Thursday, November 27, 2014

கணபதி முனி - பாகம் - 18 : சம்ஸ்க்ருத மெக்பத்

மாணவர் பட்டாளம் அமைதி காத்தது. அசையாமல் பொம்மை போல நின்று கொண்டிருந்தனர். கணபதியிடம் பரதக்கண்ட இலக்கியத்துக்கும் அயல்நாட்டு இலக்கியத்துக்கும் இருக்கும் வித்யாசங்களையும் நுட்பங்களையும் கேட்ட மாணவன் ஆர்வம் கொப்பளிக்க குறுகுறுவென்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரு நிமிட மௌனத்திற்குப் பிறகு கணபதி மெல்ல வாய் திறந்தார்.

“மன்னிக்கவும். எனக்கு அயல்நாட்டு இலக்கியங்களில் பரிச்சயம் இல்லை. நீங்கள் எதாவது ஒன்றைத் தேர்வு செய்து படித்துக் காட்டினால் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்” என்றார் வினயமாக. மாணவர்க் கூட்டம் உற்சாகமடைந்தது. பின்வரிசையிலிருந்து ஒருவன் சரேலென்று முன்னால் வந்தான். கையில் ஷேக்ஸ்பியரின் மெக்பத். அதில் வரும் பூதங்கள் போன்று உரக்கப் பேசலானான். மாணவர்கள் முழு நாடகத்தையும் படித்துக்காண்பித்து அதன் இலக்கிய ரசத்தை அவருக்கு விவரித்தார்கள்.

”நீங்கள் இப்போது நாங்கள் படித்த இக்காவியத்தை உடனே சம்ஸ்க்ருதத்தில் இயற்ற முடியுமா?” என்று ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான் வலது மூலையில் நின்றிருந்த ஒரு பையன்.

கணபதி சிரித்தார். ராகமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார். காட்சிகளை சிருங்காரமாக சம்ஸ்க்ருதத்தில் வாசித்துக்கொண்டே போனார். பக்கம் பக்கமாக புரண்டது. எழுந்து நடந்து கொண்டே பேசினார். மாணவர்கள் கலையாமல் நின்றிருந்தார்கள். நாற்காலில் உட்கார்ந்தார். உரையாற்றினார். மாணவர்கள் சூழ்ந்துகொண்டு கேட்டனர். நின்று கொண்டு சில ஸ்லோகங்களைப் பாடினார். அதிசயித்து வாய்பிளந்து நின்றனர். மீண்டும் நடந்தார். நேரம் மட்டும் நிற்காமல் ஓடியது. அந்த அறையின் கதவுகளும், ஜன்னல்களும், சுவர்களும் சம்ஸ்க்ருதம் பேசுமளவிற்கு சம்பாஷணைகள் தொடர்ந்தது.

மரித்த பாஷை என்று சம்ஸ்க்ருதத்தை வெறுத்து ஒதுக்கிய அம்மாணவர்கள் கணபதி காட்டிய விஸ்தீரணத்தால் அந்த மொழியின் ஆளுமையில் சிலிர்த்துப்போயினர். கணபதியின் பாண்டித்யம் அவர்களைக் கட்டிப்போட்டு வசியம் செய்தது. இதுநாள் வரை ஷேக்ஸ்பியரின் மெக்பத்தாக இருந்தது இப்போது கணபதியின் சம்ஸ்க்ருத மெக்பத் ஆயிற்று.

கணபதியின் நினைவாற்றலை சோதிக்க முற்பட்ட ஒரு மாணவன் ஆங்கில தினசரியிலிருந்து ஒரு பாராவைக் கடகடவென்று படித்தான். ”எங்கே நீங்கள் இதைச் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்..” என்று கை கட்டி நின்றான். கணபதி திரும்பவும் தங்குதடையில்லாமல் அதைச் சொல்லிக்காட்டிவிட்டு “மொத்தம் நானூற்று இருபது எழுத்துக்கள் இந்தப் பாராவில் இருக்கிறது” என்று உபரியாக எழுத்துக் கணக்கையும் கொடுத்தார். அனைத்து மாணவர்களும் அசந்து போனார்கள். இதற்கு மேல் அவர் முன்னால் நிற்க திராணியில்லாமல் பொதேர் என்று அனைவரும் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்த வழியே திரும்பினர்.

அவர்கள் சென்றபின் திருட்டுமுழியுடன் கணபதியை நெருங்கிய துரைசாமி “ஸ்வாமி என்னை மன்னிக்கவேண்டும். உங்களை சம்ஸ்க்ருதத்தில் சோதிக்க எண்ணியது எங்களது சிறுபிள்ளைத்தனம். மடமை. அறியாமல் செய்த பிழை. மன்னித்தருள வேண்டும்.” என்று கைகூப்பி நின்றார். கால்கள் வெடவெடத்தன.

துரைசாமியின் பிழை பொருத்தருளி அவரை தனது சிஷ்யனாகவும் ஏற்றுக்கொண்டார் கணபதி. பிற்காலத்தில் “சுதன்வா” என்று எல்லோரும் அறியப்படுபவரே துரைசாமி ஆகும்.

நாட்கள் நகர்ந்தது. சென்னையின் சில முக்கியஸ்தர்கள் கணபதியைக் கௌரவிக்க எண்ணினார்கள். அதற்காக பொருள் திரட்டும் முயற்சியில் இறங்கினர். அப்போது நாராயண சுதர்ஸன் என்கிற ஒரு ஆசுகவியும் சென்னையில் முகாமிட்டிருந்தார். இருவருக்கும் சேர்த்து பொருள் திரட்டி கௌரவிப்போம் என்று ஒரு குழுவினரும் கணபதிக்கே என்று ஒரு குழுவினரும் இல்லையில்லை சுதர்ஸனுக்கே என்று இன்னொரு அணியும் கட்சி கட்டிப் பேசினார்கள். முடிவில் பலப்பரீட்சை செய்து பார்த்துவிடலாம் என்று தீர்மானித்தார்கள். கெலிப்பவரின் கைக்குத் தங்கக் காப்பு போடுவதாக உத்தேசித்து களமிறங்கினார்கள்.

சுதர்ஸன் கணபதி போலவே பிறவி மேதை. தனது பதினேழாம் பிராயத்துக்குள் இரண்டு போற்றத்தக்க பாடல்களை எழுதி “பால சரஸ்வதி” என்றும் “பட்டஸ்ரீ” என்றும் பட்டங்கள் பெற்றிருந்தார்.

கௌரவிக்க வசூல் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு நாள் காலை திருவல்லிக்கேணி மேல்நிலைப் பள்ளியில் கணபதியைச் சிறப்பிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில சமஸ்யங்களைக் கேட்டு கணபதியைப் பூர்த்தி செய்யச் சொல்லலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. வேதம் வெங்கடராய சாஸ்திரி, ஹலஸனந்தா சாஸ்திரி மற்றும் நீலமேக சாஸ்திரி என்கிற வித்வத் குழு சமஸ்யங்களைக் கொடுத்து பதில் வாங்கும் அமர்வுக்கு நீதிபதிகளாக தயாராயினர். சமஸ்யங்கள் கணைகளாக பாய்ந்து வர பதிலுக்குப் பதில் பாடி அனைவரையும் வாயடைக்க வைத்தார். அங்குக் குழுமியிருந்த ஆசிரியர்கள் தங்களால் இயன்றதைச் சன்மானமாக அளித்து திருப்தியடைந்தனர்.

முக்கியஸ்தர்களின் கமிட்டி ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இரசனையும் இலக்கிய ஈடுபாடும் கொண்ட வி. க்ருஷ்ணஸ்வாமி ஐயரை சிம்மாசனத்தில் அமர வைத்தார்கள். கணபதியை அக்கணமே நூறு ஸ்லோகங்களில் நளோபாக்கியணத்தை அடக்கச் சொன்னார்கள். ஒரு மணி நேரத்திற்குள் பாடி முடிக்க வேண்டும் என்று காலவரையறை வகுத்தார்கள்.

சம்மணமிட்டு அமர்ந்தார். கண்களை மூடி தியானித்தார். கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார். அவரது துவக்கம் அதியற்புதமாக இருந்தது. கடகடவென்று ஐப்பசி மழை போலப் பொழிய ஆரம்பித்தார். மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீமான் க்ருஷ்ணஸ்வாமி ஐயர் பத்து நிமிடத்தில் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

”நன்றி கணபதி.. போதும்.. நீர் சொல்லும் வேகத்தில் இருநூற்றைம்பது இலகுவாகத் தாண்டுவீர்.. தன்யனானோம். உங்களைப் புகழ்வதில் இச்சபை பெருமையடைகிறது. ’காவ்யகண்டர்’ என்ற பட்டத்துக்கான முழு யோக்யதையும் உமக்கு இருக்கிறது. வாழ்க...”

இதிலும் ஒரு கோஷ்டியினர் அதிருப்தி அடைந்தனர். க்ருஷ்ணஸ்வாமி ஐயரின் பரீக்ஷை முறை செல்லாது என்றும் இதைவிட சிக்கலான போட்டியே கணபதியின் திறமையை நிர்ணயிக்கும் என்று வாதாடினர். க்ருஷ்ணஸ்வாமி ஐயர் வெகுண்டார்.

“கணபதி என்ன செய்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்?”

“அவரை அஷ்டாவதனம் செய்யச் சொல்லுங்கள்” காதுகளில் வைரக் கடுக்கன் மின்னும் ஒருவர் குரல் கொடுத்தார்.

“ம்.... அப்படியே ஆகட்டும்...”

“ஸ்ரீமான் சுதர்ஸன் முன்னிலையில் இது நிகழவேண்டும்..” மீண்டும் வை.கடுக்கன் குரல் ஓங்கி ஒலித்தது.

க்ருஷ்ணஸ்வாமி ஐயர் கணபதியை நோக்கிப் பார்வையைத் திருப்பினார். கணபதி இமைகளை மூடித் திறந்து கண்களால் ஒத்துக்கொண்டார்.

இம்முறை டாக்டர் எம்.டி.க்ருஷ்ண ஸ்வாமி இல்லத்தில் கூட்டம் கூடியது. கணபதில் இலக்கிய அறிவையும் மொழி ஆளுமையையும் கண்டு ரசிப்பதற்கு பெருந்திரளாக ரசிகர்கள் குழுமியிருந்தார்கள்.

சம்பிரதாய அறிமுகத்தோடு சபை துவங்கியது.

“ருக்மணி கல்யாணத்தைப் பற்றி நூறு ஸ்லோகங்கள் இயற்ற வேண்டும்...” என்று அஷ்டாவதனத்தில் முதல் அவதான பரீக்க்ஷை ஆரம்பித்தது. ”ஒரு மணி நேரத்திற்குள்...” என்று கூடுதல் விதியும் அடுத்த விநாடி சேர்க்கப்பட்டது. கணபதி சொல்லச் சொல்ல பதிவதற்கு ஒரு எழுத்துக்காரர் நியமிக்கப்பட்டார். கணபதி ஸ்லோகத்தை முடிக்கும் முன்னர் அந்த எழுத்துக்காரர் முடித்துவிட்டு அவரின் வாய் பார்த்தார். மகாபாரதத்தில் வியாஸருக்கு அமைந்த கணபதி போல இந்தக் கணபதி அமைந்த எழுத்துக்காரர் துடிப்பாக இருந்தார். ஸ்லோகம் சொல்லும் வேகத்தை கொஞ்சம் முடுக்கிவிட்டார் கணபதி. அந்த வேகத்தில் எழுதுவது மிகக் கடினம். இருந்தாலும் அந்த எழுத்துக்காரர் மளமளவென்று எழுதிக்கொண்டே போனார்.

கணபதிக்கு சந்தேகம் வந்தது. ஸ்லோகம் சொல்வதைப் பாதியில் நிறுத்திவிட்டு..

“இதுவரை எழுதியதை ஒருமுறை வாசியுங்கள்...” என்றார். அந்த எழுத்துக்காரர் கணபதி சொல்லாததையெல்லாம் கூட சேர்த்து எழுதியிருந்தார். சொன்னதை விட்டிருந்தார். சபை திடுக்கிட்டது. கணபதி குழம்பினார்.

“ஏனிப்படி செய்தீர்?” என்று அவையிலிருந்த பெரியோர்கள் சீறினர். அப்போது அந்த எழுத்துக்காரர் சொன்ன பதில்.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_18‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails