Thursday, November 27, 2014

கொலு டூர் 2014‬

”வெத்திலைப் பாக்கு வாங்கிக்க...” என்று வீடு வீடாக விஸிட் செய்யும் விருந்தின சம்பிரதாயம் ஒன்று கொலுக் காலங்களில் வழக்கில் உண்டு. ஹோம் மினிஸ்டரை அழைத்துச் செல்லும் இல்லங்களில் மினி ஜாங்கிரி, ஹல்டிராம்ஸ் சோன்பப்டி, ஒரு வாய் காஃபி, தட்டை, கொ.கடலை சுண்டல் என்று வண்டியோட்டிய நமக்கும் ஒரு ப்ளேட் சன்மானமாகக் கிடைக்கிறது.
அத்யந்த நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஐந்து படி, ஏழு படி, டைனிங் டேபிள் மற்றும் ஸ்டூலுடன் சேர்த்து ஒன்பது படி என்று விதம் விதமான கொலுக்கள். தேவாதி தேவர்கள் பல ரூபத்தில் காட்சி தருகிறார்கள். பார்த்த முக்கால்வாசி கொலுவில் சீரியல் பல்பை சிவன் கழுத்தில் பாம்பாகப் போட்டிருக்கிறார்கள். செட்டியார் முன் அரிசி, புளி, பருப்பு வகையறாக்கள் சொப்பு சாமான்களில் வைத்திருக்கிறார்கள். அஷ்டலக்ஷ்மி அநேகமாக எல்லா வீட்டிலும் கொலுவீற்றிருக்கிறார்கள். படிக்கொரு பிள்ளையார் வீற்றிருக்கிறார். இடுப்பில் கையோடு பாண்டுரங்கர், லக்ஷ்மி நரசிம்மர், அர்த்தநாரி, மரப்பாச்சி.... ப்ளாஸ்டிக் சம்படமாவது கட்டாயம் கிஃப்ட்டாக உண்டு.
நண்பர் சத்யாவின் வீட்டில் பசங்களுக்கு ஐஸ்க்ரீம் சுண்டல். யாருக்கு எப்படி வலைவிரிப்பது என்பது சத்யாவிற்கு கைவந்த கலை. சத்யாவின் கடைக்குட்டியை ”சு...ரு..தி..” என்று கொண்டை வைத்த வடிவேலு மாதிரி அழைத்து என் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டேன். சங்கீதாவின் ஸ்நேகிதி வீட்டில் ஒன்பது படி. படியோரங்களில் ஜிகினா பேப்பர் ஒட்டி ஜிலுஜிலுவென்று இருந்தது கொலு. என் புத்ரிகளின் திருப்புகழ் கச்சேரி அமோகமாக நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த சக ”வெத்திலைப் பாக்கு வாங்கிக்க...” பார்வையாளர் தம்பதி சமேதராகத் திருவேங்கடமுடையானைப் பற்றி அற்புதமாகப் பாடினார். செவிக்கின்பம்.
“எங்கப்பா தொன்னுத்தெட்டு வயசு வரைக்கும் இருந்தார். கடேசி வரைக்கும் டென்னீஸ் கிரிக்கெட்ன்னு விளையாடிண்டு, கேரம்ல ரெட் அண்ட் ஃபாலோ பாக்கெட் பண்ணிண்டு திடகாத்திரமா இருந்தார்...” என்று அவர் சொன்னபோது மனசுக்குள் ஒரு முறை பௌலிங் செய்ய ஓடிப்பார்த்தேன். மூச்சு வாங்கி இரைத்தது. சொன்னவர் முகத்தில் அப்படியொரு பெருமிதம். ”பாரதம்... ராமாயணம்னு டிஸ்கஸ் பண்ணுவோம். கம்பீரமா பேசுவார். பியெஸ்ஸி பிஸிக்ஸ் படிக்கறச்சே கூட அடி வாங்கியிருக்கேன்...” என்று காலர் தூக்கிக்கொள்ளும் பெருமையாகச் சொன்னார்.
திருமதி கோமதி ராஜாராம் அவர்களது வீட்டில் மனோகரமான ராதேகிருஷ்ணர் வரவேற்றார். திருவாளர் ராஜாராமிற்கு சங்கீதத்தில் அப்படியொரு லயிப்பு. வயலின், கீபோர்டு, மிருதங்கம் என்று இழுத்தல், அமுக்குதல், தட்டுதல் வாத்தியங்களைப் பூஜை போட்டு வைத்திருந்தார். நந்தினி”அம்பா தர்மசம்வர்த்தினி..” பாட நீல்கமல் ப்ளாஸ்டிக் சேரில் தாளமிட்டு அவரது வாசிக்கும் ஆசையை பூர்த்திசெய்துகொண்டார். அவரது வீட்டில் பைரவ் கூட வாலாட்டி “ஊஊஊ...” என்று ராகம் பாடுகிறது. மனைவிக்கு வெத்திலைப் பாக்கோடு எனக்கு தசமஸ்கந்தம் பரிசாகக் கொடுத்து என்னை மகிழ்ச்சியின் உச்சியில் உட்காரவைத்தார். இன்னும் நான் அங்கிருந்து இறங்கவில்லை.
அண்ணாத்தே சுரேஷ் சீனுவின் சென்னை வீட்டைச் சுற்றிலும் மன்னை மாந்தர்கள். மந்தக்காரத்தெரு மாமி ஒருவரைப் பார்த்தேன். ”ஊர்க்காராளைப் பார்த்ததும் ஊருலகம் மறந்து போயிடுமே..” என்று லேட்டாக வீடு திரும்பும்போது இடி வாங்கினேன். கீதா மன்னி அவர்கள் அவரது தந்தையார் திரு. வ.சா.நாகராஜன் கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு புஸ்தகம் கொடுத்தார்கள். நான் பிறப்பதற்கு முன்னதாக கலைமகளில் வெளிவந்த “அவர் சிரிப்பு” படித்தேன். ஒரு ஹானஸ்ட் ஆஃபீஸரின் கதை. சுருக்கென்று எழுதியிருந்தார் வ.சா.நா. மனசைத் தைத்தது. கல்கியில் வெளிவந்த ”மோர்க் குழம்பு” குடிக்கணும். சாரி படிக்கணும்.
நான் பார்த்து வளர்ந்த குழந்தை, எங்களூர் மாணிக்கம் சௌமி சென்னையில் வைக்கும் முதல் கொலு. டிசம்பரில் குட்டிக் கிருஷ்ணனோ, ராதையையோ எதிர்பார்க்கும் நேரத்திலும் ஐந்து படிக்கு கொலு வைத்து சுண்டல் செய்கிறது. பார்ப்பதற்கு மகிழ்ச்சியும் பூரிப்பும் வருகிறது. ஊரிலிருந்து சௌமியின் 90+ பாட்டியும் வந்திருந்தார். என் பாட்டியின் செட். என் பாட்டிக்கும் சேர்த்து அப்பாட்டியை நமஸ்கரித்து ”தீர்க்காயுசா இருக்கணும்டா தம்பி...” ஆசீர்வாதம் பெற்றேன்.
இது போன்ற கொலு விஸிட்களில் நிறைய பாட்டிகளையும் தாத்தாக்களையும் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தங்களது காலத்து சம்பிரதாயங்களை விடாமல் நிறைவேற்றும் வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். பரஸ்பரம் பரிசுப் பொருள் பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டின் பழக்க வழக்கங்களும் மரபுகளும் அறியக் கிடைக்கிறது. அனைத்துக்கும் மேலாக எப்போதும் சார்த்திக் கிடக்கும் பட்டணத்து வீடுகளின் கதவுகள் கூட விசாலமாகத் திறந்துகொள்கிறது.

1 comments:

'பரிவை' சே.குமார் said...

கொலு நேரத்தில் நடந்த, சந்தித்த, ஆசிபெற்ற நிகழ்வுகளைச் அழகாக ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறீர்கள்..
அருமை அண்ணா....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails