”சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா! தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா!”
ஓயெம்மார் ஏஜியெஸ்ஸில் உத்தம வில்லன் முடிந்து திரும்பும் யாருமில்லா நெடுஞ்சாலை முழுவதும் இந்த இருவரிகளும் என் காதில் ரீங்காரமிட்டபடியே இருந்தது. இது கமல்ஹாசனே எழுதியதாம். சல்யூட் பாஸ். தீராக் கதைக்கு "The Genius and the Goddess"ல் அல்டஸ் ஹக்ஸ்லியின் “Reality never makes sense" வரிகள் ஞாபகம் வந்தது.
சினிமாவில் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகன் மனோரஞ்சன். பூஜா குமார் ஆண்ட்டியை பெட்ரோல் டேங்க் மேலே உட்காரவைத்து சிங்கிள் கிஸ்க்கே லவ்வா என்று முதல் காட்சியையே முத்தக் காட்சியாக்கி வீர விளையாட்டுப் படத்தில் பாடுகிறான். நாற்பது வயதில் ஒரு ரவுண்ட் வருவோம் என்று பூஜா குமார் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். நளினமாக ஆடுகிறார் கமல். சுளுக்கு வந்தது போலெல்லாம் கையைக் காலை உதைக்காமல் உதறாமல் இந்த வயதில் தனக்கு எதை எவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்து அளவாக ஆடுகிறார். காதல் அபிநய சரக்கு இன்னமும் நிறைய கைவசம் வைத்திருக்கிறார். ச்சும்மா அள்ளுது. அதில் வீலிங் செய்யும் மோட்டார் பைக் சாகசங்களைத் தவிர்த்திருக்கலாம். மசாலாப் பட நாயகனாம். சுய நக்கல்.
ப்ரெயின் ட்யூமர். இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தன்னை புகழேணியில் ஏற்றிவிட்ட மார்க்கதரிசியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண ஆசைப்படுகிறான் மனோ. அந்தப் படம் உத்தம வில்லன். சுப்பு ஆறுமுகம் ஐயாவை வில்லோடு உட்கார வைத்து அவர் பின்னால் ஜிப்ரான் ஓகே சொல்ல ம்யூசிக் போடுகிறார்கள். பாதி இடங்களில் பின்னணி இசையில்லாமல் வசனங்கள் வருகிறது. சீன் போகிற போக்கில் வாத்தியங்களோடு சேர்ந்து கொள்ளும் ஜிப்ரானிடத்தில் இசை மெச்சூரிட்டி தெரிகிறது. கேட்கும் பாடல்களிலெல்லாம் கமல் குரலே ஒலிப்பது போன்ற ஒரு பிரமை. அது பாதி மெய்யும் கூட. ஜிப்ரான் இசையில் கேளாய் மன்னாவும், கீழ் கண்ட பாடலும் செவிக்கு இனிக்கிறது.
காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
காமமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது
ஆசையாய் பாய் மரம்
அமைந்ததோர் படகிது
கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே
மல்யுத்தம் செய்யறவன் மல்லன். வில்யுத்தம் செய்யறவன் வில்லன் என்று ஆங்கில வில்லனை தமிழ் வில்லனாக மாற்றி வசனம் பேசுகிறார் இண்டலிஜெண்ட் கமல்.
வழக்கம் போல ரொமான்ஸ் காட்சிகளில் கோலோச்சுகிறார். காதல், பாசம், அச்சம், வெகுளித்தனம் என்று இந்தப் படம் முழுவதுமே கமலின் கண்கள் பேசுகின்றது. தனது சாவு நெருங்கிறது என்று பிள்ளையிடம் கிரிக்கெட் பாலில் கேட்ச் பிடித்து விளையாடிக்கொண்டே சொல்லும் சீன் சபாஷ் போட வைக்கிறது. அப்பா இறக்கப்போகிறார் என்று தெரிந்ததும் தேம்பும் பையனும் அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்து இடுப்போடு அணைத்துக்கொண்டுச் சுற்றிச் சுற்றி அழும் கமலும்.....யோவ்... நீதான்யா.... உன்னாலத்தான்... முடியும். ரொம்ப வருஷமாக நாயகனில் மகன் இறந்தபோது “ஓ”லமிட்ட கமலை மிமிக்கிரி செய்பவர்களுக்குக் கிடைத்த மற்றுமொரு தீனி சீன் இது. அபாரமான நடிப்பு.
மனோரஞ்சனின் தோள் வரை வளர்ந்த பையனாக வரும் யூத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பிட்ஸா தின்று வளர்ந்த உடல்வாகாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முப்போதும் கையில் ஐஃபோனோடு திரிகிறான். கமல் இறக்கப்போகிறார் என்று தெரிந்ததும் அழும் மனோன்மணியிடம் “யூ வாண்ட் எ ஹக்” என்று கேட்டு அணைத்துக்கொள்ளும் காட்சியில் க்ளாப்ஸ் வாங்குகிறார். யதார்த்தமாக நடிக்கிறார். வாழ்க.
இந்தப் பத்தியின் முதல் வரியில் சொன்ன வரிகள் உத்தமனாக வரும் கதாபாத்திரம் பாடுவது. உத்தமன் பாத்திரத்தில் நடிக்கும் மனோரஞ்சனை சொல்வது போல் அமைத்திருப்பது கமலின் தந்திரம். மேலும், ம்ருத்துஞ்ஜயா.. ம்ருத்துஞ்ஜயா... என்று அந்த கதாபாத்திரம் போற்றப்பட்டு சாகாமல் இருப்பதும் அதை நடிக்கும் மனோரஞ்சனாகிய கமல் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதும் இரு கதைகளையும் சாண்ட்விச்சாக சேர்த்துக்கொண்டே வருகிறது. உத்தமன் பாத்திரத்தை விஞ்சும் வகையில் நாசர் செய்திருக்கிறார். அவரது “பஹா..பஹா..” சிரிப்பும் அசமஞ்சமான ராஜாவாக வழிவதும் பிரமாதமாக இருக்கிறது. தெய்யமாட்ட பிரஹலாதன் ட்ராமா ஒத்திகையில் வரும் வசன ரகளை.
“பூதங்கள் ஐந்து மன்னா!
“நான்கில்லை..”
”அது வேதம் மன்னா..”
”கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்..”
“வேதத்தையா?”
”வசனத்தைய்யா...”
இதில் க்ரேஸி முலாம் பூசிக்கொண்ட கமல் தெரிகிறார்.
“ஏம்ப்பா அவன் பெயரென்ன?”
“ஏதோ உத்தமனாம்”
“ஏம்ப்பா.... ஏதோ உத்தமா...”
“ஐயோ வெறும் உத்தமா...”
“ரெண்டு பேரா...”
“இல்ல ஒண்ணுதான்”
வசனத்தில் அவ்வை ஷண்முகி அப்பட்டமாக தெரிந்தாள்.
உத்தமன் கமல் தெய்யமாடிக் கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டிவிடுகிறது. அவரோடு சேர்த்து நான்கு பேரை பாடை கட்டிக் கொண்டு போய் ஆற்றங்கரை ஓரத்தில் காரியம் நடக்கிறது. பிழைத்து எழுந்துவிடும் கமலைக் கண்டு ஊரார் பேய் பிசாசு என்று அலறி ஓடுகிறார்கள். பின்பு உலக்கையால் அடித்து சவமாக ஆற்றில் மிதந்து போய் செத்த பிணத்தைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுமாப் போல என்று பட்டினத்தாரை உபயோகப்படுத்தியிருக்கார். உத்தமனாக வரும் காட்சிகளில் முகத்தில் ஒருவித அசட்டுத்தனம் தெரியும்படி நடிக்கிறார்.
குருநாதர் மார்க்கதரிசியிடம் பேசும் மனோரஞ்சன் கண்களில் மரியாதையும் உடல்மொழியில் பவ்யமும் கொண்டுவந்திருப்பது கமலின் தேர்ந்த நடிப்பு. தெய்யம் ஆடும்போது கமலின் அசுர உழைப்பும் எடுத்துக்கொண்ட பாத்திரத்தை மிளரச்செய்யும் சாகசமும் தெரிகிறது. மேலும் அந்த ஆட்டப் பின்னணியில் வரும் மாடங்களும், மலை சார்ந்த இடங்களும், மாலை வேளையின் மந்தகாச மஞ்சள் நிறமும் கண்ணைத் திரையை விட்டு அகலவிடாமல் கட்டிப்போடுகிறது. படமெங்கும் கேமிரா கவிதையாக மலர்ந்திருக்கிறது.
மனோரஞ்சனின் பிஏவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார். ப்ரெயின் ட்யூமர் வந்ததை தனக்குக் கூட சொல்லாததை எண்ணியெண்ணி அழும் காட்சிகளில் நடிப்பில் கணம் காட்டுகிறார். அடிக்கடி தலைவலி என்று சொல்லிக்கொண்டு சரக்கு அடிக்கும் கமல் ஒரு தியேட்டர் பாத்ரூமில் கவிழ்ந்துவிட அவரை அதற்குள்ளேயே வைத்து உட்பக்கமா தாழ்ப்பாள் போட எடுத்துக்கொள்ளும் பிரயர்த்தனங்களும் அதற்கு உதவும் ஒரு சிங்குடன் சேர்ந்து சில நிமிடங்கள் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். ஒரு டிவி பேட்டியில் ”ஒரு கலைஞனுக்கு அடுத்த கரகோஷம் எப்போ வரும்னு தெரியாது” என்று சொல்லும் இடம் அவனுடைய சாவையும் அப்போதுதான் மனோன்மணியைப் பற்றி அவனிடம் சொன்ன ஜெயராமையும் குறிவைத்துச் சொல்லப்பட்டவை. அபாரம். ஊர்வசி ஜோடி மாற்றி சதிலீலாவதியை திரும்பச் செய்திருக்கிறார். பூர்ண சந்திர ராவாக வரும் விஸ்வநாத் (படத்தில் ஊர்வசியின் அப்பா) “தேவைப்பட்டால் கொலையும் செய்வேன்..” என்று கோலூன்றி நடக்கும் வயசில் கமலை மிரட்டும் சீனில் அசத்துகிறார்.
தான் காதலித்து கைவிடப்பட்ட யாமினிக்குப் பிறந்த மனோன்மணியிடம் தனியாகப் பேசும் கமலிடம் தெரிந்த பிராணாவஸ்தையை மொழியில் சொல்ல அடங்காது. மனோன்மணியாக நடித்த பார்வதி மேனன் தனது தாயைத் தவிக்க விட்டவனிடம் பேசுகிறோம் என்று குரலிலும் செய்கையிலும் காட்டும் அலட்சியத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கமலிடம் புதிதாக கோடம்பாக்கம் வருபவர்கள் ஆக்டிங் கற்றுக்கொள்ளட்டும். ஆண்ட்ரியா அழகுப்பதுமையாக ஆறு சீனிற்கு ஒருமுறை கட்டாயம் வருகிறார். அர்ப்பணா என்ற பெயரில் தன்னை மனோரஞ்சனிடம் அர்ப்பணித்துக்கொள்கிறார். சாகும் தருவாயில் ஆபரேஷன் தியேட்டரில் அர்ப்பணாவைப் பார்த்துக் கண்ணடித்து உதடு குவிக்கும் கமல் பார்ப்போரின் பரிதாபத்தைக் கடைசியில் அள்ளிக்கொள்கிறார்.
தெய்யமாட்டக்காரனாக வரும் கதை சரியான பிடிமானம் இல்லாமல் ஆங்காங்கே தொங்குகிறது என்று நினைக்கத்தோன்றினாலும், “சார்.. எங்கிட்ட கதையில்லை.. என்னை மாதிரி ஒரு திமிறான ஆள்...”என்று கமல் பாலசந்தரிடம் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் மன்னித்துவிடலாம். பேரா. ஞானசம்பந்தனுக்கு நடிப்பில் பேரவா போலிருக்கிறது. பட்டிமன்றத்தில் பேசுவது போலவே வசனம் பேசுகிறார். ரமேஷ் அர்விந்த டைரக்ஷனாம். டைட்டிலில் போட்டார்கள்.
மலையாளம், தெலுங்கு என்று இரு திராவிட மொழிகள் படமெங்கும் துண்டுத் துண்டாக வருவது வசனத்திற்கு ஜிகினா சேர்த்தது போல ஜம்மென்று இருக்கிறது. எட்டாம் நூற்றாண்டுக் காட்சிகளில் திரையில் வரும் அனைத்து ஜீவராசிகளும் தூய தமிழில் பேசுகிறது. ”ஏம்பா யாருமே தமிழ்ல பேசமாட்டாங்களா?”னு பசங்கள் திடுக்கிடும்படியாகக் கேட்டபோது பரிதாபமாக இருந்தது. “எனக்கு சிறிது தண்ணீர் வேண்டுமே. தருகிறீர்களா?” என்று தீந்தமிழில் வாட்டர் பாட்டிலைக் கேட்டு வாங்கிக் குடித்தேன்.
அவரது படங்களில் வித்தியாசம் எதாவது இருக்கும் என்று நம்பிக்கையோடு வருபவர்களை ஏமாற்றாமல் விருந்தளித்திருக்கிறார் கமல்.
