Friday, November 15, 2013

கேஜே! ஜேஜே!

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோகா செய்யும் நுட்பத்தோடு பாடலில் கவனத்தைச் செலுத்தினேன். “மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்..... மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்” என்று தேனாய் காதில் விழுந்தது. இன்பம்! இன்பம்! செவிக்கின்பம். மனதிற்கின்பம். எதற்காக ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் என்பது பின்வரும் இரண்டு பாராக்களில் இருக்கிறது.

கர்மபலனில் நம்பிக்கையில்லாத பத்து பேரைக் குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து, காலையிலோ மாலையிலோ சென்னையின் பீக் ஹவர் ட்ராஃபிக்கில் காரோட்டச் சொன்னால், வண்டியை விட்டு இறங்கியவுடன் மட்டையாய் மடங்கிய காலோடு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று துண்ணூறு போட்டுக்கொண்டு பயபக்தியுடன் ”இனி பிறத்தியாரை இம்சிக்கமாட்டேன்” என்று சங்கல்பம் செய்துகொள்வார்கள். போன ஜென்மத்தில் சவாரியில்லாத ஆட்டோவாய் பிறந்து நடு ரோட்டில் நடைவண்டியாய் பயணித்து படுத்தியிருப்பதன் பலனாக இப்படி அவதியுறுகிறேன் என்றும், அந்தப் பிறவியிலும் கர்ப்பஸ்த்ரீகள் ஆஸ்பத்திரியில் சென்று பிரசவிக்குமாறு சௌகரியமாக ஓட்டியதால் அட்லீஸ்ட் சென்னையிலாவது இருக்கிறேனாம். இல்லையென்றால் பெங்களூருவில் கார் ஓட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஐம்பது நிமிடங்கள் உருட்டி உருட்டி பணிஷ்மெண்ட்டாகக் கடக்கும்படி உத்தரவாகியிருக்குமாம். இவ்வாறு யாரோ மூளைக்குள்ளிருந்து எச்சரிக்கை ஓலமிட்டார்கள்!

சேப்பாயி தன் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் வெள்ளத்தில் உயிர்பிழைக்க நீந்திக்கொண்டிருக்கும் போது ”நகராச்ச்சியில...” என்று காதை அறுத்துக்கொண்டிருந்த ஒரு எஃப்பெம் சானலிலிருந்து விடுபடுவதற்கு டாஷ்போர்டிலிருந்த சிடி பௌச்சை பலங்கொண்ட மட்டும் வெறியுடன் இழுத்தேன். தற்கொலைக்காக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு க்ளைமாக்ஸில் தன்னைத் தூக்க வந்த ஹீரோவிடம் மேஜை ட்ராயரைத் திறந்து தனது லவ் டாக்குமெண்ட்களைக் காட்டும் உயிர்க் காதலியைப் போல இடது கையால் தட்டுத் தடுமாறி பௌச்சின் ஜிப்பைத் திறந்து ஒரு ஸிடியை எடுத்து ப்ளேயரின் வாயில் காணிக்கை போல உள்ளே தள்ளினேன். ரேடியோவின் கழுத்தை முறித்துவிட்டு அந்த க்ஷணமே ஸிடி பாட ஆரம்பித்தது. இதற்கப்புறம் முதல் பாராவில் படித்துவிட்டீர்கள். மேலே படியுங்கள். அதாவது கீழே படியுங்கள்.

இப்போது இருபுறமும் சேப்பாயியைக் கட்டி ஏறுகிறார்கள். கரையை உடைத்துச் சுழித்துக் கொண்டு வரும் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஆட்டோக்களும் மாநகர பேருந்துகளும் இருமருங்கும் அணைக்கின்றன. இங்கே ”இளநீரும் பாலும் தேனும்... இதழோரம் வாங்க வேண்டும்..” என்று ஸ்வரம் ஸ்வரமாய் இழுத்த வயலின்களுக்குப் பின்னர் காதுகளில் இழைய ஆரம்பித்திருந்தது. கல்லூரியில் படிக்கும்போது(?!) வீட்டிற்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது சுமாராய் இருந்த தாவணி ஒன்று ஏறியதும் இந்தப் பாட்டு தலைக்கு மேலே ஒலிக்க ஆரம்பித்தது. எதற்கோ அந்தப் பெண் அநியாயத்திற்கு வெட்கப்பட்டு ஜன்னல் வழியாக வாய்க்கால் வரப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது. அபாண்டமாக நீங்கள் இப்போது பழி சொல்வீர்கள் என்று அப்போதே அது இறங்கும் போது என்னைப் பார்க்கவில்லை. தெய்வீகராகமோ!!

இந்த உன்மத்த மனோ நிலையில் க்ரேனே பின்னால் வந்து காரை அலேக்காகத் தூக்கியிருந்தால் கூட பாடல் சுகத்தில் பட்டமாய்ப் பறக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பேன். பாடல் பாதி நினைவுகள் பாதி என்னை போதையூட்ட வாகன வெள்ளத்தில் சேப்பாயி அதன் போக்குக்குக் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. ”கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ.. உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ...” என்று காதலைக் கரைத்துக் காதுகளில் ஊற்றிக்கொண்டிருந்த என் ஸிடி ப்ளேயரை அஃறிணைப் பொருளாகப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை. டெல்லிவாழ் ராஜபுத்திரர்கள் யாரவது சென்னை வந்து திரும்புகிறார்கள் என்ற சாக்கை வைத்துப் போக்குவரத்துக் காவலர்கள் ஒரு அரைமணி அப்படியே நம்மை நிப்பாட்ட மாட்டார்களா? திரும்பத் திரும்ப இதையே ரிப்பீட்டில் கேட்கமாட்டோமா என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது.

சற்றுநேரத்தில் ”பெண்மையின் இலக்கணம் அவளது வேகம்..” என்ற வரிகள் வரும் போது ஹோண்டா ஆக்டிவாவில் ஒரு பெண் சரேலென்று விரைந்து சென்றாள் என்று இப்போது எழுதினால் நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் பழிப்பீர்கள். சரிதான்! அப்படியாரும் அந்த வரி வரும்போது செல்லவில்லை. ஆனால், “முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி” பாடும் போது ஸ்கூட்டியில் விரைந்தது கண்ணைத் தவிர மொத்தமும் மூடிய ஒரு மாது.

”மதுவின் குடத்தை மடியில் நீ மறைத்து வைத்த மலரோ...” என்று குழையும் போது நமக்கும் ஜில்லென்று சிறகடித்துப் பறந்தது நினைவுகள். ”விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்.. தொடங்கு கண்ணா புதிய பாடம்...” கதறக் கதற காதலைச் சொட்டும் பாடல்களால் சேப்பாயியின் அங்கமெல்லாம் நனைந்துவிட்டிருந்தது. எனக்கு ஜுரம் எடுத்துவிடும் அபாயமிருந்தது. காதல் ஜுரமல்ல! இப்படி ஒன்றல்ல இரண்டல்ல... நிச்சயம் பத்துக்கு மேல் பாடல்கள் கடந்திருக்கும். காது கொடுத்துவிட்டு கண்டபடி கரைந்துகொண்டு வண்டியோட்டிக்கொண்டிருக்கிறேன்.

“இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆறும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம்..யோகம்...” என்று அனாயாசமாக பாடிக்கொண்டிருந்தார் அவர். இந்த வியாசத்தை இப்படியே நான் முடித்துவிடப்போகிறேன். ஆனால், நீங்கள் இரட்டை மேற்கோளில் இதில் எழுதியிருக்கும் பாடல்கள் எவையெவை என்றும் பாடியவர் யாரென்றும் இசையமைத்தவர் இன்னாரென்றும் ஆராய்ச்சியில் இறங்கப்போகிறீர்கள். தெரிந்த பாடல்களை கமெண்ட்டில் எழுதுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் தூங்கப் போகிறேன். காதுகளில் கேஜே..... ஸாரி! தூங்கிவிட்டேன்.

2 comments:

Anonymous said...

ஆடல் கலையே தேவன் தந்தது - ராகவேந்திரர்
ஆகாய வெண்ணிலவே - அரங்கேற்ற வேளை
அதிசிய ராகம் ஆனந்த ராகம்

வெங்கட் நாகராஜ் said...

என்ன ஆழ்ந்த ரசனை உங்களுக்கு! :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails