Tuesday, February 8, 2011

ஒரு பிசாத்து பதிவரின் நேர்காணல்

நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க்  சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.


இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.

உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.

பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.  ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.


இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்...  இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.

பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.
myphoto

பட குறிப்பு: ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒரு நல்ல கேமேராவினால் என்னைக் கூட அழகாக படமெடுத்த அந்த புகைப்படக்காரரை இருகை கூப்பி வணங்குகிறேன்.

-

75 comments:

எல் கே said...

சூப்பர் அறிமுகம்... முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். இந்தத் தம்பியின் வணக்கங்களும்

சின்னப் பையன் said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்

Matangi Mawley said...

Congrats, sir!

may the year that's taking leave, leave behind many more thoughts for you to pen them down...

மோகன்ஜி said...

பேட்டியைப் படித்தேன் ஆர்.வீ.எஸ் அவர்களே!அருமையாக இருக்கிறது..
உங்களுக்கு அகில உலக 'தீ.வி.பிள்ளை' ரசிகர் மன்றம் ஆரம்பிக்க நாங்கள் ஆவலாய் இருக்கிறோம். ஆண்டு நிறைவைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். அரபு நாட்டில் ப்ளெக்ஸ் பேனர் ஓட்ட நிறைய செலவாகிறது என்று அங்கிருந்து செயலாளர் தெரிவிக்கிறார். அமெரிக்க அப்பாவோ அங்கு ஒரு மாதத்துக்கு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இங்கிருந்து முப்பது தொண்டர்கள் போகலாம் என்று உள்ளோம். இதைத் தந்திபோல் பாவித்து நீங்கள் ஏதேனும் ஏற்பாடு...

மோகன்ஜி said...

ஆத்துல சுத்திபோடச் சொல்லுங்கோ. போட்டோல அம்சமாய் இருக்கேள்!

Madhavan Srinivasagopalan said...

// இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. //

அதெல்லாம் ஓகேதான்.. அதுக்காகக.. நீங்க பாட டிரை பண்ண வேணாம்...

//பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது.//

அப்ப, எங்க வீதிப்பக்கம் (GplSmdrm) வந்து சைட் அடிச்சதை ஒத்துகிட்டாச்சு.. சரி.. சரி.. இனிமே என்ன பண்ண முடியும்... தப்பிச்சுப்போ..

MANO நாஞ்சில் மனோ said...

வாங்க வாங்க வணக்கம் வணக்கம்...

Chitra said...

முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை அசத்தல் பதிவு மூலமாக பின்னிட்டீங்க.... வாழ்த்துக்கள்!

பத்மநாபன் said...

2007 லிருந்து எழுதுகிறிர்கள் என்று , சீனியரெல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள் என்றிருந்தேன் . 2010 என்றும் ஜுனியர் என்றும் சொல்லி ரொம்பவே காத்தை பிடிங்கி விட்டீர்கள்.. இன்னமும் 10 வருஷம் ஆனாலும் நீங்கள் இந்த ஒரு வருஷம் எழுதிய அளவு கூட என்னால் எழுத முடியாது...
இந்த பதிவு ரொம்ப அழகாக பதிவு செய்துள்ளீர்கள்..
கேள்விகளுக்கு வித்தியாசமான ஸ்டைலில் பக்குவமான பதில்கள்..
இலக்கண இலக்கிய த்திற்கான விளக்கங்கள்... பெயரழைத்தால் அவசரமாக பாக்கெட்டில் கை விடும்... ஆர்.வி.எஸ்க்கே உரித்தான நகைச்சுவைகள் என அமர்க்களப் படுத்திவிட்டீர்கள்.....

பத்மநாபன் said...

ஒரு வருடம் தானா ஆச்சு என ஆச்சர்யம் எற்படுத்திய வலைப்பூவிற்கு வாழ்த்துகள்....

பத்மநாபன் said...

//அரபு நாட்டில் ப்ளெக்ஸ் பேனர் // மோகன்ஜி.. பேனர் ஒட்டியாச்சு.. ஆர்.வி.எஸ் அழகு போட்டோவை பெரிது பெரிதாக நிறுவி நம்மூர் கதாநாயகர்கள் பட ரீலிஸில் செய்வது போல் ..பால் அபிஷேகத்திற்கு ஒட்டகப்பண்ணையில் பால் ஆர்டர் கொடுத்தாச்சு..

தீ.வி.பி. ரசிகர் மன்ற கிளை களை கட்ட ஆரம்பிச்சாச்சு....

பத்மநாபன் said...

//கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது.// மேயற வேலையெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் ...நீங்க எழுதறத நிறுத்தவெல்லாம் வேண்டாம்.. இப்பத்தான் நம்ம நிஜாம் கை உதறிட்டு கெளப்ப வந்திருக்கிறார் . அப்பாதுரையும் சுழியிலிருந்து தற்காலிக(???) ஓய்விலிருக்கிறார்( என் பேச்சை நானே கேட்க மாட்டேன் ). எல்லாம் சேர்ந்து ஒரு ஜமா போட்டு வலையுலகத்தை ஒரு கலக்கு கலக்கவேண்டாமா...

raji said...

ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்த எனக்கு உங்கள் அளவு அனுபவங்கள்,எழுத்து திறமை
எதுவுமே கிடையாது.வயதிருக்குமா என்றும் தெரியவில்லை.
இருப்பினும் சகோதரனை வாழ்த்தலாம் என்று நினைத்து வாழ்த்துகிறேன்.
(என்ன இப்ப, ஒரு வேளை நான் வயசுல பெரியவளா இருந்தாலும்
ஆண்டாள் தன்னை விட சின்னவரான ராமானுஜரை எம் அண்ணலே
அப்டினு கூப்ட்டாப்ல கூப்டுக்கறேன்.லேடீஸ் வயசுல எப்பவுமே சின்னவங்கதான்பா)

என்னது? நீங்க ராமனுஜரும் இல்லை நான் ஆண்டாளும் இல்லைங்கறீங்களா?
அது சரி

பொன் மாலை பொழுது said...

அட ஐக்கானில் உள்ளஉள்ள அந்த RVS ஐ விட இந்த படம் ரொம்ப இளசாவுள்ள இருக்கு?
சரி, மோகன்ஜி வந்துட்டார் போல !

முதல் ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு...... வாழ்த்துக்கள் !

அப்பாதுரை said...

அண்ணே.. அவசரத்துல தனாவுக்கு பதிலா சனாவைப் போட்டுப் தலைப்பைப் படிச்சுட்டேன்.. மன்னிச்சுருங்க.. முழு பதிவையும் படிச்சுட்டு திரும்ப வரேன்.

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள். (இரண்டாம் வருடத்தில் எதிர் வீட்டு மாமி பற்றி அதிகம் எழுதவும்)

பழைய பதிவுகளை நைசாகச் செருகினது நல்ல உத்தி. க்ரிகெட்டில் முதல் ரன் எடுத்ததும் அதற்கு ஒரு வார்த்தை உண்டு, மறந்துவிட்டது (டக் இல்லாமல் பிழைத்ததற்கு) - நீங்கள் பதிவெழுதுவதில் டக் அடிக்கமாட்டீர்கள் என்று அதுவே சொல்கிறது. நன்று.

(இன்டெர்ன்ட்ல கிடைக்கிற இலவச மேக்னிபையர் மென்பொருளை வச்சு உங்க அடையாள அட்டையையும் லேன்யர்ட் எழுத்துக்களையும் சுமாராகப் படிக்க முடிகிறது தெரியுமோ?)

அப்பாதுரை said...

சந்தடி சாக்குல மாதவன் என்னவோ சொல்றாரே? சைட் அடிச்ச எடம் அதானா?

எல் கே said...

எப்படி ஆர்வீஎஸ் இப்படி ஒரு அப்பாவி போலவே போஸ் தரேல் ??

அப்பாதுரை said...

ஒட்டகப் பாலா? சரிதான்.
ஆமாம், ஒட்டகத்தை எப்படிப் பால் கறப்பாங்க? உட்காரவச்சா? இல்லை ஏணில நின்னா? அவசியம் தெரிஞ்சாவணுமே பத்மநாபன்.

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்..

நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பதிவு போட்ட அன்னிக்கே படிச்சுட்டேன்.நேரமொதுக்க முடியவில்லை ஆர்விஎஸ்.

வித்யாரம்பத்தோட படு பழைய ஃப்ளாஷ்பேக்கோட ஒரு ஸ்வாரஸ்யமான மன்னார்குடி நாட்களின் அறிமுகம் வழக்கமான வரிக்குவரி நக்கலுடன்.

அதுசரி ஆர்விஎஸ் இந்த அப்பாதுரை பெயரை அப்பாவிதுரைன்னு மாத்திடலாமா?நீங்க பொண்ணுங்களை சைட் அடிச்ச இடத்தையெல்லாம் விலாவாரியா சொல்லிட்டீங்க.

அதுக்கப்புறமும் மனுஷனுக்கு ஏதோ சந்தேகம் இருக்கறாப்லயே பின்னூட்டம் போட்டார்னா அப்பறம் என்ன சொல்றது ஆர்விஎஸ்?

இதுக்கும் மேல ஒரு மனுஷன் எப்படி நேர்மையா இருக்கறதுன்னு எனக்குத் தெரியல.

தக்குடு said...

உங்களோட எழுத்தை மாதிரியே நீங்களும் இளமையா தான் இருக்கேள். கல்யாணம் ஆன ஒரு மைனர் சந்தோஷமான மனசோடையும்,தேகத்தோடையும் இருக்கார்னா அதுக்கு அவரோட தங்கமணிதான் உண்மை காரணம், அதனால அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்!..:)
எழுத்துலையோ,சுவாரசியத்துலையோ,பதிவு எண்ணிக்கைலையோ,வயதிலோ எந்த வகையிலும் அடியேன் உங்களுக்கு சீனியர் கிடையாது, தத்துபித்துநு உளறிக் கொட்டும் ஒரு சாதாரண பதிவர்தான் தக்குடு!..;)

இராஜராஜேஸ்வரி said...

விஜய ராஜேந்தர் பொண்ணு பேர்கூட
இலக்கியா தானே??

RVS said...

@எல் கே
வாழ்த்துக்கு நன்றி எல்.கே. ஆனா தம்பின்னு சொல்லி என் வயசைக் கூட்டாதீங்கப்பா.. ;-)

RVS said...

@ச்சின்னப் பையன்
வாழ்த்துக்கு நன்றிங்க... ;-)

RVS said...

@Matangi Mawley

Thank you very much!! ;-)

RVS said...

@மோகன்ஜி
தலைவரே! வாழ்த்துக்கு நன்றி.
ஒபாமாவுக்கு மின் ஓலை அணுப்பியிருக்கிறேன். தகவல் வந்ததும் தெரிவிக்கிறேன். ஒபாமாவுக்கு அ.அப்பாவை நன்றாகத் தெரியுமாம். மூன்றாம்சுழி நிறுத்தப்பட்டதை பற்றி செனட்டில் காரசாரமாக விவாதித்திருக்கிறார்கள்.

RVS said...

//மோகன்ஜி said...

ஆத்துல சுத்திபோடச் சொல்லுங்கோ. போட்டோல அம்சமாய் இருக்கேள்!//

போய் சொன்னேன். சுத்தியலை கொண்டுவந்து தலையில் போடறா... என்ன பண்ணலாம்.. ;-) ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
என்னப்பா இது.. பப்ளிக்குன்னு கூட இல்லாம... ஆனா நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். சரியா? ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
அப்டின்னா என்ன மனோ?... வாங்க..வாங்க.. வணக்கம்..வணக்கம்.. ;-) ;-) ;-)

RVS said...

@Chitra
வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்றோரின் தொடர் ஊக்கமும் ஒரு காரணம். நன்றி ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி! ஒரு விஷயம் தெரியமா? ஒன்னிரண்டு கேள்வி பதில்களை எழுதி அடிச்சுட்டேன். நீளம் காரணமாக. எல்லோரும் ப்ளாக் ஓபன் பண்ணி எழுதிப் பார்ப்பாங்க.. நான் போட்டோ ஏத்தி பார்த்தேன். பத்துல பத்துஜி மாதிரி நிறைய பேர் வருவாங்கன்னு தோணிச்சு.. எழுத ஆரம்பிச்சுட்டேன். நன்றி. ;-);-)

RVS said...

@பத்மநாபன்
அப்பாடி! ஒரு வருஷம் ஆச்சுன்னு நினைக்கவைக்காம இருந்தேனான்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு பத்துஜி! ரசனை மிக்க கமேன்ட்டுகளால் என் போன்றோர் பதிவுகளைக் கூட வாழவைக்கிறீர்கள்! நன்றி. ;-)

RVS said...

@பத்மநாபன்
கும்மி பலமா இருக்கும் போலருக்கு... ஒன்னும் சொல்லலை... ;-)

RVS said...

@raji
ஒரு தபா வீட்ல வேஷ்டி சுருங்கி முட்டிக்கு கொஞ்சம் கீழ வரைக்கும் இருந்தது. வீட்டம்மணியிடம் "இதுவே காவி வேஷ்டியா இருந்து.. கையில ஒரு கரும்பு கொடுத்தா..அசல் பட்டினத்தார் மாதிரி இருக்க மாட்டேன்" என்று கேட்டேன். "பட்டி...... பட்டி... ... நத்தார்... மாதிரியா..." என்று பட்டியில் வேண்டுமென்றே நாலுதரம் இழுத்து கேட்டாள். அன்றிலிருந்து யாராவது இவர் மாதிரி இருக்கேன் அவர் மாதிரி இருக்கேன் என்று சொன்னால் பின்னாடி என்ன பாம் வரப்போகுதோன்னு பயம்மா இருக்கு.

வாழ்த்துக்கு நன்றி.. தெறமை அப்படி இப்படின்னு சொல்லி என்னை ரொம்ப வெக்கப்பட வக்கீறீங்க.. மனசுல தோன்றதை எழுதறேன்.. அவ்வளவுதான். மற்றபடி உங்களை போன்ற நண்பர்கள் கமெண்ட்டு எழுதும் போது அகமகிழ்கிறேன்.

RVS said...

@கக்கு - மாணிக்கம்
வாழ்த்துக்கு நன்றி.
இந்த போட்டோ... எனக்கே ரொம்ப ஆச்சர்யம். டிஜிகேம்-ல இப்படி என்னை படம் புடிச்சு காமிச்சவுடன் நானே நம்பலை. நிக்கான் கேமரால ஏதோ கோளாறுன்னு நினைக்கிறேன். ;-)))))))

RVS said...

@அப்பாதுரை
//அண்ணே.. அவசரத்துல தனாவுக்கு பதிலா சனாவைப் போட்டுப் தலைப்பைப் படிச்சுட்டேன்.. மன்னிச்சுருங்க.. முழு பதிவையும் படிச்சுட்டு திரும்ப வரேன்.//

ஒரு பிசாசு பதிவரின் நேர்காணல்.. தமிழ்ல விளையாடுறீங்க.... அபாரம்.. அப்பாஜி.. ;-)

RVS said...

@அப்பாதுரை
//வாழ்த்துக்கள். (இரண்டாம் வருடத்தில் எதிர் வீட்டு மாமி பற்றி அதிகம் எழுதவும்)//
மாமி கேட்டாள் சந்தோஷப்படுவாள். ;-)

//பழைய பதிவுகளை நைசாகச் செருகினது நல்ல உத்தி. //
உங்களோட ரைட் ஜஸ்டிபை மாதிரி.. நீங்க தான் தலை எங்களோட துரோணர்.. ;-)

உங்கள் வாழ்த்துக்கும் அன்பிற்கும் நன்றி அப்பாஜி! ;-)

(கிரிக்கெட் முதல் ரன்.. தெரியலையே... )

RVS said...

@அப்பாதுரை
ஒரு தெருங்கற வட்டத்துக்குள்ளே என்னை அடக்கப் பார்க்கறாரே மாதவன்! என்ன சார் நீங்க.... ;-)

RVS said...

@எல் கே
அடப்பாவி அப்பாவி மாதிரி இருக்கேன் அப்படிங்கறீங்களா.. நிஜமாகவே நான் அப்பாவிதாங்க.. அப் 'பாவி' இல்லை... ஏற்கனவே மேலே மூணு பேர் ஜோடி சேர்ந்து கிளம்பியிருக்காங்க.. உங்களையும் சேர்த்து நால்வராவார்கள். நல்லா இருங்க... ;-) ;-) ;-)

RVS said...

@அப்பாதுரை
இல்லை அப்பாஜி! ராமராஜனை கூட்டிகிட்டு போய் டிராயர் போட்டு விட்டு "செண்பகமே.. ஒட்டகமே.. " அப்படின்னு பாட்டு பாடச் சொல்லி கறப்பார்கள் என்று நினைக்கிறேன்.. எதற்கும் ஒட்டக வல்லுநர் திரு பத்துஜி உங்களுக்கு தக்க பதில் சொல்லட்டும்!! நா ஒதுங்கிக்கிறேன்.. ;-);-)

RVS said...

@வித்யா
வாழ்த்துக்கு நன்றிங்க.. டொக் டொக் ன்னு நீங்க எழுதற மாதிரி இன்னும் வரலை.. ;-) ;.-)

RVS said...

@சுந்தர்ஜி
வாழ்த்துக்கு நன்றி ஜி.
4G - நீங்களும் சேர்ந்துட்டீங்களா? சைட் அடிக்கறதுக்கு நேரங்காலம் இடமெல்லாம் தேவையா? கண்ணுக்கு அழகாவும் குளிச்சியாகவும் உள்ள அனைத்தும் என்னை கவரும். (மூச்.. யாரும் இதை சத்த்தமாக படிக்காதீங்க.. என் மனைவிக்கு காதுல விழுந்துரப்போகுது.. )

கடைசியா சொன்னீங்க பாருங்க தல ஒரு வார்த்தை.. அது.. இதுக்கு மேல ஒரு மனுஷன் எவ்வளவு நேர்மையா நடந்துக்க முடியும்... வடிவேல் அடுத்த படத்துல இந்த வசனத்தை வச்சிகிறாராம். அனுமதி குடுங்க ஜி.
மீண்டும் ஒரு நன்றி. ;-)

RVS said...

@தக்குடு
நான் புண்ணியம் பண்ணியிருக்கேன் பா..
உன்னோட இந்த கமெண்ட்ட காமிச்சே நான் ராப்பூரா எழுதறத்துக்கு ரைட்ஸ் வாங்கிடுவேன்.. சமத்து..
என்ன இருந்தாலும் எழுத ஆரம்பிச்சதுல நீங்க எனக்கு சீனியர். (நான் குட்டிப்பையன்.. இளசு... வாலிபன்... இப்படியெல்லாம் சொல்லிக்கறதுக்கு சான்ஸ் கொடுங்கப்பா... )
வாழ்த்துக்கு கோடி நன்றி. ;-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஆமாம்... கேள்வி பட்ருக்கேன்.. கருத்துக்கு நன்றி.. ;-)

ADHI VENKAT said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் சகோ. நல்ல அறிமுகம். எழுதறத ஒத்திப் போடலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.

பத்மநாபன் said...

//அவசியம் தெரிஞ்சாவணுமே பத்மநாபன்//

அப்பாதுரை..கறக்கிற விஷயத்தை விடுங்க ..பறக்கிற விஷயங்கள் நிறைய இருக்குங்கறாங்க.. எங்கள் ஓமானிய ஓட்டுநர்கள் நைசாக ஒதுங்கி போய் ஒட்டகப்பால் குடித்துவிட்டு வந்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள்..அவசியம் தெரிஞ்சாகிற விஷயங்கள் நிறைய இருக்குமாதிரி தான் இருக்கு..பண்ணை நடத்துபவர்களை விவரமாக பேட்டி எடுத்து விட்டு பகிர்கிறேன்...

இளங்கோ said...

எனது அன்பு வாழ்த்துக்கள் அண்ணா.

வெங்கட் நாகராஜ் said...

ஒரு வருட நிறைவிற்கு வாழ்த்துகள். பல்சுவை விருந்து தந்து கொண்டு இருக்கீங்க, அதை எதற்கு நிறுத்தணும் நண்பரே! ஆணி அதிகமென்றாலும், தொடரவும். மேலும் பல சுவையான பதிவுகள், வரும் வருடங்களில் எழுத வாழ்த்துகள்.

மோகன்ஜி said...

எனக்கென்னமோ தக்குடு சொல்றது ரொம்ப சரின்னு படுது.வேற கோணத்துல யோசிச்சா, எதையாவது பண்ணிக்கட்டும்... நம்மள நச்சு
புடுங்காம இருந்தா சரின்னு என் தங்கச்சி விட்டிருக்குமோ?.. டமார் காளையான்னா சுத்துறார் வலைல நம்ப மச்சினர் ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆர்.வி.எஸ் சூப்பர்..அந்த சட்டையை சொன்னேன்!

suneel krishnan said...

ரொம்ப சந்தோஷம் :)
உங்களின் பலம் உங்கள் நகைச்சுவை ,சில இடங்களில் ஒப்பீடுகளில் உங்களை அடிச்சுக்க இங்க யாரும் தெரியல .தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..இந்த மூஞ்சியை வடக்கு ஆண்டார் வீதீலே பார்த்தா மாதிரி இருக்கே!

RVS said...

@கோவை2தில்லி
வாழ்த்துக்கு நன்றி சகோதரி. உங்களைப் போன்றோரின் ஊக்கமே வைட்டமின் டானிக் எனக்கு. நன்றி ;-)

RVS said...

@பத்மநாபன்
ஒட்டகப் பாலுக்கும் ஒசரக்க பரக்கரதுக்கும் கனெக்ஷன் இருக்கா? ஆச்சர்யமா இருக்கே! ;-)

RVS said...

@இளங்கோ
எனதன்பு நன்றிகள் தம்பி! ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல!!!
எழுதினான்.. எழுதினான்... இன்னும் எழுதுவான் அப்படின்னு சம்சாரம் அது மின்சாரத்தில் விசு வசனம் ஒன்னு வரும். ஹி..ஹி.. ;-)

RVS said...

@மோகன்ஜி
//டமார் காளையான்னா சுத்துறார் வலைல நம்ப மச்சினர் ?//
பக்கத்துல உட்கார்ந்து இந்த கமெண்ட்டை பார்த்த உங்க தங்கச்சி சிரி சிரின்னு சிரிக்கிறா! ;-)

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி சார்! அந்த சட்டையை செலெக்ட் பண்ணினது என் வாமபாகம். ;-)

RVS said...

@dr suneel krishnan
டாக்டர் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி! உங்களுடைய வாழ்த்து மென்மேலும் மெருகோடு என்னை எழுத வைக்கட்டும். நன்றி ;-)

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
மெய்யாலுமா? ஃபேமஸ் மூஞ்சி.. ஆங்காங்கே ஒட்டியிருப்பாங்க சார்! wantedன்னு போட்ருப்பாங்க.. ;-);-)

பத்மநாபன் said...

//ஒட்டகப் பாலுக்கும் ஒசரக்க பரக்கரதுக்கும் கனெக்ஷன் இருக்கா? // ஆர்.வி.எஸ், இந்த இடத்தில் பறக்கறதுக்கு என்ன அர்த்தம்னு அப்பாதுரைக்கு கண்டிப்பாத் தெரியும்..

சக்தி கல்வி மையம் said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். ..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Unknown said...

வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணே! தாமதத்திற்கு மன்னிக்க! ;)

geetha santhanam said...

ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கும். உங்கள் பதிவிலேயே நான் மிகவும் ரசித்தது பக்கத்து வீட்டு பாட்டு மாமி பற்றியது. ஒரு சாதாரண விஷயத்தைக் கூட ஒரு பக்கம் வரை சுவையாக எழுதும் திறமையும் வியக்க வைக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

ஹிஹிஹி... அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க..
>>>ஆர்.வி.எஸ், இந்த இடத்தில் பறக்கறதுக்கு என்ன அர்த்தம்னு அப்பாதுரைக்கு கண்டிப்பாத் தெரியும்..

RVS said...

@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
வாழ்த்துக்கு நன்றி! முதல் வருகைக்கும்தான். ;-) ;-)

RVS said...

@sakthistudycentre-கருன்
வாழ்த்துக்கு நன்றி ஸ்டடி கருன்!! வந்தேன்... ஆக்ரோஷமான பதிவா இருந்தது. கமேன்ட்டறேன். ;-)

RVS said...

@விக்கி உலகம்
வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றிங்க.. அடிக்கடி வாங்க ஸாப். ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை!! ;-))))))

RVS said...

@geetha santhanam
மிக்க நன்றி மேடம். தன்யனானேன். அடிக்கடி வந்து செல்வதற்கு இன்னொரு நன்றி. ;-)))))

RVS said...

//@ அப்பாதுரை said...

ஹிஹிஹி... அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க..
//
அப்பாஜி!! தெரியாதுங்க-விலேயே எல்லாமும் தெரியும்ங்கறது தெரியுது.. ஹி..ஹி..

Aathira mullai said...

இனி வரும் ஆண்டுகளிலும் இதே தாகத்துடன், இதே வேகத்துடன் தொடர்ந்து எழுத்து போதை குறையாமல் இருக்க, எப்போதும் ஃபுல்லாகித் தள்ளாட, நடுங்குகின்ற அந்தக் கரங்களுக்கு வாழ்த்துக்கள்.

RVS said...

@ஆதிரா
நன்றிங்க ஆதிரா!! என்ன உங்க டாக்டரேட் முடிச்சுட்டீங்களா? ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails