Friday, April 4, 2014

சேவை செய்!

”சேவை நாழி துருப்பிடிக்காத வீட்டில் ஒரு நாழியும் வயிற்றிக்கில்லை தீது”ன்னு ஒரு மூதுரை ஊர் வழக்கில் உண்டு. ”என்னடா கதையிது” என்று நெற்றி சுருக்குபவர்கள் இதையே மூதுரையாகக் கொள்க. மூஞ்சி கை கால் அலம்பி இடுப்பில் வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு “என்னம்மா டிஃபன்?” என்று சாப்பிட உட்கார்ந்தால் சுடச்சுட சுருள் சுருளாய் மெத்மெத்தென்று சேவை. என்னையறியாமல் குஷியில் “மானிட சேவை துரோகமா?” என்று சற்று உரக்கவே பாடிவிட்டேன்.

சர்க்கரைக் கொட்டிக் கலந்து செய்யும் வெல்ல சேவை இலை சம்பிரதாயமான முதல் ஐட்டம். சேவையின் சூட்டுக்கு சர்க்கரை கொஞ்சம் ஜலம் விட்டுண்டு சேவையின் ஒவ்வொரு இழையையும் தித்திப்பில் குளிப்பாட்டியிருந்தது. பார்க்கும்போதே இனிப்பாக இருந்தது. நாக்கு ஊறிச் சப்புக்கொட்டினாலும் நேக்கு கிடையாது.

அடுத்த ஏனத்தில் மஞ்ச மசேர்னு இருந்த எம்பிளச்சம்பழ சேவையில் வயிற்றுக்குச் சேவையை ஆரம்பித்தேன். “புழுங்கரிசியில பண்ணினேன்டா” என்ற அம்மாவின் இதழோரத்தில் சிறு புன்னகை. ”காலுக்கு நடுப்பற வச்சுக்கோடா” என்று அடுப்பிலிருந்து சுடச்சுட உருண்டை பாலை கரண்டை பேட்டில் கொண்டு வந்து நாழியின் வாயில் தள்ளுவாள் பாட்டி. ”உங்க கொள்ளுப் பாட்டி வாலாம்பாளுக்கு அவாத்திலேர்ந்து சீரா வந்ததாம்....” என்று பாட்டி சொல்லும் போது நாழியின் மேலே மரியாதை ஏற்பட்டு பக்தியாக பிழியத் தோன்றும்.

புஜபல பராக்கிரமனாக நாக்கைத் துருத்திக்கொண்டு நிமிஷமாய்ப் பிழிவேன். ஆரம்பத்தில் “ப்ர்ர்ர்..ர்ர்..” என்றெல்லாம் வரும் அபான வாயு சப்தத்தில் “பாட்டி.. நீ சொல்லுவியே... செல்லக்கு_வே பல்லிடுக்கில பூந்தாயே.. அதுதான் இது...” என்ற போது ”படவாப் பயலே”ன்னு சிரித்த பாட்டியின் முகம் தட்டில் தோன்றியது. ”மோர்க்கொழம்பு உட்டுக்கோடா....” என்று தட்டிலிருந்து பாட்டியின் குரலுக்குப் பதிலாக “கொழம்புதான் இருக்கு.. மோர்க்கொழம்பு பண்ணலை...” என்று அம்மாக் குரல் பக்கத்தில் கேட்டது.

வறுத்த கடலைப் பருப்பு ஒன்றிரண்டு கடைவாய்ப்பல்லில் அரைபட்டு எ.சேவையின் ருசியை இன்னும் இரண்டு மடங்கு ஏற்றிற்று. இக்கணம் என் இஷ்ட தெய்வம் நேரில் தோன்றி “என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டால் “வறுத்த கடலைப் பருப்புப் போட்ட சேவையும் தொட்டுக்க மோர்க்குழம்பும் தரும் அட்சயப்பாத்திரம் தா” என்று தெண்டனிடுவேன். ஊரில் ஒரு முறை சேவை தேவப்பிரசாதமாக இருந்த போது “இன்னும் கொஞ்சம்....இன்னும் கொஞ்சம்”என்று பறக்காவெட்டியாகத் திண்டினேன். பதிலுக்குப் பாட்டி கேட்டாள் “நா வீட்டுக்குதான் சேவை பண்ணினேன். இந்த வயசுல என்னால நாட்டுக்கா பண்ண முடியும்?” டைமிங்கில் அசத்துவாள் அப்படி!!

மிளகு சேவை வாய்க்கு ஆரோக்கியமாக இருந்தது. வாய்க்குள்ளே இண்டு இடுக்கெல்லாம் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணினா மாதிரி ஒரு ஜிவுஜிவு சுகம். ”ஸ்..ஸ்ஸ்ஸ்”ஸென்று ஜில்லுக்கு காற்றை இழுத்து ”ஃபூ” என்று ஊதும் போது வாயிலிருந்து ட்ராகன் போல தீப்பொறி பறந்தது. மிளகு காரம் புரைக்கு ஏறாமல் இருக்க தேங்காய் சேவைக்குத் தாவினேன். பொன்நிறமாக வறுபட்ட முந்திரி வாய்க்கு அகப்பட்டது. இந்திரன் தோட்டத்து முந்திரியோ என்றெண்ணும் படியாக அம்முழு முந்திரி அமைந்தது. “ராவேளையில ரொம்ப தேங்கா வாண்டாம்டா....” என்பாள் பாட்டி. “சாதா சேவை கொஞ்சம் இருக்கு.. போட்டுண்டு கொழம்பு இல்லைன்னா மோர் ஊத்திக்கோ....” என்று அம்மா சொன்னாள்.

இப்படியாகப்பட்ட சேவாலோகத்திலிருந்து மனசேயில்லாமல் எழுந்திருக்கும்போதுதான் அதைப் பார்த்தேன்.

பாத்திரத்தில் சேவைகள் தீர்ந்துகொண்டிருக்கும் போது மூலையோர டிவியில் சீரியல் சேவைகளாகக் கதாபாத்திரங்கள் வழியாகப் பிரஜைகளைப் போட்டுப் பிழிந்துகொண்டிருந்தார்கள்.

#வயிற்றுக்கும்_சேவை_செய்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails