Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Saturday, September 22, 2012

ஆனந்த விகடனில் அடியேன்!



இந்த வார “என் விகடனி”ல் எனது www.rvsm.in வலைப்பூ வலையோசை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆ.வி ஆசிரியர் குழுவிற்கு நன்றி. திரு. ரா. கண்ணன் மற்றும் திரு. கலீல் ராஜா இருவருக்கும் பிரத்தியேகமான நன்றிகள். இவர்களைத் தவிர இது வெளியாவதற்கு முயற்சியெடுத்த, பெயரில் மன்மதனின் மனைவி பெயரைப் பாதியாகக் கொண்ட, நண்பனொருவனுக்கும் (”என் பெயரைக் குறிப்பிடாதீர்கள். ப்ளீஸ்!” என்று கேட்டுக்கொண்டதினால் இப்படி கிசு கிசு போல எழுதவேண்டியதாயிற்று) மனமார்ந்த நன்றி.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை கீழே பதிகிறேன். படித்து இன்புறவும்.

நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க்  சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.


இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.

உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.

பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.  ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.


இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்...  இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.

பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.


Sunday, July 10, 2011

அந்த மூன்று விஷயங்கள்

three monkeys 1



கையில் இருக்கும் பட்டனைக் கொடுத்து நான்கைந்து பேராய் அணியாக ஒரு இலக்கை நோக்கி ஜெயிப்பதற்காக ஓடும் ரிலே ரேஸ் போல இந்தத் தொடர் பதிவுகள். இலக்கு தலைப்புகள். பதிவுலகத்தில் ஆரோக்கியமான தலைப்புகளில் தொடரப்படும் சங்கிலிப் பதிவுகள் வெற்றிலை பாக்கோடு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். முன்னுரைகளைப் பற்றி எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் போன மாதம் அழைப்பு விடுத்து நான்கு பேர் அவருக்கு பின்னால் பின்னுரையாக எழுதினோம்.

முன்னுரைகள் ஒரு சிறப்பான டாபிக். ஒரு புஸ்தகத்தை வாங்குவதற்கு முன் புரட்டிப் பார்க்கும் இரண்டு நிமிடங்களில் வாசகனைக் கவரும் வகையில் முன்னுரைகள் இருக்க வேண்டும். இம்முறை பிரபலங்களிடம் பேட்டி போல ஒரு தொடர் பதிவு. இம்முறை தொடுப்புக் கொடுத்தது கல்லிடையின் காதல் நாயகன் தக்குடு. முடிந்த வரையில் கேள்விக்கு நேரடியான பதில் அளித்திருக்கிறேன், படிப்போர் ரசிக்கும் வகையில்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

இன்னொரு பால்யம் இப்பிறவியில் அமைந்தால் மீண்டும் அதே ’கெட்ட’ சகவாசங்களுடன் வடக்குத் தெரு மதில் கட்டையில் ராப்பூரா அரட்டையும், ராஜகோபாலன் உற்சவங்களும், கிரிக்கெட் போட்டிகளும் திணறத் திணற நிரம்பிய மன்னார்குடி வாசம்.

பசிக்கும் போது சூடான இட்லி, தேங்காய் சட்னியுடன் வயிறாற சாப்பிட்டவுடன் கண்கள் சொருக போதையேற்றும் கள்ளிச்சொட்டு ஸ்ட்ராங்காய் ஃபில்டர் காஃபி.

மேல் சட்டை போடாமல் bare body-யுடன், கையில் பேய்க் கரும்பு இல்லாமல் வேஷ்டி மட்டும் இடுப்புக்கு மேலே பட்டினத்தார் போல சுற்றிக்கொண்டு சிவனேன்னு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருத்தல்- சில நேரங்களில்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

ஒலியெழுப்பக் கூடாத பிரதேசமான ஆஸ்பத்திரி வாசலில் கூட ”டர்...டர்”ரென்று காதைக் கிழிக்கும் ஆட்டோ சத்தம். “பாம்..பாம்” என்று பஸ்கள் இரையும் ஏர் ஹார்ன்கள். ஆண்டவன் சன்னதியில் ”மாட்டுப்பொண் ஊருக்கு போயிருக்காளா” போன்ற கடைந்தெடுத்த கண்ணியம் இல்லாத செயல்கள்.

கோயிலில் “என்ன கோயிலுக்கா?”என்றும் சினிமாக் கொட்டாயில் “சினிமாவுக்கா?” என்றும் பீச்சில் “பீச்சுக்கா?” என்றும் அப்பாவியாகக் கேட்கப்படும் அச்சுப்பிச்சான சம்பிரதாயக் கேள்விகள். நல்லவேளை இறுதி ஊர்வலத்தில் கொள்ளி தூக்கிக்கொண்டு முன்னால் செல்பவரிடம் “என்ன சுடுகாட்டுக்கா?” என்று கேட்காமல் இருக்கிறார்கள்.

அருள் புரிவதற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பாராட்டாத ஏடு கொண்டல வாடாவிர்க்கு பல டினாமினெஷனில் டிக்கெட் அச்சடித்து வசூல் செய்து ‘பணக்கார சாமியாக’ க்யூ கட்டிப் பார்க்க விடுவது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

இந்த லோகாயாத வாழ்வில் ”நீங்களே பார்த்து நல்லதா வாங்கிட்டு வாங்க” என்று அஸைன் ஆகும் சில பல கிரகஸ்தாஸ்ரம வேலைகள்.

புள்ளைகுட்டிகளுக்கு வீட்டுப் பாடங்கள் மற்றும் பரீட்சைக்கு சொல்லிக் கொடுப்பது. வெரி டேஞ்சரஸ். ‘அவளுக்கு கொஞ்சம் மேத்ஸ் பாருங்க’ என்று மிஸ்ஸஸ் சொன்னால் உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது.

மக்கள் சமுத்திரமான தி.நகரில் கடை விரித்திருக்கும் பல அடுக்கு மாடி ஷாப்கள் மற்றும் ஸ்டோர்களில் திருகாணியில் இருந்து தீபாவளிப் பட்டு வரை எல்லாரையும் ஒட்டி உரசி ஈஷிக்கொண்டே மூச்சு முட்ட சகட்டு மேனிக்கு சாமான்கள் வாங்கும் அசாத்திய தைரியசாலிகளைப் பார்த்து. அந்தக் கடைகளைப் பார்த்தும் தான்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அட்டெண்ட் செய்த யாரோ ஒருவரின் கல்யாண ரிஷப்ஷன் ஆடை அலங்காரங்களை இப்போதும் எப்போதும் ராத்திரி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் நினைவில் வைத்திருக்கும் மாதர் குல மாணிக்கங்கள். - #எப்படி இவ்ளோ ஞாபகம் இருக்கிறது என்று சுத்தமாகவும் அழுக்காகவும் கூட புரியவில்லை.

அடுப்பில் கொதிக்கும் போதே வாசனை பார்த்து ”ரசத்துக்கு உப்பு பத்தாது” என்று ஹாலிலிருந்து அடுக்களை பார்த்து சத்தமிடும் மூக்கை நாக்காக வளர்த்த சில வாசனாதிப் பெரியோர்கள்.

ஆஸ்ரமங்களில் நித்யமும் ’ஆனந்த’ சாமியார்கள் ‘கட்டிப் பிடி வைத்தியம்” தான் செய்கிறார்கள் என்ற நிஜம் தெரிந்தும் கூட்டம் கூட்டமாய்க் குவியும் பக்தைகள் கூட்டம்.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ரகுநாதனின் ‘ரஸிகன் கதைகள்’

நாலு வயசு கௌதம்மின் பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய மானஸா போட்டிருந்த ரோஸ் கலர் ஜிகுஜிகு கோமாளி கேப்.

இந்த நவீன உலகத்தின் இரக்கமில்லாத எஜமானன் - செல் ஃபோன்.

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

கல்யாண ரிஷப்ஷனில் கோட் சூட்டோடு சிரித்துக் கொண்டு எதிர்கால பயமின்றி போஸ் கொடுத்து நிற்கும் மாப்பிள்ளை. (பெண் சிங்கங்கள் சண்டைக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் ஆண் சிங்கங்கள் எனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

”போதா பதவா.. தாஸ்கல்.. மூக்க அதுத்துதுவேன்” என்று என்னைத் திருப்பித் திட்டும் மழலைகள்.

எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுசாமி போல ”ஹார்ட் டிஸ்க்ன்னா ரொம்ப ஹார்டா கெட்டியா இருக்கும். லேசுல உடையாது. எங்க கீழ போட்டுப் பாருங்க”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைத்து உளறுபவர்கள்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

வாகனம் ஓட்டிக்கொண்டு, ரோட்டில் பிலாக்கு பார்த்துக் கொண்டு, யாருடனாவது நீலப் பல்லில் பேசிக்கொண்டும் வீடு திரும்பும் அசாத்திய திறன் எனக்கு உண்டு. வலையில் உலவும் உலாவி போல நான் ஒரு மல்ட்டி டாஸ்க்கிங் மென்பொருள்.

தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கட்டக் கடேசிப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

”லேட்டாயிடுத்து சாப்பிட வரியா” என்று என்னைக் கூப்பிட்ட அம்மாவிற்கு ”இதோம்மா..” என்று பதில் கூறுகிறேன்.

”ஸிஸ்டம் குடு” என்று என் கையை தட்டிவிட்டு என்னிடமிருந்து பிடுங்கும் என் செல்லங்களிடம் இருந்து கெஞ்சிக் கூத்தாடி தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

வேறென்ன? இலக்கியத் தரத்தில் இல்லையென்றாலும் நாலு பேர் படிக்கும் விதமாகவாவது. அட்லீஸ்ட் புரட்டும் விதமாகவாவது  ஹி ..ஹி.. ஒரு புஸ்தகம் போட வேண்டும்.

பாதியில் விட்ட மிருதங்கத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்து “தத்.தி.தொம்.நம்” மிலிருந்து ஆரம்பித்து முழுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு முறை மண்டையை பிளக்கும் கொளுத்தும் வெய்யிலில் மன்னையில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் ஒன்று விளையாட வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

இருபத்து நான்கு மணி நேரமும் அன்னம் தண்ணீர் ’அரசியல்வாதி சோடா’ போன்ற தேவைகள் இல்லாமல் வாய் மூடாமல் பேச முடியும்.

மனசொடிஞ்சு போய் நிர்கதியாக யாராவது வந்தால் “அதோ பாரு நிலா! அந்தக் கறை அதுக்கு எப்படி வந்துச்சு தெரியுமா? கறை இருந்தாலும் நிலா அழகு தானே”ன்னு பக்கத்துல உட்கார்த்தி வச்சு கதை சொல்லி மூடை மாற்றத் தெரியும்.

ஓராயிரம் ஆட்டோக்களுக்கு மத்தியில், சாலையெங்கும் வாகனங்கள் விரவியிருந்தாலும் மனோதிடத்துடன் நாற்சக்கர வாகனம் ஓட்ட முடியும். பத்து வருஷ ’வண்டியோட்டி சர்வீஸ்’ பேசுது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

மார்கழி மாத சபாக் கச்சேரிகள் கேட்டுவிட்டு  நானும் கச்சேரி செய்கிறேன் பார் என்று வாயைப் பிளந்து தெருவே கேட்கும்படி கதறும் புதிய உத்வேகப் பாடகர்கள் பாடும் எ(ச்)சப்பாட்டுகள்.

நான் படிக்கும் போதும் சரி இப்போது என் பெண்கள் பாடசாலையில் வாசிக்கும் இந்தக் கர வருஷத்திலும் சரி, ”பவி தேர்ட் ரேங்க். உங்க பொண்ணு எத்தனாவது ரேங்க்?” என்ற தேவையற்ற ஒப்பீட்டுக் கேள்வி. இதையே கிரேட் வைத்தும் கேட்பார்கள் என்று அறிக.

நுனி கூராக உள்ள மண்வெட்டியை மணல் இரைந்து கிடக்கும் தார் ரோட்டில் போட்டு “டர்..டர்.” என்று கரண்டும் ஓசை. அந்த மண்ணின் நரநர ஓசை காது வழியாக உள் புகுந்து உடம்பெங்கும் அரித்துக் கொண்டு பரவும். Oh God!

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

ஓயாமல் லொடலொடவென்று Chatter Box போல பேசாமல் தேவைக்கு மட்டும் வாயைத் திறப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாநகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் போது கடிவாளம் கட்டியது போல ரோட்டை மட்டும் பார்த்து ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நெடு நாள் பிடிக்கும் போலிருக்கிறது.

கமகமவென்று தெருவே மணக்கும் வண்ணம் வாசனை மூக்கைத் துளைக்க சமைக்க (கரண்டி பிடிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

365 நாட்களும் இரவும் பகலும் இட்லி தோசை  அதன் இணை பிரியாத ஜோடி சட்னி சாம்பாருடன். ஸ்டார் ஹோட்டலுக்கு போனால் கூட இட்லி தோசைக்கு ஆளாய்ப் பறக்கும் இட்லி விசிறி நான். சாக்கடை கசியும் பிளாட்பார தட்டுக்கடை மல்லிப்பூ இட்லி போல கமகமக்கும் ஸ்டார் ஹோட்டல் குஷ்பூ இட்லி அவ்வளவு சுகம் இல்லை.

ரொம்பவும் தளர்ந்து இல்லாமலும், கெட்டியாகவும் இல்லாமலும் தொட்டுக்க மாவடு அல்லது விழுதுடன் ஊறிய ஊறுகின்ற ஊறப்போகும் ‘வினைத்தொகை’ ஆவக்காயுடன் தயிர் சாதம். பகாசுரன் போல பத்து நிமிடத்தில் ஒரு படி சாதம் உள்ளே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈவினிங் டிஃபனுக்கு வெங்கலப் பானையில் கிண்டும் தேங்காய் துறுவலுடன் அரிசி உப்புமா வித் மவுத் வாட்டரிங் நீர்க்க இருக்கும் கத்திரிக்காய் கொஸ்த்து. ரவையூண்டு புளி அதிகமாய் இருந்தால் கொஸ்துக்கு உப்புமா தொட்டுக்கலாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அவ்வப்போது டைனமிக்காக மாறும் பட்டியல் இது. இப்போது கீழே கொடுக்கும் லிஸ்ட், சென்ற ‘ட்’ அடித்த பிறகு டக்கென்று நினைவில் வந்தது.

என் கண்மணி என் காதலி... இளமாங்கனி....
படைத்தானே பிரம்ம தேவன்....
குருவாயூரப்பா... நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி.

எல்லாம் எஸ்.பி.பியாக முணுமுணுத்தாச்சோ!

14) பிடித்த மூன்று படங்கள்?

கிளாஸிக்
தேவர் மகன்
மகாநதி
குணா

காமடி
மைக்கேல் மதன காமராஜன்.
பஞ்ச தந்திரம்
பம்மல் ‘உவ்வே’ சம்பந்தம்.

படையப்பா
முத்து
பாட்ஷா

அண்ணாமலை......

Pursuit of Happiness என்று வாழ்க்கையில் கஷ்டப்படும் விற்பனைப் பிரநிதி ஒருவனின் கதை. ஆங்கிலத்தில் ஆக்‌ஷன் படங்கள் மட்டும் பார்த்த நான் கண்ணீர் வரவழைக்கும் படமாக பார்த்த சினிமா இது. ரியலி சூப்பர்ப். எவ்ளோ நாள் தான் கமல்/சிவாஜி படத்துக்கு மட்டும் ’ஓ’ன்னு அழறது.

....ஓ! மூன்று தான் சொல்லவேண்டுமோ? மும்மூன்றாய் நிறையச் சொல்லலாம். படமும் பாடலும் மூன்றில் நிறுத்தி முக்கோணமிட முடியுமா?

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

ரொம்ப சொகுசுக்கு உடம்பு பழகிடிச்சு.

பற்கள் கிடுகிடுக்கும் குளிர் காலத்திலும் இருவது டிகிரியில் இயங்கும் காரியர் ஸ்பிளிட் ஏ.ஸி.

முகத்தை மூடும் புழுதி, குளிப்பாட்டும் சாக்கடைப் புனித நீர், ஹார்ன் மாணிக்கங்களிடம் இருந்து செவிப்பறையை காப்பாற்றிக் கொள்ள என்று மூன்றுக்கும் சேர்த்து ஜன்னலேற்றிய ஒரு ஏ.ஸி கார்.

அட்லீஸ்ட் தினமும் ஒரு வேளையாவது ஒரு கவளமாவது தயிர் சாதம். யொகர்ட்டின் குண விஷேஷங்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் ஏகத்திற்கும் சிலாகிக்கிறார்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

பதிவுலக சூறாவளி ராஜராஜேஸ்வரி
எழுத்தை ஆயுதமாய் வைத்திருக்கும் ஏ.ஆர்.ராஜகோபாலன்
தில்லியில் பதிவாட்சி செலுத்தும் வெங்கட் நாகராஜ்



பின் குறிப்பு: இதுவரை தமிழ்மணத்திலும் தொடர்ந்து வந்து படித்த அனைத்து அப்பாவி ஜீவன்களுக்கும் மிக்க நன்றி.

பட உதவி: http://journeyforth.wordpress.com/. நடு நாயகமாக  உட்கார்ந்திருக்கும் அந்தக் குரங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பாடுதா? பேசுதா?

-

Monday, February 28, 2011

ஒரு சாமானியனின் பெயர்க்குறிப்புகள்

my name is

ம மா மி மீ மோ மொ மௌ போன்ற மகாரத்திலோ, க கா கி கீ கூ கு கெ கே போன்ற ககாரத்திலோ, த தா தி தீ போன்ற தகாரத்திலோ பெயர் சூட்டினால் இவ்வையகம் போற்ற உங்கள் தவப்புதல்வன் சிறந்து விளங்குவான் என்று டிவிக்கு டிவி மூலைக்கு மூலை இப்போது கூவும் நேமாலஜி அவ்வளவு பிரபல்யம் அடையாத ஒரு வருஷத்தில் நான் பிறந்ததால் பெற்றோருக்கு இதுபோல விஞ்ஞானத்தனமாக யோசித்து பெயர் வைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை.  வைத்தபிறகும் சுயம்புவாக முன்னாடி எம் சேர்த்தால் மன்னனாகிவிடலாம் என்று நம்பர் கணக்கு பார்த்து அதையும் வைத்துக்கொள்ளவில்லை. வைத்த பெயர் வைத்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
 
என்னுடைய சித்தப்பா மாமாக்களுக்கு மற்றும் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூணு விட்ட சொந்தபந்தங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் திருப்பெயர்; ஒரே திருநாமம் வெங்கட்ராமன். சில சமயங்களில் வெங்கட்ராமன் இன்று சென்னை வருகை என்று செய்தித்தாளில் உரக்கப் படித்தால் கூட என் பாட்டி என் சித்தப்பாவை ஜனாதிபதி ஸ்தானத்திற்கு உயர்த்தி "எப்படா இஞ்ச வரான்?" என்று கேட்காத தன் காதை தீட்டிக் கொண்டு கேட்பாள். சித்தப்பாவிற்கு ஏன் வெங்கட்ராமன் என்றால் தாத்தாவின் அப்பா வெங்கட்ராமன். பிற்கால சந்ததியினர் பாட்டன் முப்பாட்டன் பெயர்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயரை பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தால் தீர்ந்தது. பிள்ளைகள் அந்தப் பெயரைக் காப்பாற்றுமா என்று தெரியாது ஆனால் எப்படியும் மறக்கமாட்டார்கள். இப்போது உங்கள் பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி. பெயரைக் காப்பாற்றுதல் என்றால் என்ன?

இந்த அப்பா தாத்தா பெயர்களை வைக்கும் பாணியில் உச்சம் தொட்ட ஒரு சங்கதி. முன்பு என்னுடன் வேலை பார்த்த நண்பர் பெயர் பழனியப்பன். பழனியப்பனில் பிரச்சனையில்லை. அவர் அப்பாவின் பெயரும் அதுதான். அதையும் சரியென்று பொறுத்துக்கொள்ளலாம். அவருக்கு பிறந்த, அதாவது அப்பா பழனிக்கு பிறந்த பிள்ளை பழனியின் பிள்ளையின் பெயரும் பழனியப்பன். பயந்து போய் பீதியில் நான் கேட்ட கேள்வி இதுதான். "உங்க பையனுக்கு ஒரு பொண்ணு ப்ரியமுள்ள பழனிக்குன்னு லவ் லெட்டர் எழுதி கவர் மேல பழனியப்பன்னு உங்க வீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் பண்ணி.. பையனை தவிர்த்து மிச்சம் இருக்குற உங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் பிரிச்சி படிச்சா அந்தப் பொண்ணோட கதி என்னவாகும்.". பதிலுக்கு கேவிக்கேவி சிரித்தார். பதில் இயம்பவில்லை. இது இப்போது ஏற்பட்டிருக்கும் ஈமெயில் புரட்சிக்கு முன்னர் நான் கேட்ட கேள்வி. ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் இருந்தார்களாம். இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தில் ஒரு அட்ரஸில் ஒரு கதவிற்குள் இல்லை என்றும் காலங்கள் வேறு வேறு என்றும் அறிகிறோம்.

உன் பேரைப் பற்றி சொல்லுப்பான்னா ஏன் ஊர் பேரைப் பற்றி சொல்கிறாய் என்று நீங்கள் புருவம் நெரிப்பது புரிகிறது. முதல் பாராவில் வெங்கடசுப்பிரமணியன் என்ற என்னுடைய முழ நீளப் பெயரின் அரை முழத்தை அளந்தேன். கொள்ளுத்தாத்தாவின் பெயரை என் பெயருக்கு பாதியாக்கிய என் தாத்தா தன்னை விட்டுக்கொடுப்பாரா? தாத்தாவின் பெயர் சுப்ரமணியன். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. காலிரண்டும் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியில் நொடித்துவிட கம்போடு நாற்காலியில் உட்கார்ந்தபடியே பல காரியங்கள் சாதித்தவர். தன் தகப்பனார் பெயரில் பாதியும் தன் பெயரில் மீதியையும் சேர்த்து என்னை வெங்கடசுப்ரமணியனாக்கினார். வெங்கடராமனும் சுப்பிரமணியனும் வாழ்க்கையில் செய்ததை, சாதித்ததை நான் ...தித்தேனா ...திப்பேனா என்பது தெரியவில்லை. 


இப்படி ஒரு கூட்ஸ் ரயில் நீளப் பெயரை இட்டு என் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட்டால் "யன்.." என்று முடிக்கும் போது நிச்சயம் தெருமுனையை கடந்திருப்பேன். ஆகையால் உலகமக்களின் பயனைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் ஆர்.வி.எஸ்.எம் ஆனேன். பஞ்சம் பிழைக்க துரித கதியில் இயங்கும் சென்னைக்கு வந்த பிறகு அந்த நான்கெழுத்தும் இங்குள்ளோருக்கு பெரியதாகப்பட்டதால் அன்பு, அழகு, அறிவு மற்றும் கடமை போன்ற மூன்றெழுத்து வரிசையில் சுருக்கி ஆர்.வி.எஸ் ஆக்கப்பட்டேன். ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்? (இந்த தேவையில்லாத இடைச்செருகலை மக்கள் மன்னிக்க மற்றும் மறக்க வேண்டுகிறேன்!!)

ஆங்கிலத்தில் அழைப்பது பிடிக்காமல் என் தெருவில் வசித்த தமிழ் தீவிரவாதிகளின் அழைப்பிற்கு 'வெங்கிட்டு'வானேன். அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். செல்லத்தில் வெல்லக்கட்டியாக என்னை சின்னதம்பி என்று என் குடும்பம் என்னை அழைத்த சில வைபவ தினங்களும் என் நாட்காட்டியில் உண்டு. இதே சின்னதம்பி வக்கீல் பாலு சார் வீட்டு ராதாக்காவிர்க்கு "ஸ்மால் ப்ரதர்." கோபத்தில் திட்டும் போது "சுப்பிரமணியா கொப்பரவாயா" என்றும் பொளந்து கட்டிக்கொண்டு புதுப் பெயர்கள் என்னை வந்து அடைந்ததுண்டு. அப்போது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் ராமு சார் என்னை "வாடா ஹார்ட் அட்டாக்கு" என்று அட்டாக்கிங்காக கூப்பிடுவார். நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!

எனை அழைத்த எல்.கேவிற்கு ஒரு சல்யூட் அடித்து இந்த ரிலே ரேஸ் விளையாட நான் அழைக்கும் அன்பர்கள் பட்டியல் கீழே..

தக்குடு
மோகன்ஜி
மாதவன்
இளங்கோ
பாலாஜி சரவணா
வெங்கட்நாகராஜ் 
ராஜி
அப்பாதுரை

கூப்பிட்ட எல்லோரும் எழுதுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என் பெயரை சேர்ப்பதற்கு தோதாக படமளித்த புண்ணியவான் http://www.stanford.edu/

-


Monday, August 16, 2010

இன்று தமிழக பிரபலத்தின் பிறந்தநாள்

தமிழ் நாட்டின் பிரபலம் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். நமது நிருபர் 'நேர்மை' நாராயணின் நேரடி பிறந்த நாள் ரிப்போர்ட்.

happybirthday

பிறந்த நாள் கொண்டாட்டம்
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே அதிர்வேட்டும் வானவேடிக்கையுமாக இருந்தது. காலையில் இருந்து சின்னஞ் சிறுசுகளில் இருந்து பல் போன பெருசுகள் வரை  மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு கியூவில் நின்று அவரை தரிசித்துவிட்டு வாழ்த்துப்பெற்று/சொல்லி  சென்றது. அந்த வழியாக ஒரு ஈ காக்கா அவர் இல்லம் தாண்டி பயணிக்கமுடியாமல் போக்குவரத்து தடைபட்டு அந்த ஏரியாவே அல்லோகலப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விசேஷ பிரார்த்தனைகளும், அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி இனிப்புக் பலகாரக்கடைகள் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முற்றுகையிடப்பட்டு மொத்தக் கொள்முதல் செய்யப்பட்டு ஊருக்கே இனாமாக வழங்கப்பட்டது. காலையில் ஸ்நானம் செய்து பயபக்தியுடன் பெருமாள் பிரசாதம் போல் ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாக்கு கால் கிலோ சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்லும் ஆராவமுதன் "சார். நா இன்னிக்கி நினைச்சே பார்க்கலை. கால் கிலோ யார் சார் ஃப்ரீயா தருவா. அவர் பேரை சொல்லி வாங்கி குடுத்துட்டு போனா. அவர் நன்னா இருக்கணும். பகவான் அவருக்கு ஒரு குறையும் இல்லாமா வைக்கணும்" என்று கண்களில் நீர் தளும்ப நம்மிடம் கூறினார்.

அசம்பாவிதம்
அவர் வசிக்கும் தெருவின் கோடியில் "அகவை ---ல் அடியெடுத்து வைக்கும் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்", "உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு" மற்றும் "எங்களின் காட்ஃபாதரே" போன்ற ஆளுயர கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் ஆசி வாங்கும் கூட்டத்தின் தள்ளுமுள்ளு அதிகம் காரணமாக ஒருவரோடொருவர் முட்டி மோதி அந்த கட்அவுட்டுகள் சரியத்தொடங்கின. நல்லவேளையாக அங்கு ரோந்துப்பணியில் நின்றிருந்த ஸி.ஆர்.பி.எஃப் காவலர்கள் தாங்கிப்பிடித்து உதவிக்கரம் நீட்டினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் 
புலி வேஷம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம் என்று அவரது சொந்த ஊரிலிருந்து வேன் பிடித்து வந்து ஒரு ஆட்டம் ஆடினார்கள். இதற்கென்று பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த சேர் மேல் ஏறிநின்று இதை இரண்டு மணிநேரம் வேடிக்கை பார்த்து ரசித்தார். அவ்வப்போது கையை அசைத்தும், சிரித்தும் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டினார். சினிமாக் கவிஞர் சிந்தன் இவரை வாயார புகழ்ந்து பாடி பரிசல் பெற்று சென்றார்.
விருந்து
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் தெருஒரத்தில் அகழி போன்று பள்ளங்கள் தோண்டி ஆளுயர அடுக்குகளில், பாத்திரங்களில் ஆஜானுபாகுவான சமையல்காரர்கள் விருந்து சமைத்தார்கள். அசைவப் பிரியர்களுக்காக இவர்கள் அறுத்த ஆடுகளின் சத்தம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.  ரத்த ஆறே ஓடியது. கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு காய்கறி லாரி திருப்பிவிடப்பட்டு சமையல் நடந்தது. சாப்பிடுவதற்கு பசியூட்டியாக கிரேட் கிரேட்டாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டன.

பரிசுகள்
பிறந்தநாள் பரிசாக ஆடு, கோழி போன்ற பலதரப்பட்ட ஜந்துக்களும் தரப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அன்பர் ஒருவர் அங்கே அவர் எதிரே நின்று தலையை மொட்டை அடித்துக்கொள்ள ஆரம்பித்ததும் அங்கே சிலநேரம் பரபரப்பு நிலவியது. பக்கத்தில் இருந்த பந்தோபஸ்த்து அதிகாரிகள் அவரை அங்கு அப்புறப்படுத்தினார். பின்னர் விசாரித்ததில் அவர் கொப்பனாம்பட்டு கண்டராதித்தன் என்றும், சற்று மனநிலை சரி இல்லாதவர் என்றும் தெரியவந்தது.

விழா நிறைவு
வருகை தந்து சிறப்பித்த அனைத்து பொதுமக்களுக்கும் தன்னுடைய நன்றியை அந்தப் பிரபலம் தெரிவிக்க, பி.நாள் விழா இனிதே நிறைவுற்றது. பேட்டிக்காக நாம் அவரை நெருங்கியபோது பிறந்த நாள் வேலைப் பளு அதிகம் உள்ளதால் பின்னொருநாளில் சந்திக்கலாம் என்று அன்புடன் கூறி அன்பளிப்பு கொடுத்து வழியனுப்பிவைத்தார்.

எல்லாம் சரி... யாரு சார் அந்த பிரபலம் அப்படின்னு கேட்கறீங்களா..... கீழே உள்ள பாக்ஸ் உள்ளே மௌஸ் கொண்டு செலக்ட் செய்து பாருங்கள் தெரியும்.


ஹி.... ஹி... அது நான் தான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள்..


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

பட உதவி: www.pagalguy.com

Wednesday, August 4, 2010

சுய பெரியபுராணம்

சும்மா தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை சொறிஞ்சு   தொடர் பதிவுன்னு ஸ்ரீமாதவன் கிளப்பி விட்டிருக்கிறார். பெரிதாக பிரஸ்தாபிக்க இது ஒன்றும் பெரியபுராணம் இல்லை இது ஒரு சுயபுராணம். கூடிய மட்டும் அவையடக்கத்துடன் எழுதுவதற்கு முற்படுகிறேன். எவ்வளவு பேர் இதனால் ரணகளப் பட்டு வேதனைப் பட போகிறார்கள் என்று பார்ப்போம். மாதவா எங்கயோ போய்ட்டப்பா.....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆர்.வி.எஸ். மற்றும் பிராக்கெட்டில் ஒரு எம். நான் யாருக்கும் பிராக்கெட் போடுவதில்லை, சில பேர் என்னை எம் சேர்த்துக் கூப்பிடுவதால் யாம் ஆர்.வி.எஸ்.எம் ஆனோம்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இந்தப் பூவுலகில் துன்பங்கள் குறையவும், இன்பங்கள் பெருகவும் லோகச் ஷேமத்திற்காக ஆர். வெங்கடசுப்ரமணியன் என்ற திருநாமத்துடன் அவதரித்து நடமாடிக்கொண்டிருந்த என்னை, ஆறாம் வகுப்பு படிக்கும் போது பியூன் கலியபெருமாள் சின்ன சைஸ் வருகைப் பதிவேடு வாங்கி வந்து, பதிவேட்டில் ஒரு வரிக்குள் அடங்காமல் வந்த என் பெயரை சுருக்கி, வால் போல நீண்ட வெங்கடசுப்ரமணியனை  ஆர்.வி.எஸ்.எம் ஆக்கினார் என் ஆறாம் வகுப்பு ஆசிரியர்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
உண்மையில் வலைப்பதிவில் காலடி எடுத்து வைப்பது என்பதே தவறு. கையடி என்று வேண்டுமானால் சொல்லலாம். பதிவை கையால் விசைப்பலகையில் அடித்துதான் ஏற்றுகிறோம். ஆகையால் 2007 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27  ம் தேதி சுபயோக சுபதினத்தில் ஊரெங்கும் எல்லோரிடமும் அடிபடும் ப்ளாக் நம்மாலும் அடிபடட்டும் என்று ஆரம்பித்தேன். வெறும் மன்னை ஆர்.வி.எஸ் என்று இருந்த ப்ளாக் பெயர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக பெயர் சொல்லும் பிள்ளையாக இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் துவங்கியது.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு தமிளிஷ், தங்க்லீஷ், தமிழ்மணம் போன்று எந்த ஒரு திரட்டிகளிலும் என்னை சேர்த்துக்கொள்ளாமல் இருந்தேன். பதிவுலகில் எல்லோரும் நிம்மதியாக ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டே காலத்தை போக்கி வந்தனர். அக்கம்பக்கம் இருந்த நண்பர் குழாமை படுத்திக்கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர் தான் ஒரு பெரும்பாலான மக்கள் சுதந்திரமாக இருப்பதை கண்டறிந்து, திரட்டிகளில் என்னை ஐக்கியமாக்கிகொண்டு பதிவு போட ஆரம்பித்தேன். ஒரு முறை என்னுடைய ரயில் பயணங்களில் (ஜட்டியுடன்) என்ற பதிவு யூத்புல் விகடனால் தெரிவு செய்யப்பட்டு அவர்களது வலையில் முதல் பக்கத்தில் இடம் பெற்றது. இந்த செய்தியை எனக்கு திரு. ஸ்ரீராம், எங்கள் ப்ளாக் தெரியப்படுத்தி மகிழ்ச்சியூட்டினார். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஆரம்பத்தில் நம்ம வாத்தியார் சுஜாதா அவர்கள் சொன்னது போலவும், உண்மை கலந்த நாட்குறிப்புகள் புத்தகத்தில் திரு. அ.முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போலவும், நம்மை கவர்ந்த, நாம் பங்குபெற்ற, பார்த்த, ரசித்த, கே(கெ)ட்ட விஷயங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகிர்கிறோம். மொத்தமும் உண்மை சொல்லும் சொந்தக் கதைகள் அவ்வளவாக சுவாரஸ்யமாக இருப்பது இல்லை. ஆகையால் 100  % உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
உலகத்திலேயே பெரிய சந்தோசம் என்னன்னா அடுத்தவங்களை சந்தோஷப்'படுத்தி' பார்க்கறது தான் அப்படின்னு முருங்கைக்காய் இயக்குனர் திரு. பாக்கியராஜ் சொல்வார். அதுபோல மத்தவங்க சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதப்படும் ப்ளாக் இது. இந்தக் கதைகளும், கட்டுரைகளும் அம்பலத்தில் ஏறுவதற்கு தகுதியா, அல்லது இதுதான் சம்பாதித்து கொடுக்குமா. இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனை. என்ன வில்லத்தனமா கேள்வி கேக்கறாங்கப்பா. :)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
லைஃப்ல எப்போதுமே ஒன்னுக்கு ரெண்டு இருந்தா சந்தோஷம்தான், அகமுடையாள் தவிர. (அப்பாடி, இனிமே பொண்டாட்டி படிச்சாலும் பரவாயில்லை!!) எப்போ பார்த்தாலும் கணினி முன் அமர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் வேலை பார்ப்பதால், என்னுடைய கணினி அறிவுத்திறனை பெருக்குவதர்க்காகவும் அதை மற்றவர்களுக்கு காட்டுவதற்கும் இந்த வலைப்பதிவுடன் ஆங்கிலத்தில் ஒரு டெக்னிகல் ப்ளாக் எழுதுகிறேன். தமிழ் இலக்கிய பணிக்கிடையில் நேரம் கிடைக்கும் போது அதையும் முயற்சி செய்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் மீதும் நமக்கு கோபம் பொறாமை பொச்சரிப்பு போன்றவை எப்போதுமே ஏற்ப்பட்டதில்லை. ஏனென்றால் "பல் உள்ளவன் புண்ணாக்கு தின்கிறான்" மற்றும் "கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிகிறாள்" போன்ற ஜென் தத்துவங்கள் அடங்கிய சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவன் நான்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
எங்கள் ப்ளாக், ஸ்ரீராம் என்று ஞாபகம். அவருக்கு என் நன்றி. இப்போதெல்லாம் அவர் பாராட்டுவது இல்லை. ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்திருக்கலாம். பொதுவாகவே சில விஷயங்களில் நான் கொஞ்சம் psychic. ஏதோ எழுதறோமா, நாலு பேர் படிக்கறாங்களா அது போதும். அதுக்காகத்தான் மீட்டர் வச்சிருக்கேன். அது ஏற ஏற நம்மை கடியும் மொக்கையும் தன்னோட வளர்ச்சியை அதுவே பார்த்துக்கொள்கிறது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்... 
 எல்லோரும் கட்டாயம் இந்த புனித ஸ்தலத்திற்கு வாருங்கள். கொஞ்சம் புராணம், கொஞ்சம் புனைவு, ஒரே ஒரு கவிதை, சில கட்டுரைகள், சில சுவாரஸ்ய நெட் அலசல்கள், சில கெட்ட வார்த்தைகள், கொஞ்சம் ராஜா, கொஞ்சம் ரஹ்மான், நிறைய யூடுயூப் என்று போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால் பின்னூட்டமோ, இன்ட்லியில் ஓட்டோ போட்டால் சந்தோஷப்படுவேன். வேறொன்றும் இல்லை சொல்வதற்கு.  

இப்படி ஒரு மொக்கை போடுவதற்கு கூப்பிட்ட ஸ்ரீமாதவனுக்கு நன்றி. எனக்கு யாரை பந்திக்கு கூப்பிடுவது என்று தெரியவில்லை. என் வலையில் சிக்கும் அனைவரும் தொடர் போடலாம். அதற்க்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. நன்றி.

Thursday, July 15, 2010

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..

blogதீவிரமாக சரசரவென நூறு பதிவுகளைக் கடந்த தீராத.வி.பிள்ளையைப் பற்றி ஊரெங்கும் தீப்பிடித்தார்ப்போல ஒரே தீப்பொறி பறக்கும் பேச்சு. ஒரே வாக்கியத்தில் எவ்வளவு தீ. ப்ளாக் பத்திக்கும் போலருக்கு. விட்டுடுவோம். நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஆட்டோ ஸ்டாண்டில் கூட ரெண்டு பேர் தந்தி படித்துக்கொண்டு மடக்கியது போக தொங்கவிட்ட காலை ஆட்டிக்கொண்டு இது பற்றி பேசியதாக அதிகாரப்பூர்வ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிண்டி மேம்பாலம் ஏறி வடபழனி நோக்கி இறங்கிய இடத்தில் நம் பேரன் பேத்தி காலத்தில் வரப்போகிற சென்னை மெட்ரோ ரயிலின் பாதை போடும் தடுப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி இரண்டு வெளியூர் சொகுசு பஸ், இரண்டு உள்ளூர் மாநகர பஸ், நான்கு ஆட்டோ, ஒரு எல் போர்டு சிகப்பு ஆல்டோ, இரண்டு சைக்கிள், கம்பி ஏற்றி நுனியில் சிகப்புதுணி சுற்றாத ஒற்றை மாட்டு வண்டி, பத்து டன் தண்ணீர் போத்தல்கள் எடை ஏற்றிய ஒரு குட்டி யானை, ரோடிலேயே ஆபிஸ் செல்லும் ரெண்டு பேரை இலவசமாக துணியோடு குளிப்பாட்டித் எஸ்டேட் திரும்பும் மெட்ரோ வாட்டர் லாரி என்று சகலவிதமான இடையூறல்களுக்குக்கிடையில் நாலைந்து பேர் என் கார் கண்ணாடியை தட்டி திறக்கச் சொல்லி "நூறு ஆச்சு எதுவும் சிறப்புப் பதிவு கிடையாதா?" என்று கொள்ளை ஆர்வமாக மனம் திறந்து கேட்க நம்முடைய ஆர்வக் கோளாறு ஆரம்பமாகியது. அதோடு மட்டுமல்லாமல் ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, ரெடிஃப் என்று மெயில் பேதம் பார்க்காமல் அனைத்து இலவச பொது மெயில் சர்வர்களிலும் குவிந்த எண்ணற்ற கணக்கிலடங்கா கேள்விகளுக்கு குலுக்கலில் எடுத்து பதில் சொல்லாமல் குலுக்கல் நடிகை (நம்மோட மனதை குலுக்கும்/உலுக்கும் நடிகை என்ற அர்த்தத்தில் படிக்கவும்) குமீதாவை நானாட நீ ஓட  நிகழ்ச்சியின் தேநீர் ஓய்வு நேரத்தில் அணுகி, கையை காலைப் பிடித்து (கெஞ்சி கேட்டதைத்தான் இவ்வாறு எழுதியுள்ளோம் என்று தீ.வி.பி வாசகர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்) அவரது பொற்கரங்களால் கிளிக்கி தேர்ந்தெடுக்கச் சொல்லி பதில் அளித்துள்ளேன்.  கிளி சீட்டு எடுப்பது போல அவர் தேர்ந்தெடுத்த சில மெயில்களுக்கு என்னுடைய அவையடக்கமான பதிலை படித்து இன்புறுக.


சுடலை.சுண்டல்@கிண்டல்.காம் கேட்டது....
நீங்க எப்போலேர்ந்து எழுத ஆரம்பிச்சீங்க?

நான் வடுவா ஒன்றாம் வகுப்பு படிக்கறதிலிருந்து எழுதிக்கிட்டு வரேன். நீ நல்லாவே எழுதலை, காக்கா கிறுக்கலா இருக்கு, காண சகிக்கலை அப்படீன்னு அப்பவே எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சகாயமேரி டீச்சர் அவங்க தலையில அடிச்சுகிட்டே சொல்லுவாங்க.

வெட்டியான்@சும்மாகிடந்தசங்கு.காம் ஊதியது...
பதிவு எப்போலேர்ந்து எழுதுறீங்க சார்?

2007 நவம்பர்ல இந்த பதிவு மூலமாக ப்ளாக் உலக சரித்திரத்திலேயே எவருமே என்ட்ரி ஆகாத வகையில் உள்நுழைந்து உலகப் பிரசித்தி அடைந்தேன்.  அந்தப் பதிவு மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியதால சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின் இந்த வருஷம் பிப்ரவரி முதல் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன்.

படைப்பாளி@நையபுடைப்பவர்கள்.காம்  புடைத்தது...
உங்களோடது எந்த மாதிரி படைப்புகள்?

மேல், கீழ், முன் மற்றும் பின்நவீனத்துவங்கள் அனைத்தும் எழுத்தில் கொண்டுவர ஆசைப்படுகிறேன். உப்புசப்பு இல்லாமல் எழுதாதே முடிந்தால் கொஞ்சம் கரம் மசாலா போட்டு காரமாக எழுது என்று என் நண்பர் எழுத்துலக தாதா சா.....தா குருபோதனை செய்துள்ளார். அவருக்கு குருவணக்கம் செய்யும் பொருட்டு அப்பப்போ அசைவமும் சைவத்தோடு சேர்த்து எழுதுகிறேன். நான் அக்மார்க் தூய தமிழில் எழுதினால் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போல் உள்ளது என்று தாய்லாந்தில் சியாங் மாய் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்யும் தூக்டா எனக்கு பாராட்டு கடிதத்துக்கு பதில் என்னைப் பற்றி எட்டுப் பக்க கட்டுரை வரைந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார். விரைவில் அதுவும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காமவம்பன்@குசும்பு.காம் வம்படித்தது..
நீங்க காரோட்டும் போது ரோட்ல போறவர பொண்ணுங்களை வச்சகண் வாங்காமவும் இமைக்காமலும் திருட்டுத்தனமா கள்ளப்பார்வை பார்க்குறதாகவும், சில சமயங்கள்ல சடார்னு பின்னால திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிகிட்டதாகவும் அதனாலதான் உங்க வலைதளத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை அப்படின்னு பொருத்தமா ஒரு பெயர் சூட்டினதா ஊர்ல எல்லாரும் கும்பலா கூடி நின்னு பேசிக்கிறாங்களே அது உண்மையா?

இந்தக் கேள்விக்கான விடையை சில மாதங்களுக்கு முன்னாடியே மயிலை மாங்கொல்லையில் போஸ்டர் அடித்து கலாமை கூப்பிட்டு மேடை போட்டு ஒரு பொதுக்கூட்டத்துல சொல்லிட்டேன். அது இங்க இருக்கு. படித்து புரிந்துகொள்ளுங்கள்.

வாலிபகுறும்பன்@வயசுப்பையன்.இன் லிருந்து...
நீங்க எழுதற கார்த்திக்கின் காதலிகள் தொடர் பற்றிய ஒரு கேள்வி. எல்லோரும் அது உங்களோட உண்மைக்கதை சொந்தக்கதை நொந்தக்கதை என்கிறார்களே... இதைப் பற்றி உங்கள் கருத்து...

இந்த கதைகளுக்கான குறிச்சொல்லே புனைவு அப்படின்னு தான் போட்டிருக்கேன். பொதுவா கதைன்னு சொன்னாலே இந்த சமூகம் கை கால் மூக்கு நாக்கு வச்சு பேசும். இதுல என்னை வச்சு பேசுது. அதோட மட்டுமல்லாமல் என்னை நேர்ல பார்க்கிறவங்களுக்கு என்னோட தகுதி என்ன என்பது நல்லா தெரியும். கதையில வர எல்லாப் பொண்ணுங்க கூடவும் இந்த நையாண்டி உலகம் எவ்வளவுதான் இணைத்து கிசுகிசு பேசினாலும், என் தங்கத் தாரம் சொல்றா "உங்க மன்மதனையொத்த அழகுக்கு நான் ஒருத்தி மாட்டிகிட்டதே அதிகம்"ன்னு.

உயிரைவாங்கும்நண்பன்@கால்வாரி.காம் வாரிவிட்டது..
நீங்க ப்ளாக் எழுதறதப் பற்றி உங்கள் நண்பர்கள் கருத்து.. யாராவது ஒரு நண்பரின் உள்ளக்கருத்தோடு எடுத்துக் கூற முடியுமா?

சமய சந்தர்ப்பங்கள் பார்க்காம எந்நேரமும் ஜில்லெட் மாக் 3 சவர பிளேடு மாதிரி என் நண்பர்களை வாயாலேயே வகுந்ததின் விளைவாக, ஐயா சாமி தாங்கமுடியலை, நீ இதையெல்லாம் ப்ளாக்கா எழுதுப்பா ராஜா. நாங்கெல்லாம் அங்க போய் படிச்சிக்கிறோம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களோட ஊக்கத்தின் சிறப்புப் பரிசாக அவங்களுக்காகத்தான் இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். 
உங்களோட உள் கேள்விக்காக சிநேகிதர் ஒருவரின் கருத்துக்காக நண்பர் ரவியிடம் தொலைபேசியில் கேட்டபோது....
(கேள்வி கேட்ட பின்னர் அவர் குரல் சற்று கம்மி குமுறியது. நம் போன் கேள்விக்கு வெறிகொண்டு அவர் எழுதிய மின் மடலை அக்ஷரம் பிசகாமல் அப்படியே வாசகர்களின் பார்வைக்கு கீழே தந்துள்ளோம்)
  
எப்போதுமே ஓயாம ஒரு ரூபா காயினை தகர டப்பால போட்டு ஆட்டற மாதிரி  பேசிக்கிட்டே இருப்பான். நம்மால காது கொடுத்து கேட்க முடியலைன்னு ப்ளாக் எழுதுன்னு சொல்லிட்டோம். ஆனா இப்பதான் ஹிம்சை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு. முன்னாடியெல்லாம் ஒரு முறை ஒரு விஷயத்தை சொல்வான். இப்போ ஒரு தடவை சொல்லிட்டு இதையெல்லாம் ப்ளாக்ல எழுதியிருக்கேன் படிங்க, படிங்கன்னு நச்சரிக்கறான். ரத்தம் வர சொரியறான். ஒரு ப்ளாக் எழுதி ஊர் முழுக்க போன் போட்டு "மாமா இது எழுதியிருக்கேன்", "மச்சான் அது எழுதியிருக்கேன் படிங்கடா" அப்படின்னு வேற பிடுங்கறான். தொல்லை தாங்காம  சரி படிச்சோம் அப்படின்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தா போர்டு எக்ஸாம் மாதிரி அவன் எழுதின ப்ளாக்லேர்ந்து கேள்வி வேற கேட்டு நாம படிச்சோமான்னு டெஸ்ட் வச்சு படுத்தறான். இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலமோ?
(மரண தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நண்பரின் கண்ணீர்த் துளிகள் மின்மடலிலும் கூட கொஞ்சம் ஈரம் செய்திருந்தது)
அநியாயவாதி@குடும்பத்தில்கும்மியடிப்பவர்.காம்  கும்மியடித்தது...
இதைப் பற்றி உங்க மனைவி என்ன நினைக்கறாங்க?

ரொம்ப பெருமையா இருக்கு அப்படின்னு முதல்ல சொன்னாங்க. எதுக்கு அப்படின்னு கேட்ட போது முன்னாடியெல்லாம் உங்களுக்கு எதிர்த்தாப்ல, கூப்பிடற தூரத்தில இருக்கறவங்களை தான் பேசிப் பாடா படுத்துவீங்க. இப்ப ப்ளாக் ஆரம்பிச்சு பிரபஞ்சத்ல இருக்குற சகலவிதமான தமிழ் எழுதப் படிக்க தெரிந்த ஜீவராசிகளையும் படுத்த முடியும் அப்படின்னு நீங்க நிரூபிச்சதால உங்களை கட்டிகிட்டதற்காக நான் ரொம்பவே பெருமைப்படறேன். அப்படின்னு சொல்லும்போது அந்தப் பெருமை அவ கண்கள்ல மின்னுறதை நான் கண்கூடாக பார்த்தேன்.

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. பதில் எழுதி(அடித்து) கை வலிப்பதாலும், இது எப்போதுமே எவர் கிரீன் சப்ஜெக்ட் என்பதால் இருநூறு, முன்னூறு, ஐநூறு, ஆயிரம் போன்ற நூற்பதிவுகள் கொண்டாட்டத்திற்கு கவனித்து கொள்ள(ல்ல)லாம்  என்று இப்போதைக்கு இப்பதிவு இத்துடன் நிறைவடைகிறது. 

(அப்பாடி! end கார்டு போட்டான்டா என்று ஏகமனதாக எல்லோரும் பெருமூச்சு விடுவது பெரிய ஆலமரத்தையே சாய்த்துவிடும் போலிருக்கிறது. சே. விவஸ்தையே கிடையாது end சொல்லியும் இன்னும் எழுதறான்பா... அவன் கையிலேர்ந்து கீபோர்டை பிடுங்குங்கப்பா.. என்று நாலு பேர் ஓடி வருகையில்.. நான் எஸ்கே..................ப்)
பட உதவி: http://blogs.worldbank.org/

Sunday, June 20, 2010

ராவணன் - ஒரு உண்மை ரிப்போர்ட்


மணி என்னிலேர்ந்து ஜூன் 18 முதல் அப்படின்னு விளம்பரம் போட ஆரம்பிச்சாரோ அன்னிலேர்ந்து நானும் டிக்கெட் பிச்சை எடுத்துப் பார்க்கிறேன் ஒன்னும் பேர மாட்டேங்குது. பல பிரஸ் நண்பர்கள் கிட்ட கூட திருவோடு ஏந்தி பார்த்துட்டேன். என்னிக்கு வேணும் அப்படின்னு கேட்டுட்டு, எந்த நாளுக்கு கேட்கறோமோ அன்னிக்கி கிடைக்கறது கஷ்டம், ஆனா பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஸ்டாண்டர்ட் டயலாக் விடும் போது ஒரு பாணம், ஒரு மனைவி, ஒரு சொல் அப்படின்னு வாழ்க்கைல இருக்கணும்னு எ.கா இருந்துட்டுப்போன த்ரேதா யுக ராமன், பத்து தலை ராவணனுக்கு மேலோக டிக்கெட் கொடுத்தவண்டதான் சினிமா டிக்கெட் கேட்கணும் போலருக்கு.   நவீன ராம, ராவணாதிகளை பெரிய ஸ்க்ரீன்ல பார்க்கலாம்னா முடிய மாட்டேங்குதே. எஃப்.எம் ரேடியோக்கல்ல பாடல்களுக்கு நடுவில் விக்ரம் "ஏலே, ராவணன்லே...." என்று அடித்தொண்டையில் கமறி பேசும்போது "ஏலே, கிடைக்கலலே...." என்று சொல்லி பார்த்துக்கொள்கிறேன்.
 
என் கிட்ட ஹை ஸ்பீட் இன்டெர்நெட் இருக்கு, சிரிக்கிற காந்தி படம் போட்ட தாள் இருக்கு, சத்யத்ல போய் பார்க்கறத்துக்கு ஒரு நாலு கால் வண்டி இருக்கு, நாக்கை தொங்க போட்டு நாலு மணி நேரம் ஸ்க்ரீன் நோக்க கொள்ளை ஆசை இருக்கு. இவ்வளவு "இருக்கு" இருக்கிற இந்த பரம ஏழைக்கு டிக்கெட் மட்டும் தான் இல்லை, படம் பார்ப்பதற்கு. நான் பெரிய எழுத்தாளன் இல்லை, ஆகையால் யாரும் ஒசியில் டிக்கெட் ஏற்பாடு செய்யவேண்டாம் என்று வலது கை ஆள் காட்டி விரலை நீட்டி முன்னும் பின்னும் ஆட்டி கேட்டுக்கொள்கிறேன்.
 சுகாசினி வசனம், சிவன் கேமரா, பிரம்மாவும் பெருமாளும் தயாரிப்பு அப்புடி இப்புடின்னு  பதிவுலக ஜாம்பவான்களின் பட விமர்சனங்களை படித்து பார்க்கிறபோது, படம் பப்படமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் ரெண்டு நாள் போனா சத்யம் தியேட்டர்லேர்ந்து ஆந்த்ரா பக்கத்துல இருக்கிற பட்டாபிராம் வரை வீட்டுக்கு வந்து கதவை தட்டி டிக்கெட் கொடுப்பாங்க போலிருக்கு. இடைத்தேர்தல்ல ஓட்டுபோட காசு கொடுக்குற மாதிரி. பார்க்கலாம் பாலம் கட்டின D. ராமன் B. E (நம்ம சீதா புருஷன் தான்), காதில் விழுந்ததான்னு.

இதுல என்ன உண்மை ரிப்போர்ட்ன்னு கேட்டா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்த பின்பு என்னுடைய கலை விமர்சனம் பதிவேற்றம் செய்யப்படும்.

பட உதவி: www.behindwoods.com

Thursday, May 6, 2010

ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி


இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. அரை செஞ்சுரி அடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு விளையாட்டாக இந்த தீ.வி.பி ஆரம்பிக்கப்பட்டது. என்னுடைய அறுவை தாங்க முடியாமல் நண்பர் ரவியின் தூண்டுதலால் எழுத ஆரம்பித்த இந்த ப்ளாக் இன்று ஐம்பதை தொட்டிருக்கிறது. பால்ய காலங்களில் கிரிக்கெட் விளையாடும் போது ஐம்பது எடுத்தால் அன்று இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லோரையும் சொறி சொறி என்று சொறிவது போல இப்போது நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. இவ்வளவு நேரம் செய்தது அதுதான் என்று நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு. சரி விஷயத்திற்கு வருகிறேன். இந்த ஐம்பதாவது பதிவை பாராட்டி திரி லோக சக்ரவர்த்தி இம்சை அரசன் 23-ம் புலிகேசி அறிவித்திருக்கும் சில பரிசில்களை வெல்வதற்கு கீழே அவருடைய அரசாணையை பதிப்பித்திருக்கிறேன். வாசியுங்கள்.

இம்சைபுரி
6/5/2010

ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி. இதுவரை நேருக்குநேர் எல்லோரையும் பேசியே இம்சித்து வந்த ஆர்.வி.எஸ் என்னும் இந்த அன்பர் ஒரு நண்பரின் தூண்டுதலால் வலை உலகத்தில் நுழைந்து அவரது  வீடு கடந்து, அலுவலகம் கடந்து, ஏரியா கடந்து, ஊர் கடந்து, மாநிலம் கடந்து, தேசம் கடந்து ஒரு தீவிரவாத செயலாக எல்லோரையும் எழுதியே துன்புறத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்வக் கோளாறினால் ஐம்பது முறை இந்த செயலை செய்து மகிழ்ந்திருக்கிறார். நமது தேசத்தின் தலை சிறந்த பத்திரிக்கையாளரான ஒண்டிப் புலிக்கு அவர் அளித்த சிறப்பு பிரத்யேக பேட்டியில், நிற்கும் போதும், நடக்கும் போதும், மற்றவர் வாய் பார்க்கும் போதும், காலை நடையின் போதும், கடன்களை கழிக்கும் போதும், மூச்சு விடும் போதும், ப்ளாக் ப்ளாக் என்ற ஒரே சிந்தனையோடு ஒரு வித 'வெறிச்' செயலாக இதில் ஈடுபட்டதாகவும், பலபேர் இதை படித்து துன்புறுகையில் ஒரு விதமான உளமார்ந்த மகிழ்ச்சி தனக்கு ஏற்ப்பட்டதாகவும் தெரிவித்தார். அவரின் இந்நற்ச்செயலை பாராட்டி இந்த கீழ் கண்ட நிகழ்ச்சிகளையும் /திட்டங்களையும்/ பரிசில்களையும் அறிவித்து ஆணையிடுகிறேன்.

1: ஆர்.வி.எஸ்ஸை பாராட்டும் விதமாக எல்லா ஊரிலும் பால் காவடி மற்றும் பன்னீர் காவடி போன்றவற்றை எடுத்து அவரின் இந்த மனித குல மேம்பாட்டு சேவை தொடர பூரண ஆயுளுக்கு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

2: எல்லா கள்ளுக் கடைகளிலும் ஐம்பது சத விலைக் கழிவுடன் சாராயத்துடன், 'அக்கா மாலா' மற்றும் 'கப்சி' போன்ற பானங்கள் இலவசமாக வழங்கப்படும்.

3: ஐம்பதில் ஆசை வரும் அனைவர்க்கும் அவரவர்கள் விருப்பத்திற்க்கேற்ப அந்த ஆசைகளை ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்கள் தீர்த்து வைப்பார்கள். அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தி முடிக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு "மாமா" பஞ்சாயத்து தலைவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். (மா மா என்றால் பெரிய பெரிய என்று அறியுமாறு அரசவைப் புலவர் பானபத்ர ஓணாண்டி தெரிவித்துள்ளார்)

4: ஆணிலும் பெண்ணிலும் ஐம்பது சதவீதமாக இருக்கும் அனைவருக்கும் மாதம் தலா ஐம்பது பொற்காசுகள் பரிசாக பெறுவார்கள். கஜானா காலியானால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

5: ஊருக்கு வெளியே எச்சரிக்கை கொடியுடன் தீ.வி.பியில் இருக்கும் சிறுகதைகளை நாடகமாக நடித்துக் காட்டி கலைச் சேவை புரிய அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நடிகர், நடிகைகளின் கலை விழாக்களுக்கு அவருக்கு நேரமில்லாததால் இந்த ஏற்பாடு என்று மங்குனி மந்திரி தெரிவித்தார்.

6: சிறைக்காவலில் இருக்கும் ஆயுள் கைதிகள், தீ.வி.பி ப்ளாக்-ஐ படித்து அதில் உள்ள சில நுணுக்கமான பதிவுகளை ( உதா: நம்பர் ப்ளாக்) படித்து புரிந்து கொண்டால் அவர்களுக்கு விடுதலை வழங்குமாறு உத்தரவிடுகிறேன்.

7: இருபத்து ஐந்து வயதே நிரம்பியிருக்கும் ஆர்.வி.எஸ் என்ற இளைஞன்,  ஐம்பதை அடையும் போது அவருக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் உதவித் தொகையாக அவரது இந்த கலைச் சேவையை பாராட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். 

நன்றி.

ஒப்பம் ( 23-ம் புலிகேசி)

இதைப் படிக்கும் வாசகர்களும் இதே போல சிலபல பரிசுகளை அறிவித்து ஆர்.வி.எஸ்ஸை பாராட்டலாம், பின்னூட்டமாக...

Friday, March 26, 2010

வெள்ளை மாளிகை பேனாக்கள்

இணையத்தில் உலா வந்தபோது கீழே கண்ட வீடியோவை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதிகள் எந்த ஒரு முக்கியமான ஒப்பந்ததிலோ, திட்டத்திலோ, அறிக்கைகளிலோ கையெழுத்திட குறைந்தது சுமார் இருபது பேனாக்களை மேஜையில் அடுக்கி அதில் ஒவ்வொன்றாக எடுத்து ஒப்பம் இடுகிறார்கள். இதைப் பற்றி வெள்ளை மாளிகை காரியதரிசி லிஸா பிரௌன் நம்மிடம்(?) தெரிவிக்கையில்...



All the President's Pens from White House on Vimeo.

**
இதையொட்டியெழுந்த  சில பேனா சிந்தனைகள்.....

ஐந்தாம் வேதமாக போற்றப்படும் மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க கஜமுகனை பணித்தார் வேத வியாஸர். தான் எழுதும் வேகத்திற்கு சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு ஒரு பக்க தந்தத்தை உடைத்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டு ஒரு உன்னதமான இதிகாசத்தை உலகிற்கு அளித்தார்கள்.

**

நமது தமிழ்நாடு அரசாங்கத்தில் மேலதிகாரிகள் பச்சை வண்ண மசியில் கையெழுத்திட்டு தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். கசட்டேட் ஆபீசர்கள் (Gazetted Officers) இந்த பச்சை வண்ண எழுதுகோலால் கையொப்பம் இடுவார்கள். ஐம்பது ரூபாய் முதல் ஐம்பது 'எவ்வளவோ' வரை அந்தப் பேனா தனது வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

**

ஐந்தாம் வகுப்பில்தான் பேனா உபயோகிக்க நான் அரிச்சுவடி முதல் படித்த பள்ளியில் அனுமதித்தார்கள். மசிப் பேனாவில் எழுதினால் தான் கையெழுத்து அழகாக வரும் என்று அவர்கள் கருதியதால் அனைவரையும் மசிப் பேனாவினால் எழுதச்சொன்னார்கள். தலையெழுத்து நன்றாக இருக்க எந்த பேனா என்று இப்போதும் எவருக்கும் தெரியவில்லை. வெள்ளை சட்டையில் பாக்கெட்டின் கீழிருந்து மேல் வரை நீலநிற மசிக்குட்டைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். மதியம் தயிர் சாதம் சாப்பிடும்போது விரலிடுக்குகளில் இருக்கும் நீலம் சாததிலும் கலந்து நீல தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறோம். ஆங்கில பாடம் போதித்த ஆரோக்கியசாமி சாரின் இருதயத்திலிருந்து குருதி வழிந்தது போல அவருடைய சிகப்பு மசிப் பேனாவிலிருந்து ஒழுகிய திட்டுக்கள் சட்டை மேல் இருக்கும். என்னைப்போன்றவர்களுக்கு ஆங்கிலம் கற்ப்பித்த பலன் அவருக்கு நெஞ்சின் மேல் கிடைத்தது என்று எனக்கு இப்போது புரிகிறது. ஆண்டுப் பரீட்சை முடிந்தப்பின் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு பேனாவில் மீதம் இருக்கும் மசி முழுவதையும் அடுத்தவரின் வெள்ளை சட்டையில் உதறி அடித்து இன்புறுவர். சிலர் பள்ளி முக்கில் இருக்கும் தாத்தா கடையில் காசு கொடுத்து புது பிரில் இங்க் பாட்டில் வாங்கி வந்து பேனாவில் ஊற்றி ஊற்றி அடிப்பார்கள். அன்று அவருக்கு இங்க் விற்பனையால் அவருடைய கடை அந்த வருடத்தின் அதிக பட்ச வருமானத்தை ஈட்டி  அந்த கணக்காண்டின் லாபத்தை  சம்பாதிக்கும். அந்த வருடம் பஞ்சு புத்தம் புதிய மசிப் புட்டியை வாங்கி வந்து அப்படியே சட்டென்று திறந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது போல எனக்கு செய்தான்.

**

ஷங்கர் தனது முதல்வனில் 'கொஞ்ச நேரம் ஒதுக்கி... கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்...' என்று கெஞ்சி கொஞ்சிய மனிஷா கொய்ராலாவின் முதுகில் அர்ஜுனை எழுதவைத்து அரச காலத்து பேனாவைக் காட்டினார். இறகு கொண்டு எழுதும் பேனா அது.

**

வங்கிகளும் இன்னபிற பொது மக்கள் கூடும் , பேனா தேடும் இடங்களிலும் ஒரு ரூபாய் பந்து முனை ரீபில் பேனாவைக் கிரில் ஜன்னலில்  கயிறு கொண்டு அதைக் கட்டிப் போட்டு  பத்திரப்படுத்தும் இடங்களும் என் நினைவுகளில் வந்து கிறுக்கிச் சென்றது.

Thursday, March 4, 2010

இவுரு பெரிய ஹீரோ......

சினிமாவில் எண்ணற்ற, வாழ்வில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால்.....

ஒரு தேசமே திரும்பிப் பார்க்கும் நிஜ நாயகனை நீங்கள் பார்க்க ஆசையா?
அந்த பிளேட் கழுவும் பெண்மணி ஆச்சரித்துடன் பார்க்கும் நாயகனை நீங்கள் பார்க்க ஆசையா?
பேரன் பேத்தி புள்ள குட்டியோட ஒரு குடும்பமே நடுக்கூடத்தில் அமைதியாக உட்கார்ந்து
ஆர்வமாக பார்க்கும் அந்த ஹீரோவைப் பார்க்கனுமா?
பல்பொருள் அங்காடியில் வைத்தகண் வாங்காமல் அந்த இளைஞன் பார்க்கும் அவரை நோக்கனுமா?
அந்த கால்பந்து அணி ஒன்றாக வாழ்த்து கோஷமிடும் அவரை கண்ணார காண வேண்டுமா?
அந்த வயதான செனட் பெண்மணி அந்த நாயகனை ஊருக்கு அறிமுகப்படுத்தும் அந்த அற்புதக் காட்சியை காண ஆவலா?
 
மேலே குறிப்பிட்ட அனைத்தும் வீடியோ காட்சிகளாக உங்கள் தரிசனத்திர்க்காக கீழே...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails