Friday, December 12, 2014

என் பாரதி

காகிதத்தில் முக்கி எடுத்த தமிழ்த் தேன் பாரதியின் வரிகள். இன்பத்தில் களிக்கவும் துன்பத்தில் உழலும் மனசுக்கு தெம்பூட்டுவதற்கும் அலமாரியில் குடியிருக்கும் பாரதியின் துணையை அடிக்கடி நாடுவதுண்டு. ஒரு புத்தகத்தை உருவி தோராயமாக எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் கண்ணை எடுக்காமல் படிக்க வைக்கும் வார்த்தை வித்தை கற்றவன் பாரதி. சிறிதும் பெரிதுமாய் தூற்றல் போட்டு காலை நடை போவதை வருணன் தடுத்தான். இன்று பாரதியின் பிறந்தநாள்.
பாரதியின் படைப்புகளின் மேலே இங்கி பிங்கி பாங்கி போட்டுக்கொண்டே விரல்களை நடமாடவிட்டதில் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் பதினோராம் தொகுதியில் நின்றது. சீனி. விசுவநாதனின் உழைப்பில் வந்த தொகுப்பு. என்னிடம் ஏழுலிருந்து பன்னிரெண்டு பாகங்கள் உள்ளது. மூன்று வருடங்களாக ஒன்று முதல் ஆறு பாகங்கள் கிடைக்குமா என்று ஸ்டால் ஸ்டாலாய் புத்தகக்காட்சிக்கு புத்தகக்காட்சி அலைகிறேன். இவ்வருடமாவது இந்த வரம் நிறைவேற பராசக்தியை வேண்டுகிறேன்.
பக்கத்து நாற்காலில் உட்கார்ந்து பிரித்த பக்கத்தில் “நம்பிக்கை” என்ற கட்டுரை. தேச பக்தன் வருஷ அநுபந்தத்தில் 1920ல் எழுதியது.
இனி பாரதி....
“காக்கை, குருவி, நரி, கழுதை, மனிதன் - எந்த ஜந்துவையும் சேர்ந்தபடியாக ஐந்து நிமிஷம் கவனியுங்கள். அது ஸந்தோஷத்திலாரது. அதன் முகத்தில் நிகழும் குறிகளைக் கண்டு அதன் மனத்தில் ஏதோ ஸமாதானக் குறைவு நேர்ந்து விட்டதென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாளு எப்போதும் துன்ப நினைப்புகளுக்குக் கிரையாகி, வருத்தக் கடலில் உழலும் ஜூவனை இன்பக் கரையில் சேர்ப்பதற்குரிய தோணி ஒன்றுதான் உளது. அதன் பெயர் பக்தி.
இந்த பக்தி யாரிடத்தே செலுத்தப்படுவது? கடவுளிடத்தில்.
அக்கடவுள் எத்தன்மை யுடையான்?
எங்கும் இருப்பான்; எல்லாம் தானே யாவான்; அறிவே வடிவமாகக் கொண்டு வையகச் செயல்களனைத்திற்கும் சாட்சி மாத்திரமேயாகி நிற்பான்.
அவன் நமது பக்திக்கு வசமாய் நம் உள்ளித்திலே கோயில் கொண்டு வீற்றிருப்பான்.ல் நம்முடைய துன்பங்களை யகற்றி இன்பக் கடலை நம்முள் நாட்டுவான்.
நமக்கு உலக மெல்லாம் பேரின்ப மயமாகத் தோன்றும்.
“பிண்டமாம் உடல்நா னல்லேன்;
பிராணவா யுவும்நான் அல்லேன்;
கண்டஐம் பொறியும் அல்லேன்;
கரணமோர் நான்கும் அல்லேன்;
பண்டைய அறிவு நானென்
றுன்னருள் கொண்டு பார்க்கில்
எண்டிசை கீழ் மேலெங்கும்
ஏகனா யிருக்கின் றேனே”
என்ற பாட்டில் சிவஞான வள்ளலார் குறிப்பிட்டிருக்கும் ஞான திருஷ்டி நமக்குண்டாகிறது.
இதனால் நாம் ஈசுவரத்தன்மை யடைகிறோம்.

[பாரதியார் பிறந்த நாளான 11/12/2014 அன்று எழுதியது]

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails