Monday, February 28, 2011

ஒரு சாமானியனின் பெயர்க்குறிப்புகள்

my name is

ம மா மி மீ மோ மொ மௌ போன்ற மகாரத்திலோ, க கா கி கீ கூ கு கெ கே போன்ற ககாரத்திலோ, த தா தி தீ போன்ற தகாரத்திலோ பெயர் சூட்டினால் இவ்வையகம் போற்ற உங்கள் தவப்புதல்வன் சிறந்து விளங்குவான் என்று டிவிக்கு டிவி மூலைக்கு மூலை இப்போது கூவும் நேமாலஜி அவ்வளவு பிரபல்யம் அடையாத ஒரு வருஷத்தில் நான் பிறந்ததால் பெற்றோருக்கு இதுபோல விஞ்ஞானத்தனமாக யோசித்து பெயர் வைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை.  வைத்தபிறகும் சுயம்புவாக முன்னாடி எம் சேர்த்தால் மன்னனாகிவிடலாம் என்று நம்பர் கணக்கு பார்த்து அதையும் வைத்துக்கொள்ளவில்லை. வைத்த பெயர் வைத்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
 
என்னுடைய சித்தப்பா மாமாக்களுக்கு மற்றும் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூணு விட்ட சொந்தபந்தங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் திருப்பெயர்; ஒரே திருநாமம் வெங்கட்ராமன். சில சமயங்களில் வெங்கட்ராமன் இன்று சென்னை வருகை என்று செய்தித்தாளில் உரக்கப் படித்தால் கூட என் பாட்டி என் சித்தப்பாவை ஜனாதிபதி ஸ்தானத்திற்கு உயர்த்தி "எப்படா இஞ்ச வரான்?" என்று கேட்காத தன் காதை தீட்டிக் கொண்டு கேட்பாள். சித்தப்பாவிற்கு ஏன் வெங்கட்ராமன் என்றால் தாத்தாவின் அப்பா வெங்கட்ராமன். பிற்கால சந்ததியினர் பாட்டன் முப்பாட்டன் பெயர்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயரை பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தால் தீர்ந்தது. பிள்ளைகள் அந்தப் பெயரைக் காப்பாற்றுமா என்று தெரியாது ஆனால் எப்படியும் மறக்கமாட்டார்கள். இப்போது உங்கள் பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி. பெயரைக் காப்பாற்றுதல் என்றால் என்ன?

இந்த அப்பா தாத்தா பெயர்களை வைக்கும் பாணியில் உச்சம் தொட்ட ஒரு சங்கதி. முன்பு என்னுடன் வேலை பார்த்த நண்பர் பெயர் பழனியப்பன். பழனியப்பனில் பிரச்சனையில்லை. அவர் அப்பாவின் பெயரும் அதுதான். அதையும் சரியென்று பொறுத்துக்கொள்ளலாம். அவருக்கு பிறந்த, அதாவது அப்பா பழனிக்கு பிறந்த பிள்ளை பழனியின் பிள்ளையின் பெயரும் பழனியப்பன். பயந்து போய் பீதியில் நான் கேட்ட கேள்வி இதுதான். "உங்க பையனுக்கு ஒரு பொண்ணு ப்ரியமுள்ள பழனிக்குன்னு லவ் லெட்டர் எழுதி கவர் மேல பழனியப்பன்னு உங்க வீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் பண்ணி.. பையனை தவிர்த்து மிச்சம் இருக்குற உங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் பிரிச்சி படிச்சா அந்தப் பொண்ணோட கதி என்னவாகும்.". பதிலுக்கு கேவிக்கேவி சிரித்தார். பதில் இயம்பவில்லை. இது இப்போது ஏற்பட்டிருக்கும் ஈமெயில் புரட்சிக்கு முன்னர் நான் கேட்ட கேள்வி. ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் இருந்தார்களாம். இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தில் ஒரு அட்ரஸில் ஒரு கதவிற்குள் இல்லை என்றும் காலங்கள் வேறு வேறு என்றும் அறிகிறோம்.

உன் பேரைப் பற்றி சொல்லுப்பான்னா ஏன் ஊர் பேரைப் பற்றி சொல்கிறாய் என்று நீங்கள் புருவம் நெரிப்பது புரிகிறது. முதல் பாராவில் வெங்கடசுப்பிரமணியன் என்ற என்னுடைய முழ நீளப் பெயரின் அரை முழத்தை அளந்தேன். கொள்ளுத்தாத்தாவின் பெயரை என் பெயருக்கு பாதியாக்கிய என் தாத்தா தன்னை விட்டுக்கொடுப்பாரா? தாத்தாவின் பெயர் சுப்ரமணியன். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. காலிரண்டும் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியில் நொடித்துவிட கம்போடு நாற்காலியில் உட்கார்ந்தபடியே பல காரியங்கள் சாதித்தவர். தன் தகப்பனார் பெயரில் பாதியும் தன் பெயரில் மீதியையும் சேர்த்து என்னை வெங்கடசுப்ரமணியனாக்கினார். வெங்கடராமனும் சுப்பிரமணியனும் வாழ்க்கையில் செய்ததை, சாதித்ததை நான் ...தித்தேனா ...திப்பேனா என்பது தெரியவில்லை. 


இப்படி ஒரு கூட்ஸ் ரயில் நீளப் பெயரை இட்டு என் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட்டால் "யன்.." என்று முடிக்கும் போது நிச்சயம் தெருமுனையை கடந்திருப்பேன். ஆகையால் உலகமக்களின் பயனைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் ஆர்.வி.எஸ்.எம் ஆனேன். பஞ்சம் பிழைக்க துரித கதியில் இயங்கும் சென்னைக்கு வந்த பிறகு அந்த நான்கெழுத்தும் இங்குள்ளோருக்கு பெரியதாகப்பட்டதால் அன்பு, அழகு, அறிவு மற்றும் கடமை போன்ற மூன்றெழுத்து வரிசையில் சுருக்கி ஆர்.வி.எஸ் ஆக்கப்பட்டேன். ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்? (இந்த தேவையில்லாத இடைச்செருகலை மக்கள் மன்னிக்க மற்றும் மறக்க வேண்டுகிறேன்!!)

ஆங்கிலத்தில் அழைப்பது பிடிக்காமல் என் தெருவில் வசித்த தமிழ் தீவிரவாதிகளின் அழைப்பிற்கு 'வெங்கிட்டு'வானேன். அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். செல்லத்தில் வெல்லக்கட்டியாக என்னை சின்னதம்பி என்று என் குடும்பம் என்னை அழைத்த சில வைபவ தினங்களும் என் நாட்காட்டியில் உண்டு. இதே சின்னதம்பி வக்கீல் பாலு சார் வீட்டு ராதாக்காவிர்க்கு "ஸ்மால் ப்ரதர்." கோபத்தில் திட்டும் போது "சுப்பிரமணியா கொப்பரவாயா" என்றும் பொளந்து கட்டிக்கொண்டு புதுப் பெயர்கள் என்னை வந்து அடைந்ததுண்டு. அப்போது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் ராமு சார் என்னை "வாடா ஹார்ட் அட்டாக்கு" என்று அட்டாக்கிங்காக கூப்பிடுவார். நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!

எனை அழைத்த எல்.கேவிற்கு ஒரு சல்யூட் அடித்து இந்த ரிலே ரேஸ் விளையாட நான் அழைக்கும் அன்பர்கள் பட்டியல் கீழே..

தக்குடு
மோகன்ஜி
மாதவன்
இளங்கோ
பாலாஜி சரவணா
வெங்கட்நாகராஜ் 
ராஜி
அப்பாதுரை

கூப்பிட்ட எல்லோரும் எழுதுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என் பெயரை சேர்ப்பதற்கு தோதாக படமளித்த புண்ணியவான் http://www.stanford.edu/

-


46 comments:

மோகன்ஜி said...

'பெரு பெத்த பெரு தாக நில்லு லேது'ம்பாங்க.
பெரு தான் பெரிசு:ஆனா குடிக்கதண்ணி கிடையாது..

பெத்தபேருவோடு விவரமேல்லாம் அருவித் தண்ணியான்னா கொட்றது ஸ்வாமி?
ஜமாயச்சுட்டேள் போங்கோ. எனக்கென்னமோ 'சின்னதம்பி'தான் பிடிச்சிருக்கு.

பத்மநாபன் said...

சுறுசுறுப்பா பதிவப் போட்டு சுறுசுறுப்பு சுப்ரமணி எனும் புது பட்டப்பெயரையும் வாங்கிட்டிங்க...

என்னையும் அழைத்துள்ளார் எல்.கே...நாம தான் ரொம்ப சு...று...சு.....று...ப்....பு அவ்வளவு சீக்கிரம் போட்டிருவமா.

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
sriram said...

இதில எனக்குப் பிடிச்சது வெங்குட்டு தான்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாதுரை said...

நைசா வேட்டு வெச்சீங்களே நைனா?

பழனியப்பன் கதை பிரமாதம். ஒரு பழனியப்பனோட லெட்டரை இன்னொரு பழனியப்பன் பிரிச்சு - நல்ல கதையோட முடிச்சு இருக்கே இதுல?

Chitra said...

நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... ரொம்ப சுவாரசியமாக எழுதி இருக்கீங்க!

எல் கே said...

@ஆர்வீஎஸ்

இவ்வளவு சீக்கிரம் பதிவு போட்டதற்கு நன்றி . உங்கள் பெயரில் கார்த்திக்கும் ஒன்றா ? அருமை ..

எல் கே said...

@பத்மநாபன்

உங்களை எழுத வைக்க என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு

ஸ்ரீராம். said...

கேக்காத காது பாட்டி காதை தீட்டும் வர்ணனை பிரமாதம். ரொம்ப சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

Anonymous said...

பெரிய பெயருடையவர்களின் பாடு உங்களுக்குமா? ரைட்டு. :)
அழைப்பிற்கு நன்றி அண்ணா. சீக்கிரம் எழுதிடுறேன்.
"ஐ லைக் ஸ்மால் ப்ரதர் " ஹி ஹி..

geetha santhanam said...

பெயர் புராணத்தை நகைச்சுவையோடு நல்லா சொல்லியிருக்கீங்க.
//ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்?//
RVS தான் பதிவுலகில் பெத்த பேரு எடுத்தாச்சே. (அதுசரி, நீங்கள் R-க்கு என்ன விளக்கம் என்று சொல்லவில்லையே!!)

சக்தி கல்வி மையம் said...

ஒரு பெயரில் இவ்வளவு விஷயங்களா?

Madhavan Srinivasagopalan said...

நல்லமுறையில் நகைச்சுவையாக எழுதி இருக்கிறாய் நண்பா..

தொடர அழைத்தமைக்கு நன்றிகள்.. ரெண்டு மூணு நாளுல எழுதிடுறேன்..(இன்னிக்கு தேதி மார்ச் 1 )

// அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். //

சொல்லவே வேண்டாம்.. நான் இந்த ஒண்ணு, ரெண்டு,
மூணு, நாலு பார்ட்டையும் படிச்சிட்டேன்.. அப்பவே தெரியும்..

ADHI VENKAT said...

பழனியப்பன் கதை நகைச்சுவையா இருந்தது. விதவிதமான தங்களது பெயர்களை தெரிந்து கொண்டோம்.

இளங்கோ said...

ஒருவருக்கு தான் எத்தனையெத்தனை பெயர்கள்.. :)

என்னையும் தொடர சொல்லி இருக்கீங்க... 'அண்ணன் சொல்லை தட்டாத தம்பி' என்ற பெயர் (இங்கேயும் பெயர் !!) வாங்க, கூடிய சீக்கிரம் நானும் எழுதி விடுகிறேன் :)

பத்மநாபன் said...

//உங்களை எழுத வைக்க என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு//

நம்ம பொழப்பு நேரம் ஒரு மாதிரியானது.. இதில் நெட் கிடைத்து அதில் வேகம் கிடைத்து ( இங்கு யு.எஸ்.பி மோடம் ) அப்புறம் நம் சிந்தனையை ஒத்திசைக்க வைப்பதற்குள் ஒரு வழியாக விடுகிறது..அதே இடத்தில் ஒரு பணிமாற்றம் காரணமாக கிடைக்கும் இடைவெளியில் இவ்வாரம் ஊர் வருகிறேன்.. மின்சாரத்தில் கிடைக்காத நேரம் சம்சாரத்தில் கிடைக்குமா பார்க்கலாம்

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நம்மளையும் கோதால எறக்கி விட்டுட்டீங்களா? முன்னாடியே பெயர்க்குழப்பங்கள் அப்படின்னு ஒரு பதிவு எழுதி இருக்கேன். இரண்டு மூன்று தினங்களில் எழுதுகிறேன்.. நகைச்சுவையாக இருந்தது தங்கள் பகிர்வு.

Kri said...

And missed out one more name RVSM? Aani Pudingi!

Kri said...

Ayya Aani pudungi AarveeEssEmm,
how do I write my comments in Tamiz?

raji said...

எந்த பதிவா இருந்தாலும் அதுல காமெடி
நெடி இருந்தாதான் அது ஆர் வி எஸ் பதிவுனு
தோணற அளவு கலக்கல் காமெடியா இருக்கு

என்னையும் ஒரு பதிவியா நெனச்சு(பதிவருக்கு பெண்பால் சரிதானா??!!!:-)) )
ரிலே ரேஸ்ல கலந்துக்க அழைத்தமைக்கு நன்றி சார்
(நம்மள யார் கூப்பிட போறாங்கனு இருந்த என் மூளையை தட்டி எழுப்பிட்டீங்க.
அதோட பலனை அனுபவிச்சுதான் ஆகணும் நீங்க)

கணிணி பழுது காரணமா இப்பதான் உங்க பதிவு படிக்க
முடிஞ்சது.அதனால ஏற்கனவே ட்ராஃப்ட்ல இருந்த
'சிந்திக்குமா சி பி எஸ் சி' யை முதல்ல ரிலீஸ் பண்ணிட்டேன்.இன்னிக்கு
"பெயர்க்காரணம்" போட்டுடறேன்

சாந்தி மாரியப்பன் said...

பெயர்க்காரணம்.. சுவாரஸ்யமா இருந்தது..

அது ஏன் 'வெங்கட..'ன்னு ஆரம்பிச்சாலே வெங்குடுன்னு சுருக்கிடறாங்க??

இராஜராஜேஸ்வரி said...

peyar ethanai peyar??

RVS said...

@மோகன்ஜி
அண்ணா.. என் பெயர் சூட்டி விழா பதிவிற்கு தங்களின் முதல் மொய் வரப்பெற்றேன். வரம் பெற்றேன். நன்றி... ;-)
சின்னதம்பி என் பாட்டி கூப்பிட்ட பெயர். எனக்கும் ரொம்ப பிடிக்கும். ;-)

RVS said...

@பத்மநாபன்
//சுறுசுறுப்பா பதிவப் போட்டு சுறுசுறுப்பு சுப்ரமணி எனும் புது பட்டப்பெயரையும் வாங்கிட்டிங்க...//
பத்துஜி பட்டப் பெயர் வைப்பதில் கில்லாடி நீங்கள்.. நன்றாக இருக்கிறது. எப்போது இந்தியா விஜயம்.. மெயிலில் தெரிவிக்கும்... இந்த முறை தவறாமல் மீட் பண்ணுவோம்... ;-)))

RVS said...

@sriram
வெங்குட்டு என் தெருப் பெயர். தெருவில் நிறைய பேர் அன்னியோன்யமாய் என்னை கூப்பிடும் பெயர். நன்றி ஸ்ரீராம். ;-) (எங்க அடிக்கடி தொலைஞ்சு போய்டறீங்க? )

RVS said...

@அப்பாதுரை
வேட்டு இல்லை அப்பாஜி.. தங்கள் வாயால் கேட்க விருப்பம். மூன்றாம் சுழியை திறக்க விருப்பம்.. விண்ணப்பம். அவ்வளவே. பதிந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம். ப்ளீஸ். ;-)))))

RVS said...

@Chitra
மிக்க நன்றி சித்ரா! ;-)))

RVS said...

@எல் கே
என் தாய் தந்தையர் கூப்பிடும் பெயர் கார்த்தி. ஒரு ஆள் பல பெயர்.. ;-)))))

RVS said...

@ஸ்ரீராம்.
வர்ணனையை ரசித்ததற்கு நன்றி. பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-)

RVS said...

@Balaji saravana
ஸ்மால் பிரதர் ஒரு செல்லப் பெயர். பிடித்திருக்கிறதா? ஓ.கே. சீக்கிரம் உங்கள் பெயர்களை அவிழ்த்து விடுங்கள்.. ;-)

RVS said...

@geetha santhanam
ஆர் என் இனிஷியல். தோப்பனார் பெயர் ராமமுர்த்தி. நான் ராமமுர்த்தி வெங்கடசுப்ரமணியன். ப்ளாக்-ல பெத்த பேரா? நன்றி மேடம்.. ;-)))))

RVS said...

@வேடந்தாங்கல் - கருன்
ஹி...ஹி... ஆமாம் கருண். நன்றி.. ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா.. பப்ளிக் வாச்சிங்... ஏம்ப்பா... ;-))))

RVS said...

@கோவை2தில்லி
பழனியப்பன் கதையல்ல நிஜம்... ஹி ஹி..
நன்றிங்க.. ;-))))

RVS said...

@இளங்கோ
தட்டாமல் எழுதி பாராட்டை தட்டிய தம்பிக்கு வாழ்த்துக்கள். நன்றி. ;-)))

RVS said...

@பத்மநாபன் said...

//உங்களை எழுத வைக்க என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு//
//மின்சாரத்தில் கிடைக்காத நேரம் சம்சாரத்தில் கிடைக்குமா பார்க்கலாம்//
அற்புதம் பத்துஜி!

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல... சீக்கரம் பதிவைப் போடுங்க... ;-))))

RVS said...

@Krish Jayaraman
சேகர்... http://www.google.com/transliterate/tamilஇந்த சைட்டுக்கு போ... தமிழ இங்கிலீஷ்ல அடி.. தமிழ அடிக்காதே....

RVS said...

@raji

எழுதுங்க படிக்கறோம்.. நோ ப்ரோப்ளம். இன்னிக்கி பயபக்தியா ஒன்னு எழுதியிருக்கேன். படிச்சு பாருங்க.. ;-))))

RVS said...

@அமைதிச்சாரல்
எல்லாரோட வாய்க்கும் வசதியா இருக்கோ என்னமோ....
கருத்துக்கு நன்றி.. ;-))))) (என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம்..)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க... அத்தனையும் எப்படி இருந்தது? ;-))))

தக்குடு said...

இந்த மாதிரி சுவாரசியமாவும்,ஹாஸ்யமாவும் எழுத முடியுமானு சந்தேகமா இருக்கு, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்...:)வில்லங்கமான விஷயத்துக்கெல்லாம் தக்குடு பேர் தான் உங்களுக்கு முதல்ல ஞாபகத்துக்கு வருமோ??..:P

RVS said...

@தக்குடு
விவரமான விஷயங்களுக்கு தக்குடு பேர் மொதல்ல வந்துது... ;-)
நீ என்னை விட சிறப்பா எழுதுவேப்பா! ;-))

Madhavan Srinivasagopalan said...

நீங்கள் ஆவலுடன் வெகு நாட்களால (!!) எதிர்பார்த்த
பெயர்க்குறிப்பு

Unknown said...

உங்க பெயர்க் காரணத்தைப் பற்றி நல்லா நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க. உங்களோட பதிவுகள் பெரும்பாலும் நகைச்சுவையா இருக்கு. எப்படி சார் இப்படி எழுதறீங்க?
அப்புறம் உங்க பெயர்ல ஒரு சந்தேகம்.உங்க பெயர் வெங்கடசுப்பிரமணியன்,அதை சுருக்கி ஆர் வி எஸ் எம் னு சொல்லி இருக்கீங்க?அந்த கடைசி 'எம்'னா என்ன சார்?

V Mawley said...

லா.ச.ரா ஓர் கதையில் .( ? ) எழுதியிருப்பார்- இதழ்கள் தொகுப்பில் இருக்கலாம் என்று நினைக்கிறேன் ;
"...எங்க பக்கத்தாத்து மாமிக்கு கொழந்தேள் இல்ல ; அதனால என்ன கண்ணா - னு கூப்பிடுவா;எங்கம்மா தீவிர
முருக பக்தை( ஆத்துல கரிகா ஒண்ணுமில்லையே முருகா!ன்னு கரிகா கூடையபார்த்தா போனவாரம்
வாங்கின ரெண்டு சேப்பங்கிழ்ந்காவது கிடைக்கும்; யாராலும் திறக்கமிடியாத பேனாவை நான் முருகா!ன்னு
கைவெச்சு ஒருதிருகு திருகினா ஈசியா திறந்துனுடும் !) அதனால என்ன ' குமார்' னு கூப்பிடுவா;எங்கப்பா
பெரியவாளைப்போய் தரிசனம் பண்ணிட்டு வந்ததும் நான் பொறந்தேனாம் ; அதனால எனக்கு சந்திரசேகர்-னு
பேர்;அப்பாக்கு கோவம் வந்தா 'சேகர்' னு ஒரு கத்து கத்துவா!எனக்கு இப்படி நிறைய பேர் இருக்கறதினால
பசங்கல்லாம் என்னை ' அஷ்டோத்திரம்' னு கிண்டலடிப்பாணுக..." ; ...உங்கள் பெயர் புராணம் என்னையும்
blog க்குஇழுத்துவிட்டது ! நீங்கள் எழுவதைஎல்லாம் படித்துக்கொண்டுதான் தான் இருக்கிறேன் ! ஆனாலும்
பின்னூட்ட்ம் போடுவதற்கெல்லாம் எனக்கு ஞானம் போறாது!நான் உங்கள் ரசிகன் என்று மட்டும் கூறி
முடித்துக்கொள்கிறேன்...
மாலி -
....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails