Friday, April 4, 2014

பிலே! என்ன பிலே!

பனைவிளை என்ற கிராமத்தின் பனைமரக் காட்டுக்குள்ளே ரெண்டு நாள் தங்கியிருந்தேன். அண்ணாந்து பார்த்தால் அக்கானி இறக்கிக்கொண்டிருந்தார்கள். பனைமரங்களுக்குக் நடுவே ரெண்டு வீடு இருந்தது. ஒன்று பாரம்பரியம் மிக்க கிருஸ்துவக் குடும்பம். இன்னொன்று சாதாரணப் பனையேறிக் குடும்பம். அண்ணன் தம்பிகளோடு ஆட்கள் நிறைந்திருக்கும் அந்தப் பெரியக் கூட்டுக் குடும்பம் பொருளாதாரத்தில் தடுமாறுகிறது. தம்பி திருவனந்தபுரத்தில் பிசினெஸ் செய்து நொடித்துப்போகிறார். அண்ணன் குடிகாரர். அந்தக் குடிகார அண்ணனுக்கு லிஸி என்று ஒரு பெண். கதையின் எபிசென்டர். தம்பிக்கு லில்லி. லிஸியின் ஒன்றுவிட்ட தங்காய். அடிச்சுக்கூட்டிள் படுத்திருக்கும் மூப்பி கண்ணப்பச்சி. கோபம் வந்தால் “தூ” என்று காறித் துப்புகிறார். வீட்டுப் பொம்பளைகள் அக்கானி காய்ச்சுகிறார்கள்.

அன்பையன் என்கிற பின் வீட்டுப் பனையேறியின் மகன் தங்கராஜ். தங்கராஜும் லிஸியும் பள்ளியிலிருந்து ஒன்றாகப் படிக்கிறார்கள். பெரியவர்கள் ஆனதும் அது காதலாக மலர்கிறது. பொறுங்கள். நீங்கள் நினைப்பது போல கவித்துவமான காதல் இல்லை. வீட்டிலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு இடையில் கொல்லையில் பார்த்துக்கொள்கிறார்கள். அப்பாவுக்குப் பதிலாக புத்தம் வீட்டில் பனையேறும் போது ஒன்றிரண்டு தடவை “லிஸி” என்று வாய்விட்டுக் கூப்பிடுகிறான் தங்கராஜ். அவ்ளோதான். மீதியை லிஸியின் உணர்வுகளாக கதாசிரியர் வரிவரியாக எழுதிவிடுகிறார். கடைசியில் தம்பியைக் கொல்கிறார் புத்தம் வீட்டின் அண்ணன். அதாவது லிஸியின் அப்பா லில்லியின் அப்பாவைக் கொன்றுவிடுகிறார். கடைசியில் லிஸி தங்கராஜைத் திருமணம் செய்துகொள்ளும் ஸ்திதியில் கதையை முடித்துவிடுகிறார் ஆசிரியர்.

நாவல் முழுக்க பனையேறிகளின் அன்றாடங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். நாகர்கோயில் வட்டார வழக்கில் பேசுகிறார்கள். ஜெமோ படித்தவர்களுக்கு பல்லை உடைக்காத லாங்குவேஜ். காசு பணம் இருப்பவர்கள் இல்லாதப்பட்டர்களிடம் சம்பந்தம் வைத்துக்கொள்ள தயங்குகிறார்கள். ஆதிக்கம் செலுத்தவே ஆசைப்படுவதை சம்பவங்கள் மூலம் காட்டுகிறார்.கதைமுழுக்க பக்கத்துக்குப் பக்கம் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது. தாவணி போட்டவுடன் பெண் பிலேக்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளே அடைத்துவிடுகிறார்கள். இது காதல் கதையா என்று கேட்டால் சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டம். ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல ஸ்வீட் நத்திங் பேசிக்கொண்டு பெண்ணைத் துரத்தும் ஃபேண்ட்டஸி காதல் கதை இல்லை.

Lakshmi Chitoor Subramaniam அம்பையின் முன்னுரை என்னுரையை விட டாப்பாக இருக்கும். அதற்கு நீங்கள் அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும். கதாசிரியர் ஹெப்ஸிபாவுடன் பழகியவர் அவர். ஹெப்ஸிபாவின் கணவர் ஜேசுதாசனுக்கு கம்பராமாயணம் கொள்ளைப் பிரியமாம்.

“புத்தம் வீடு: ஹெப்ஸிபா ஜேசுதாசன்”. காலச்சுவடு க்ளாஸிக் வரிசை.

அருஞ்சொற்பொருட்கள்: அக்கானி-பதநீர்(கள்ளாவதற்கு முன் நிலை), பிலே-பிள்ளே, அடிச்சுக்கூட்டில்-வாசல் திண்ணை, மூப்பி - வீட்டுப் பெரியவர்

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails