Wednesday, May 30, 2012

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா

அர்பணிப்புப் பாடல்கள், அர்த்தபுஷ்டிக் கட்டுரைகள், வியக்கவைக்கும் கதைகள், பொருள் பொதிந்த கவிதைகள், ஐன்ஸ்டீன் விஞ்ஞானம் என்று முழுமூச்சாக முகப்புஸ்தகலிக்கியத்தில் இயங்குபவர்கள் மத்தியில் ஏதேனும் உருப்படியாக எழுதவேண்டும் என்று நினைத்தாலும் ரெண்டுங்கெட்டானாக எதாவது கிறுக்கிப் பொழுதைப் போக்குகிறேன். உடனடி லாட்டரி போன்று தடாலடியாக உரசிப் பார்த்து ”நல்லாயிருக்கு.. நல்லாயில்லை” என்று சர்ட்டிஃபிக்கேட் தர ஒரு நண்பர் பட்டாளம் சேர்ந்துவிட்டதால் அங்கேயே பெரும்பொழுதைக் கழிக்கிறேன். என்னுடைய பிறந்தவீடான ப்ளாகிற்கு அதிலிருந்து சில விஷயங்களை திண்ணைக் கச்சேரியாக இங்கு பகிர்கிறேன்.

********சமூகசேவை*********
ஜிகுஜிகு உடையணிந்த அழகு தேவதைகள் கூட்டமாக சுற்றி வந்து லாலிலல்லி பாடுகிறார்கள். லாப்டாப்பில் கொக்கோகப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது விதையில்லாத திராட்சையும் மன்மதன் தோட்டத்து முந்திரியும் தங்கத் தாம்பாளங்களில் பரப்பி ஊட்டி விடுகிறார்கள். வைரமும் வெள்ளியும் பணமும் அறையின் மூலை முடுக்கெல்லாம் குவியல் குவியலாகக் கொட்டிக்கிடக்கின்றன. ஏழெட்டு தன்னார்வலர்கள் பன்நாட்டு வர்த்தகத்தை 24x7 கவனித்துக்கொள்கிறார்கள். காலையும் மாலையும் ஊருக்குப் போதனை. இரவில் உள்ளுக்குப் போதை. வாழ்க்கை உல்லாசமாகக் கழிகிறது. திடீரென்று ஒருநாள் இரும்புக் குழாயை எடுத்து பின்னந்தலையில் ”டங்...”கென்று அடித்து கபாலத்தைப் பிளக்கிறான் கயவன் ஒருவன். பாதியில் உடைத்துக்கொண்ட பைப் போல செங்குருதி தலையிலிருந்து பீய்ச்சி சுற்றிலும் அடிக்கிறது. வெள்ளைச் சுவரெல்லாம் பளிங்குத் தரையெல்லாம் திட்டுத்திட்டாக இரத்தச் சேறு.

உடம்பெல்லாம் வெலவெலக்க வியர்த்து விறுவிறுத்துத் திடுக்கிட்டு எழுந்தான் உத்தமபுத்திரன்.

“என்னாச்சு?” பக்கத்தில் படுத்திருந்த ஃப்ரெண்ட் கேட்டான்.

“ச்சே. ஒரு கனவு”

“என்ன கெட்ட கனவா?”

”பாதி நல்லது பாதி கெட்டது”

“எப்புடீ”

“காவியும் ருத்ராட்சமுமா பளபளன்னு நான் சாமியாரா சமூகசேவை செஞ்சுகிட்டு இருக்கேன்... அப்போ....”

(இப்போது ஒரு முறை முதல் பாராவைப் படிக்கவும்)
 
*******”உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா.....”*********


இளையராஜாவைத் தவிர்த்து யாரும் இந்தப் பாடலுக்கு மெட்டமைக்க முடியாது. வாணி ஜெயராமின் குரலில் எதிரொலிக்கும் அந்த ஏக்கம் தீபாவின் முகத்தின் வழியாக திரையில் வழிகிறது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என்று சொல்லி அடுத்தடுத்த கட்டமாக வண்டியை மைனர் நகர்த்தும் போது அமைத்த அந்த மலைப்பாதை காட்சியமைப்பும் அதற்கு பக்கபலமாக பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் இசையும் காலம் கடந்து நிற்கும். க்ளாஸிக் பாடல். மதுவந்தி ராகம்!! போதையாக இருக்கிறது.

ராஜா துள்ளி விளையாண்டிருக்கும் என்னுள்ளில் எங்கோ....





**********வீட்டுக்கு வெள்ளை ***********
 ”டேய்! வீட்டுக்கு வெள்ளையடிச்சா மாதிரி இருக்குப் பாருடா”

என்று உடம்பெல்லாம் திருநீறு பூசிய வாரியார் சுவாமிகளைப் பார்த்து ஒருவன் கேலி செய்தானாம். அறிவில் பெரியவரான வாரியார் அமைதியாக அவனைப் பார்த்து புன்னகைத்து

“அப்பா! குடியிருக்கிற வீட்டுக்குதான் வெள்ளையடிப்பாங்க.. குட்டிச்சுவத்துக்கு இல்லை” என்றாராம்.

#காலையில் விஜய் டிவி பக்தித் திருவிழாவில் கேட்டது!!

*********கலகலப்பு@மசாலா கேஃப்: ***************

லாஜிக் இல்லாமல் மேஜிக் காட்டியிருக்கிறார்கள். கட்டையை எடுத்து மண்டையில் போடுவது, சீரியஸாக பேசி காமடி செய்வது என்று டிபிகல் சுந்தர்.சி படம். ரெண்டு ஹீரோ ரெண்டு ஹீரோயின் ரெண்டு வில்லன் நாலு பாட்டு படம் பூரா வெடிச் சிரிப்புன்னு ரவுண்டு கட்டி கலக்கியிருக்கிறார்கள்.

கேபிளார் (Sankar Narayan) வசன உதவியில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. எங்கேயும் எப்போதும்மில் நடித்த அஞ்சலியா என்று ஒருமுறை கிள்ளிப்பார்க்கத் தோன்றுகிறது.(நம்மை நாமே கிள்ளிப்பார்க்கத் தோன்றுகிறது என்று எழுதியிருக்கவேண்டும்). எக்கச்சக்க தாராளம்.

படத்தில் ரகுவாக நடித்திருந்த சிவாவும் எங்கள் பின்னால் உட்கார்ந்திருந்தது இந்த துப்பறியும் சாம்புவால் இடைவேளையில் கண்டுபிடிக்கப்பட்டது. பக்கத்தில் போய் கை குலுக்கும்போது இடது கையால் முகத்தை மறைத்துக்கொண்டு ”படம் முடிஞ்சு பார்க்கலாமே! ப்ளீஸ்” என்று பணிவுடன் கேட்டு எங்களைவிட்டு அகன்று நட்சத்திரமாகிக் கொண்டார்.

இரண்டாவது பாதியில் நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லாமல் பல் சுளுக்கும் வரை சிரிக்கவைக்கிறார் சந்தானம். போதாக்குறைக்கு மனோபாலா வேறு ஈர்க்குச்சி உடம்பால் பல பயில்வான்களை கிச்சுகிச்சுவில் புரட்டிப்போட்டுவிடுகிறார்.

படம் முடிந்து இரண்டு வார்த்தைகள் சிவாவிடம் பேசுவிட்டு வந்தேன். 7 டிகிரிக்கு குனிந்து நெஞ்சில் வலது கரம் வைத்து என்னுடைய “நல்லா பண்ணியிருக்கீங்க”வைப் பெற்றுக்கொண்டார்.

அழுத்தம் நிறைந்த இக்காலகட்டத்தில் காசு கொடுத்து அழ விருப்பம் இல்லாத காரணத்தினால் சத்தியம் புன்னகை மன்னர்களால் நிரம்பியிருந்தது.

வயிறு வலிக்கச் சிரிச்சாச்சு. ஒரு முறை மகாநதி பார்க்கணும்.
 

***********ஓடுண்டு கந்தையுண்டு **************

ஸில்வர் ஸ்பூனோடு இம்மண்ணில் அவதரித்த அவதூதர் பட்டினத்தார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற ஞானம் ஏற்பட்ட பின்னர் இறைவன் திருவடிகளைத் தொழுது ஞாலத்திற்காக நிறையப் பாடினார். துறவிகளுக்குண்டான லக்ஷணங்களை ஒரு பாடலில் சொல்கிறார். படிக்கிற நமக்கே சுரீர் என்கிறது. காவி உடுத்துபவர்களுக்கு உரைக்கவில்லையே! சர்வாலங்கார பூஷிதர்களாக இருக்கும் ஆண்டிகள் ஓடுண்டு, கந்தையுண்டு என்கிற மூன்றாவது வரியைப் படித்திருப்பார்களா?

மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டெனும்படி கேட்டுவிட்டோ மினிக்கேண் மனமே
யோடுண்டு கந்தையுண்டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு
தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே
--பட்டினத்தார்

வினை தீர்த்தவனை வேண்டும் இப்பாடலில் புலன்கள் ஒவ்வொன்றும் சிற்றின்பங்களில் ஈடுபட ஈடுபாடேயில்லாமல் செய்யும் பூசைகளை நீ எவ்வாறு ஏற்றுக்கொள்வாய் என்று சீறுகிறார்.

கையொன்று செய்யவிழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சகநாவொன்றுபேசப் புலால்கமழு
மெய்யொன்றுசாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசையெவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே.
--பட்டினத்தார்

#பொருள் பொதிந்த பாடல்கள். பொருள் தேடுபவர்களுக்கும் அருள் தேடுபவர்களுக்கும் செய்திகள் நிறைய!!


**********அதிகாரம்*************
”ரெண்டு கேன்வாஸ் எடுங்க” அதிகாரமாய் குரல் வந்த திக்கில் நாலரை அடிக்கு அம்மா ஒருவர் ரெண்டு அடி வளர்ந்த தன் குழந்தைக்கு ஷூ கேட்டார்.

“நா இல்லீங்க... அவர்ட்ட.....” என்ற என்னுடைய தயக்கமான இழுவைக்கு “சொல்லுங்க மேடம்..” என்று பாட்டாக்காரர் பறந்து பந்தோபஸ்த்துக்கு வந்தார்.

அதன்பிறகு 5 முறை ”ஸாரி...ஸாரி” என்று அந்த சுடிதார் பெண்மணி மாப்புக் கேட்டு அந்தப் பக்கம் காலணி வாங்க வந்த எல்லோருக்கும் என்னை ”இவர் பாட்டாக்காரர் அல்ல” என்று அறிமுகப்படுத்திவைத்தார்.

#சிகப்புக் கலர் பனியன் போட்டதால் வந்த வினை! 

*********நடுநிசி மருத்துவர்கள் ***************
நேற்றிரவு ந்யூரோ ஸ்பெஷலிஸ்டிடம் சதாபிஷேகம் கண்டவர்கள் எல்லா சேர்களிலும் பளபளவென்று காத்திருந்திருந்தார்கள். வியாதியஸ்தர்கள் மற்றும் பேய் பிசாசு பிடித்தவர்களுக்கு ராத்தூக்கம் வராது என்பார்கள். டீக்காக இன் ஷர்ட் பண்ணிய தாத்தாக்களும் மற்றும் ஜீன்ஸ் பேத்திகளுடன் வந்த எந்தப் பாட்டிகளுக்கும் கண்ணில் பொட்டுத் தூக்கம் இல்லை! ஒவ்வொருவரும் டாக்டரிடம் அரை மணிநேரம் லோகாதய சமாச்சாரங்கள் பேசி வம்பளக்கும் திறமை படைத்தவர்கள்.

சென்னை வந்துதான் இதுபோல நடுநிசி வரை டாக்டர்கள் ஸ்டெத்தும் கழுத்துமாகத் தொழில் பார்ப்பதைப் பார்க்கிறேன். வயதானவர்களை அழைத்துக்கொண்டு க்ளினிக் போக வேண்டும் என்றாலே அன்றைக்கு சிவராத்திரிதான். மன்னையில் மாக்ஸிமம் ஒன்பது மணிக்கு க்ளினிக் நடை சார்த்திவிடுவார்கள். டாக்டர் ப்ரேம்மோஹனாக இருந்தாலும் சரி.. அல்லது டாக்டர் சந்திரசேகராக இருந்தாலும் சரி... 


***********கொரியர்களைப் பிடிக்கவில்லை **************
கொரியர்களைக் கண்டால் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்களது குச்சிக் குச்சி முடிக்கோ சப்பை மூக்கிற்கோ குந்துமணி கண்ணிற்கோ இல்லை. இந்தியர்களை டமாரச் செவிடர்களாகப் பாவித்து வடிவமைத்த செல்ஃபோன்களை நமது சந்தையில் ஊடுருவ விட்டிருக்கிறார்கள்.

ஒரு அவசரத்திற்கு ரோட்டரி ஹாஸ்பிடல் சென்றால் மார்கழி மாத கூம்பு ஸ்பீக்கரை முழுங்கியது போல ஒரு செல்ஃபோன் முழங்கியது. கூர்ந்து நோக்கியதில் நோக்கியா போலிருந்தது. பெட்டில் வலியோடு படுத்திருந்தவர்களுக்கு ஹாஸ்பிடல் உள்ளே ஆம்புலன்ஸ் புகுந்தது போல இருந்திருக்கும். வியாதியின் உச்சத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு எமதர்மராஜாவின் வாகனத்தின் கூப்பாடு போலக் கூட கேட்டிருக்கும்.

கிட்டத்தில் பைலட் போல ஹெட்செட் மாட்டியிருந்தவரிடம் “என்ன மாடல்” என்று கேட்ட போது “அது கொரியன் செட்டு” என்றார். என்ன செட்டு? பெரிய ஷேவிங் செட்டு!!
  
-
 

Friday, May 25, 2012

வீடு வாங்கலையோ வீடு

”பெருமாட்டுநல்லூர் தெரியுமா?” இந்த ஒரே வினாவில் சென்ற ஞாயிற்றுக்கிழமை என்னை என் காரிலேயே நாடுகடத்தினார் நண்பர் பெருந்தகை ஒருவர்.

“இல்லீங்க.. எங்க இருக்கு?” என்று புருவம் சுருக்கினேன்.

“தெரியாதா?” என்று பிறந்த ஊரை மறந்தவன் போல என்னை ஏளனமாகப் பார்த்தார்.

“என்ன சார்! ஏதோ ஐஸ்வர்யாராயைத் தெரியாதுன்னு சொன்னா மாதிரிக் கேவலமாப் பாக்குறீங்க. பெருமாட்டு நல்லூரும் தெரியாது சிறுமாட்டு நல்லூரும் எனக்குத் தெல்லேது” என்றேன் அப்பாவியாய்.

“கூடுவாஞ்சேரி சிக்னலோட லெஃப்ட்ல கட் பண்ணினா கூப்பிடு தூரத்தில வரும்” என்று கொக்கி போட்டார்.

“கூ..ஊஊஊஊஊ.....டுவாஞ்சேரி பக்கத்துலையா?” என்று வாயாலேயே வண்டி ஓட்டிக் காண்பித்த என் கேள்விக்கு கூடுவாஞ்சேரி என்பது இந்த நந்தன வருஷத்திலிருந்து சென்னையின் சைதாப்பேட்டை, டி.நகர், மயிலாப்பூர் என்பது போன்ற ஷகரான ஏரியா என்றும் இந்த லோகத்தில் ஸகல ஸம்பத்துகளும் அங்கு கிடைக்கிறது என்றும் ஒரு முறை விஸிட் செய்தால் மோட்சம் கிட்டும் என்றும் என்னைத் தள்ளிக்கொண்டு போனார் அந்த (ஃ)ப்ளாட் விற்கும் நண்பர். ஒரு கணிசமான கமிஷன் அவருக்கு காத்திருக்கிறது என்பது அவரது தூண்டில் போடும் துடிப்பானப் பேச்சில் தெரிந்தது.

நம்மிடம் இன்னொரு வீடு வாங்கும் அளவிற்கு ஐவேஜு இல்லை என்றாலும் அவர் என் கையை விடுவதாக இல்லை. “ஒரு இன்வெஸ்ட்மெண்ட்க்காக வாங்குங்க” என்று வற்புறுத்தினார். “இன்வெஸ்ட்மெண்ட்டுக்கு இன்வெஸ்ட் பண்ண ஒரு இன்வெஸ்ட்மெண்ட் வேணுமில்ல” என்று சீரியஸாக விசு பாணியில் கேட்டாலும் அதை ஜோக்காக எடுத்துக்கொண்டு குலுங்கிச் சிரித்துவிட்டு “ஒரு தடவை பாருங்களேன்!” என்று அவரது விழிகளில் என்னுடைய வீடு வாங்கும் கனவோடு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தார். அன்புக்கு அடிமையான நான் அந்தச் சொற்களில் சரண்டர் ஆனேன்!

சூரியன் எனது காரின் ஏசியை சோதித்துப்பார்க்கட்டும் என்று இறுமாப்போடு சரியாக ஒரு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் புறப்பட்டோம். அனல் சுட்டெரித்துப் புழுங்கியது. ’அவன்’னில் இட்ட அரிசி போல வெந்துபோனோம். சென்னையின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல்கள் வெறும் பானையோடு குடிக்க ஆளின்றி தாகமாக நின்றிருந்தது. நம்மைப் போல கூண்டில் அடைபடாத மிருகங்கள் வண்டலூரில் அடைத்த மிருகங்களைப் பார்க்க மந்தை மந்தையாய் போய்க்கொண்டிருந்தார்கள். பச்சை விழுந்ததும் காதல் தோல்வியில் ப்ராணஹத்தி செய்துகொள்ளும் பவுடர் கலையாத சினிமா ஹீரோயின் போல ஓடி வந்த அந்த பேரிளம் பெண்ணிற்காக ஒரு சடன் ப்ரேக் போட்டேன். டிசையர் குலுங்கியது. ஜூ தாண்டியதும் ஆக்ஸிலேட்டரை ஒரு அழுத்து அழுத்தியதில் நடு ரோட்டில் நாலு கானல் நீர்க் குட்டைகளைக் கடந்ததும் அதிசீக்கிரத்தில் கூடுவாஞ்சேரி வந்துவிட்டது.

பின்னாலிருந்து ”லெஃப்ட் லெஃப்ட்” என்ற குரலுக்கு சிக்னலில் லெஃப்ட் எடுத்தோம். ”அந்த மளிகைக் கடை பக்கத்துல நிறுத்துங்க” என்றார் ஃப்ளாட் அன்பர். வாசலில் படுத்திருந்த நாய் மேல் ஏற்றாமல் லேசாக ஒதுங்கியதும் அமரியாதையாக  காரில் உட்கார்ந்துகொண்டே ஜன்னலைத் திறந்து அக்னியில் அவிந்து போய்க்கொண்டிருந்தவரிடம் “பெருமாட்டுநல்லூர் இப்படித்தானே போகணும்” என்ற குரல் விட்டார். அவர் அசிரத்தையாக “நேரா போங்க வரும்...” என்று வாயில் புண் இருந்துப் படுத்துவது போன்று சிக்கனமாகப் பேசிவிட்டு தனதுரையை நிறுத்திக்கொண்டார்.

“ஏங்க.. உங்களுக்கு இந்த ஏரியா நல்லாத் தெரியும்னு சொன்னீங்க” என்ற எனது க்ராஸ் கொஸ்டினுக்கு “இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு” என்று இரண்டு ’ஹிஹி’க்களுடன் வழிந்தார். கும்பலாக பெரிய மாடுகள் ஹார்ன் அடிக்க ஒதுங்க மறுத்து தர்ணா செய்தன. “இதுதான் பெருமாட்டு நல்லூரோ?” என்று நக்கலடித்தேன். “பெரிய போர்டு வச்சுருப்பாங்க..இன்னும் போங்க சார்” என்று பின்னின்று வழிநடத்தினார்.

நதியோர நாகரீகங்கள் வழக்கொழிந்து போய் பொட்டல் காடு நாகரீங்கள் முளைக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிந்தது. ஜிங்குச்சாங்..ஜிங்குச்சாங் என்று பச்சைக் கலரிலும் மஞ்சள் கலரிலும் ஏஷியன் பெயிண்ட்ஸ் எக்ஸ்டெர்னல் எமெல்ஷன் அடித்த வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பளீரென்று தென்பட்டன. மாநகர அவுட்டோரில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்த செமி அர்பன் வகையறா இடம் அது. வீடுகள் குறைந்திருந்தாலும் ரோடோரத்தில் “லேஸ்” ஸும் “குர்குரே”வும் “கோலா” பாட்டிலும் சிதறிக் கிடந்தன. “குறைந்த விலை. ரெஜிஸ்ட்ரேஷன் ஃப்ரீ” என்று யார்யாரோ சுயதம்பட்டம் அடித்து அம்புக்குறி போட்டு அவர்கள் சைட்டுக்கு அம்புக்குறி போர்டு வைத்திருந்தார்கள். ஒரு டெம்போ ட்ராவலர் முழுக்க சுயவீட்டார்வலர்களை ஏற்றி என்னை முந்திச் சென்ற வாகனத்தைப் பார்த்தபோது ”என்னைப் போல் ஒருவன்” அக்கூட்டத்திலும் மாட்டியிருக்கக் கூடும் என்று என் நெஞ்சு பரிதாபத்தால் அடித்துக்கொண்டது.
  
வழி காட்டுப்பாதை போல கணக்கேயில்லாமல் நீண்டது. நம்மாளும் பேந்தப் பேந்த பார்த்துக்கொண்டே வந்தார். தூரத்தில் கடலூர், பாண்டிச்சேரியெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தது. “இது பாண்டிக்கு ஷார்ட்கட்டா?” என்று கேட்டதில் “ஹா..ஹா.. உங்களுக்கு எல்லாமே ஜோக்கு” என்று அந்தக் கேள்வியின் உக்கிரத்தை மாற்றி நகைச்சுவையாக்கிவிட்டார் அந்த மனுஷன்.

அவர் சொன்ன இடம் வந்தபோது இடதுபுறம் திரும்பச்சொன்னார். அந்த திருப்பத்தில் இருந்த மாடி வீட்டில் இருந்து எட்டிப் பார்த்தவர்கள் ஏதோ ஏலியன்களைப் போல வைத்த கண் வாங்காமால் பார்த்தார்கள். எனக்கே கண்ணம் சிவந்தது!

“அதோ! அங்க தெரியுது பாருங்க” என்று என் வெட்கத்தைப் பின் சீட்டிலிருந்து கலைத்தார் ஃப்.நண்பர். அவரது குதூகலத்திற்கு இரண்டி விநாடிகளுக்குப் பின்னர் வண்டி குடைசாய்வது போல  இருந்தது. ஆறடிக்கு ஆறடி யானைப்பள்ளம் ஒன்று. ஏதோ பேராபத்தில் மாட்டிக்கொண்டோமோ என்று பயந்தேன். “அப்படியே கதிர் அறுத்த வயலில் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சுட்டாங்களோ?” என்று விசாரித்தேன். ”ச்சே..ச்சே.. இன்னும் ஒரு மாசத்தில இங்க சிமெண்ட் ரோடு போடப்போறாங்க” என்று பச்சையாய்ப் புளுகினார். பக்கத்திலிருந்த முட்புதர்களுக்குப் பின்னால் குத்த வைத்து உட்கார்ந்து நாலு பேர் கைலியுடன் சரக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கார் ஜன்னலைத் திறந்தால் சாராய நெடியில் நமக்கும் நட்டுக்கும் என்று தோன்றியது.

சைட் நெருங்க நெருங்க ஓரு குட்டி பீஹார் இரும்பு டெண்ட்களில் ஜாகையிருப்பது தெரிந்தது. ஏதோ ஒரு வடக்கத்திய ”ஹை..ஹை” பாஷை பின்னணியில் ஒலித்தது. கூடவே சப்ஜி வாசனையும் சேர்ந்து மணத்தது. அம்மணமாக குழந்தைகள் மூக்கொழுக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மணிகள் தலைக்கு முக்காடோடு சமைத்துக்கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீசையில்லாத ஆண்கள் சிலர் ரிலாக்ஸ்டாக தரையில் உட்கார்ந்து காய் நகர்த்தி ஏதோ கேம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

“வேலை செய்யறது எல்லாருமே நார்த் இண்டியன்ஸ் போலருக்கு?” என்றேன்.

“லேபர் சீப். அதிக நேரம் வேலை செய்யறாங்க. எல்லாத்தையும் விட முக்கியமா இவ்ளோ கொடு அவ்ளோ கொடுன்னு கொடி பிடிக்கறதில்லை.” என்றார்.

கலால் துறை செக்போஸ்ட் போல ஒரு நீண்ட கழிக்கு சிகப்பு வர்ணம் அடித்து வழிமறித்தார்கள். கையெழுத்திட்டு உள்ளே சென்று முக்கால்வாசி முடிந்த ஃப்ளாட்டுகளை பார்வையிட்டோம்.

“இது இன்னும் எவ்ளோ வருஷத்தில டெவலப் ஆகும்?”

எண்திசைகளை நோக்கி கையை ஆட்டி நீட்டி “இங்க ஹாஸ்பிடல் இருக்கு, இங்கேயிருந்து ரெண்டு கிலோ மீட்டர்ல பாரதிய வித்யா பவன் இருக்கு, ஒரு ஷாப்பிங் மால் ஒரு கிலோ மீட்டர்ல வருது..” என்று ஒரு பத்து நிமிஷம் வாயாலேயே அனைத்து வசதிகளையும் காற்றில் செய்து காண்பித்தார் அந்த சுற்றிக் காண்பித்த மஹானுபாவர்.

“சார்! இது கேட்டட் கம்யூனிட்டி. எல்லா அம்னிட்டீஸும் கேம்பஸ் உள்ளயே வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த விற்பனைப் பிரதிநிதியிடம் இருந்து என் சிந்தனை கழன்று வந்து ஆத்மா வைத்து சுஜாதா எழுதியிருந்த ”எல்லாம் கிடைக்கும் ஒரு பலமாடிக் கட்டிடம்” சஃபி கதைக்குத் தாவியது.

“சரி சார்! நா அப்புறமா சொல்றேன்” என்று கைகுலுக்கிப் விடைபெறும் போது தூரத்தில் இரண்டு வடக்கத்திய ஜோடி வாக்கிங் போக அவர்களது செல்வங்கள் மணலில் உருண்டு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தன.

“சார்! சீக்கிரம் சொல்லிடுங்க. இந்த ஃபேஸ்ல இன்னும் நாலு வீடு தான் பாக்கியிருக்கு” என்று பின்னாலிருந்து குரல் கொடுத்தார். எனக்கு இன்னொரு வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா என்று யாராவது காழியூரிடம் கேட்டுச்சொன்னால் சௌகரியமாக இருக்கும்!!

“திண்டிவனம் பக்கத்துல ஒரு லே அவுட் போட்ருக்காங்க. 3BHK, 2BHK எல்லாம் இருக்கு. அடுத்த வாரம் ஃப்ரீயா? வரீங்களா?” என்று கேட்டவரின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட எனக்குத் திராணியில்லை. ஜீவனற்றுப் போயிருந்தேன்.

படம்: நெட்டில் சுட்டது! :-)

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails