Thursday, March 24, 2011

ஒரு துணை நடிகையின் கதை - III

கதை உள்ளே தொபகடீர்ன்னு குதிக்கும் முன் மேலே இருக்கும் ரெண்டு குட்டியையும் ச்.சீ..சீ.. சுட்டியையும் படிக்காதவங்க மொதெல்ல படிச்சுடுங்க....

**************************  மூன்றாவது ரீல் ****************************
பர்ஸ் திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு ஒரு குயர் டம்மி தாள் வாங்கியாரச் சொல்லும் ரைட்டர், கட்டை பிரேம் கண்ணாடி போட்டு வெற்றிலைச் சாறு ஒழுகும் வாயோடு இரண்டு மாதத்தில் ரிடையர் ஆகப்போகும் ஏட்டு, நாயர் கடை வாட்டர் டீ வாங்க ஒரு 302, வில்ஸ் ஃபில்ட்டர் சிகரெட்டு வாங்க ஒரு 402 சகிதமான K-3 காவலர் இல்ல சபையில் இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை ராம்மிடம் முதற்கட்ட விசாரணை ஆரம்பிக்கும் முன்...

clap cardவாலி படம் ரிலீசான புண்ணிய வருஷத்தில் வயதை மீறிய வனப்பமாக பாரி முனை பஸ் ஸ்டாண்ட், ராணி மேரி கல்லூரி பேருந்து நிறுத்தம், அயல் தேசத்து வாசனாவி திரவியங்கள்,லாப் டாப், ஐபாட், மெமரி  மற்றும் இதர எலக்ட்டிரானிக் ஐட்டங்களை குருவியாய் பறந்து வாங்கி வந்து கள்ளத்தனமாய் கடை போட்டு விற்கும் புறாக்கூண்டு கடைத்தெரு, பத்தடிக்கு எட்டடியில் பசுமாடு சாணி போட்டு அம்மனை மறைத்து நிற்கும் முப்பாத்தம்மன் கோயில் வளாகம் போன்ற எல்லா இடங்களிலும் ஆண்பால் பெண்பால் பேதமில்லாமால் அனைவரையும் அட்லீஸ்ட் அரை நொடி நேரமாவது ஸ்தம்பிக்க வைத்தவள் பொன்னா. கல்லூரிக்கு போகையில் சவாரி கேட்கும் சாக்கில் ஐந்து ஆட்டோவாவது "எங்க போகணும்?" என்று தலை துருத்தி கேட்காமல் போகாது. அவள் பெயர் தெரிய வந்தால்  "பொன்னாக்கு இலவசம்" என்ற வாசகம் எழுதி ஆட்டோ ஓட்டினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

கந்தையை கசக்கிக் கட்டிக்கொண்டு இளமை வாசனையுடன் கன ஜோராக புண்ணியம் பண்ணிய புஸ்தகத்தை மாருக்கு அணைத்துக்கொண்டு பஸ் ஏறும் போது கண்டக்டர் அந்த அழகுக்கு முதல் மரியாதை கொடுத்து எழுந்து நின்று டபுள் விசில் கொடுப்பார். வண்டி ஹோல் இல்லாத மின்ட் சுவைத்த வாயாக புத்துணர்வு பெரும். பெரிசுகள் திறந்த வாய் மூடாமல் பொக்கை காண்பிக்கும். சின்னஞ்சிறுசுகள் மெய்மறந்து சுயம் இழக்கும். ஜோடி சிகப்பு கண்ணாடி வளையல்கள் வலைக்கரங்களில் கிலுகிலுக்கும். காதுக்கு கல்யாணி கவரிங் ட்ராப்ஸ். காது கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக வழுவழு கழுத்துக்கும் இணையான அதே நட்டு நகைகள். மொத்தத்தில் ஐந்தடி ரெண்டங்குல கல்யாண்ஜி கவிதை.

அவள் கால் பட கல்லூரிப் படிகள் மாதவம் செய்திருந்தது. கல்லடி பட்டாவது அவளது கண்ணடி பட மாட்டோமா என்று ஜூனியர் சீனியர் வித்தியாசம் இல்லாமல் ஏங்கியவர்கள் பலர். சில சபல வழுக்கை ப்ரொஃபசர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாவது ப்ளாக் கிரவுண்ட் ப்ளோர் மாணவர்கள் கூட அவளோடு சேர்ந்து பிரார்த்தனையாக நான்காவது மாடி வரை தினமும் அவள் சரணம் சொல்லி "4 x பதினெட்டு படி" ஏறினார்கள். விரதம் இருந்து இருமுடி கட்டாததுதான் பாக்கி. அவ்வளவு ராட்ஷஷ பிரேமை கலந்த பக்தி. இறுதியாண்டு உயிரியல் இரண்டாவது செமஸ்டர் முடியும் தருவாயில் ஒரு நாள் மெயின் க்ரில் கதவு தாண்டியதும் புன்னை மரத்தடியில் "ஏழுமலையான் பிலிம் சர்க்யூட்" என்ற அழுக்கான வேன் பின்புற கண்ணாடியில் நின்ற திருக்கோல வெ.ஜலபதி படத்துடன் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

கலர் பேப்பர் சுற்றிய புஷ்டியான விளக்குகளை லைட் மேன்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்த ரெண்டு லைட் பாய்கள் ஆளுக்கொரு கை கொடுத்து சுமந்து கொண்டு இங்குமங்கும் சென்றுகொண்டிருந்தார்கள். புல் தரைகளில் கருப்பு ஒயர் பாம்புகள் கண்டமேனிக்கு நெளிந்தன. தோளில் சிறிய தேங்காய்ப்பூ துண்டைப் போட்டுக் கொண்டு அந்த பத்து பதினைந்து மரத்தடி சூழ்ந்த கல்லூரி சோலையில் "இப்டி.. இப்டி.. இந்தப் பக்கம்.. ஏய்.. அத அங்க வைக்காத.. ரிப்லேக்டர் வக்கர இடமா அது.. ட்ராலி உள்ள போகுமா.. ரெட்  ரோஸ் அம்பது வந்துருச்சா... எங்க போனான் இந்த ஓணான்... நீ போடா.. போடா.. " என்று சகலருக்கும் கட்டளை பிறப்பித்து உலாத்தினார் அந்த சினி யூனிட் முக்கியஸ்தர். மர நிழலில் ஒருவர் அனாவசிய குடைபிடிக்க கையில் கண்ணாடியுடன் சிகப்பு லக்மே குச்சி கொண்டு இதழுக்கு வர்ணம் அப்பிக் கொண்டிருந்தாள் திரையுலக கனவுக்கன்னி. க.க. நாற்காலிக்கு பின்பக்கம் நின்று கொண்டு கேசத்தை வாரி அலையாக்கிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெரியவர். பக்கத்து மர அடிவாரத்தில் எடுக்கப் போகும் காட்சிக்காக ஹீரோயினுக்கு கூட கிளாசுக்கு போகும் எடுபுடி காலேஜ் பெண்கள் தலையில் ஜோடித்துக்கொள்ள சிகப்பு ரோஜாவுக்காக காத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்ததிலேயே ஒரு இளமையான காலேஜ் பெண்ணின் ஆறு மாதக் கைக் குழந்தை மரத்தில் கட்டிய சேலைத் தொட்டிலில் கையை சூப்பிக்கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

ரீல் காலேஜ் பெண்களை தாண்டி ரியல் கல்லூரிப் பெண்கள் வாயாடிக்கொண்டே கடந்து போனார்கள். குதிரை வால் கூந்தலுடன் அன்ன நடையில் போன பொன்னாவின் பளபளப்பு ரிப்லேக்டர் வெளிச்சத்தை மீறி ஏவல் செய்துகொண்டிருந்த தோளில் குட்டித் துண்டு போட்டவரின் கண்களைக் கூசியது. அந்த ஏழையின்  அழகு அமோகமாக அவரை ஈர்த்தது. ட்ராலியையும், க.கன்னியையும், சினிமாக் கல்லூரி பெண்களையும், வண்ண விளக்குகளையும், ராட்சத விசிறிகளையும் பார்த்துக்கொண்டே வந்தவள் சட்டென்று திரும்பும் போது பட்டென்று குட்டித் துண்டு முக்கியஸ்தரின் சட்டைக்கு பட்டன் போடாத பொசுபொசுவென்ற சுருள் முடி மார்பில் தனது மெல்லிய தோளால் வலுவாக இடித்துவிட்டாள். அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டார்.

"ஸாரி!"  இருவரும் சேர்ந்தே பஜனை பாடுவது போல மாப்பு கேட்டார்கள்.
"நா வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்.. உங்களை கவனிக்கலை.." என்றாள் ஒருவித நாணத்துடன் பொன்னா.
"பரவாயில்லை.. நானுந்தான் பார்க்கலை.. "
இத்தோடு இந்த சம்பாஷனை நின்றிருந்தால் இந்தக் கதை கருப்பொருள் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கும்.
"என்ன படம்..." வலிய கேட்டாள் பொன்னா.
"ரஜினி சார் படம்..." வழிய சொன்னான் குட்டித் துண்டு.
"அண்ணே... ரோஸ் கிடைக்கலையாம்.. மல்லிப்பூ தேவலாமான்னு ஓணான் கேக்கறான்.." கூவிக்கொண்டே ஒரு கையில் ஃபோனோடு ஒரு எடுப்பு ஓடி வந்தான்.
"டேய்.. கட்டுபடியாகாதுடா.. ஏற்கனவே நம்மாளு அண்டர்வேர்லேர்ந்து காசு எடுக்க சொனங்கராறு.."
"ஒரு நிமிஷம்" என்று அவளிடம் கை காண்பித்துவிட்டு மொபைலை வாங்கி..
"டே. மார்க்கெட் கோடியில எஸ்.ஜே வாடாமலர்கள்ன்னு ஒரு கடை இருக்கும். கஜேந்திரன் அப்படின்னு கருப்பா ஒருத்தர் கல்லாவுல உட்கார்ந்து பூத்தொடுத்துகிட்டு இருப்பாரு. நான் சொன்னேன்னு சொல்லு.. ரேட்டு கொஞ்சம் பார்த்து போட்டு கொடுப்பாரு.. ஆளுக்கு குறைஞ்சது ரெண்டு முழமாவது வேணும்.. மல்லி இல்லைன்னா ஜாதி வாங்கிட்டு வா.. பொண்ணுங்களுக்கு பூ வாங்கிக்கொடுத்தா போற வழிக்கு புண்ணியம். அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணு...."
"இந்தா பிடி.. ஓணான் திரும்பவும் ஃபோன் பண்ணினா எங்கிட்ட குடு..." என்று எடுப்பை அனுப்பி விட்டு
"உம் சொல்லுங்க.." என்றான் அங்கு நின்றிருந்த பிரம்மன் செதுக்கி வைத்த உயிர்ச்சிலையை பார்த்து.
"இல்ல.. என்ன படம்ன்னு கேட்டேன். "
"ஹாங்... ரஜினி சார் படம்.. தமன்னா ஹீரோயின்... நீங்க கூட அசப்புல பார்க்க ஹீரோயின் மாதிரி தான் இருக்கீங்க.." ஆயிரம் குடம் ஜொள்ளுடன் வழிந்தான்.
"நீங்க யாரு டைரக்டரா..." என்று பதிலுக்கு வெள்ளந்தியாக கேட்டாள் பொன்னா.
"ஹி..ஹி.. உங்க வாய் முஹூர்த்தம் ஆரேனான்னு பார்ப்பம்.."
"நீங்க யாரு..."
"அண்ணே! ஓணான் லைன்ல.." என்று கரடியாக புகுந்தான் எடுப்பு.
என்னென்ன எவ்வளவு வாங்க வேண்டும் என்று சடுதியில் சொல்லிவிட்டு இவளைத் திரும்பி பார்க்கையில் வகுப்பிற்கு நேரம் ஆகி விட்டதென்று அவள் கையை பிடித்து தரதரவென்று சிநேகிதிகள் இழுத்துப் போக ஆரம்பித்திருந்தார்கள். அவள் தலை அனிச்சை செயலாய் இவனைப் பார்க்க திரும்பியது.
"அப்புறம் பார்க்கலாம்.. பேரைக் கூட சொல்லாம போறீங்களே." குரல் விட்டான் இவன்.
"பை...பை.. பொன்னா... உங்க பேரு..." எதிர்க் குரலிட்டாள்.
"ராம்."
வம்பளந்த தோழிகளுடன் களுக் என்று சிரித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்கு விரைந்தார்கள்.

பத்து நாட்கள் நடை பெற்ற கல்லூரி காதல் காட்சியில் படத்தின் ஹீரோ ஹீரோயின் காதலிப்பதை விட ராம்-பொன்னா காதல் உரம் போட்ட பொன்னி அரிசி போல தளதளவென்று செழித்து வளர்ந்தது. இருவரும் கால் கண், அரைக் கண் பார்த்தது போக கண்ணோடு கண் பார்த்தார்கள். வெட்கம் மண் பார்க்க வைத்தாலும், ஆசை கண் பார்க்க வைத்தது. இரண்டடி, ஓரடியாகி அப்புறம் ஒரு நாள் பீச் கண்ணகி சிலை மார்பில் தரை அடிவாரத்தில் மடியோடு மடியாகிப் போனது. செக்கரட்டிரியேட்டில் ரூ 3200 அடிப்படை சம்பளத்தில் நிதி இலாகாவில் அட்டெண்டர் வேலை பார்க்கும் மாரிமுத்துவுக்கு அவரது டிரைவர் நண்பர் போஸ் அளித்த உளவுத் தகவலில் வீடு ரெண்டு பட்டது. இவள் காதலித்ததால் இவளின் தங்கையை எந்த கிறுக்கன் கலியாணம் செய்து கொள்வான் என்ற பேச்சு எழுந்தது.
"படிக்கும் போதே என்னடி லவ்வு.." என்று குடித்துவிட்டு அப்பன்காரன் ஜவ்வு கிழிய அடித்ததில் பாசம் போய் இன்ஸ்டன்ட் பணம் பார்க்கும் எண்ணம் வந்தது.

ஒரு மாலை நேர பீச் சந்திப்பில்...
"எனக்கு எதுனா வேலை வாங்கித் தரியா" என்று வாஞ்சையுடன் ராமைக் கேட்க அவன் திரையுலகில் பிரபலமான "பா" வரிசை வெற்றிப்பட இயக்குனரான பாலராஜாவிடம் ஆட்டோவில் இட்டுச் சென்றான்.
"பேர் என்னா" என்று அலட்சியமாக புகையை ஆகாயத்திற்கு அனுப்பிவிட்டு சிகரட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கி சாகடித்துக் கொண்டே கேட்டார் அந்த ஜாம்பவான். முன்னால்  டீ பாயில் ப்ளாக் டீ கலரில் ஒரு திரவத்திற்குள் ஐஸ் மிதந்து கொண்டிருந்தது.
"பொன்னா"
"என்னா"
"பொன்னா"
"ரொம்ப கிராமாந்திரமா இருக்கு.. சோனான்னு வச்சுக்க.. ஸ்டைலா இருக்கும். அடுத்ததா லவ்வாயணம் அப்படின்னு ஒரு யூத் சப்ஜெக்ட் பண்றேன்.. அதுல ஏதாவது தர முடியுமான்னு பார்க்கிறேன்.." என்று பெரிய மனது வைத்தார்.

அதிரடியாக சினிமாவில் நுழைந்ததால் தங்கையின் எதிர்காலம் எண்ணி வீட்டை விட்டு நிரந்தரமாக தள்ளி வைத்தார்கள். ஒரு நாள் மாலை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை சார்த்தினார் மாரிமுத்து. வாடகைக்கு ரூம் பிடித்து தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள் பொன்னா என்கிற சோனா.

இந்த ராம் காதலி சோனாவின் மொபைலுக்கு தான் கடைசியாக பாத்ரூமில் இறந்து கிடந்த இந்தக் கதையின் முதல் பாரா பெண்ணிடம் இருந்து  கால் போயிருக்கிறது. அடையாற்றில் மொபைலில் நம்பர் பிடித்து பீச்சுக்கு வந்து இருவரையும் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஜீப்பின் பின் சீட்டில் உட்கார்ந்திர்ந்த ராம் பீச்சிலிருந்து ஸ்டேஷன் வரும் வரை ரீவைண்ட் செய்து பார்த்ததை நாமும் ஒட்டு கேட்பது போல இதுவரை ஓசியில் பார்த்தோம். விசாரணையை அடுத்த ரீலில் கடா மீசை பாண்டித்துரை கலகலப்புடன் தொடங்குவார். விசாரணையையும் கதையையும் சீக்கிரம் முடிப்போம் என்ற நம்பிக்கையுடன்......

தொடரும்...
பட உதவி: http://mississaugakids.com/

-

19 comments:

Sivakumar said...

லைவ்வாக பார்த்த எபக்ட். From the heart I am saying.

Chitra said...

ஹாங்... ரஜினி சார் படம்.. தமன்னா ஹீரோயின்... நீங்க கூட அசப்புல பார்க்க ஹீரோயின் மாதிரி தான் இருக்கீங்க.."


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சைக்கிள் gap ல லாரி விடுறதுனா இதுதானா?

அப்பாதுரை said...

கதையிலிருந்து விலகி வாசகரோடு கலக்கும் உத்தி லேசாய் நெருடுகிறது. சுவையான பின்னல்.

ஸ்ரீராம். said...

தொடர்(ந்து) எழுத ஆரம்பிச்சிட்டீங்க...

வெங்கட் நாகராஜ் said...

அடடா! சினிமா சம்பந்தப்பட்ட கதைன்னா, ஃப்ளாஷ்பேக் இல்லாமயா! ம்.. விறுவிறுப்பு அதிகமாகிட்டே போகுதே கதையில!! தொடரட்டும்…

raji said...

//கலர் பேப்பர் சுற்றிய புஷ்டியான விளக்குகளை லைட் மேன்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்த ரெண்டு லைட் பாய்கள் ஆளுக்கொரு கை கொடுத்து சுமந்து கொண்டு இங்குமங்கும் சென்றுகொண்டிருந்தார்கள். புல் தரைகளில் கருப்பு ஒயர் பாம்புகள் கண்டமேனிக்கு நெளிந்தன. தோளில் சிறிய தேங்காய்ப்பூ துண்டைப் போட்டுக் கொண்டு அந்த பத்து பதினைந்து மரத்தடி சூழ்ந்த கல்லூரி சோலையில் "இப்டி.. இப்டி.. இந்தப் பக்கம்.. ஏய்.. அத அங்க வைக்காத.. ரிப்லேக்டர் வக்கர இடமா அது.. ட்ராலி உள்ள போகுமா.. ரெட் ரோஸ் அம்பது வந்துருச்சா//

ஒர் எழுத்தாளார் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும்
எழுத்திலும் எந்த அளவு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதற்கு இது ஒரு உதாரணம்

Vidhya Chandrasekaran said...

இன்னும் ஒரு பாகமா?

சீக்கிரம் முடிங்க....இத சிறுகதையா எழுத ஆரம்பிச்சேன்னு சொன்னீங்க???

ஆனால் எழுத்து ரொம்ப சுவராஸ்யம்:)

பொன் மாலை பொழுது said...

// ஒர் எழுத்தாளார் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும்
எழுத்திலும் எந்த அளவு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதற்கு இது ஒரு உதாரணம்//

ராஜீ அம்மணி கூறியதை அப்படியே வழி மொழிகிறேன்.

Yaathoramani.blogspot.com said...

பொன்னா என்கிற சோனாவின் கதை
சொல்லிபோகும் அழகு அருமை
அதை எல்லா நடிகைக்குமான கதையாகவும்
இறந்து கிடக்கிற நம் கதையின் கதா நாயகியின்
கதையாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்கிற அளவு
அதை பொதுமைப் படுத்திப் பார்க்கத்தூண்டுகிறது
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

RVS said...

@! சிவகுமார் !
லைவா பார்த்ததுக்கும் லவ்லியா கமென்ட் போட்டதற்கும் நன்றி. ;-)

RVS said...

@Chitra
நன்றிங்க சித்ரா! நாங்க சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டுவோம். ;-)))

RVS said...

@அப்பாதுரை
திருத்திக்கிறேன் அப்பாஜி!
பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
எல்லாமே முயற்சி பண்ணி பார்க்கிறேன். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்! ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! ;-))

RVS said...

@raji
ஒன்றிப் படித்ததற்கு நன்றிங்க... இனிமேதான் எல்லார் சைட்டுக்கும் வரணும்.. ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
Thank You Karun... ;-))

RVS said...

@வித்யா
பயப்படாதீங்க.. அடுத்த பார்ட்ல முடிச்சுட்டேன். ;-))
பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
அவங்களுக்கு சொன்ன அதே கமெண்ட்டை ரிபீட்டிக்கிறேன். ;-))
நன்றி மாணிக்கம். ;-))

RVS said...

@Ramani
தொடர் வாசிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி சார்! ஒரு வழியா முடிச்சுட்டேன். ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails