Monday, October 23, 2017

காலுக்குதான் வயசாறது....

காலையில் சாம்பு மாமா “சங்கீதா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்தார். பத்து வருஷ பழக்கம். பூஜைக்கு ஏற்றி வைத்த CHAMPA வத்தி மணக்க நாஷ்டா பண்ணிக்கொண்டிருந்தேன். கந்த சஷ்டி ராம நவமி இரண்டிற்கும் எங்களது நன்கொடை கட்டாயம் உண்டு. பணி ஓய்வு பெற்ற பின்பு பதினெட்டாய் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுபவர். சத்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைக்காமல் உண்ணலாகாது என்ற கொள்கைப் பிடிப்பு கொண்டவர்.
அரைமணியில் எங்களூர் மன்னை ஆனந்தவிநாயகரில் ஆரம்பித்து மத்திய கைலாஷ் ஆனந்த விநாயகர் வரை சுவாரஸ்யமான சங்கதிகள் பேசுவார். நேரம் போவதே தெரியாது. “மாமா..மாடி ஏற வேண்டாம்.. சிரமப்படாதேள்” என்றால் “யே.. எனக்கொன்னும் வயசாகலை கேட்டியா.. காலுக்குதான் வயசாறது...” என்று அலட்சியமாக.... சிரமப்பட்டு.... மாடிப்படி ஏறுவார். வலுக்கட்டாயமாக வாயில் புன்னகையை வரவழைத்துக்கொண்டே! 
“என்ன... ரொம்ப வாட்டமா இருக்கே.. வொர்க் ப்ரஷரா?”
“ரெண்டு நாளா ஜுரம் மாமா...அடிச்சுத் தாக்கிடுத்து..”
“உம்.. ஒரு கைப்பிடி மாத்திரை அள்ளி வாயில போட்டுண்டிருப்பியே...”
“ம்...”
“எந்த வியாதியுமே மருந்துனால தீர்றதுகிடையாது தெரியுமோ?”
வாயில் போட்ட தோசையோடு சிரிப்பது கஷ்டமாக இருந்தது.
“சிரிக்கிறியா? இங்க பாரு.... மூணு நாளுக்கு மாத்திரை தர்றானா?” சுண்டி விரலையையும் கட்டை விரலையும் மடக்கி மீதமிருக்கும் மூன்று விரல்களை பைல்ஸ் இல்லாத கிரிக்கெட் ஸ்டம்ப்ஸ் மாதிரி என் கண்ணுக்கு அருகில் நீட்டினார்.
“ஆமா..”
“அப்புறம்தானே சொஸ்தமாகறது?.. அதுக்கு மின்னாடி சரியாயிடுத்தா?”
“அதெப்படி.. ஒரு கோர்ஸ் சாப்பிடணுமே.. அதைப் போடலைன்னா குணமாகாதே மாமா”
“ச்சீ..ச்சீ.. அதில்லை கணக்கு... அந்த மருந்துக்கு பதிலா... சீரகத் தண்ணீர்.. நெத்திக்கு மிளகுப் பத்து போடணும்... வெந்நீர் சொம்பு சொம்பா குடிக்கணும்.. முக்கியமா கண்ணை மூடிண்டு கிருஷ்ணா ராமான்னு இருக்கணும்.... ரெஸ்ட் வேணும்... நிலவேம்பு குடிக்கலாம்... தன்னால மூனாவது நாள் சரியாயிடும் தெரியுமா?”
”அப்ப மருந்து சாப்பிடறதெல்லாம்....”
“அது என்ன தெரியுமா? பால் பொங்கிவரும் போது கொஞ்சம் தண்ணி தெளிப்பாளே.. அது மாதிரி... பொங்கினது அடங்கும்.. அவ்ளோதான்.. ஆனா வைரஸ்ஸோ எதுவோ.. அதோட ஆட்டம் காட்டாம போகாது... வேணுமின்னா அந்த பால்ல ஊத்தற தண்ணி மாதிரி... மருந்துனால ஆட்டம் கொஞ்சம் அடங்கலாம்... ஆனா மொத்தமா ஆட்டத்தை நிறுத்தமுடியாது..”
“எல்லா வியாதிக்கும் சொல்லமுடியுமா?”
“என்ன வியாதிக்கெல்லாம்.. கேளு...”
“ஷுகர்...” நமக்கு டக்குன்னு வர்ற வியாதி பெயர் அதுதான்.
“நாக்கை அடக்கு. சாப்பாடுதான் மருந்து.. உணவே மருந்து... நெறையா இயற்கை மருந்துகள் இருக்கே... சரியாயிடுமே... எக்ஸர்சைஸ்...”
நேரமாகிவிட்டது. வாயாடவில்லை. கையலம்பிவிட்டு நகர்ந்தேன். ஆஃபீஸுக்கு கிளம்பும்போது சாம்பு மாமா சொல்வதில் ஜுரத்துக்கு நியாயம் இருப்பது போலதான் இருந்தது. மற்ற வியாதிகளுக்கு மேப் செய்து பார்க்க வேண்டும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails