Tuesday, September 28, 2010

புன்னகைக் கிழவர்

punnagaikizhavarஇடுப்பில் கொஞ்சம் பெரிய துண்டு போல கணுக்காலுக்கு அரை அடி மேலே நிற்கும் ஒரு காவி வேஷ்டி. போகர், அகத்தியர் மாதிரி வளர்ந்த சித்தர் தாடி, ஆனால் மாசற்ற வெள்ளையில். அழுத்தி பின்னால் படிய வாரிய பாகவதர் ஸ்டைல் கேசம். பெரும்பாலான நேரங்களில் சட்டையில்லாமல் பொசு பொசுவென்று வெள்ளை ரோம மேலுக்கு மாட்சிங்காக ஒரு துண்டு. இளவயதில் உழைத்ததின் சிறப்பு தொப்பை இல்லாமல் தோளுக்கு மேல் இருந்த ரெண்டு முண்டுகளில் தெரிந்தது. நல்ல வைரம் பாய்ந்த கட்டை. ஆனால் எழுபது வயது தசைகளை சுருக்கியும் முழு கேசத்திற்கும் வெள்ளை அடித்தும் விட்டிருந்தது. எல்லாவற்றும் மேல் எப்போதும் சந்தோஷம் ததும்பும் முகம். பிறந்த போதே சிரித்துப் பிறந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றும். பாழ் நெற்றி. இது தான் அந்த புன்னகைக் கிழவரின் இயற்பியல் கூறு. 

உள்ளூர் கடைத்தெருவில் சாமியப்ப முதலியார் ஜவுளிக் கடையில் இருபதிலிருந்து என்பது வரை வந்த மகளிர் படைக்கு காலை முதல் இரவு வரை சளைக்காமல் புடவை எடுத்துக் காண்பித்து மகிழ்ச்சி அளித்தவர். "வஜ்ரவேலு கடையில் இருந்தால் அலுக்காமல் அஞ்சு நிமிஷத்துல ஐநூறு புடவை விரிச்சி போடுவான்" என்று பெரியய்யா சாமியப்பன் காலத்திலேயே பெயரெடுத்தவர். தீபாவளியை விட அந்த விவசாய மற்றும் வேளாள குடி மக்கள் நிறைந்த அந்தக் கிராமத்தில் பொங்கலுக்கு புதுத் துணி எடுக்கும் கூட்டமும் பழக்கமும் அதிகம். ரெட்டை மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கொழுந்தியா, நாத்தனாருடன் துணி எடுக்க வந்த அத்திப்பட்டு பெருநிலக்கிழார் வீட்டு மருமவப்பொண்ணு வஜ்ரவேலுக்கு புடவை காண்பித்த ஷோக்கிர்க்கு வெகுமதியாக ஒரு கருப்பு கரும்பு கட்டு அவர் வீட்டில் இறக்கி சென்றதாக பெருமையாக கூறுவார். "காட்ல மகசூல் அதிகமா இருந்தாலும் கொடுக்க மனசு வரணும்ல..." என்று அப்பெண்ணின் தாராள குணத்தை ஊரறிய வாயார புகழ்ந்து பேசுவார்.

அரசாங்க பஸ் ஓட்டுனராக பெரியவன் மனோகர் வேலைக்கு சேர்ந்தபின் "யப்பா.. இன்னமும் ஏன் வேலைக்கு போற.. கையை மேல தூக்கவே கஷ்டப்படுற.. இன்னமும் கடையில போய் விசுரனுமா... பேசாம ஊட்ல படு..." என்று பலமுறை பாடாய் படுத்தினான். அப்ப கூட அவருக்கு வேலையை விடும் எண்ணம் இல்லை. அரக்குக்கும் சிகப்பிர்க்கும் வித்தியாசம் தெரியாமல் போன ஒரு நாளில் இனிமேல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்தார். "பரவாயில்லைண்ணே கல்லா பக்கத்தில உக்காந்துக்கோங்க, இல்லைனா வேட்டி துண்டு எடுத்துக் கொடுங்க... வேலைய விட்டு நிக்காதீங்கண்னே" என்று சின்ன முதலாளி தன்ராஜ் வற்புறுத்தினான். இருந்தாலும் நாளைக்கு வேலையில் ஒரு தவறு கண்டுபிடித்து தன் இவ்வளவு நான் உழைப்பிற்கு ஒரு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக விட்டுவிட்டார். வேலையை விட்ட அன்று புது வேட்டி சட்டை ஆயிரம் ரூபாய் பணத்துடன் தன்னுடைய கைனெடிக் ஹோண்டாவில் வீடுவரை கொண்டுவந்து விட்டுச் சென்றான் தன்ராஜ்.

பொதுவாகவே யாரிடமும்  வம்பளக்கும் குணம் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகியவர் வஜ்ரவேலு. அவர் வீட்டுத் திண்ணையில் ஓய்வாக உட்காருவதர்க்கும் மனோகரின் மகவு ஒன்று தொட்டிலில் வருவதற்கும் சரியாக இருந்தது. பேரனுடன் பெரும்பொழுதைக் கழித்தார். யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். காலையில் எப்பவாவது டீ தேவைப்பட்டால் தெரு முனைக்கு ராசு டீக்கடைக்கு வந்து பொறுமையாக உட்கார்ந்து போட்டு தரும்போது டீ குடித்துவிட்டு செல்வார். எந்நேரமும் சிரிப்பார். "என்னப்பா பசங்களா... வானாகி..மண்ணாகி... படிக்கிறீங்களா" என்று கொஞ்சும் போது தெருப் பிள்ளைகளை கேட்பார். பள்ளி செல்லும் பிள்ளைகள் சாலையை ஒழுங்காக கடக்கிறார்களா என்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டே வாஞ்சையுடன் பார்ப்பார்.

இரண்டு வருடம் கழித்து போன மாதம் தான் ஊருக்கு போனேன். லாஃபிங் தெரபி, மனசை ஸ்ட்ரெஸ் இல்லாமல் எப்படி வைத்துக்கொள்வது என்று ஐயாயிரம் கட்டி லீ மெரிடியனில் மானேஜ்மென்ட் வாத்தியார்களின் கிளாஸ் அட்டென்ட் செய்யும்போது மூக்குக்கு முன்னாடி வந்து நின்றார் கிழவர். இந்த முறை பார்க்கலாம் என்று அக்கரை மாரியம்மன் கோயில் தாண்டி ஆற்றோரத்தில் இருக்கும் தாத்தா வீட்டை பார்க்கப் போனேன். விறகு சுள்ளி பொறுக்கிக்கொண்டு வழியில் வந்த செல்லாக்கா ஆத்தா தான் விசாரித்தபோது சொல்லிச்சு, "எப்போதும் சிரிச்சிகிட்டே இருந்தாரு. நாம போவும் போது எதை எடுத்துக்கிட்டு போவப்போறோம் செல்லாக்கா சின்னச் சிறுசுங்க கொஞ்சம் வெடுக்குன்னு தான் பேசுங்க.. விட்டுட்டு போவியா நம்ம காலம் மலையேரிடிச்சு.. இனிமே அவங்க காலம். விட்டு தள்ளு" அப்படின்னு ஊருக்கு சொல்லிகிட்டு  இருந்தவருக்கு வீட்ல அவ்வளவு பிரச்சனை. மருமவ தான் கையால ஒரு பிடி சோறு போடலை. எப்பயும் வெந்நீரா தள தளன்னு கொதிச்சுகிட்டு இருந்தா... இருந்தாலும் வெளிய காட்டமே சிரிச்சிகிட்டே இருப்பாரு. போன மார்களி  மாச பவுர்ணமி விடிகாலைல பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டாரு தம்பி... " என்று முந்தானையை வாயில் பொத்திக் கொண்டாள்.

"ஆனா தம்பி.. செத்தப்புறமும் மூஞ்சி நம்மளை பார்த்து சிரிச்ச மாதிரியே இருந்ததுப்பா..." என்று சொன்னவுடன் ஏனோ கண்கள் பனித்து நெஞ்சு கனத்தது. கிழவர் வீட்டுப் பக்கத்தில் ஓடிய ஆறு ஓடாமல் நின்றுகொண்டிருந்தது.

பட உதவி: http://arunrajagopal.com
-

25 comments:

Madhavan Srinivasagopalan said...

பல விதமான படைப்புகளை தரும் ஆர்.வீ.எஸ்ஸே.. நீவீர் இன்னும் பலப் பல (பளப் பள) செய்திகளை தொடர்ந்து தருவீராக.

RVS said...

நன்றி மாதவா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ப.கந்தசாமி said...

பல பேர்களுடைய சொந்த வாழ்க்கை இப்படித்தான் சோகமாக இருக்கிறது. நல்ல காலம் மனுஷனை சீக்கிரமா அனுப்பிச்சிட்டீங்க. மேல் லோகத்திலயாவது நல்லா இருக்கட்டும்.

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது.

RVS said...

கந்தசாமி சார். இது கொஞ்சம் புனைவு கொஞ்சம் நிஜம். கருத்துக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

நன்றி சை.கொ.ப

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chef.Palani Murugan, said...

Boreஅடிக்காத, எழுத்து நடை.

RVS said...

நன்றி செஃப்

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

புன்னகைக் கிழவர் - கொஞ்சம் புனைவு, கொஞ்சம் நிஜம் என்று சொன்னாலும், நிறைய வீடுகளில் இது போன்ற நிலையிருப்பது வருத்தம் தான். அருமையான பகிர்வுக்கு நன்றி.

வெங்கட்.

RVS said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

இளங்கோ said...

//ஓடிய ஆறு ஓடாமல் நின்றுகொண்டிருந்தது.//
அழகான வரிகள்.

RVS said...

நன்றி இளங்கோ.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடேங்கப்பா...!!!!!

RVS said...

ஆர்.ஆர்.ஆர். சாரின் அடேங்கப்பாவுக்கு அடக்கத்துடன் ஒரு நன்றி!!!!

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

புன்னகைக் கிழவர் பொலிகிறார் உங்கள் எழுத்தில்.சிலர் வாழ்க்கையை ஒரு மயிலிறகாக்கிக் கொண்டு ,
பிறருக்கு சுமையாக இல்லாமல்,இதம் தந்து கொண்டு இருப்பார்கள். ஆனாலும் விதி அவர்கள் மேல் வெந்நீர் ஊற்றியபடியே இருப்பதுண்டு.இவருக்கு விதி மருமகளாய் வந்தது போலும்...
கனத்துப் போனது மனதெனக்கு.

RVS said...

பின்னூட்டக் கருத்து அட்டகாசம் மோகன்ஜி! நன்றி ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஹேமா said...

நீங்கள் புனைவு என்று சொன்னாலும் இதுதான் இயல்பு.புன்னகை என்றும் நிரந்தரமாய் இருக்கட்டும் ஆர்.வி.எஸ்.

RVS said...

கருத்துக்கு நன்றி ஹேமா!

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

'ஓடிய ஆறு ஓடாமல் நின்றுகொண்டிருந்தது' கொஞ்சம் புரட்டுகிறது. poignant.

RVS said...

தன்யனானேன் அப்பா சார்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

//சிலர் வாழ்க்கையை ஒரு மயிலிறகாக்கிக் கொண்டு ,
பிறருக்கு சுமையாக இல்லாமல்,இதம் தந்து கொண்டு இருப்பார்கள்...

wonderful, hello மோகன்ஜி.. simply wonderful.

பத்மநாபன் said...

புன்னகை கிழவர்.... எதார்த்தம் மிக எதார்த்தம்....மனதில் ஒரு திருப்தி அவரது வாழ்வெங்கும்... பூமியாளும் பொறுமை.... உயிர்பிரிந்தும் புன்னகை பிரியாமுகம்.... அருமையாக வார்த்தைகளை வார்த்து எழுதியிருக்கிறீர்கள் ஆர்.வி.எஸ்

RVS said...

மனமார்ந்த நன்றி பத்தன்னா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Pazhaselvaraaju said...

ரெட்டை மாட்டு வண்டி, கருப்பு கரும்பு கட்டு, ராசு டீக்கடை, சட்டையில்லாமல் பொசு பொசுவென்று வெள்ளை ரோம மேலுக்கு மாட்சிங்காக ஒரு துண்டு , கிராமத்து நடை கிராமத்து வாடை அப்பப்பா இந்த கம்ப்யூட்டர் காரருக்குள் நெகிழ வைக்கும் புனைவும் நிஜமும் நமக்கும் கண்ணீர் வரும். தி ஜானகிராமனின் தஞ்சை கிராமம் ஞாபகத்திற்கு வருகிறது. கிராமதுக்காரனான நான் அரசு வேலையை உதறிவிட்டுஐம்பத்திரண்டு வயதிலும் அந்தர் ஜாமத்தில் அமெரிக்காகாரனுக்கு தூக்கத்தை தொலைத்துவிட்டு பாடுபடும் வேளையிலும் வெளிச்சமான அந்த வெள்ளந்தி கிராமம் கண் முன்னே வருகிறது ஆர் வீ எஸ்... கவிதை ...கதை... இனி இசையும் இசையுமோ உமக்கு... கண்களால் நுகர்ந்த நான் காதுகளையும் தீட்டிக்கொண்டிருக்கிறேன் ....

RVS said...

"உங்களுக்குள்ள இன்னமும் ஒரு பக்கா கிராமத்தான் இருக்கான்" அப்படின்னு என் சம்சாரம் இன்னிக்கி கூட சொன்னாள் Pazhaselvaraaju ஐயா!!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails