Monday, October 23, 2017

தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...

ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷிணம் செல்லலாம் என்று சன்னிதி வாசலில் முதல் ஆளாய் நின்றுகொண்டிருந்தேன். இடதும் வலதுமாய் ஜெய விஜயர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும்வரை குருவாயூரப்பனை ஐந்து நிமிடமாவது மனதில் சிறைப்பிடிக்க எண்ணினேன். பாரதத்தில் சகாதேவன் க்ருஷ்ணனின் காலைக் கட்டிவிடுவேன் என்று சொன்னது போல் கண் மூடி மனசுக்குள் நிறுத்திப்பார்த்தேன். ஊஹும். அரைவிநாடி நேரமாவது கலையாமல் நிற்பேனா என்கிறது. குரங்கு மனம் அங்காடி நாயாக திரிந்து எதையெதையோ மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பட்டென்று கண்ணைத் திறந்துவிட்டேன். ஜெயவிஜயர்களைப் பார்க்கும் போது இவர்கள்தானே ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபுவாக ராக்ஷச அவதாரம் செய்து... ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மாவதாரம் எடுத்து வதம் செய்தார் என்று பகவத் சிந்தனை கிடைத்தது. கண்ணை மூடி மனதை ஒருமுகப்படுத்துவதை விட இப்படி சிலா ரூபமாகப் பார்த்துக்கொண்டே நற்சிந்தனை மலர்வது மகிழ்ச்சியாக இருந்தது.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் தனது ஸ்ரீமத்பாகவத சப்தாகத்தில்... “இங்க இருக்கானா... அங்க இருக்கானா... இந்த தூண்ல இருக்கானான்னு ஹிரண்யகசிபு ஆடியாடி ராஜ்யசபைலே கேட்டப்போ... எந்த தூண பிரஹ்லாத ஸ்வாமி காட்டுவார்னு நினைச்சு... காமிக்கற தூண்ல இல்லாட்டா பக்தனை ஏமாத்தினா மாதிரி ஆயிடுமேனு பயந்து.... எல்லாத் தூண்லயும் வந்து அணுப் பிரவேசம் பண்ணி உக்காண்டுண்டு .... இந்த தூணாடான்னு அஹம்பாவமா உதைச்ச ஹிரண்யகசிபுவை.. படீர்னு தூணைப் பிளந்து வெளில வந்து... ஆகாசம் தொடற மாதிரி விஸ்வரூபத்தோட.. தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்.. விரல்களெல்லாம் நீள நீள நகமாம்...சிம்ம முமகாம்... மனுஷ்ய உடம்பாம்.. உர்ர்...உர்ர்ர்ருன்னு கர்ஜிச்சிண்டு.. வந்து அவனோட துவந்த யுத்தம் போட்டாளாம் பெருமாள்..”
கண் திறந்த சிந்தனை. இன்னும் தீக்ஷிதர் தொடர்கிறார்
”நரசிம்மனுக்கு ஹிரண்யகசிபுவை உடனே வதம் பண்ணத் தெரியாதா? ஏன் துவந்த யுத்தம் பண்ணினார்?.. பிரஹ்லாத ஸ்வாமி ஹிரண்யகசிபு பண்ணின களேபரத்துல பயந்து போய் அவசரத்துல சாயரட்சை நாலு மணிக்கே ஸ்வாமியை பிரார்த்தனை பண்ணி கூப்டாளாம்.. பிரதோஷ வேளை வரட்டும்னு சித்த நாழி சண்டை போடற மாதிரி விளையாடினாளாம் ஸ்வாமி... அவனும் ஒருகாலத்துல இவருக்கு வைகுண்டத்துல காவல் காத்த பிரகிருதிதானே... பிரதோஷ வேளைல... மனுஷனும் இல்லாத மிருகமும் இல்லாத சரீரத்தோட..உக்கிர நரசிம்மனாய்... பகலும் இல்லாத இரவும் இல்லாத நேரத்தில.. உள்ளேயும் இல்லாத வெளியேயும் இல்லாத வாசற்படியில...உசிர் இருந்தும் இல்லாம இருக்கிற நகத்தை வச்சு... வயித்தைப் பூரி....குடலை எடுத்து மாலையா போட்டுண்டு.. வதம் பண்ணினானாம் பகவான்....”
என்ற அவரது வார்த்தைகள் காதுகளில் கணீர் கணீரென்று ஒலித்துக்கொண்டேயிருந்த போது அருகில் சங்கு ஊதினார்கள். டாங் டாங்கென்று கண்டாமணி அடித்தார்கள். கதவு திறக்கப்போகிறார்கள்.. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.. குருவாயூரப்பா... கதவு படாரென்று திறந்து ஆரத்தி காண்பித்தார்கள்....
ஆ.... என்ன அது....
நரசிம்மர்.......... மா...... தி.....ரி.... இருக்கே.......
ஆஹா... குருவாயூரப்பனுக்கு நரசிம்ம அலங்காரம். திரிநூல்களைத் தாடியாயும் பிடறி மயிறாகவும் ஒட்ட வைத்து... வாயில் சிறிது கூடுதலாக இரத்தச் சிவப்பை சேர்த்து... .ரத்ன க்ரீடமும்.. முத்துமணி மாலைகளும்.. பச்சைப் பட்டு பளபளக்க பஞ்சகச்சமும்...கழுத்தில் சம்பங்கியும் சாமந்தியும் துளசி மாலைகளும்... காலுக்கடியில் ஏராளாமான மல்லி, அரளி உதிரி புஷ்பங்களும்.. பச்சைப் பசேலென்று தரைமுழுவதும் துளிசிதளமுயாய்... உச்சியிலிருந்து இரண்டு புறமும் மூன்று மூன்று சரவிளக்குகள் ஐந்து முகம் ஏற்றி தொங்க... தரையில் இரண்டு பக்கமும் தண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஆட...கண்ணாரக் கண்டு ரசித்தேன்.
இன்னமும் கண்ணை விட்டு அகலாமல்... நரசிம்மமாய்.. நாராயணாய்.. சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாய்... குருவாயூரப்பனாய்... கோடி சூர்யப் பிரகாசனாய்... பக்தஜன ரட்சகனாய்... ஆதியுமாய்... அந்தமுமாய்....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails