Friday, September 16, 2016

ஸ்ரீசாஸ்தாம்ருதம்

உண்ணலும் உனதே
உயிர்த்தலும் உனதே
உடல், உயிர், மனம் எல்லாம் உனதே
எண்ணலும் உனதே
இச்சையும் உனதே
என் செயல் பயனெல்லாம் உனதே
சகலமும் சாஸ்தாவே உனக்கர்ப்ப்ணம்
அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணம்

~~~

அதிகாலையில் பதிவிட்டு..... நாளெல்லாம் பொருள் தேடிவிட்டு வீடு திரும்பி... அர்த்தராத்திரியில் கமெண்ட் பார்த்துக் களித்த ப்ளாக் காலம் அது. "நீ சொல்ற இந்தக் கதையெல்லாம் ப்ளாக்ல எழுதேண்டா.." என்று என்னுடைய கதை அரிப்பு தாங்காமல் ரவீ தூண்டி விட்டார். பின்னர் சதா எழுது...எழுது என்று ஏதோ ஒன்று மாயமாய் உந்தித்தள்ளியது. விசைப்பலகையில் எழுத்துருக்கள் அழிய... அழிய... ப்ளாக்கில் அழிச்சாட்டியமாய் எழுதிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஐயப்ப பிரசாதமாகக் கிடைத்த நண்பர் மோகன்ஜி அண்ணா.
" என்ன ஆர்.வி.எஸ்... சௌக்கியமா?" என்று போனில் சாந்தமாக விஜாரிக்கும் போதே வாத்சல்யம் பொங்கி வழியும் குரல். நேரே வந்தால் அந்தச் சிரிப்பில் மயங்கி உருகிவிடுவேன். ஐயப்பனே எதிரில் வந்து தாவாங்கட்டையைப் பிடித்து ஆட்டி "மோகா...மனமோகனா.." என்று கொஞ்சுமளவிற்கு தீவிர சாஸ்தா பக்தர். அவரது ஆச்சரியமான சில சபரிமலை அனுபவங்களை நான் வாய்பிளந்து கேட்டு, உள்வாங்கி, பிரமித்துப்போய் இரண்டு பதிவுகள் இந்த தமிழ் பொங்கும் பேஸ்புக்கில் எழுதியிருக்கிறேன்.
அவரைப் போலவே அவரது கதைகளிலும் பாசம் பீரிட்டுப் பொங்கும், அன்பு அலை சுனாமியாய் எழுந்து ஆளை அடித்துப்போடும் . படிக்கும் போது கதாபாத்திரங்கள் எழுத்து ரூபத்திலிருந்து கணினித் திரையை ஊடுருவி ஸ்தூல சொரூபத்தில் முன்னால் வந்து அவர் எழுதியிருக்கும் வசனத்தை நமக்குப் பேசி நடித்துக்காட்டும். "ஐயப்பனோட ஸ்லோகமெல்லாம் திரட்டி ஒரு புஸ்தகம் போடனும்... " என்பது அவரது பிள்ளைகளின் அவா. அப்படியொரு புத்தகத்தை அவரது சஷ்டியப்தபூர்த்தியன்று தனிச்சுற்றுக்காக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர் பரிசளித்த அந்தப் புத்தகத்தைத் திறந்து நான் படிக்கப் படிக்க மோகன்ஜி அண்ணாவின் குரலில் சரணம் விளிக்கிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு வரப்பிரசாதம். கன்னிசாமிகளுக்காக அவரே எழுதிய "மணிகண்டா... மணிகண்டா..." என்ற ”கன்னி சாமிக்கோர் ஆற்றுப்படை” என்கிற சரண கோஷமும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. சபரிமலை பற்றி புதிதாகச் செல்பவர்கள் தெரிந்துகொள்ளுமளவிற்கு அனைத்து விஷயங்களையும் அந்த சரண கோஷத்தில் கொடுத்திருக்கிறார். அற்புதம்.
ஸ்ரீகல்யாண வரத சாஸ்தா, ஸ்ரீஸம்மோஹன சாஸ்தா, ஸ்ரீ பிரும்ப சாஸ்தா, ஸ்ரீஞான சாஸ்தா, ஸ்ரீமகா சாஸ்தா, ஸ்ரீவீர சாஸ்தா, ஸ்ரீவேத சாஸ்தா, ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று அஷ்ட சாஸ்தாக்களின் தியான ஸ்லோகங்கள் அடங்கியிருக்கிறது.
கந்த சஷ்டிக் கவசம் போல ஐயப்பன் கவசம் இருக்கிறது..... அதிலிருந்து சில காக்க...காக்ககள்.....
சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
நாரணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க....
இப்படி உள்ளடக்கம் முழுவதும் எழுதவேண்டுமென்றால் முழு புத்தகத்தையும் தட்டச்சு செய்ய வேண்டியிருக்குமென்பதால்.....
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணீகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
--என்று “சாஸ்தாம்ருத”த்தில் இடம்பெற்றுள்ள ஆரத்தி பாடலுடன் இப்பதிவிற்கும் சுபம் போடுகிறேன். நன்றி
பின் குறிப்பு: இத்தோடு இணைத்திருக்கும் ஐயப்பன் படம், திரு. மோகன்ஜி தினமும் அபிஷேகம் செய்யும் சிலா ரூபம்

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails