Saturday, May 9, 2015

சரித்திரத்தைப் புதினப்படுத்துதல்

எண்பதுகளின் மன்னை நேஷனல் ஸ்கூல். ஆறாவது செக்ஷன்களை தடுப்பில் பிரித்த சங்கர ஹால். தரையில் உட்கார்ந்த ஆறாவது ஏழாவதில் வி. தியாகராஜன் சார் ஹிஸ்டரி வாத்தியார். ஒரு கண்ணில் பூ விழுந்திருக்கும். அமர்க்களமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ். கூலிங் க்ளாஸில் சைக்கிளில் வந்திறங்குவார். ஒவ்வொருத்தர் காதுக்கும் பிரத்யேகமாக விழுவது போல பாடம் நடத்துவார். அக்பரோ... பாபரோ... அப்போதெல்லாம் வரலாறு பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை. இப்போது வில்லியம் Dalrylmpleனின் The Last Mughalலும் Jhon Keayயின் Inda - A Historyயும் புரட்டிப்பார்க்க ரவையோண்டு ஆர்வம் தலைதூக்கியிருக்கிறது.

Tamil Heritage Trustசங்கத்தினர் பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சரித்திரம் மெச்சும் பயனுள்ள பல கூட்டங்களை தி.நகர் தக்கர் பாபாவில் டக்கராகக் கூட்டுவர். (ஆவிபறக்கும் டீ காஃபியிம் பருகத் தருவார்கள்) இந்த வாரம் சரித்திர புதினங்கள் எழுதும் ஆர். வெங்கடேஷ். Fictionalising History என்பது தலைப்பு. சமூக நாவல்கள் எழுதி மெசேஜ் சொல்லி லோல்படுவதைக் காட்டிலும் சரித்திர நாவல் எழுதி வம்படிபடாமல் இருக்கலாம்.... யாரும் சர்ச்சை கிளப்பாதவரை... என்று கேஷுவலாக சொன்னார். நல்ல பன்ச். சரிதான். சோழர்களோ பாண்டியர்களோ பல்லவராஜனோ உயிர்த்தெழுந்து சிரச்சேதம் செய்ய வாளெடுக்கப்போவதில்லை.

ஒரு மணிநேரம் மாலிக் காபூர், அலாவுதீன் கில்ஜி, முகம்மது பின் துக்ளக், பதூதா, பாண்டியர்கள், மருது பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் என்று ராஜாதி ராஜாக்களை சம்பவங்களில் சுவையாகக் கோர்த்து ஒவ்வொருத்தராகக் கொண்டு வந்து பார்வையாளர்கள் பக்கத்தில் அரூபமாக அமர்த்தினார். காட்டாற்று வெள்ளம் போல தங்குதடையில்லாமல் சரித்திர நிகழ்வுகளைப் பொழிகிறார். “டினிங்.. டினிங்...” என்று சிந்தையைக் கலைத்து வந்து விழும் அகால எஸ்ஸெம்மெஸ்ஸை ஒரு நொடி பார்த்துவிட்டால் போச்சு. அங்கே மாலிக் காபூர் கோஹினூர் வைரத்தை லவட்டிக்கொண்டு போன நிகழ்வை மிஸ் பண்ணிடுவிடுவோம். அப்படியொரு வேகம் சொற்பொழிவில். சம்பிரதாயமான தமிழில் பேசி கூட்டத்தில் மிலிட்டரி விறைப்பு ஏற்படுத்தவில்லை. பக்கத்தாத்து ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் மாமா திண்ணையில் உட்கார்ந்து மணிப்பிரவாளமா பேசுவாரே... அந்த மாதிரி ஆங்கிலமும் தமிழும் டிஎன்ஏ ஸ்ட்ரக்சர் மாதிரி பிண்ணிப் பிணைந்த ஒரு பேச்சு நடை. அரங்கு நிறைந்த ஹாலில் ஆர்வமாய்க் கலந்திருந்த ஆங்கிலேயப் பெண்மணிக்கும் புரிய வேண்டாமா?

வரலாற்று நிகழ்வுகளை புனைவுகளின் ஊடே சொல்லும்போது இருக்கும் சுதந்திரத்தையும் சௌகரியத்தையும் பற்றி பேசினார். சித்தூர் ராணி பத்மினி, மதுராந்தகத் தேவர் போன்ற கதாபாத்திரங்களின் புனைவுத்தன்மையின் வாயிலாக கதாசிரியர்களின் திறமையை எடுத்துப்பேசினார். புனைவுகளால் கோர்க்கப்படும் வரலாற்று நிகழ்வுகள் சுலபமாக மக்களிடம் சென்றடைகிறது என்ற உண்மையை அழுத்திக்கோடிட்டார். ஏழாவதில் ஹிஸ்டரி வகுப்பில் பராக்கு பார்த்தது பளிச்சிட்டது.

மாலிக் காபூரின் ஸ்ரீரங்கம் மதுரை படையெடுப்புகள் இந்திய சரித்திர வரலாற்றில் கறுப்புப் பக்கங்கள். கொள்ளையடித்துக்கொண்டு போனான். கட்டிடங்களை தரைமட்டமாக்கினான். மீண்டும் மீண்டும் செழித்தது எவ்வாறு? ஐந்தாறு பாண்டியர்கள் ஹைரார்கி சார்ட் போட்டுக்கொண்டு மதுரையை அரசாண்டதை விவரித்தார். கோஹீனூர் வைரத்தை வைத்திருந்த மன்னன் ஒருவனின் தலையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி “எங்கேடா வைரம்?” என்று மிரட்டிக் கேட்பினும் வாய் திறக்க மறுத்ததைச் சொல்லும் போது மனிதர்களின் வினோத ஆசைகளின் உக்கிரம் புரிந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் எழுதியதைப் பற்றிச் சொன்னார். பொன்னியின் செல்வன் என்று ராஜராஜசோழனுக்கு கல்கி வைத்ததைப் பற்றிய ஹேஷ்யப் புதிர் ஒன்றைப் போட்டார்.

வல்லத்தரசன் வந்தியத்தேவன் நீராடி ஓடிய காவிரியை பொன்னி நதியின் செல்வனாக அவனுக்கு அடைமொழி தராமல் ஆனால் தஞ்சையிலிருந்து நாற்பது கி.மீ தூரத்தில் ஓடிய பொன்னியை ராஜராஜனுக்கு ஏற்றிச் சொன்னது எப்படி என்று ஒரு கேள்வியை எழுப்பி கச்சியப்ப சிவாச்சாரியார் ஓரிடத்தில் சொன்ன பொன்னியை கல்கி எடுத்தாண்டிருப்பதைச் சொல்லிச் சிலாகித்தார். பிரசங்கத்தில் இந்த இடம் எனக்கு கொஞ்சம் பிசுபிசுப்பாய்தான் ஞாபகம் இருக்கிறது. தீட்டிய முளைக்குள் பிரதியெடுத்தவர்கள் திருத்தலாம்.

அலாவுதீன் கில்ஜி எண்ணற்ற மங்கோலியர்களைக் கொன்று குவித்து அவர்களது மண்டையோடுகளை நகர எல்லையில் பிரமிடு போல குவித்து வைத்து மிரட்டியதைச் சொல்லிவிட்டு சரித்திரத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒரு கதையாக வடிக்கும் வாய்ப்பிருப்பதை எடுத்துக்கொடுத்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலிருக்கும் ஒரு அர்ச்சாவதாரத்தின் கண்களில் இருந்த ஆர்லாஃப் வைரங்களைப் பற்றிச் சொல்லும் போதும், அழகிய மணவாளர் போன்றே தில்லையம்பல நடராசப் பெருமானை முகம்மதிய படையெடுப்பின் போது ஒருமுறை திருஆரூரில் கொண்டு வந்து வைத்துக்கொண்டதைப் பற்றியும் ஆச்சரியமான பல வரலாற்றுத் தரவுகளை அசால்ட்டாக அள்ளித் தெளிக்கிறார்.

சமீப காலங்களில் கூவம் நதிக்கரை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டாயிரம் கி.மீ கங்கை, எண்ணூறு கீ.மி காவிரி போன்ற நதிக்கரை நாகரீகக் கதைகள் போல திருவிற்கோலத்திலிருந்து சென்னை வரை ஓடிவரும் எழுபத்தி சொச்சம் கி.மீ கூவத்திற்கும் கீர்த்திமிகு கதைகள் பல உண்டாம். திருவிற்கோல கூவம் பற்றி சொல்லும் போது அங்கிருக்கும் ஈஸ்வரன் ஆறுமாதங்கள் வெண்மையாகவும் ஆறுமாதங்கள் சிகப்பாகவும் மாறும் தன்மை கொண்டவர் என்று உபரி தகவல் ”டொய்ங்” என்று மூளையிலிருந்து வந்து விழுந்தது. கோயம்பேடு கோயிலில் (எந்த கோயில்?) சீதாதேவியின் கர்ப்ப சிலை வடித்திருக்கிறார்களாம். விருந்திட்ட ஈஸ்வரராகிய திருக்கச்சூர் ஆலக்கோயில் மதிலுக்கு உட்புறத்தில் ராஜராஜசோழனைப் பற்றிய கல்வெட்டுகள் வெளியே உள்ளூர் சோழர்களை “திரிலோகச் சக்கரவர்த்தி”க்கிய கல்வெட்டுகள்.

மப்பேடு சிங்கீஸ்வரர் கோயிலுக்கு நானும் என் அணுக்க தோழர்களும் சென்றிருக்கிறோம். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிவிட்டோம். ”ஆஞ்சநேயர் பாடின இடம்... வீணையோட ஹனுமார் சிலை ஒண்ணு இருக்கும் பாருங்க... உங்க பசங்களைப் பாடச் சொல்லுங்க.. பாட்டு நல்லா வரும்...” என்று ஒரு ஆஸ்திக அன்பர் அருளிச்செய்தார். வெங்கடேஷ் அந்த கோபுரத்தில் ஸ்ரீரங்கநாதர் போல தலைக்குக் கையைக் கொடுத்து படுத்திருக்கும் ஒரு மானுடரின் சுதையைப் பற்றிச் சொன்னார். யாரவர்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மதுரை கோயிலெல்லாம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் என்று கண்டுபிடித்ததைச் சொன்னார். அவர் பெயர் அரியநாத முதலியார்.

கூவக்கரை சிந்தாதிரிப்பேட்டையின் ஒரு குட்டி வரலாறு பேசினார். தெருக்கள் நேராக இருக்குமாம். டெக்ஸ்டைல்ஸ் நிறைய விற்ற இடம். காஞ்சி ஆரணி போன்ற ஊர்களிலிருந்து வரும் வியாபாரிகளை ஈர்க்கும் விதமாக விசாலமான தெருக்கள் என்றார். சில மாதங்களுக்கு முன்னர் ஓரமாக நடந்து சென்ற போது கட் அடித்து ”சாவுகிராக்கி..” என்று அர்ச்சித்து “வூட்ல சொல்லிட்டுவண்ட்டியா?” என்று குசலம் விசாரித்த சி.பேட்டை ஆட்டோகாரர் கண்முன் வந்தார். முதன் முதல் மோட்டார் கம்பெனி சிம்ஸன்ஸ். முதல் மிருகக்காட்சி சாலையாக குரங்கும் சிறுத்தையும் அமைந்த இடம். சிறுத்தையில்லாத போது குறைந்த கூட்டம். மெடிகல் காலேஜ் அவார்ட்டில் இடம் பெறும் பெண்மணியின் பெயர். அவர் பேசப்பேச அறையில் கூவம் மணத்தது.

ஆயிரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டாயிரங்களின் மனிதர் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ். ( Venkatesh Ramakrishnan )
சரித்திரத்தின் புனிதம் கெடாமல் புதினப்படுத்துதல் சிறப்புதானே!

பின்குறிப்பு: நேற்றிரவே எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நினைவில் இருந்திருக்கும். என் ந்யூரான்களின் பலம் இவ்வளவுதான். இன்னும் சில சம்பவங்கள் நினைவிருந்தாலும் பெயரும் ஊரும் ஞாபகத்திற்கு வர பிகு பண்ணுகிறது. Balasubramanian Natarajan Radhika Parthasarathy, Chitra Nagesh , Rangarathnam Gopu, Badri Seshadri, Kishore Mahadevan, Vaidyanathan Ramamurthy போன்ற ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவரோ அல்லது வரலாற்றைக் கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர்களோ மேற்கூறிய சம்பவங்களை அலசலாம். என்னை அடித்துத் துவைக்காமல்.

தி ஜட்ஜ்

”சபரி.. செமையா படம் பார்க்கிற மூட்ல இருக்கேன்.. ஏதாவது நல்ல படம் வச்சுருக்கியா?”

”மாமா.. ராபர்ட் டௌனி ஜூனியர் நடிச்சுருக்கான்.. அம்பது வயசு... அயர்ன் மேன்.. ஷெர்லாக்ஹோம்ஸ்லல்லாம் நடிச்ச ஆளு.. ஃபர்ஸ்ட் க்ளாஸ் மூவி.. பாரு...”

மருமான் Sabareesh Hariharan புண்ணியத்தில் நல்ல ஆங்கிலப் படங்கள் ஒரு கொத்து பார்த்திருக்கிறேன். நல்ல ரசிகன். கல்லூரியில் படிக்கும் போதே ஞானஸ்வரூபனாக இருக்கிறான். நாம் தோள் மேலேயும் மார் மேலேயும் போட்டு ”பட்டுக் குட்டி... ஜில்லு.. குல்லு..” என்று உச்சிமோந்து கொஞ்சிக் குலாவி வளர்த்த குழந்தைகளின் ரசனைகள் நல்ல ஸ்திதியில் இருப்பது நமக்கு பெருமை பூசிய சந்தோஷம். பெருமிதம்.

அவனுடைய சிபாரிசின் பேரில் டேவிட் டாப்கின் இயக்கத்தில் The Judge பார்த்தேன். அற்புதமான படம். குடும்ப படம். நான்கு அண்ணா தம்பிகள் ஒரே மாதிரி வெள்ளையில் தொளதொளா குடும்ப சட்டைப் போட்டு “லாலாலி... லாலாலி...” என்று கோரஸாகப் பாட்டுப் பாடி... குடும்ப வில்லனை பழிக்குப் பழி வாங்கி... ஒரே குடும்ப பாட்டில் கலெக்டர் ஆகி.. ஒரே குடும்ப மொக்கை காமடி... ஒரே குடும்ப ராக பாட்டில் கழுத்தை அறுக்காமல்.... மெல்லிய குடும்ப பின்னணியும்... கொஞ்சம் சஸ்பென்ஸும்.. கொஞ்சம் பப்பி லவ்... கொஞ்சம் பிள்ளைப் பாசம்... கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனம்.. கொஞ்சம் ரொமான்ஸ்... கொஞ்சம் சகோதரத்துவம்... கொஞ்சம் ஹீரோயிஸம்.. கொஞ்சம்.. கொஞ்சம்.. வாட் நாட்?

கச்சாமுச்சாவென்று புஸ்புஸ் கிராஃபிக்ஸில் பளீர் ஒளியில் கண்வலி வரவழைத்து படார் ஒலியில் செவிடாக்கும் டப்பாப் படங்களுக்கு மத்தியில் அழுத்தமானக் கதையையும் அதற்கேற்ற நடிகர்களும் வலிமையான திரைக்கதையையும் திரைச்சூழ்சிலைக்கேற்ற இசையும் காட்சியோடு கரைந்து போகும் வசனங்களையும் வைத்து எடுக்கப்படும் சாதாரண படங்களே வெள்ளித்திரையில் அசாதாரணமாகக் கோலோச்சுகின்றன என்று திரைச்சினிமாவின் சூத்திரமாக கோயிந்து ஒருவர் அசால்ட்டாகச் சொன்னார்.
ஹங்க் பாமர் சிகாகோவில் சிகரத்திலிருக்கும் அட்வகேட். ஜித்தன். எப்படியாகப்பட்ட கேஸிலும் க்ளையண்ட்டை விடுவிக்கும் அசாத்திய திறன் படைத்தவர். அவரது தந்தை ஜோஸஃப் பாமர் சொந்த ஊரான கார்லின்விலேயில் நீதிபதியாக இருக்கிறார். நீதித்தராசின் முள்ளை ஸ்திரமாக நடுவில் நிறுத்தி பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழ்பவர்.

அண்ணா தம்பி மூன்று பேரில் ஹங்க் நடுவர். தந்தை ஜோஸஃப் பாமருடன் எப்போதுமே ஒரு உரசல். சிறுவயதில் காரைக் கொண்டு போய் மோதி மூத்தவர் டேலின் ப்ரகாசமான பேஸ்பால் வாய்ப்பை கெடுத்துக்குட்டிச் சுவராக்கிவிட்டார் என்று ஹங்க்கைக் கறுவிக்கொண்டே இருக்கிறார் ஜோஸஃப். மேலும் அந்த வழக்கில் தானே நடுவராக இருந்து மனுநீதி சோழன் போல தன் சொந்த பிள்ளையை சிறுவர் சிறைக்கு அனுப்புகிறார். அப்புறம் ஒரு உள்ளூர் வழக்கில் ஹங்க்கைப் போன்ற சிறுவனுக்கு ஒரு முறை தீர்ப்பில் சலுகைக் காட்டியும் மறுமுறையும் அதே தவறு செய்ததால் இருபது வருடங்கள் சிறைதண்டனை விதித்தும் தீர்ப்பளித்து தர்மதேவனாகிறார்.

இச்சூழ்நிலையில் தனது தாயார் இறந்துபோன செய்தி கிடைத்து கோர்ட்டிலிருந்து பாதியில் சொந்த ஊருக்கு வருகிறார் ஹங்க். அன்னையின் சாவிலும் தந்தை பாமர் ஹங்க்குடன் முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். தமிழில் எழுதினால் சிதைந்துவிடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால் சினிமாடோகிராஃபரின் பெயரை இங்கே அப்படியே தருகிறேன். Janusz Kamiński. சின்ன ஊரான கார்லின்விலேயின் நீல வானத்தை, அதே வண்ண அமைதியான ஏரியை, சுற்றிலும் படர்ந்திருக்கும் மரம்செடிகொடிகளின் பச்சைகளை வண்ணம் கெடாமல் குளிர்ச்சியாகக் காட்டுகிறார். ஆங்கிலப் படங்களில் கழுகுப் பார்வையாக ஆகாசத்திலிருந்து ஒரு ஊரையும் அதன் இயற்கைச் சூழலையும் காட்டுவது மரபாகயிருக்கிறது. இருபக்க பயிர்களுக்கிடையே கிழித்துக்கொண்டு போகும் தார்ச்சாலை நம்ம மாயவரம் சுற்றுப்பகுதியை ஹாலிவுட்டில் காட்டுகிறது.

அம்மாவின் துஷ்டிக்கு வந்துவிட்டு வழக்கம்போல ஏற்படும் வாய்த்தகராறோடு சிகாகோவிற்கு திரும்புகிறார் ஹங்க். விமானம் கிளம்புவதற்கு முன்னர் க்ளென் ஹங்க்கைக் கூப்பிட்டு தந்தையை போலீஸில் விசாரிக்கின்றனர் என்று கூப்பிடுகிறார். வந்து பார்த்தால் இவர் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த அந்த குற்றவாளி விடுதலையாகி வந்து பின்னர் அவனைக் காரேற்றிக் கொன்றுவிட்டார் என்பது வழக்கு. இங்கிருந்து சூடுபிடிக்கிறது படம். ஹங்க் அவரது தந்தைக்காக வாதாடுகிறார். நீதிபதி தந்தைக்கு இளம் குற்றவாளியாக இருந்த ஹங்க்கை இன்னமும் பிடிக்கவில்லை. சட்டக்கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றதை சொல்லி தந்தையை குளிரிவிக்கப் பார்க்கிறார். ஊஹும். இடையில் தன்னுடைய பால்ய ஸ்நேகியின் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். பேசுகிறார்கள். கிஸ்ஸுகிறார்கள். அந்த ஸ்நேகிதியின் பெண்ணை அதற்கு முன்னர் ஒரு பாரில் பார்த்து கட்டிப்பிடித்துக்கொள்கிறார். அது தனக்குப் பிறந்த பெண்ணோ என்கிற சந்தேகம் அவரை குற்றக் குறுகுறுப்படையவைக்கிறது. வேண்டாம் இந்த சினிமாவின் கதையை சொல்வதை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

எத்துனை வாய்த் தகராறு வந்தாலும் அப்பா-மகன் பாச சீன்களைக் கொட்டிவைத்திருக்கிறார்கள். நீதியரசராக நடித்த ராபர்ட் டுவல்லுக்கு ஹாலிவுட் ஃப்லிம் அவார்ட்களில் Best Supporting Actor கிடைத்திருப்பதை அறிகிறோம். யதார்த்தமான நடிப்பு. பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். பல இடங்களில் இசை சரளமாக வசனம் பேசுகிறது. காட்சிகளைக் கெட்டிப்படுத்துகிறது.

க்ளைமாக்ஸ்? நான் எழுதப்போவதில்லை. ஒன்றுமட்டும் சொல்வேன். தமிழ்சினிமாத்தனமான முடிவு இல்லை. நாம் ஏன் இதுபோன்ற படங்கள் எடுப்பதில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை. நல்ல படங்கள் வெற்றியடைவதில்லை என்று இயக்குநர்களும், எங்கள் பார்வையில் இது நல்ல படமாக இல்லை என்று ரசிகர்களும் ஆதிகாலத்து இக்கட்டான கேள்வியான கோழியா? முட்டையா? என்று கருத்து அடிதடியில் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம்.]

தி ஜட்ஜ் படத்தின் சில காட்சிகள் அடங்கிய சின்ன பிட்டு இங்கே: https://www.youtube.com/watch?v=wXWe0IM_sEM#t=77

கணபதி முனி - பாகம் 21: சுதந்திரத் தீ

பால் ஆதிசேஷய்யாவுக்கு பைபிளை வாசித்துக் காண்பித்தார் கணபதி முனி. பலமுறை என்னவெல்லாமோ பேச வாயெடுத்த பாலை திறக்கவிடாமல் பைபிளிலிருந்து வாசகங்களை வர்ஷித்து அசத்தினார். 

“மொத்த நகைப்பெட்டியே கை கொள்ளாமல் அள்ளக் கிடக்கும் போது எந்த முட்டாள் திருடனாவது ஒரேயொரு அட்டிகை போதும் என்று திருப்தியோடு திரும்புவானா?” என்று கேட்டார் கணபதி முனி. பால் ஆதிசேஷய்யாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. கணபதியின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. கூசிக் குறுகி நின்றார். 

“ஜாதிமதபேதமில்லாமல் நல்ல கருத்துகள் எதில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே உத்தமம். அதுவே பண்பட்டவர்க்கு அழகு.” என்று பால் ஆதிசேஷய்யாவை நெறிப்படுத்தினார். ”மதம் மாறினாலும் அவர்களது தாய்மண் மாறுவதில்லை. அது இந்தியாதான்...” என்று அறுதியிட்டுக் கூறினார். ”அனைவரும் சுதந்திர தாகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். மேலும் கண்ணியத்தோடு வாழ்வதின் மூலம்தான் அந்நியர்கள் நம்மை மதித்துப் போற்றுவார்கள்.” என்று ஹிந்துக்களுக்குப் பிரசங்கம் செய்தார். 

பஞ்சாப் மற்றும் பெங்கால் சுற்றுவட்டாரங்களில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்த காலம் அது. வேலூரில் பயிலும் மாணவர்களுக்கு இந்த செய்தி புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. பாரதத்தின் பல்வேறு மாகாணங்களில் பயிலும் மாணவர்களிடம் தொடர்பில் இருந்த சிலர் மெட்ராஸில் சுதான்வா தலைமையில் தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் எப்பாடுபட்டாவது சுதந்திரம் அடைந்தே தீருவது என்றும் முடிவெடுத்திருப்பதாக அறிந்தனர். அதில் முக்கால்வாசி பேர் கணபதியின் சீடர்கள். 

சுதான்வா ஒரு படையோடு வேலூருக்கு வந்தார். ”புரட்சிக்கு வித்திடும் செயலாக்கங்களை தீர்மானித்துவிட்டோம். உங்களுடைய ஆசி இந்த இயக்கத்துக்கு தேவை” என்று கணபதியிடம் வந்து தலை வணங்கினார்.
“இருகைகளால் அணைத்துக் கட்டிப்பிடித்தால் அடங்கும் அளவிற்கு இருக்கும் ஒரு யுவசேனையை வைத்துக்கொண்டு அதிகாரமிக்க ஒரு பெரிய சர்க்காரை எதிர்த்து வெற்றி காணலாம் என்று நினைப்பது அறிவீனம்” என்று புத்தி புகட்டினார் கணபதி.

“இளைஞர்களே சமயம் வரும் வரை அமைதியாகக் காத்திருப்போம். அதுவரையில் எதுவும் தேவையில்லாத போராட்டங்களிலும் அத்துமீறல்களும் செய்யவேண்டாம்” என்று சுதான்வாவும் கேட்டுக்கொண்டார்.

அன்று சாயந்திரம் தலைமையாசிரியர் பி.எஸ்.ராகவாச்சாரி தலைமையில் மாணவர்கள் கூட்டம் ஒன்று மஹந்த் ஹை ஸ்கூலில் நடைபெற்றது. கணபதி அர்த்தபுஷ்டியாகப் பேசினார். மாணவர்களை சரியான பாதைக்கு திருப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். “பொறுப்பில்லாமல் கண்ட வாசகத்தையும் சொல்லிப் பிரசாரம் செய்துகொண்டு திரிபவர்களிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். அவர்களது மலிவான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உங்களை சாமர்த்தியமாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்தப் பருவத்தில் உங்களுக்குக் கல்விதான் பிரதானம். அறிவைத் தீட்டிக்கொள்வது அதிமுக்கியம். ”

கணபதியின் இந்த உணர்ச்சிகரமானப் பேச்சு அங்குக் குழுமியிருந்த பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கும் பரமதிருப்தியாக இருந்தது. சிலுப்பிக்கொண்டு கோதாவில் இறங்கிய மாணவர்களிடம் மனமாற்றத்தையும் போக்கிலும் வித்தியாசம் இருந்ததால் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். சிறுசும் பெருசுமாக நிறைய பேர் கணபதியிடம் ஆன்மிக வழிகாட்டுதலுக்கும் ஜப உபாசனையும் பெற கூடாரம் கொள்ளாமல் குவிந்தார்கள். 

மந்திர ஜபத்தின் மகிமையை சில மாணவர்கள் உணரவில்லை. கணபதியிடம் ஆன்மிக உபாசனையும் அதன் உபயோகமும் பற்றி ஜம்பமாகப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் ஜபம் முடிந்து அமர்ந்திருந்தார் கணபதி. 

“என்னைக் கொஞ்சம் ஓய்வெடுக்க அனுமதியுங்கள்...” என்று கேட்டுக்கொண்டுக் கண்ணை மூடி ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டார். ஜபமாலை அவர் காலருகே கிடந்தது. அவரது உதடுகள் ஏதோ மந்திரம் ஜெபிப்பது போல அசைந்தது. இரு நிமிடங்கள் அங்கே நிசப்தம் நிலவியது. திடீரென்று ஒரு அதிசயம் நடந்தது.

கணபதிக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த ஒரு மாணவன் சன்னதம் வந்தது போல வேத மந்திரங்களை சத்தமாக உச்சரிக்கத் துவங்கினான். கணபதி மூடிய கண்ணைத் திறக்கவில்லை. அந்தப் பையன் மந்திரம் உச்சரித்துக்கொண்டே இருக்கிறான். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
சற்று நேரத்தில் கணபதி கண் விழித்துச் சிரித்தார். ஜபமாலையைக் கையில் எடுத்துக்கொண்டார். வெளி உலகே தெரியாமல் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த அந்த மாணவன் படக்கென்று நிறுத்தினான். கண் விழித்தான். மலங்க மலங்க பார்த்தான். சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு அவன் சொன்ன மந்திரங்களின் வார்த்தைகள் தெளிவாகப் புரியவில்லை. ஆனால் அது உச்சரிக்கப்பட்ட விதம் ஆச்சரியமளித்தது. வேதபாடசாலையில் பயின்று ஜபதபங்களில் கைதேர்ந்தவரால் மட்டுமே அதுபோல ப்ரவாகமாக மந்திரம் சொல்லமுடியும். கூட்டம் வாய் பிளந்தது. அதிர்ச்சியில் மௌனமாகத் திரும்பியது.

ஹெட்மாஸ்டர் ராகவாச்சாரி கடிகாசலத்திற்கு புண்ணிய யாத்திரையாகச் சென்று திரும்பினார். அங்கே தரிசித்த தெய்வங்களைப் பற்றி வர்ணித்துக்கொண்டிருக்கும் போது செவிக்கு இன்பம் அளிக்கும் வகையில் கடிகாசலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறையவர்களைப் பற்றி சில ஸ்லோகங்களை கணபதி பாடினார். “நீங்கள் எப்போது கடிகாசலம் சென்றிருந்தீர்கள்?” என்று கேட்டார் ராகவாச்சாரி. புன்னகை தவழும் முகத்துடன் “நீங்கள் கடிகாசல யாத்திரை பற்றி கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது மானசீகமாகச் சென்று வந்தேன்” என்றார். இப்படியாக சித்தூரில் அவர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம்.

“வந்தே மாதரம்” போன்ற ஒரு இயக்கத்தை இல்லறத்துறவியான கணபதி முனி பண்டிட்டின் உறுதுணையோடு ஆரம்பித்து வெள்ளையரிடமிருந்து விடுதலை பெறலாம் என்று சிலர் எண்ணினார்கள். ”நீங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும். உங்கள் தலைமையில் ஒரு தெய்வீகப் படையாக அணி திரள்வோம்.” என்று கை தூக்கி முழங்கினார்கள். மாணவர்களின் பொங்கும் சுதந்திர ஆர்வத்தை மெச்சினார் கணபதி. ஆனால் தனக்கு ஏற்படும் நட்சத்திர அந்தஸ்தைச் சுமையாக எண்ணினார். அவர்களின் சொல்லுக்கு செவிசாய்க்கவில்லையென்றால் தீவிரவாதத்திற்குள் அம்மாணவர்கள் நுழையும் வாய்ப்பிருப்பது கணபதிக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்தது. 

1906ம் ஆண்டு நாற்பது மாணவர்களோடு ஒரு சிறு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுத்தர இவ்வியக்கத்தின் மூலமந்திரம் என்ன என்று அவர்கள் கணபதி முற்றுகையிட்டபோது “உமாம் வந்தேமாதரம்” என்று துவக்கி வைத்தார். இந்த மந்திரம் அவர்களை இணைத்துக் கட்டிப்போட்டது. குபீர் உற்சாகம் ஏற்பட அபூர்வங்கள் சில நிகழவேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். மந்திரபலனை உடனே எதிர்பார்த்தார்கள். அனைவரும் பொறுமையைக் கடைபிடிக்கும்படி வேண்டிக்கொண்டார் கணபதி. முக்கியமான சில கடமைகளை ஆற்றும்படி தெய்வத்திடமிருந்து ரகசியச் செய்தி கிடைத்தது போல சிலர் அடங்காமல் ஆடினார்கள். 

பெரியவர்கள் மாணவர்களின் இத்தகைய அடாத செயல்களைக் கண்டு வருந்தினர். ஆரணியின் புகழ்பெற்ற காண்ட்ராக்டர் சுந்தர பாண்டியன். அவரது மகன்கள் ஸ்ரீநிவாசன் மற்றும் வெங்கட்ராமன் இருவரும் படிப்பைப் பாதியிலேயே உதறினர். அவர்களோடு சேர்த்து அவர்களின் மருமான் கிட்டாஜியும் படிப்புக்கு மூட்டைக் கட்டிவிட்டார். சுந்தரபாண்டியன் அவர்களை படிக்கும்படி அறிவுறுத்தி அழைத்தார். பலனில்லாமல் ஒரு நாள் மூவரும் வீட்டை விட்டு ஓடினர். ஓடும் போது கிட்டாஜி சில அரசியல் கோஷங்களை எழுப்பினார். இது சுந்தரபாண்டியனுக்கு அதிர்ச்சியளித்தது. ”இனிமேல் நீங்கள் பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க வேண்டாம்..” என்று சுந்தரபாண்டியன் சத்தியம் செய்தபின்னர் ஓடிய அனைவரும் பதவிசாக வீடு திரும்பினர். 

கணபதியால்தான் பசங்கள் கெட்டுப்போகிறார்கள் என்கிற எண்ணம் சுந்தரபாண்டியனுக்க்கு வலுத்தது. கணபதியின் சுந்தர குணங்களைப் பற்றி தெரிந்தவர்கள் எடுத்துரைத்தும் கேட்காமல் கிருஸ்துவ மிஷனிடம் கணபதியைப் பற்றிப் புகார் செய்தார் சுந்தரபாண்டியன். தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ரகசிய சோதனை செய்ய உத்தரவிட்டார். அச்சோதனையில் கணபதியினால் வகுப்புகளுக்குப் பங்கமில்லை என்று முடிவானது. 

சுந்தரபாண்டியனுக்கு இதில் லவலேசமும் நம்பிக்கையில்லை. பச்சைமிளகாயைக் கடித்ததுப் போல அவருக்கு எரிந்தது. மெட்ராஸ் கவர்னரை உடனடியாகச் சந்தித்து சர்க்காருக்கு எதிராக கணபதி ஒரு புரட்சி இயக்கத்தை ஆரம்பிக்க திட்டமிடுகிறார் என்று முறைகேடான புகார் ஒன்றை அளித்தார். வெடிச்சிரிப்பு சிரித்த கவர்னர் “பென்ஸிலும் பேனாவும் போன்ற அந்தக் குட்டிக் குட்டி குச்சி சிப்பாய்கள் எனது சீட்டை ஏறி வந்து பிடிக்கட்டும்” என்று கேலி செய்தார். டாக்டர் ரெங்கையா நாயுடு ரெங்கசாமி ஐயரிடம் “கணபதிக்கு ஏனிந்த விபரீத விளையாட்டு” என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் போது அப்பு இடைமறித்தார். “மீனவர்களை முனிவர்களாக கிறிஸ்து மாற்றுவது போல கணபதி மாணவர்களை கதாநாயகர்களாக்குகிறார்” என்றார் அப்பு.

வேலூரில் வாத்தியார் உத்தியோகம் பார்த்ததில் மூன்று வருடங்கள் கழிந்தது. ஆசிரியப்பணியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. சொற்ப சம்பளம். ஈடுகட்ட ட்யூஷன் எடுக்கவேண்டியதாயிற்று. தபஸ்வியாகும் அவரது மனோரதம் எடுபடாமல் சமூகத்தை எதிர்க்கவும் வெறுப்பதுபோலவும் சூழ்நிலை நிலவியது. வேலூரில் நடந்த சில விஷயங்கள் அவருக்கு அழுத்தத்தைக் கொடுத்தன.

விசாலாக்ஷியின் உடல்நலமும் பாதித்தது. அவருக்கும் வேலூர் வாழ்க்கை கசந்தது. தவமியிற்றும் ஆவல் பொங்கிற்று. இந்நிலையில் அவருக்கு ஒரு தேவசெய்தி கிடைத்தது. ஃபிப்ரவரி 17, 1907ம் வருடம் அவரது கனவில் பத்ரகா தோன்றினார். “நான் எனது உடலை உதறிவிட்டேன். நீ விழித்திரு. இனிமேல் இச்சமுதாயம் உனது தவத்தால் எழுச்சியுரும்” 

கனவு கலைந்து உதறி எழுந்தார் கணபதி. இவ்வளவு நாட்களாக பத்ரகா ஏன் அவரது பூலோக இருப்பை தனக்குச் சொல்லவில்லை என்று வியப்பாக இருந்தது. இந்த ஆன்மிக தோழரின் மறைவு அவருக்கு வருத்தமளித்தது. பக்கத்தில் படுத்திருந்த அப்புவையும் துரைசாமியையும் உலுக்கி எழுப்பி இந்த செய்தியை சொன்னார். 

அதிகாலையில் ந்யூஸ்பேப்பர் வாங்கி வந்தார் துரைசாமி. அதில் படத்தோடு போட்டிருந்த ஒருவருடைய மரண அறிவிப்பால் மூவரும் திகைத்தனர். யாரவர்?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails