Tuesday, September 10, 2013

திருக்கைலாய "லைக்" அரசியல்


கயிலாயம்.காம்மின் ரிடிசையனிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் நந்திதேவர். லேப்டாப்பில் டிசயன்களைப் பார்த்துக்கொண்டிருந்தவரை துளிக்கூடச் சட்டை செய்யாமல் உள்ளே புகுந்தார் நாரத். தோளில் தம்புராவிற்கு பதிலாக எலெக்ட்ரிக் கிடார் சாய்ந்திருந்தது. நாராயண என்று ராகமாக இழுத்துச் சொல்லாமல் “நாராயண்..நாராயண்...” என்று வெட்டிவெட்டி இழுத்த ராப் ம்யூசிக்கோடு கயிலைநாதனைக் காண உள்ளே நுழைந்தார்.

“என்ன நாரதரே! ஃபார்முலா ஒன் மைக்கேல் ஷூமாக்கர் போல ஸ்பீடாக உள்ளே செல்கிறீர்கள்?”

“மிஸஸ்.உமையாளும் அவரது ஹஸ்பெண்ட் சர்வேஸ்வரனும் உள்ளே இருக்கிறார்கள் தானே!”

“இருக்கிறார்கள். கணேஷ் சதுர்த்தியில் என்ன கலகம் புரிய வந்திருக்கிறீர்கள்?”

“கயிலாய வெப் டிசையன் ஒர்க் தலைக்கு மேலே கிடக்கும் போது என் காலை ஏன் வாருகிறீர்கள் ஐயா. கிடாரிஸ்ட் என்றால் இளப்பமா...” என்று புலம்பும் சாரு போல பேசிவிட்டு....”சிவகணங்களுக்கு எதாவது வெட்டிமுறிக்கும் வேலை தாரும். அல்லது உங்களது மத்தளத்தை எடுத்து தையத்தக்கா என்று எதாவது வாசியும். இவ்வளவு வேலையை வைத்துக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனி விபிமாதிரி ஹாயாக உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருக்கிறீரே...அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சமய்யா,,,” என்று கடித்தார் நாரதர்.

“ம்ஹும்... சரி...சரி.. அந்த சுடலையன் குடும்பத்துக்கு ஆச்சு. உங்களுக்காச்சு... எனக்கென்ன.. வந்தது.. இந்த ஜாவாஸ்க்ரிப்ட் செரியில்லை. சியெஸ்யெஸ் எழுதவே தெரியலை.. நான் அதைப் பார்க்கிறேன்..”

திருவிளையாடல் படத்தில் கேவிமஹாதேவன் கொடுத்த “ட்ர்ர்ர்ரெய்ங்....” என்ற பின்னணி ஒலிக்க உள்ளே நுழைந்தார் நாரதர். சிவபெருமான் லாப்டாப்பில் மும்முரமாக கூகிள் சர்ச் செய்துகொண்டிருந்தார். உமையம்மை ஐஃபோனில் சீர்காழி கோவிந்தராஜனின் “காக்கும் கடவுள் கணேசனை நினை..”யை ஓடவிட்டு பிள்ளையின் பிரதாபங்களை எண்ணியெண்ணி ரசித்துக்கொண்டிருந்தார்.

”ம்..கும்...ம்..கும்..” என்று இருமுறை முக்கி முனகி பார்த்துவிட்டு நாரதர் “நாராயண...நாராயண.... உலகைக் காக்கும் பரம்பொருளாகிய நீங்களிருவருமே கேட்ஜெட்டுகளில் மூழ்கிவிட்டீர்கள். இனி யாரிந்த பூலோகத்தைக் காத்து ரட்சிக்கப்போகிறார்களோ? திருமால் கூட சங்குசக்கரம் ஏந்தவேண்டிய இருகரங்களில் ஐஃபோன் ஒரு கையிலும் லாப்டாப் மற்றொருகையிலும் ஏந்தி சதாசர்வகாலமும் சோஷியல் நெட்வொர்க்கில் காலத்தைப் போக்குகிறார்.” என்று சவுண்ட் விட்டார்.

“நாரதா! என்ன விஷயமா வந்திருக்கிறாய். ஆக்ரோஷமான ஆகாய கங்கையை என் சிரசில் வாங்குவதுமாதிரியான ரவிவர்மா பெயிண்டிங்கை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு கணேசனுக்கு பிறந்தநாள். பழமெதுவும் கொண்டு வந்திருக்கிறாயா? நீயாகவே உன் நாடகத்தைத் துவங்கு. உன்னை கேட்க யாரிருக்கிறார்கள்...”

“நாரதா ஞானப்பழம் சூனியக்கிழம் என்று எதாவது கர்நாடகத்தனமான போட்டிகள் எதுவும் வைத்து என் பிள்ளைகளை வெறுப்பேற்றாதே. லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கல் போட்டி ஏதாவது வை. எனக்கும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.”

“அகிலமாளும் ஈஸ்வரியே! சிவபதியடைந்து கைலாயத்தில் குடியேறியிருக்கும் சீர்காழி கோவிந்தராஜரை லைவ்வாகவே உங்கள் முன் பாட வைக்கலாமே. இன்னும் ஏன் ரெக்கார்டிங்கில் 128 bitrate mp3யில் ஐஃபோனில் கேட்கிறீர்கள்”

“உன்னைக் கர்நாடகம் என்று கேட்டதற்கு என்னிடம் பாய்கிறாயா? நன்றாக இருக்கிறது”

“இல்லை தாயே! உண்மையைச் சொன்னேன். அது கிடக்கட்டும். எங்கே தங்களது தவப்புதல்வர்கள்.”

“அதானே பார்த்தேன். கலகமில்லாமல் வருவாயா? என்ன விஷயம்.”

“அம்மையே! அனைவரும் ஃபேஸ்புக்கில் நித்யவாசம் செய்கிறோம். கயிலாயம்.காம் வெப்சைட்டாகவும் நிறைய ஹிட்ஸ் பெறுகிறது. ”பூலோகத்தில் தங்களுக்குக் கிட்டாத நிம்மதிக்கு இன்றே எமலோக யாத்திரை மேற்கொள்ளுங்கள்” என்று ”Early bird" ஆஃபருடன் எமதர்மராஜன் பாசக்கயிற்றை தலைக்கு மேலே சுற்றும் விளம்பரம் வேறு. ஃபேஸ்புக்கிலும் கயிலாய பேஜ் லைக்ஸுக்கு கணபதி புண்ணியத்தில் குறைவில்லை. முறையே கௌமாரம்.காம் மற்றும் காணாபத்யம்.காம்க்குக் கூட கூட்டம் அம்முகிறது. ஏன் எல்.ஆர்.ஈஸ்வரியின் மாரியம்மா பாடல்களை காதைச் செவிடாக்கும் டெஸிபலில் அலறவிட்டிருக்கும் தங்களது சாக்தம்.காம் கூட பரவாயில்லை என்ற அளவிற்கு போகிறது.”

“எதற்கு இந்த கூகிள் அனாலிடிக்ஸ் போல ஸ்டாட்டிஸ்டிக்ஸெல்லாம் கூறுகிறாய். உனக்கு என்ன வேண்டும்.”

”இப்படி வெப்சைட் காலத்தில் உங்கள் ஃபேமிலி இருந்தாலும், ஃபேஸ்புக்கில் அதிகம் கோலோச்சுவது யார் என்று என்றைக்காவது சிந்தித்திருக்கீர்களா?”

“ஓ! லேட்டஸட்டாக போட்டி வை என்று நான் கேட்டதற்கு ஃபேஸ்புக்கோடு வந்துவிட்டாயா? கணபதிக்கு ஹிட்ஸ் அதிகமா அல்லது ஆறுமுகனுக்கு அதிகமா என்று போட்டி வைக்கப்போகிறாயா?”

”உங்களுடனேயே பேசி எனக்கு அலுத்துவிடுகிறது அம்மையே. புத்திரர்கள் இருவரையும் அழையுங்களேன். பலப்பரிட்சை செய்து பார்த்துவிடுவோம்.”

மறுபடியும் முன்னால் சொன்னது போல திருவிளையாடல் கேவிமஹாதேவனின் “ட்ர்ர்ர்ர்ர்ரெய்ங்..” பின்னணி ஒலி இசைக்கிறது.

மூஞ்சுருவை ஸ்கேட்டிங் போர்டாக்கி கையில் கொழுக்கட்டையுடன் கணபதி உருட்டிக்கொண்டு முன்னால் வருகிறார். சைக்கிளை ஹாண்டில்பாரைப் பிடித்து தள்ளிக்கொண்டு வருவது போல பின்னால் முருகப்பெருமான் மயிலின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு நடந்துவருகிறார்.

“மூத்தபிள்ளைதான் எப்பவும் முதலில் வரும் பிள்ளை...” என்று சொல்லிவிட்டு கனைக்கிறார் நாரதர்.

“பிரிவினை முயற்சியை ஆரம்பித்துவிட்டாயா?” என்று நாரதரிடம் சொல்லிவிட்டு.. “இங்கே இவ்வளவு களேபரம் நடக்கிறது. உமக்கு உம் பிரச்சனைதான் முக்கியம். அவளை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை இப்போது பார்க்காவிட்டால் என்ன மோசமாகப் போகிறது. உம்.. இந்த நாரதனையும் நம் பசங்களையும் தான் பாருங்களேன். இந்த கூகிள் சர்வர்களுக்குள் ஒரு நாள் அக்னி தேவனை ஏவி விட்டு சுட்டுப் பொசுக்கிவிடுகிறேன் பாருங்கள்...அப்போதுதான் இவ்வுலகமும் எவ்வுலகமும் உய்யும்..” என்று கர்ஜித்தாள் உமையம்மை.

லாப்டாப்பை ஷட்டவுன் செய்துவிட்டு சிவனேன்னு நடக்கவிருக்கும் ரகளைகளைப் பார்க்க ஆரம்பித்தார். நாரதன் நீயா நானா கோபிநாத் போல கோட்டும் சூட்டும் அணிந்து போட்டி நடத்த தயாராக இருந்தார். காலில் ஷூ வேண்டாம் என்று தனது சௌகரியத்துக்காக மரத்தாலான பாதரட்சையே அணிந்திருந்தார். இந்தப் புது மோஸ்தர் கணபதிக்கும் முருகனுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. “அண்ணா! இனிமேல் தேவலோகத்தின் புது ஃபேஷன் டிசையனர் நாரதர் தான். இதுதான் லேட்டஸ்ட் ஹிட்டாகப்போகிறது” என்று முருகன் பிள்ளையாரின் காதைக் கடித்தான்.

”முருகா... கணபதி... உங்களிருவரின் முகப்புஸ்தக பக்கத்தில் எவ்வளவு லைக்ஸ் இருக்கிறது? முருகா நீ அதிகமா அல்லது விநாயகன் அதிகமா?”

“யார் அதிகமானல் என்ன? கௌமாரர்கள் என்னை தொடர்ந்து ஆதரிப்பார்கள். அவ்வைக் கிழவி “ஒன்று..இரண்டு..மூன்று...” என்று வரிசைப்படுத்தி என் புகழ் பாடி மகிழ்வாள்.” என்றான் முருகன்.

”எந்த பேஜிலும் என்னை முதலாகத் துதிபாடிவிட்டுதான் செயலெதுவும் துவங்குவார்கள். இந்தப் புள்ளிவிவரங்களை எடுத்தால் நான் நிச்சயம் முன்னணியில் இருப்பேன். இருந்தாலும் தம்பி முருகன் சொன்னது போல காணாபத்யக்காரர்கள் எனக்கு லைக்கிட்டு மகிழ்வார்கள்.”

“அடடா.. இருவருமே கான்செப்ட்டை புரிந்துகொள்ளவில்லை. உங்கள் இருவருக்கும் யாருக்கு லைக் அதிகமாக உள்ளதோ அவரே வெற்றிபெற்றவர்.”

“ஒரு சந்தேகம்” என்றான் கணபதி.

“கேள் அப்பனே!” என்றார் நாரதர்.

“ஔவைக்கிழவியை நாந்தான் சேரமானுக்கும் சுந்தரருக்கும் முன்னால் யானையேற்றி கைலாயத்திற்கு அழைத்துவந்தேன். எனக்கும் முருகனுக்கும் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் அவள் இருக்கிறாள். அவளது லைக் இட்டால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?”

“நல்ல கேள்வி. ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்டாக இருப்போர் இருபக்கச் சண்டைக்கும் தூபம் போடுவார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் காரசாரமாக நடந்தால் அன்றைக்குப் பொழுது நன்றாக போகும். ஆதலால் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது”

“எனக்கும் ஒரு சந்தேகம்” என்று இடிமுழங்கும் குரலில் கேட்டான் அழகன் முருகன்.

“ம்... சூடு பிடிக்கிறது. கேளப்பா...” என்றார் நாரதர்.

”இன்றைக்குதான் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து புதிதாக நண்ப பக்தராயிருப்பர் சிலர். அவர்கள் இடும் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்வீர்களா?”

“ம்... சரிதான். அவர்களுக்கு புதிதாய் சேர்ந்ததின் கவர்ச்சி இருக்கும். அதுவும் கிடையாதுதான்...”

“மீண்டும் எனக்கொரு சந்தேகம். “ என்று கை தூக்கினான் கணேசன்.

மூஞ்சுரு கடிக்காத தூரத்தில் நின்றுகொண்டு “என்னப்பா...” என்று வினவினார் நாரதர்.

“லைக்கை வைத்து ஒருவரின் ப்ரபல்யத்தை அறிய முடியாது என்பது என் கருத்து. எவ்வளவுக்கெவ்வளவு ஷேர் அதிகமாக இருக்கிறதோ..அவ்வளவுக்கவ்வளவு அவர்களது புகழ் இப்புவியெங்கும் பரவியிருக்கிறது என்று அர்த்தம்...”

“இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்...” என்று மறுத்தான் முருகன்.

“இன்றைக்கு கணேஷ் சதுர்த்தி. அண்ணனின் படங்களும் கதைகளும் நிறைய பகிரப்படும். சஷ்டியில் பார்த்தால் என்னுடையவை அதிகமாக ஷேர் செய்யப்பட்டு கம்ப்யூட்டர் திரைகளுக்கு தீபாராதனைக் காட்டுவார்கள். வீட்டிலேயே என் படம் பேக்கிரௌண்ட் இமேஜாக உள்ள லாப்டாப்பை கரகம் காவடி போல் எடுத்து ஆடியாடிக் கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஒத்துவராது.” என்று படபடத்தான் முருகன்.

”பிள்ளைகள் இரண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நீர் லேப்டாப் திறந்து படம் தேட ஆரம்பித்துவிட்டீர். குடும்பம் உருப்பட்டார் போலத்தான்.” என்று கழுத்தை ஒடித்து தோளை உயர்த்தி இடித்துக்கொண்டாள் பார்வதி.

“முருகன் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த மாயவனுக்கு லைக்கும் ஷேரும் மலைபோல் குவிந்தது. ஆயுத பூஜையில் மிஸஸ் பிரம்மா அதிகமாகத் தென்படுவார். இப்போது என்ன செய்யலாம்?” என்று கையிலிருந்த எலெக்ட்ரிக் கிடாரை தரையில் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிவகணத்தின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு யோசிக்கலானார் மிஸ்டர். நாரதர்.

“நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? எதிரிகள் லைக்குகளை சேர்த்தால் யாருக்கும் அதிகமாக வருகிறதோ.. அவர்களே ஜெயித்தார் என்று முடிவெடு...” என்று நாட்டாமை கணக்காக சொல்லிவிட்டு பார்வதியை பெருமையாகப் பார்த்தார் சிவன். இருகையாலும் வயிற்றில் அடித்துக்கொண்டு பழிப்பு காண்பித்து திரும்பிக்கொண்டாள் பார்வதி.

“அட்டகாசமான யோசனை... நீங்களே ஐடியாஸ்வரன்...” என்று கிடாரில் ரெண்டு ஸ்ட்ரம்மிங் கொடுத்து பாராட்டினான் நாரதன்.

”ரொம்ப அழகாயிருக்கே.... கஜமுகாசுரன் கணபதிக்கு லைக் போடுவான். சூரபத்மன் முருகனுக்கு. இந்த ரெண்டு ஓட்டை வச்சுண்டு யார் பெரியவர்னு முடிவெடுத்துடுவேளா? சிவ..சிவா..” என்று தலையடித்துக்கொண்டாள் பார்வதி.

“ஆமாம். இதுவும் சரிதானே. ” என்று கிடார் வாசித்து பூரித்துப்போனான் நாரதன்.

“இது என்னடா கொடுமையா இருக்கே. ரெண்டு பேருக்கும் ஜால்ரா.. ச்சே...கிடார் போடறே...” என்று எக்கினார் சிவனார்.

”நான் இதுக்கொரு முடிவு சொல்றேன்.. கேட்டுக்கோங்கோ...”

சிவனார் புலித்தோலை ஒருதடவை அரையில் இறுக்கிக்கட்டிக்கொண்டார். நாரதர் முன்னால் வந்து நின்றார். முருகனும் கணபதியும் தோளில் கைபோட்டுக்கொண்டு தோழமையுடன் நின்றார்கள். பார்வதி அட்ரெஸ் பண்ணினாள்.

“ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாங்காட்டியும் நல்லதாக எது கண்ணில் பட்டாலும் லைக் போடுகிறவன் அன்பயாஸ்டு ஃபெல்லோ. அதுபோல தன் மூலமாக இதை பலருக்கும் சென்றடையட்டும் என்று ஷேர் செய்பவனும் அதே கேட்டகரியில் வருகிறான். விசேஷத்துக்கு விசேஷம் விழுந்து சேவிப்பவர்கள் எவராயினும் குறுகியகால புண்ணியத்திற்கு அடி போடுபவர்கள். அவர்களின் பூஜைகள்...லைக்குகளை லைட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டு நலனில் அக்கறை கொண்டு பகிரப்படும் ஸ்டேட்டஸ் எதுவாகிலும் முன்னுரிமை கொடுத்து லைக்க வேண்டும். வீட்டிற்காகவும் பதியப்படுபவைகளுக்கும் ஸ்பெஷல் லைக்கிங்ஸ் கொடுக்கலாம். கருத்துரைக்காமல் அறிவுசார் பதிவுகளை ரெண்டடி தள்ளி நின்று பார்த்து இடும் லைக்குகளை ஆயிரமாக எடுத்துக்கொளல் வேண்டும். மொக்கைப் பதிவுகளுக்கு தேடித்தேடி லைக்கிட்டு ஆதரவளிப்பவர்களுக்கு “காலை வணக்கம்” என்ற அவர்களது ஸ்டேட்டஸிற்கு லட்சோபலட்சம் லைக்குள் கொடுத்து உற்சாகமூட்டவேண்டும்...”

அம்மாவின் இந்த அறிவுரைகளைக் கேட்டு கணேசனும் முருகனும் நெளிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் லாப்டாப்பில் படம் தேடப் போய்விட்டார். (இப்பதிவுடன் அந்தப் படத்தை இணைத்துள்ளேன்.) நாரதன் கிடாரை துவம்சம் பண்ணி ஒலியெழுப்பி ஆரவாரித்தான். கடைசியில் கணேசனும் முருகனும் கோரஸாக பின்வருமாறு பேசினார்கள்.

“நாங்கள் இருவருமே சண்டை போட்டுக்கொள்ளவில்லை. இந்த லைக் அரசியலில் நாங்கள் உள்ளே நுழையமாட்டோம். அவரவர் கர்மவிதிப்படியே லைக்கும் ஷேரும் அனைவருக்கும் கிடைக்கிறது. எங்களை கும்பிடும் பக்தர்கள் அனைவரும் ஆர்.வி.எஸ்ஸின் இந்த போஸ்டிற்கு பெருவாரியான லைக்கும் மகத்தான எண்ணிக்கையில் ஷேரும் செய்து ஆதரவளித்தால் கைலாய ப்ரதர்ஸான எங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று ஆசிகூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு அப்பாவின் இந்த ஃபோட்டோவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நாரதர், சிவன், பார்வதி மூவரும் கையில் கிடைத்த கேட்ஜெட்டை எடுத்து http://www.facebook.com/mannairvs என்ற பக்கத்தைத் திறந்துபார்த்து கல்லை எடுத்துக்கொண்டு அடிக்க பூலோகத்திற்கு ஒடிவந்தார்கள்.

14 comments:

sury siva said...

நான் தான் முதலில் லைக்கினேன்.

சுப்பு தாத்தா.

அப்பாதுரை said...

//இந்த கூகிள் சர்வர்களுக்குள் ஒரு நாள் அக்னி தேவனை ஏவி விட்டு

disaster recovery :)

தாஸ். காங்கேயம் said...

மகத்தான ஆதரவு அளிக்கிறோம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

யாரங்கே!

இரா.வெங்கடசுப்ரமணியனை அப்படியே முடக்குங்கள்.

”இம்சை அரசன் 23ம் புலிகேசி”ஐ தூக்கிச் சாப்பிடுவது போல ”திருவிளையாடல்” ரீமேக்குக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுத கீழக்கடற்கரை அகண்ட சாலைக்கு தூக்கிச் செல்லுங்கள்.

உலகமெங்கும் முதன்முறையாக ரிலீஸ் ஆகும் மட்டும் ஃபேஸ் நூலில் வேறேதும் எழுதக்கூடாது என்று உத்தரவு பறக்கட்டும்.

Unknown said...

திருக்கைலாய அக்குரும்பை படித்து ரசித்தது ,உங்களுக்கு பிடித்த இளிச்சவாயன் ஜோக்காளி !

மாதேவி said...

சிவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆர்.வி.எஸ் பதிவுகளை முடக்க புதிய வைரஸ் பாய்ந்து வருகின்றது. :)

அருமை. வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

ஹாஹாஹா, என்னை மாதிரி ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் னு முகநூலிலே லைக்கும் நண்பர்களுக்கு என்ன செய்யறதாம்? மிஸஸ் பார்வதி கிட்டே கேட்டுச் சொல்லுங்க.

RVS said...

@sury Siva

முதல் லைக்குக்கு நன்றி சார் :-)

RVS said...

@அப்பாதுரை

அப்பாஜி!! ரெகவரியெல்லாம் டிஸாஸ்டர் பண்ணக்கூடியது மாதிரி அக்னி தேவன் பண்ணிடுவான். :-)

RVS said...

@தாஸ். திருப்பூர்
நன்றிங்க.. :-)

RVS said...

@சுந்தர்ஜி
ஜீ!ஜீ!..... தூக்கிக் கடாசிடுவாங்க... :-)

RVS said...

@Bagawanjee KA

நன்றிங்க.. :-)

RVS said...

@மாதேவி
நன்றிங்க.. முக்கண்ணன் என்னைக் காப்பாற்றுவான்... :-)

RVS said...

@Geetha Sambasivam
மிஸஸ் பார்வதி சொல்றாங்க.. உங்களை தினமும் ஃபேஸ்புக்குக்கு வந்து லைக் போடச்சொல்றாங்க.. மோட்சம் கிட்டுமாம்... :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails