Tuesday, September 27, 2011

மாடவீதி பொம்மைகள்

திருமகள் கால் பிடித்துவிட ஜுவல்லரி வாசலில் ஹாயாக சயனகோலத்தில் இருந்தார் விஷ்ணு. ஜுவல்லரி ஷட்டர் தலையை முட்ட ஆதிக்கு கொஞ்சம் டென்ஷன். நாராயணனின் நாபியிலிருந்து ஒரு கம்பி கிளம்பியிருந்தது. ஆனால் அதில் லோட்டஸ் அண்ட் ப்ரம்மா மிஸ்ஸிங். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த யேசுபிரான் மாதிரி வைக்கோல் சுற்றி கீழே கிடந்தார் வெண்ணை கிருஷ்ணர். காமதேனுக்களும், கோபிகா ஸ்த்ரீகளும், முனி புங்கவர்களும் தங்கள் செட்களை விட்டு தனித்தனியே இரைந்து குவிந்திருந்தார்கள். ஆதி சங்கரர் செட்டில் சிஷ்யர்கள் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். மடியில் லெக்ஷ்மியை அமர வைத்துக்கொண்ட நரசிம்மர் செட்டியாரைப் பார்த்து கர்ஜித்துக்கொண்டிருந்தார். மீராவின் தம்புராவை எடுத்து கைக்கு சொருகிக்கொண்டிருந்தார் ஒரு நவராத்திரி பக்தர்.

இவையெல்லாம் நேற்று முன் தினம் மாடவீதியில் கண்ட நவராத்திரி கொலு பொம்மைக் கடை காட்சிகள். கபாலீஸ்வரர் கோவில் முன்னால் வண்டி நிறுத்துவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. சென்னைக்கு இருசக்கரம் தான் தலை சிறந்த வாகனம்.அதுவும் கஜமுகனின் வாகனம் போன்று இருத்தல் நலம். பாதி இடங்களில் இரண்டு சைக்கிளை தலையோடு தலை சேர்த்து வைக்கும் அகலம் தான் தெரு. அதிலும் நாலு வீடுகளில் பக்க நிறுத்தானை போட்டு நடு வீதிவரை வாகனம் நிறுத்தி துணி காயப் போட்டுவிடுகிறார்கள். மீதி வீடுகளில் மக்கள் வாசலில் நின்று வம்பளக்கிறார்கள்.

“அப்டியே முன்னாடி வா”

“கொஞ்சம் லெப்ட்ல போ”

“ரைட்டு ஒடி”

”ஏ..ஏ.. பேக்கில பாரு”

“அங்க நிக்காத”

“அப்டியே ஷ்ட்ரெயிட்டா ரிவர்ஸ் வா”

“ம்..ம்.. போதும்...போதும்... நிப்பாட்டு”

என்ற அபரிமிதமான மரியாதை பொங்கி வழியும் ஏக வசனங்களில் உதவி பெற்று வண்டியை ராசி சில்க்ஸ் அருகில் விட்டு வருவதற்குள் கை தனியாக கழண்டு விட்டது. டோக்கன் கொடுக்காமல் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அடுத்தாளை திட்டுவதற்கு கிளம்பிவிட்டார் அந்த இள வயது டோக்கனர்.

போன வருடம் கொலு வைக்க முடியாதலால் (ஒரு அபர காரியம்) இந்த வருடம் நவராத்திரி பட்ஜெட் டபுள். வீட்டிற்கு நவராத்திரி விஜயம் செய்வோருக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சரோஜாதேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா, முழுத் தேங்காயைப் போட்ட உடன் பொத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் கூடை, பத்து ரூபாய் வெங்கடாஜலபதி தங்கச் சிலை, தட்டு மாதிரியும் இல்லாமல் பேசின் மாதிரியும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் பாத்திரம் (லேடீஸுக்கே அது என்னவென்று விளங்காது), ராகவேந்திரர் லாமினேட்டட் படம் (அசப்பில் ரஜினி மாதிரி இருக்கும் ப்ரிண்ட்), ஆஜானுபாகுவான ஆகிருதியான மாமிகளுக்கு சுண்டி விரல் கூட நுழைக்க முடியாத சில்வர் ப்ளேட்டட் குங்குமச் சிமிழ் என்று சகலமும் கொடுத்தாயிற்று.

“..ண்ணா.. காசு கூடப் போனாலும் பரவாயில்ல, இந்த தடவை டிஃப்ரெண்ட்டா எதாவது வாங்கறோம்” என்று என்னையும் செலக்‌ஷன் கமிட்டியில் சேர்த்துக்கொண்ட என் மனைவியின் மதியூகத்தை என்னவென்று சொல்வது. வார்த்தைகளில் அடங்கா! வார்த்தைகளுக்கும் அடங்கா!!

திரும்பவும் சிமிழ், தட்டு, அடுக்கு விளக்கு, அண்டா விளக்கு, சின்ன குத்துவிளக்கு மொதற்கொண்டு பார்த்தாயிற்று. அம்மணி பார்த்தவைகளை வாங்குவதென்றால் சம்பளக் கவரை திருவாளர் கடைக்காரரிடம் கொடுத்து சேவித்துவிட்டு பொருட்களை வாங்கி வரவேண்டும். இப்போது நிச்சயம் களத்தில் இறங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. தர்ம நியாயங்கள் தோற்றுப் போகும் போது எம்பெருமானின் அவதாரம் போல உள்ளே இறங்கினேன். கையைக் கடிக்காமல் பட்ஜெட்டிற்குள் எது அடங்கும் என்று மூளையைக் கசக்கி கடையை இரண்டு ரவுண்டு வந்தேன். மருத்துக்குக் கூட ப்ளாஸ்டிக் ஜாமான் இல்லாத பரிசுத்தமான சுற்றுச்சூழலுக்கு ஆத்ம நட்புக் கடை. ஷேமமாக இருக்கவேண்டும்.

ஒரு ஐட்டம் எடுத்து ”இதுல ஐம்பது வேணும்” என்றால் “மொத்தமே இங்க இருக்கிறது தான் சார்!” என்று நெட்டித் திரும்பி அடுத்த கஸ்டமரை பார்க்க சென்று விட்டது அந்த நீலச் சட்டை பொடிசு. கடை முழுக்க காஸ்ட்லி ஐட்டங்களை நிரப்பி பொதுச் சேவை புரிந்துகொண்டிருந்தார் அந்தப் புண்ணியவான். இங்க்லீஷ் பாட்டு பாடி “போயிட்டு வரேன் தம்பி” என்று விளக்குமாறும் கையுமாக வீடு கூட்டும் பெண்மணி நடிக்கும் விளம்பரத்தில் வரும் ஆங்கிலம் போதிக்கும் நிறுவனரும் அங்கே வந்திருந்தார். அவரும் நாலைந்து எடுத்துப் பார்த்து கையைக் கடிக்க போட்டுவிட்டு போய்விட்டார்.

மாட்டிக்கொண்ட நான் நூறு ரூபாய்க்கு கொஞ்சம் கம்மியாக ஒரு வெண்கல விளக்கை எடுத்து பார்த்தேன். கொஞ்சம் தேய்த்ததில் அந்தப் பெண் வந்து ”என்னா சார் தேச்சுப் பார்க்கிறீங்க?” என்றது. “இந்த அற்புதவிளக்கின் உள்ளேயிருந்து பூதம் வந்தால் கொஞ்சம் பணம் கேக்கலாம்னு இருக்கேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ”இந்த விளக்கு பேர் என்ன?” என்ற கேள்விக்கு ”குபேர விளக்கு” என்று வந்த பதிலால் திருப்தியடைந்து “ஒரு ஐம்பது கொடுங்க” என்று வாங்கிக்கொண்டால் “..ண்ணா இது கூட நல்லாயிருக்கில்ல” என்ற குரல் வந்த திக்கில் வேறு டிசையனில் ஒரு விளக்கை கையில் பிடித்து கை விளக்கேந்திய காரிகையாக நின்றுகொண்டிருந்தாள் என் மனைவி.

அந்த விளக்கு அப்புறம் ஒரு சின்னத் தட்டு என்று கொலுவுக்கு “வச்சுக் கொடுக்கும்” சாமான்கள் பையை நிரப்ப அந்த தெய்வீகக் கடையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தும் “இந்த வருஷமும் புது பொம்மை எதாவது வாங்கனும்” என்று கையில் பிரம்பு இல்லாமல் கண்டீஷனாக சொல்லிவிட்டார்கள்.


மாடவீதி ஜேஜேயென்று இருந்தது. எல்லாக்கடை வாசலிலும் தேவாதி தேவர்கள் முகாமிட்டிருந்தார்கள். வாண்டுகள் பொம்மை பார்க்க பெருமளவில் குவிந்திருந்தார்கள். காதுக்கும் மூக்குக்கும் வைர வைடூரியம் அணிந்திருந்த செல்வச் சீமாட்டிகள் செண்ட் வாசனையுடன் “அத்த எடுப்பா! இத்த எடுப்பா.. அந்த ஓரம் லெஃப்ட்ல.... ஹா..ஹாங்.. ஜஸ்ட் அபோவ் தட்” என்று என்னை போன்ற ரெண்டாம் கிளாஸிடம் இங்க்லீஷில் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஸ்வாமி பெயர் சொல்லிக் கேட்டால் சட்டென்று எடுத்து தந்துவிடப்போகிறார்கள். சிலரது டாட்டா சுமோவும், ஸ்கார்ப்பியோவும் அந்த இரண்டு முழம் ரோட்டில் அவர்களுக்காக அந்தக் கடையெதிரில் காத்திருந்ததுதான் உட்சபட்ச அயோக்கியத்தனம்.

மாடவீதி சரவணபவன் மாஸ்டருக்கு அன்றைக்கு நிச்சயம் தோசை வார்த்துப்போட்டு கைக்கு மாக்கட்டு போடவேண்டியிருக்கும். கடை உள்ளே சாப்பாட்டுப் போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடை வாசலில் குருக்ஷேத்திரத்தில் படைத் தேர்கள் போல வாகனங்கள் கொடிபிடித்து நின்றுகொண்டிருந்தது. வாசலில் நின்றிருந்த அந்த நேபாள ரெஃப்ரி டிராஃபிக் ஜாமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பம்பரில் அடிபடாமல் இன்னொறு வண்டியின் டிக்கியில் நசுங்கி மக்கள் கொலு பொம்மை பார்த்தார்கள். வாங்கவில்லை. வாங்கியவர்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல். காதெங்கும் துளை போட்ட பெரிய அம்மா ஒருத்தர் “கடசீ நாளைக்கு வந்தா பேர் பாதி விலைக்கு வாங்கலாம்” என்று வாடிக்கையாளர் தந்திரம் சொல்லிக்கொண்டே போனார். பக்கத்தில் அதை செவிமடுத்தது அவருடைய மாட்டுபொண்ணாக இருக்கவேண்டும். பொதுவெளியிலாவது தலையாட்டி வைப்போமே என்று பூம்பூம் ஆட்டிக்கொண்டே பின்னால் சென்றது.

இந்த முறை பரவலாக ஆலிங்கனங்கள் கண்ணில் பட்டது. வருடாவருடம் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளே செல்லமுடியாதபடி கடை விரிக்கும் வாடிக்கை பொம்மைக்காரர் “போன தடவை ஆலிங்கனம் இருக்கா இருக்கான்னு கேட்டாங்க. ஆஞ்சநேயர்-பிள்ளையார் மட்டும்தான் போயிருக்கு. ராமரு-குகன், சுதாமா-கிருஸ்ணரு அல்லாம் அப்டியே இருக்கு” என்று குறைப்பட்டுக்கொண்டார். அன்னபூரணியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கேட்டால் யானை விலை குதிரை விலை சொன்னார். கொஞ்சம் மார்டனாக சொல்லவேண்டும் என்றால் ஐ-7 ப்ராஸஸர் விலை சொன்னார். வேண்டாம் என்று நகர்ந்தால் குரலை உயர்த்தி கட்டி இழுத்தார். “நீங்க கேளுங்க” என்றார். பாதிக்கு பாதி கேட்டால் பேரம் படியுமா? என்ற ஆசையில் கேட்டதற்கு “சார்! அநியாயமா கேட்காதீங்க.. நாங்களும் லாபத்துக்காகத் தானே உட்கார்திருக்கோம்” என்றவருக்கு அதே பதிலை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிச் சொன்னேன் ”உட்கார்ந்திருக்கோம்”க்கு பதிலாக “நின்னுக்கிட்ருக்கோம்”னு.

பத்து பதினைந்து கடைகளில் ஸ்கான் செய்து பாண்டுரங்கர், ரஹ்மாயி மற்றும் அன்னபூரணி மூவரையும் வீட்டிற்கு அழைத்துவந்தாயிற்று. போன வருடம் ஸ்கிப் ஆனதை இந்த வருடம் ஈடு கட்ட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார்-ஷங்கர் காம்பினேஷன் பட பட்ஜெட் போல வீட்டு சுப்ரீம் சக்தி கொலு மெகா பட்ஜெட் போட்டுவிட்டார்கள்.

ஆங். ஒரு விஷயம். நிறைய தேடிப்பார்த்துட்டேன். இந்த வருஷம் கொலு ஸ்பெஷல் என்று நிச்சயம் இந்த மகானின் பொம்மை புதிய வரவாக இருக்கும் என்று நினைத்தேன். உஹும். இல்லை. பெருச்சாளிகளுக்கு எதிராக போராடும் அந்த நிகழ்கால மகான் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்ப்போம்.

இப்பதிவிற்காகப் படமெடுத்தது பாம்பல்ல ஆர்.வி.எஸ் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ?

-

35 comments:

ரிஷபன் said...

கொஞ்சம் தேய்த்ததில் அந்தப் பெண் வந்து ”என்னா சார் தேச்சுப் பார்க்கிறீங்க?” என்றது.

மாடவீதி சரவணபவன் மாஸ்டருக்கு அன்றைக்கு நிச்சயம் தோசை வார்த்துப்போட்டு கைக்கு மாக்கட்டு போடவேண்டியிருக்கும். கடை உள்ளே சாப்பாட்டுப் போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

உங்க கொலு சூப்பரா ஸ்டார்ட் ஆயிருச்சு..

ரிஷபன் said...

பெருச்சாளிகளுக்கு எதிராக போராடும் அந்த நிகழ்கால மகான் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்ப்போம்.
நல்ல வேளை.. இந்த விபரீத யோசனை கொலு பொம்மைக்காரர்களுக்கு வரவில்லை..

Venkatesh Balasubramanian said...

Mannai kku train vittutalamei......romba santhosam......Superb article... Mylapore kku 2 wheeler kooda sari patu varadhu.. MRTS thaan best...

பத்மநாபன் said...

கடமையார்த்த புருஷனாக மட்டுமல்லாமல் கடமையார்த்த பதிவராகவும் இருக்கிறிர்கள் ... எதையும் விழாவாக கொண்டாட நினைப்பவருக்கு , விழாவே கிடைத்தால் சும்மாவா இருப்பீர்கள் ... முன்னேற்பாடே கலக்கிவிட்டீர்கள் ..ஒன்பது நாளும் ஒரே ஜமா தான் கலக்குங்கள் ... ஏற்பாடுகளை பார்த்தால் வீட்டிற்கு ஸ்பெஷல் பஸ்ஸே விட்டுவிடுவீர்கள் போலிருக்கு ... கொடுக்கும் ஐட்டங்களை பார்த்தால் ,பிளைட் பிடித்து வரலாம் போலிருக்கு ...
பெருச்சாளி அடிப்பவர் தெற்கை விட வடக்கே கொலுமேடைகளில் நிறைவார் ......

rajamelaiyur said...

photos super

ஸ்ரீராம். said...

பொம்மை வாங்க அம்மாந்தூரம் போவணுமா... அருகாமைல எங்கனயும் கடிக்காதா...எங்கன போனா இன்னா...எங்களுக்கு ஒரு பதிவு படிக்கக் கெடச்சுது...அத்தத் தருவோம், இத்தத் தருவோமுனு சொல்றியே கண்டி ஒம்பது நாளும் இன்னா இன்னா சுண்டல் மெனுன்னு சொல்லலியே கண்ணு...

ViswanathV said...

(எனக்கு) செலவு இல்லாம
சென்னைல கொலு shopping
சுத்தி காட்டுனதுக்கு
ரொம்ப நன்றி
நண்பா;


அந்த கேள்விக்கு பதில்
அன்னா வா ?

ADHI VENKAT said...

தில்லியில் இருந்தாலும் சென்னை வீதிகளில் விண்டோ ஷாப்பிங் செய்த திருப்தி ஏற்பட்டது.:)

இந்த வருட நவராத்திரிக்கு வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள உங்க இல்லத்துக்கு வந்து விடலாம் போல இருக்கே... பர்சேஸ் பிரமாதமாக இருக்கிறது...

எங்க வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை.:(

மாதேவி said...

ஆகா... கொலுவா புதுவீட்டில் குடியிருக்க வந்த பொம்மைகளுக்கு வாழ்த்துக்கள்.
பாட்டுப்பாட ரெடியாகிவிட்டீர்களா :)

அனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஒரு நாள் வந்துட்டு போனதுக்கே தாவு தீர்ந்து விட்டதா? நாங்கள் அங்கேயே வாழ்கிறோம். எங்களுக்கு தாவு என்று ஏதாவது மிச்சம் இருக்குமா சொல்லுங்கள். இருந்தாலும் எங்கள் அழகிய திருமயிலைக்கு வந்து கொலு பொம்மை வங்கிச் சென்றதில் மிக்க சந்தோஷம். அன்னா ஹசாரேதானே அந்த மகான்?

வெங்கட் நாகராஜ் said...

கொலு ஸ்பெஷல் நன்றாக இருக்கிறது மைனரே...

நீங்க கடைசி பத்தியில கேட்ட பொம்மை இங்கே நிறைய கிடைக்குது.... :)

பொன் மாலை பொழுது said...

கல்லூரி நாட்களில்,கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நாட்களில் பொம்மைகள் வாங்கிக்கொண்டு சைக்கிளில் வைத்து கட்டிக்கொண்டு வீடிற்கு வந்து அவைகளை கொலு படிகளில் வைத்து அழகு பார்ப்பதே சுகம்தான். சென்னை வாசம் இவைகளை எல்லாம் மாற்றி போட்டுவிட்டது மைனரே! :(

Ponchandar said...

நவராத்திரி சுண்டல் வகைகள் ஃபேமஸ் தானே ! ! ! அதை பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறோம் ! ! கோவையில் சிறு வயதில் 1970 களில் சுண்டலுக்காக கொலு வைத்திருக்கும் வீடுகளுக்கு படை எடுத்தது ஞாபகம் வருகிறது.

அப்பாதுரை said...

மகானா? நீங்க சொன்னா சரிதான். ரிஷபன் சொல்றதும் சரிதான்.
'எதற்குமே நேரமில்லை' எனும் இந்த நாளிலும் கொலு பொம்மை வாங்க உற்சாகத்தோடு ஷாபிங் போவது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. சுவாரசியமாக இருந்தது படிக்க. ஆலிங்கனம் என்றால் என்னவோ இருக்கும் என்று படித்துப் பார்த்தால் ஒ பு.
எண்பதுகளில் ஒரு பெங்களூர் வீட்டில் ஹோலொக்ரேபிக் பார்க் வைத்திருந்தார்கள் நவராத்திரி கொலுவில். வாய் பிளந்து பார்த்த போது இது தான் சாக்கு என்று சகிக்கமுடியாத சுண்டலை திணித்து விட்டார்கள்.

Rekha raghavan said...

மாட வீதியைப் பற்றிய உங்கள் விவரிப்பு அப்படியே உங்களுடன் உலா வந்த உணர்வை ஏற்படுத்திய வகையில் உங்கள் எழுத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.

RVS said...

@ரிஷபன்
சார்! தில்லியில் இவர் அமோகமா விற்பனை ஆவதாக தலைநகரத் தலை திரு. வெங்கட் நாகராஜ் தெரிவிக்கிறார்! :-))

RVS said...

@Venkatesh Balasubramanian
கரெக்ட்டுதான். சார்! நீங்க வேலூர் பாலுவா? ரொம்ப நாளாச்சே இந்தப் பக்கம் வந்து.. :-)

RVS said...

@பத்மநாபன்
கடமையார்த்த.... உங்களால மட்டும் தான் தலைவரே இப்படியெல்லாம் கமெண்ட்ட முடியும்!! நன்றி :-))

RVS said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

Thank you!! :-)

துளசி கோபால் said...

அன்னா....அன்னா..... இப்படி ஒரு புதிரா?

ரெண்டு வருசம் முன்னாடி ஆசை தீர மாடவீதிக் கொலுக்கடைகள் வேடிக்கை மட்டுமே பார்த்தேன்.
மண்பொம்மை கொண்டுவருவதில் ரிஸ்க் எடுக்க முடியாதாம், கோபால் சொல்லிட்டார்:(

ஆமாம்...அதென்ன ரஹ்மாயி பொம்மை?????

நியூஸியில் வச்செல்லாம் கொடுப்பதில்லையாக்கும் கேட்டோ!

RVS said...

@ஸ்ரீராம்.
அது தான் ஆவி வந்த இடமாம்...பொம்மை வாங்கறத்துக்கு. :-)

RVS said...

@ViswanathV

ஆமாண்ணா!!

பாரட்டுக்கு நன்றி! :-)

RVS said...

@கோவை2தில்லி
சென்னைக்கு வாங்க.. குபேர விளக்கு தரோம்!! :-))

RVS said...

@மாதேவி
வாழ்த்துக்கு நன்றி!! :-)

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
ஆமாம் மேடம். சென்னைக்கு வந்து நாங்களும் கொஞ்ச வருஷம் மயிலைவாசி தான். :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்

பாராட்டுக்கு நன்றி! உங்க பதிலை நிறைய பேருக்கு சொல்லிட்டேன்!! :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
கரெக்ட்டுதான் பாஸ். இப்ப நீங்க சென்னையிலா இருக்கீங்க!! :-)

RVS said...

@Ponchandar

சுண்டல் பற்றி எழுதலாம் சார்! ஊர்ல நடந்த சில விஷயங்கள் ஸ்டாக் இருக்கு!! :-)

RVS said...

@அப்பாதுரை
நான் சொல்லலை தல... நிறைய பேர் சொல்லிக்கிறாங்க... எங்க வூட்ல சுண்டல் நல்லா இருக்கும் சார்! வாங்க.. :-)

RVS said...

@ரேகா ராகவன்
முதல் வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க... :-)

RVS said...

@துளசி கோபால்
அந்த கொலு படத்தில ரெண்டாவது படியில பாண்டுரங்கர் பக்கத்தில இருக்காங்க பாருங்க அவங்கதான். :-))

இருந்தாலும் மண் பொம்மை அழகு வராதுங்க...

கருத்துக்கு நன்றி :-))

தக்குடு said...

பிரமாதமான ஒரு சுற்றுலா. பொம்மை வாங்கினதை விட வாங்க போன கதை சுவாரசியமா இருக்கு. எங்க போனாலும் உங்க கண்ணு வைரத்தோடு மாமிகள் பக்கம் எதுக்கு போகர்து?? :PP

RVS said...

@தக்குடு

வைர்த்தோடு பயங்கரமா டாலடிக்கிறது. அதனால் என் கண்கள் ஈர்க்கப்படுகிறது.
யப்ப்பா சாமி! ஆளை விடு..... :-)))))

சாந்தி மாரியப்பன் said...

பிரம்மாண்டமான ஏற்பாடா இருக்கே (குபேர விளக்கை மிஸ் பண்ணிட்டேனோ!!!!) சுண்டலாவது அனுப்புங்க :-))

அன்னார் எங்கூர் புள்ளையார் சதுர்த்தி மேடைகள்ல நின்ன களைப்பு தீர ஓய்வெடுத்துட்டு, துர்க்கா மாத்தா கூட நிக்கவா வேண்டாமா?ன்னு யோசிச்சிட்டிருக்கார். புள்ளையாராவது பரவால்லை.. சாத்வீகமானவர். கைல சூலாயுதம் வெச்சிருக்கிற அந்தம்மா கிட்ட வெச்சுக்க முடியுமா :-))

இங்க இப்பத்தான் வெள்ளோட்டம் நடக்குது. அடுத்த வருசம் சென்னைக்கு வருவார் :-))

ரஹ்மாயி வல்லபர் ஜூப்பரா இருக்கார் :-)

RAMA RAVI (RAMVI) said...

தங்களின் இந்தப்பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.நன்றி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails