Wednesday, October 27, 2010

தாலாட்டி பாராட்டி சீராட்டி

joyful
பிள்ளை வளர்ப்பிற்கு தற்போது நிறைய புத்தகங்கள், அகராதிகள், அட்டவணைகள். தியரிக்கு சரி ப்ராக்டிகல் நாமதானே செய்யணும். கையில் கைக்குழந்தையுடன் குனிந்து நிமிர்ந்து மணிக்கணக்காக சிரமப்பட்டு அலசி ஆராய்ந்து புக் தேடும் நவீன அம்மாக்கள் பலரை லாண்ட்மார்க்கில் பார்த்திருக்கிறேன். தோளில் ஒரு தூளி கட்டி மாட்டிவிட்டு அமர்க்கள சென்ட் வாசனையுடன் ஒவ்வொரு புத்தகங்களாக பார்த்துக் கொண்டே வந்தது அந்த புதிய அம்மா. பிள்ளைக்கு நல்ல மார்க்கட்டு சளி. "கர்.கர்.." என்று மூக்கால் உருமிக்கொண்டிருந்தது. இது பிள்ளை வளர்ப்பு புத்தகங்களாக பிரித்து பிரித்து பார்த்தவண்ணம் இருந்தது. அங்கேயே படித்துவிட்டு போகலாம் என்ற என்னமா என்று தெரியவில்லை. ஒரு முறையாவது அந்தப் பிள்ளைக்கு மூக்கு துடைத்து விட்டிருக்கலாம். ரொம்ப எழுதினால் "நீ லான்ட்மார்க்குக்கு புக் வாங்க போனாயா அல்லது புக் வாங்க வரும் அம்மாக்களை பார்க்க போனாயா. இது தான் நீ புக் வாங்கும் லட்சணமா" என்று சகட்டு மேனிக்கு என் நண்பர் வட்டாரம் கமென்ட் "அடித்து" என்னை கண்டதுண்டமாக்கி கசாப்பு கடைக்கு வீசுவார்கள் என்று பயந்து, தொடங்கிய மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்பு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வடநாட்டில் பல வல்லிய வைத்தியர்களை பேட்டி கண்டு பிள்ளை வளர்ப்பது எப்படி என்று ஒரு கட்டுரை போட்டிருந்தார்கள். மைய சரக்கு அவர்களது அதிகப்படி சரக்கு என்னுது. பாரா பாராவா பார்ப்போம்.

முத்தே மணியே வைரமே வைடூரியமே ஜில்லு சின்ட்டு பப்பி குப்பி என்று செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டு மூக்கால் மோந்து பார்த்தால் மட்டும் போதாது அவர்களிடம் ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்த வேண்டும். செயலில் காட்ட வேண்டும்.

அன்பை பாசத்தை செயலில் காண்பிக்கிறேன் பேர்வழி என்று செல்லமாக கேட்டுவிட்டான் என்பதற்காக அந்தக் கடையில் அவன் கைகாட்டிய திக்கில் உள்ள அணைத்து வகையான தீனியையும் வாங்கிக் கொடுத்து கெடுத்துவிடாதீர்கள். அது அன்பு அல்ல. மறுபடியும் சொல்கிறார்கள் அல்வா வாங்கித்தருவது அன்பு அல்லவாம். அல்வா போல நாம் நடந்துகொள்வது தான் அன்பாம். இதோட இந்த கருத்தை முடிச்சுப்போம். பிள்ளை வளர்ப்பிலிருந்து பாதை கொஞ்சம் விலகுது. அப்புறம் மல்லிப்பூவிற்கு போய்விடப் போகிறது.

உங்க கண்ணெதிர்க்கவே ஒரு ஐநூறு ரூபா நோட்டை கிழிச்சு கப்பல் பண்ணி விளையாடுதுன்னா "ஆ"ன்னு வாய் பாத்துக்கிட்டு அன்பா மலைச்சு போய் நிக்கக்கூடாது. டப்பின் அருமையை உழைப்பின் பெருமையை உணரவைக்கணும். முடிஞ்சா நம்மோட இளமைக்கால கொண்டாட்ட திண்டாட்ட தினங்களை வெட்கம் பார்க்காமல் சொல்லி உணரவைக்கலாம் என்கிறார்கள்.

வீட்டில் விஸ்ராந்தியா ஒன்னா ஹால்ல உட்கார்ந்து இருக்கும் போது "நேத்திக்கு இந்த ஷேர் ஏறிச்சே.. இது இறங்கிச்சே. டைப்பிஸ்ட் கீதா ஏன் பச்சை கலர் நெயில் பாலிஷ் போட்ருக்கா. அந்த ஹீல்ஸ் அவளுக்கு சகிக்கலையே. பெர்ஃபுயூம் கொமட்றதே" என்று மனசை மாறுவேஷம் போட்டு அலைபாயவிடாமல் பசங்களுடன் ஒன்றி இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் பக்கத்தில் இருந்தால் மட்டும் போதாது அவர்களின் பாக்கெட்டோடு நெஞ்சருகில் இருக்கவேண்டும்.

தொட்டதுக்கெல்லாம் "செல்லம்.. அப்பா இருக்கேண்டா... நீ ஒன்னும் கவலைப்படாதே" என்று அவர்களுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாகவும் உதவாக்கரை ஆக்கி விடக்கூடாது. "அப்பா. ஒரு டம்ளர் தண்ணீ கொண்டுவா" என்று கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமட்டும் வாண்டை பார்த்து சிரிக்காதீர்கள் என்கிறார்கள். சின்ன சின்ன விதிமுறைகள் வைத்து அதைக் கடைபிடிப்போம். புஸ்தக அலமாரியில் பலூன், டெடி போன்றவைகள் இடம் பிடிக்க கூடாது. தரையில் குப்பை போடக் கூடாது. போன்ற சில ரூல்ஸ் அவர்களுக்கு மட்டும் அல்ல நாமும் அதைப் பின்பற்றுவது நல்லது.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கறாராக சொல்லி விடுவது நல்லது. பொண்டாட்டியிடம் பேசுவது போல வழவழா கொழ கொழா என்று பேசாதீர்கள். தண்டிக்கவேண்டும் என்று முடிவெடுத்தால் டி.வி. பார்ப்பது, வெளியே நண்பர்களுடன் விளையாடுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு சின்னத் தடை விதியுங்கள். கொஞ்ச நேரம் ஆனதும் லேசாக திருந்திய அறிகுறி தென்பட்டாலே நீங்களும் இறங்கி வாருங்கள். மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு சுவற்றையே பார்த்து வெறிக்காதீர்கள்.

"நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார். பின்னிப்புடுவேன் பின்னி" என்று ஜம்பம் பேசி கம்பத்தில் கட்டி போட்டு தோலை உரிக்காதீர்கள். அழகான அம்மாக்கள் அடியாள் சொர்ணாக்கா பாணியில் "டா.....ய்" என்று குரல் விட்டு குழந்தைகளின் மென்னியை முறிக்காதீர்கள். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடை பிடியுங்கள். அன்பு ஆட்டத்தை அடக்கும். சமாதானம்  தான் அடக்குவதற்கு கை கொடுக்கும். தந்தைமார்கள் தேசத் தந்தையையும் தாய்மார்கள் அன்னை தெராசாவையும் குழந்தையை கை நீட்டி அடிக்கும் முன் கண் மூடி நினைத்துக்கொள்ளுங்கள். ஆங்காரம் அடியோடு பனிபோல் விலகிவிடும். ரொம்ப பிஞ்சு மனசு என்பதால் சின்ன காயங்கள் கூட ஆழமாய் பதிந்துவிடும்.

மனைவியிடம் எவ்வளவு மரியாதையாக பேசுவோமோ அதே மரியாதை குழந்தைகளுக்கும் கொடுங்கள். அதற்காக காலில் எல்லாம் விழுந்து மரியாதை தர வேண்டாம். நாலு பேருக்கு முன்னால் திட்டாதீர்கள். பசங்க திரும்ப திட்டினால் உங்கள் மானம் விமானம் ஏறி விடும். எவ்வளவு நாள் தான் கப்பலேரிடும் அப்படின்னு சொல்றது. நாலு சுவற்றுக்குள் உட்காரவைத்து பேசி தீருங்கள். பஞ்சாயத்துக்கு நாலு பேரை வைத்துக் கொள்ளாதீர்கள். நடப்பது ஒன்னும் ஊர் விவகாரம் இல்லை, யாரும் பிராந்து கொடுக்கவும் இல்லை. நண்பர்கள், அசலார் எதிரில் அவர்களுக்கு மரியாதை முக்கியம். நமக்கும் தான். இதுவே நல்வழி படுத்துவதற்கு நல்ல வழி ஆகும்.

நிறைய உற்சாகப் படுத்துங்கள். "பேஷ். நல்லா பண்ணிருக்கியே. அப்பனை மாதிரியே புத்தி உனக்கு" என்று தோளில் தட்டுங்கள். (போன வாசகம் அம்மாக்கள் ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டியது). அது பல மாயாஜாலங்கள் செய்யும். அதற்காக குழந்தை சாக்பீசால் கோடு போட்டாலே "ஏய்.. இங்க பாரேன் எம்பையன் ரோடு போடறான்" என்று ரொம்ப ஏத்தி விடாதீர்கள். அடக்கமான ஊக்கம் அமரருள் வைக்கும்.

"அந்த அனுஷா சுத்த மோசம். அவ ஒரு சோம்பேறி. அவ கூட சேர்றியே..நீயும்.. " என்று எப்போது பார்த்தாலும் அவர்களது நண்பர்களை அவமானப் படுத்தாதீர்கள். அவர்களையும் பாராட்டுங்கள். பக்கத்து வீட்டு பசங்களை பாராட்டினா தன் வீட்டு பிள்ளைக்கு தானே கிடைக்கும் பாராட்டு அப்படின்னு சிக்மன்ட் ஃபிராய்ட் சொல்லலை. இந்த சின்னதம்பி தான் சொல்றேன். "கேஷவ் கணக்குல சென்டம். நீயும் தான் இருக்கியே... முட்டை முட்டையா வாங்கி முட்டையில செஞ்சுரி போடுவே.. " போன்ற கம்பேரிசன் மேலும் பல வாத்து முட்டைகள் தான் வாங்க வைக்கும். இப்படி திட்டும் பெற்றோர்கள் கொஞ்சம் அவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் நினைத்துப் பார்க்க சொல்கிறார்கள். நிச்சயம் தொண்ணூறு சதவிகதம் பேர் திட்டமாட்டார்கள் என்று டேபிளை அடித்து சத்தியம் பண்ணி சொல்கிறார்கள்.

"எனக்கு 'நித்யஸ்ரீ' பிடிக்கும் நீயும் நித்யஸ்ரீ மாதிரி பாடனும். அதை நான் இந்த காது கொடுத்து கேட்கணும்" அப்படின்னு குயிலப் பிடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்லாதீங்கள். அதுக்கு மயில் போல ஆட விருப்பம் இருக்கலாம். தோகை விரித்து ஆட விடுங்க. நம்ம விருப்பு வெறுப்புகளை பசங்க கிட்ட காட்டக் கூடாது. எப்படி மனைவியிடம் காட்ட முடியாதோ அதே மாதிரி குழந்தைங்ககிட்டயும் அடக்கி வாசிக்க சொல்றாங்க.

உங்களிடம் இருந்தே குழந்தைகள் கற்கிறார்கள். நீங்களே உங்கள் பிள்ளைகளின் முதல் ஆசிரியர். உங்களிடம் இருந்தே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.  உங்களால் உத்தமோத்தமராக இருக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் எதிரில் கெட்ட  பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். அட்லீஸ்ட் அவர்கள் எதிரில் "அப்பாவா! ஆடுதுறை போயிருக்கா" என்று  அட்லீஸ்ட் அவர்களையே உங்களுக்கு எதிரில் ஃபோனில் பொய் சொல்ல வைக்காதீர்கள்... அப்புறம்.. அப்புறம்...

எந்தக் குழைந்தையும் நல்லா குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்....... ஐயோ போதும் நிப்பாட்டு.. நிப்பாட்டு.. போதும்... பாட வேற ஆரமிச்சுட்டியா.. என்று எல்லோரும் அலறுவது காதில் விழுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் போட்டிருந்த மையக் கருவிற்கு கொஞ்சம் எனது பாணியில் பவுடர் அடித்து தலை சீவி சிங்காரித்து இங்கே உலவ விட்டேன்.  மேக்கப் ஓவரா போய்டிச்சு. ஸாரி!

பட உதவி: kingskidonline.com என்ற சைட் படம் சுட்டுக்கச் சொல்லி உதவியது. இந்த அக்கா தம்பியின் கண்ணில் பொங்கும் அந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் நிலைத்து இருக்க வேண்டிக்கொள்வோம்.

-

39 comments:

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! ரொம்ப உபயோகமான பதிவு.. அட்சர லட்சம் பிடியும்.. இதப் படிச்சவுடனே, இன்னொன்னும் பெத்துகிட்டு நீங்க சொன்ன மாதிரியே வளர்க்கிலாமின்னு....

தக்குடு said...

//நீ லான்ட்மார்க்குக்கு புக் வாங்க போனாயா அல்லது புக் வாங்க வரும் அம்மாக்களை பார்க்க போனாயா. இது தான் நீ புக் வாங்கும் லட்சணமா" என்று சகட்டு மேனிக்கு என் நண்பர் வட்டாரம் கமென்ட் "அடித்து// எனக்கும் அதே சந்தேகம் உண்டு உங்க மேல!!..:))
வெங்கட் அண்ணாவின் அழகான நகைச்சுவை உணர்வோட அருமையான கருத்துக்கோர்வை. ரசித்துப் படித்தேன் அண்ணா!..:)

balutanjore said...

dear rvs

migavum payanulla padivu

(enakku vadai unda innikki)

balu vellore

Madhavan Srinivasagopalan said...

me the first ?

என்னடா இன்னிக்கி நைட்டு யாருமே பதிவு போடலேனு நெனைச்சேன்.. லேட்டானாலும், என்ன ஏமாத்தாம நீயாவது போட்டியே.. ஆர்.வே.எஸ்.. நீ வாழ்க.. நீவிர் கொற்றம் ஓங்குக..

good information.. thanks

//பட உதவி: kingskidonline.com // Ok

matter உதவி ? அதாம்ப்பா.. எங்கேருந்து சுட்ட ?

மதுரை சரவணன் said...

//டப்பின் அருமையை உழைப்பின் பெருமையை உணரவைக்கணும். முடிஞ்சா நம்மோட இளமைக்கால கொண்டாட்ட திண்டாட்ட தினங்களை வெட்கம் பார்க்காமல் சொல்லி உணரவைக்கலாம் என்கிறார்கள்.//

கல்யாண மேக்கப் போல உள்ளது... வாழ்த்துக்கள்

Chitra said...

ஹிந்துஸ்தான் டைம்ஸில் போட்டிருந்த மையக் கருவிற்கு கொஞ்சம் எனது பாணியில் பவுடர் அடித்து தலை சீவி சிங்காரித்து இங்கே உலவ விட்டேன். மேக்கப் ஓவரா போய்டிச்சு. ஸாரி!

....இருந்தும், அழகு குறையாமல் நல்லா இருக்குதே.... ஹா,ஹா,ஹா,ஹா.... சூப்பர் பதிவுங்க!

எல் கே said...

அண்ணாச்சி கலகிட்டீங்க.. எல்லாமே சரிதான். ஆனால் ஒன்னு மட்டும் நடக்காது
//பேஷ். நல்லா பண்ணிருக்கியே. அப்பனை மாதிரியே புத்தி உனக்கு///

இதுக்கு நேர்மாறான நேரத்தில் மட்டும்தான் இது வரும்

Anonymous said...

இப்படியா அகால நேரத்தில பதிவு போடுறது..
ஆபிஸ்ல ரொம்ப ஆணியா அண்ணே?!
//மனைவியிடம் எவ்வளவு மரியாதையாக பேசுவோமோ அதே மரியாதை குழந்தைகளுக்கும் கொடுங்கள். அதற்காக காலில் எல்லாம் விழுந்து மரியாதை தர வேண்டாம்.//
அதான, தங்க்ஸ் கால்ல மட்டும் விழுந்தா போதும் நம்ம அண்ணா மாதிரி ஹி ஹி...

அப்பாதுரை said...

இதையும் சேர்த்துக்குங்க RVS: நம்பளுக்கு கிடைக்காத வெற்றிகளையும் வாய்ப்புகளையும் பிள்ளைகள் வழியாக அடைய முயற்சிக்கக் கூடாது. அவங்க வாழ்வை வாழ விடணும்.

RVS said...

@மோகன்ஜி
இன்னொன்னா... ஓ.கே. ரைட்டு.. இதெக்கெல்லாம் எங்க பர்மிஷன் வாங்கனும்ன்னு உங்களுக்கு தெரியும்ல்ல... ;-) ;-) நீங்க தான்னா முதல் கமென்ட்.. லாஸ்ட் ரெண்டு பதிவா...

RVS said...

@தக்குடு பாண்டி
பாண்டி... உங்களோட ஹாஸ்யத்திற்கு இது ஜுஜுபி... அதுவும் அந்த குண்டலம்... இன்னமும் கண் முன்னாடி ஆடிண்டு இருக்கு. ;-)

RVS said...

@balutanjore
ஸாரி சார்! இன்னிக்கும் வடை உங்களுக்கு கிடைக்கலை. ரெண்டு நாளா மோகன் அண்ணா தட்டிண்டு போய்டறார். ;-)

RVS said...

@மாதவன்
நீ படிச்சுட்டு கமெண்டு போடறியா இல்லைனா.... ஏம்ப்பா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அப்படின்னு தெளிவா போட்ருக்கேனே.. ;-)

RVS said...

@மதுரை சரவணன்
நன்றி ;-) மேக்கப் ரொம்ப பூச்சாண்டி மாதிரி ஆயிடுமோன்னு பயந்தேன்... ஓ.கே ;-)

RVS said...

@Chitra
தாய்க்குலங்கே சொல்லிட்டா அதுக்கு அப்பீல் எது. அப்ப மேக்கப் நல்லா வந்திருக்குன்னு சொல்றீங்க... நன்றி ;-)

RVS said...

@LK
பதிவில் பொடியை கண்டுபிடித்த எல்.கே விற்கு ஒரு "ஜே". திட்டும்போது சொல்வதை பாசிடிவ் ஆக சொல்ல வேண்டும் என்பதற்க்காகத்தான் அந்த சொலவடையை உபயோகித்தேன். உற்றுப் பார்த்து கண்டுபிடித்து விட்டீர்கள். நன்றி. ;-)

RVS said...

@Balaji saravana
ஆபிஸ் ஆணி தம்பிக்கு ஞானக் கண்ணில் தெரிந்தமைக்கு வாழ்த்துக்கள். எல்.கே மாதிரி தம்பிக்கும் ஒரு ஷொட்டு. எவ்ளோ கரெக்ட்டா பாய்ண்ட்ட புடிக்கறாங்க. எவ்ளோ அனுபவமோ... யார் கண்டா.. ;-)

RVS said...

@அப்பாதுரை
சார் எப்பவுமே... உங்களோட கமெண்டு முத்து சார். வாழு ... வாழ விடு அப்படின்னு நிறைய லாரி பின்னாடி வாசகம் போட்ருக்கும். கரெக்ட்டுதான். நிறைய பேர் வீட்ல அதுதான் நடக்குது. கருத்துக்கு நன்றி சார்! மோகன்ஜி என்னா சொல்லியிருக்கார் பாருங்க.. பத்து வந்து படிச்சிட்டு என்ன நடக்கப் போகுதோ. சாய் வந்தா சரியாய்டும். ஆனா சபரிமலைக்கு போறதா கேள்வி. பார்ப்போம். ஏதோ நம்மாள முடிஞ்ச நாரதர் வேலை. ;-)

Madhavan Srinivasagopalan said...

//@மாதவன்
நீ படிச்சுட்டு கமெண்டு போடறியா இல்லைனா.... ஏம்ப்பா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அப்படின்னு தெளிவா போட்ருக்கேனே.. ;-) //

Sorry RVS.. படிச்சப்ப கொஞ்சம் தூக்கக் கலக்கம்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

எவ்வளவு விஷயம் இருக்கு. பயனுள்ள பதிவு.

RVS said...

@மாதவன்
இட்ஸ் ஓ.கே பா.. ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றிங்க.. ;-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. என்னதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மைய கருத்தாக இருந்தாலும், உங்க பாணில சொல்லும் போதுதான நமக்குப் புரியுது... :) மேக்கப் சரியாத் தான் இருக்கு, “காடி”யா தெரியல :)

RVS said...

நன்றி வெங்கட் நாகராஜ். ;-)

பவள சங்கரி said...

நல்ல பகிர்வுங்க......... சொன்ன விதம் அருமைங்க......வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

ஒஷோ சொல்லுவாரு... சந்திரனுக்கு போகலாம்..செவ்வாய்க்கு போகலாம் ஆனா ஒரு குழந்தையை உருப்படியா வளர்ப்பது அதைவிட கஷ்டமான விஷயம் ..

அதை செய்யனும் நினைக்கும் / செய்ய முயற்சிகும் அம்மாக்களுக்கு பெரிய கும்பிடு போட்டே ஆகனும்..ஏமாத்து கூழை கும்பிடு அல்ல .சீரியஸான கும்பிடு.

நல்ல நகைச்சுவை ஃப்ளோ ஆர்.வி.ஸ்...கடைபிடிக்கும் வகையில் எளிமைப்படுத்தி பதிவிட்டுள்ளதறகு வாழ்த்துக்கள்...

அக்கா தம்பி படம் அருமை ....கலங்கமற்ற அந்த
உள்ளங்கள் வாழ்க..

RVS said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றிங்க... முதல் முறையா வரீங்க... அடிக்கடி இந்தப் பக்கம் வந்து போங்க... ;-)

RVS said...

பாலைவன ஓஷோ பாபா பத்மநாபன் அவர்களே...
எப்படி இப்படி முத்து முத்தா கமென்ட்டுறீங்க... சூப்பெர்ப். நன்றி... ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

இனிப்பு மாத்திரை நல்லா இருக்கு!

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
//இனிப்பு மாத்திரை//
இனிப்பு கமென்ட் நல்லா இருக்கு... ;-)

ஸ்ரீராம். said...

நல்லது. இவறை இனி என்னால் கடைப் பிடிக்க முடியாது. அடுத்து குழந்தைகள் அப்பாவிடம்/பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பதிவு வரும்ல....அப்போ படிச்சு பையனுக்குக் காட்டறேன்..!!

Deepa said...

Nice post! :)

suneel krishnan said...

ஆர் வீ எஸ் சார்
நீங்கள் கல்கி , தேவன் அதிகம் படிச்சிங்களோ ? எனக்கு உங்கள் நடை அவர்களை ஞாபக படுத்துது ..:) மென் நகைச்சுவை :)
எப்பயோ ஒரு தடம் சுகி சிவம் சன் டிவி ல பேசுனாரு , குழந்தை வளர்க்க பொறுமை வேணும் முதல் அடியா மரம் வளருங்க , அந்த கருத்தையும் சேத்துக்கலாம்

RVS said...

@Deepa
முதல் வருகைக்கு ஒரு வணக்கமுங்க. அடிக்கடி எட்டிப் பாருங்க. ஒத்தை வரியில கமென்ட் போட்டதுக்கு நன்றி ;-)

RVS said...

@dr suneel krishnan
என்ன டாக்டர் ரொம்ப நாளா ஆளையே காணும். பேஷண்ட்ஸ் ஜாஸ்த்தியா? ;-)
கடலை மடிச்சு கொடுக்கற பேப்பர்ல கூட படிப்பேன். அதான் நம்ம எழுத்தின் ரகஸியம். ஒரு தடவை கடலை மடிச்ச பேப்பர்ல புருஷன் பொஞ்சாதிக்கு எழுதின லெட்டர் இருந்தது. இங்கே சொல்லலாமா வேண்டாமா.. கொஞ்ச நேரம் சிந்திப்போம். ;-)

Unknown said...

நிறைய குடும்பங்களில் பெற்றோகள் தாங்கள் விருப்பங்களைத்தான் குழந்தைகள் மேல் திணிக்கிறார்கள்.. இது தவறான பின்விளைவுகளைத்தான் தரும்..

RVS said...

@கே.ஆர்.பி.செந்தில்
கருத்துக்கு நன்றி ;-)

அப்பாதுரை said...

ஸ்ரீராம், நீங்க மட்டும் தானா? மோகன்ஜி வேறே மாதிரி சொல்றாரு. எல்லாருமே ஒரே படியில நிக்கிறோம்.. RVS ஏன் பதிவு போட்டாருனு நினைக்கறீங்க? டீச்சர் வேலைக்கு வரவங்களைப் பத்தி ஒண்ணு சொல்வாங்க..

பெற்றோர்கள் சங்கத்து சார்புல கொஞ்சம் சிந்திக்கச் சொன்னாங்க. சிந்திச்சிட்டே இருந்தனா..? குழந்தை வளர்ப்பு இலாகானு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு. சந்ததிக்காகவும் சபலத்துக்காகவும் பெத்துக்கறோம். ஆனா வளக்கத்தெரியாம திண்டாடுறோம். குழந்தை பிறந்தவுடன் இந்த இலாகா ஆளுங்க கிட்ட விட்டா தேவையில்லாத பந்தாக்களும் சடங்குகளும் வலிகளும் சிக்கல்களும் போய்விடுமோனு தோணிச்சு. பாசம் உறவு bonding எல்லாம் எத்தனை தூரம் பெற்றவர்களையும் பிள்ளைகளையும் positiveஆ பாதிக்குதுனு எனக்கு அடிக்கடி தோணிச்சு. கடமையுணர்ச்சி மட்டும் பெற்றோர்கள் நிறுத்திக்கிட்டா பிள்ளைகள் சமுதாயம் வித்தியாசமா வளருமானு தோணிச்சு.

'அது சரி, இந்த இலாகாவுல வேலை பாக்குறவங்க யாரு? பெற்றோர்கள் தானே'னு சங்கத்தலைவர் எதிர் கேள்வி கேட்டாலும் கேப்பாரு. அதுல பாருங்க. நம்ம குழந்தைகளை வளக்கறதுல தான் சிக்கலே தவிர, அடுத்தவங்களுக்கு அட்வைஸ் குடுக்குறதுல நம்மள மிஞ்சிக்க யாருமே இல்லைங்க. அதனால, குழந்தை வளர்ப்புப் பொது இலாகாவுல ஆளாளூக்கு அட்வைஸ் கொடுத்து நல்ல பெற்றோர்களா இருக்கலாம் பாருங்க?

RVS said...

@அப்பாதுரை
//சந்ததிக்காகவும் சபலத்துக்காகவும் பெத்துக்கறோம். ஆனா வளக்கத்தெரியாம திண்டாடுறோம். //
அருமை... ;-)
மோகன்ஜி ஸ்ரீராம் ரெண்டு பேரும் கட்டாயம் பதில் சொல்லணும். ஏன் வாயை திறக்க மாட்டேங்கறாங்க... ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails