Friday, November 15, 2013

ரோல் மாடல்!

”நீ மாமா.. நீ மாப்ளே... ” என்று விஜய் டிவியில் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துப் பாடியபோது மொத்த அரங்கமும் கரகோஷித்தது. தத்தம் வீட்டு சோஃபாக்களில் சாய்ந்து கொண்டு காலாட்டி ரசிப்பவர்களுக்கும் தீப்பொறி பட்ட கேஸ் அடுப்பு போல பக்கென்று அந்த சந்தோஷம் பற்றிக்கொண்டது. அதில் பாடிய திவாகர் என்பவரின் ப்ரொஃபைல் AV ஒன்றைத் திரையில் காட்டினார்கள். இதைப் பார்க்காமல் விட்டவர்கள் விஜய்டிவியின் யூட்யூப் பக்கத்தில் பகிரும்போது ஓசியில் ஆஃபீஸிலோ அல்லது குடும்பத்தினர்களை சுற்றி உட்கார வைத்துக்கொண்டு வீட்டிலேயோ பார்ப்பதற்கு பரிந்துரைக்கிறேன்.

பரம்பரையில் சங்கீதத்தின் வாசனையே தெரியாத ஒரு தினக்கூலி குடும்பத்தில் பிறந்து, சைக்கிளில் தண்ணீர் கேன் போட்டு, இராத்திரிகளில் பால் வண்டி ஓட்டி படித்து, தன்னுடைய அப்பா[கொத்தனார் வேலை செய்கிறார்], அம்மா[சித்தாளோ, பெரியாளோ], அண்ணனின்[லேத்தில் பணி புரிகிறார்] தியாகத்தினாலும் பாசத்தினாலும் மேடையேறிப் பாட வந்திருப்பதைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரக்கனுடைய மனதையும் அசைக்கும் நிஜம்! மெய் சிலிர்க்கிறது. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவரது கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறது.

உள்ளங்கையில் வைத்துத் தாங்கி, கண்ணுக்கு கண்ணாக வேளாவேளைக்கு இன்னமுது ஊட்டி, ”என்ன வேணாலும் வாங்கிக்கோ ராசா..” என்று எல்லாக் கடையிலும் பல சலுகைகள் காட்டினாலும் எவ்ளோ தூரம் முன்னுக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஸ்வயம்மை சுட்டெரிக்கும் தீராத கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

ஒருக்கால் அத்தியாவசியத் தேவைகள்தான் மனிதனின் வெற்றிக்கு அச்சாரம் போடுகிறதோ? வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தியானவன் அந்த திருப்தி சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்க மனதிருப்பதில்லையோ? நீதிபதிக் குழுவில் இடம்பெற்றிருந்த பின்னணிப் பாடகி சுஜாதாவின் மகள் வெளிப்படையாகச் சொன்னார் “உங்களை நான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளப்போகிறேன்” என்று. நானும் அதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் அனைவரும் பார்க்க வெட்ட வெளிச்சமான சபையில் ஒளிபரப்பிய விரகதாப ”பொன்மேனி உருகுதே”வினால் [பார்க்கவேண்டிய, கேட்கவேண்டிய வயதினர்க்கு அது அற்புதமான பாட்டு என்பதில் வேறு கருத்துக் கிடையாது. ஜானகியின் டெலிவரியும் எக்ஸ்ப்ரஷன்ஸும் எக்ஸ்ட்ரார்டினரி! ] தீட்டுப்பட்டச் சேனலுக்கு திவாகரின் இன்றைய வெற்றிப் புராணத்தால் புண்ணியாவசனம் செய்துகொண்டார்கள் விஜய் டிவிக்காரர்கள்.

வாழ்க!

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தியானவன் அந்த திருப்தி சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்க மனதிருப்பதில்லையோ?

சரியான ஆதங்கம்..!

Yaathoramani.blogspot.com said...

அனைவரின் மன நிலையையும்
சுருக்கமாகவும் அருமையாகவும் பதிவு செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

sury siva said...

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு
ஊர்ந்தான் இடை

என்னும் குரள் நினைவுக்கு வருகிறது.

அதே சமயம் அந்த வறுமையில் வாடும் எண்ணற்ற நபர்களில் ஒருவர் தான் இது போன்று

தன்னுள் இருக்கும் எதோ ஒன்றை கண்டு பிடித்து அதுவே இலக்காகக் கொண்டு

தன்னை சமூகத்தின் முன் பெருமிதம் அடையும் அளவுக்கு
நிலை நாட்டுகிறார் என்பதும் வெள்ளிடை மலை.

சுப்பு தாத்தா.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பகிர்வு அண்ணா...
திவாகர் வெல்ல வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பொதுவாக தொலைக்காட்சி பார்ப்பதில்லை! சூப்பர் சிங்கரும் தான்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails