Monday, October 18, 2010

மன்னார்குடி டேஸ்


ஆர்.கே நாராயணின் 'மால்குடி டேஸ்' மாதிரி எனக்கும் 'மன்னார்குடி டேஸ்' அப்படின்னு என் சொந்த வூர்ப்புராணம் எழுதனும்னு ஆர்வபடுத்தி உசுப்பிவிட்டது என்னோட ஆபீஸ் தான். ஆங். தோ பார்டா. உனக்கு என்ன தெகிரியம். நேத்து ஆனா ஆவன்னா படிச்சவன்லாம் எழுத வன்ட்டாம்ப்பா. நான் இப்படி தமிழ்க் கொலை செய்யறது என்னோட ஹை ஸ்கூல் தமிழ் பண்டிட் ஸ்வாமிநாதனுக்கு தெரிந்தால் அவர் நிச்சயம் தமிழ் சொல்லிக்கொடுக்கறதுக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு பிராணஹத்தி பண்ணிப்பார். ரவி, ஜெகன் போன்ற ஆபீஸ் நண்பர்கள், உணவு இடைவேளைகளில் நான் கொடுத்த ஊர் 'டார்ச்ச்ச்.....சர்' தாங்காமல் எழுத என்னை உசுப்பேத்திவிட்டதால் உங்களை ரணகளமாக்க வந்திருக்கிறேன். எல்லாப் புகழும் ஏத்தி விட்டவர்களுக்கே!

அ. முத்துலிங்கம் தன்னுடைய லோகாயத வாழ்க்கை அனுபவங்களை தொகுத்த புத்தகத்திற்கு "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" என்று பெயர் சூட்டியிருப்பார். நம்ம வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் நடந்ததை அப்படியே எழுதினா உப்புசப்பில்லாமல் இருக்கும் என்று சொல்லி அதனால் அதில் கொஞ்சம் கற்பனையும் தட்டிப் போட்டு எழுதியிருப்பார். அதுபோல, இந்த மன்னார்குடி டேஸ் நினைவிலும் கண் மூடி கனவிலும் நான் பார்த்த நாட்கள். அதனால் இதைப் படித்துவிட்டு "டேய்.. ஆர்.வி.எஸ்... பாவி..இப்படி எழுதிப்புட்டியே டா... நீ நல்லா இருப்பியா.. என் பாவம் உன்னை சும்மா விடாது...ஏழேழு ஜென்மத்துக்கும் நீ மவுன்ட் ரோடு மாநாட்டு ட்ராஃபிக்ல சிக்கி சின்னபின்னாமாகி சீரழிஞ்சி போய்டுவே.. ஆட்டோகாரன் உன் வண்டி பூரா கோடு போட.. சிக்னலுக்கு சிக்னல் நீ போலீசுக்கு கப்பம் கட்ட.. " என்று சம்பந்தப்பட்டவர்கள் வாய்க்குவந்தபடி சபிக்காதீர்கள். பேண்டை ஸ்டான்ட்டாக்கி முதுகில் அருவாள் சொருகி வெட்ட துரத்தாதீர்கள். பிடித்தால் ஓ.கே. பிடிக்கவில்லை என்றால் "யப்பா சாமி... உன் திக்குக்கு ஒரு கும்பிடு" என்று ஒன்று பெரிதாய்ப் போட்டுவிட்டு வேறுபக்கம் ஓடிவிடுங்கள். தொல்லையின் எல்லை வெகு தூரத்தில் இல்லை. ஜாக்கிரதை!!!

madhilபொதுவாக யாருக்குமே தன்னோட 'இளமை' காலங்கள் பற்றிய நினைப்பு 'ஆட்டோகிராஃப்' சேரன் போல மனசுக்குள்ளயே 'சைக்கிள்'  சுத்திக்கிட்டு இருக்கும். ஆனா அதை லெக்ஷ்மி மாதிரி அசை போட நேரமோ (லெக்ஷ்மி என்பது ஊரில் என்னோடு சேர்த்து என் பெற்றோர் வளர்த்த பசு மாடு என்று அறிக.) அல்லது பல பழைய கருப்பு வெள்ளை சினிமாக்களில் வருகிற மாதிரி "டி...டி...டி...ர்.ர்.ர்..ரி.ங்.." என்று சவுண்ட் விட்டு 'கொசுவர்த்தி ஃபிளாஷ்பேக்'  ஓட்டி பார்க்கவோ நம்மில் பலருக்கு நேரம் இருக்காது. 

அடிக்கடி என்னுடைய நினைவுகளில் வரும் நான் பம்பரமாயும், கோலியாயும், கிரிக்கெட்டாயும் ஓடியாடிய என்னோட நகரமும், பிஞ்சிலிந்து பழுக்கும் வரை நான் சென்ற ஸ்கூல், டைப் இன்ஸ்டிடுயூட்,  கல்லூரி போன்ற சர்வ கலாசாலைகளும், கிரிக்கெட் மட்டையை பின்னால் சைக்கிள் காரியாரில் செறிகிக்கொண்டு கவாஸ்கர், கபில்தேவ்,ஸ்ரீகாந்த் ஆகும் கனவுடன் சுற்றிய வீதிகளும், மதிலழகு கொண்ட கோவிலில் வீற்றிருக்கும் ராஜகோபாலனின் மோகினி அவதாரப் புன்னகைகளும், மூடு பனி நிறைந்த மார்கழி மாதங்களில் 'எம்பாவாய்' என்று மட்டும் கூட்டத்தோடு கரைந்து சுடச்சுட வெண் பொங்கல் வாங்கி தின்ற வடக்குத்தெரு ராமர் கோவிலும்.................

இரவு பகல் பாராமல் எங்கள் பாரத்தை கூண்டோடு தாங்கிய வடக்குத்தெரு குட்டிச் சுவர் மதிலும், அப்பு, ஸ்ரீதர், ஸ்ரீராம்கள், உப்பிலி, கோபால்கள், சரவணன், அசோக், கோபிலி, மற்றும் பலரும் (பெண்கள் பெயர்களை எழுதக்கூட என் கீபோர்டுக்கு நாணமாகையால் எழுதவில்லை), எம்.சி.ஏ படிக்கும்போதே 'c ஒரு sea' என்று நான் Kernighan and Ritchie போல பலருக்கு  போதித்த பிட்ஸ் கம்ப்யூட்டர் சென்டரும், ஸ்ரீ ராம பிரானின் பர்த் டே(ஸ்ரீராமநவமி) கலக்க்ஷனும் கொண்டாட்டமும்,  ரவி சார் வீடும்('காக்காஸ் பார்'), இளவயதில் எனக்கு கணக்கு பண்ண (Maths tuition) சொல்லிகொடுத்த ராதா கண்ணன் மாஸ்டரும், 'வயதுக்கு' வரவைத்த லக்ஷ்மி  தியேட்டர் 'காலை' காட்சிகளும், பெரிய கோவிலின் பங்குனி பெருவிழாவும் அதன் விடையாற்றி கலை நிகழ்ச்சிகளும்....................

எல்லா சம்மரிலும் வாய்க்கால் வரப்பு கிரவுண்டு என்று கிடைத்த இடத்தில் எல்லாம் வஞ்சனை இல்லாமல் நடக்கும் கிரிக்கெட் டோர்ணமென்ட் திருவிழாக்களும், சேரங்குளம் மாமாக்களுடன் விளையாடிய சங்கராந்தி பண்டிகை கால கிரிக்கெட் தொடர் போட்டிகளும், எனக்கு பந்து போடவும், மட்டை பிடிக்கவும் கற்று கொடுத்த  ராமு சாரும், பெரிய கோயில் மேலை கோபுரவாசலில் விளையாடிய தெற்கு வீதி ரப்பர் பால் மாட்ச்களும், இன்னும் பல '...களும்' என்னுடைய இன்பக் கனாக்களில் ஓயாமல் கொடுத்த இன்னலினால், ஜெகத்தீரே! தயாராக இருங்கள். இது என்னுடைய 'கன்னி' முயற்சி. இந்த கன்னி முயற்சியை கனியாக்கும் ஆவலுடனும், அடியேனுடைய Nostalgia நாஸ்தியாக இல்லாமல் டேஸ்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தும்பிகையானை துதித்து ஆரம்பிக்கிறேன். பொறுத்தருள்க!!

நாளை முதல் கதைகள்.....


(அப்பாடி! ஒருவழியா முன்னுரையை முடிச்சாம்ப்பா என்று பல பேர் விட்ட பெருமூச்சு "புஸ்... புஸ்..." என்று நல்லபாம்பு கணக்காக என் காதில் சீறுகிறது)

ஃபோட்டோ குறிப்புகள்:  மேலே நீங்கள் அண்ணாந்து பார்த்தது எங்களூர் பெரிய கோவில். ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில்.  இரண்டாவது படத்தில் குளத்தோர கோவில்(ராமர் கோவில்) பக்கத்தில் இருக்கும் அந்த பெரிய வேப்பமரத்தின் நிழலில் உள்ளது தான் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த நாங்கள் ராப்பகல் அகோராத்திரியாக அரட்டை அடித்த மதில் கட்டை.

Saturday, October 16, 2010

ஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்

டைட்டில் பேச்சு: கொஞ்சம் புனைவு; கொஞ்சம் நினைவு சேர்ந்து செய்த கலவை இது. நிஜத்திற்கும் டூப்பிர்க்கும் ஆங்காங்கே விகிதாசார வித்தியாசங்கள் இருக்கும். இதில் உண்மை இல்லையா? என்று கேட்டால். இல்லை. அதாவது 100 சதம் உண்மை இல்லை. ஆனால் 100 சதம் பொய்யும் இல்லை. இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் டூப் கலந்து டுபாக்கூராக வெளியிடப்படுகிறது. இதில் நீ யார் அவன் யார் எந்த காலம் என்ன நேரம் என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படாது. மூச்.
(அப்பாடி அசரீரி பேசி ஒரு சுத்து சுத்தி விட்டாச்சு.. இனி மேலே படிங்க... மேலே படிங்கன்னா கீழே படிங்கன்னு அர்த்தம். ஸ்... அப்பா... தாங்கலையே டார்ச்சர்.......)
  
எம்ட்டன் ராயர் வீட்டு மூன்று படி, நாராயணன் வீட்டு ஐந்து படி, ரோஹினி வீட்டு ஏழு படி, டீச்சர் வீட்டு  ஒன்பது படி(எங்களது) என்று பல்வேறு தினுசு கொலுக்களை ஒவ்வொரு நாளும் கண்டு களிப்போம். ஒரே  கொலுவை ஒன்பது நாளும் வித விதமான சுண்டல்களுக்காக ரசிப்போம். கிழக்கு தெருவிற்கு நிகராக வடக்கு  தெருவிலும் கொலு இருக்கும். மாலை வேளைகளில் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு பிரதக்ஷிணமாக  தென், மேல், வட கரைகளை சுற்றி வந்தால் இரவு சாப்பாடு நிச்சயம் தேவை இருக்காது. ஆனால் பாட்டி "என்னாடா, பிச்சைக்காரன் திருவோடு மாதிரி..." என்று நக்கலடிப்பாள்.

kolu1கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டும். பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும். ஊரில் நிறைய தோட்ட தரணிகளும், சாபு சிரில்களும் அதிகம். நாராயணன் வீட்டு கொலு தோட்டா தரணி அமைத்த  செட் போல என்றால் வடகரை ராமன் அண்ணா ஆத்துது தேவதச்சன் மயன் எழுப்பியது போல இருக்கும். கொலு  வைப்பதற்கு பல வீடுகளுக்கும் எங்களுடைய சமுதாய சேவை தேவைப்படும். "நானா உங்கம்மா படி எறக்கிட்டாளா?" "கோந்து உங்காத்து ஸ்வாமி எல்லாம் பொட்டிய விட்டு எறங்கிட்டாளா ?" என்று பந்து அடித்தோ அல்லது கிட்டி  புல்லால் வலி கொடுத்த வீடெல்லாம் எங்களுடைய நவராத்திரி ஸ்பெஷல் கவனிப்பால் அல்லோல்படும். அட்டை டப்பாக்களை  வீடாக்கி  பார்க்கில் வைப்பது, தெர்மாகோல் கொண்டு பார்க் காம்பவுண்ட் சுவர் கட்டுவது, கலர் ஜிகினா பேப்பர்கள்  ஓட்டுவது உள்ளிட்ட சகல வேலைகளையும் செய்வோம். நாராயணன் வீட்டு கொலுவில் அரை வண்டி அளவிற்கு  கொலு பக்கத்தில் மண் அடித்து அண்ணாமலையையே செய்து உச்சியில் ஜீரோ வாட் பல்பில் கார்த்திகை தீபம் ஏற்றிவிடுவார்கள். ராமன் அண்ணா வீட்டில் ஹோமகுண்டத்தை குளமாக்கி மோட்டார் போட் விடுவார்கள்.  சென்னை மாதிரி ஷோ கேஸ்ஸில் கணேசர், லக்ஷ்மி, சரஸ்வதி மூவரையும் நிறுத்தி சிக்கன கொலு வைப்போரும் உண்டு.

சுண்டல் அவ்வளவு எளிதாக நிறைய கிடைக்காது. என்னதான் நாம்பளும் பரோபகாரியாக இருந்து கொலு வைத்திருந்தாலும், "ராமன் அண்ணா ஆத்து கொலு தான் நாலு கரையிலும் சூப்பர்" என்றால் இரண்டு கரண்டி புட்டு கூட கொடுப்பாள்  மன்னி. இந்த மதி ஆலோசனைகலுக்கெல்லாம் ஸ்ரீராம் தான் தலைவன். சூரன். அதி பயங்கர எக்ஸ்பெர்ட். அவனிடம் டிப்ஸ் வாங்கிக் கொண்டு தான்  கொலு ரௌண்ட்ஸ் புறப்பட வேண்டும். யார் யாரை எப்படி தன்ன கட்ட வேண்டும் என்று கோனார் நோட்ஸ் போடும் அளவிற்கு  அவனுக்கு தெரியும். வீட்டில் உள்ள வாண்டுகளை வித விதமாக மேக்கப் செய்து எல்லோர் வீட்டுக்கும் கொலு  அழைப்பு அனுப்புவார்கள். எவ்வளவு அலங்காரம் செய்தாலும் ஒப்புக்கு கூட கண்ணனை ஒத்து இராத  பசங்களை,
"மன்னி, உங்காத்து உப்பிலியை இந்த டிரஸ்ல பார்த்தால், கோகுலத்தில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவே நேரே இறங்கி  வந்தாப்ல இருந்தது"என்றால் புட்டு வைத்திருந்த பாத்திரத்தோடு கிடைக்கும். இது பத்தாதென்று, நாலு  கரைக்கப்பாலிருந்து திருமஞ்சன வீதி, விளக்காரத்தெரு பசங்களும் கொலு பார்க்க வருவார்கள். கொஞ்சம் புஜபலம்  மிக்கவர்கள். அவர்கள் நோக்கம் சுண்டல் வாங்கி தின்பது தான். ஆனால் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் நின்று
"கொலு இருக்கா?" என்று இரைவார்கள். எல்லோரையும் வரிசையில் நிறுத்தி ஆளுக்கு ஒரு கரண்டி சுண்டல்  கொடுத்து அனுப்புவார்கள்.
"கொலு இருக்கு ஆனால் சுண்டல் இல்லை" என்று தெனாவட்டாக பதில் சொன்ன பஸ் கண்டக்டர் லக்ஷ்மணன்  வீட்டின் ஓட்டின் மேல் ஒரு நாள் கல் எறி போராட்டம் நடந்தது. மிதவாதியான லக்ஷ்மணன் தீவிரவாதத்திற்கு அடிபணிந்து மறுநாள் வாசலில் சுண்டலோடு நின்றார். இந்த கோஷ்டியை என் பாட்டி "படை வர்றது" என்பாள். படைகளுக்கு  சுண்டல் இல்லையென்றால் பாட்டி பதறிவிடுவாள்.

ரோஹினி வீட்டிற்கு கொலு பார்க்க போவதென்றால் நாம் பாகவதராக வேண்டும். வடக்குத்தெரு ஸ்ரீராம் அண்ணன்  கோபால் ரோஹினி வீட்டின் ஆதர்ஷ நவராத்திரி ஹீரோ. எப்போதும் "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா", "கற்பகவல்லி நின் பொற்பதங்கள்  பிடித்தேன்”, “மாணிக்க வீணை ஏந்தும் கலைவாணி” போன்ற பல பக்தி ஐட்டங்கள் கைவசம் வைத்திருப்பான். நவராத்திரி காலங்களில் ஐஸ்கிரீம் விரதமிருப்பான். மூடுக்கு ஏற்றார்போல சிலசமயங்களில் பெண்  குரலில் வேறு பாடி அசத்துவான். ஒரே இக்கட்டான விஷயம் என்னவென்றால் பாடும் பொழுது பெண்கள் யாரேனும்  வந்துவிட்டால், முகம் தகதவென்று சிவந்து, உள்ளங்கை உள்ளங்கால் குடம் குடமாக வேர்த்து, தலையை இரண்டு முழங்கால்களுக்கு இடையில் நுழைத்து வெளியே எடுக்கவே  அடம் பிடிப்பான். பெண்கள் முன்னால் அவ்வளவு வெட்கம் பிடுங்கி திங்கும். சரியான லஜ்ஜாவதன்.

கோபாலின் கொலு மோகம் தலைக்கேறி ஒன்பது நாளில் ஒரு நாள் ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியே  வந்தான். நிச்சயமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு பெண்ணுக்கு ஆண்டாள் வேஷம் போட்டது போல் இருந்தது. அரக்கு நிறச்சேலையை ஐயங்கார் மடிசாராக கட்டி, மேலாக்கை பின்னாலிருந்து முன்னால் இழுத்து சொருகியிருந்தான். நெற்றிக்கு ஸ்ரீசூர்ணம் அணிந்து, அதற்க்கு கீழ் சின்னதாக வெள்ளை கலரில் கீழ் நோக்கி அம்பு போட்டிருந்தான். அழகிற்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது அவன் போட்டிருந்த கொண்டையும், இதழ்களில் பூசியிருந்த உதட்டுச்சாயமும், கண்ணுக்கு எழுதிய மையும். கோபால் கோதையாகவே உருமாறியிருந்தான். எங்கிருந்தோ 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது. தெருவில் சைக்கிளில் சென்ற இரு முறுக்கு வாலிபர்கள் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார்கள். சீட்டியடித்தார்கள். இன்ஸ்டிட்யூட் வீட்டு ஸ்ரீதர் வைத்த கண் வாங்காமல் ஆண்டாளையே பார்த்தான். அவளை  சீண்டினான்.
"ஏண்டி எங்கடி போரே?"
கண்கள் பளபளக்க கோபால் "வேணா விளையாடாதே " என்றான்.
ஸ்ரீதர், "நான் கண்ணன் வேஷம் போட்டா உன் கூட வரலாமா"
எங்களை துணைக்கு அழைத்து கோபால் "பாருங்கடா இவனை" என்று அன்றைக்கு முகாரி பாடினான்.
"ஸ்ரீதர். அவன் ஆசைக்கு வேஷம் போட்டுண்டு இருக்கான். விடுடா" என்றான் வாசு.
யார் எது சொன்னாலும் விடுவதாய் இல்லை ஸ்ரீதர். வடக்குத்தெரு முனை வருவதற்குள் இன்னும் பல முறை அவனை சீண்டி வெறுப்பேற்றி, கைகலப்பில் கொண்டு வந்து விட்டான்.
இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை தூரத்தில் இருந்து பார்த்து விலக்குவதற்கு நாங்கள் ஒடுவதர்க்குள், ஆண்டாளின் புடவையை, துச்சாதனன்  உருவுவது போல் வுருவினான் ஸ்ரீதர். பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆண்டாள் பழனி முருகன் ஆவதை கண்டு திடுக்குற்றோம். அவனுக்கு உதவுவதற்கு நாங்கள் விரைவதர்க்குள், ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியேறி விஐபி ஜட்டியுடன் பழனி முருகனாக வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தான் கோபால்.

நவராத்திரி கொலு பாடல்: ஜனனி ஜனனி ஜனனி... உங்கள் வீட்டு கூடத்திற்குள் வந்து உட்கார்ந்து பாடும் நித்யஸ்ரீ மகாதேவன்.



நவராத்திரி சினிமா பாடல்: அப்பப்பா... எவ்வளவு ராத்திரி பாடல் முழுக்க எழுதியிருக்கிறார் கவிஞர்.  "காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி... ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி..". காளையர் என்றால் சிவபெருமான். சாவித்திரி கண்கள் சிமிட்டி சிமிட்டி தலையை ஆட்டி ஆட்டி பாடும் அழகே தனிதான்.



பின் குறிப்பு:  இதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரிய வேண்டும் என்றால் தயவு செய்து இப்பதிவின் லேபிளை பார்க்கவும். இந்த அழகான(?!) கொலு படம் கபாலி கோயில் குளத்தருகே இருக்கும் காதி சர்வோதயா கடையில் "சும்மா எடுத்துக்கோங்க சார்" என்று அவர்களின் அனுமதியோடு அடியேன் எடுத்த படம்.

சீக்ரெட் குறிப்பு: விடலையிலும், வாலிபத்திலும் கொலு கொண்டாடியது பற்றியும், திருமணம் புரிந்தபின் நவராத்திரி கொண்டாடிக்கொண்டிருப்பது பற்றியும் எழுதவதற்கு நிஜமாகவே நேரம் இல்லை. இல்லையென்றால் "நான் ரசித்த ராத்திரிகள்" என்று ஒரு முழு நீள பதிவு வரைய வேண்டி வரும். ஆகையால் இத்தோட இதை முடிச்சுக்கலாம்.


பதிவு குறிப்பு: (டைட்டில் பேச்சு, நவராத்திரி பாடல், பின் குறிப்பு, சீக்ரெட் குறிப்பு, பதிவு குறிப்பு.... சே சே.. ஒரே ரோதனையா போச்சுப்பா.. பதிவை விட சப் டைட்டில் நிறையா போடறாம்பா.. இன்னிக்கி ராத்திரி தூக்கம் வருமான்னு தெரியலை.....)

-

Friday, October 15, 2010

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

கொலு டயத்தில  இந்த டைட்டில் கொடுத்தா நிச்சயமா என்ன எதிர்பார்த்து வருவீங்கன்னு தெரியும். காலையில் அலுவலகம் வரும்போது பிடித்தது இது. காமெராவில் சொன்னேன். எனக்கு அரசியல் தெரியாது. இதில் இருக்கும் பன்னாட்டு அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு பின்னூட்டமிடுங்களேன். வித்தியாசமான வால் போஸ்டர் என்பதால் பதிவுலகத்தில் பகிர்ந்தேன். என்னமா யோசிக்கறாங்கப்பா. நவராத்திரி பற்றிய பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பதிவு பதியப்படும்.


jaya


பின் குறிப்பு: தயவு செய்து அநாகரீக அரசியல் கமெண்டுகளை தவிர்க்கவும். ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி  இல்லை.  நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.

இதை உருவாக்க ஃபோட்டோ ஷாப்பில் உழைத்த அந்த கண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails