக்கும் ஆறு குளங்கள் வறண்டுபோகாமால் அனுபவிக்க வாய்ப்பிருந்தால்தானே!

#ஆடிப்பெருக்குச் சிறுத்துப் போச்சு!!
##படம் அடியேன் க்ளிக்கியது. RVS CLICKOGRAPHY!!  மன்னார்குடி மேலப்பாலம் சட்ரஸ்ஸு. (ஷட்டர்ஸ்)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails